லட்சுமிஹர்
இருள் கொஞ்சம் எட்டி பார்க்கத் தொடங்கியிருந்தது. ஹரிஷும், அருணாவும் பாலுவுக்கு பிறந்தநாள் கேக் வாங்க பேக்கரிக்கு வந்துள்ளனர். அருணா பள்ளி முடிந்து ஹரிஷை வீட்டுக்கு கூட்டி வரும் வழியில் இருக்கும் பேக்கரி பூட்டி இருந்ததால், கொஞ்ச தூரம் நடந்து இங்கு வந்து சேர்ந்தனர். வந்தவுடன் ஹரிஷ் ஓடிப் போய் ஒரு சேரில் உட்கார்ந்து கொண்டான், அருணா அங்கிருந்தவரிடம் பிறந்தநாள் கேக்கை ஆர்டர் செய்தாள். இதில் எதிலுமே ஹரிஷ் பங்கெடுத்து கொள்ளவில்லை, அது அவனுக்கு பிடிக்கவும் இல்லை. கேக் தயார் ஆகி கொண்டிருக்க அருணா ஹரிஷ் உடன் வந்து சேரில் உட்கார்ந்து கொண்டாள். வரும் வழியில் தான் சர்பத் குடித்தனர், அது அருணாவுக்கு பிடித்த கடை.
ஹரிஷ் கடையை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தான். இது வரை இந்த சந்தில் அவன் வந்ததே இல்லை. கடை எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிடலாம், இல்லை வேறு ஒன்றாகக் கூட மாறக்கூடும் என்ற தோற்றத்தில் இருந்தாலும், அவ்வளவு அழகாக இருந்தது அழுக்கு படிந்து போய். எல்லாம் எண்ணெய்ப் பிசுக்கு. ஆர்டர் செய்த கேக் வந்தது . அவனுக்கு பிடித்த ரெட் கலர். அதில் அவனுடைய பேரும், அப்பாவுடைய பேரும் சேர்த்தே எழுதி வாங்கினாள் அருணா.
சின்ன வீடுதான் என்றாலும் முன்னால் தோட்டம் இருப்பதால் அழகாக இருந்தது. கேக்கை டேபிள் மேல் வைத்த ஹரிஷ் பெட்ரூமுக்குள் சென்று உடை மாற்றிக் கொண்டிருந்தான். அருணா–ஹாலை டெகரேட் செய்தாள். இரவு மணி ஆகிக் கொண்டே இருக்க, அருணா பாலுவிற்கு தொடர்ந்து கால் செய்தாள். பாலு பதில் அளித்த மாதிரி தெரியவில்லை. ஹரிஷ் ஹாலில் டெகரேட் பண்ணியதை ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே வந்தான். அது எதுவும் கடையில் வாங்கி அழகுபடுத்தியது கிடையாது, அருணாவே பேப்பர் , சார்ட் என இருப்பதை வைத்து செய்தது, அவ்வளவு அழகாக இருந்தது.அதில் ஹாப்பி பர்த்டே பாலு என எழுதியிருந்தது.
பாலுவிற்கு ஸ்டூடியோவில் ஷூட்டிங் போய்க் கொண்டிருப்பதால் வரமுடியாது என்றும் கூடவே சாரியும் கேட்டு விட்டார். பாலு பிறந்த நாள் முடிய 3 மணி நேரம் தான் இருந்தது, இப்படி நடக்கும் என்று ஹரிஷிற்கு தெரியும் அதனால் தான் இதில் எதிலும் பங்கு எடுத்து கொள்ளவில்லை. அருணா இரவு சாப்பாடு சமைக்காதலால், பாலு பிறந்தநாளுக்கு வாங்கின கேக்கை வெட்டி கொடுத்தாள். ஹரிஷ் டிவியை ஆன் செய்து பார்க்க தொடங்கினான், கேக்கை தின்று கொண்டே. சேனலை மாற்றும்போது ஒரு சண்டை காட்சி ஓடிக் கொண்டிருந்தது, சட்டென நிறுத்தி விட்டான். ஸ்டண்ட் பாலு. அந்த காட்சியை பார்க்க விருப்பமின்றி ஓடிப்போய் படுத்துக் கொண்டான் முகத்தை பெட்டில் புதைத்தபடி.
