Author: பதாகை

‘வாழ்வென்பது எப்போதும் அர்த்தங்கள் பற்றிய பிரக்ஞையாக மட்டுமே இருப்பதில்லை’ – – ஜிஃப்ரி ஹாசன்

நிஜத்தின் சாயலில் மனித வாழ்வை நெருக்கடிக்குள்ளாக்கிக் கொண்டிருக்கும் ஏராளம் கற்பனைத் தடைகளோடுதான் இன்றைய மனித வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கிறது. வாழ்வென்பது எப்போதும் அர்த்தங்கள் பற்றிய பிரக்ஞையாக மட்டுமே இருப்பதில்லை. சிலவேளைகளில் நாம் அர்த்தங்களற்ற சொற்களைக் கொண்டு அர்த்தங்களற்ற ஒரு வாழ்வை உருவாக்கிக் கொள்கிறோம். அந்த வாழ்வு நிஜத்தின் எந்தவிதப் பிரக்ஞையுமற்ற ஒரு கனவுலகைப் போன்று சாஸ்வதமானதாக தொடரும்போது வானளாவிய கனவுகளோடு நாம் வலம் வருகிறோம். ஒரு சிறு கணத்தில், கனவுகள் அர்த்தமற்று நீர்த்துப் போகும் ஒரு தருணத்தில் நாம் கட்டியெழுப்பிய கற்பனை உலகம் எந்தக் கரிசனையுமற்று நம்மைக் கைவிட்டு விடுகிறது.

அந்தக் கட்டத்தில் சூழ்நிலையின் நெருக்கடிகளால் ஒவ்வொரு தனிமனிதனும் காயப்படுத்தப்பட்டு விடுகிறான். கடைசியில் அந்த வாழ்வை எதிர்கொள்ள முடியாமல் ஒவ்வொரு மனிதனும் இன்று தடுமாறிக் கொண்டிருக்கிறான்.

மக்கள் கூடுமிடம்/ Public Spaces – கவிதை மொழியாக்கம்

Translated by Sivasakthi Saravanan

மக்கள் கூடுமிடும் களமாகும்
குடும்பத்தோடு தெருவோரம்
வித்தை காட்டும் கழைக்கூத்தாடி
விரிப்பில் விழுந்தவற்றை
எண்ணிப் பார்க்காமலே
மூட்டை கட்டுகிறான்
மேளக்காரன்

அந்தரத்தில் தூக்கிப்போட்டு
பிடிக்கப்பட்ட சவலைச் சிறுமி
தூங்கிப் போய்விட்டாள்
நடைபாதையில்

வேறொரு ஆட்டத்திற்கு
கலைவுறும் பார்வையர்

நெம்பிப் பெயர்த்த
கம்பத்தின் பதிவாக
குழிபறித்துக் கிடக்கிறது
தெரு
  • (வி. அமலன் ஸ்டேன்லி “படகினடியில் கொஞ்சம் வெப்பம்” தொகுப்பில் உள்ள கவிதை)

Public spaces
become the fields of play
The street performer
stages his tricks
with his family

The drummer packs up,
makes a bundle of the alms-cloth
​a​nd all within,
​not ca​ring to count

The puny girl
Tossed high and caught
has fallen asleep
on the footpath

Spectators disperse
for another show

Marking the memory
of the wrenched out post
is the street
with its dug up hole.

