Author: பதாகை

சில கனவுகளும் சிலைகளும் – இவான் கார்த்திக்

இவான்கார்த்திக்

கிணற்றின் நுனியில் நின்றுகொண்டு குதிக்க எத்தனிக்கும் சமயம் அதனுள் நான் ஏற்கனவே நீந்திக்கொண்டிருக்கிறேன் எனபது தெரிகிறது. இருவரும் ஒருவரையொருவர் திகைப்புடன் பார்க்கும் கணத்தில் அவன் உருவம் கலைந்து இன்னொருவனாகியதும் கனவு கலைந்தது. கைகள் தற்செயலாக கார்த்திகாவின் புடைத்த வழுவழுப்பான வயிற்றை தடவிக்கொண்டிருந்தது. நகம் பட்டால் கிழிந்துவிடும் என்ற பயம் உறக்கத்திலும் இருந்தது. உறக்கத்தில் அவள் எழுந்து மறுபக்கம் சரிந்து படுத்தாள். முன்பென்றால் அப்படியே புறண்டு படுத்துவிடுவாள். எழுந்து திரும்பி படுக்கவேண்டிய கட்டாயம் இப்பொழுது. இருந்தும் சிலசமயம் மறந்து வெடுக்கென்று திரும்பி காலையில் அதற்காக தன்னையே நொந்து கொள்வாள். விஜிலெண்ட் பூங்காவில் சிலைகள் சூழ்ந்த கிணற்றிலேயே அந்த கனவு சம்பவிக்கின்றது. கனவில் என் பின்புறமிருக்கும் சிலைகளை எவ்வளவுதான் முயற்சி செய்தும் ஞயாபகப்படுத்த முடியவில்லை.

கரு உண்டாக்க நாங்கள் கடும் முயற்சியில் இருந்த நாட்களில் ஓர் நாள் காலையில் ஸ்டாக்கோமிலிருந்து பஸ் பிடித்து இறங்கி வரும் பொழுது நான் எண்ணிக்கொண்டு வந்தது அந்த பூங்காவைப்பற்றியே. அவளிடம் அதனைப்பற்றி தினமும் ஒரு தடவையாவது சொல்லுதிர்க்காமல் இருந்ததில்லை. ஒற்றை மனிதால் அவன் வாழ்நாளில் வடித்து உருவாக்கப்பட்ட சிலைகள். அத்தனை சிலைகளுக்கான ஒரு திறந்த வெளி மியூசியமாகவே நார்வே நாடு உருவாக்கியிருந்தது. தலைநகர் அதற்குண்டான தனிமையுடன் இருந்தது. இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் பாச்சா போல மக்கள் கூட்டம் இருக்கையில் புது வாசிகளுக்கு இது மட்டுமல்ல வடதுருவ நாடுகள் எல்லாவற்றிலும் தலைநகரத்திற்கான அங்க அடையாளங்களை காண்பது கடினமானதே. தெரிந்தவர் தெரியாதவர்களுக்கு ஒரு சிறிய ஹாய் மட்டுமே பரிமாற்றப்பட்டு அப்படியே கடந்து சென்று விடும் இந்த மக்கள் நிச்சயமாக சாதரணவர்கள் அல்ல. அந்த சிரிப்பு எழுந்து அடங்க ஒரு நொடியிலும் குறைவாகவே ஆகும். அதற்கு பதில் அளிக்கும் முன் அவர்கள் அடுத்த முகங்களுக்கு ஹாய் சொல்லி கிளம்பியிருப்பார்கள். அவர்கள் கைகளில் இருக்கும் காப்பி கோப்பை எப்பொழுதாவது முடியும் என்று நானும் எதிர்பார்க்கிறேன். என்றும் தீராத அட்சய பாத்திரம் போல நிரம்பிக்கொண்டே வருகிறது. மூன்று வேளையும் சோற்றுக்கு பதில் காப்பு குடிப்பதாக ஒருவர் சொன்னதை நான் முழுதாக நம்பிய காலம் உண்டு.

நேற்றிரவு முழுவதும் பெய்த பனி பஸ்ஸின் கண்ணாடிகளில் அடித்துக்கொண்டே இருந்தது. காலையில் உளசட்டை வெளிச்சடையென்று மொத்தம் நான்கு அணிந்து ஓர் தேர் ஊர்வலம் போல இறங்கியும் அவள் பற்கள் முன்போல இன்றும் கிட்டித்ததை பலமுறை அதிகப்படியான சிரிப்புடன் நகைச்சுவையாக முயற்சித்திருருந்தேன். மெலிந்த என் உடலை மேற்சட்டைகள் மூடி வலுவான தோற்றம்கொள்ள செய்திருந்தது. சாலைகளின் ஓரத்தில் பனி ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது சாலை வழுக்காமலிருக்க சிறு சல்லிகள் போடப்பட்டிருந்தன. இவையெல்லாம் நம்மை காப்பாற்றும் என்று நினைத்தால் அது முட்டாள்தனம். சத்தியம் செய்து சொல்லுவேன் நீங்கள் வழுக்கி விழுவீர்கள் நாளுக்கு ஒரு தடவையாவது. இன்றைகான அந்த கணத்தை மனதில் வைத்து கால்களை உரசாமல் தூக்கி வைத்து நடந்தோம்.

என்னை கடந்து சென்ற குழந்தை அவளுக்கான தள்ளு வண்டியில் சாதரணமாக சாய்ந்து படுத்து வாயில் ஜொள் வடிய உலகை மக்களை கூடவே என்னையும் பச்சை விழி கொண்டு மலங்க மலங்க விழித்தது. நிமிடத்திற்கொருமுறை அம்மா குழந்தையை குனிந்து அது கூறிய செய்திகளை அதன் மொழியிலேயே விளக்கி ஜொள்ளை துடைத்து மீண்டும் தொடர்ந்தாள். இதனை இப்படியே காப்பி செய்து பேஸ்ட் செய்தது போல இங்குள்ள அனைத்து அம்மா குழந்தைகள் இப்படியே இருக்கின்றனர். கார்த்திகா இதற்கு முழுவதுமாய் தயாராக இருந்தாலும் எனக்கு இதில் விருப்பமில்லை. அவர்கள் வாங்கிய அதே வண்டியை வாங்கி தள்ளிச்செல்வதில் எந்த ஈடுபாடுமில்லை. இது ஒரு நடிப்பு. அன்பெனும் அரவணைப்பெனும் நடிப்பு. நான் ஆஸ்காருக்கு அடிபோடவில்லை.

வீடு , கடைகளின் கூரைகளில் பனி பாளம் கட்டி நின்றது. குச்சிகளை வைத்து தட்டி சரித்து விட்டுக்கொண்டிருந்தனர். வெயில் சரிந்து பனி பொன்னொளி கொண்டிருந்தது. அவை இரவில் வெண்ணிறம் கொள்ளும். விளக்குகள் இல்லாமல் கூட நடக்கலாம். மின் கம்பங்களில் நீர் வழிந்து உறைந்து வியர்த்திருந்தது. இரும்பு வாசல் கதவுகளுக்கு பின்னால் பனிதாங்கி நின்றன சிலைகள். நான் நடக்க பூங்கா என்னை நோக்கி அடிவைத்து வந்தது.

மூன்றடி அகலம் கொண்ட பாதையின் இருபுறமும் வரிசையாக வெளிர் பச்சை நிற வெண்கல சிலைகள் , கீழே வெண்பனி மூடிய கரை நடுவே கரும்பச்சை நிற நதி ஓடியது. இலைகளற்ற மரங்கள் பனிப்பூச்சூடீ தலை தாழ்த்து நின்றன. சிம்பொனி இசைக்கோப்பின் தொடக்கம் போல ஒவ்வொன்றாக கடந்து நடுவில் ஓர் நீருற்று வளைவு, அதனைச்சுற்றி சிலைகள் , அது ஓர் கோர்வை உச்சத்தில் முடிந்து மற்றது தொடங்கும் தருணம். அதன் பின்னால் படியேற மனித உடல்கள் முறுக்கி நிற்கும் ஸ்தூபி அதனை சுற்றி இரண்டாள் கனத்தின் கற்சிலைகள் அது கடைசி உச்சம். அதன் பின்னால் இறங்கிச்சென்றால் பன்னிரண்டு ராசிகள் பதித்த சிறிய வட்டமான வளைவு. அதன் மேல் சூரிய மணிக்காட்டி. இறுதியில் முனங்கலுடன் சிம்பொனி கச்சேரி முடிந்துவிடும்.

முதல் சிலை குழந்தையை அணைத்தபடி நின்ற அம்மா. அரவணைப்பு என்பதை தாண்டி உள்ளிருந்து வெளியியெடுத்துவிட்ட வருத்தம் அவள் முகத்தில் தோய்ந்து கிடந்தது. முதிரா முலைகள். ஒரு வேளை குந்தியாக இருக்கலாம். “பெத்த உடனே கடம ஆரம்பிச்சாச்சு. நல்லா பாத்தியா. அந்த அம்மா அழுகுறாங்க” என்றேன். கார்த்திகா அதனை விரும்பவில்லை என்பது தெரிந்தது. இல்லையேல் அதற்கு குறைந்தபட்சம் ஒரு சிணுங்கலாவது பதிலாக வந்திருக்கும். முதல் சிலையின் பக்கவாட்டிலும் எதிர்புற வரிசையிலும் தம்பி தங்கைகள் விளையாட்டு பாவனையுடன் நின்றனர். ஒருவன் அவன் தம்பியை தலையில் தூக்கி பிடித்து வைத்திருந்தான். இரு குழந்தைகள் மகிழ்ச்சியின் உச்சத்தில் கைகளை விரித்து ஓடிக்கிண்டிருந்தனர். அவை கடந்த காலத்தில் தங்கிவிடாமல் நிகழ்ந்து கொண்டிருந்தன. அவை அசைந்து கொண்டிருந்ததில் பனி உதிர்த்து கலைசலான பேச்சுத்தங்கள் கேட்பது போன்ற பிரம்மை எழிப்பியது. மறுகணம் பனியில் உறைந்து நிறுத்தப்பட்ட உயிர்கள் போலிருந்தன. ஒவ்வொரு சிலையின் முன்னும் பத்து பதினைந்து நிமிடங்கள் நின்று ஊழ்கத்தில் நிறைக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன். அவர்களின் சிறு தொந்தி , பிரியாத பிரிந்த அதரங்கள் , கால்களின் நகங்கள் , விலா எலும்புகள் , துருத்தி நிற்கும் கருவிழிகள். மேற்கே நிழல் நீண்டு வீழ்ந்து கிடந்தது. எல்லா குழந்தைகளும் தங்கள் அம்மா அப்பாக்களுடன் இல்லாமல் தனியே நிற்கையில் அமைதியுடன் நிம்மதியுடன் முழுமையான சந்தோசத்துடன் இருப்பது தெளிவாகவே தெரிகிறது. பெற்றொர்களின் அருகில் நிற்பவர்கள் என்றும் விடுதலையற்ற சோகத்தில் ஆழ்ந்து தலை சாய்த்து நிற்கின்றனர்.

எதிரிலிருந்த குழந்தையை சந்தேகத்துடன் பார்ர்கும் வளர்ந்த ஆண் அல்லது தந்தையின் சிலை.
உனக்கு என்னிடம் எந்த சம்பந்தமுமில்லை என்பதை அறுதியுட்டு கூறுவது போலிருந்தது அந்த சிலையின் அமைப்பு. கண்களின் கண்டிப்பு குழந்தையின் தொங்கிய தலை. ஆம் அந்த ஆண் சொல்வது உண்மையே. எப்படி எந்த ஒரு உயிரியல் தொடர்பு இல்லாத ஒருவன் குழந்தையை அணைத்து இறுக்கிக்கொள்ள முடியும். தத்து எடுத்துக்கொள்கிறார்கள்தான் , ஆனால் அதன் ஆழத்தில் குழந்தைகள் அவர்களுக்கான துணையே. இல்லையேல் சமூக அக்கறை என்ற போலிபெயரில் குழந்தைகளை தத்து எடுத்துக்கொள்கிறார்கள் தங்களுக்கோர் அடையாளாத்தை சமூகத்தினுள் ஏற்படுத்திக்கொள்ள. என்னால் நம்ப முடியவில்லை. என் அண்ணனோ தம்பியோ குழந்தைகள் பெற்று அவர்களை அன்பால் நிறப்பதாக கூறி கண்ணீர் விடும் பொழுது உள்ளூர சிரிப்புதான் வருகிறது.

கார்த்திகா என் கைகளை பிடித்துக்கொண்டு ஆட்டிக்கொண்டேயிருந்தாள். இவளை காதலித்து கல்யாணம் செய்து கொண்டேன். இவளுடனும் மனம் ஒட்டவில்லை. நான்காண்டுகளாகியும் அதே நிலை. காதலைச்சொன்ன அன்றும் அப்படியே பின்பு ஏன் சொல்லி கல்யாணம் வரை சொண்டு சென்றேன். எனக்கு தேவைகள் இருந்தன. அதனை பூர்த்தி செய்து கொண்டேன். அந்த அளவுக்கு நான் ஒன்றும் பயந்தவன் இல்லையே. நேரடியாக ஒரு விபச்சாரியிடம் சென்றிருக்கலாம். ஆனால் அவள் என்னை உதாசினம் செய்யும் பொழுது தெரியும் நான் அவளை கண்டிப்பாக காதலிக்கிறென் என்பது. விபச்சாரிகளிடம் அந்த நிலை வருவதில்லை. ஆனால் குழந்தை விசயத்தில் இது நடக்கக்கூடாது என்பதில் நான் தெளிவுடன் இருந்தேன். நடிப்பு பசப்பு அறவே இருக்ககூடாது. எனக்கே தோன்ற வேண்டும்….”ஆம் இப்போது பெற்றுக்கொள்ளாலம்”. அவளுக்கு புரியவைக்க முயற்சித்தேன். அவள்மேலுள்ள என் அபிப்பிராயத்தை மறைத்து.

எப்படி ஆண் குழந்தைகளை ஒன்றாக தனக்குள் அன்பில் நிறைந்ததாக கண்டுகொள்ள தொடங்கினான். வெறும் உயிரணு மட்டும் கொண்டு பிறக்கும் அவனோ அவளோ ஓர் தனித்த உயிர் மட்டுமே. நானும் கூட தனித்தவனே….குழந்தைகளை வளர்ப்பது கடமை சார்ந்த செயல் மட்டுமே. தந்தை என்பதே கடமைக்கு சமமானமான சொல். ஓர் ஆண் அன்பால் மட்டுமே நிறைந்து குழந்தையை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அப்படியிருந்தால் அது தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும் நடிப்பு….நான் வயதான காலத்தில் ஆண்கள் பிள்ளைகளை நினைத்து அவர்களின் வாழ்க்கையை சில தந்தைகள் நினைத்து நொந்து கொள்கின்றனர். இதனை அன்பு சார்ந்ததாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. தன்னை அவன் பிரதிபலிக்கவில்லை தன் பெயர் காப்பாற்றப்படவில்லை என்பதால் கூட இருக்கலாம். இல்லை மற்றொன்றாகவும் இருக்கலாம். இதனை கார்த்திகாவிடம் பலமுறை சொல்லி புரியவைக்க வேண்டியிருந்தது.

காலை நேரமாகியதால் மொத்தமாகவே பத்துபேர்க்குள்ளாகவே பூங்காவிற்குள் இருந்தோம். என் மனைவிக்கு சிலைகள் முக்கியமில்லை போல் தெரிந்தது. கைகளை குளிருக்காக நெஞ்சோடு கட்டிக்கொண்டிருந்தாள். வெண் தொப்பியும் முழங்கால் வரை நீண்ட மேல்கோட்டினுள் மறைந்து சிறுமி போலிருந்தாள். என்னவோ சொல்ல நினைத்து மறைக்கிறாள் சொல்லட்டும் பொறுத்திருப்போம் என்று நானும் அடுத்த சிலைக்கு சென்றேன். அவளும் ஒட்டிக்கொண்டாள். மீண்டும் பனி பெய்ய ஆரம்பித்தது மென்மையான பஞ்சு தூறல்கள் மரம் சிலிர்த்த சிறு வெண்பூச்சிகளென ஒன்றன் மீதொன்று விழுந்து தடையமற்ற மற்றொன்றானது. காதுகளை மூடுவது என் பழக்கமல்ல. குளிரில் விறைத்து அவை சிவந்து வலிக்கையில் தொப்பியணிந்து கொள்வேன். அது குளிரை முழுவதுமாய் உணர உதவும்.

அந்த வரிசையில் இருந்த சிலைகள் விடலைப்பருவ ஆண்களும் பெண்களும். அவர்கள் காமத்தை உணர்ந்து கொள்ள தயாராக காத்திருந்த தோற்றம். ஒருவரையொருவர் கைகோர்த்து மூக்குரசி நிற்கும் சிலைக்கருகில் நின்ற பொழுது என் மனைவி என்னைப்பார்த்து முறுவலித்தாள் வெட்கத்துடன். எனக்கோ அவர்கள் இருவரும் சோகத்துடன் இருப்பது போலிருந்தது…அந்த தருணம் முடிந்தும் வரும் ஏக்கம் தனிமை எதையோ இழந்து விட்ட வெறுமை. அவள் கரு தரித்திருப்பதைக்கூட சொல்லியிருக்கலாம். அடுத்தலில் வட்ட வளைவினுள் இருவர் கைகால் கோர்த்து சுழன்று நின்றனர். இருவரும் அடுத்தவர் கால்களை தொட்டிழுத்து ஒருவர் மற்றொருவரை துரத்தி பிடிக்க முயன்றிருந்தனர். ஒருவருக்கொருவர் அகப்பட்டுக்கொள்வர் என்று நினைக்கும் கணம் தப்புத்துக்கொண்டேயிருந்தனர்.