போன சண்டே டிவியில் போடப்பட்ட அப்பா அடிவாங்கி இருந்த படத்தை பார்த்து விட்டு கிளாசில் இருந்த கவுதம் ஹரிஷை வம்பிழுக்க ஆரம்பித்துவிட்டான். அதனால் அம்மா, அப்பாவிடம் சண்டை. அவர்களுக்கு என்ன காரணம் என்றே தெரியவில்லை.
ஒரு நாள் பாலுவை வைத்து கிளாசில் கவுதம் ஒரு ஜோக் சொல்ல அனைவரும் சிரித்து விட்டனர்.
‘ silent don’t listen to gautham. Gautham stop that…’
என மேடம் கூற அந்த சிரிப்பு சத்தம் அடங்கிப் போனது. ஹரிஷ் அந்த கிளாசில் தலையை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. அதன் பிறகு இன்டெர்வலில் ஹரிஷ் கவுதமை போய் அடிக்க இருவரும் சண்டை போடத் தொடங்கினர், ஹரிஷுக்கே அதில் அடி பலமாக விழுந்தது. அதிலிருந்து ஹரிஷை “ஸ்டண்ட்மேன் “என கூப்பிடத் தொடங்கி விட்டனர், சிரித்து கொண்டே.
ஆட்டோ வை மிஸ் பண்ணியதால், பாலு வந்து ஸ்கூலில் விட நேர்ந்தது, ஸ்கூலில் பாலுவும் ஹரிஷும் நடந்து கொண்டிருக்கையில் நந்தன், “ஸ்டண்ட் மேன் ,” என கத்தி விட்டு சென்றான். ஹரிஷுக்கு கோவம் தாங்க முடியவில்லை, ஆனால் பாலு திரும்பி அவனுக்கு தன்னுடைய ஆர்ம்ஸ் -ஐ மடித்து காட்டி விட்டு போனார். அதை நந்தன் கிளாசில் வந்து, “அவரோட ஆர்ம்ஸ் எவ்வளவு பெருசா இருந்துச்சு தெரியுமா, நம்ம பென் டென் -ல் வரும் ஃபோர் ஆர்ம்ஸ் மாதிரி இருந்தது,” என சொல்ல அவனுக்கு பெருமையாக இருந்தது. ஹரிஷுக்கு பிடித்த கார்ட்டூன் கேரக்டரும் அது தான். அருகில் இருந்த கவுதம் நடு பெஞ்சில் அமர்ந்திருந்த ஹரிஷ் காதுக்கு விழுகும்படி, “வில்லனுக்கே இவ்வளவு பெரிய ஆர்ம்ஸ் னா அவங்கள அடிக்கிற ஹீரோஸ்க்கு எவ்வளவு பெருசு இருக்கணும்,” என சொல்லவும் சுத்தி இருந்தவர்கள் சிரித்து கொண்டே தலை ஆட்டினர்.
அன்றிரவு ஹரிஷ் அப்பா சாப்பிடுவதற்கு முன் தண்டால் எடுத்து கொண்டிருந்தார், அருணா சாப்பிட எல்லாத்தையும் கூப்பிட பாலு கைக்கு போனது ரிமோட். அதில் கே டிவி யை வைத்தார், அதில் அவர் நடித்திருந்த சண்டைக் காட்சி வர போவதாகவும், அதை எடுக்கையில் எப்படியெல்லாம் இருந்தது, டைரக்டர் சார் குட் னு மைக்குல சொல்ல, யூனிட் முழுக்க கை தட்டுனாங்க, அதுக்கப்புறம் தான் எங்க மாஸ்டரு என்ன கூடவே வச்சுக்கிட்டாரு என சொல்லி கொண்டிருக்கையில், அந்த சண்டைக்காட்சி வந்ததும் பாலு அதோ பாரு என கை காட்ட அதில் ஒருவர் தீப்பற்றி அலறும் காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. அதை தான் பாலு சொல்லுகிறார் , ஹரிஷ் தடாலென சாப்பாடை தட்டி விட்டு ரூமுக்குள் போய் விட்டான். அந்த சண்டைக் காட்சியில் பாலுவின் மூஞ்சி கூட தெரியவில்லை. பாலுவிற்கு என்னவென்று புரியவில்லை, அருணா, பாத்து பயந்திருப்பான் என சொல்ல பாலு தலை ஆட்டிக்கொண்டார். இரவு ஏ வி ம் இல் ஷூட்டிங் இருப்பதால் வேகமாகவே கிளம்பிவிட்டார்.அருணாவுக்கு தெரியும் எதனால் ஹரிஷ் அப்படி நடந்து கொண்டான் என்று. என்ன சொல்ல அவனிடம், பாலு சென்றதும் பெட்ரூம் க்கு சென்ற அருணா ஹரிஷ் தூங்கி கொண்டிருப்பதை பார்த்து விட்டு அந்த அறை கதவை சத்தம் இல்லாமல் மூடினாள். அந்த படத்தை தொடர மனமில்லாமல் டிவியை அணைத்து விட்டாள்.
