கிணற்றின் நுனியில் நின்றுகொண்டு குதிக்க எத்தனிக்கும் சமயம் அதனுள் நான் ஏற்கனவே நீந்திக்கொண்டிருக்கிறேன் எனபது தெரிகிறது. இருவரும் ஒருவரையொருவர் திகைப்புடன் பார்க்கும் கணத்தில் அவன் உருவம் கலைந்து இன்னொருவனாகியதும் கனவு கலைந்தது. கைகள் தற்செயலாக கார்த்திகாவின் புடைத்த வழுவழுப்பான வயிற்றை தடவிக்கொண்டிருந்தது. நகம் பட்டால் கிழிந்துவிடும் என்ற பயம் உறக்கத்திலும் இருந்தது. உறக்கத்தில் அவள் எழுந்து மறுபக்கம் சரிந்து படுத்தாள். முன்பென்றால் அப்படியே புறண்டு படுத்துவிடுவாள். எழுந்து திரும்பி படுக்கவேண்டிய கட்டாயம் இப்பொழுது. இருந்தும் சிலசமயம் மறந்து வெடுக்கென்று திரும்பி காலையில் அதற்காக தன்னையே நொந்து கொள்வாள். விஜிலெண்ட் பூங்காவில் சிலைகள் சூழ்ந்த கிணற்றிலேயே அந்த கனவு சம்பவிக்கின்றது. கனவில் என் பின்புறமிருக்கும் சிலைகளை எவ்வளவுதான் முயற்சி செய்தும் ஞயாபகப்படுத்த முடியவில்லை.
கரு உண்டாக்க நாங்கள் கடும் முயற்சியில் இருந்த நாட்களில் ஓர் நாள் காலையில் ஸ்டாக்கோமிலிருந்து பஸ் பிடித்து இறங்கி வரும் பொழுது நான் எண்ணிக்கொண்டு வந்தது அந்த பூங்காவைப்பற்றியே. அவளிடம் அதனைப்பற்றி தினமும் ஒரு தடவையாவது சொல்லுதிர்க்காமல் இருந்ததில்லை. ஒற்றை மனிதால் அவன் வாழ்நாளில் வடித்து உருவாக்கப்பட்ட சிலைகள். அத்தனை சிலைகளுக்கான ஒரு திறந்த வெளி மியூசியமாகவே நார்வே நாடு உருவாக்கியிருந்தது. தலைநகர் அதற்குண்டான தனிமையுடன் இருந்தது. இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் பாச்சா போல மக்கள் கூட்டம் இருக்கையில் புது வாசிகளுக்கு இது மட்டுமல்ல வடதுருவ நாடுகள் எல்லாவற்றிலும் தலைநகரத்திற்கான அங்க அடையாளங்களை காண்பது கடினமானதே. தெரிந்தவர் தெரியாதவர்களுக்கு ஒரு சிறிய ஹாய் மட்டுமே பரிமாற்றப்பட்டு அப்படியே கடந்து சென்று விடும் இந்த மக்கள் நிச்சயமாக சாதரணவர்கள் அல்ல. அந்த சிரிப்பு எழுந்து அடங்க ஒரு நொடியிலும் குறைவாகவே ஆகும். அதற்கு பதில் அளிக்கும் முன் அவர்கள் அடுத்த முகங்களுக்கு ஹாய் சொல்லி கிளம்பியிருப்பார்கள். அவர்கள் கைகளில் இருக்கும் காப்பி கோப்பை எப்பொழுதாவது முடியும் என்று நானும் எதிர்பார்க்கிறேன். என்றும் தீராத அட்சய பாத்திரம் போல நிரம்பிக்கொண்டே வருகிறது. மூன்று வேளையும் சோற்றுக்கு பதில் காப்பு குடிப்பதாக ஒருவர் சொன்னதை நான் முழுதாக நம்பிய காலம் உண்டு.
