எகிப்திய எழுத்தாளர் தாரிக் இமாமுடன் ஒரு நேர்முகம் – காதரீன் வான் டெ வேட்

எகிப்திய எழுத்தாளர், வானொலி ஊடகவியலாளர், விமரிசகர், 1977 ஆம் ஆண்டு பிறந்தவர் தாரிக் இமாம் . ‘தி செகண்ட் லைப் ஆப் கான்ஸ்டன்டைன் கவபி’ மற்றும் ‘தி சிட்டி ஆப் எண்ட்லஸ் வால்ஸ்’ உட்பட பத்து நாவல்கள் மற்றும் சிறுகதை தொகுப்புகள் எழுதியுள்ளார். எகிப்தின் மதிப்பு மிக்க சவிரிஸ் பரிசு உட்பட பல விருதுகள் பெற்றவர். கலாச்சார பேரதிகார அமைப்பின் ‘ஸ்டேட் இன்சென்டிவ் அவார்ட்,’ எகிப்திய கலாச்சார அமைச்சகத்தின் இலக்கிய விருதான “சு’அத் சபாஹ் பரிசு,” மற்றும் ஸ்பானிஷ் மியூஸியோ டி லா பாலாப்ராவின் சிறந்த குறுங்கதை பரிசு பெற்றவர். மாய யதார்த்தம், மிகுகற்பனை உட்பட பரிசோதனைத் தன்மை இமாமின் எழுத்தைத் தனித்து நிற்கச் செய்வன.

மொழியாக்கம் செய்யப்படுவது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? தனது எழுத்து மொழிபெயர்க்கப்படுவது எழுத்தாளனுக்கு முக்கியமா? ஆங்கிலம் இன்னும் பெரிய சந்தைக்கு இட்டுச் செல்வதா, அல்லது, பிற மொழிகளில் உங்கள் படைப்பைக் காண்பதில்தான் உங்களுக்கு அதிக ஆர்வம் இருக்கிறதா? உங்கள் எழுத்து மொழிபெயர்க்கப்பட்டபின் உங்கள் எழுத்து முறையில் எந்த தாக்கமும் ஏற்பட்டிருக்கிறதா?

ஒவ்வொரு எழுத்தாளனும் தனது இலக்கியப் பிரதியை ஒட்டுமொத்த மானுடத்துக்கும் அளிப்பதாக நினைத்துக் கொள்கிறான், அது உண்மையும்கூட. ஆனால் நிஜத்தில், அவனது பிரதி அந்த “மானுடத்தை” சென்றடைய வேண்டுமென்றால் அது மொழிபெயர்ப்பால்தான் சாத்தியப்படுகிறது. உள்ளபடியே சொல்வதானால், எனக்கு மொழியாக்கம் குறித்து அக்கறை கிடையாது. அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதலாவதாக, எனக்கு அதில் இடமில்லை. ஆர்வமிக்க மொழிபெயர்ப்பாளர்கள், அவர்கள் அளிக்கும் வாய்ப்பை வரவேற்கும் பதிப்பாளர்கள் சார்ந்த விஷயம் இது. இரண்டாவதாக, இது இன்னும் முக்கியமானதும்கூட, நான் அரபியில், எனக்கு ஆளுமை வாய்க்கப்பெற்ற அந்த ஒரு மொழியின் அழகியலுக்கு ஏற்ப, எழுதுபவன். ஆக, நான் எழுதும் நடை எனக்கு திருப்தி கொடுப்பதாக இருக்கிறது. இதில் எனக்கு இழப்பு எதுவும் இருப்பதாய் தெரியவில்லை. என் எழுத்து ஏதோ ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி நகர்வதும் அல்ல. அப்படி இருப்பது மிக அதீத அடிமைத்தனம் போன்றது என்பதுதான் என் பார்வை. என்னைப் பொறுத்தவரை, இதை நான் வெறும் பேச்சுக்குச் சொல்லவில்லை, ஒவ்வொரு வாசகனும் அத்தனை வாசகர்களையும் பிரதிநிதிப்படுத்துபவன். என்னைப் பொறுத்தவரை, அரபி மொழி அத்தனை மொழிகளையும் பிரதிநிதிப்படுத்துகிறது.