கோணல்கள் – முதற்பதிப்பின் முன்னுரை

அட்டைப் படம்: ஓவியர் கிருஷ்ணமூர்த்தி

‘குருஷேத்திரம்’ தொகுப்பைத் தொடர்ந்து இன்னொரு சிறுகதைத் தொகுப்பு சென்னையில் நான்கு இளம் எழுத்தாளர்களால் வெளியிடப்பட்டது. ‘கோணல்கள்’ என்ற தலைப்பில் வெளிவந்த இந்த நூலில் இந்த நான்கு எழுத்தாளர்களும் தலா மூன்று கதைகள் சேர்த்திருந்தார்கள். ‘குருஷேத்திரம்’ அடைந்த இலக்கிய அந்தஸ்தை ‘கோணல்கள்’ பெறாது போயினும் பெருவாரிப் பிரசுர உலகில் இடம் அளிக்கப்படாத தரமுள்ள எழுத்தாளர்கள் கூட்டு முயற்சியில் நூல் வெளிக்கொணருவதற்கு இது நல்லதொரு தொடக்கமாயிற்று; அத்துடன் ஆண்-பெண் பாலியற் சஞ்சலங்களை இலக்கியக் கருப்பொருளாக எழுதும் போக்குக்கு முன்னோடியாகவும் அமைந்தது. – அசோகமித்திரன் (முன்னுரை – புதிய தமிழ்ச் சிறுகதைகள்)

இந்தப் பன்னிரண்டு கதைகளும் இதுவரை எந்த தமிழ்ப் பத்திரிகையிலும் வெளிவராதவை. தமிழ்ப் பத்திரிகைகளின் தரம் அல்லது தரமின்மை என்கிற பாதிப்புக்கு உள்ளாகாமல் எழுதப்பட்ட கதைகள் இவை. பத்திரிகைகளின் பந்த நிர்ப்பந்தங்களை மீறியும், இலக்கிய பூர்வமாகவும் சிந்திக்கிற நான்கு பேர் தாங்களாகவே வெளியிட்டிருக்கிற சிறுகதைத் தொகுப்பு இது. இக் கதைகளைப் பிரசுரிக்கிற திராணி உள்ள தமிழ்ப் பத்திரிகை எதுவும் இன்றைய சூழ்நிலையில் இருப்பதாகப்படவில்லை. தப்பித் தவறி ஒன்றிரண்டு பிரசுரிக்கப்படுகிற வாய்ப்பு உண்டு என்று யாரேனும் சொல்வீர்களேயானால், அது பத்திரிகை ஆசிரியர்களும் சமயங்களில் அவர்கள் அகராதிப்படி நிதானம் இழக்கக்கூடும் என்பதைத்தான் நிரூபிக்குமே அன்றி அவர்களின் இலக்கியப் பிரக்ஞையை நிரூபிக்காது.

இந்த சிருஷ்டிகர்த்தாக்கள் நன்கு பெரும் என்னோடொத்தவர்கள்; எனக்குச் சம காலத்தவர்கள் என்பதினாலேயே இவர்களின் கனவுகள், கற்பனைகள், இவர்கள் தேடி அலைகிற உண்மைகள், உணரத் துடிக்கிற அனுபவங்கள் என்னைப் பெருமளவில் பாதிக்கின்றன. வாசகன் மனத்தில் இப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்தத் தேவையான Creative Tension சிருஷ்டி கர்த்தாவுக்கு மிக அவசியம். மனித சமூகத்தில் அநேகம் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பினும் வாழ்வின் அடிப்படை குணாதிசயங்கள், மதிப்பீடுகள் அவ்வளவாக மாறவில்லை என்றே சொல்லவேண்டும். இக் குணாதிசயங்களை, மதிப்பீடுகளைப் புரிந்துகொள்கிற கலைஞன், வாழ்வின் சாராம்சத்தைப் புரிந்துகொண்டவன் ஆகிறான். அவனது சிருஷ்டிகள் உயிர்த் துடிப்பும், அர்த்த புஷ்டியும் நிரம்பப் பெறுகின்றன. அவை சமகாலத்திற்கு மட்டுமில்லாமல் மனித பரம்பரைக்கே உரியனவாய் ஸ்தாபிதம் பெறுகின்றன.