நேற்றிரவு முழுவதும் பெய்த பனி பஸ்ஸின் கண்ணாடிகளில் அடித்துக்கொண்டே இருந்தது. காலையில் உளசட்டை வெளிச்சடையென்று மொத்தம் நான்கு அணிந்து ஓர் தேர் ஊர்வலம் போல இறங்கியும் அவள் பற்கள் முன்போல இன்றும் கிட்டித்ததை பலமுறை அதிகப்படியான சிரிப்புடன் நகைச்சுவையாக முயற்சித்திருருந்தேன். மெலிந்த என் உடலை மேற்சட்டைகள் மூடி வலுவான தோற்றம்கொள்ள செய்திருந்தது. சாலைகளின் ஓரத்தில் பனி ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது சாலை வழுக்காமலிருக்க சிறு சல்லிகள் போடப்பட்டிருந்தன. இவையெல்லாம் நம்மை காப்பாற்றும் என்று நினைத்தால் அது முட்டாள்தனம். சத்தியம் செய்து சொல்லுவேன் நீங்கள் வழுக்கி விழுவீர்கள் நாளுக்கு ஒரு தடவையாவது. இன்றைகான அந்த கணத்தை மனதில் வைத்து கால்களை உரசாமல் தூக்கி வைத்து நடந்தோம்.
என்னை கடந்து சென்ற குழந்தை அவளுக்கான தள்ளு வண்டியில் சாதரணமாக சாய்ந்து படுத்து வாயில் ஜொள் வடிய உலகை மக்களை கூடவே என்னையும் பச்சை விழி கொண்டு மலங்க மலங்க விழித்தது. நிமிடத்திற்கொருமுறை அம்மா குழந்தையை குனிந்து அது கூறிய செய்திகளை அதன் மொழியிலேயே விளக்கி ஜொள்ளை துடைத்து மீண்டும் தொடர்ந்தாள். இதனை இப்படியே காப்பி செய்து பேஸ்ட் செய்தது போல இங்குள்ள அனைத்து அம்மா குழந்தைகள் இப்படியே இருக்கின்றனர். கார்த்திகா இதற்கு முழுவதுமாய் தயாராக இருந்தாலும் எனக்கு இதில் விருப்பமில்லை. அவர்கள் வாங்கிய அதே வண்டியை வாங்கி தள்ளிச்செல்வதில் எந்த ஈடுபாடுமில்லை. இது ஒரு நடிப்பு. அன்பெனும் அரவணைப்பெனும் நடிப்பு. நான் ஆஸ்காருக்கு அடிபோடவில்லை.
வீடு , கடைகளின் கூரைகளில் பனி பாளம் கட்டி நின்றது. குச்சிகளை வைத்து தட்டி சரித்து விட்டுக்கொண்டிருந்தனர். வெயில் சரிந்து பனி பொன்னொளி கொண்டிருந்தது. அவை இரவில் வெண்ணிறம் கொள்ளும். விளக்குகள் இல்லாமல் கூட நடக்கலாம். மின் கம்பங்களில் நீர் வழிந்து உறைந்து வியர்த்திருந்தது. இரும்பு வாசல் கதவுகளுக்கு பின்னால் பனிதாங்கி நின்றன சிலைகள். நான் நடக்க பூங்கா என்னை நோக்கி அடிவைத்து வந்தது.
மூன்றடி அகலம் கொண்ட பாதையின் இருபுறமும் வரிசையாக வெளிர் பச்சை நிற வெண்கல சிலைகள் , கீழே வெண்பனி மூடிய கரை நடுவே கரும்பச்சை நிற நதி ஓடியது. இலைகளற்ற மரங்கள் பனிப்பூச்சூடீ தலை தாழ்த்து நின்றன. சிம்பொனி இசைக்கோப்பின் தொடக்கம் போல ஒவ்வொன்றாக கடந்து நடுவில் ஓர் நீருற்று வளைவு, அதனைச்சுற்றி சிலைகள் , அது ஓர் கோர்வை உச்சத்தில் முடிந்து மற்றது தொடங்கும் தருணம். அதன் பின்னால் படியேற மனித உடல்கள் முறுக்கி நிற்கும் ஸ்தூபி அதனை சுற்றி இரண்டாள் கனத்தின் கற்சிலைகள் அது கடைசி உச்சம். அதன் பின்னால் இறங்கிச்சென்றால் பன்னிரண்டு ராசிகள் பதித்த சிறிய வட்டமான வளைவு. அதன் மேல் சூரிய மணிக்காட்டி. இறுதியில் முனங்கலுடன் சிம்பொனி கச்சேரி முடிந்துவிடும்.