“டேய் இந்த கேக்க முழுசா சாப்பாடலையா நீ,” எனக் கேட்டு பக்கத்தில் அமர்ந்தவளுக்கு ஹரிஷ் அழுதது தெரியாமலில்லை. “எதுக்கு இப்போ அழகுற,” என்ற கேள்விக்கு ஹரிஷ் இடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை. “என்னாச்சுன்னு சொன்னாதான தெரியும்,” என்றதும் ஹரிஷ் தலையை அருணா தோல் மீது புதைத்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தவன், “என்ன ஸ்கூல்ல ஸ்டண்ட் மேன், ஸ்டண்ட் மேன் னு கூப்பிட்றாங்க, அசிங்கமா இருக்கு” என்றதற்கு பதில் ஏதும் சொல்லவில்லை அருணா.
அழுகையை நிப்பாட்ட அருணா பீரோவில் இருந்து ஏதோ போட்டோ வை எடுத்து தன் பின்னால் மறைத்து கொண்டாள், “சரி, அம்மா சொல்றதுக்கு பதில் சொன்னேனா ஒனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு”.
“சர்ப்ரைஸா?” என டல் ஆக கேட்ட ஹரிஷ்ன் தலையை நிமிர்த்தி, “ஆமாம்,” என்றாள் அருணா.
“என்ன கேள்வி?”
“ஹரிஷுக்கு கஷ்டமா கேக்கலாமா இல்ல ஈஸியா கேக்கலாமா?”
“ஈஸியா,” என சிரித்துக் கொண்டே பதில் சொன்னான் ஹரிஷ்.
“ஹரிஷுக்கு புடுச்ச ஹீரோ யாரு?
சட்டென, “விஜய்,” என தலை ஆட்டினான்.
“விஜய் தான் புடிக்குமா?”
“ஆமா”
“உண்மையா விஜய்தான?”
“ஆமா 100 வாட்டி ப்ரோமிஸ் விஜய்தான்,” என்று கட்டிலில் குதித்தான்.
அருணா கட்டிலை விட்டு எழுந்த தான் மறைத்து வைத்திருந்த போட்டோவை மெதுவாகக் காட்டினாள் ஹரிஷிடம். அதை ஹரிஷால் நம்ப முடியவில்லை. அது அப்பாவும், விஜயும் சேர்ந்து நிற்கும் போட்டோ, அதில் விஜய் அப்பாவை அடிக்கவில்லை. இருவரும் சிரித்து கொண்டிருக்கும் போட்டோ அது.
அதை வாங்கி பார்த்துக் கொண்டிருந்த ஹரிஷ் அம்மாவைப் பார்த்து, “இது உண்மையிலே எடுத்ததா?”
“ஆமா”
“ஏன் கேக்குற?”
“இவ்வளவு நாளா ஏன் என்கிட்ட நீங்க காட்டவே இல்ல?”
உனக்குதான் அப்பாவ பிடிக்கவே இல்லையே,” என சொன்னவுடன் என்ன சொல்லுவது என தெரியாமல் தலையை கீழிறக்கி அந்த போட்டோ வை பார்க்க தொடங்கினான். அதில் நிஜமாகவே விஜயும், அப்பாவும் சிரித்து கொண்டிருந்தனர்.
“அப்போ அப்பா விஜய் கிட்ட அடி வாங்கலயா?”
“அது சும்மா டிஷ்ஷியும் டிஷ்யூம, விஜய் சார் அடிக்கற மாதிரி இவரு அடிவாங்குற மாதிரி நடிப்பாங்க. அதெல்லாம் சும்மா,” என சிரித்து கொண்டே ஹரிஷின் தலையில் முத்தமிட்டாள்.