முடிகளை சிலுப்பி விட்டு இளமைக்கான கூர்முலைகள் குலுங்க ஒருகால் தூக்கி ஆடி நின்றாள் இன்னொருத்தி. மயிர் கற்றைகளில் பனி படர்ந்து வெள்ளை மல்லிச்சூடி அவள் அழகில் அவளே மெச்சி தரை நோக்காமல் விண் நோக்கி நின்றாள். கார்த்திகாவை முதல் முறை காணும் பொழுது அவள் தலைமுழுவதும் பிச்சிப்பூ வைத்திருந்தாள். பூ உதிர்வது போல அவள் மூச்சும் சிரிப்பும் சிதறி பறந்து வரும் இருவரும் கூடி முயங்கும் பொழுது. இருவரும் இருமுறை உச்சம் அடைந்தாலொழிய அன்றைக்கு முடியாது. அவளுக்கும் அப்பொழுது கூர் முலைகள். திமிருடனேயிருந்தாள். கடைக்கண்ணால் ஏளனத்துடன் காண்பதற்கு நான் தவம் கிடக்க வேண்டும் என்பது அவள் எண்ணம். அவளது தட்டையான வயிற்றை கார்த்திகா பிளந்த வாயுடன் பார்த்துக்கொண்டிருப்பதை நான் தற்செயலாக கவனித்து விட்டேன். “இப்புடி சிலுப்பி நிண்ணுதான் நீ கொழந்த பெத்துக்கிற , பின்னால சிலுப்ப முடியாது பாத்துக்க” என்றேன் நக்கலுடன். அவள் அதற்கு எரிச்சலான முகத்தை பதிலாக முன்பே தயாரித்து வைத்திருந்தது போல காட்டினாள்.

விடலை ஆணும் பெண்ணும் சண்டையிட அவன் அவளை தூக்கி வீசுகிறான். நரம்புகள் புடைத்த கைகளுக்கிடையில் பெண்ணின் தலையிருந்தது. அவள் அந்தரத்திலிருந்தாள். எதிரில் அதே பெண்ணை தோளில் தூங்கி விளையாட்டாக நின்று கொண்டிருக்கிறான். இரு வரிசைகளின் முடிவிலிருந்த தூணில் டிராகன் போன்றதொரு உருவம் அதன் செதில் வாலால் நின்றிருந்த அடைபட்ட நிலையிருந்த பெண்ணை சுற்றி வைத்திருந்தது. குழந்தை பெற்றுக்கொள்ள நடந்த பேச்சுவார்தையில் கார்த்திகாவை அடித்திருக்கிறான்.

“என்ன எல்லாரும் மலடுனு சொல்ல நீங்க கேட்டுக்கிட்டு தான இருந்தீங்க. இனிமே யாராச்சும் கேட்டா நீங்க இம்பொட்டன்ட் அப்படீனு சொல்லிருவேன்…பாத்துக்கோங்க….என்னால இனி பேச்சு கேக்க முடியாது. எனக்கு வயிறு நிறம்பனும். உங்களால முடியலன வேற யாட்டையும்…..”

அதனை முடிக்கும்முன் நான் அவளை அடித்திருந்தேன். விழுந்தவள் எழும்பும் முன் என் உடம்பு நடுக்கத்தைக்குறைக்க கதவை சாத்திவிட்டு வசந்த கால பூக்களைக்காண சென்றுவிட்டேன். இளஞ்சிவப்பு வெள்ளை மஞ்சள் பூக்கள் இலைகளில்லா மரங்களில் நிறைந்திருந்தன. வசந்த காலம் இல்லையேல் இந்த மரங்கள் பூக்காமல் மலடாய் கிழட்டுக்கிழவிகளைப்போல் நின்றிருக்கும். அன்று முடிவெடுத்தேன் ஒன்றாவது பெற்றுக்கொள்ளலாம் அவளுக்காகவாவது. வேறுயாருடனும் போய் பெற்றுக்கொள்ளக்கூடாதே…

அவள் அந்த கோவக்கார பையன் சிலையின் முன் தங்கியது ஆச்சரியமளிகவில்லை. அம்மாக்களுக்கு அழும் குழந்தைகளை கைவிட மனமிருக்காது. அவை நிதம் அம்மாக்களை தேடிக்கொண்டேயிருக்கின்றன. குழந்தைகள் கோவத்தையும் அழுகையிலேயே காட்டுகின்றன. அதனால் அவள் அந்த சிலை முன் நின்றுவிட்டாள். குட்டி தொப்பையுடன் அந்த சிலை கோப அழுகையில் காலகாலமாக நின்று விட்டது. அவன் அழுதுகொண்டேயிருந்தான் கார்த்திகா போன்ற அம்மாக்களுக்காக. நான் அவள் அருகில் சென்றதும் “நேத்துலருந்து சொல்லணும்னு வச்சிட்டேயிருக்கேன். இந்த அழுவினி பையன பாத்ததும் சொல்லலாம்ணு தொணுது” என்று அந்த சிலைக்காட்டினாள். தலையிலிருந்த வெள்ளைப்பனி அவனிக்கு தொப்பி போட்டது போலிருந்தது. “இந்தாங்க..சர்ப்ரைஸ்….” என்று சிரித்தவாறு பயிலிருந்த ஒன்றை எடுத்துக்காட்டினாள். அந்த சிறிய குச்சி போன்ற நீளமான சாதனத்தின் கண்ணாடிக்கு பின் இரு சிவப்பு கோடுகள் இருந்தன. தலை தூக்கிப்பார்க்கவும் அவனுக்கு எதிரிலிருந்த சிலை ஒரு கைக்கு இரண்டாய் மொத்தம் நான்கும் மேல்புறமும் கால்களில் அதே போல நான்கு குழந்தைகளை கீழும் விசிறியடிக்கும் தந்தையின் கோபாவேச சிலை. கைகால்களில் தினவு புடைத்து நிற்க உதடுகள் இறுகி கண்கள் பிதுங்கி வெளியேறுவது போலிருந்தது. நிச்சயமாக அந்த குழந்தைகள் இறந்துகொண்டிருக்க வேண்டும். ஆனால் அவை சிரித்துக்கொண்டே பறந்திருந்தன. வெறுப்பை உமிழும் தந்தையின் முன் சிரிப்பு ஏளனத்துடன் குழந்தைகள்.

“வருத்தமில்ல. ஆனா சந்தோசமா இருக்கேனானு தெரியாது” என்றேன்.

“ஏன் சந்தோஷமான விசயம் தான?” என்றாள். அவள் முகம் மாறியிருந்தது. சிறுமிக்கான அடையாளங்களற்று பெண்ணானாள்

“ஆமா. ஆனா நாம கொண்டு வர்ர உயிருக்கு ஒரு மதிப்பிருக்கணும். கடமைக்கே பெத்து வளக்கக்கூடாது. இதெல்லாம் நாம முன்னாடியே பேசுனதுதான். திரும்பவும் சொல்றேன் நீ பெத்துக்க ஆனா எனக்கு இஷ்டமில்ல. எங்கிட்ட நீ எதிர்பாக்குற சப்போர்ட் கிடைக்காண்ணு பின்னாடி நீயோ இல்ல பொறக்கப்போற கொழந்தையோ கொற சொல்லக்கூடாது….நான் இப்பொவே அதுக்கு இடங்கொடுக்கலங்குறத நினப்புல வச்சிக்க ”

“உங்க தத்துவத்த நிறுத்துங்க. எவ்வளவோ கேட்டு பொறுத்தாச்சு. இந்த குழந்தைக்காக நிறைய கஷ்டப்பட்டுடேன். நீங்க தடுத்ததாலதான் இவ்வளோ நாள் பண்ணாம இப்போ பண்ணி வந்திருக்கு….அதுக்கும் ஆறு வருசம் காத்திருந்தாச்சு….நீங்க சம்மதிச்சனாலதான் இப்பொவும் பெத்துக்கலாம்னு நானும் மருந்து எதும் சாப்புடல. ரெண்டு மாசம் ஆக போகுது. இனிமே என்னோட வயிறு தாங்குமானு தெரியல. இதுதான் கடைசியா கூட இருக்கலாம். ” என்று கதறினாள்.

“நான் சம்மதிச்சதுதான். எனக்கு அதுக்குண்டான தருணம் வரணும். நீங்க நெனச்ச உடன் அம்மாவாகிறலாம். பால் சொரந்தா போதும். பத்தாததுக்கு உங்களுக்குள்ளயே வளத்து ரத்தமும் சதையுமா ஆக்குறீங்க. நான் வெளிய இருக்கேன் , எனக்கு டைம் வேணும். உண்மையாவே அது என்னோட உயிர்னு நினைப்பு வரணும்”

நான் சொன்னதை அவள் ஏற்றுக்கொண்டாற்போலிருந்தது “எவ்வளவு நாள்…” என்ற கேள்வியுடன் சீறினாள்.

“இன்னும் கொஞ்ச நாள்”

“என்னால முடியாது…” என்று கத்தினாள்.

“சத்தம் போடாத” என்று அவள் கைகளைப்பிடித்து அழுத்தினேன். கண்டிப்பாக வலித்திருக்க வேண்டும். அவள் அமைதியானாள். நான் தனித்து விடப்பட்டேன். தொடர்ந்து சிலைகளை பார்ப்பதாக முடிவெடுத்தேன். அவள் எனக்கு முன் தனியாக நடந்து நீரூற்றைத்தாண்டி சென்று விட்டாள். இது வாழ்நாளில் ஒருமுறை அமையும் தருணம் , திரும்ப வரப்போவதில்லை. சண்டையை பிறகு வைத்துக்கொள்ளலாம் வீட்டிலோ காட்டிலோ என்ற எண்ணமேயிருந்தது.

நீர்த்திவலைகள் தெறித்து நனைத்த சிலைகள் அதனை சுற்றி நின்றன. எல்லா சிலைகளும் ஒற்றை மரத்தின் கீழ் நின்றன. கனத்த மேல் சட்டையை நீரின் குளிருக்கு ஈதமாய் இறுக்கிக்கொண்டு அவற்றைத்தாண்டி படியேறிச்சென்றேன்.

கனத்த கற்படிகள் வெள்ளை நிறத்திலிருந்தன. ஒருபடியேறி நடந்து பின் அடுத்த படியேற வேண்டியிருந்தது. படிகளின் ஒன்றன் மீது ஒன்றாய் அடுக்கியிருந்த வட்டத்தின் விளிம்புகளிலிருந்தன வெண் கற்சிலைகள். நடுவில் குழந்தைகள் ஆண்கள் பெண்கள் உடல்கள் பின்னி பிணைந்த வெண் கல் ஸ்தூபி. வெளிவர துடிக்கும் உள்புக ஏங்கும் உடல்கள் கொண்டு மண்ணிலிரிந்து விண்னோக்கி எழுந்த ஆண்குறி போலிருந்தது. ஒருவரையொருவர் அரவணைத்து கழுத்தைக்கட்டி அமர்ந்த ஆண் பெண் , முதுகு பார்த்து அமர்ந்த கிழவிகள். முதுகொட்டி அமர்ந்த கன்னிகள் , மனைவியை தூக்கி எறியும் ஆண் , மடியில் ஏசுவைப்போல படுத்திருந்த கிழவி மரியாவாகா தாடிக்கிழவன் , சண்ணையிடும் ஆண் பெண் குழந்தைகள்.

கார்த்திகா ஓர் சிலையின் முன் நின்று கொண்டிருந்தாள். அந்தச்சிலை அவளை ஆட்கொண்டிருந்தது. குனிந்து நின்ற அம்மையின் முலைகளை பிடிக்க பிதுங்கி நிற்கும் குழந்தைக்கூட்டம். அருகில் குழந்தைக்கூட்டம் ஏறி சூழ்ந்து அசையவிடாமல் செய்யப்பட்ட அம்மை. பருத்த முலைகள் தொங்கி அதிர்ந்த நிலையிலிருந்தன இரு அம்மைகளுக்கும். இரண்டையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தாள். இருவரும் பார்த்துக்கொண்டனர் ஒன்றும் பேசவில்லை. பூங்காவைச்சுற்றிவிட்டு இறங்கி வந்தனர்.

வெளியேறும் பாதையில் அவன் கண்ணில் தென்பட்டது அச்சிலை. இரு குழந்தைகளை கையில் ஏந்திக்கொண்டு புன் சிரிப்போடு நிற்கும் ஆண். கைகளில் இருக்கும் குழந்தைகள் அதனை மகிழ்ந்து கைகால் முறுக்கிக்கிடந்தன. அந்த ஆண் தந்தைக்குரிய அனைத்து லட்சணங்களும் பொருந்திய உடல் கொண்டு மகிழ்ச்சியே நிறைந்தவனாக குழந்தைகளை ஏந்திக்கொண்டிருந்தான். இருதயம் நின்று காலம் நின்று பிறந்து இறந்ததைப்போல உணர்ந்தேன்.

“இதான் என் கனவுல அடிக்கடி வர்ர சிலை. இப்பொதான் ஞாபகம் வருது. நம்ம குழந்த பெத்துக்கலாம். எத்தன வேணும்னாலும். எனக்கு நம்பிக்க இருக்கு. என்னால சந்தோசமா ஏத்துக்க முடியும்ணு இப்போ தோணுது. நான் தேடுனது என்ன தாண்டுன ஒரு விசயத்துல இருந்து வர்ர அழைப்பு இல்லானா ஒரு அக்னாலெஜ்மெண்ட்” எனக்கெ சொல்லிக்கொண்டது போலிருந்தது. அவள் நான் சொல்வதை உள்வாங்கிகொள்ளவில்லை. அதற்கு சரியென்பது போல பார்த்தாளா என்பது சந்தேகம். ஆனால் நான் சரியென்றே எடுத்துக்கொண்டேன். அன்றிரவு தங்கிவிட்டு அடுத்த நாள் ஸ்டாக்கோமிற்கு கிளம்பிவிட்டோம். ஏழு மாதத்தில் இரட்டையர்கள் நல்லபடியாக பிறந்தனர் மெல்ல வளர்ந்தனர்.

இணையற்ற அன்னையாக குழந்தைகளை வளர்த்தாள். இறக்கும் தருணம் அதைச்சொன்னாள் “எனக்கும் ஒரு கனவு வர்ரதுண்டு. மூக்கணாங்கயிறு கட்டுன அம்மா. அதுக்கு மேலயிருக்குற இரண்டு குழந்தைங்க அத புடிச்சி சவாரி போறாங்க. கொஞ்சநாளா டெய்லி வருது. நீங்க அந்த பார்க்ல இருக்கும் போது சொன்னது சரிதான்” அன்று பின்னரவில் சிறிது கஞ்சி குடித்து மடிந்து படுத்து காலையில் இறந்து போனாள். அவள் மூக்கு ரொம்ப நாளாக சிவந்திருந்ததை அன்றுதான் கண்டேன்.

நான் குழந்தைகளுடன் சந்தோசமாகவே இருந்தேன் கடைசிவரை, ஆனால் அவளும் நானும் எங்களுக்கு இரட்டையர் பிறந்ததற்கு பின்னும் காட்டிக்கொள்ளவில்லை நான் இம்பொட்டண்ட் என்பதை.

உண்மையான வாழ்க்கை.

பிரார்த்தனை – ஸிந்துஜா

ஸிந்துஜா

இன்னும் பனி விலகவில்லை. வைகறை இருட்டின் மீது காதல் கொண்டாற் போல சில்லென்று காற்று தவழ்ந்து வந்தது. மனிதர்களைப் படுக்கையிலிருந்து எழுப்புவதற்காகவென்று மரங்களிலிருந்து தத்தம் இனிய குரல்களுடன் பறவைகள் பறந்து சென்றன. இதெல்லாம் போதாது என்று சொல்வது போல ஒரு வீட்டு வாசல் வழியே எம்.எஸ். சுப்ரபாதம் சொல்வது கேட்டது. தில்லியில் பல நாள்கள் எட்டு மணி எட்டரை மணிக்குதான் பக்கத்து பிளாட்டிலிருந்து சுப்ரபாதம் கிளம்பி வரும்.

தெரு ஆரம்பத்தில் ஒரு வீட்டு வாசலில் கோலம் போட்டு விட்டு உள்ளே செல்லும் ஒரு பெண்ணை சபரி பார்த்தான். கோலத்தின் நடுவில் மஞ்சள் பூசணிப் பூ பளீரென்று மின்னிற்று. கல்யாணத்துக்கு நிற்கும் பெண் போலிருக்கிறது. அந்த வீட்டில்தான் பதினைந்து வருஷம் ஹேமு இருந்தாள்.

அவன் வீட்டை நெருங்கியதும் சபரி ஆட்டோவை நிறுத்தச் சொன்னான். வாசல் கம்பியைப் பிடித்துக் கொண்டு அம்மா நிற்பதைப் பார்த்தான். பையை ஆட்டோவிலிருந்து எடுத்துத் தோளில் மாட்டிக் கொண்டு ஆட்டோக்காரரிடம் பணம் கொடுத்தான். அம்மாவை நெருங்கும் போது அவள் “வராதவன் வரானேன்னு ட்ரெயின்காரனும் சரியான நேரத்துக்கு வந்துட்டானா?” என்று சிரித்தாள். அந்தச் சிரிப்பில் அவர்கள் ஒருவரை யொருவர் பார்த்துக் கொள்ளாத ஒன்பது வருஷ தூரம் தூக்கியெறியப் பட்டது என்று சபரிக்குத் தோன்றிற்று.

“திருஷ்ணாப்பள்ளிக்கு மூணு மணிக்கே வந்தவனை அவுட்டர்லே போட்டான். அப்படியும் வண்டி தஞ்சாவூருக்கு நாலு அம்பதுக்கு டாண்ணு வந்துடுத்து” என்றான் சபரி.