முதல் சிலை குழந்தையை அணைத்தபடி நின்ற அம்மா. அரவணைப்பு என்பதை தாண்டி உள்ளிருந்து வெளியியெடுத்துவிட்ட வருத்தம் அவள் முகத்தில் தோய்ந்து கிடந்தது. முதிரா முலைகள். ஒரு வேளை குந்தியாக இருக்கலாம். “பெத்த உடனே கடம ஆரம்பிச்சாச்சு. நல்லா பாத்தியா. அந்த அம்மா அழுகுறாங்க” என்றேன். கார்த்திகா அதனை விரும்பவில்லை என்பது தெரிந்தது. இல்லையேல் அதற்கு குறைந்தபட்சம் ஒரு சிணுங்கலாவது பதிலாக வந்திருக்கும். முதல் சிலையின் பக்கவாட்டிலும் எதிர்புற வரிசையிலும் தம்பி தங்கைகள் விளையாட்டு பாவனையுடன் நின்றனர். ஒருவன் அவன் தம்பியை தலையில் தூக்கி பிடித்து வைத்திருந்தான். இரு குழந்தைகள் மகிழ்ச்சியின் உச்சத்தில் கைகளை விரித்து ஓடிக்கிண்டிருந்தனர். அவை கடந்த காலத்தில் தங்கிவிடாமல் நிகழ்ந்து கொண்டிருந்தன. அவை அசைந்து கொண்டிருந்ததில் பனி உதிர்த்து கலைசலான பேச்சுத்தங்கள் கேட்பது போன்ற பிரம்மை எழிப்பியது. மறுகணம் பனியில் உறைந்து நிறுத்தப்பட்ட உயிர்கள் போலிருந்தன. ஒவ்வொரு சிலையின் முன்னும் பத்து பதினைந்து நிமிடங்கள் நின்று ஊழ்கத்தில் நிறைக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன். அவர்களின் சிறு தொந்தி , பிரியாத பிரிந்த அதரங்கள் , கால்களின் நகங்கள் , விலா எலும்புகள் , துருத்தி நிற்கும் கருவிழிகள். மேற்கே நிழல் நீண்டு வீழ்ந்து கிடந்தது. எல்லா குழந்தைகளும் தங்கள் அம்மா அப்பாக்களுடன் இல்லாமல் தனியே நிற்கையில் அமைதியுடன் நிம்மதியுடன் முழுமையான சந்தோசத்துடன் இருப்பது தெளிவாகவே தெரிகிறது. பெற்றொர்களின் அருகில் நிற்பவர்கள் என்றும் விடுதலையற்ற சோகத்தில் ஆழ்ந்து தலை சாய்த்து நிற்கின்றனர்.
எதிரிலிருந்த குழந்தையை சந்தேகத்துடன் பார்ர்கும் வளர்ந்த ஆண் அல்லது தந்தையின் சிலை.
உனக்கு என்னிடம் எந்த சம்பந்தமுமில்லை என்பதை அறுதியுட்டு கூறுவது போலிருந்தது அந்த சிலையின் அமைப்பு. கண்களின் கண்டிப்பு குழந்தையின் தொங்கிய தலை. ஆம் அந்த ஆண் சொல்வது உண்மையே. எப்படி எந்த ஒரு உயிரியல் தொடர்பு இல்லாத ஒருவன் குழந்தையை அணைத்து இறுக்கிக்கொள்ள முடியும். தத்து எடுத்துக்கொள்கிறார்கள்தான் , ஆனால் அதன் ஆழத்தில் குழந்தைகள் அவர்களுக்கான துணையே. இல்லையேல் சமூக அக்கறை என்ற போலிபெயரில் குழந்தைகளை தத்து எடுத்துக்கொள்கிறார்கள் தங்களுக்கோர் அடையாளாத்தை சமூகத்தினுள் ஏற்படுத்திக்கொள்ள. என்னால் நம்ப முடியவில்லை. என் அண்ணனோ தம்பியோ குழந்தைகள் பெற்று அவர்களை அன்பால் நிறப்பதாக கூறி கண்ணீர் விடும் பொழுது உள்ளூர சிரிப்புதான் வருகிறது.
