நிலம்

ராதாகிருஷ்ணன்

வீடு முன்பு யாரையும் காணவில்லை, உள்ளே பேசும் குரல்கள் கேட்டன, தன்னை இன்னும் யாரும் பார்க்காதது தருமனுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது, மெதுவாக வீடு இருக்கும் பாதையில் நகர்ந்து வீடு பின்புறம் இருக்கும் தென்னந்தோப்பை நோக்கி சென்றான்.தூரத்திலேயே வாய்க்காலில் தண்ணி போகாமல் இருப்பதால் உருவான வெடிப்புகள் தெரிந்தன, மரங்களிலும் பசுமை குறைந்து காய தொடங்கி இருந்தது. தருமன் தன்னையே நொந்து கொண்டான், வேகமாக போய் மோட்டாரை ஆன் செய்தான், தொட்டியில் நீர் விழ ஆரம்பித்ததது, தொட்டியின் உட்சுவர்களில் இருந்த பாசனம் வெயிலில் கருகியிருந்தன, அவையெல்லாம் நீருக்குள் மூழ்க, தொட்டி நிறைந்து தண்ணீர் வெளியேறி வாய்க்காலுக்குள் விழுந்து ஓடியது, வாய்க்கால்களில் சென்று ஒவ்வொரு தென்னையின் அடியில் வெட்டிவைத்த வட்டங்களில் சுற்றி நிறைத்து நீர் சென்று கொண்டிருப்பதை பார்த்து கொண்டிருந்தான். விடியற்காலை முதற்கொண்டு மனதினுள் உருண்டு கொண்டிருந்த அவஸ்தை போன நிம்மதியை உணர்ந்தான். தொட்டியில் இருந்து நீர் எடுத்து முகம் கழுவினான், சட்னென மறந்து போன ஞாபகம் மீண்டும் நுழைந்து பயம் கொண்டு வீட்டை நோக்கினான், யாரையும் காண வில்லை, யாரும் இன்னும் வெளியே வராதது அவனுக்கு சற்று ஆச்சிரியம் அளித்தது, எதிர்பார்ததது இன்னும் நடக்காததை அவன் உணர்ந்து கொண்ட போது, அவனுக்குள் தானாக பதட்டம் உருவானது, சீக்கிரம் இங்கிருந்து சென்று விட வேண்டும் என்று எண்ணிக்கொண்டு மோட்டாரை ஆப் செய்ய சென்றான், பட்டனை அழுத்தும் போது சிலர் ஓடிவருவது போன்ற சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான், முருகனும் சில ஆட்களும் கட்டைகளுடன் தன்னை அடிப்பதற்காக வந்து கொண்டிருப்பதை பார்த்தான்.

மூன்று நாள் அரசு மருத்துவமனையில் காயங்களுடன் சுருண்டு படுத்து கிடந்தான், கற்பகம் அவன் விழித்திருந்த எந்நேரமும் அவனிடம் பேசிக்கொண்டிருந்தாள், ஆனால் அவன் மனம் அந்த ஐந்து நிமிடங்களுக்குள் உழன்று கொண்டிருந்தது. முருகன்தான் முதலில் அடித்தான், “பேசிக்கலாம், அடிக்காதிங்க” என்று சொல்ல சொல்ல நான்கு பேரும் மாறிமாறி அடித்ததை அந்த ஒவ்வொரு அடிகளையும் நினைவு கூர்ந்து கொண்டிருந்தான், அடித்தாளாமல் கீழே விழுந்த போது மீண்டும் அடித்ததை, முதுகில், பின்பக்கத்தில் எல்லாம் அவர்கள் குரூரமாக மிதித்ததை நினைவு கூர்ந்தான், கடைசியில் அவர்கள் போகும்போது முருகன் ” இனி உள்ள வந்த பிணமாதான் போவ ” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே இன்னொருவன் வந்து முகத்தில் மிதித்தான், முருகன் அப்போது அவனைத்தடுத்து “விடுறா, செத்தற போறான் ” என்றான், தருமனின் கை அனிச்சையாக முகத்தை தடவி பார்த்தது, வலது பக்கம் கண்களை சுற்றி இருந்த இடங்கள் வீங்கி இருந்தன, அதை கைகளில் அழுத்தி தொட்டபோது வலி தெறிப்பதை உணர்ந்தான், பிறகு கண்களை மூடி கொண்டான், அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தான், கற்பகம் முன்பு அழ கூடாது என்று எண்ணினான்,பின் முடியாமல் திரும்பி படுத்து கொண்டான்.

