Author: natarajanv

குரல் – 1

பொழுது நகராத மதியவேளை
சங்குபுஷ்ப விதைகளை கொல்லைப்புற
மழைநீர் குழியில் போடுகிறான்

இரு நாட்களில் விதை செடியானது
அதற்கும் ஏதோவொரு அவசரம்
தரையில் படர்ந்த கொடியை
நூல் கொண்டு மேலே திசைதிருப்பினான்

ஒரு மாதத்தில் புதராக மாறிவிட்டிருந்தது

இரண்டு புல்புல் பறவைகள்
அந்தப் புதரை சுற்றிச்சுற்றி வந்தன
கூடு கட்டும் வேலை தொடங்கிற்று
இவனுடைய மேற்பார்வையில்

ஒருநாள்
இரண்டு பேரும் இல்லாத நேரத்தில்
கூட்டை எட்டிப் பார்த்தான்
மூன்று முட்டைகள்
பல்லி முட்டை கூடப் பெரிசு

சில நாட்களில் கூட்டுக்குள்
மூன்று றெக்கை முளைத்த பல்லிகள்
கண் திறக்கவில்லை கத்தவும் தெரியவில்லை

ரோமங்கள் முளைக்க ஆரம்பித்தன
கொஞ்சம் கத்தவும் ஆரம்பித்தன
அந்தப் பக்கம் சுத்திக் கொண்டிருந்த
பூனையின் காதில் விழுந்தது

மற்றுமொரு குரல் – அனுகிரஹா

ஒரு பிரச்சாரக் கவிதை

யாரேனும் சன்னமான குரலில்
கருணைக் கதாகாலேட்சபம் நடத்தினால்
கேட்பதற்கு இதமாகத்தான் இருக்கிறது

அப்பாவிடம் இரைந்து பேசும் போதும்
மாமனார் சுட்ட அப்பளம் கேட்கும் போதும்
அம்மாவிற்கு விஷயங்களைப் புரியவைக்கும் போதும்
சின்னஞ்சிறு குழந்தை அழும் போதும்
இந்தக் கருணையெல்லாம் எங்கே

ஒரு தேரையை விடவும்
நாம் என்ன முன்னேறிவிட்டோம்
என்று நினைக்கிறீர்கள்?

                                                                – அதிகாரநந்தி

அஞ்சலி

-அதிகாரநந்தி-

Obituary_Athigaranandhi

“வணக்கம் சார்”

”சொல்லுய்யா. என்ன விஷயம்? என்னையெல்லாம் ஞாபகம் வெச்சுருக்க போலிருக்கே”

“என்ன சார் இப்படிச் சொல்றீங்க. போன வாட்டி நீங்க அனுப்பினத பதிப்பிக்க முடியாம போச்சு”

“ம்ம்”

“சார் விஷயம் தெரியுமா? நம்ம ராமசாமிய  ஆஸ்பத்ரில அட்மிட் பண்ணியிருக்காங்களாம்”

“என்னவாம்”

“ஹார்ட் அட்டாக் தான் சார். கொஞ்சம் சீரியஸ்னு சொல்லிக்கறாங்க”

“ம்ம்”

“நீங்க அவரப்பத்தி ஒரு கட்டுரை எழுதிக் கொடுத்தீங்கன்னா…. இந்த வாரமே போட்டுறலாம்”

“ம்ம்”

“இன்னிக்கு சாயங்காலத்துக்குள்ள…”

”மெயில் பண்றேன்யா…”

இரண்டு மணிநேரம் கழித்து.

”சார்…”

“முடிச்சாச்சு இதோ மெயில் பண்றேன். எதையும் எடிட் பண்ணிடாத”

“சார், அதில்லை. அவர் வெறும் செக்கப்புக்கு தான் போனாராம். இப்போ திரும்ப வீட்டுக்கு போயிட்டார்னு சொல்றாங்க.”

”ம்ம்… நான் அனுப்பறேன் ஃப்யூச்சர்ல யூஸ் பண்ணிக்கோ”

 

தியானம்

யானை தன் தும்பிக்கையை நீட்டியது.
நானும் கை நீட்டினேன்.
இருவரும் கை குலுக்கிக் கொண்டோம்.
 
மற்ற யானைகளைப் பார்த்து கையசைத்தேன்.
அவையும் தலையாட்டின.
 
ஒரு குட்டி யானை ஓடி வந்து என் கை குலுக்கியது.
 
உட்காரச் சொல்லி சமிக்ஞை செய்துவிட்டு நான் உட்கார்ந்தேன்.
எல்லா யானைகளும் உட்கார்ந்து கண்களை மூடிக் கொண்டன.
 
இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருந்த குட்டி யானை, சட்டென்று நின்றது. 
எல்லோரையும் பார்த்துவிட்டு, மெதுவாக முன்னால் வந்து உட்கார்ந்து கொண்டது. 
 
வெகு நேரம் அங்கு பறவைச் சத்தம் மட்டுமே கேட்டது.
 
விடைபெரும்பொழுது எல்லா யானைகளையும் நோக்கி கையசைத்துவிட்டுப் புறப்பட்டேன்
 
குட்டி யானை ஓடி வந்து என் கையை மறுபடியும் குலுக்கிவிட்டு கண்ணை ஒரு கணம் மூடித் திறந்தது.

பெரும்பாய்ச்சல்

புதிதாக குடியேறிய வீட்டில்
எங்கள் கண்கள்
ஒன்றோடு ஒன்று உறைந்த
முதல் நொடி

தத்தியாக நான் நின்றுகொண்டிருக்க
தீர்க்கமான ஒரு முறைப்பு
வாழ்நாள் முழுமைக்குமான பகை

***********************************************

மாடிப்படியின் கைப்பிடிச் சுவற்றில்
மேலே பார்த்துக் கொண்டு
பிசிரற்ற கவனத்தோடு
எதற்கோ தயாராகிக் கொண்டிருக்கிறது

ஐந்தடிக்கு அப்பால்
தான் சாத்தியப்படுத்தும் உண்மை
தெரியுமா  அந்தப் பூனைக்கு

**********************************************

என்ன சத்தம்
பூனையா பறவையா
பூனையின் பிரசவமா
அல்லது அதன் பயமா
கூடுவதற்கான சமிக்ஞையா
இந்த நள்ளிரவிலா

என்ன லட்சியம் ஒழிந்து
போய்விட்டதென்று இந்தக் கதறல்

விளக்கிட்டுத் தேடினால்
பூனையும் இல்லை
கதறலும் இல்ல

                                                                  –  அதிகாரநந்தி