Author: பதாகை

அடில் ஜுஸ்ஸாவாலாவின் “களிமண்”

செந்தில் நாதன்

கடவுளின் மாதிரி.
அவரது பன்முகங்கள்.
நீர்கொள்ள பாதுகாப்பான பாத்திரம்.
நெருப்பில்,
தன்னுள் அடைபட்டிருக்கும்
ஆன்மாக்களை வெளிப்படுத்தும்:
கிளி, வண்டு, நரி.

கைவிடப்பட்டால், வெற்றுப்பலகை
உயிரற்றிருந்தால், உறைவிடம்.
முழுமையானால், கலை.
மூளியானால், மனிதன்.

(Adil Jussawala, Clay)

ஒளிப்பட உதவி – விக்கிப்பீடியா

அடில் ஜுஸ்ஸாவாலா – இங்கிருத்தல் 1

(அடில் ஜுஸ்ஸாவாலாவின் கட்டுரைத் தொகுப்பான Maps for a Mortal Moon என்ற நூலை முன்வைத்து அர்விந்த் கிருஷ்ண மெஹ்ரோத்ரா காரவன் பத்திரிகையில் எழுதிய  Being Here என்ற கட்டுரையின் தமிழாக்கம்)

பம்பாய் பல்கலைக்கழக மாணவனாய் புகுபதிவு செய்துகொள்ள நான் 1966ஆம் ஆண்டின் கோடைப்பருவத்தில் அலகாபாத்திலிருந்து பம்பாய் வந்தபோது எனக்குத் தெரிந்தவர்கள் யாரும் அந்த ஊரில் இல்லை. என் பெற்றோர்கள் முலுந்த் பகுதியில் எனக்கு இடம் பார்த்திருந்தார்கள், ஆசிரமம் போன்ற அதை ஒரு பெண் கவனித்துக் கொண்டிருந்தார், அவரை நாங்கள் மாஜி என்று அழைத்தோம். அவரது பெயர் பிரிஜ்மோகினி சரின். என் பெற்றோர் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர். அவர்களுக்கு மாஜி ஒரு குருவாய் இருந்தார். மெலிந்த, கீச்சுக் குரல் கொண்ட, நாற்பதுகளின் மத்திய பருவத்தில் இருந்த அவர் டெர்ரிகாட்டில் தைக்கப்பட்ட வெளிர் வண்ண மேக்சி அணிந்திருப்பார், ஆசிரமத்தை இரும்புக் கரம் கொண்டு நிர்வகித்தார். அவர் அருகில் வரும்போது, பக்கத்தில் இருக்கும் தூணுக்குப் பின்னால் பதுங்கிக் கொள்ளத் தோன்றும். அவருக்கு மணமாகியிருந்தது. அவரது கணவர், பப்பாஜி, டெலிபோன் எக்ஸ்சேஞ்சில் வேலை செய்து கொண்டிருந்தார். ஆசிரமத்தில் அவருக்கென்று தனியாக ஒரு அறை இருந்தது.

அந்த இடத்தில் நிரந்தரமாக இருந்த மற்றவர்களில் பணக்கார மார்வாரி விதவைகள் இருவரும் அடக்கம், சர்ச்கேட்டில் ரிட்ஸ் ஹோட்டலுக்குப் பின்புறம் இருந்த ஆர்ட் டிகோ கட்டிடங்களில் ஒன்றின் உரிமையாளர்கள் இவர்கள் பொழுதெல்லாம் சமையலறையில் இருந்தனர், பாத்திரம் தேய்த்துக் கொடுத்து சில்லறை வேலைகளைச் செய்யும் பணிப்பெண்கள் என்று எளிதாக அவர்களை நினைத்துவிட முடியும். ஆசிரமத்துக்கு விருந்தினர்கள் அவ்வப்போது வந்து சிறிது காலம் தங்கிவிட்டுப் போவார்கள், மாஜி ஆசிரமத்தைச் சுற்றிக் காட்டும்போது, விதவைகளைச் சுட்டிக் காட்டி, வைரங்களை விட்டுவிட்டு ஆத்ம ஞானத்தைத் தேடிச் செல்ல வந்திருக்கின்றனர் என்று அவர்களிடம் பாராட்டிச் சொல்வார். முடிந்த அளவுக்கு நான் ஆசிரமத்தைவிட்டு வெளியே இருந்தேன்; எனக்கு அப்போது பத்தொன்பது வயது. (more…)

செம்பக வனம்

– மோனிகா மாறன் –

“சார்வாள்! சொகமாயிரிக்கீறா?” இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் வள்ளிநாயகத்தின் குரலில் குமரித்தமிழ் கொஞ்சியது. “ஜே எம் எஸ் பஸ்ஸுல என்ன கூட்டம்.நல்ல குளுறு வேற. சமுனாமரத்தூர் எப்படி மாறிடுச்சு. நாப்பது வருசமாயிட்டுல்ல. தம்பி கல்யாணங்கெட்டாமலே இருந்துட்டீக. நம்ம ஊரு பக்கம் ஏதாச்சும் நல்ல நாயரு பொண்ண அம்பது பவுனோட முடிச்சிருக்கலா”.

நான் சிரித்தேன். “நம்ம எளங்கோவன் மகளாட்டு நாரோல்ல தா கலியாணம் வச்சிருக்கு. நீரு வாரீரு. அந்தால என்னமாச்சும் சொல்லீட்டு இங்கனயே கெடந்தீரு. சவட்டி புடுவேன். ரிட்டைடாயிட்டு இன்னும் என்னவே இந்தூருல? நம்ம மக்க மனுசாளோட வந்து சேராம”. என்மீது மாறா அன்பு கொண்ட தம்பதியர். தம்பி மகளின் திருமண அழைப்பினைத் தந்து விடைபெற்றனர்.