காவல் நிலையம் முன்பு யாரையும் காணவில்லை, தர்மன் இதை எதிர்பார்த்ததுதான், எதற்கும் வாசலில் நின்று எட்டி உள்ளே எட்டி பார்த்தான், ஒரு போலீஸ்காரர் மட்டும் இருக்கையில் அமர்ந்து ஏதோ தாள்களை புரட்டி கொண்டிருந்தார், இவன் வந்ததை காணாமல் அவர் தாளிலேயே மூழ்கி இருந்தார், தர்மன் உள்ளே செல்லாமல் வாசலில் இருந்த வேப்ப மரத்தடியில் நின்றிருந்த பைக் நோக்கி சென்று, அதில் சாய்ந்து நின்றுகொண்டான். உடலில் இன்னும் அடியின வலிகள் இருந்தன, செல்பேசியை எடுத்து நேரம் பார்த்தான். சரியாக 10 மணிக்கு வர வேண்டும் என்று சொன்னார்கள், மணி பத்து ஆகி இருந்தது. தனக்குள் சலித்து கொண்டான் “எப்ப வருவானோ ” என்று புலம்பி கொண்டான். தருமன் இப்படி இங்கு வருவது ஏழாவது முறை, முதலில் கேஸ் கொடுத்தது இவன்தான், ஆனால் இப்போது சப் இன்ஸ்பெக்டர் இவனை குற்றவாளி போல நடத்துகிறார். தன் பெரியப்பாவை திட்டி கொண்டான், அவர் பேச்சை கேட்டதுதான் இவனின் இப்போதைய எல்லா நிலைக்கும் காரணம்.

திருப்பூரில் தினமும் 15 மணிநேரத்திற்கு மேல் உழைத்து 10 ஆண்டுகளாக சேர்த்தி வைத்த பணம், சொந்த ஊரில் கொஞ்சம் நிலம் வாங்கி விவசாயம் செய்வதுதான் இவன் வாழ்நாள் ஆசை, அம்மாவும் அப்பாவும் விவசாய கூலிகள், இவன் பத்தாவது படிக்கும் சமயத்தில் ஒரே நேரத்தில் காய்ச்சல் வந்து இருவரும் அடுத்தடுத்த நாளில் இறந்து போனார்கள், இவன் ஒருவன் மட்டுமே பையன், தருமனை பெரியப்பாதான் வீட்டில் வைத்து பார்த்து கொண்டார், +2 பிறகு படிக்க பிடிக்காமல் ஊரில் இருப்பவர்கள் திருப்பூர் பனியன் கம்பெனிகளுக்கு வேலைக்கு போவதை பார்த்து அவர்களோடு சேர்ந்து கொண்டான், திருப்பூரில் வேலை தந்த கம்பனியே இருக்க இடமும் கொடுத்தது, அருகில் மெஸ்ஸில் கணக்கு வைத்து சாப்பிட்டுக்கொண்டான், பிறகு வேலை சூழலில் கிடைத்த நண்பர்களுடன் சேர்ந்து அறை எடுத்து தங்கி கொண்டான், பிறகு ஊருக்கு வருவது குறைந்தது, விசேஷ நாட்களில் மட்டும் வந்து சென்றான். பிறகு ஒரு பைக் முழு தொகை கொடுத்து கடனில்லாமல் வாங்கினான், அதிலேயே ஊருக்கு வந்தான், ஊரில் ஒவ்வொரு பகுதியிலும் சுற்றினான். அதெல்லாம் இப்போது தர்மனுக்கு கவலைகள், பயங்கள் அற்ற பொற்காலம் என்று தோன்றியது, அந்த நாட்களை எண்ணி ஏங்கினான். ஐந்து வருடம் முன்பு பெரியப்பா அழைத்து பொண்ணு பார்த்திருக்கேன் என்று சொன்னபோது தருமனுக்கு தரையில் கால்கள் இல்லை, அறை நண்பர்களுக்கு மது விருந்து அளித்து கொண்டாடினான், அன்றிலிருந்து சரியாக 50 நாட்களுக்குள் திருமணம் முடிந்து விட்டது, கற்பகத்தை முதலில் அவன் பார்த்த போது விளையாட்டு பிள்ளை போல இருக்கிறாள் என்றெண்ணி மனதிற்குள் சிரித்து கொண்டான், இந்த நிலப்பிரச்சனை வந்து தருமன் இப்படி ஆனபிறகு, அவன் சித்தமெல்லாம் செத்து போய் நடைப்பிணமான பிறகு அவள் சொல்வதை மட்டுமே வேத வாக்கு போல செய்தான், அவள் மட்டுமே அவனுக்கு இவ்வுலகில் இருக்கும் ஒரே துணை. அவள் இல்லையென்றால் எப்போதோ தற்கொலை செத்திருப்பான் .