“என் காலத்து இன்ஜின் டிரைவர் போல!” என்ற அம்மா “உள்ளே வா” என்று சொல்லி விட்டுத் திரும்பி உள்பக்கம் நடந்தாள்.

சபரி உள்ளே நுழைந்தான். வாசலைத் தாண்டி நடை ஆரம்பத்தில் இரு பக்கமும் நீண்ட திண்ணைகள் உட்கார்ந்திருந்தன. வலது பக்கத் திண்ணையில் முக்கால் வாசி இடத்தை மூட்டைகள் அடைத்துக் கொண்டிருந்தன. நவரைப் பட்ட நடவு தொடங்கும் சமயத்தில் வேண்டியிருக்கும் உரங்களை அடக்கிய மூட்டைகளாயிருக்கும். இடது பக்கத்துத் திண்ணை ஹோவென்று விரிந்து கிடந்தது. ஒரே சமயத்தில் நான்கு படுக்கைகளைப் போட்டுத் தூங்கலாம். அவன் இடது கையை வைத்துத் திண்ணையைத் தடவினான். வழக்கம் போலக் குளிர்ச்சியும் வழவழப்புமாக அவனைக் கூப்பிட்டது. பகலில் விளையாட்டுத் ‘திடலா’கவும் வெய்யிலோ, மழையோ, பனியோ எதுவாக இருந்தாலும் இரவு அவனைப் போட்டுக் கொஞ்சுமிடமாகவும்தான் அது இருந்தது என்று நேசத்துடன் நினைத்தபடி உள்ளே சற்றுக் குறுகலாக ஓடிய ரேழியைக் கடந்து கூடத்தில் நுழைந்தான்.

கூடத்து ஊஞ்சல் மீது தோள்பையை வைத்தான். வலது பக்கமிருந்த அறை வாசலில் சார்த்தியிருந்த கதவுக்கு முன்னால் அம்மா நின்றாள். அந்த அறைக்குள்தான் அப்பா படுத்துக் கொண்டிருக்கிறார். அவர் கட்டிலை விட்டு எழ முடியாமல் படுத்த படுக்கையாய் அங்கே வாசம் செய்கிறார் என்று அன்று அண்ணாசாமி ஊருக்குத் திரும்பிப் போகுமுன் அவனுக்குப் போன் பண்ணிச் சொன்னான். அவன் அம்மாவை நெருங்கியதும் அவள் கதவைச் சத்தமில்லாமல் திறந்தாள். அவன் பார்வை கட்டில் மீது விழுந்தது. படுக்கையில் ஒரு ஈர்க்குச்சி படுத்திருப்பதைப் பார்த்துத் திடுக்கிட்டான். மை காட்! என்னமாய் உருக்குலைந்து கச்சலாகி விட்ட உடம்பு ! வயல்காடுகளில் ஆஜானுபாகுவாகத் திரிந்து ஆட்களை வேலை செய்யச் சொல்லி விரட்டியடித்த ராஜமய்யரா இப்படி பிரேதமாகப் படுத்துக் கிடக்கிறார்? ராஜமய்யரது கண்கள் மூடியிருந்தன. ஏறி இறங்கும் மார்புதான் உயிரை இழுத்துப் பிடித்திருக்கும் உடம்புக்குச் சாட்சி சொன்னது. ‘தூங்கட்டும்’ என்பது போல் சைகையில் தெரிவித்து விட்டு அம்மா கதவை மூடினாள்.

அவளுடன் சேர்ந்து சபரியும் சமையலறைக்குச் சென்றான்.

“என்னம்மா இப்பிடி ஆயிட்டார் அப்பா?” என்று அவன் தாங்க முடியாது கேட்டான்.

“சொல்றேன் அப்புறம்” என்றாள் அம்மா. அடுப்பைப் பற்ற வைத்துப் பால் குக்கரை ஏற்றினாள். அவனிடம் “பெங்களூர் ஸ்டைலா இல்லே திருவையாத்து ஸ்டைலா நீ இப்ப காப்பி குடிக்கப் போறது?” என்றாள்.

“வென் யூ ஆர் இன் ரோம் யூ மஸ்ட் பீ எ ரோமன்” என்றான் சபரி. “பல் தேச்சிட்டு வந்து காப்பி குடிக்கிறேன்.”

பிறகு “ரொம்ப இளைச்சிட்டியேம்மா” என்று அவள் கையைப் பிடித்துத் தன் கையில் வைத்துக் கொண்டான். “பாரு, எப்படி நரம்பெல்லாம் தெரியறது?” என்று வருத்தமான குரலில் கேட்டான்.

“ஆமா, இப்ப எனக்கு பதினஞ்சு வயசுதான் ஆறது திம்மு திம்முன்னு இருக்கறதுக்கு!” என்றாள். “நீயும் கூடத்தான் பாக்க சகிக்காம இருக்கே. ராஜா மாதிரி எப்படியெல்லாமோ இருந்திருக்க வேண்டியது..ஹூம், நாமென்ன கடவுளா நினைச்சதை நினைச்சபடி நடத்தி முடிக்க?” என்றாள் அம்மா.

அவள் பேச்சை எங்கே நகர்த்துகிறாள் என்று அவனுக்குத் தெரியும். “சரி, நான் போய்ப் பல் தேச்சிட்டு வரேன்” என்று ஊஞ்சலை நோக்கி நடந்தான். அவள் பெருமூச்சு விட்டாள். கையில் பிடிபடாமல் பறக்கப் பார்க்கும் நாகணவாய். காப்பிப் பொடியை டப்பாவிலிருந்து எடுத்து ஃபில்டரின் அடிப்பாத்திரத்திற்கு மேலே இருந்த வட்டமான சிறு சல்லடையில் போட்டு அதன் மேலே வெந்நீரை ஊற்றினாள். அப்பாவுக்கும் பிள்ளைக்கும் காப்பி திக்காக இருக்க வேண்டும். எவ்வளவோ விஷயங்களில் இருவருக்கும் ஒரே குணம். விருப்பு வெறுப்பு எல்லாவற்றிலும் இருவருக்கும் அப்படியொரு பொருத்தம். ஒன்றைத் தவிர. சபரி ஹேமுவைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள அவர் ஒப்புதல் தெரிவிக்க மறுத்து விட்டார்.

சபரி தாழ்வாரம் வழியே வீட்டின் பின்புறமிருந்த தோட்டத்தை அடைந்தான். கண்ணை இறுக்கி மனசில் பரவசத்தை ஊட்டும் பச்சை சுற்றிலும் நிரம்பியிருந்தது. துணி துவைக்கும் கல்லில் இரண்டு தையல் சிட்டுக்கள் அவைகளும் பச்சையில் மயங்கியனவாகத் தோற்றம் தந்து உட்கார்ந்திருந்தன. அவனைப் பார்த்ததும் கொண்டையை நாலைந்து முறை ஆட்டி ‘கீ’ ‘கீ’ என்று குசலம் விசாரித்து விட்டுப் பறந்தன. ஹேமுவுக்கும் இந்தப் பச்சை மரங்கள், செடி கொடிகள் மீதும் பறவைகள் மீதும் அப்படி ஒரு ஈர்ப்பு. அவளை நினைக்கும் போது மழைநீர் ஒற்றிய சாயங்காலத்தில் திடீரென்று சிரித்துக் கொண்டு வானில் வளைய வரும் வில், காவேரியாய்ப் புரளுகிறோம் என்ற கர்வத்தில் அலைகளுடன் பொங்கி ஓடும் கணபதி அக்கிரகார ஆறு, ஐயாறப்பர் சன்னதியில் இருட்டை அண்ட விடாது மினுங்கிக் கொண்டிருக்கும் ஆளுயர எண்ணெய் விளக்கு இவையெல்லாம் ஞாபகத்துக்கு வருகின்றன.அவளும் இப்போது ஓடிச் சென்ற சிட்டுக்களைப் போலத்தான் பறந்து போய்விட்டாள். சிட்டுக்களைப் போவென்று விரட்டாத மாதிரிதான் சபரி ஹேமுவிடமும் இருந்தான். ஆனால்?

பற்பசை ஈஷிக் கொண்டிருந்த பிரஷ்ஷை வாயில் வைத்துக் கொண்டு கிணற்றிலிருந்து நீரை எடுத்து அங்கு கிடந்த வாளியில் ஊற்றினான். பற்களைத் தேய்த்து விட்டு வாயைக் கொப்புளித்தான். வாளியில் மிதந்து கொண்டிருந்த செம்பை நீரில் முக்கி கைகளிலும் கால்களிலும் விட்டுக் கொண்டான். இரு கைகளாலும் நீரை அள்ளி முகத்தில் அடித்துக் கொண்டான். பாதி குளித்து விட்ட முயற்சியில் உடல் சூடு இழந்து மலர்ச்சியை ஏற்படுத்திவிட்டதாக உணர்ந்தான்.

அவன் முகத்தைக் கையில் வைத்திருந்த டவலால் துடைத்துக் கொண்டே சமையலறைக்குச் சென்றான். அம்மா ஃபில்டரின் மேல் மூடியை வைத்து ஃபில்டரைத் தட்டி டிகாக்ஷன் இறக்கிக் கொண்டி
ருந்தாள். அவனைப் பார்த்தும் காப்பி கலந்து கொடுத்தாள்

அவன் ஒரு வாய் அருந்தி விட்டு “ஆஹா பிரமாதம்” என்றான். அம்மா அதைக் கேட்டுச் சிரித்தாள்.

“அப்பாவுக்குக் கொண்டு போய்க் கொடுக்கட்டா?” என்று கேட்டான்.

“அப்பாவுக்கா? அவருக்குக் காப்பியை நிறுத்தி ரெண்டு மாசமாச்சு” என்றாள் அம்மா.

“ஏம்மா?”

“திடீர்ன்னு ஒரு நாள் வாண்டாம்னுட்டார். காப்பிக்குப் பதிலா ஒரு வாய் ஹார்லிக்ஸ் குடிப்பார். சாப்பாடும் இப்ப ரொம்ப கொறஞ்சு போயாச்சு. எல்லாம் கரைச்சுக் கொடுக்கறதுதான். இட்லி பண்ணினாக் கூட மிக்சிலே அரைச்சு ஜூஸ் கொடுக்கற மாதிரி கொடுத்திண்டு இருக்கு. சாப்பாடுன்னா மோர் சாதம்தான். அதையும் கரைச்சுதான் கொடுக் கறேன். லேசா காரம் இருந்தாக் கூட பீச்சிண்டு அடிக்கறது. டாக்டர் வந்து பாத்துட்டு காரமில்லாம கஞ்சி மாதிரி வாட்டரியா கொடுங்கோ, ஜீரண சக்தியும் குறைஞ்சாப்பிலே இருக்குன்னுட்டார்.”

“ஏன் திடீர்னு இப்படி?”

“நீ லண்டனுக்குப் போய் நாலைஞ்சு மாசம் ஆனப்போ இவர் படுக்கையிலே விழுந்தாச்சு. அன்னிலேர்ந்தே இந்தக் கஷ்டகாலம் ஆரமிச்சிடுத்தே” என்றாள் அம்மா.

சபரிக்கு அண்ணாசாமி போன் பண்ணிய அன்றைய தினம் ஞாபகத்தில் தெளிவாக இருந்தது. அப்போது அவன் படுக்கையில் இருந்தான். வெளியே லண்டன் மழை தூறிக் கொண்டிருந்தது. அந்தக் குளிர் நசநசப்பும் ஞாயிற்றுக் கிழமையும் அவனைச் சோம்பேறித்தனத்தில் ஆழ்த்திக் காலை எட்டு மணிக்குக் கூடப் படுக்கையிலிருந்து எழ வைக்கவில்லை. இன்னும் ஒரு மாதத்தில் இந்தியாவுக்குத் திரும்பிப் போக வேண்டும். அவனுடைய ஆறு மாத டிரெய்னிங் காலம் முடிந்து விடும்.

கைபேசி அடித்த போது எடுத்துப் பார்த்தான். தெரிந்த நம்பராக இல்லை.

“ஹலோ! சபரி ஹியர்.”

“சபரி, நான் அண்ணாசாமி பேசறேன்டா. எப்படியிருக்கே? இன்னிக்கிக் காத்தாலேதான் எங்க குலதெய்வப் பிரார்த்தனைன்னு திருஷ்ணா
பள்ளிலேந்து காரை எடுத்துண்டு வீரசிங்கம்பேட்டைக்கு வந்தேன் அம்பாளுக்கு அபிஷேகம் முடிஞ்சதும் பதினோரு மணிக்கு இங்கே ஆத்துக்கு வந்தேன். சித்தப்பாவையும் சித்தியையும் கூடவே தரிசனம் பண்ணிட்டுப் போலாமேன்னு” என்ற அவனது இயல்பான குரல் அவனுக்கு முதலில் எந்த சந்தேகத்தையும் எழுப்பவில்லை. அண்ணா சாமி அவனுடைய பெரியப்பாவின் பையன்.

“எங்கே ஆத்திலேர்ந்தா பேசறே? வேறே என்னமோ சத்தம்லாம் கேக்கறதே?”

“இங்கே ஆஸ்பத்திரிக்கு வந்திருக்கோம்.”

“ஏன்? யாருக்கு என்னாச்சு?” என்று அவன் பதறியபடி படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தான்.

“நான் ஆத்துக்கு வந்து சித்தே நாழி ரெண்டு பேர் கிட்டேயும் பேசிண்டு இருந்தேன்.அரை மணி கூட ஆகலே. திடீர்னு சித்தப்பாக்குத் தலை கிறுகிறுத்து நடக்க முடியாம போயி எல்லாரும் தஞ்சாவூருக்கு ஓடி வந்தோம். மீனாட்சியிலேதான் அட்மிட் பண்ணியிருக்கு. பி.பி., சுகர்லாம் எகிறிக் கிடக்குங்கறா. திடீர்னு கொலஸ்ட்ரால் வேறே ரொம்ப ஜாஸ்தியா இருக்காம். அப்பப்போ பாக்காம விட்டுட்டுதுனாலே இப்ப இப்படி ஆயிடுத்துங்கறார் டாக்டர்” என்று அண்ணாசாமி சொல்லும் போது சபரிக்கு உடம்பு ஒரு தடவை நடுங்கி விட்டுப் பழைய நிலமைக்குத் திரும்பியது.

“இப்ப எப்படி இருக்கார்? நான் இன்னிக்கிக் கிளம்பி வரட்டா?”

“இரு. அம்மாகிட்டே கொடுக்கிறேன். நீ அடுத்த மாசம் திரும்புவேன்னு உங்க ஆபீஸிலே கேட்டதுக்கு சொன்னா. இன் பாக்ட் உன்னோட போன் நம்பரையே நான் உன் ஆபீஸ்லேர்ந்துதான் வாங்கினேன்.”

அம்மா அவனிடம் நேரடியாக “நன்னாயிருக்கு. நீயென்ன மாயவரத் திலேயா இல்லே கும்பகோணத்திலேயா இருக்கே பஸ் பிடிச்சு உடனே கிளம்பி வரதுக்கு? டாக்டர் வாயிலே ஐயாரப்பர் வந்து உக்காந்து உயிருக்கு ஒண்ணும் ஆபத்தில்லேன்னு சொல்லிட்டுப் போயிட்டார். ஒரு வாரம் இங்கே அப்பா இருக்கணும். அப்பா ஆத்துக்குத் திரும்பி வரவரைக்கும் அண்ணாசாமி கூடவே இருக்கேங்கறான். நீ கிளம்பி வந்தா ஆஸ்பத்திரி வாசல்லே வேப்பமர நெழல்லே உக்காந்துண்டு போறவா வரவாளோட கவலை மூஞ்சிகளைப் பாத்துண்டு இருக்கலாம்” என்றாள். அப்பா ! என்ன ஒரு நிதானம்! ஒரு இம்மி அளவு பயம், நடுக்கம் எதுவும் தெரிவிக்காத குரல்!

அடுத்து வந்த நாள்களிலும் அவன் அவளுக்குப் போன் போட்டுப் பேசும் போதெல்லாம் அவனுக்கு எதெது எவ்வளவு தெரிய வேண்டுமோ, அவ்வளவு தெரிஞ்சால் போதும் என்பது போலப் பேசுவாள். அவள் சொல்வதை வைத்து அவன் மேற்கொண்டு எதுவும் கேட்க விடாத மாதிரி அவள் பேச்சு இருக்கும். அப்பா ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனது, அவர் சாப்பிடும் மாத்திரை, மருந்துகள், டாக்டர் வந்து போனது, அவரை வந்து பார்த்து விட்டுப் போன உறவு ஜனம் என்று ஏதோ நிறைய விஷயங்களை சொல்லி விட்டது போன்ற பாவனையை ஏற்படுத்தி விடுவாள். அவர் காப்பி சாப்பிடுவதை நிறுத்தியது, நீர் ஆகாரமாய் சாப்பிடுவது, உடல் இவ்வளவு மோசமாகத் தேய்ந்து போய்விட்டது பற்றியெல்லாம் இன்றுதான் அவன் தெரிந்து கொண்டான். தொலைவில் தனியாக இருக்கிறவன் கவலையில் கிடந்து மன்றாடக் கூடாது என்று நினைத்திருப்பாள்.