கார்த்திகா என் கைகளை பிடித்துக்கொண்டு ஆட்டிக்கொண்டேயிருந்தாள். இவளை காதலித்து கல்யாணம் செய்து கொண்டேன். இவளுடனும் மனம் ஒட்டவில்லை. நான்காண்டுகளாகியும் அதே நிலை. காதலைச்சொன்ன அன்றும் அப்படியே பின்பு ஏன் சொல்லி கல்யாணம் வரை சொண்டு சென்றேன். எனக்கு தேவைகள் இருந்தன. அதனை பூர்த்தி செய்து கொண்டேன். அந்த அளவுக்கு நான் ஒன்றும் பயந்தவன் இல்லையே. நேரடியாக ஒரு விபச்சாரியிடம் சென்றிருக்கலாம். ஆனால் அவள் என்னை உதாசினம் செய்யும் பொழுது தெரியும் நான் அவளை கண்டிப்பாக காதலிக்கிறென் என்பது. விபச்சாரிகளிடம் அந்த நிலை வருவதில்லை. ஆனால் குழந்தை விசயத்தில் இது நடக்கக்கூடாது என்பதில் நான் தெளிவுடன் இருந்தேன். நடிப்பு பசப்பு அறவே இருக்ககூடாது. எனக்கே தோன்ற வேண்டும்….”ஆம் இப்போது பெற்றுக்கொள்ளாலம்”. அவளுக்கு புரியவைக்க முயற்சித்தேன். அவள்மேலுள்ள என் அபிப்பிராயத்தை மறைத்து.
எப்படி ஆண் குழந்தைகளை ஒன்றாக தனக்குள் அன்பில் நிறைந்ததாக கண்டுகொள்ள தொடங்கினான். வெறும் உயிரணு மட்டும் கொண்டு பிறக்கும் அவனோ அவளோ ஓர் தனித்த உயிர் மட்டுமே. நானும் கூட தனித்தவனே….குழந்தைகளை வளர்ப்பது கடமை சார்ந்த செயல் மட்டுமே. தந்தை என்பதே கடமைக்கு சமமானமான சொல். ஓர் ஆண் அன்பால் மட்டுமே நிறைந்து குழந்தையை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அப்படியிருந்தால் அது தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும் நடிப்பு….நான் வயதான காலத்தில் ஆண்கள் பிள்ளைகளை நினைத்து அவர்களின் வாழ்க்கையை சில தந்தைகள் நினைத்து நொந்து கொள்கின்றனர். இதனை அன்பு சார்ந்ததாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. தன்னை அவன் பிரதிபலிக்கவில்லை தன் பெயர் காப்பாற்றப்படவில்லை என்பதால் கூட இருக்கலாம். இல்லை மற்றொன்றாகவும் இருக்கலாம். இதனை கார்த்திகாவிடம் பலமுறை சொல்லி புரியவைக்க வேண்டியிருந்தது.
காலை நேரமாகியதால் மொத்தமாகவே பத்துபேர்க்குள்ளாகவே பூங்காவிற்குள் இருந்தோம். என் மனைவிக்கு சிலைகள் முக்கியமில்லை போல் தெரிந்தது. கைகளை குளிருக்காக நெஞ்சோடு கட்டிக்கொண்டிருந்தாள். வெண் தொப்பியும் முழங்கால் வரை நீண்ட மேல்கோட்டினுள் மறைந்து சிறுமி போலிருந்தாள். என்னவோ சொல்ல நினைத்து மறைக்கிறாள் சொல்லட்டும் பொறுத்திருப்போம் என்று நானும் அடுத்த சிலைக்கு சென்றேன். அவளும் ஒட்டிக்கொண்டாள். மீண்டும் பனி பெய்ய ஆரம்பித்தது மென்மையான பஞ்சு தூறல்கள் மரம் சிலிர்த்த சிறு வெண்பூச்சிகளென ஒன்றன் மீதொன்று விழுந்து தடையமற்ற மற்றொன்றானது. காதுகளை மூடுவது என் பழக்கமல்ல. குளிரில் விறைத்து அவை சிவந்து வலிக்கையில் தொப்பியணிந்து கொள்வேன். அது குளிரை முழுவதுமாய் உணர உதவும்.