திருமணம் நிகழ்ந்து நன்றாக போய்க்கொண்டிருந்த அவன் வாழ்வு திசை மாறியது இந்த நிலம் வாங்கிய பிறகுதான், பெரியப்பா “மோட்டார் இருக்கற நல்ல தண்ணியுள்ள இடம்டா, பூரா தென்னை நின்னு கிடக்கு, முன்னாடி ஒரு ஓட்டு வீடும் இருக்கு, வீடு நல்ல அம்சமா இருக்கு, 8 லட்சம் னு சொல்றாங்க, நான் கொஞ்சம் பணம் தரேன், உன் பணமும் இருக்கு, மிச்சம் கடன் வாங்கலாம், பத்தலனா என் நில பத்திரத்தை கூட தாரேன், வாங்கிடலாம்டா ” என்றான். “உன் விருப்பம் பெரியப்பா, நீ எப்ப சொல்றயோ அப்ப அங்க வரேன் “என்றான். கிரயம் செய்யும் நாள் அன்றுதான் காலையில் போய் நிலத்தை பார்த்தான், கற்பகம் மகிழ்ச்சியில் புரண்டாள், கல்யாண சேலை உடுத்தி இருந்தாள், காலையிலேயே lகோவிலுக்கு என்னையும் கூட்டி கொண்டு போய் வந்தாள்.

நிலத்திற்கு உள்ளே நடந்து போய் பார்த்தான், தென்னைகள் எல்லாமே குழை தள்ளி இருந்தன, பெரிய தண்ணி தொட்டி, வாய்க்காலில் போன நீரை சற்று கையில் எடுத்து கண்களில் ஒற்றி கொண்டான், அம்மாவையும் அப்பாவையும் நினைத்து கொண்டான், கண்களில் நீர் திரண்டது, ” அம்மா ” என்று சொல்லி கொண்டான். கிரயம் முடிந்து அன்று இரவு பெரியப்பா வீட்டிலேயே தங்கினான், இவன் மீது பெரியம்மாவுக்கு மிகுந்த பிரியம் உண்டு, இரவு விருந்துணவு உண்டு கட்டியில் சாய்ந்து படுத்து கொண்டான், அம்மா நினைவு மட்டுமே அவன் மனதில் இருந்தது ” அம்மா நான் நிலம் வாங்கிட்டேன் மா, அப்பா ” என்று மனதிற்குள் அரற்றி கொண்டிருந்தான். பெரியப்பாவின் ஓசை கேட்டு திரும்பி பார்த்து எழுந்து அமர்ந்தான். பெரியப்பா அருகில் அமர்ந்து கொண்டார், ” நிலத்தை பாத்துக்கணும், என்ன பண்ணலாம் ” என்றான். இவனும் அது பற்றி யோசித்திருந்தான், இன்றைய அலைச்சலில் மறந்து விட்டான். ” ஆம பெரியப்பா, நானும் மறந்துட்டேன் என்ன பண்ணலாம் ” என்றான், ” மகனே, ஆள்வச்சு பார்த்தா, நாம கண்காணிக்கணும், காய் போடற சமயத்தில் இங்க இருக்கணும், உன் பொழப்பு கெட்டு போயிடும், ஒரு இரண்டு வருஷம் குத்தகைக்கு விடுவோம், கடனை அடைப்போம், பிறகு திருப்பூர் வேலை விட்டு இங்க வந்துடு, இதுல வர காசே நமக்கு போதும் ” என்றார், தருமனுக்கு இது நல்ல யோசனையாக பட்டது. பிறகு திருப்பூர் போய் விட்டான். ஒரு வாரத்திற்குள்ளாக பெரியப்பா போனில் அழைத்து ” குத்தகைக்கு ஆள் கிடைச்சுட்டாங்க, மாடசாமி மகன் முருகன் தான் எடுக்க இருக்கான், கிளம்பி வா “என்றார் தருமன் முருகனின் முகத்தை ஞாபக படுத்தி பார்த்தான், மங்கலாகத்தான் ஞாபகம் வந்தது, இவன் 5 படிக்கும் போது அவன் அதே பள்ளியில் 10 வகுப்பு படித்தவன், பிறகு படிக்காமல் அப்பாவுடன் சேர்ந்து கொண்டு விவசாயத்திலேயே இறங்கியவன், அதிகமாக பேச மாட்டான், பல வருடம் முன்பு அவனை தருமன் அவனை பார்த்தது, பிறகு தருமன் ஊருக்கு வரும்போதெல்லாம் அவனை பார்த்ததே இல்லை. அன்றிரவே ஊருக்கு கிளம்பி விட்டான்.