எழுதும்போதோ அதற்கு பின்னோ, நான் மொழியாக்கம் பற்றி நினைத்தே பார்ப்பதில்லை. அப்படியானால் மொழியாக்கம் முக்கியமில்லை என்று அர்த்தமாகுமா? இல்லை. அது நிச்சயம் முக்கியமானது. பதிப்புத் துறையாகவும் பிற மொழிகளைச் சென்றடைய உதவுவதிலும், ஆங்கிலமே உலகின் முதன்மை மொழி என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் முதலில் சொன்னது போல், நான் இந்த ஆட்டத்தில் இல்லை. வெளிப்படையாய்ப் பேசினால், எனக்கு இந்த ஆட்டத்தில் சேர்ந்து கொள்ளும் ஆசையும் இல்லை. புகழ் பெற்ற மொழிபெயர்ப்பாளர்கள் அவ்வப்போது கெய்ரோ வருவதுண்டு. அவர்களைச் சந்திக்கும் விருப்பம் உண்டா என்றோ, அவர்கள் வரும் இடத்தில் “இருக்க” வேண்டும் என்றோ என்னிடம் கேட்டுக் கொள்ளப்படுவது உண்டு. எனக்கு இதில் எல்லாம் நிச்சயம் எந்த ஆர்வமும் இல்லை.

வெளிப்படையாய்ச் சொல்கிறேன். என் எழுத்தை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்வது குறித்து மொழிபெயர்ப்பாளர்கள் என்னை கடந்த காலத்தில் அணுகியிருக்கிறார்கள். ஆனால் அது எதுவும் நிறைவு பெறவில்லை. காரணம், அவர்கள் அளித்த எடிட்டோரியல் பரிந்துரைகள் நான் ஏற்றுக் கொள்ளக் கூடியவையாய் இருக்கவில்லை. பிரதியின் குறிப்பிட்ட ஒரு கூறு விரித்துரைக்கப்பட வேண்டும் என்று சொல்வார்கள், அல்லது, நான் முக்கியத்துவம் அளிக்காத ஒரு கூறு அழுத்திச் சொல்லப்பட வேண்டும் என்று சொல்வார்கள். முழு உண்மையைச் சொன்னால், இதில் என் சோம்பேறித்தனத்துக்கும் ஒரு பங்கு உண்டு. நான் ரொம்ப சோம்பேறி. ஒரு வேலையாய் யாரையாவது சந்திக்க வேண்டுமென்றால் அது அலுப்பூட்டுவதாய் இருக்கிறது. அவற்றைத் தள்ளிப் போடவே எப்போதும் முயற்சி செய்கிறேன். ஏதோ ஒரு காரணத்தால் அவை தாமதமாகின்றன, அல்லது ரத்து செய்யப்படுகின்றன என்றால், மதிப்புமிக்க ஒரு வாய்ப்பைத் தவற விட்டு விட்டோமே என்ற வருத்தத்துக்கு மாறாய் உண்மையாகவே அப்பாடா என்றுதான் இருக்கிறது.

ஆங்கில மொழிபெயர்ப்புக்கு, அதிலும் குறிப்பாக உணர்வளவிலும்கூட ஒப்பீட்டளவில் நெருக்கமாய் உள்ள மெடிட்டரேனிய ஐரோப்பிய வாசகர்களை விட தொலைவில் உள்ள பிரிட்டிஷ் அல்லது அமெரிக்க வாசர்களுக்காக, எப்படிப்பட்ட பிரதிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன என்ற கேள்வி, சிக்கலான ஒன்று. சில மேற்கத்திய மொழிபெயர்ப்பாளர்களைப் பொறுத்தவரை அராபிய உலகம் என்பது மாலைச் செய்தியில் காட்டப்படும் நிகழ்ச்சிகளின் கோர்வை. அவை நேரடியாய் இலக்கியத்தில் பிரதிபலிக்கப்படுவதைப் பார்க்க சில சமயம் முயற்சி செய்கிறார்கள். காரணம், அவர்களும்கூட சுதந்திரமாய் முடிவெடுப்பதில்லை. என்ன இருந்தாலும் பதிப்புத் துறை ஒரு வர்த்தகம், அதில் விற்பனைத் துறை மிக முக்கியமான ஒன்று. எனவே தேவைப்பட்ட விஷயம் ஒரு பிரதியில் இல்லை என்றால் மொழிபெயர்ப்பாளர்கள் அதைத் தேர்ந்தெடுப்பதில்லை. இப்படிச் சொல்வதை, இலக்கியம் வேறு அது உருவான காலக் கணம் வேறு என்று நான் பிரித்துப் பேசுவதாய்க் கொள்ளக் கூடாது. மாறாய், அது இக்கட்டான காலகட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதை ஆதரிக்கிறேன். ஆனால் அழகியல் பார்வையில், ஒரு செய்தித்தாள் படிப்பது போன்ற ஒரு எளிய வடிவமல்ல இலக்கியம்.