அந்த வரிசையில் இருந்த சிலைகள் விடலைப்பருவ ஆண்களும் பெண்களும். அவர்கள் காமத்தை உணர்ந்து கொள்ள தயாராக காத்திருந்த தோற்றம். ஒருவரையொருவர் கைகோர்த்து மூக்குரசி நிற்கும் சிலைக்கருகில் நின்ற பொழுது என் மனைவி என்னைப்பார்த்து முறுவலித்தாள் வெட்கத்துடன். எனக்கோ அவர்கள் இருவரும் சோகத்துடன் இருப்பது போலிருந்தது…அந்த தருணம் முடிந்தும் வரும் ஏக்கம் தனிமை எதையோ இழந்து விட்ட வெறுமை. அவள் கரு தரித்திருப்பதைக்கூட சொல்லியிருக்கலாம். அடுத்தலில் வட்ட வளைவினுள் இருவர் கைகால் கோர்த்து சுழன்று நின்றனர். இருவரும் அடுத்தவர் கால்களை தொட்டிழுத்து ஒருவர் மற்றொருவரை துரத்தி பிடிக்க முயன்றிருந்தனர். ஒருவருக்கொருவர் அகப்பட்டுக்கொள்வர் என்று நினைக்கும் கணம் தப்புத்துக்கொண்டேயிருந்தனர்.
முடிகளை சிலுப்பி விட்டு இளமைக்கான கூர்முலைகள் குலுங்க ஒருகால் தூக்கி ஆடி நின்றாள் இன்னொருத்தி. மயிர் கற்றைகளில் பனி படர்ந்து வெள்ளை மல்லிச்சூடி அவள் அழகில் அவளே மெச்சி தரை நோக்காமல் விண் நோக்கி நின்றாள். கார்த்திகாவை முதல் முறை காணும் பொழுது அவள் தலைமுழுவதும் பிச்சிப்பூ வைத்திருந்தாள். பூ உதிர்வது போல அவள் மூச்சும் சிரிப்பும் சிதறி பறந்து வரும் இருவரும் கூடி முயங்கும் பொழுது. இருவரும் இருமுறை உச்சம் அடைந்தாலொழிய அன்றைக்கு முடியாது. அவளுக்கும் அப்பொழுது கூர் முலைகள். திமிருடனேயிருந்தாள். கடைக்கண்ணால் ஏளனத்துடன் காண்பதற்கு நான் தவம் கிடக்க வேண்டும் என்பது அவள் எண்ணம். அவளது தட்டையான வயிற்றை கார்த்திகா பிளந்த வாயுடன் பார்த்துக்கொண்டிருப்பதை நான் தற்செயலாக கவனித்து விட்டேன். “இப்புடி சிலுப்பி நிண்ணுதான் நீ கொழந்த பெத்துக்கிற , பின்னால சிலுப்ப முடியாது பாத்துக்க” என்றேன் நக்கலுடன். அவள் அதற்கு எரிச்சலான முகத்தை பதிலாக முன்பே தயாரித்து வைத்திருந்தது போல காட்டினாள்.
விடலை ஆணும் பெண்ணும் சண்டையிட அவன் அவளை தூக்கி வீசுகிறான். நரம்புகள் புடைத்த கைகளுக்கிடையில் பெண்ணின் தலையிருந்தது. அவள் அந்தரத்திலிருந்தாள். எதிரில் அதே பெண்ணை தோளில் தூங்கி விளையாட்டாக நின்று கொண்டிருக்கிறான். இரு வரிசைகளின் முடிவிலிருந்த தூணில் டிராகன் போன்றதொரு உருவம் அதன் செதில் வாலால் நின்றிருந்த அடைபட்ட நிலையிருந்த பெண்ணை சுற்றி வைத்திருந்தது. குழந்தை பெற்றுக்கொள்ள நடந்த பேச்சுவார்தையில் கார்த்திகாவை அடித்திருக்கிறான்.
“என்ன எல்லாரும் மலடுனு சொல்ல நீங்க கேட்டுக்கிட்டு தான இருந்தீங்க. இனிமே யாராச்சும் கேட்டா நீங்க இம்பொட்டன்ட் அப்படீனு சொல்லிருவேன்…பாத்துக்கோங்க….என்னால இனி பேச்சு கேக்க முடியாது. எனக்கு வயிறு நிறம்பனும். உங்களால முடியலன வேற யாட்டையும்…..”