காலையில் பெரியப்பா வீட்டிற்கு முருகன் தன் அப்பாவுடன் வந்திருந்தான், கூட இன்னொரு ஊர்காரரும் வந்திருந்தார், பெரியப்பா இரண்டு ஊர் காரரை கூட்டி வந்திருந்தார், அதில் ஒருத்தர் ஊர்நாட்டாமை. அவரை பார்த்தவுடன் தருமன் வணங்கினான் , ” நல்லா இரு தம்பி ” என்றான். பிறகு அவர்தான் பேச தொடங்கினார் ” இரண்டு வருஷ குத்தகை, முடிச்சு கொடுக்கும் போது இப்ப எப்படி இருக்கோ அது போலவே இருக்கனும் ” என்றான், முருகன் சரி சென்று ஆமோதித்து கொண்டு பெரியப்பாவிடம் குத்தகைப் பணத்தை கொடுத்தான், அவர் தருமனை வாங்க சொன்னார், தருமன் வாங்கி பெரியப்பாவிடமே கொடுத்தான்.

இந்த இரண்டு வருடங்களிலும் மாதம் ஒருமுறை வந்து நிலத்தை பார்த்து போவான், முருகன் அந்த ஓட்டு வீட்டில் வந்து தங்கி கொண்டான், இவன் வந்தால் அருகில் பார்க்க நேர்ந்தால் ஓரிரு வார்த்தை பேசுவான். அவன் மனைவி லேசாக புன்னகைப்பாள், அவ்வளவுதான். தருமன் வந்தால் தண்ணித்தொட்டி பக்கம் போய் அந்த திண்டில் மேல் அமர்ந்து கொள்வான், பிறகு ஒவ்வொரு மரமாக போய் நின்று பார்த்து கொண்டிருப்பான், அப்படி பார்த்து கொண்டிருப்பது அவனுக்கு சலிக்கவே சலிக்காது, பிறகு இருட்டாக துவங்கும் போது மனமில்லாமல் கிளம்புவான்