நான் சொல்வது மொழியாக்கம் செய்பவர்களுக்கு அநீதி இழைப்பதாக இருந்துவிடக் கூடாது, இன்னொரு விஷயத்தையும் கருத வேண்டும். இன்றைய காலகட்டத்தில் மிகப் பெரிய எண்ணிக்கையில் அரபு மொழி இலக்கியம் படைக்கப்படுகிறது. ஒரு மொழிபெயர்ப்பாளரால் எப்படி அத்தனையையும் அறிந்து கொண்டு, அதிலிருந்து தேர்ந்தெடுக்க முடியும்? ஒரு அராபிய விமரிசகரோ வாசகரோ கூட இதைச் செய்ய முடியாது. எனவே, இத்தனை பெரிய உருவாக்கத்திலிருந்து சிறிய எண்ணிக்கை கொண்ட தலைப்புகளுக்கு வடிகட்டித் தரும் “மடைகளை” மொழிபெயர்ப்பாளர் சார்ந்திருக்க வேண்டியதாகிறது: மதிப்புமிக்க பரிசுகள் வென்ற நாவல்கள், தம் தாயகத்தில் பரபரப்பு ஏற்படுத்தியவை, விற்பனைச் சாதனை படைத்தவை, இது போல். மொழிபெயர்ப்பாளர்கள் சிக்குண்ட முக்கோணத்தின் மூன்று சுவர்கள் இவை. ஆனால் எந்த இலக்கியப் படைப்புகள் சிறந்தவை என்றோ, எவை மதிப்புக்குரியவை என்றோ, எவை மிக உயர்ந்த தரத்தில் அமைந்தவை என்றோ தீர்மானிக்கத்தக்க ஆதர்ச அளவைகள் இவை என்று சொல்வதற்கில்லை.

என் நாவல்களில் இரண்டு மட்டுமே மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. இரண்டும் இதாலிய மொழியில், ஒரே மொழிபெயர்ப்பாளரால்- பார்பரா பெனினி. பெனினி தன் பார்வைக்கு ஏற்ற வகையில் இயங்குபவர். இதாலிய பதிப்பாளர்களின் மரபார்ந்த நெறிமுறைகளையும்கூட சாராதவர். அதைவிட முக்கியமாக, புதிய விஷயங்களை, அவான் கார்டை ஆதரிப்பவர். அவர் எகிப்தில் வாழ்ந்திருக்கும் காரணத்தால், அதன் இலக்கியச் சூழலை, இடையில் இருப்பவர்கள் மூலமல்ல, உள்ளிருந்தே அறிந்திருக்கிறார். நான் அவரை இதுவரைச் சந்தித்ததில்லை என்பதையும் சொல்ல வேண்டும். இந்தக் காரணங்களால், தன் மொழிபெயர்ப்பு பிரதிகளை சுயமாக தேர்ந்தெடுக்கிறார். அவற்றின், “இலக்கியத்தன்மை.’ மட்டுமே அவரது அளவுகோல். தனக்கு பிடித்தவற்றை மொழிபெயர்த்து, அதன் பின்னரே அவற்றைப் பதிப்புக்கும் சாத்தியங்களைத் தேடுகிறார். அவற்றை பெறுவதும் அவ்வளவு சுலபமல்ல. என் பார்வையில்,அவர் ஒரு தீரமிக்க மொழிபெயர்ப்பாளர். ஒரு படைப்பாளியைப் போல் சாகசத்தில் தன்னை ஆழ்த்திக் கொள்கிறார், அதற்கான விலையையும் ஏற்றுக் கொள்கிறார். இந்த மொழிபெயர்ப்பாளருக்கு பொது வெளியில் நான் இப்படி நன்றி சொல்வது இதுவே முதல் முறையாக இருக்கலாம். ஆனால் இப்படிப்பட்ட ஒரு நேர்முகத்தின் பின்புலத்தில் இதைச் சொல்வது என் கடமை என்று கருதுகிறேன்.