சிறுகதை இப்படி, இப்படி அமையவேண்டும் என்று திட்டம் அமைத்துக் கொடுத்த முதல் இலக்கிய ஆசிரியர் எட்கர் ஆலன்போ. சிறுகதையின் முக்கிய நோக்கம் single effect உருவாக்குதல் என்றும், இந்த single effectஐத் திறம்பட உருவாக்குகிற வகையிலேயே கதையின் உருவம் அமையவேண்டும் என்றும் சொன்ன எட்கர் ஆலன் போ, கடைசியாய் சொன்ன விஷயம் மிகவும் முக்கியமானது: “எந்த ஒரு வார்த்தையையும் எடுக்க முடியாதபடி, கதையின் முதலும் முடிவும் மாற்ற முடியாதபடி அமைவதுதான் சிறுகதை”.

இப்படிச் சிறுகதை எழுதினவர்களில் மாப்பஸான் பெயரைத்தான் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். மாப்பஸான் கதைகளில் plot என்பது முக்கியமான அம்சம். உருவ அமைப்புப் மாற்ற ஒண்ணாத விதத்தில் அமைந்திருக்கும்.

சிறுகதையில் வார்த்தைகளின் பங்கு முக்கியமானது. ஆனால் ஓவியம் மாதிரி வார்த்தைகள் புலன்களைத் தொடுவது சிரமம். ஒரு இலக்கிய ஆசிரியன் தன் மேதாவிலாசத்தால் புலன்களைனைத்தையும் தொடும் விதத்திலும் எழுத முடியும். இப்படி எழுதினவர்களில் முக்கியமானவர்கள்- பத்திரிக்கைத் தொழிலுடன் தொடர்ப் கொண்டவர்களான – கிப்ளிங், ஸ்டீபன் கிறேன், ஹெமிங்க்வே ஆகியவர்கள்.

ரஷ்ய எழுத்தாளரான கோகோல், புற உலகைப்பற்றி கதைகள் எழுதிய போதிலும், அவற்றை மனோ தத்துவ ரீதியில் எழுதினார், கதையில் செயலுக்கு சமானமாக, எண்ணத்திற்கும் இடம் கொடுத்தவர்கள் ரஷ்ய எழுத்தாளர்களான துர்கனேவும், செஹாவுமே.

செஹாவ் கதைகளில், கதாபாத்திரங்களின் அடிப்படை குணாதிசயங்கள், குறிப்பட்ட சூழ்நிலைக்கு மட்டும் பொருந்துவதாய் இல்லாமல் பிரபஞ்ச ரீதியில் இருக்கும். செஹாவ், வாழ்க்கையின் அடி நாதத்தை குறிப்பால் உணர்த்தியவர்; மனோ தத்துவ ரீதியில் சிறுகதையின் எல்லையை விரிவுபடுத்திக் கொடுத்தவர்.

சிறுகதையின் சக்தி சகல விஷயங்களையும் எடுத்துப் பேசுவதில்தான் உள்ளது. சிறுகதைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிற விஷயம் இன்னதுதான் என்று கட்டுபாடு எதுவும் கிடையாது. உருவகமாக, நீதிக் கதையாக சிறுகதை வடிவம் உலகம் தோன்றிய நாள் முதற்கொண்டு இருந்து வந்திருக்கிறது. இயற்கைக்கு அப்பாற்பட்டதாக, யதார்த்தமாக, முழுக் கற்பனையாக, குரூரமாக, சாமான்யமாக இப்படி அநேக விதங்களில் இந்த நூற்றாண்டில் சிறு கதைகள் எழுதப்பட்டிருந்தன.

மேலை நாடுகளில் கவிதை செத்துப் போய்விட்டது என்று ஒரு நூறு வருடங்களாக சொல்லப்பட்டு வருகிறது. இப்பொழுது சிறுகதையும் செத்துப் போய்விட்டது என்று பேசப்படுகிறது. சமீப காலத்திய அமெரிக்க, ஐரோப்பிய சிறுகதைகளைப் படிக்க நேர்கிற யாரும் இடஹி ஓரளவுக்கு ஒப்புக் கொள்ளவே செய்வார்கள்.