அதனை முடிக்கும்முன் நான் அவளை அடித்திருந்தேன். விழுந்தவள் எழும்பும் முன் என் உடம்பு நடுக்கத்தைக்குறைக்க கதவை சாத்திவிட்டு வசந்த கால பூக்களைக்காண சென்றுவிட்டேன். இளஞ்சிவப்பு வெள்ளை மஞ்சள் பூக்கள் இலைகளில்லா மரங்களில் நிறைந்திருந்தன. வசந்த காலம் இல்லையேல் இந்த மரங்கள் பூக்காமல் மலடாய் கிழட்டுக்கிழவிகளைப்போல் நின்றிருக்கும். அன்று முடிவெடுத்தேன் ஒன்றாவது பெற்றுக்கொள்ளலாம் அவளுக்காகவாவது. வேறுயாருடனும் போய் பெற்றுக்கொள்ளக்கூடாதே…
அவள் அந்த கோவக்கார பையன் சிலையின் முன் தங்கியது ஆச்சரியமளிகவில்லை. அம்மாக்களுக்கு அழும் குழந்தைகளை கைவிட மனமிருக்காது. அவை நிதம் அம்மாக்களை தேடிக்கொண்டேயிருக்கின்றன. குழந்தைகள் கோவத்தையும் அழுகையிலேயே காட்டுகின்றன. அதனால் அவள் அந்த சிலை முன் நின்றுவிட்டாள். குட்டி தொப்பையுடன் அந்த சிலை கோப அழுகையில் காலகாலமாக நின்று விட்டது. அவன் அழுதுகொண்டேயிருந்தான் கார்த்திகா போன்ற அம்மாக்களுக்காக. நான் அவள் அருகில் சென்றதும் “நேத்துலருந்து சொல்லணும்னு வச்சிட்டேயிருக்கேன். இந்த அழுவினி பையன பாத்ததும் சொல்லலாம்ணு தொணுது” என்று அந்த சிலைக்காட்டினாள். தலையிலிருந்த வெள்ளைப்பனி அவனிக்கு தொப்பி போட்டது போலிருந்தது. “இந்தாங்க..சர்ப்ரைஸ்….” என்று சிரித்தவாறு பயிலிருந்த ஒன்றை எடுத்துக்காட்டினாள். அந்த சிறிய குச்சி போன்ற நீளமான சாதனத்தின் கண்ணாடிக்கு பின் இரு சிவப்பு கோடுகள் இருந்தன. தலை தூக்கிப்பார்க்கவும் அவனுக்கு எதிரிலிருந்த சிலை ஒரு கைக்கு இரண்டாய் மொத்தம் நான்கும் மேல்புறமும் கால்களில் அதே போல நான்கு குழந்தைகளை கீழும் விசிறியடிக்கும் தந்தையின் கோபாவேச சிலை. கைகால்களில் தினவு புடைத்து நிற்க உதடுகள் இறுகி கண்கள் பிதுங்கி வெளியேறுவது போலிருந்தது. நிச்சயமாக அந்த குழந்தைகள் இறந்துகொண்டிருக்க வேண்டும். ஆனால் அவை சிரித்துக்கொண்டே பறந்திருந்தன. வெறுப்பை உமிழும் தந்தையின் முன் சிரிப்பு ஏளனத்துடன் குழந்தைகள்.
“வருத்தமில்ல. ஆனா சந்தோசமா இருக்கேனானு தெரியாது” என்றேன்.
