Author: பதாகை

கையெழுத்து, கிறுக்கு வழி – பானுமதி கவிதைகள்

கையெழுத்து

அவன் தான்
குழந்தைக் கைகளால்
கிறுக்கத் தொடங்குகிறான்.
கீழ் தொட்டு
பாதி வளையம் என
மேலேறிச் சாய்ந்து
இறங்கும் அதில்
எல்லாக் கையெழுத்தும் அடங்கும்
மழலையே,மேதமையே,அசடே
அதைப் படிக்க பூமி மறு பாதி
வளைகிறாள்,உனக்கும்
புரியாது அவள் கணக்குகள்.

கிறுக்கு வழி

சேர்ந்து தான் சென்றோம்
குறுக்கிட்ட நன்னீர் கால்வாய்
குட்டி தாண்டிக் குதித்தாள்.
உயரக் காலால் குட்டனும்
சரிவில் இறங்கி நீரில் நனைந்து
மேட்டில் ஏறும்போது கிறுக்கி என்றார்கள்
நீரின் பல தூரத்துச் செய்தியணிந்த கால்கள்.

விடைபெறுதல் – ராதாகிருஷ்ணன் சிறுகதை

பேரூந்துகள் அதனதன் நேர கட்டுப்பாட்டுகளுக்கு ஏற்ப வந்து நின்று சென்று கொண்டிருந்தது, பயணிகள் வருவதும் தன் பேருந்திற்காக காத்திருப்பதும் பின் ஏறிச்செல்வதுமாக இருந்தனர், நேர குறிப்பட்டையில் இருந்த தாள்களில் பஸ் வந்த நேரத்தை நடத்துனர்கள் வந்து குறித்து செல்வதுமாக இருந்தனர், அருகில் இருந்த பெட்டிக்கடை போன்ற தோற்றத்தில் இருந்த டீ கடையில் இருக்கும் பையன் இப்போது வரைக்கும் எப்படியும் 40 டீ க்கு மேல் விற்றிருப்பான், ஒரு நாய் வந்து பயணிகள் இருக்கைக்கு கீழே போய் இருந்து ஒரு தூக்கம் போட்டுவிட்டு கூட போனது, இவ்வளவுகளுக்கிடையிலும் நீள சிமிண்ட் இருக்கையில் ஓரத்தில் அம்பிகா சிலை போல துளி கூட அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தாள், அவள் பார்வை சலனமற்று வெறித்திருந்தது.

நேரம் செல்ல செல்ல அவள் மேல் எரிச்சல் எரிச்சலாக வந்தது, ஆனால் அதை சற்றும் வெளிக்காட்டி கொள்ளாமல் இருந்தேன், எப்படியாவது இவளிடம் தப்பி விட வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தேன், அவள் அருகில் அமர்வதும் சற்று தள்ளி போய் நிற்பதுமாக இருந்தேன், இந்த இடத்தில் அணைத்து மூலைகளிலும் நின்றுவிட்டேன், என்ன ஒன்று நாய் ஆக இருந்தால் அங்கெல்லாம் ஒன்றுக்கு அடித்து வைத்திருக்கும், நான் அதற்கு பதில் அங்கிருக்கும் சுவர்கள், தூண்களில் என் பைக் சாவியை வைத்து கீறி கொண்டிருந்தேன். எவ்வளவு நேரம் ஆனாலும் நானாக ஏதும் பேச வாயெடுத்து விட கூடாது என்பதில் கவனமாக இருந்தேன் அல்லது அவளில் சிறு சலனமாவது தோன்றுவதை காண காத்திருந்தேன், அது அவள் இலகுவாவதன் சமிஞ்சை, அப்போது மெதுவாக பேச ஆரம்பித்தால் இலகுவாக போய் விடும் , மாறாக நானாக பேச ஆரம்பித்து விட்டால் பிறகு நானே எல்லாவற்றையும் கெடுத்து விட வாய்ப்புண்டு, அவள் என்னை விட்டு நீங்கி விட்டால் போதும் என்றிருந்தது.