ஆனால் நம்முடைய தேசத்தில் சிறுகதையின் நிலைமை மாறுபட்டது. அதிர்ஷ்டவசமாக அதற்கு இன்னமும் நல்ல வாய்ப்பிருக்கிறது.

ஐரோப்பிய சிறுகதை உருவத்தை இந்தியாவுக்குக் கொண்டுவந்தவர் – அதைத் திறம்படவும், சுயமாகவும் கையாண்டவர் ரவீந்திரநாத் தாகூர்.

தமிழில், மாப்பஸான் பாதிப்பினால் சிறுகதை எழுத ஆர்மபித்தவர்கள் என்று புதுமைப்பித்தன், கு.ப.ரா இருவரையும் சொல்லலாம். வாச்கானுக்கு அதிர்ச்சி தரவேண்டும் என்கிற வேகத்துடனேயே கதைகள் எழுதியவர் புதுமைப்பித்தன். இந்த ‘அதிர்ச்சி வேகம்’ சோதனைக் கதைகளின் இன்றியமையாத அம்சம். புதுமைப்பித்தனின் சொல்லாட்சி வாசகனை பிரமிப்பில் ஆழ்த்தவல்லது. இதிகாச, சரித்திர, சமூகச் சூழ்நிலைகளில் தன் சிறு கதைகளை அமைத்த இவரது கலையின் எல்லைகள் விரிவானவை.

கு.ப.ரா. Sex-ஐ அதற்குரிய முரண்பாடுகளோடு, இருபதாம் நூற்றாண்டு மனவியல் நிபுணர்கள் ஆராய்ந்து, அதன் மேல் ஏற்றிவைத்த சிந்தனை வளத்தைத் தாங்குகிறவிதத்தில் கையாண்டவர. எடுக்க முடியாதபடி, மாற்ற முடியாதபடி வார்த்தைகளைச் செதுக்கி அமைத்தவர் இவர். இவரது சிறுகதைகள் நளினமாகவும், நிதானமாகவும் எழுதப்பட்டவை.

அதீத கற்பனை உலகம் ஒன்றைத் தன சிறுகதைகளில் சிருஷ்டித்தவர் ‘மௌனி’. சாதாரண வார்த்தைகளைக் கொண்டே, முற்றிலும் புதிய, இலக்கியத் தரமான சூழ்நிலையை (atmosphere) உருவாக்க முடிந்தது இவரால்.

இவர்கள் மூன்று பேரில் யாருடைய பாதிப்பும், அல்லது வேறு எந்தத் தமிழ் சிறுகதை ஆசிரியரின் பாதிப்பும் இல்லாமலே ‘கோணல்கள்’ என்கிற சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர்கள் நான்கு பெரும் எழுதியிருக்கிறார்கள் என்பது பாராட்டுக்குரிய விஷயம்.

மனித உணர்வுகளின் மெல்லிய இழைகளை நுட்பமாய் சித்தரிக்கிறது ‘உயிர்கள்’ என்ற சிறுகதை. இக்கதையில் காதல், சாவு என்கிற விஷயங்கள் குறிப்பாகவும், கலையழகுடனும் கையாளப்பட்டிருக்கின்றன. கனவுகள் கலையப்பெறாத இளைஞன் தானாகவே சமூகத்திலிருந்தும், குடும்பத்திடமிருந்தும் கூட ஒதுங்கிக் கொள்கிறானா அல்லது மற்றவர்களால் புறக்கணிக்கப்படுகின்றானா என்பது பழைய கேள்வி. இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுகிற கதைகள் – கோணல்கள், சங்கரராமின் நாட்குறிப்பு- கலைக்கு இவை கனமான விஷயங்கள்; எனவேதான் நடைகூட படிப்பதற்கு சிரமம் தருகிறது.