நீங்கள் பரிசோதனை முயற்சிகளை அஞ்சும் எழுத்தாளரல்ல. பிற எழுத்தாளர்கள், இலக்கிய மரபுகள், பாணிகளின் தாக்கங்களுக்கு அனுமதி அளிக்கிறீர்கள். தா’ம் அல்-நாம் இதற்கு ஒரு பிரத்யேக உதாரணம்- யாசுநாரி கவாபாட்டாவின் ‘ஹவுஸ் ஆப் தி ஸ்லீப்பிங் பியூட்டிஸ்’ மற்றும் காபிரியல் கார்சியா மார்க்வெஸ்சின் ‘மெமரீஸ் ஆப் மை மெலான்கலி வோர்ஸ்’ ஆகியவற்றின் கூறுகளை உள்வாங்கிக் கொண்ட நாவல் அது. ஆனால் அதே சமயம் அது ஆயிரத்து ஒரு இரவுகளின் வடிவத்தை ஒட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. அரபி அல்லது அரபியல்லாத இலக்கியம், எது உங்கள் மீது அதிக தாக்கம் ஏற்படுத்தி இருக்கிறது? இப்போது நீங்கள் வாசிக்கும் எழுத்தாளர்கள் யார்?

எனக்கு எழுத்தும் பரிசோதனை முயற்சியும் வேறல்ல. மொழியிலும் யதார்த்தத்தை விவரிப்பதிலும் உவமைத்தன்மை கொண்ட இலக்கியத்தை விரும்புகிறேன். எனது எழுத்து கவித்துவம் கொண்டதாய் இருக்கிறது என்று சிலர் விவரித்ததுண்டு. நான் சொல்வதை அது உறுதி செய்கிறது என்று நினைக்கிறேன்: என்னைப் பொறுத்தவரை, என் எழுத்தில் உள்ள கவித்துவ கூறுகள் உரைநடையைக் காட்டிலும் முக்கியத்துவம் குறைந்தவையல்ல. குறிப்பிட்ட ஒரு கதையைச் சொல்வது அதில் மறைந்துள்ள கவித்துவத்தை வெளிப்படுத்தவே, வெறும் தகவல்களைத் தெரிவிப்பதற்கு அல்ல.

பிரதிகள் ஒன்றையொன்று எழுதிக் கொள்கின்றன என்று நம்புகிறேன். ஒரு இலக்கியப் படைப்பின் சுனைகள் பல்வகைப்பட்டவை, அதில் இலக்கியமும் அடக்கம். இலக்கியமும் இலக்கியத்தை எழுதிக் கொள்கிறது, இலக்கியம் குறித்து மரபார்ந்த ஆசிரியர்கள் சொல்வது போல் நேரடி யதார்த்தமல்ல, கலையே கலையின் கருப்பொருளாகவும் இருக்கக் கூடும். அதனால்தான் உதாரணமாக, pastiche குறித்து நான் அச்சம் கொள்வதில்லை, என் புதிய நாவல், ‘தி டேஸ்ட் ஆப் ஸ்லீப்’ இதையே மையமாய்க் கொள்கிறது. ஒரு புதிய கோட்பாடு இருக்கிறது, அதன்படி “பிரதி நினைவு,” என்று நான் அழைப்பதை ஒரு புதுப்பிரதி கவனப்படுத்துவதில் இது அடிப்படை பங்காற்றுகிறது. அதே நேரம், கலாச்சாரம் முதல் அரசியல் வரை தன் காலத்தை ஒரு நாவல் பிரதி அத்தனை தளங்களிலும் எதிர்கொள்ள வேண்டும் என்றும் நான் நம்புவதால். தன் காலத்துக்கே பிரத்யேகமான தருணத்தில் வேர் கொள்ளவும் இதன் இயங்குதன்மை உதவுகிறது. நாவல் கலையில் கிசுகிசுப்பான குரல் மற்றும் உரத்து ஒலிக்கும் குரல் இரண்டுக்கும் இடமுண்டு. எகிப்தின் சரித்திரம் மற்றும் யதார்த்தம் பற்றி இன்னும் ஆழப் பேசும் நோக்கத்தில் நான் ‘தி டேஸ்ட் ஆப் ஸ்லீப்’ நாவலில் ஒரு ஜப்பானிய நாவல், கொலம்பிய நாவல் மற்றும் அராபிய சரித்திர கதையாடலுடனும் போராடுகிறேன்.