நினைவுகளின் கனம் தாளாமல் வீட்டின் முன்புறமிருந்த இலவச மருத்துவ மையத்துக்குச் சென்றேன். என் வாழ்வு இவ்விடத்தை விட்டு நகராது. “செண்பக வனம்”.

பெயர்ப்பலகையை நோக்குகிறேன். எழுபத்து மூன்றில் நான் இந்த ஜவ்வாது மலைக்கு வந்தபோது,  “சாருக்க சுசீந்தரமா எனக்க தக்கல இந்தா இவ ஆரவாமொளிக்காரிதான்,” என என்னை வரவேற்று போஷித்த ஆசிரியர் தம்பதியர்தான் இந்த வள்ளி நாயகமும் கோலம்மையும். (more…)

எஞ்சிய சாம்பலிலிருந்து…

ஸ்ரீதர் நாராயணன்

bookashes

ஒரு சொல்லை மட்டும்
பிரித்தெடுத்து கொண்டு
எங்கே போகிறாய்?

எழுதியது மொத்தமும் உனக்குத்தான்.
எல்லாவற்றையும் எடுத்து சென்று
எரிதழலில் இட்டுவிடு.

எழுத்தை சூழும் நெருப்பு
தின்று தீர்க்கட்டும்
உன்னையும் என்னையும்!

மாதொருபாகன் நூலுக்கான எதிர்ப்பை தொடர்ந்து நடக்கும் சர்ச்சையை ஒட்டி நிறைய அலசல்களும் கருத்து பரிமாற்றங்களையும் கவனிக்கிறோம். அழிப்பதற்காக இட்ட நெருப்பே அந்த எழுத்தை பெரும் வீச்சோடு பரப்பிச் செல்கிறது. எஞ்சிய சாம்பலிலிருந்து சில கேள்விகளும் அதற்கான விளக்கங்களையும் இப்படி தொகுத்து வைத்துக் கொள்ளலாம்.

இலக்கியம் என்பதற்கான வரையறை என்ன? இன்றைய புனைவுகள் நாளைய கலாச்சார, சமூக ஆவணமாக பேசப்படும் என்றெல்லாம் சொல்கிறார்கள். அத்தகைய படைப்புகளுக்கு கட்டுபாடுகள் தேவையில்லையா? (more…)

வண்ணக்கழுத்து 1

மாயக்கூத்தன்– 

1. பிறப்பு

பத்து லட்சம் பேர் இருக்கும் கல்கத்தாவில் புறாக்கள் இருபது லட்சமாவது இருக்கும். இந்துப் பையன்கள் மூன்றில் ஒருவனிடம் காரியர்கள், டம்ப்ளர்கள், ஃபேன்டெயில்கள், பௌடர்கள் என்று ஒரு டஜன் வளர்ப்புப் பறவைகளாவது இருக்கும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக புறாக்கள் வளர்க்கப்பட்டு வரும் இந்தியாவில், ஃபேன்-டெயிலும் பெளடரும் பறவைகளை நேசிப்பவர்கள் பிரத்யேகமாய் உருவாக்கிய இருவேறு இனப் புறாக்கள். காலங்காலமாக, மாட மாளிகைகளில் அரச குடியினராலும், சின்னஞ் சிறிய வீடுகளில் ஏழைகளாலும் புறக்களின் மீது அன்பும் அக்கறையும் பொழியப்பட்டு வருகிறது. பணக்காரர்களின் தோட்டங்களிலும் குடில்களிலும் நீரூற்றுகளிலும், சாதாரணர்களின் சிறு நந்தவனங்களிலும், பழத்தோட்டங்களிலும், அலங்காரமாகவும் இசையாகவும் பல வண்ணப்புறாக்களும் குனுகும் மரகதக் கண் கொண்ட வெண்புறாக்களும் தானிருக்கும்.

இன்றைக்கும் கூட, எங்கள் பெருநகர்களுக்கு வருகை புரியும் வெளிநாட்டினர், தங்கள் வளர்ப்புப் புறாக்கள் ஈரமற்ற குளிர் காற்றில் உயரப் பறக்க, எண்ணற்ற சிறுவர்கள் சமதளமாய் இருக்கும் வீட்டுக் கூரைகளில் வெள்ளைக்கொடி அசைத்து சமிக்ஞை செய்து கொண்டிருப்பதைக் குளிர்கால காலை வேளைகளில் காண முடியும். நீல வானத்தில், தடித்த மேகங்களாய் புறாக்கூட்டங்கள் பறந்து செல்லும். சிறிய கூட்டங்களாகத் தொடங்கி, தங்கள் எஜமானர்கள் வீட்டுக் கூரைகளின் மேல் இருபது நிமிடங்கள் வட்டமடிக்கும். பின் மெதுவாக மேலேறி, எல்லா சிறிய கூட்டங்களும் ஒரு பெரிய கூட்டமாகி, கண்ணுக்கப்பால் தொலைதூரம் போய்விடும். ரோஸ், மஞ்சள், வயலட், வெள்ளை என்று பல நிறங்களில் இருந்தாலும் எல்லா வீட்டுக் கூரைகளும் ஒரே வடிவில் இருக்கும்போது, ஒவ்வொரு புறாவும் தத்தமது வீடுகளை எப்படி கண்டுபிடித்து வந்து சேர்கிறது என்பது ஆச்சரியம்தான். (more…)