சம்பாஷணையாகவே எழுதப்பட்டிருக்கிற ‘மரக்கப்பல்’ என்கிற சிறுகதையில் கிண்டல் பளிச்சிடுகிறது. ‘நட்சத்திரம் கீழே இருக்கிறது’ என்னும் சிறுகதை இரண்டு இளைஞர்களின் ஏக்கங்களை சுவாரஸ்யமாய் சொல்லுகிறது.

பழைய உலகத்திற்கும் புதிய உலகத்திற்கும் ஏற்படுகிற போராட்டம் ‘காலம் என்னும் தூரம்’ என்கிற கதையில்- ஆசிரியர் எந்தப் பக்கமும் சார்ந்து நிற்காமல் சொல்லப்பட்டிருக்கிறது. உதிரும் மலர்கள், மனிதர்கள் – இந்தக் கதைகளில் விடம்பனப் பார்வை தலைதூக்கி நிற்கிறது.

இந்த நால்வரிடத்திலும் சொல்வதற்கு ஏராளமாகவே விஷயங்கள் இருக்கின்றன. அவற்றையும் தீர்க்கமாகவும், கலைச் செறிவுடனும் எதிர்காலத்தில் இவர்கள் சொல்லியே தீருவார்கள் என்கிற நம்பிக்கையோடு இந்த முன்னுரையை முடித்துக் கொள்கிறேன்.

ஆர் சுவாமிநாதன்

தி. நகர்,
14.11.1967

பின்தொடரும் ஏதோ ஒன்றின் நிழல்

ஜிஃப்ரி ஹாசன்

நாளை முடிக்கப்பட வேண்டிய
வேலை ஒன்று
என்னை உறுத்திக் கொண்டே இருக்கிறது
அது
உண்மையில் இருப்பதாகவோ
அல்லது எனது கற்பனையாகவோ
இருக்கலாம்
நாளைக்குள் அது முடிக்கப்பட்டாக
வேண்டும் என்ற அவசரம்
என்னை பரபரப்பாக்கிறது
அந்த வேலை எப்படிப்பட்டது?
சித்திரம் போல் மனதுக்கு இதமூட்டக் கூடியதா
தீ போல் சுட்டெரிக்கக் கூடியதா
தொடர்ச்சியாய் ஒரே இருப்பில்
செய்யக் கூடியதா
அல்லது இடைநடுவில்
ஓய்வு எடுக்க வேண்டி வருமா?
அது
ஒரு அலுவலகப் பணி போல்
கண்காணிக்கப்படக் கூடியதா
அல்லது சுதந்திரமானதா
அது
இயற்கையானதா
அல்லது செயற்கையானதா
நாளை முடிக்கப்பட வேண்டிய
இன்னதென்று தெரியாத ஒரு பணி
என்னை எப்போதும்
உறுத்திக் கொண்டே இருக்கிறது
அடையாளம் தெரியாத
நாளை முடிக்கப்பட வேண்டிய
உள்ளத்தை உறுத்தும்
அந்தப் பணியின் அவஸ்தையால்
ஒவ்வொரு மனிதனும்
ஒவ்வொரு கணமும் சிதைகிறான்

அசோகமித்திரனின் ‘மாலதி’ – ஒரு குறிப்பு

 அஜய் ஆர்

ami

தான் பணிபுரியும் மருத்துவ மையத்தில் ஒரு மணி நேரத்திற்குள், அன்று அங்கு வந்துபோனவர்களைப் பற்றிய அட்டவணை பதிவு செய்தல், மாதா மாதம் வர வேண்டிய பணம் பற்றிய கணக்கு எழுதுதல், சிறப்பு மருத்துவர் ஒருவரை மையத்திற்கு வரச் செய்ய ஏற்பாடு செய்தல், மையத்திலிருந்து நோய் குணமாகிச் செல்பவர்களுக்கான ரசீது தயார் செய்தல், பழுதடைந்திருக்கும் குழாயை சரி செய்வது போன்ற தொடர் வேலைகளை முடிக்கும் மாலதி, அசோகமித்திரனின் புனைவு வெளியில் வாசகன் அடிக்கடி சந்திக்கும், இருபதுகளின் மத்தியில்/ இறுதியில் இருக்கும், வேலைக்குச் செல்லும் கீழ் மத்திய வர்க்கப் பெண்களின் மிக முக்கியமான பிரதிநிதி.