இலக்கியத்தை இப்படி பார்க்கிறேன்: பிரதிகள், சரித்திரம், யதார்த்தம் மற்றும் கற்பனை குறித்து, ஒன்று பிறவற்றை நீக்கவோ பிறவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தவோ அனுமதியாமல், முடிபற்று நிகழ்த்தும் விசாரணை. ஏற்கனவே நிறுவப்பட்ட, அல்லது முன் அடையாளம் செய்யப்பட்ட வரையறையின் சார்பின்றி தன்னைத் தானே எவ்வாறு விசாரணை செய்து கொள்கிறது என்பதுதான் ஒரு இலக்கிய பிரதிக்கு அடையாளம் அளிக்கிறது என்று நம்புகிறேன். இந்த பாணி பல எகிப்திய நாவல்களிலும் வெளிப்படத் துவங்கி விட்டது என்று. ‘தி டேஸ்ட் ஆப் ஸ்லீப்’ வெளிவந்த அதே காலத்தில் குவைத்திய நாவலாசிரியர் புதைனா அல்-இஸ்ஸா ஒரு துணிச்சலான நாவல் எழுதினார். குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் கொண்ட ஐந்து இலக்கியப் பிரதிகள், ‘ஜோர்பா தி கிரீக்,’ ‘ ஆலிஸ் இன் தி வண்டர்லண்ட்’, ‘பினோச்சியோ’, ‘1984’ மற்றும் ‘பாரன்ஹீட் 451’ ஆகியவற்றை உந்துவிசையாய்க் கொண்டது ‘ஹாரிஸ் சாத் அல்-அலாம்’. அந்த நாவலின் முடிவில் சென்சார் என்ற கருத்துவாக்கத்தால் பிரதிநிதிப்படுத்தப்படும் அராபிய ஒடுக்குமுறையின் இயங்கு கருவிகளைப் பற்றிய மிகத் துல்லியமான கலாச்சாரக் கேள்வியினை அவர் எழுப்பினார்.

எனவே இலக்கியம் என்பது நம் யதார்த்தத்தை அதன் அத்தனை நுண்விபரங்களுடனும் புரிந்து கொள்வதற்கான ஆதார சாதனம். காலம், சுதந்திரம், மரணம் ஆகியவற்றுடன் பிணைப்பு கொண்ட இருப்பு குறித்த பெரும் கருத்துக்களில் உள்ள கருத்துருவாக்கமாகிய நான் என்ற ஆளுமை அதே நேரம் ஒரு தனி மனிதன், அராபிய, எகிப்திய எழுத்தாளன் என்ற வகையில் என் காலத்தின் குறிப்பிட்ட ஒரு தருணத்தில் அதன் அத்தனை வரலாற்று, கலாச்சார, சமூக சிக்கல்களுடனும் எழுதிக் கொண்டிருக்கிறேன். தூய அடையாளம், அல்லது ஒருமைப்பட்ட அதிகாரம், ஏகத்துவத்தை பிரதிபலிக்கிறது என்று கருதுகிறேன். அது இறுதியில் சர்வாதிகாரத்தைக் கொண்டு வருகிறது.

எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள் யார் என்று பார்த்தால், பல்வேறு இலக்கிய வரிசைகள், காலகட்டங்கள், இடங்களுக்கு உரிய நாவலாசிரியர்களைச் சொல்ல வேண்டும்: நகீப் மாபூஸ், ஆல்பர் காம்யூ, காபிரியல் கார்சியா மார்க்வெஸ், கார்லோஸ் பியூண்டஸ், முகமது ஹபீஸ் ரகாப், யூஜீன் இயனஸ்கோ, மைக்கேல் ஒன்டாட்ஜே, டோனி மாரிசன், சல்மான் ருஷ்டி, யுவான் யோசே மில்லாஸ், ஜாவியர் மாராஸ், மைக்கேல் கன்னிங்கம், பால் ஆஸ்டர்.

அராப்லிட் தளத்தில் வந்த நீண்ட நேர்முகத்தின் சிறு பகுதி. முழு பேட்டியும் இங்கு ஆங்கிலத்தில்  வாசிக்கலாம்: 

Tareq Imam: ‘The Writer Has Become Everyone’s Target’

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.