இரண்டு வருடங்களில் கிட்டத்தட்ட கடன்களை அடைத்து விட்டான், சொந்த ஊருக்கே வரும் ஆயத்தங்களில் இருந்தான். குத்தகை முடிந்த நாள் அன்று பெரியப்பா ஊருக்கு வந்து பெரியப்பா வீட்டில் இருந்து முருகனை எதிர்பார்த்து காத்திருந்தான், இருட்ட தொடங்கியும் அவன் வரவில்லை, தருமன் மனம் எதிர்பார்த்து சோர்ந்திருந்தது, பெரிப்பா ” விடு, காலைல நாமளே போயிடுவோம் ” என்றான். அன்று இரவு தருமனுக்கு உறக்கமே வரவில்லை, இரண்டு மணிக்கு தூக்கம் வந்து 5 மணிக்குள் எழுந்து கொண்டான், காத்திருந்து 9 மணிக்கு பெரியப்பாவையும் அழைத்து நிலத்திற்கு போய் சேர்ந்தான், முருகன் வாய்க்காலை சீர் படுத்தி கொண்டிருந்தான், பார்க்கவும் மண்வெட்டியை கீழே போட்டு அருகில் வந்தான். “சொல்லுங்க என்ன விஷயம்” என்றான், தருமனுக்கு அதை கேட்க மனம் தூக்கிவாரி போட்டது. பெரியப்பா ” என்ன தம்பி, குத்தகை காலம் முடிஞ்சது தெரியாதா ” என்றார். அவன் அவரை பார்க்காமல் தருமனை நோக்கி ” இது என் நிலம், வேணும்னா கொஞ்சம் பணம் தாரேன், எனக்கு எழுதி கொடுத்துடு, மத்தபடி நீ எழுதி தராட்டியும் இது என் நிலம்தான், எவனை வேணும்னாலும் கூட்டி வா பாத்துக்கலாம் ” என்றான். தருமனுக்கு கண்களில் கண்ணீர் பெருகியது ” இது நான் கஷ்டப்பட்டு வாங்கினதுங்க” என்றான், முருகன் அவனை பார்க்காமல் “வேலை கிடக்கு, கிளம்புங்க “என்றான், பிறகு போகும் போது ” இங்க வர வேலை வச்சுக்காதீங்க ” என்றான். பெரியப்பா தருமனை நோக்கி ” இவன்கிட்ட எதுக்கு பேசிட்டு, வா நாட்டாமைட்ட போவோம், இவன் தன்னால வழிக்கு வருவான் ” என்றார்.

பஞ்சாயத்தில் எல்லோரும் வந்தும் முருகன் மட்டும் நேரம் கழித்து அப்பா மாடசாமியை கூட்டி கொண்டு வந்தான், அவன் எதுவுமே பேச வில்லை, நாட்டாமை ” நாளைக்கு அவன் நிலத்துல இருக்க கூடாது ” என்றார், முருகன் ஒன்றும் சொல்லாமல் நின்று கொண்டிருந்தான், நாட்டாமை ” மாடசாமி உனக்கும் சேர்த்திதான் சொல்றேன், புரிஞ்சுதா ” என்றார், மாடசாமி ” சரிங்க ” என்றார். அன்று சற்று நிம்மதியாக தூங்கினான் தருமன். காலையில் போய் பார்த்தபோது முருகன் போகாமல் தோப்பில் வேலை செய்து கொண்டிருந்தான், தருமன் நேராக நாட்டாமையை போய் பார்த்தான் ” தம்பி, இப்பல்லாம் எவனுமே பஞ்சாயத்தை மதிக்கறதில்லை, நீ போலீஸ் ஸ்டேசன் போ, அப்பத்தான் இதுக்கு முடிவு கிடைக்கும் “என்றார், தருமன் நடுங்கினான், போலீஸ் ஸ்டேஷன் என்றெல்லாம் அவன் போனதே இல்லை, “அய்யா உங்களை எல்லாம் நம்பித்தானே கொடுத்தேன் ” என்றான். நாட்டாமை ஏதும் சொல்லாமல் வருத்தம் வெளிப்படுத்தும் முகம் கொண்டு நின்று கொண்டிருந்தார். அப்போதே பெரியப்பாவையும் இன்னொரு ஊர் பெரியவரையும் அழைத்து கொண்டு ஸ்டேஷன் போனான், சப் இன்ஸ்பெக்டர் இருந்தார், தன் பிரச்சனைகளை சொன்னான், கேட்டு கொண்டவர் முருகனின் அலைபேசி எண் வாங்கி அழைத்து அவனை வர வைத்தார். அவன் மட்டும் வந்தான், தருமனை பார்த்து முறைத்தான்.