மருத்துவமனையின் ஒரு காலை நேரக் காட்சிகளோடு ஆரம்பிக்கும் ‘மாலதி’ நெடுங்கதை/ குறுநாவல், வெறும் புறச்சூழலை உருவாக்கி மட்டுமல்ல. அதன் உடல் /மன அயர்ச்சியை மாலதியோடு வாசகனும் உணரச் செய்வதால்தான், வேலை அனைத்தையும் முடித்து விட்டு கண்ணாடியில் எத்தேச்சையாக ஒரு கணம் தன் முகத்தைப் பார்த்து, பெண்கள் எப்போதுமே கண்ணாடியின் முன்பு தான் நின்றிருக்கிறார்கள் என்று எழுதப்படும் துணுக்குகள் பற்றி “… எவ்வளவு பெண்களுக்கு கண்ணாடியை ஒழுங்காகப் பார்க்கும் வாய்ப்பே கிடையாது என்று இவர்களுக்குத் தெரியுமா… வீட்டில் கூட ஒரு ஓட்டைக் கண்ணாடிதான். அதில் தெரியும் பிம்பம் எல்லாமே அரைகுறை தான்” என்று அவள் எண்ணும்போது, அதில் உள்ள உண்மையை நாம் உணர முடிகிறது.

மருத்துவனை நிகழ்வுகளோடு மாலதிக்கும் அவள் தாய்க்கும் இடையே உள்ள உறவுச் சிக்கல் இன்னொரு இழை. அவள் இல்லாவிட்டால் மருத்துவமனையின் அன்றாட அலுவல்கள் ஸ்தம்பித்து விடும் என்ற அளவிற்கு அத்தனை வேலைகளையும் செய்யும் மாலதியிடம் அது எதுவும் தெரியாத, தெரிந்து கொள்ளும் அக்கறைகூட இல்லாத அவள் தாய் “நீ பண்ணற பெரிய உத்தியோகத்துக்கு சிநேகிதி கல்யாணத்துக்குக் கூட போகக் கூடாது? அப்படி என்ன பெரிசா அந்த டாக்டர் கொட்டிக் கொடுத்துடறார்” என்று அவள் உணர்வுகளைக் காயப்படுத்துகிறார். தன் கணவன் வேலை செய்த இடத்திற்கு மாலதி வேலைக்குச் செல்லவில்லை என்ற கோபம் அவருக்கு. தந்தை அங்கு அனைவரிடமும் கடன் வாங்கியுள்ளதால், அவர்கள் முன்னால் நிற்பதற்குக்கூட கூசுகிறது என்பது மாலதியின் தரப்பு.

அசோகமித்திரனின் புனைவுகளில் நாம் சந்திக்கும் கணவனை இழந்த, ஆனால் மன உறுதியை இழக்காத அம்மாக்களில் ஒருவர் மாலதியின் தாய். கல்யாணத்திற்கு மாலதி செல்லவில்லையென்றால் ‘வயிற்றெரிச்சல்’ காரணமாக வரவில்லை என்று மற்றவர்கள் நினைப்பார்கள் என்று கூறி, மகளை அழ வைக்கும் அளவிற்கு உளவியல் நுட்பமும், கடுமையும் நிறைந்தவர் போல் முதல் தோற்றத்தில் தெரிகிறார். ஆனால் அவருடைய கோணத்தில், மற்றவர்கள் மனதில் என்ன நினைப்பார்களோ என்பதற்காக ஒரு வேலையை விடுவது முட்டாள்தனமான ஒன்றாக இருக்கக்கூடும். யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல், தேவையில்லாமல் எதை எதையோ எண்ணி நல்ல (அதிக ஊதியம் கொடுக்கக்கூடிய) வேலைக்குச் செல்லாமல், தன் எதிர்காலத்தை மகள் வீணடிக்கிறாளே என்ற ஆதங்கம் கூட இத்தகைய கடுஞ்சொற்களாக வெளிவரலாம்.