அம்மா கையில் ஹார்லிக்ஸ் எடுத்துக் கொண்டாள். இருவரும் அப்பாவின் படுக்கைக்குச் சென்றார்கள். ராஜமய்யர் விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவனைப் பார்த்ததும் அவர் முகத்தில் சந்தோஷம் தோன்றுவதை சபரி கவனித்தான். கையை மெல்ல அசைத்து அவனைத் தன் பக்கம் வரச் சொன்னார். அம்மா அவன் கையில் ஹார்லிக்ஸ் தம்ளரைத் தந்தாள். சபரி அவர் ஹார்லிக்ஸ் குடிப்பதற்கு உதவினான்.அவர் மிகவும் மெல்லிய குரலில் அவனிடம் ஏதோ கேட்டார். சற்றுக் குழறலாய்த் தொனித்த வார்த்தைகளை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

“‘நீ எப்போ வந்தே? சௌக்கியமா இருக்கியான்னு கேக்கறார்” என்றாள் அம்மா.

அவன் சற்று உரத்த குரலில் “நா நன்னாயிருக்கேம்ப்பா. உங்களுக்கு எப்படி இருக்கு? ரொம்ப மோசமாயிருக்கேளே?” என்றான்.

அம்மா சபரியிடம் “நீ குரலை ஒசத்திப் பேச வேண்டியதில்லே. உன் உதடைப் படிச்சு நீ கேக்கறதைத் தெரிஞ்சுப்பார்” என்றாள்.

அப்பா அவனுடைய வலது கையைப் பற்றித் தன் கையுடன் கோர்த்துக் கொண்டார். வாடிய பூ தன் கையை உரசுவது போல அவனுக்கு இருந்தது.

‘நீ ஏன் இப்படி இளைச்சுப் போயிருக்கே? ஒழுங்கா சாப்பிடறதுக்கு என்ன? லண்டனிலேந்து நேரே இங்கே வந்தியா? எப்போ திரும்ப ஊருக்குப் போய் வேலையிலே ஜாயின் பண்ணனும்? எனக்காக நீ இங்கே தங்க வேண்டாம். ஆனா நாலஞ்சு நாள் இருந்தேன்னா மரூருக்குப் போய் நிலத்தைப் பாத்துட்டு வா. திருநாவு கணக்கெல்லாம் சரியாய் எழுதி வச்சிருக்கானான்னு ஒரு பார்வை பாத்துட்டு வா. அவன் நல்லவன்தான். ஆனா யாரும் பாக்கலே கேக்கலேன்னா சோம்பேறியா ஆயிடுவான். எழுத வேண்டிய செலவை மறந்து போயிடுவான், அதுக்குத்தான் சொல்றேன்’ என்று அவரது கேள்விகளையும் உத்திரவுகளையும் அம்மா மொழிபெயர்த்துக் கொண்டே இருந்தாள்.

அவனும் அம்மாவும் அவரிடமிருந்து வெளியே வந்ததும் சபரி அம்மாவிடம் “ரொம்ப தெளிவாதானே இருக்கார்” என்றான் சற்று உற்சாகத்துடன்.

“எல்லாம் உன்னைப் பாத்த சந்தோஷம்தான்” என்றாள் அம்மா. “ஆனா இன்னிக்கே இன்னொரு சமயம் வேறே மாதிரி அவதாரத்தில் இருப்பார். உனக்கு அப்ப அவரைப் பாத்தா வாழ்க்கையே வெறுத்துப் போயிடும்.”

சபரி அவளை உற்றுப் பார்த்தான்.

“அவர் மனசிலே என்ன ஓடறதுன்னு யாருக்கு தெரியறது? கத்துவார். கூப்பாடு போடுவார். வாயிலிருந்து அவ்வளவு நாத்தமான வார்த்தைகள் நாராசமா வரும். கட்டில்லேர்ந்து கீழே விழறதுக்கு அப்படி ஒரு ஆகாத்தியம் பண்ணுவார். அப்போல்லாம் எதுத்தாப்பிலே நிக்கறது யாருன்னு தெரியாது. என்னோட அப்பாவைக் கூட்டிண்டு வாடின்னு என்னைப் பாத்து சத்தம் போடுவார்.செத்துப் போனவாளைக் கொண்டு வர நான் என்ன கிருஷ்ண பரமாத்வாவா இல்லே என் மாமனார்தான் பரீக்ஷித்தா?”

“இப்படி தினமும் நடக்குமா?”

“ஆமா. அவரைப் பாசத்தோட பரிவோட பாக்க வராளே சொந்தக்காராளும் சினேகிதாளும், அப்ப அவாளைத் துச்சமாப் பார்த்து அவர் காரி உமிழ்றது இருக்கே அது எல்லார் மனசையும் குத்திப் பிடுங்கிடும். எப்படி இவரோட இருக்கேன்னு பயத்தோட, ஆச்சரியத்தோட மரியாதையோட கனிவோட என்னைப் பாத்துட்டுப் போவா. இவ்வளவுக்கும் அவருக்கு ஒண்ணும் கல்லு மனசு இல்லே, அவாளைக் காயப்படுத்தணும்கிற வெறி எதுவும் இல்லேன்னு அவாளுக்கு ரொம்ப நன்னாவே தெரியும். ஆனா ஒரு தடவை வந்தவா ரெண்டாவது தடவை வந்தான்னு இதுவரை இருக்கலே. ஒரு நா காத்தாலே லால்குடியிலேந்து ஹைமவதிப் பாட்டி வந்தா. ‘தொண்ணூறு வயசுக்கு எதுக்கு இப்பிடி நீங்க டிரெயினிலேயும் பஸ்சிலேயும் அவதிப்பட்டுண்டு வந்தேள்?’ன்னு கூட நான் கேட்டுட்டேன். “பாக்கணும் போல இருந்துதுடி. நா தூக்கி வளர்த்த பிள்ளையாச்சே’ன்னா. கண்ணுலே கரகரன்னு ஜலம் ஊத்தறது. கட்டிலுக்குப் பக்கத்திலே போய் கிழவி நின்னா. இவர் இமைய அசைக்காம அவளையே முறைச்சுப் பாத்துண்டு இருக்கார். அவள் பேசற எதையும் கேக்கறதுக்குத் தனக்குக் காதே இல்லாத மாதிரி ஒரு முக்கல் முனகல் இல்லாமே முறைச்சிண்டு இருக்கார். அஞ்சு நிமிஷம் ஆச்சு. பத்து நிமிஷம் ஆச்சு. அப்புறம் வேறே பக்கம் திரும்பிப் படுத்துண்டு அசையவே இல்லே.”

சபரிக்குத் திகைப்பாக இருந்தது. ஏதோ மாந்தரீகத்தின் பிடியில் சிக்கிக் கொண்டு தவிப்பவர் போல ஆகி விட்டாரா? அவரது உடல்நிலமையின் சீரழிவு அவர் மனதை ஆட்டிப்படைக்கும் விஷயங்களில் பொதிந்தி ருக்கிறதா? என்ன மாதிரியான விஷயங்கள் அவை?

அம்மா “சரி. நீ போய்க் குளிச்சிட்டு வா. நான் தோசைக்கு அரைச்சு வச்சிருக்கேன். சாப்பிட்டு விட்டு கொஞ்சம் தூங்கு. ராத்திரி பூரா முழிச்சிண்டு கவலைப்பட்டுண்டு வந்திருப்பே” என்று சமையலறையை நோக்கிச் சென்றாள். அவன் குளித்து விட்டு சுவாமி கும்பிட பூஜை அறைக்குச் சென்றான். சுவாமி மாடத்தில் குத்து விளக்கு அரை வெளிச்சத்தில் ஆடிக் கொண்டிருந்தது. அவன் மர பீரோவுக்குப் பின்னால் இருந்த சுவிட்சை அமுக்கினான். விளக்கு எரியவில்லை. ஃபியூஸ் ஆகி விட்டது போல என்று நினைத்துக் கொண்டே சுவாமி கும்பிட்டான். டிபன் சாப்பிட்டு முடித்ததும் மாடியில் இருந்த அறைக்குச் சென்று படுக்கையில் விழுந்தான். படுத்த உடன் தூங்கியும் விட்டான்.

திடீரென்று பலத்த சத்தம் கேட்டு விழிப்பு ஏற்பட்டது. பிளிறலைப்
போன்று தாங்க முடியாத சப்தம். அவன் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து கடிகாரத்தைப் பார்த்தான். இரண்டு மணி நேரத்துக்கும் மேல் தூங்கி விட்டது தெரிந்தது. கீழே சென்றான். அப்பாவின் அறையிலிருந்துதான் சத்தம் வந்து கொண்டிருந்தது. திறந்திருந்த கதவின் வழியே அவன் உள்ளே பார்த்தான். அம்மா அப்பாவை அமுக்கிக் கட்டிப் பிடித்துக் கொண்டிருக்க அவர் திமிறி அவளிடமிருந்து விடுபட முயன்று கொண்டிருந்தார். அவர் உடம்பில் ஒரு பொட்டுத் துணி இல்லை.

“ஏ முண்டே, ஏண்டி இங்கே வந்து என் உயிரை எடுக்கறே? என் டிரெஸ்ஸெல்லாம் அவுத்துப் போட்டு… இந்த வயசிலே உனக்கு இவ்வளவு ஆசையா? அவ்வளவு ஆசை இருந்தா யாராவது சின்னப் பயலை இழுத்துப் பிடிச்சிண்டு அலைய வேண்டியதுதானேடி? கொஞ்ச நாள் என்னைப் பாத்துக்கன்னு ஒரு கிணடனைக் கூட்டிண்டு வந்து ஆத்திலே வச்சிண்டிருந்தே. அவன் எதுக்கு ஓடிப் போயிட்டான்னு தெரியலே. என்னை இப்படி டிரெஸ் இல்லாம பாக்க உனக்கு வெக்கமா
இல்லியா? மானங் கெட்ட கழுதை. நீ இப்பிடி இருக்கறதுனாலேதான் ஒரு சொந்தம் என்னை எட்டிப் பாக்கறது இல்லே. எனக்கு இந்த அவமானமெல்லாம் தேவையா? கடவுளே, என்னை சீக்கிரம் கொண்டு போயிடேண்டா. இவ பாட்டுக்கு இவ இஷ்டப்படி ஊர் மேலே திரியட்டும். அடியேய். என் மேலே கை வச்சேன்னா தெரியும். அப்பிடியே முறிச்சுப் போட்டுடுவேன். ஏய், ஏய் என்ன நான் சொல்லிண்டே இருக்கேன். நீ என் கையை அமுக்கிக் கீழே தள்ளிண்டு இருக்கே… நாயே!”

அம்மா அவர் கத்துவது எதுவும் தன் காதில் விழாதது போல அவரது இடுப்பில் கையை வைத்துத் தூக்கி வேட்டியை இடுப்போடு சுற்றிக் கட்டினாள். அவர் திமிறுவதை கொஞ்சமும் லட்சியம் செய்யாது இரு கைகள் வழியாக சட்டையைப் போட்டு விட்டாள். அவர் கால்களை அசைத்துத் திமிருக்கையில் அவை அவளது உடம்பில் உதைகளாக விழுந்தன.

சபரி கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே புகுந்தான் சத்தம் கேட்டு அம்மா நிமிர்ந்து பார்த்தாள். அவனைக் கண்டதும் அவள் முகம் இறுகிற்று. கடுமையைத் தெரிவிக்கும் முகத்துடன் அவள் கண்களாலேயே அவனை வெளியே போகச் சொன்னாள். சபரி தயங்கியபடி காலைப் பின் வைத்தான். கதவை சத்தமில்லாமல் சாத்தினான். கூடத்து ஊஞ்சலில் போய் உட்கார்ந்து கொண்டான். அவனால் சற்று முன் கண்ட காட்சியையும் கேட்ட நாராசங்களையும் நம்ப முடியவில்லை. மூன்று மணி நேரத்துக்கு முன்னால் அவனுடன் அன்பும் பரிவும் சாந்தமும் தெளிவும் நிரம்பிய உடல் மொழிகளுடன் உரையாடியவரையா இப்போது பார்த்தோம் என்று அதிர்ந்தான்.

அவனருகில் அம்மா வந்து நின்றாள். அவள் முகத்தில் களைப்பும் சோர்வும் தெரிந்தன. கலைந்து முன் நெற்றியில் விழுந்திருந்த தலை மயிரை ஒதுக்கிக் கொண்டே அவனருகில் அமர்ந்தாள்.

அவன் அவள் கையைப் பற்றி “என்னம்மா இப்படி ஆயிட்டார்?’ என்று கேட்டான் நடுங்கும் குரலில்.

“ரெண்டு மாசமா இப்பிடித்தான் போயிண்டிருக்கு.”

“யாராவது ஆள் போட்டு இந்த க்ளீன் பண்ணற வேலையை எல்லாம் பாத்துக்கச் சொல்லலாமே? நான் தஞ்சாவூருக்குப் போய்ப் பாத்து கூட்டிண்டு வரேன் இன்னிக்கி” என்றான் சபரி.

“அந்தக் கந்திரகோலமெல்லாம் ஆயாச்சு” என்று அம்மா பெருமூச் செறிந்தாள். “டாக்டர் சௌரிதான் கூட்டிண்டு வந்தார். வந்தவனுக்கு நாப்பது வயசு இருக்கும். ஈச்சங்குடிலே விவசாயம் பாத்துண்டு இருந்தவன். இப்பதான் மழையே அத்துப் போயி தண்ணிக்கு வெளி லேர்ந்து ஓடி வர்ற காவேரியைத்தானே நம்பிண்டு கிடக்கு ஜனங்கள். நாலு மாசம் உதவிக்கு இருக்கட்டும்னு அழச்சிண்டு வந்தார் டாக்டர். வந்தவன் பலசாலி. உங்கப்பாவைப் பட்டுப் போலத் தூக்கி இறக்கி ஏத்தி அப்பிடி சிஷுரூட்சை பண்ணினான். எண்ணி அஞ்சு நாள்தான். கொஞ்ச நாழிக்கு மின்னே கிண்டன்னும் எதனாலேயோ ஓடிட்டான்னும் கத்தி னாரே! அவனை இருக்க விடாம அடிச்சுத் துரத்தினது இவர்தான். பகல்பூரா தூங்கிண்டுதான் இருப்பார். இன்னிக்கி என்னமோ அதிசயம் ஒரு பொட்டுத் தூக்கம் இல்லே. நேத்தி ராத்திரி பூரா தூங்கவே இல்லை. தினம் ராத்திரி தூங்காம இந்த மாதிரி நாராசமா கத்திண்டிருப்பார். அதனாலே பகல்லே அவர் தூங்கிண்டு இருக்கறச்சே அவனைக் காய்கறி வாங்க, மளிகைக்குப் போகன்னு அனுப்புவேன். ரொம்ப ஒத்தாசையா இருந்தான். வந்து அஞ்சாம் நாள் என்கிட்டே வந்தான். அம்மா, இந்த அஞ்சு நாளா உங்க கிட்டே நான் வந்து சொல்லலே. நீங்க படற கஷ்டம் போறாதான்னு என் வாயைத் தச்சுப் போட்டுக்கிட்டு கிடந்தேன். ஆனா இப்ப வேறே வழியில்லே. போறதுக்கு முன்னாலே மகாலட்சுமி நீங்க உங்க கிட்டே சொல்லிடுப் போகணும்னு தோணிருச்சு. அய்யாஎன்னைப் பாத்து பேசாத பேச்செல்லாம் பேசுவாரு. சரி வலியிலே பேசறாருன்னு விட்டிருவேன். அப்புறமா என் குழந்தைகளை என் பொண்டாட்டியைன்னு எல்லோரையும் சபிப்பாரு. என்னைத் தொடாதேடா பாவின்னா நீ கேக்க மாட்டேங்கிறே, உன் குடும்பம் என் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிட்டு நாசமாய்ப் போகன்னு கத்துவாரு. உம்பசங்க ஒருத்தனும் உருப்படமாட்டாங்கன்னு சாபம் கொடுப்பாரு. நீயும் உன் பொண்டாட்டியும் இந்த பிராமணனை இப்படிப் போட்டு நீ கொல்லு றதுக்கு தெருவிலேதான் போய் நிக்கப்போறீங்கடான்னு என் மேலே எச்சியைத் துப்புவாரு. ரெண்டு நாளைக்கி மின்னாலே என் மூத்த மகன் வேலைக்குப் போனான். ரோடு ஓரமா நடந்து போனவனை ஒரு மோட்டார் சைக்கிள்காரன் அடிச்சுக் கீழே தள்ளிட்டு ஓடிட்டான். ஆஸ்பத்திரிக்குப் போயி கட்டுப் போட்டுக்கிட்டு வந்து வீட்டிலே உக்காந்திருக்கான். பத்து நாள் நகரப்பிடாதுன்னு டாக்டர் சொல்லிட் டாராம். செலவுக்கு செலவு. மனசுக்கு நிம்மதி இல்லே. பத்துப் பதினஞ்சு நாள் கூலி போயிருச்சு. அய்யா திட்டிதான் இப்பிடி ஆச்சுன்னு நான் சொல்லலே. ஆனா அந்த நினைப்பு தானா வந்து குத்திகிட்டே இருக்குன்னு சொல்லி அழுதான். நான் என்னத்தைப் பண்ணறது? அஞ்சு நாள் சம்பளத்தோடு கூட ஒரு ஐநூறு ரூபாய் வச்சுக் கொடுத்தேன். அதுக்கப்புறம் யாரையும் இவர் வரவிட மாட்டார்னு நானே செய்ய ஆரமிச்சிட்டேன்” என்றாள் அம்மா.

சபரி “நான் இங்கே இருக்கற வரைக்கும் இதையெல்லாம் நானே செய்றேம்மா” என்றான்.

