Author: பதாகை

விரல் கணக்கு

ஸ்ரீதர் நாராயணன்

counting_with_fingers2

சின்னஞ்சிறு விரல்களை
விரித்து மடக்கி கணக்கிட்டு
அடுத்த செவ்வாய்க்கிழமை
தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டம்
என அறிவிக்கிறாள்.

சிரிக்கும் அவர்களையும்
சேர்த்துக்கொண்டு
ஊதிய பலூன்கள் ஓடி ஓடி வெடிக்கிறாள்.

பாலேடு வழியும் கேக்குகளை
விரலால் வழித்து நக்குகிறாள். (more…)

மண்ட்டோவும் ஜி நாகராஜனும் – ஒரு பார்வை

வெ. கணேஷ்

Manto g-nagaraajan-aakkangal-215x315

முதலில் எனக்கு அறிமுகமானவர் மண்ட்டோ. காலித் ஹசனின் ஆங்கில மொழிபெயர்ப்பு வாயிலாகத்தான் மண்ட்டோவின் உலகு எனக்கு அறிமுகமானது. டோபா டெக் சிங் – சிறுகதைதான் நான் படித்த முதல் மண்ட்டோ படைப்பு. அந்தச் சிறுகதையை வாசிப்பதற்கு முன், இந்தி மொழி நாடகமாக டோபா டேக் சிங்-கை காணும் சந்தர்ப்பம் அமைந்திருந்தது. மனநல மருத்துவமனையை இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் அரசியல் வக்கிரங்களின் படிமமாக மாற்றிய கச்சிதமான சிறுகதை அது. நகைச்சுவை, யதார்த்தம், நகைமுரண், வரலாற்றுச் சோகம் மற்றும் துன்பியல் – மானுட வலியின் பல அடுக்குகளையும் அழகாய்ச் சொன்ன அற்புதச் சிறுகதை. டோபா டேக் சிங் பானையின் ஒரு சோறு. பிரிவினைக்கால வன்முறை நிகழ்வுகளின் அடிப்படையில் மண்ட்டோ எழுதிய “திற”, “சில்லிட்டுப் போன சதைப் பண்டம்” “டிட்வாலின் நாய்” “மோஸல்” முதலான சிறுகதைகள் பெரிதும் பேசப்படுபவை.

ஜி.நாகராஜன் மண்ட்டோவுக்குப் பிறகுதான் எனக்கு அறிமுகமானார். 2012- தில்லி புத்தக விழாவில் ஜி நாகராஜனின் முழு ஆக்கங்கள் (காலச்சுவடு பதிப்பக வெளியீடு) என்ற நூலை வாங்கினேன். அவருடைய எல்லா சிறுகதைகளையும் படித்து விட்டேன் என்று சொல்ல முடியாது. அவர் எழுதிய இரண்டு நாவல்களையும் – ”நாளை மற்றுமொரு நாளே” மற்றும் “குறத்தி முடுக்கு” – உடனே வாசித்து முடித்தேன். இக்கால பெரிய எழுத்தாளர்கள் யானைக்கால் சைஸில் எழுதும் நாவல்களின் பக்க எண்ணிக்கையைப் பார்த்தால் நாகராஜன் எழுதியவற்றை குறுநாவல்கள் என்றே குறிப்பிட வேண்டும் (more…)