மருத்துவமனையின் உரிமையாளரான டாக்டர் மணமானவர், அவருக்கு சுஜனா என்ற பெண்ணுடன் தொடர்பிருக்கிறது. அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி டாக்டரை வற்புறுத்துவது மாலதிக்குத் தெரியும். இந்த விஷயம் டாக்டரின் மனைவிக்கும் தெரிந்து, டாக்டர் மிகப் பெரிய நெருக்கடியில் விழப்போகிறார் என்று மாலதி நினைக்கிறாள். அதற்கேற்றார் போல், டாக்டர் மருத்துவமனையில் இல்லாதபோது அவர் மனைவியும், சுஜனாவும் சந்தித்து வாக்குவாதம் செய்ய ஆரம்பிக்க, அந்த இடத்தில் மிகவும் அசௌகரியமான சூழல் உருவாகிறது. இதில் எந்த சம்பந்தமும் இல்லாத மாலதி அவமானப்படுத்தப்பட, அவள் வேலையை விட்டுவிடலாம் என்று முடிவு செய்கிறாள். (தந்தையின் பணியிடத்திற்கு அவள் செல்ல விரும்பாததற்கான காரணத்தின் உளவியலை புரிந்து கொண்டால், அவளின் இந்த முடிவையும் புரிந்து கொள்ள முடியும்). அதே நேரம் அவள் யதார்த்தத்தையும் ஒரு புறம் உணர்ந்தேயிருக்கிறாள் என்பதால் கிளம்பும்போது, தான் திரும்பவும் வேலைக்கு வர வேண்டும் என்ற தேவை ஏற்பட்டால் சொல்லியனுப்புமாறு கூறுகிறாள்.

நாம் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பார்க்கும் தெருக்களும், அதன் வீடுகளும், கடைகளும், அந்த மொத்தச் சூழலும் பிறிதொரு நேரத்தில் பார்க்கப்படும்போது நாம் அதுவரை அவற்றை கண்டிராதது போல் வேறொரு தோற்றம் கொள்ளக்கூடியவை. மாலதி தன் வேலையின் இயல்பால் தினமும் நகரம் உயிர் கொள்ளும் முன்பே மருத்துவனைக்குச் சென்று மாலைதான் திரும்புகிறாள். இன்று வேலையை விட்டுவிட்டதால், நீண்ட நாட்கள் கழித்து 9-10 வாக்கில் தெருக்களில் செல்லும் அவள், புதிதானவை போல் அனைத்தையும் கவனிக்கிறாள். இக்கட்டான சூழலிலும் மாலதி உணரும் இந்தக் காட்சி பேதத்தின் நுட்பம் ஒருபுறமிருக்க, அனைவரும் அந்த நாளை எதிர்கொள்ள தயாராகிச் சென்றுகொண்டிருக்க, அயர்ச்சியுடன் சென்று கொண்டிருக்கும் மாலதிக்கோ அந்த நாள் முடிந்தே விட்ட மாதிரிதான் என்பதில் முரணும் உள்ளது.