சப் இன்ஸ்பெக்டர் முருகனை ” நிலம் யார் பேருலடா இருக்கு ” என்கிறார், அவன் ” அவன் பேருலதாங்க இருக்கு, ஆனா எனக்கு விக்கறேன் னு சொல்லித்தான் கொடுத்தாங்க, பணம் நிறைய கொடுத்திருக்கேன், இப்ப எழுதி கொடுக்க சொன்னா காலி பண்ணுனு சொல்றாங்க ” என்றான், தருமன் அதை கேட்டு திடுக்கிட்டு தடுமாறினான், சப் இன்ஸ்பெக்டரை நோக்கி ” பொய் சொல்றாருங்க, எங்க ஊர்ல எல்லோருக்குமே தெரியும் என் நிலம் அதுனு, நான் குத்தகைக்குத்தான் கொடுத்திருக்கேன்னு, பஞ்சாயத்துல கூட இவரை வெளிய போக சொன்னாங்க, போக மாட்டேங்கிறாரு ” என்றான், சொல்ல சொல்ல அவனுக்கு அழுகை வந்தது. பிறகு பேச்சுவார்த்தை ஒரு மணி நேரம் ஓடி கடைசியில் சப் இன்ஸ்பெக்டர் முருகனை நோக்கி ” தோப்புல நீ இனி போக கூடாது, வீட்டை ஒரு வாரத்தில் காலி பண்ணி கொடுத்தடனும் ” என்றார். பேச்சுவார்த்தை முடிந்து ஸ்டேஷன் விட்டு எல்லோரும் வெளியே வந்தார்கள், பிரச்னை தீர்ந்தது என்று தருமன் நினைத்தான்.

முருகன் ஒரு மாதமாகியும் காலி செய்ய வில்லை, தோப்பையும் பராமரிப்பதை விட்டிருந்தான், நிலத்திற்கு போனால் சண்டை நிகழும் என்று நினைத்து தருமனும் போகாமல் இருந்தான். ஸ்டேஷன் மட்டும் போய் ” இன்னும் காலி செய்யவில்லை ” என்பதை புகார் சொல்லி கொண்டிருந்தான், ஆரம்பத்தில் சப் இன்ஸ்பெக்டர் இவனுக்கு கொடுத்த மரியாதை நாளாக நாளாக குறைந்திருந்தது, தருமனை காரணம் இல்லாமல் திட்டவெல்லாம் ஆரம்பித்திருந்தார், பெரியப்பா ” முருகன் காசு ஏதாவது கொடுத்து சரி கட்டியிருப்பாண்டா ” என்று தருமனிடம் சொன்னபோது தருமன் நொறுங்கி போனான்.

இரவு தூக்கம் என்பதே இல்லாமல் ஆகி விட்டிருந்தது, திருப்பூர் வேலைக்கு போய் இரு மாதங்களாகி இருந்தது, கற்பகத்திடம் இதையெல்லாம் அவன் முழுதும் சொல்லவில்லை, காலி செய்ய அவகாசம் கேட்கிறார்கள் ” என்று மட்டும் சொன்னான், பெரியப்பாவிடமும் சொல்லி பெரியம்மாவிடம் சொல்ல வேண்டாம் என்று சொல்லியிருந்தான் , ஆனால் சில நாட்களிலேயே கற்பகத்திற்கு அருகிலுள்ளவர்கள் சொல்லி தெரிந்து விட்டது, “நான் போய் கேட்கிறேன்” என்று அழுது தருமனிடம் சண்டை செய்தாள்,தருமன் “நான் பார்த்து கொள்கிறேன், நீ உள்ள வராதே ” என்று தீர்மானமாக சொல்லி விட்டான். பிறகு தினமும் அவன் வீட்டிற்கு வரும் போது அவள் விசாரித்து புலம்புவதும் அவன் சாக்குபோக்கு சொல்லி கடந்துவதுமாக நொந்து கொண்டிருந்தான்

ஒருநாள் நிலத்தை கடந்து செல்லும்போது நீர் பாய்ச்சல் இன்றி தென்னைகள் காய்ந்து கிடப்பதை பார்த்து சென்றான், அன்றிரவு உண்ணவே அவனால் முடியவில்லை. துளி கூட தூக்கம் வரவில்லை, வெளியே திண்ணையில் வந்து அமர்ந்து கொண்டான், விடிவதை பார்த்து கொண்டிருந்தான், ஆட்கள் நடமாடும் வரை பார்த்து கொண்டிருந்தான், பிறகு நிலம் நோக்கி நடந்தான், முன்பிருந்த வீடு கடந்து மோட்டரை இயக்கி நீர் பாய்ச்சினான், மருத்துவமனையில் கிடந்தான்.
……