“ஏன் சந்தோஷமான விசயம் தான?” என்றாள். அவள் முகம் மாறியிருந்தது. சிறுமிக்கான அடையாளங்களற்று பெண்ணானாள்
“ஆமா. ஆனா நாம கொண்டு வர்ர உயிருக்கு ஒரு மதிப்பிருக்கணும். கடமைக்கே பெத்து வளக்கக்கூடாது. இதெல்லாம் நாம முன்னாடியே பேசுனதுதான். திரும்பவும் சொல்றேன் நீ பெத்துக்க ஆனா எனக்கு இஷ்டமில்ல. எங்கிட்ட நீ எதிர்பாக்குற சப்போர்ட் கிடைக்காண்ணு பின்னாடி நீயோ இல்ல பொறக்கப்போற கொழந்தையோ கொற சொல்லக்கூடாது….நான் இப்பொவே அதுக்கு இடங்கொடுக்கலங்குறத நினப்புல வச்சிக்க ”
“உங்க தத்துவத்த நிறுத்துங்க. எவ்வளவோ கேட்டு பொறுத்தாச்சு. இந்த குழந்தைக்காக நிறைய கஷ்டப்பட்டுடேன். நீங்க தடுத்ததாலதான் இவ்வளோ நாள் பண்ணாம இப்போ பண்ணி வந்திருக்கு….அதுக்கும் ஆறு வருசம் காத்திருந்தாச்சு….நீங்க சம்மதிச்சனாலதான் இப்பொவும் பெத்துக்கலாம்னு நானும் மருந்து எதும் சாப்புடல. ரெண்டு மாசம் ஆக போகுது. இனிமே என்னோட வயிறு தாங்குமானு தெரியல. இதுதான் கடைசியா கூட இருக்கலாம். ” என்று கதறினாள்.
“நான் சம்மதிச்சதுதான். எனக்கு அதுக்குண்டான தருணம் வரணும். நீங்க நெனச்ச உடன் அம்மாவாகிறலாம். பால் சொரந்தா போதும். பத்தாததுக்கு உங்களுக்குள்ளயே வளத்து ரத்தமும் சதையுமா ஆக்குறீங்க. நான் வெளிய இருக்கேன் , எனக்கு டைம் வேணும். உண்மையாவே அது என்னோட உயிர்னு நினைப்பு வரணும்”
நான் சொன்னதை அவள் ஏற்றுக்கொண்டாற்போலிருந்தது “எவ்வளவு நாள்…” என்ற கேள்வியுடன் சீறினாள்.
“இன்னும் கொஞ்ச நாள்”
“என்னால முடியாது…” என்று கத்தினாள்.
“சத்தம் போடாத” என்று அவள் கைகளைப்பிடித்து அழுத்தினேன். கண்டிப்பாக வலித்திருக்க வேண்டும். அவள் அமைதியானாள். நான் தனித்து விடப்பட்டேன். தொடர்ந்து சிலைகளை பார்ப்பதாக முடிவெடுத்தேன். அவள் எனக்கு முன் தனியாக நடந்து நீரூற்றைத்தாண்டி சென்று விட்டாள். இது வாழ்நாளில் ஒருமுறை அமையும் தருணம் , திரும்ப வரப்போவதில்லை. சண்டையை பிறகு வைத்துக்கொள்ளலாம் வீட்டிலோ காட்டிலோ என்ற எண்ணமேயிருந்தது.
நீர்த்திவலைகள் தெறித்து நனைத்த சிலைகள் அதனை சுற்றி நின்றன. எல்லா சிலைகளும் ஒற்றை மரத்தின் கீழ் நின்றன. கனத்த மேல் சட்டையை நீரின் குளிருக்கு ஈதமாய் இறுக்கிக்கொண்டு அவற்றைத்தாண்டி படியேறிச்சென்றேன்.
கனத்த கற்படிகள் வெள்ளை நிறத்திலிருந்தன. ஒருபடியேறி நடந்து பின் அடுத்த படியேற வேண்டியிருந்தது. படிகளின் ஒன்றன் மீது ஒன்றாய் அடுக்கியிருந்த வட்டத்தின் விளிம்புகளிலிருந்தன வெண் கற்சிலைகள். நடுவில் குழந்தைகள் ஆண்கள் பெண்கள் உடல்கள் பின்னி பிணைந்த வெண் கல் ஸ்தூபி. வெளிவர துடிக்கும் உள்புக ஏங்கும் உடல்கள் கொண்டு மண்ணிலிரிந்து விண்னோக்கி எழுந்த ஆண்குறி போலிருந்தது. ஒருவரையொருவர் அரவணைத்து கழுத்தைக்கட்டி அமர்ந்த ஆண் பெண் , முதுகு பார்த்து அமர்ந்த கிழவிகள். முதுகொட்டி அமர்ந்த கன்னிகள் , மனைவியை தூக்கி எறியும் ஆண் , மடியில் ஏசுவைப்போல படுத்திருந்த கிழவி மரியாவாகா தாடிக்கிழவன் , சண்ணையிடும் ஆண் பெண் குழந்தைகள்.