வீட்டிற்கு திரும்பும் போது, தான் எந்த பெண்ணிற்கும் எதிரியாகக் கூடாது என்று மாலதி நினைக்கும் அதே நேரம், தன் உறுதி திடமானதா என்பதை ஒரு சிறு பரிசோதனைக்குக்கூட உட்படுத்த முடியாது என்று உணரும் போது வருந்துகிறாள். கதை இங்கு முடிகிறது. பெண்களின் துயரை கனிவுடன் பேசுவது என்ற அளவிலேயே சிறந்த கதையாக இருந்திருக்கக் கூடியதை இன்னொரு கோணத்தில் பார்க்க கதையில் உள்ள ஒரு நிகழ்வு உதவுகிறது.

டாக்டரின் மனைவிக்கும் சுஜனாவுக்கும் வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்ற, சுஜானா அவளை அடித்து விடுகிறாள். டாக்டர் மனைவி ஸ்தம்பித்து வேறெதுவும் செய்ய முடியாத நிலையில், தன் தோளைத் தொட வரும் மாலதியை நோக்கி “.. நீ வேலை பண்ண வந்திருக்கையா, வசியம் பண்ண வந்திருக்கயா..” என்று கோபப்படுகிறாள். 18வது அட்சக்கோடு நாவலில் ஒரு நிகழ்வு. ஹைதராபாத் இந்தியாவுடன் இணைய வேண்டும் என்று நடக்கும் போராட்டத்தின் போது, சந்திரசேகரனின் கல்லூரியில் படிக்கும் சில பெண்கள், வகுப்புக்களுக்குச் செல்லும் அவனைப் போன்றவர்களிடம், வளையல் தந்து கேலி செய்கிறார்கள். அந்த இடத்திலிருந்து ஓடி வந்து விடும் அவன் அவர்களை தொலைவில் இருந்து கவனிக்கும்போது, காரில் வருபவர்களிடமோ, சிரித்துப் பேசிக்கொண்டு வருபவர்களிடமோ அவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதில்லை என்று தெரிகிறது.

முதல் பார்வையில் இரு நிகழ்வுகளுக்கும் சம்பந்தமே இல்லாதது போல் தோன்றினாலும், இரண்டும் ஒன்றையே சுட்டுகின்றன. சந்திரசேகரனின் கல்லூரி பெண்களுக்கு காரில் வருபவர்களை எதிர்கொள்ள திராணி இல்லையென்றால், டாக்டரின் மனைவிக்கு சுஜனாவை ஒரு கட்டத்திற்கு மேல் எதிர்கொள்ள முடிவதில்லை. இரண்டு நிகழ்வுகளிலும் தாங்கள் எதிர்கொள்ள முடியாதவர்களை தவிர்ப்பவர்கள், தங்களுக்கு கீழே உள்ளவர்கள் என அவர்கள் வரையறுக்கும் எளியவர்கள் மேல் எந்த தயக்கமும் இல்லாமல் வன்முறையைப் பிரயோகிக்கிறார்கள். நாளை டாக்டர் சுஜனாவையும், மனைவியையும் சமாதானப் படுத்தக் கூடும். அவர் மாலதியை வேலைக்கு வருமாறு அழைத்து அவளும் யதார்த்த நிலையை எண்ணி மீண்டும் செல்லக்கூடும். ஆனால் எந்த காரணமோ, குற்றவுணர்வோ இல்லாமல் தன் மீது எப்போது வேண்டுமானாலும் சுமத்தப்படக்கூடிய இழிவுக்கு அவள் ஒவ்வொரு கணமும் தயாராக இருக்க வேண்டும்.

எளியவர்கள் அன்றாடம் சந்திக்கும் இழிவுகளை பரிவுடன் சுட்டும் இந்த நிகழ்வு, பெண்கள், ஆண்கள், குழந்தைகள், இளைஞர்கள் என யாரைப் பற்றியதாக இருந்தாலும் அனைவருக்கும் பொதுவான மானுடத்தைத் தொட்டு, அதனுடன் உரையாடுவதால் அசோகமித்திரனின் புனைவு வெளியில் இந்தக் கதை முக்கியமான மைல்கல்லாகிறது.