சப் இன்ஸ்பெக்டர் புல்லட்டில் வந்து ஸ்டேசனின் வாசலில் இருந்த தகர கூரையின் கீழ் வண்டியை நிறுத்தினார். அனிச்சையாக திரும்புவதை போல திரும்பி தருமனை பார்த்தார். பிறகு படியேறி உள்ளே தன் இருக்கை நோக்கி சென்றார். சொல்லிவைத்தாற் போல சற்று நேரத்திலேயே ஒரு வாடகை டாட்டா இண்டிகா கார் வந்து ஸ்டேஷன் வாசலில் நின்றது, முருகன் இறங்கினான், அவனோடு 7-8 பேர் இறங்கினர், எல்லோரும் கட்டுமஸ்தாக கட்சி கரைவேஸ்டி கட்டி கடாமாடுகள் போல இருந்தார்கள், எல்லோரும் திரும்பி தருமனை விறைப்பாக பார்த்து பின் திரும்பி கொண்டார்கள், பிறகு உள்ளே சென்றார்கள். சற்று நேரம் கழித்து தருமன் உள்ளே போனான், எல்லோரும் இருக்கைகளில் அமர்ந்து இருந்தார்கள், சப் இன்ஸ்பெக்டரிடம் வேடிக்கை சொல்லி சிரித்து கொண்டிருந்தார்கள், சப் இன்ஸ்பெக்டரும் சிரித்து கொண்டிருந்தார், நான் உள்ளே சென்றதும் அந்த சிரிப்புகள் நின்றன. தருமன் அமர அங்கு இருக்கை ஏதும் இருக்க வில்லை. சப் இன்ஸ்பெக்டர் முன்பு வந்து நின்றான். அவர் நிதானமாக ” தம்பி, நீ நிலத்தை இவருக்கு எழுதி கொடுத்துட்டு, பணம் வாங்கிக்க, நான் கொடுக்க சொல்லி இருக்கேன், இப்படித்தான் இந்த பிரச்னை தீரும், இல்லாம கோர்ட்டுக்கேசு னு போனா கூட ஒன்னும் தீராது ” என்றார். தருமன் மனதிற்குள் என்ன ஆனாலும் அழ கூடாது, கெஞ்ச கூடாது என்று எண்ணி கொண்டான், பிறகு ” அது என் நிலம்ங்க, அத நான் யாருக்கும் தர முடியாது ” என்றான் தெளிவாக. இருக்கையில் இருந்த சிலர் தருமனை அடிக்க பாய்வதை போல எழுந்தார்கள், சப் இன்ஸ்பெக்டர் அவர்களை ” உட்காருங்க ” என்று சொல்லி அமர வைத்தார். தருமன் நிதானமும் தெளிவும் கொண்டு மேலும் பேசினான் ” என் நிலத்துக்கு போனா என்னை அடிக்கறாங்க, நீங்க ஒரு தீர்வு சொல்லலைனா நான் கலெக்டர் ஆபிஸ் போவேன், எனக்கு என் வேணும், அத யாருக்கும் விற்க மாட்டேன் ” என்றான். சொல்லி முடிப்பதற்குள்ளாக சப் இன்ஸ்பெக்டர் தருமனை அறைந்தார். தருமன் தன் சொல்லில் பின் வாங்க மாட்டேன் என்பது போல அடியை பொருட்படுத்தாமல் சப் இன்ஸ்பெக்டரை பார்த்தான். சப் இன்ஸ்பெக்டர் ” இது ஆவறதில்ல, நீ கிளம்பு ” என்றார், தருமன் ஏதும் சொல்லாமல் வெளியேறினான்.