கார்த்திகா ஓர் சிலையின் முன் நின்று கொண்டிருந்தாள். அந்தச்சிலை அவளை ஆட்கொண்டிருந்தது. குனிந்து நின்ற அம்மையின் முலைகளை பிடிக்க பிதுங்கி நிற்கும் குழந்தைக்கூட்டம். அருகில் குழந்தைக்கூட்டம் ஏறி சூழ்ந்து அசையவிடாமல் செய்யப்பட்ட அம்மை. பருத்த முலைகள் தொங்கி அதிர்ந்த நிலையிலிருந்தன இரு அம்மைகளுக்கும். இரண்டையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தாள். இருவரும் பார்த்துக்கொண்டனர் ஒன்றும் பேசவில்லை. பூங்காவைச்சுற்றிவிட்டு இறங்கி வந்தனர்.
வெளியேறும் பாதையில் அவன் கண்ணில் தென்பட்டது அச்சிலை. இரு குழந்தைகளை கையில் ஏந்திக்கொண்டு புன் சிரிப்போடு நிற்கும் ஆண். கைகளில் இருக்கும் குழந்தைகள் அதனை மகிழ்ந்து கைகால் முறுக்கிக்கிடந்தன. அந்த ஆண் தந்தைக்குரிய அனைத்து லட்சணங்களும் பொருந்திய உடல் கொண்டு மகிழ்ச்சியே நிறைந்தவனாக குழந்தைகளை ஏந்திக்கொண்டிருந்தான். இருதயம் நின்று காலம் நின்று பிறந்து இறந்ததைப்போல உணர்ந்தேன்.
“இதான் என் கனவுல அடிக்கடி வர்ர சிலை. இப்பொதான் ஞாபகம் வருது. நம்ம குழந்த பெத்துக்கலாம். எத்தன வேணும்னாலும். எனக்கு நம்பிக்க இருக்கு. என்னால சந்தோசமா ஏத்துக்க முடியும்ணு இப்போ தோணுது. நான் தேடுனது என்ன தாண்டுன ஒரு விசயத்துல இருந்து வர்ர அழைப்பு இல்லானா ஒரு அக்னாலெஜ்மெண்ட்” எனக்கெ சொல்லிக்கொண்டது போலிருந்தது. அவள் நான் சொல்வதை உள்வாங்கிகொள்ளவில்லை. அதற்கு சரியென்பது போல பார்த்தாளா என்பது சந்தேகம். ஆனால் நான் சரியென்றே எடுத்துக்கொண்டேன். அன்றிரவு தங்கிவிட்டு அடுத்த நாள் ஸ்டாக்கோமிற்கு கிளம்பிவிட்டோம். ஏழு மாதத்தில் இரட்டையர்கள் நல்லபடியாக பிறந்தனர் மெல்ல வளர்ந்தனர்.
இணையற்ற அன்னையாக குழந்தைகளை வளர்த்தாள். இறக்கும் தருணம் அதைச்சொன்னாள் “எனக்கும் ஒரு கனவு வர்ரதுண்டு. மூக்கணாங்கயிறு கட்டுன அம்மா. அதுக்கு மேலயிருக்குற இரண்டு குழந்தைங்க அத புடிச்சி சவாரி போறாங்க. கொஞ்சநாளா டெய்லி வருது. நீங்க அந்த பார்க்ல இருக்கும் போது சொன்னது சரிதான்” அன்று பின்னரவில் சிறிது கஞ்சி குடித்து மடிந்து படுத்து காலையில் இறந்து போனாள். அவள் மூக்கு ரொம்ப நாளாக சிவந்திருந்ததை அன்றுதான் கண்டேன்.
நான் குழந்தைகளுடன் சந்தோசமாகவே இருந்தேன் கடைசிவரை, ஆனால் அவளும் நானும் எங்களுக்கு இரட்டையர் பிறந்ததற்கு பின்னும் காட்டிக்கொள்ளவில்லை நான் இம்பொட்டண்ட் என்பதை.
உண்மையான வாழ்க்கை.