அவள் மறுத்துத் தலையை ஆட்டினாள். “உங்கிட்ட சொல்லித்தான் ஆகணும். ஹேமுவை நீ கல்யாணம் பண்ணிக்க விடாம தடுத்தி நிறுத்தினது தான் செஞ்ச பெரிய பாவம்னு அவருக்குள்ளே ஓடிண்டு இருக்கு. ஒரு தடவை என்கிட்டே சொல்லி அழுதுட்டார். நடக்கறது தானே நடக்கும். நீங்க நிறுத்தாட்டா வேறே யாராவது வந்து தடுத்து நிறுத்தியிருப்பா. ஒருத்தன் பொண்டாட்டியை இன்னொருத்தன் கட்டிக்க முடியாதுன்னு தெரியாமலா சொன்னா?ன்னேன். அவருக்கு சமாதான மாகலை. அப்படீன்னா சபரிக்குன்னு பொறந்தவளை அவன் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கான்னார். என்ன பதில் சொல்றது?” என்று சிரித்தாள். உயிரற்ற அந்தச் சிரிப்பை அவனால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை.

அன்று மாலை சபரி ஐயாறப்பர் கோயிலுக்குப் போனான். சுவாமி சன்னதியில் அதிகக் கூட்டமில்லை. தரிசனத்தை முடித்து விட்டு அம்மன் சன்னதிக்குச் சென்றான். தர்ம சம்வர்த்தினி அம்மன் சர்வாலங்கார பூஷிதையாய் நின்றாள். அன்று அஷ்டமி என்று கூட்டம். நல்ல நாள் அல்ல என்று மக்கள் ஒதுக்கி விட்ட அஷ்டமியன்று அம்மன் திருமணம் செய்து கொள்ளும் வைபவத்தைக் காணவே கூட்டம். எல்லா நாளும் நல்ல நாளே என்று சிரித்துக் கொண்டு நின்ற அம்மனிடம் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஒவ்வொரு தினமும் நல்லதினமாக ஆகக் கடாட்சம் புரியுமாறு வேண்டிக் கொண்டான். பிறகு கடைத் தெருவுக்குப் போய்ப் பழங்கள் காய்கறிகள் வாங்கினான். வரும் வழியில் ஒரு எலெக்ட்ரிக் ஷாப்பில் பல்பு வாங்கிக் கொண்டான். வீட்டுக்குள் நுழைந்த போது வீடு அமைதியாக இருந்தது. அப்பாவின் அறைக்கதவை மெல்லத் திறந்து பார்த்த போது அவர் கண்களை மூடியபடி படுத்திருந்தார். வலது கால் லேசாக ஆடிக் கொண்டிருந்தது. காமிரா உள்ளில் அம்மா ஏதோ சுலோகம் சொல்லும் குரல் கேட்டது. முகம் அலம்பி விட்டு தலை வாரிக் கொள்ள அங்கே வந்திருப்பாள் என்று சபரி நினைத்தான். அவன் கையி லிருந்த பைகளை சமையல் அறைக்குள் சென்று வைத்து விட்டு பூஜை அறைக்குச் சென்றான். அம்மா இன்னும் வந்து விளக்கேற்றாததால் வெளி வெளிச்சத்தையும் மீறி அறையினுள் இருட்டு குடியிருந்தது.

இருட்டில் லேசாகத் தடுமாறிக் கொண்டு போய்க் கை எட்டும் தூரத்தில் உயரே தொங்கிக் கொண்டிருந்த ஹோல்டரில் பல்பைச் சொருகினான். இரண்டு மூன்று தடவை முயற்சித்த பின் அது சரியாக உட்கார்ந்து கொண்டது. அவன் மர பீரோவை நெருங்கினான். அதன் பின்புறம் கையை நுழைத்து சுவிட்சைத் தேடினான். அப்போது அறையுள் ஸ்லோகக் குரலுடன் அம்மா நுழைந்தாள்.அவன் அவளை அந்த இருட்டில் கலவரப்படுத்த வேண்டாம் என்று பீரோவின் பின்னே நகர்ந்து நின்றான்.

அம்மா சுலோகத்தைத் தொடர்ந்து கொண்டே சுவாமி மேடையில் இருந்த விளக்கில் எண்ணெய் ஊற்றி அங்கிருந்த தீப்பெட்டியை எடுத்தாள். விளக்கேற்றினாள். பழக்கப்பட்ட இருட்டு என்று சரளமாக அவள் காரியம் செய்கிறாள் என்று சபரி நினைத்தான். அப்போது அவள் குரல் நின்று விட்டதால் சுலோகம் முடிந்து விட்டது போல என்று சபரி நினைத்தான். திடீரென்று அம்மாவின் குரல் கேட்டது. “தாயே புவனேச்வரி. இப்பிடி வாய் விட்டுக் கேக்க வச்சிட்டியேன்னு நான் அழலை. நானும் தினமும் உன்கிட்டே மன்னாடிண்டுதான் இருக்கேன். இந்த மனுஷன் படர பாடு அவராலே தாங்கிக் கொள்ளவே முடியாதபடி இருக்கே. நீதான் கருணை காட்டணும், மனசு வக்யணும். சீக்கிரம் அவரைக் கொண்டு போயிடும்மா. அதை நான் தாங்கிண்டுடுவேன். ஏன்னா எனக்கு அப்புறம் அவரைப் பாத்துக்க யாரும் வரமாட்டா. வந்தாலும் அவரைப் பாத்துக்க அவர் விடமாட்டார். அப்புறம் அவருக்கு உயிரோடேயே நரகம்தான். அதை என்னாலே நினைச்சக் கூடப் பாக்க முடியலே. சர்வேஸ்வரி நீதான் எல்லோருக்கும் நல்லது பண்ணறவ. இவரை சீக்கிரம் நாளேக்கே கூட கூட்டிண்டு போயிடு.”

அம்மா விசும்பும் சத்தம் கேட்டது. சற்றுக் கழித்து எழுந்து அவள் வெளியே சென்றாள் . ஆடாமல் அசையாமல் எரியும் குத்துவிளக்கின் திரியைப் பார்த்தபடி சபரி அரையிருட்டில் நின்றான்.

‘நான் எப்போ சாவேன்?’ – தேடன்

தேடன்

‘நான் எப்போ சாவேன்?’ என்று அடிக்கடி கேட்பாள் அவள், லீலா. அவளுக்கு வாழ்வின் மீது அவ்வளவு வெறுப்பு என்பதை விட சாவின் மீது ஏதோ பிரியம் என்றே சொல்லலாம். ஏனேனில் அவள் வாழ்க்கை அவ்வளவு மோசமாக ஒன்றுமில்லை.

லீலாவிடம் எதற்காக நீ இப்படி கேட்கிறாய் என்றால் ‘எனக்கு லைஃப் ல ஒரு திருப்தி வரவேயில்ல‌. கடவுள் கிட்ட போயிட்டா நானும் சந்தோஷமா இருப்பேன்ல. அதுல தான் எதோ நிறைவு இருக்க மாதிரி தோணுது. இங்க வாழறது எதுக்குனே தெரியல.’ என்று நீட்டி முழக்கி தத்துவம் பேசுவாள். அதில் உண்மையிருந்தாலும் சாவை பற்றியே யோசிப்பது ஒரு நோய் என்பதை அவள் அறியவில்லை.

லீலாவின் வீட்டின் அருகே ஒரு சிறுமிக்கு திடீரென புற்றுநோய் என்று தெரியவந்தது. அவளுக்கு அந்த சிறுமியோடு சிறிது நாள் பழக்கமே என்றாலும் லீலாவோடு அந்த சிறுமி மிக நெருங்கி விட்டிருந்தாள். சிறுமிக்கு புற்றுநோய் என்று தெரியவந்தது முதல் லீலாவுக்கு தூக்கமே வரவில்லை. கண்களை மூடினாலும் திறந்தாலும் அந்த சிறுமி கீமோதெரபியால் முடி கொட்டி மெலிந்து சோர்ந்து விட்டிருந்தவள், ஆட்டோவில் இருந்து இறங்கி வருகையில் மூச்சை இழுத்து இழுத்து விட்டபடி லீலாவை பார்த்து சிரித்த அந்த தருணமே ஓடிக்கொண்டேயிருந்தது. எப்படியும் அந்த சிறுமி இன்னும் சில மாதத்தில் இறப்பது உறுதி என்று சொல்லிவிட்டனர்.

லீலா அந்த சிறுமியை பார்க்கும் தைரியம் அற்றவளாய் இருந்தாள். அந்த சிறுமியை எல்லோரும் வந்து பார்த்து விட்டு சென்றனர். லீலாவின் வீட்டிலிருந்தும் எல்லோரும் போய் பார்த்து விட்டு வந்தனர். லீலாவிடம் ‘கடைசியா பாத்துடு. உன்னதான் அவ கேட்டா. அப்பறம் பாக்கமுடயலனு வருத்த பட்டு ப்ரயோசனம் இல்ல’ என்று அம்மா சொன்னாள். லீலாவால் அந்த சிறுமியை பார்க்க போகும் ஒரு அடியை கூட எடுத்து வைக்க முடியாது அழத் தொடங்கிவிட்டாள். அழுகை நின்றதும் திரும்ப அந்த சிறுமியின் நினைவு வர அவளுக்குள் செய்வதறியா கோபம் பொங்கியது.

மறுநாள் லீலா கண்விழித்து பார்க்கையில் அவள் முன் அந்த சிறுமி நிற்கிறாள். ஓடியாடி சிரித்து குதித்த அந்த சிறுமி மெலிந்து நொடிந்து மூச்சு விட சிரமப்பட்டு மொட்டை தலையோடு அவள் முன் நிற்கிறாள். லீலா வின் கண்களோடு சிறுமியின் கண்கள் மோதுகின்றன. எல்லாமே சூன்யமானது அந்த சிறுமி கண்களில் தெரிந்த சிரிப்பால்.

லீலாவிடம் ‘நான் எப்போ சாவேன்க்கா,’ என்கிறது அந்த மழலை மாறாத குரல். லீலாவின் உடலெங்கும் ஆயிரமாயிரம் அதிர்வலைகள். அந்த கேள்வி, தான் கேட்கும் அதே கேள்வி. மீண்டும் மீண்டும் கேட்கிறாள் அந்த சிறுமி அதே கேள்வியை.

‘நான் எப்போ க்கா சாவேன் சொல்லுக்கா’ அதே மழலை குரல் துக்கத்தின் சாயலில் உள்ளிறங்கி ஒலிக்கிறது.

லீலாவின் குரல் வரவேயில்லை அவள் உதடுகள் செய்வதறியாது மேலும் கீழும் அசைந்தன. என்ன சொல்வது, என்ன சொல்லி என்னவாகப் போகிறது. சாவு நிம்மதி தான் ஆனால் பிரிவு கொடியது; வாழ்க்கையின் மிக பெரும் வன்முறை. அதற்கு மேல் அவளால் அழுகையை அடக்கவே முடியவில்லை. அந்த சிறுமி சிரித்து கொண்டே நின்றிருந்தாள்.

‘அய்யோ,’ என்று ஒரு பெருங்கூச்சல் அந்த சிறுமியின் வீட்டிலிருந்து. லீலா தூக்கத்திலிருந்து விழிக்க லீலாவின் அம்மா சொன்னாள் ‘குழந்த போயிட்டா’.

ஒன் மொமெண்ட் ப்ளீஸ் – விஜயகுமார்

விஜயகுமார்

எங்கள் வாசற்படியில் அனாமத்தாக ஒரு ஆணுறை கிடந்தது. புதிய பிரிக்கப்படாத ஆணுறை. இந்த நாளின் அந்தி இப்படியாக கழியும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இரண்டு வீடுகளுக்கும் ஒரே வாசல் தான். படிக்கட்டு ஏறி வலம் திரும்பினால் நான் இருக்கும் வீடு. இடம் திரும்பினால் இன்னொரு வீடு. ஊரிலிருந்து அமெரிக்கா கிளம்பும் போது கவனமாக இரு கவனமாக இரு என்று சொல்லித்தான் அனுப்பி வைத்தார்கள். நான் துளைக்கும் துப்பாக்கி, குத்திக் கிழிக்கும் கத்தி, உடைந்து விழும் விமானம், அந்தரத்தில் தூக்கும் சூறாவளி என்று எதிர்பார்த்தால். இப்படி ஒரு சோதனை. நான் எப்படி இதற்கு எதிர்வினை செய்வது. யாராவது என்னை பார்க்கிறார்களா? இங்கு எல்லோரும் எல்லாவற்றையும் பார்க்கிறார்கள். என்னை யாரோ பார்க்கிறார்கள் என்றே எடுத்துக்கொண்டு குனிந்து கைக்குட்டையால் அதை எடுத்து திருப்பிப் பார்த்தேன். அதில் எரிக்கா என்று பேனாவால் எழுதி இருந்தது. அதை அருகில் உள்ள குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு சுற்றும்முற்றும் பார்த்தேன். எங்கள் இரட்டை வீடு போலவே அந்த தெரு முழுதும் உள்ள இரட்டை வீடுகளில் யாரும் வெளியே காணவில்லை. திரும்பி எங்கள் வீட்டைப் பார்த்தேன். அதில் மற்றொரு வீட்டின் பெரிய ஜன்னலின் திரைக்கு பின்னால் ஒரு அசைவு. எனக்கு தெரியும் என்னை யாரோ பார்க்கிறார்கள் என்று. நல்ல வேலை அதற்கு தக்கவாறு நடந்து கொண்டேன்.

ஞாயிற்றுக்கிழமை முழுவதும் ப்ரெசென்ட்டேஷன் தயார் செய்து கொண்டிருந்தேன். திங்களன்று அலுவலகத்தில் நான் ஒரு பெரிய பயிற்சி வகுப்பு எடுக்க வேண்டியுள்ளது. எங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பலதரப்பட்டவர்கள். என்னுடைய மேலாளர் வேலையிலிருந்து நின்று விட்டார். ஆகையால் அவருடைய மேலாளர் என்னை நியமித்திருந்தார். எனக்கு இது நல்வாய்ப்பு. களைப்பாக உள்ளது என்று ஒரு சிகரெட் பற்ற வைக்க வெளியே வந்தேன். அங்கு ஒரு பெண் அறக்கப் பறக்க எதையோ வாசலில் பொறுக்கிக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்தவுடன் சடசடவென்று அள்ளியதை அனைத்தும் ஒரு பையில் போட்டுக்கொண்டு குனிந்தவாறே என்னைக் கடந்து வாசற்படிகளில் ஏறி இடப்பக்கம் திரும்பி உள்ளே சென்று விட்டாள். என் எதிர் வீட்டில் ஒரு பெண் இருக்கிறாள் என்பதை உணர்ந்தேன். உணர்ந்த உடனேயே இன்னொன்றையும் சேர்த்து உணர்ந்தேன். அதை உறுதி செய்துகொள்ள வாசல் முழுவதும் கண்களை அலைய விட்டேன். தடயம் ஏதும் கிடைக்கவில்லை. திரும்பி அந்த ஜன்னலைப் பார்த்தேன். அதன் திரை அசைந்து கொண்டிருந்தது.

நான் எடுக்க வேண்டிய பயிற்சி வகுப்பு அன்று பெரிய சொதப்பல் இல்லாமல் சென்றது. எழுதிவைத்து மனனம் செய்ததை ஒரு ராகம் போல் பாடிவிட்டு வந்தேன். அன்றைய வகுப்பிற்கு சொற்பமானவர்களே வந்திருந்தனர். வந்தவர்கள் அனைவரும் வயோதிக வாடிக்கையாளர்கள். எல்லோரும் தூங்கி வழிந்தனர். எனக்கு இது வசதியாக இருந்தது. வெள்ளையர் கறுப்பர் லட்டினோ அரேபியர் ஆசியர் கிழக்காசியர் என்று வண்ணக் கோலப்பொடி போல இருந்தார்கள். வீடு வரும் வழி நெடுகிலும் மனம் எதிலும் லயிக்காமல் இருந்தது. ஏதேதோ சிந்தனை. தூரத்திலிருந்து வரும்போதே அவளை கண்டுகொண்டேன். மீண்டும் வாசலில் பொறுக்கிக் கொண்டிருந்தாள். நான் அவசர அவசரமாக சென்று அவள் அருகில் கிடந்ததை எடுத்துப் பார்த்தேன். அதில் ‘எரிக்கா, யு ஆர் ஏ ஃபைன் ஃபக்’ என்று எழுதி இருந்தது. அதை வெடுக்கென்று அவள் பிடுங்கினாள். அரைக்கணம் என் கண்களை சந்தித்தாள். சஞ்சலம் ஏதும் இல்லாத முகம் என்றாலும் அதன் கண்கள் நீர்மை கோர்த்திருந்தது. பிடுங்கியதை பையில் போட்டுக்கொண்டு திரும்பிப் பார்க்காமல் உள்ளே விறுவிறுவென்று சென்றாள்.

அன்று முன்னிரவு மனம் அலைக்கழிப்பாகவே இருந்தது. அலுவலகத்தில் என்னை நிரூபித்துக்கொள்ள வேண்டும். அதன் படபடப்புடன் இவளின் உரசல் வேறு. அவளது வட்ட முகம். வெண்ணிற தோல், மூக்கின் கீழ் உள்ள மென்மயிர், பரட்டைக் கூந்தல். முதல்தர அழகி இல்லை. என்றபோதும் என் மனம் அலுவலக சோர்வைத்தாண்டி அவளை ஏந்திக் கொண்டிருந்தது. அன்றிரவு என் அந்தரங்க ஆசுவாசத்திற்கு அவள் பிம்பம் உதவியது. இதுநாள் வரையில் லட்சிய அழகிகளே என் கற்பனையில் அரங்கேறி இருக்கிறார்கள். அன்றிரவு அவள் விதிவிலக்கு. முடிந்தபின் ஏன் என்று யோசித்துப் பார்த்தேன். உண்மையை சொன்னால் எனக்கு ஒரே எதிர்வீடு; அதில் ஒரே ஆள்; அது ஒரு பெண். அவ்வளவே. மேலும் காரணம் கேட்டால் அவளது கண்களில் தேங்கி நின்ற நீர். அந்த மெல்லிய படலம். அந்த நீர் பரப்பு. அதில் தென்படுவது ஒரு பலகீனம். என்னை கட்டுக்குள் கொண்டுவர முடியும்; ஆக்கிரமிக்க முடியும் என்ற பதாகை. மிரட்டினால் மிரண்டுவிடுவேன்; அடித்தால் அழுதுவிடுவேன் என்ற கூற்று. வன்முறையின் சாத்தியத்தை அஞ்சும் கண்கள். அதுவே என்னை வீறுகொள்ளச் செய்தது. அவளது பெயர் எரிக்கா வாக இருக்கக்கூடும்.