வீடு வந்தான், கற்பகம் அவனை கண்டு என்ன நடந்திருக்கும் என்று யூகித்து ” நான் ஒன்னு உங்ககிட்ட சொல்லணும்ங்க “என்றாள், ” நாம திருப்பூர் போகலாம், நிலம் நம்ம பேர்லதான இருக்கு , யாரும் ஒன்னும் பண்ணிட முடியாது, போயிடுவோம், பிறகு பொறுத்து பார்த்து வந்து இங்க வருவோம் ” என்றாள், தருமனுக்கும் அது சரியாக பட்டது, இந்த பிரச்சனைகளால் மனம் நொந்து படுத்த படுக்கையான பெரியப்பாவை அவர் அறையில் போய் பார்த்தான், ” நான் திருப்பூர் போறேன், நிலம் எங்கயும் போகாது, பிறகு பார்த்துக்கலாம் ” என்றான், பெரிப்பா அருகில் வர சொல்லி அவன் தலை மீது கைவைத்து கண்ணீருடன் ” என்னை மன்னிச்சுருடா ” என்றான், ” விடுப்பா, நீ என்ன பண்ணுவ, என் தலைவிதி இப்படி இருக்கணும்னு ” என்றான், l, பிறகு அழுகை வரவும் எழுந்து வெளியே வந்து விட்டான்.

கிளம்பும் போது வாசலில் வந்து பெரியம்மா வழியனுப்பினாள் ” புள்ளைய பார்த்து கூட்டிப்போ, உண்டான பிறகு ரொம்ப கவனமா இருக்கனும் “என்றாள், அவன் கற்பகத்தை திரும்பி பார்த்தான், அவள் நாணி தலை கவிழ்ந்தாள், “ஏன் சொல்லல” என்றான், ” போம்போது சொல்லலாம்னு நினைச்சேன் ” என்றாள்.

இரண்டு மாதங்கள் போயிருக்கும், பெரியம்மா தருமனுக்கு அழைத்து அவசர குரலில் படபடப்புடன் ” முருகன் செத்துட்டாண்டா, யாரோ அவனை குத்திட்டாங்களாமா ” என்றாள். அன்று தருமன்  எப்போதும் அருந்துவதை விட இருமடங்கு குடித்தான். எப்போது வீட்டிற்கு வந்தான், தூங்கினான் என்பதே ஞாபகம் இல்லை, விடியற்காலை எழுந்த போதுதான் ஓரளவு போதை தெளிந்து அமர்ந்தான், மனம் நிம்மதி கொண்டிருப்பதை, சாந்தமாக இருப்பதை புன்னகை கொண்டிருப்பதை உணர்ந்தான், சட்டெனெ ஒரு எண்ணம் அவனுக்கு வந்தது, ஊருக்கு சென்று அவன் உடலை பார்க்க வேண்டும் என்று, கற்பகத்திடம் கூட சொல்லாமல் பைக்கிலேயே ஊருக்கு சென்றான். பெரியம்மா அவனை ஆச்சிர்யத்துடன் பார்த்தாள், அவன் பெரியம்மாவிடன் எதுவும் பேசாமல் நேராக துக்க வீடு சென்றான். போஸ்ட் மார்ட்டம் என்பதால் வீட்டிற்கு கொண்டுவராமல் நேராக எரிக்க கொண்டு சென்று விட்டார்கள் என்று சொன்னதை கேட்டு அங்கு சென்றான், எல்லாம் முடிந்து வெளியே வந்து கொண்டிருந்தனர் . ஒவ்வொருவராக இவனை கடந்து சென்று கொண்டிருந்தனர், யாரும் இவனுடன் பேச வில்லை. முருகனின் அப்பா வந்து கொண்டிருந்தார், இவனை சற்று தொலைவிலேயே பார்த்து விட்டார். நேராக அவனை நோக்கி தளர்ந்த நடையுடன் வந்தார், ” தம்பி உன் நிலத்தை நீயே எடுத்துக்க, ” என்றார், தருமன் ஒன்றும் சொல்லாமல்நின்று கொண்டிருந்தான், மாடசாமி மீண்டும் ” நான் முன்னாடியே அவன்கிட்ட சொன்னேன், அவ என் பேச்சை கேட்கல, அது உன் நிலம், அத எடுத்துக்க ” என்றார்.

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.