டிபென்ஸ் காலனி பூங்காச் சம்பவம் 

சிகந்தர்வாசி 

பெங்களூர் இந்திரா நகர் டிபென்ஸ் காலனி பூங்காவில் தினமும் மாலை நடைபழகுவது என் பழக்கம். அன்று மாலையும் அதுதான் செய்து கொண்டிருந்தேன். காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு இளையராஜா பாடல்களை கேட்டபடி சிறு கற்கள் பதித்து அமைக்கப்பட்ட டிராக்கை பல முறை சுற்றி வருவேன். கால் மணி நேரம் சுற்றி வந்திருப்பேன், அப்பொழுது பூங்காவிற்கு வெளியிலிருந்து உரக்க பல குரல்கள் கேட்டன. யாரோ சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மெதுவாக பூங்காவின் இரும்பு சுழற்கதவு பக்கம் வந்து வெளியே பார்த்தேன். ஏழு எட்டு பேர் இருப்பார்கள். அதில் ஒரு இளவயது பெண் இன்னொரு இளவயது பெண்ணைப் பார்த்து ஏதோ ஆங்கிலத்தில் கத்திக் கொண்டிருந்தாள். அவள் அருகில் ஒரு நடுத்தர வயது அம்மையார் தமிழில் ஏதோ உரக்கக் கூவிக் கொண்டிருந்தார். அவர் பக்கத்தில் வயதான அம்மையார் ஒரு நடுத்தர வயது ஆணுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். கத்திக் கொண்டிருக்கும் பெண்ணுக்கு பக்கத்தில் ஓர் இளைஞன் மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்தான். அவன் பக்கத்தில் இன்னொரு இளைஞன் தலை குனிந்து நின்றிருந்தான். இவர்கள் யாரும் இந்த காலனிக்காரர்கள் போல் தோன்றவில்லை.

கத்திக்கொண்டிருக்கும் பெண் ரோட்டிற்கு அந்தப் பக்கம் இருந்தாள். சற்று பருமனாக இருந்தாள். மங்கலான பச்சை நிறத்தில் ஒரு சுடிதார் அணிந்திருந்தாள். முகத்தில் வியர்வைத் துளிகள் பிரகாசித்தன. அவளுக்கு நல்ல ‘பேஸ் வாய்ஸ்’ என்று நினைத்துக் கொண்டேன். ரோட்டின் இந்தப் பக்கத்தில் இருந்த பெண்ணைப் பார்த்து கையை ஆட்டி ஆட்டி, “யூ பிட்ச். வாட் டூ யூ திங்க் ஆப் யுவர்ஸெல்ப் ஸ்டூபிட் வுமன்” என்று உரக்க கூச்சலிட்டாள் அவள். (more…)

அந்தியின் செவ்வொளி

ஜீவானந்தம்

| | bird |

அந்தியின் செவ்வொளி
ஆற்றங்கரையோரம் நெற்வயல்கள்
கொக்குகள் பறந்தெழுந்து அமர்ந்தபடியிருக்க
மாடோட்டிச் செல்கிறாள் தாயொருத்தி
நாணற் செடியின் புதர்களிலிருந்து இருளிசை ஒலிக்கவும்
நெய்விளக்கேந்திய பெண் சித்திரம் ஒன்று
உதடுகளில் சிரிப்புடன் அசைந்து செல்கிறது.
மணற்வெளி புதைந்த சிறு சங்குகள் பொறுக்கி
விசிலூதி செல்கிறான் தம்பி.
தாய்மடி நிரம்பிய பொண்ணாங்கண்ணியிலிருந்து
சொட்டியுதிரும் நீர்த்துளிகள் கண்ணுற்றபடி
வா வீட்டுக்கு போகலாம், எனச் சிணுங்குகிறாள் செல்லம்.
நீர் மூழ்கிய பாதங்களில் கொத்திக் கொத்தி ஒளிந்தலையும் கள்ள மீன்களே
நகரம் திரும்பும் நம் நண்பனை வழியனுப்பிவிட்டு
அக்காவுக்குத் தெரியாமல் நாளை நான் கொண்டு வருவேன்
கைப்பிடியளவு கடலையும்
மீந்திருக்கும் சில சொற்களையும்.

ஒளிப்பட உதவி – Rajendran Rajesh

இந்தக் கரிய இருள்

அதிகாரநந்தி

 

இந்தக் கரிய இருளின் நேர்த்தியை
இதுவரை நான் அறிந்திருக்கவில்லை
நிலவை நோக்கிக் கொண்டிருந்தவனுக்கு
இருளின் தண்மை பிடிபடவில்லை
கண்ணுக்குத் தெரியாத பெரிய இருள்
அதனுள் படர்ந்த சிறு வெளிச்சம்
இருளும் ஒளியும் இணைந்த இரவு
அங்கே விழும் ஒர் நட்சத்திரம்
எதை வேண்டிக்கொள்ள?
இருளைத் தெரிந்து கொண்டவனுக்கு
ஏதேனும் வேண்டியும் இருக்குமோ?
வெளிச்சம் தேடித் தோற்பதை விட
பரந்து விரிந்த இருள் இருக்கிறது
அது போதும்.

ஒளிப்பட உதவி – techsupportalert.com