“அப்பனா நான் இந்த போட்டோவ ஸ்கூலுக்கு எடுத்துட்டு போகவா ?”
சரி என்பது போல தலையாட்டினாள் அருணா. ஹரிஷை விட அருணாவே மிகவும் சந்தோஷத்தில் இருந்தாள். ஆனாலும் பிறந்த நாளான இன்றைக்கும் பாலு வர வில்லை என்பதை மனதில் போட்டு அலைக்கழித்து கொண்டு தான் இருந்தாள். அவளுக்கு அந்த ராத்திரிகள் அவ்வளவு எளிதாக கடப்பதில்ல.
காலை எழுந்திருக்கையில் பாலு வீட்டில் தான் இருந்தார். ஹரிஷ் ஸ்கூலுக்கு போகும் முன் பாலுவை கூப்பிட்டு, “நேத்து எங்க போயிருந்தீங்க?” என அதட்டும் தொனியில் கேட்டான்.
பாலு அருணாவை பார்த்து சிரித்து விட்டு, “ஷூட்டிங்… டிஷ்ஷியும் டிஷ்ஷியும் ஷூட்டிங்,” என அவனை அடிப்பது போல செய்து காட்டினான்.
“விஜய் உங்கள அடுச்சாரா?”
“ஆமா”
ஹரிஷ் அழுவது போல அருணாவை பார்த்தான். அருணா ஓடிவந்து ஹரிஷை கட்டி பிடித்துக் கொண்டு பாலுவை கையால் தோளில் தட்டினாள். “அப்பா பொய் சொல்றாரு ஹரிஷ், நீ அழாத. அழக்கூடாது. இன்னொரு தடவ கேள” என கண்ணீரை துடைத்த, பாலுவை பார்த்து முறைத்து கொண்டாள்.
“இப்போ நீ அழுகாம இருந்தா உண்மைய சொல்லுவேன்”
ஹரிஷ் நிமிர்ந்து பாலுவை பார்த்தான்.
பாலு சிரித்துக் கொண்டே கை, கால்களை காட்டி, “இங்க பாரு ஒண்ணுமே இல்ல. அடிவாங்குனேன்ல டிவி ல, அதெல்லாம் சும்மா,” என சொல்லி சிரித்துக் கொண்டார்.
அருணா , “நீ போட்டோ எடுத்துக்கிட்டயா?” என கேட்க, “எடுத்துட்டேன்,” என தலை ஆட்டிக் கொண்டு ஆட்டோவில் ஏறிச் சென்றான் ஹரிஷ்.
அவன் எடுத்து வந்த போட்டோவை அனைவரும் ஆச்சரியதுடன் பார்த்து கொண்டிருந்தனர். நந்தன் ஓடி வந்து, “விஜயும் உங்க அப்பாவும் பிரண்ட்ஸா?” என கேட்டதற்கு, “ஆமா,” என சத்தமாக சொன்னான், கவுதம் காதிற்கு விழும் அளவிற்கு.
“அப்போ அடிக்கிறது எல்லா?”
“அது சினிமா, வெறும் டிஷ்ஷியும் டிஷ்ஷியும்தான்,” என பாலு செய்தது போலவே செய்து காட்டினான் ஹரிஷ்.
“அப்டினா விஜய பாப்பயா நீ?”
ஆமா எங்க அப்பா அடுத்தவாரம் கூட்டிட்டு போறேன்னு சொல்லிருக்காரு நானும் விஜய் கூட நின்னு போட்டோ எடுத்துப்பேன்”
அன்று சாயங்காலம் படுத்து கொண்டிருந்த அப்பாமேல் ஏறி விளையாடி கொண்டிருந்த ஹரிஷ், “அப்பா விஜய பாக்க கூட்டிட்டு போவையா ?” என கேட்டதற்கு, “கண்டிப்பா” என சொல்லி சிரித்துக் கொண்டார் பாலு. ஹரிஷ் சந்தோசத்தில் பாலுவின் நெஞ்சின் மேல் சாய்ந்து கை வைக்கையில், மேல் சட்டையின் அடியில் ஒரு பெரிய தழும்பு கையில்பட்டது, அது முன் பக்கம் கழுத்தில் ஆரம்பித்து இடுப்பு வரை சென்றது.