அலுவலக நண்பரிடம் ஆணுறையை ஒருவருடைய பெயர் எழுதி அவரது வீட்டின் முன் போடும் சடங்கின் காரணம் பற்றி கேட்டேன். அவர் சிரித்துவிட்டு, “இந்த நாடு ஒரு கலவையான நாடு. அதுல பல கூறுகள் வந்து சேரும். அப்படி எங்கிருந்தோ புதுசா வந்து சேர்ந்த ஒரு கீழ்மையான பழக்கம் இது. ஒரு பெண்ணை அவமானம் செய்யுற நோக்கத்தோடு செய்யறது. உன்ன எப்போ வேணும்னாலும் கெடுத்துப்போடலாம். நீ என்னோட லிஸ்டில் இருக்க. என்னிக்கு இருந்தாலும் நீ மாட்டுவ. அப்படீன்னு சொல்றது.” என்றார்.

“என்ன கிறுக்குத்தனம்….”

“நம்ம ஊரிலேயே கிறுக்கனுங்க இருக்கானுங்க. இந்த ஊருக்கு என்ன வந்தது. இங்கயும் நிறைய இருக்கானுங்க. இன்னும் சொன்னா ஒருவர் வீட்டுக்கு முன்னாடி வந்து மலம் அள்ளி வெச்சுட்டு போவானுங்க. நாம காசு வெட்டிப் போடுறோம் இல்ல. அந்த மாதிரின்னு வெச்சுக்கோ.”

அடுத்தநாள் அவள் வீட்டை விட்டு வெளியே வரும்வரை நோட்டம் பார்த்து தற்செயல் போல் நானும் வெளியே வந்தேன். அவள் வீட்டை பூட்டிக் கொண்டிருக்கும் போது நானும் பூட்டுவது போல் திரும்பிக்கொண்டு மெலிதாக, “ஐ நோ வாட் யு ஆர் கோயிங் த்ரூ” என்றேன்.

அவள் திரும்பி என்னைப் பார்த்தாள். நானும் திரும்பினேன். “ஒஹ் ரியலி?” என்று எரிச்சலாக சொல்லிவிட்டு உடையை நேர் செய்தவாறு வெளியே சென்றாள். அவள் சென்ற பின் “எஸ் ரியலி….” என்றுகொண்டேன். கனவில் வந்து கட்டளைக்கு காத்துக்கிடக்க எவ்வளவோ அழகிகள். இவள் வந்தாள் இப்போது சென்றுவிட்டாள். அடுத்த வேலையைப் பார்ப்போம்.

அன்று பயிற்சிக்கு புதிய வாடிக்கையாளர்கள் அரங்கு நிரப்பிக் கொண்டனர். எனது மாமூல் மனப்பாட வித்தை அன்று என்னை கைவிட்டது. குரல் நடுங்க உடல் வியர்க்க கால்கள் உதற அன்றைய கப்பலை கரை ஏற்றினேன். என் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் என்னிடம் வந்து ஆறுதலாக அடுத்தமுறை நன்றாக செய் என்று சொல்லி இருக்காவிட்டால் நானும் அவள் போல அழுதிருக்க தேவையில்லை. நல்லவேளை அவர் மட்டும் தான் என் கண்களின் நீர் படலத்தை பார்த்தார். அடிபட்ட சோகத்துடன் வீடு திரும்பும்போது எரிக்கா வாசலில் நின்றாள். அவளை சட்டை செய்யும் அளவிற்கு அன்றைய நாள் உற்சாகமாக இருக்கவில்லை. நான் ஒதுங்கிப் போக எத்தனிக்கும் போது, “நான் நம்புகிறேன், நான் உங்களிடம் ஒரு மன்னிப்பை சமர்ப்பிக்க கடன்பட்டிருக்கிறேன் என்று.” என்றாள். மூளையின் கட்டளையின்றி நான், “ஒஹ் உண்மையாகவா….” என்றுவிட்டு உள்ளே சென்றேன்.

என் கண்கள் நீர் படலம் கோர்த்த அந்த தருணத்தையே நான் எண்ணிக் கொண்டிருந்தேன். கும்பலின் முன்னால் ஒடுங்கி இருக்கும் நான். எரிக்கா என்னவாக இருந்திருப்பாள் அப்போது. அப்போது தோன்றும் எண்ணமெல்லாம் செயலெல்லாம் தப்பி ஓடுவது, பொந்துக்குள் புகுந்து கொள்வது. நான் அதைத்தான் யோசித்தேன். எரிக்கா அதைத்தான் செய்தாள். உரசலுக்கு பின்பும் அவள் இன்று அணுக்கமாக தோன்றினாள்.

அடுத்து வந்த நாட்களில் நாங்கள் கண்கள் சந்தித்துக் கொண்டோம் முகமன் சொல்லிக்கொண்டோம். அதற்கிடையில் எனக்கு அருகில் உள்ள பல்பொருள் அங்காடியில் வேலை செய்யும் வேறு ஒரு லட்சிய அழகி என் கனவை அக்கிரமித்திருந்தாள். எரிக்கா எதிர் வீட்டுப் பெண்ணாக மட்டுமே ஆகிப்போனாள். அந்த அங்காடிக்கு அடிக்கடி செல்வேன். அந்த லட்சிய அழகி அங்கே விற்பனை பிரிவில் நின்றிருப்பாள். சிகாகோவில் கணிசமானோர் லட்டினோ இன மக்கள். அவர்களுக்கு இந்திய உடற்கட்டும் ஜப்பானிய தோல் நிறமும் இருக்கும். அவர்களுக்கு என்று பிரத்தியேக சந்தை உருவாகி வந்திருந்தது. அவர்களுள் சிலருக்கு ஆங்கிலம் தெரியாது ஸ்பானிய மொழி மட்டும்தான். என்னுடைய லட்சிய அழகிக்கு ஸ்பானிய மொழி மட்டும் தான் தெரியும் போல. அவளிடம் ஆங்கிலத்தில் எது கேட்டாலும் “ஒன் மொமெண்ட் ப்ளீஸ்” என்று சொல்லிவிட்டு ஆங்கிலம் தெரிந்த ஒருவரை அழைத்து வந்து விடுவாள்.அவளை நோட்டம் விடுவேன். அவளும் என்னை நோட்டம் வீட்டுக் கொண்டிருந்தாள். நான் எது கேட்டாலும் ‘ஒன் மொமெண்ட் ப்ளீஸ்’ தான். அவள் என்னை பார்க்கிறாள் என்பதற்காகவே தினமும் செல்வேன். தினமும் எனக்கு ஒரு ‘ஒன் மொமெண்ட் ப்ளீஸ்’ கிடைக்கும். அவள் அன்று என்ன ஒப்பனை செய்திருக்கிறாள் என்ன ஆடை அணிந்திருக்கிறாள் என்ன சடைப் பின்னல் இட்டிருக்கிறாள் என்பதை பார்க்க விருப்பம். அவள் எனக்கு தோதான உயரம், என் உள்ளங்கையிற்குள் அவள் உள்ளங்கை அடங்கிவிடும், அவள் அங்கங்கள் அனைத்தும் எனக்கான பிடிமானம். அலுவலக திறன் இயலாமைக்கும் அதன் விளைவாக உள்ள ஆற்றாமைக்கும் அவளைப் பார்க்க செல்வது ஒரு நல்ல வடிகால். அவளது ‘ஒன் மொமெண்ட் ப்ளீஸ்’ என் உள்ளத்தில் எப்போதுமே இசைந்து கொண்டிருக்கும். நான் தினமும் அந்த அங்காடி செல்வதை எரிக்கா கவனித்திருக்க வேண்டும். நான் எப்போதும் நடந்துதான் செல்வேன். என்னிடம் கார் கிடையாது.

அன்று அவள் வெளியே வந்து “நீங்கள் அங்காடிக்கு செல்கிறீர்களா?” என்று கேட்டாள். நான் ஆமாம் உங்களுக்கு ஏதேனும் வாங்கி வர வேண்டுமா? என்று பவ்யமாக கேட்டேன்.

“நானும் அங்கேதான் செல்கிறேன். நானும் உங்களுடன் வரலாமா?”

“நான் நடந்து செல்வேன். தாமதமாகி விடும்”

“இல்லை, உங்களுடன் வந்தால் சிறிது பாதுகாப்பாக உணர்வேன்”

எனக்கு அந்த சொற்கள் கிரீடம் வைத்தது போல் இருந்தது. பண்பானவன் என்ற அங்கீகாரம் போல். இன்னும் பணிவு கூடி வந்தது. “வாருங்கள் நான் துணைக்கு வருகிறேன்” என்றேன்.

ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நடந்தேன். கண்டிப்பாக அவள் கண்களை மட்டும்தான் பார்த்துப் பேசவேண்டும் என்ற அவசரகால சங்கற்பம் எடுத்துக் கொண்டேன்.

செல்லும் வழியில் அமைதியாகவே சென்றோம். கண்டிப்பாக நான் எந்த பேச்சும் ஆரம்பிக்க கூடாது. அவளுக்கு வாய் கொஞ்சம் கோணல். சிரித்தால் ஒருபக்கம் இழுக்கும். லட்டினோக்களைப் போல் நீவிய கேசம் இல்லை. நெளிந்து நெளிந்து போகும் கொண்டை இடப்படும் சிதறல் முடி. இறுகிய புஜங்கள். அவள் நடை கொஞ்சம் ஆண் தன்மை கொண்டிருக்கும். நன்றாக கவனித்தால் அன்றைய நடப்ப வழக்கிலிருந்து அவள் விலகியே இருப்பது தெரியும். அவளுடன் நடந்து வருகிறேன் என்ற முழுப் பிரக்ஞையுடன் இருந்தேன். அதனால் என்னவோ எனக்கே அந்நியமான ஒரு உடல் மொழி என்னிடம் தென்பட்டது. அந்த உடல் மொழி வசதியாகவும் நம்பகத்தன்மை கொண்டதாகவும் இருந்தது. அதையே ஏற்று நடித்துக் கொண்டிருந்தேன். சற்றும் எதிர் பார்க்காமல் எனது நிறுவன இயக்குநர் எங்கள் எதிரில் நடை பயிற்சி வந்தார். என்னைப் பார்த்து நிற்காமல் ஒரு கையை தலைக்கு மேல் தூக்கி சமிக்ஞை செய்தார். நான் என் பாவனையை சடுதியில் கைவிட்டு அவரை நோக்கி மேல் உடலை மட்டும் கொஞ்சமாக வளைத்து அரை வணக்கம் போல் என் வலது கையை நெஞ்சுவரை ஏற்றி இறக்கினேன். அவர் கடந்துவிட, நான் மீண்டும் தன்னிலை மீண்டு மீண்டும் புதிய உடல் மொழிக்கு திரும்பினேன். அவள் அதை கவனித்தாள்.

“நீங்கள் இந்தியர் தானே?”

“என்னுடைய வணக்கம் உங்களுக்கு காட்டிக்கொடுத்து விட்டதா?”

“நீங்கள் தென் அமெரிக்கர் என்றுதான் முதலில் நினைத்தேன்.”

“நீங்கள்?”

“ஆஃப்கன்..” என்று விட்டு அவள் மேல் உடலை வளைத்து அரை சலாம் செய்து காண்பித்தாள்.

நான் சிரிக்க அவளும் சேர்ந்து சிரித்தாள். “இங்கே நம்மை போன்றோர் அரை மக்கள்தான். அரை ஜீவனம்தான். அரை உரிமைதான். அரை வணக்கம் தான்.” என்றாள்.

அவள் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டே சென்றாள். ஆஃப்கன் மக்கள் இங்கே இன்னும் இறுகிய சமூகமாகவே இருப்பதை; லட்டினோ மக்கள் தங்களுக்கான ஒரு கலாச்சாரத்தை சமைப்பதை; அரசியல், கலை, மக்கள், பிரதேசம் என்று என்னென்னவோ. நான் ஈடு கொடுத்துக்கொண்டு வந்தேன். பெரும்பாலும் கேட்டுக்கொண்டு. அவளை ஆச்சரியத்தில் உள்ளாக்க; நின்று கவனிக்க வைக்க; என்னிடம் பகிர்ந்துகொள்ள எந்த சரக்கும் அப்போதைக்கு இல்லை. நாங்கள் அங்காடிக்கு வந்து சேர்ந்திருந்தோம். ஒன் மொமெண்ட் ப்ளீஸ் இருக்கும் அங்காடிக்கு.

ஒன்றாகவே சென்று சிறிய சிறிய பொருட்களை வாங்கினோம். அவள் எடுத்த பொருட்களில் ஆங்கிலமும் அரபியும் அச்சிடப்பட்டிருந்தது. நான் எடுத்த பொருட்களில் ஆங்கிலமும் சில இந்திய மொழிகளும். “அதை சுட்டிக்காட்டி நாம் நம் சென்ற காலத்தை இன்னும் பொறுக்கித் திரிகிறோம்” என்றாள். அவள் பட்டியலில் மீண்டும் ஒரு புள்ளி. நான் பின்தங்கி அதலபாதாளத்தில்.

எரிக்காவிற்கு தெரியாமல் நான் என் லட்சிய அழகியை பார்த்து பார்த்து மீண்டேன். எரிக்கா என்னிடம் வந்து “அந்த பெண் உன்னை பார்க்கிறாள்” என்றாள்.

என் ஆச்சரியத்தை வெளிக்காட்டாமல் “தெரியும்” என்றேன்.

“தெரியுமா?. அப்படியானால் அவள்…”

“இல்லை… அவளுக்கு ஆங்கிலம் தெரியாது…”

“இதற்கு எதற்கு ஆங்கிலம். போய் பேசிப் பார்.”

“நான் பல முறை பேசி இருக்கிறேன். அவளுடைய ஒரே பதில் ‘ஒன் மொமெண்ட் ப்ளீஸ்’ தான்.”

எதற்கு ‘ஒன் மொமெண்ட் ப்ளீஸ்’? என்றாள்.

“நீயே கேட்டுப்பார்.” என்றவுடன் எரிக்கா சிறிதும் தயங்காமல் அவளிடம் சென்றாள். நான் தூர நின்று பார்த்தும் பார்க்காமலும் கவனித்தேன்.

எரிக்கா அவளிடம் என்னை நோக்கி ஏதோ காண்பித்து பேசினாள். என் அடிவயிறு சப்தமிட்டது. வேறுபக்கம் திரும்பிக் கொண்டேன். எரிக்கா கிண்டலாக சிரித்துக் கொண்டு திரும்பி வந்தாள்.

“பைத்தியம், அவளிடம் என்ன சொன்னாய்?”

“கண்டிப்பாக சொல்லவேண்டுமா?”

“சொல். என்னை காண்பித்து என்ன சொன்னாய். உனக்கு ஸ்பானிய மொழி தெரியுமா? அவள் என்ன சொன்னாள். என்னை காக்க வைக்காதே”

எரிக்கா சிரிப்பை அடக்க முடியாமல், “எனக்கும் ‘ஒன் மொமெண்ட் ப்ளீஸ்’ தான் சொன்னாள்”.

எனக்கு சிரிப்பு வந்தது. அவள் சிரிக்க அவளை பார்த்து நான் சிரிக்க அவள் மேலும் என்னை பார்த்து சிரித்தாள். நாங்கள் வெளியே ஓடிவந்து சிரித்தோம். விலா எலும்பு வலிக்கும் வரை சேர்ந்து சிரித்தோம். கண்களில் வழிந்த நீரை துடைத்தாள். அவளது சிரிப்பு புன்னகையாக மாறியிருந்தது.

“ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இப்படி சிரித்து.” என்றாள்.

நாங்கள் வீடு திரும்பினோம். வரும் வழியில் என் உடல் மொழியை பாவனையை கைவிட்டு இயல்பாக இருந்தேன்.

கொஞ்ச நேரம் அமைதியாக நடந்தோம். அவள் எங்கிருந்தோ ஆரம்பித்தாள். “யோசித்துப் பார்த்தால் நம்மால் சில இடங்களில் ‘ஒன் மொமெண்ட் ப்ளீஸ்’ சொல்ல முடிவதில்லை. சொன்னாலும் நமக்கு அந்த ஒன் மொமெண்ட் கிடைப்பதில்லை.” என்றாள்.

“ம்ம்ம்….”

“நான் சொல்வது உனக்கு புரிகிறதா. நான் ஆஃகானில் சொன்ன ஒன் மொமெண்ட் ப்ளீஸ் -ன் விளைவுதான் இப்படி இங்கே இருக்கிறேன். இப்போது இங்கேயும் ‘ஒன் மொமெண்ட் ப்ளீஸ்’ சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீ பார்த்தாயா என் வீட்டின் எதிரில் ஆணுறையில் என் பெயர் எழுதி வீசுகிறார்கள். நான் அவர்களுக்கு அரை சலாம் போடுகிறேன். அவர்களிடம் ‘ஒன் மொமெண்ட் ப்ளீஸ்’ சொல்ல விழைகிறேன்.

“யார் அப்படி எழுதி வீசுவது?”

“என் மாணவர்கள்.”

“எதற்காக அப்படி செய்கிறார்கள்?”

“என்னை மிரட்டுவதற்கு. நான் பலகீனமானவள் என்பதை மோப்பம் பிடித்து விட்டார்கள். அது கும்பல் மனநிலை. ஒரு சிலர் அதை ஆரம்பித்து வைப்பார்கள். அதற்கு தயங்கியவர்கள் சேர்ந்து கொள்வார்கள். மீதி சிலர் தனித்துப் போகக்கூடாது என்று சேர்ந்து கொள்வார்கள். அனைவருக்கும் ஒரே நோக்கம் என்று சொல்ல முடியாது. ஒரு சிலர் என்னை காதலிக்கவும் கூடும். நான் ஆஃப்கானிஸ்தானில் பிணைக் கைதியாக இருக்கும்போது என்னை இரண்டாவதாக கபளீகரம் செய்தது என் சொந்தக்காரன் தான். பின்பு அவன் தான் என்னை காப்பாற்றி இங்கு கொண்டுவந்து சேர்த்தான். இப்போது யாரும் கபளீகரம் செய்யவும் வேண்டாம் காப்பாற்றவும் வேண்டாம். நான் வேலையை விட்டு விட்டேன். அடுத்த வாரம் இந்த ஊரை விட்டு நீங்குகிறேன். வேறு இடம் செல்கிறேன். ஒன் மொமெண்ட் ப்ளீஸ் சொல்லப்போகிறேன்.”

நான் எங்கு செல்கிறாய் என்று கேட்கவில்லை.

அவள் அதை உணர்ந்தாற்போல் சிரித்தாள்.

வீடு வந்தது. அவள் கையை நீட்டி “நான் எரிக்கா..”என்றாள். அவள் கையை குலுக்கி “நான் மோகன்..” என்றேன்.

“மன்னிக்கவும் ஒரு உணர்ச்சி வேகத்தில் என் அந்தரங்கத்தை உங்களிடம் சொல்லி உங்களையும் சோகத்தில் ஆழ்த்திவிட்டேன்.”

“அதை கருத்தில் கொள்ளாதே..”

அவரவர் வீடு புகுந்தோம்.

அந்த நாள் முழுவதும் வானில் பறப்பது போல் இருந்தது. அவள் என்னை நம்புகிறாள். ஓர் பெண்ணின் நம்பிக்கைக்கு உரியவன் நான். நம்பி அவள் அந்தரங்கத்தை பட்டியலிடுகிறாள். பந்தி விரிக்கிறாள். மீதம் உள்ள நாட்கள் அவளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். அவள் கவுருவத்தை காபந்து செய்து அவளிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த நினைப்பிலேயே தூங்கிப் போனேன்.

அடுத்தநாள் நேற்றைய சமாதானம் கலைந்திருந்தது. அலுவலகத்தில் அன்று புலி போல இருந்தேன். பயிற்சி வகுப்பு என் கட்டுக்குள் இருந்தது. அனைவரையும் அவர்களின் உச்ச விசையில் வைத்திருந்தேன். அரங்கத்தை முழு நிர்மாணம் செய்திருந்தேன். எனக்கு அன்றைய நாள் மிகப்பெரிய வெற்றி.

அவள் என்னை என்ன செய்கிறாள் என்று இப்போது புரிந்தது. ஆபத்தை கண்கொண்டு நேர்நோக்கினால், அது மட்டுப்படும். பிறகு அந்த ஆபத்தை சவாரி செய்யலாம். அவள் என்னை ஆபத்தாகத்தான் உணர்கிறாள். ஆபத்தாகிய என்னிடம் ஒரு பிரத்யேக உறவு வைத்திருந்தால் நான் அவளை ஒன்றும் செய்ய முடியாது அல்லவா. அவளை பாதுகாப்பேன் அல்லவா. எனது பொறுப்பு வலயத்திற்குள் வந்துவிட்டால் அப்புறம் என்ன கவலை. பாதுகாப்பற்ற சிறுமி ஒரு தட்டான் ஆணிடம் அடைக்கலம் சேர்வது போல. தட்டான் ஆண் பிற சில்லறை ஆண்களிடம் இருந்து அவளை காபந்து செய்வான். ஜார்ஜ் வாஸிஷிங்டன் தன் எதிரியிடம் நல்லுறவு வைத்திருந்தார். எதிரியின் வீட்டிற்கு சென்று வருவார். புத்தகம் கடன் வாங்குவார். சட்ட ஆலோசனை கேட்ப்பார். எதிரியை தன்னுடைய செயலில் வெற்றியில் பங்குதாரர் ஆக்குவார் . ஜார்ஜ் வாஸிஷிங்டன் இறுதியில் வெற்றி பெறுவார். அவ்வளவே. நானே அவளுக்கு ஆபத்து அதனால் நானே இப்போது பாதுகாப்பு. ச்சே…

இத்தனைக்கு பின்பும் அடுத்தநாள் அவளுடன் அங்காடிக்கு சென்று வந்தேன். இம்முறை அவளிடம் எந்த பாவனையையும் நான் கைக்கொள்ளவில்லை. விலக்கமும் அணுக்கமும் ஒரு சேர்ந்தாற்போல் உணர்ந்தேன்.

அடுத்து வந்த நாட்கள் எல்லாம் அங்காடி சென்றோம். அங்கே தவறாமல் என் லட்சிய அழகியை இருவரும் பார்ப்போம். சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் சிறு சிறு குட்டி பொருட்களை எடுப்பாள். ஏதாவது ஒரு பொருளைப் பற்றி என்னிடம் கருத்து கேட்ப்பாள். கூஜா, டீ போத்தல், வாசனை திரவியம் என்று ஏதேதோ. நானும் ஏதாவது சொல்லி வைப்பேன். நான் சொல்வதை உன்னிப்பாய் கவனிப்பாள். வீட்டிற்கு திரும்பும்போது ஒவ்வொரு முறையும் எரிக்கா ஒரு கதை சொல்வாள். நான் அதை உன்னிப்பாக கவனிப்பது போல் பாவலா செய்வேன். ஒரு சில அஹமதிய பெண்கள் சந்தையில் விலை போவதைத் தான் விரும்புவாள் என்பாள். சக்கரி மினாரெட் ஸ்தூபியை இடித்ததும் பாமியான் புத்தரை இடித்ததும் வேறுவேறு சித்தாந்தம் என்பாள். வீடு வந்து அவள் சொன்னதை அலசிப் பார்ப்பேன். அதில் கண்டிப்பாக கள்ளத்தனமான ஒரு உறவும் ஒரு தூரமும் இருக்கும். தன்னை கபளீகரம் செய்தவனையே ஆயுதமாக வைத்து தப்பித்தவள் அல்லவா. அதுகூட உண்மை என்று யாருக்கு தெரியும். நான் ஒருபோதும் எல்லை மீறாமல் எனக்கு இடப்பட்ட பாதையில் நடந்தேன். அது ஒரு பொருட்டே இல்லாததுபோல். இந்த விளையாட்டில் என் வெற்றி என்பது கம்பீரமான விலக்கம்தான். அதை அவள் உணர்ந்தே ஆகவேண்டும். அவள் என்னை என்ன செய்கிறாள் என்பதை நான் உணர்ந்தேன் என்று அவள் உணர வேண்டும். இருந்தும்கூட நான் கனிவாக பண்பாக இருக்கிறேன் என்று காண்பிக்க வேண்டும். அதுவே என் வெற்றி.

இன்னும் இரு தினங்கள்தான் இருக்கிறது. என் கதவை அவள் தட்டினாள். இது நடக்கும் என்று எனக்கு தெரியும். வழமைக்கு மாறாக வீட்டை சுத்தமாக வைத்திருந்தேன். கதவை திறந்த நான் மெல்லிய ஆச்சரிய உணர்வை நடித்துக் காண்பித்தேன்.

“உள்ளே வரலாமா?”

“நிச்சயமாக… வாருங்கள். அமருங்கள்.. காஃபி அருந்துகிறீர்களா?”

“இல்லை வேண்டாம்.. நான் கிளம்புவதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டேன். என்னிடம் சில வீட்டு பொருட்கள் இருக்கின்றன. அதை எனக்கு விற்க எண்ணமில்லை. கொண்டு செல்லவும் முடியாது. நீங்கள் அனுமதித்தீர்கள் என்றால், நான் உங்களுக்கு அவைகளை பரிசாக தர விருப்பப்படுகிறேன்.”

“உண்மையாகவா? நான் அதற்கான பணம் தந்து விடுகிறேன்.”

“இல்லை இல்லை.. வேண்டாம். ஆனால் நீங்கள் என்னிடம் அவைகளை வாங்கிக்கொள்ளவேண்டும். வேண்டாம் என்று சொல்லக் கூடாது. அப்போது தான் எனக்கு மகிழ்ச்சி” என்று இறைஞ்சுவது போல் கேட்டாள்.

நான் சிரித்துக் கொண்டே சரி என்றேன்.

தொலைக்காட்சி, சில நாற்காலிகள், பெரிய மேசை, கடிகாரம், வீட்டு மளிகை பொருட்கள், சில புத்தகங்கள், அலங்கார ஆஃப்கன் தரை விரிப்பு, இன்னும் சில சுவாரஸ்யமான பொருட்கள் வீடு மாறின. ஒரே நாளில் என் வீடு ஆஃப்கானிய வீடுபோல் ஆகிவிட்டது. இதை அனைத்தும் அவள் மாறாத புன்னகையுடன் செய்தாள். இன்னும் எனக்கு குழப்பம். இது அவள் ஏற்றிருக்கும் பாவனையா அல்லது இதுதான் அவளின் இயல்பா என்று. இந்த ஆட்டத்தில் அவளுக்குத்தான் இறுதி வெற்றி போல.

மறுநாள் அதிகாலையிலேயே அவள் சென்றிருந்தாள். நான் வெளியே வரவில்லை. அவள் சொல்லிக்கொள்ளாமலேயே போகட்டும். ஒருவேளை என்னுடைய கடைசி ஆட்டம் அதுவாகத்தான் இருக்கும். அவள் சென்றுவிட்டாள் என்பதை உணர்ந்தேன். இருப்பினும் போதுமான அவகாசம் விட்டு வெளியே வந்து பார்த்தேன். அவள் வீடு பூட்டியிருந்தது. என் கதவின் ஓரமாக ஒரு அலங்காரத் தட்டு. அதில் அவள் சமீபமாக வாங்கிய மற்றும் உபயோகித்து மிச்சம் வைத்த சில பொதுவான பொருட்கள். அவற்றுள் சில எனக்கு அடையாளம் தெரிந்தது. அவற்றை உள்ளே எடுத்து வந்தேன். வேலைப்பாடு உள்ள கூஜா, உயர் ரக டீ போத்தல், வித்தியாசமான குடுவையில் வாசனை திரவியம், கரும் நிறத்தில் உள்ள பேரீச்சை, வாசனையான புது சோப்புக் கட்டி, பேனா, சிறிய கடிகாரம் என்று இன்னும் என்னென்னவோ. கடைசியாக எல்லா பொருட்களுக்கும் அடியில் மறைத்து வைத்தாற்போல் ஒரு ஆணுறை. அதை எடுத்து திருப்பிப் பார்த்தேன். அதில் மோகன் என்று எழுதியிருந்தது.

ஐம்பெருந்தீ- ந பானுமதி

பானுமதி ந 

இவள் பிச்சியைப்போல் அலறிச் சிரித்தாள். அடுத்த அறையிலிருந்து அவள் சிரித்தாள். அந்தச் சிரிப்பு தந்த வலியில் இவளும் சிரித்தாள். இந்த இடங்களிலெல்லாம் அவள்களின் சிரிப்புதான்; வெறியாய், அழுகையாய், வலியின் உச்சமாய், உல்லாசமாய், உண்மையாய், பிச்சியாய் சிரிப்பதெல்லாம் அவர்கள் தான்.

நான்கு திசைகளிலும் தீ எரிந்து கொண்டிருந்தது; தலைக்கு மேலும் ஓர் அக்னி. ஊசிமுனையில், இந்த ஐந்து பெரும் வெப்ப வீச்சின் நடுவே அன்னை காமாட்சி தவம் செய்யும் கோலம். துவராடை அணிந்த திரு மேனி, எங்கும் ஆபரணம் பூணாத தவக் கடுமை. அந்தப் பொன் உடலில், தீயின் ஜ்வாலைகளின் நிழல் நின்று ஆடிய மாயத்தில் வார்க்கப்பட்ட சிலை. அம்மையை இப்படிச் செய்த அந்த சிற்பியை யார் அறிவார்? எப்போதும் போலவே அன்றும் சுகுணா கண்களில் நீர் திரள அந்தச் சிலையைப் பார்த்துக்கொண்டு நின்றாள். பொறுமையிழந்து ராதா ‘வாக்கா, போலாம், பசிக்குது’ என்று கையைப் பற்றி இழுத்தாள். என்றுமே இல்லாத அதிசயமாக அப்பா தன் பெண்கள் மூவரையும் உட்கார வைத்து சாப்பாடு போட்டார். தானும் சேர்ந்து சாப்பிட்டார். இவர்களின் அம்மா உயிரோடிருக்கையில் தன் மாமியார் வீட்டில் சாப்பிட்ட நிலாச் சாப்பாடு- ‘கேளு, சுகு, ஒரே ஒரு வெள்ளி போசி. அதுல நெய்யா மினுக்குது, முந்திரியும், திராட்சையும் முழிச்சுப் பாக்குது; கை கையா சக்கரப் பொங்கலு. என்னா ருசி,என்னா ருசி.’ அவர்களுக்கு ஒரே ஆச்சர்யம்; இறுக்கமற்ற அப்பா, சற்று உரக்கச் சிரித்தால், கைகளில் வளையல் சப்தமிட்டால், முகத்தில் பூச்சு அதிகமிருந்தால், கத்துபவர்; அவர் இருந்தால் வீடே மயான அமைதியாகிவிடும். படிப்பிலோ, சித்திரம் வரைவதிலோ, பேச்சுப் போட்டியிலோ, விளையாட்டுகளிலோ, எதில், அவர்கள் எந்தப் பரிசு வாங்கியிருந்தாலும், பாராட்ட மாட்டார், அந்தச் சான்றிதழ்களைக் கண்களால் கூட பார்க்க மாட்டார். அத்தகைய அப்பா, எப்படி இன்று இப்படி?

மறு நாள் காலை எழுந்திருக்கும் போதே பார்த்தாள் சுகுணா அப்பாவின் படுக்கை காலியாக இருப்பதை. இந்த வேளையில் எங்கு போயிருக்கப் போகிறார் என்ற எண்ணம் வந்தாலும் ஏதோ ஒன்று நெருடியது. தங்கைகளை எழுப்பி பள்ளிக்குத் தயார்படுத்தி, சமைத்து, இவளும் கல்லூரிக்குச் செல்ல வேண்டும்; பூட்டி சாவியைப் பக்கத்து வீட்டில் கொடுத்தாள். மனம் சங்கடப் பட்டுக் கொண்டே இருந்தது. அவர் மறு நாளும் வரவில்லை என்றதும் அவரது நண்பர்கள், உறவினர்களிடம் விசாரித்தார்கள். அவரது அலுவலகம் சென்று கேட்ட போது அவர் விருப்ப ஓய்வில் சென்று விட்டதாகத் தெரிவித்தனர். ஐந்து கி மீ நடந்தே வருவது கூட அறியாமல் நடக்கத் தொடங்கினாள். இந்த இருப்புப் பாதை, இணையாகச் செல்பவை, எங்கேதான் போகும்? இரும்புப் பாம்பின் மேல் பட்டுத் தெறித்து கண்களைக் கூச வைக்கும் சூரியன் குருடாக்கப் பார்த்தான். இலையுதிர்த்து நின்ற மரங்கள், உனக்கு இனி நிழலில்லை என்றன. சருகுகள் கிடந்த நிலத்தில் பச்சைத் தளிர்களைப் பிய்த்துப் போட்டது யார்? இவளுக்கு ஏனோ வாய்விட்டுச் சிரிக்க வேண்டும் போலிருந்தது.

இவளுக்கு ஒன்றும் புரியவில்லை. கல்லூரி இறுதியாண்டில் இவள்; அடுத்த தங்கைக்கு 16 வயது; கடைசிப் பெண்ணிற்கு 9 வயது. அம்மா மூன்றாவது பெண்ணைப் பெற்ற ஓராண்டில் இறந்து விட்டார். அப்பா எங்கு போயிருப்பார்? ஏன் விருப்ப ஓய்வைப் பற்றிச் சொல்லவில்லை? அப்படியே வேலையை விட்டாலும் வீட்டை விட்டு ஏன் போக வேண்டும்? ஏதாவது விபத்து நடந்திருக்குமோ? மூவரும் பெண் குழந்தைகள் என்ற எண்ணமே இல்லாமல் ஒரு தகப்பனா? இல்லை அவர் அப்படிப்பட்டவரில்லை-ஏதோ தோன்றி எங்கோ போயிருக்கிறார்-வந்துவிடுவார் சீக்கிரம்.

இவளைக் காவல் நிலையத்தில் புகார் செய்யச் சொன்னார்கள். ஒரு வாரத்தில் அப்பாவிடமிருந்து கடிதம் வந்தது. யாருக்கு என்று குறிப்பிடாத கடிதம்-அன்போ, ஆசிகளோ சொல்லப்படாத ஒன்று. “நான் விருப்ப ஓய்வு பெற்றுக் கிடைத்தப் பணத்தில் பாதியை சுகுணாவின் கணக்கில் போட்டுள்ளேன். அவளுக்கு படிப்பு முடிந்தவுடன் வேலை கிடைக்கும் என நம்புகிறேன். உங்கள் அம்மாவுடன் நான் மகிழ்ச்சியாக இல்லை. மூன்று பெண் பிள்ளைகள் என்பதால் இரண்டாம் மனையாக வர யாரும் சம்மதிக்கவில்லை. என் இச்சைகள் என்னை வரம்பு மீற வைத்துவிடும் என பயப்படுகிறேன்-என் பெண்களையே நான்….ஐயோ… நான் போய்விடுகிறேன், நீலாவோடு.”

இவள் புரைக்கேறச் சிரித்தாள். அவள் சிணுங்கிச் சிரிப்பது போலிருந்தது.

காவல் நிலையத்தில் புகாரை திரும்பப் பெறச் சென்றபோது சரவணன் பரிவுடன் பார்த்தான்; உதவுவதாகச் சொன்னான். உயிரான உறவு என்று நினைத்த அப்பனே ஓடிப் போய் விட்டான், இவன் நண்பனுமில்லை, உறவுமில்லை. என்ன உதவி கேட்பது, எந்த உரிமையில் கேட்பது என்று இவளுக்குத் தெரியவில்லை. அதிலும் சிறு வயதிலிருந்தே போலீஸ் என்றாலே பயம்.அம்மா இறந்து எட்டு ஆண்டுகளாகிவிட்டன. அவள் பக்கத்து உறவுடன் இவர்களுக்குப் பழக்கம் விட்டுப் போயிற்று. அத்தை மட்டும்தான் தந்தை வழியில். “உங்கப்பன் எப்பவுமே சொய நலம் புடிச்சவன். உங்க மாமன் ரிடயர் ஆகியாச்சு. வட்டியில கூழோ, கஞ்சியோ குடிச்சுக்குனு கடக்கோம். நீ கெட்டிக்காரி, சுகு. வெவரமா பொழச்சுக்க.” அத்தையை விட, அப்பனை விட தான் எப்படி கெட்டிக்காரியென இவளுக்குப் புரியவில்லை.

மூவரின் படிப்பும் குடும்பச் செலவுகளும் இவளை பயமுறுத்தின. வாடகை அதிகம் எனத் தோன்றி இடத்தை மாற்றினாள்; ஏதேதோ சொல்லி அட்வான்ஸை வீட்டுக்காரர் தர மறுத்தார். சரவணனிடம் போகலாமா என்று நினைத்தவள் தயங்கி விட்டுவிட்டாள்.

புது வீடு, கிட்டத்தட்ட ஒண்டுக்குடித்தனம்; காற்று, வெளிச்சம் போன்றவை தவறியும் வராத இடம். ஆறு வீடுகளுக்கு ஒரு குளியலறை, ஒரு கழிப்பறை. எதிலும் தண்ணீர்க் குழாய் கிடையாது. கைபம்ப்பில் அடித்து எடுத்துச் செல்ல வேண்டும். சின்னவள் கௌரி கூடப் பரவாயில்லை, ராதாவைத்தான் சமாளிக்கவே முடியவில்லை. இளமையின் தலை வாசலில் நிற்பவள், அவள் எல்லாவற்றுக்கும் ஆசைப்பட்டாள், பறக்கத் துடித்தாள்.

‘நீ மட்டும் புதுப் புடவை கட்டிப்பியா? எங்களுக்கு யூனிஃபார்ம் தான் வாங்கித் தருவியா?’ என்று ஆங்காரப்பட்டாள்.

“காலேஜுக்கு நல்ல புடவ இல்லடி; உங்களுக்கும் புதுசுதான வாங்கிருக்கேன்.”

‘அப்பா பணத்த உனக்கு மட்டும்னு நெனைக்காத.’

அவளைத் திட்டுவதற்கு எழுந்த நாவை அடக்கிக்கொண்டாள்-நல்ல நாளும் அதுவுமா, எதுக்கு அழுகையும், பூசலும்?
இந்தத் தீ எப்போது பொசுக்குமோ, யாரறிவார்?

‘நா பௌடர் டப்பா வாங்கினப்போ கத்தினியே, இப்பக் கொழச்சுக் கொழச்சுப் பூசிக்கற.’ என்றாள் ராதா.

“இன்டர்வ்யூவுக்குப் போறேண்டி, நல்ல வேல இது, கடச்சா நம்ம ப்ராப்ளமெல்லாம் தீந்துடும்.”

நிரந்தரப் பணியில்லை அது. ஆனாலும், ஆறு மாதங்கள் அவளுக்கு வாய்ப்பு தொடர்ந்து கிடைத்தது. அங்கே சங்கர் அறிமுகமானான். அவள் வேலை பார்க்கும் கம்பெனிக்கு முக்கிய இயந்திரப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் ஒரு சிறு தொழிற்கூடம் அவனுடையது.
இன்வாய்ஸ், டெபிட் நோட், பேமென்ட் சம்பந்தமாக அவளைத்தான் அவன் முதலில் பார்க்க வேண்டும். தன் கடந்த காலத்தை அறியாத, தன்னைப்போலவே அதிகம் பேசாத, சுமாரான தோற்றமுள்ள அவனை அவளுக்கு மிகவும் பிடித்தது. அவன் அவளை விரும்புவதாகச் சொன்ன போது வானத்தில் பறந்தாள்; பதில் சொல்லவில்லை. அடுத்த முறை சந்திக்கையில் தன் கதையைச் சொல்ல நினைத்திருந்தாள். ஆனால், அவன் தன் அக்காவுடன் வீடு தேடி வருவானென சுகுணா எதிர்பார்க்கவில்லை. அதுவும் ராதா, கௌரி, அவள் என மூவரும் வீட்டிலிருந்த ஞாயிறு மதியம்; அவர்களைப் பார்த்த போதே ராதா முகம் சுளித்தாள்.

‘வீட்ல சுகு பெரியவ; எங்கள விட்டு ஓடிப் போன அப்பா மாரி இவள விட்டுட முடியாது. இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமோ இல்லையோ? எங்களயும் சேத்து நீங்க பாத்துக்கணும், வேறென்ன பண்றது?’ சங்கரின் அக்கா அரண்டு போய் விட்டாள். இந்த அதிரடியை அவர்கள் நினைத்திருக்கவில்லை. ஆனாலும், சிரித்துக்கொண்டே விடை பெற்றுச் சென்று விட்டார்கள். மறு மாதத்திலிருந்து ஒப்பந்த ஊழியர்களுக்கு வேலையில்லை என்று சொல்லிவிட்டார்கள். பீறிட்டுக் கொண்டு வந்த சிரிப்பை இவளால் அடக்க முடியவில்லை; அது கண்ணீராகிக் கரைந்தது.
தான் ஏன் சங்கரைக் கல்யாணம் செய்து கொண்டு இவர்களைத் தவிக்க விட்டு விட்டுப் போக்க்கூடாது என்று குரூரமாக நினைத்தாள். அந்த எண்ணத்தின் சூடு அவளாலேயே பொறுக்க முடியவில்லை

இவள் தினமும் பார்க்கும் ஒரு குட்டையில் ஆகாயத்தாமரையாக மண்டியிருக்கும்; பாசியும் கரும்பச்சையெனத் திரண்டிருக்கும். இதென்ன பாழானகுளம் குட்டையாகிவிட்டதா? இதில் மீன்களாவது இருக்குமா? இப்போது இவள் வேலை பார்க்கும் சிறு அலுவலகம் செல்ல இந்தக் குட்டையை ஒட்டித்தான் செல்ல வேண்டும். அதில் அடுமனை, சுடுமனையில் பதார்த்தங்கள் செய்து சுற்று வட்டாரத்தில் கொடுத்து வந்தார்கள். சில்லறை வியாபாரிகள் அங்கே கொள்முதல் செய்ய வருவார்கள். தனியாட்களுக்கு நேர் விற்பனையில்லை. பூமியில் பதித்த அடுப்பில் அங்கே அள்ளி அள்ளிக் கரியைக் கொட்டுவார்கள். கணகணவென்று கனலும், தகிக்கும், ஆனால் தீ அணையக்கூடாது. நெருப்பில் வாட்டும் பண்டம்; தீயில் வேகும் பாண்டம். அலுவலகம் கூட அந்தக் குட்டையைப் போல இருப்பதாக நினைத்தாள் இவள். உயிர்ப்பே இல்லாத இடம்; சின்னஞ்சிறு செய்திகளை ஊதிப் பெரிதாக்கி ஆபாசமாகப் பேசி மகிழும் மனிதர்களுடன் இவள் வேலை செய்தாள். எல்லாவற்றிலும் வக்கிரமான செக்ஸ் ஜோக்குகள் இவளைப் பயமுறுத்தின; கூடிய விரைவில் இந்த வேலையை விட்டு விட வேண்டும். கண்களை மிதித்து, கண்களைத் தவிர்த்து, ஊரும் கண்களை உதறி, தன் கண்களால் எரித்து, ஒரு தீயைச் சூடிக் கொண்டாள். கண்களை மீறி கைகள் வர முயன்றன; தவிர்த்துக் கொண்டே தவித்தாள்.

‘ஒரு முப்பதாயிரம் வேணும். நா படிச்சிண்டே ப்யூட்டி பார்லர் வக்கப் போறேன்.’ என்று புது பிரச்சனையைக் கொண்டு வந்தாள் ராதா. எத்தனை சொல்லியும் கேட்காதப் பிடிவாதம்; அழுகை, சாப்பிடாமல் வீம்பு, இத்தனைப் பணத்திற்கு எங்கே போவாளிவள்? ஆனாலும், ஒரு நப்பாசை-ஒருக்கால், ராதா செட்டில் ஆகிவிட்டால் இவள் சங்கரை எப்படியாவது தேடிப் போவாள். அந்த எண்ணமே உற்சாகமாக இருந்தது. அந்தக் கம்பெனி முதலாளியிடம் கேட்டாள். ஒரு சூட்டின் தழும்பு ஆறும் முன்னே மற்றொன்று கோலை நீட்டுகிறது. பணத்தை தந்த முதலாளி பின்னர் உடலைக் கேட்டான்; உடல் அடகில் வைக்கப்பட்டது. புழுவெனத் துடிக்க வேண்டியிருந்தது, செவிடென நடிக்கப் பழகிக் கொண்டாள்.

ராதாவின் பார்லரில் ஓரினப் பாலியல் சேர்க்கை கட்டாயப் படுத்தி நடைபெறுவதாக அங்கு வேலை பார்ப்பவளே சம்பளத் தகராறினால் கிளப்பிவிட, அவளைச் சேர்ந்தவர்கள் கடையை அடித்து நொறுக்கினார்கள். ராதாவை போலீஸ் அரெஸ்ட் செய்தது.

முன்னர் அப்பாவிற்காக, இப்போது தங்கைக்காக மீண்டும் காவல் நிலையம். முன்னரே சூட்டில் வெந்திருந்தாலும் ஒவ்வொரு முறையும் நெருப்பு குளிர்ச்சியாக இல்லையே! இப்போது சரவணன் பதவி உயர்வு பெற்றிருந்தான். அவன் ஏதோ தேடுவது இவளுக்குப் புரிந்தாலும், இனி என்ன செய்வது? தனிமையில் வெறி பிடித்துச் சிரித்துக் கரைந்து அழுதாள். நெருப்பில் வேகு முன், உயிரோடு எரிப்பது என்பது இதுதானோ, என்னவோ?

அந்தக் கடையும் கைமாறவே வேலை போய்விட்டது. ராதா வீட்டிற்குள்ளே முடங்கிப் போனாள். படிப்பும் பாதியில் நின்றது. அப்போதுதான் மின்னலெனத் தோன்றியது இவளுக்கு. முப்பதாயிரம் சம்பாதிக்கும் திறன் இவளிடம் இருக்கிறது. முயன்றால் இன்னமும் கூட சம்பாதிக்கலாம். இரவு நேர பேக் ஆஃபீஸ் வேலை என்று சொன்னாள். முதலில் 30% கமிஷனுக்கு ஒத்துக்கொண்டாள். அவன் பிறரிடம் 10% தான் வாங்குகிறான் எனத் தெரிய வந்த போது தன் அத்தனைத் தோல்விகளுக்கும் மொத்தமாக அவனைச் செருப்பால் அடித்தாள், ஆங்காரக் குரலெடுத்துக் கத்தினாள்.

“பொணந் தின்னிக் கழுகே, ஆரைடா ஏமாத்ற? வலியாப் போச்சுது பொழப்பு, சொரணயத்தும் நிக்குது. நாத்தமா வரானுங்க, இம்சிக்கிறானுங்க, காக்க கொத்தற மாரி கொல்றானுங்க. செத்துச் செத்து பொழக்கறேன் நானு. எம் உடம்பு நோக நீ கொள்ள அடிப்பியா? கொட்றா எம் பணத்த, புழுத்த நாயீ என்னைய இன்னான்னு எட போட்ட; காளிடா நானு, வைசூரிடா” கத்திக்கொண்டே அடித்தாள் அவனை. அப்பனையும், ராதாவையும், அந்தக் கம்பெனிக்காரனையும் நினைத்துக் கொண்டு அடித்துத் துவைத்தாள்.

‘தே… நாயே, உன்னயப் பொரட்டி அடிப்பேன்டி; கைமா பண்ணிடுவேன் கைமா; யார்ட்ட ஆட்ற? ஒரு ஆளு உனக்கு இனி வர மாட்டான் பாருடி, சிறுக்கி. எத்தினி பேருக்கு நா கொடுக்கணும் தெர்தா வுனக்கு? மேனி மினுக்கிகினு நீ பூடுவ. எங்கொத்தா தாலி நா அறுக்கணும்டி. என்னயவா அடிச்ச, பாத்துகினே இரு உன்னயப் பலி போட்டு உங்கிட்டயே மொத்த பணம் அட்ச்சுடுவேன். வும் மவுரறத்து வீசலேன்னா நா என்ன ஆம்பள? ஓங்கி அவளைச் சுவற்றில் அடித்து விட்டு அவன் போய்விட்டான். தலை புடைத்து வீங்கி வலித்தது. கௌரி மட்டும் அழுதது. இரயில் நிலையத்தில் எஃகுத் தூணில் மோதிக்கொண்டதாகச் சொன்னாள். இரு நாட்கள் கழித்து தொழிலுக்கு வந்தாள்

சும்மாதான் சொல்கிறான் என்று நினைத்தாள்; நாளைக்கு வந்தால் நைச்சியம் செய்ய வேண்டுமெனத் திட்டமிட்டாள்.

ஒரு வாரமாகத் தொழிலில்லை. அவனையும் காண முடியவில்லை. வாரம் மாதமாயிற்று. சரவணனிடம் சொல்லி காட்டிக் கொடுத்துவிடலாம் என்று கிறுக்குத்தனமாகத் திட்டமிட்டாள். மூவரும் விஷம் சாப்பிடலாமென நினைத்தாள். தங்கைகளை விட்டுவிட்டு தான் எங்காவது போய்விட்டாலென்ன என நினைத்தாள். ஓடிப்போன அப்பாவைப் பழித்த தான் மட்டும் இப்போ ஓடலாமா, அப்படியுமே எங்கே போக முடியும்? சங்கரோடு ஓடிப் போயிருக்க வேண்டும். இப்பவும் சிரித்தாள். சரவணனை நினைக்காமல் சங்கரை ஏன் விரும்பினாள் இவள்? அவன் நம்பிக்கையாகத்தானே தெரிந்தான். மனம் அவளைச் சுழற்றி அடித்தது; “இந்தச் சேற்றிலேயே உழல உனக்கு உள்ளூரக் க்ரூர ஆசை; குடும்பத்துக்காக உழைக்கறவன்னு ஊரு உன்னைக் கொண்டாடனும்; அப்பன் விட்டதைச் செஞ்சவன்னு உன் அத்த சொல்லணும்; உன் நிலை தெரிஞ்சா சங்கர் விட்டுப்போய்டுவான்னு கணக்குப் போட்டிருக்க நீ; ஆனா, சரவணன் சமாளிச்சிருப்பானோன்னு உதறின அவன. உனக்கு சில வைப்பாங்கன்னு மிதப்பு.”

இவள் பார்த்திருந்த காமாட்சி கோயிலில் ஒரு ஹோமம் செய்தார்கள் ஐந்து குண்டங்களில் தீ வளர்ந்தது; நெய்யும்,மலருமாகச் சொரிந்தார்கள்; விறகுச் சுள்ளிகள், விராட்டிகள் படபடவென்று வெடித்தன. புடவை, பூ மாலை, மங்கலப் பொருட்களை அக்னியில் வார்த்து பூரணாஹூதி நடந்தது. தீ குண்டத்திலிருந்து குதித்து எழுந்தது. காற்றில் நடனமாடியது. செந்தளிர் நாக்குகளால் உண்டு சிரித்தது. கங்கின் உஷ்ணம் அரங்கில் நிரவிப் பரவியது. இவளே அத்தனைத் தீயாகவும், அது உண்ணும் பொருளாகவுமான மாயமென்ன?

அன்றும் இவள் மனம் தளராமல் தொழிலுக்குக் கிளம்பினாள். அவனை அங்கே பார்த்ததும் பேச விரைந்தாள். ஒரு பெண்ணை முகத்தை மறைத்து அழைத்து வந்த அவன் இவளைக் கண்டு கொள்ளாமல் பக்கத்து அறையில் நுழைந்தான். முகம் தெரியாமல் ஆடை மட்டும் தெரிந்தது- அந்தக் கத்திரிப்பூ பாட்டமும், பிங்க் நிற டாப்ஸ்ஸும் இவள் அறிந்த வாசம்.

அதிர அதிரச் சிரித்தாள். எதிர் வரிசையில் பெரும் மர வரிசை மறைவில் நின்ற போலீஸ் ஜீப்பிலிருந்து சரவணன் இறங்குவதைப் பார்த்தாள். பிச்சியைப் போல் இவள் சிரிக்க அவளும், அவள்களும் சிரித்தார்கள்.