நான் இவளை சந்தித்த முதல்கணம் நடந்து சரியாக இரண்டு வருடங்கள் தாண்டி விட்டது, அப்போது இவள் ஒரு தேவதையாக இருந்தாள், என் பார்வைக்கு மட்டும் என்றும் கூட சொல்லலாம், ஏனெனில் இவளை sb பிரிண்டரில் முதலில் கண்டபோது இவளை பற்றி பிறர் சொன்ன வார்த்தை கொடுத்த அதிர்ச்சி இப்போதும் அப்படியே நினைவில் இருக்கிறது. அங்கு இருந்த மேலாளர் ராஜுவும் நானும் ஒன்றாக பணி கற்றவர்கள், அவனுக்கு தான் இருக்கும் நிலையே போதும் என்றிருந்தாதால் பணியாளனாகவே நீடித்து அப்போது மேலாளர் பொறுப்பை அடைந்திருந்தான், நான் தொழில் முனைவோன் ஆக வேண்டும் என்ற வெறியில் வெளியே வந்து அப்போதே 40 லட்சம் கடனாளியாக வளர்ந்திருந்தேன். இன்னும் இன்னும் ஓடி கடனையும் அடைத்து நானும் மேலேற வேண்டும் என்ற வெறியில் வேறெதிலும் கவனம் போகாமல் வேலை வேலை என்று அதிலேயே பைத்தியமாக சுற்றி கொண்டிருந்தேன், எல்லாம் இவளிடம் சிநேகம் கொள்ளும் வரைதான், இவள் என் வாழ்வில் வந்த பிறகு தொழில் என்பது வேண்டா விருந்தாளியாகி போனது.
நானும் ராஜுவும் அவன் அறையில் பேசி கொண்டிருந்த போது இவள் ஒரு பைல் தருவதற்காக வேண்டி கண்ணாடி கதவை திறந்து உள்ளே வந்தாள், வந்தவள் நேராக பைல் வைத்து அவனிடம் ஏதோ சொல்லி விட்டு வெளி சென்றாள், செல்லும் போது அவள் என்னை யதேச்சையாக பார்த்து செல்வதை போல கடந்து சென்றாள், அவள் என்னை பார்க்க வில்லை அளந்தாள் என்பது இப்போதுதான் யோசிக்கும் போதுதான் தெரிகிறது.

ராஜு ” எப்படி இருக்கா ” என்று சிரித்தான், நான் ” டே வந்த வேலையை பார்ப்போம் ” என்று கடுப்பாக சொன்னேன், அவன் சிரித்து ” மேட்டர்டா அவ” என்றான், அதை கேட்ட போது அதிர்ச்சி அடைந்தேன், ” அப்படி பார்த்தா நீ மகா கொடூரமான மேட்டர் டா “என்றேன் அவனிடம், அவன் அதை துளியும் வாங்கி கொள்ளாமல் ” ட்ரை பண்ணி பாரு, மாட்டுவா ” என்றான், நான் ஏதும் பதில் சொல்லாமல் தொழில் விஷயத்தில் நுழைத்து அவன் கவனத்தையும் அதில் திருப்பினேன்.

பிறகு இரு மாதங்கள் கழித்து அவளை மதுக்கரை முருகன் கோவிலில் யதேச்சையாக சந்தித்தேன், பார்த்த போது என்னை மிக தெரிந்தவன் போல புன்னகைத்து என்னை நோக்கி வந்து பேச துவங்கி விட்டாள், அவளது சங்கோஜமின்மை ஆச்சிர்யமளித்தாலும் அவளிடம் பேசும் போது அவள் முன்பே மிக பழக்கமானவள் போல உணர்ந்தேன், என்னை பற்றி என் தொழில் பற்றி எல்லா வற்றையும் அறிந்து வைத்திருக்கிறாள் என்பது மேலும் ஆச்சிரியம் தந்தது, திருமணம் ஆகி சில வருடங்களே ஆகியிருக்கும் என தோன்றும் உடல் கொண்டிருந்தாள், குழந்தைமை சிரிப்பு, சிரிக்கும் கண்கள், லேசாக இடது பக்கத்தில் மட்டும் குழி விழும் கன்னங்கள், வட்ட முகம், அளவான 5அடி உயரம், முகத்திற்கு வந்து அவ்வப்போது என்னாச்சு என கேள்விகள் கேட்டும் ஓர முடிகள், அதை அடிக்கடி பொருட்படுத்தாது தள்ளி விடும் அவளது இடது கைவிரல்கள், ஆம் அவள் இடது கை பழக்கம் கொண்டவள், அந்த விரல்கள் மஞ்சள் வண்ணமடிக்கும் பசு வெண்ணையால் உருவாக்க பட்டிருந்தது போல, தொட தொட உருகி விடும் போல இருந்தன, நான் அவளிடம் பேசும் போது கிட்டத்தட்ட மிதந்து கொண்டிருந்தேன், என்ன பேசினேன் என்றெல்லாம் இப்போது எதுவுமே ஞாபகமில்லை, ஆனால் கடைசியாக கேட்டது மட்டும் ஞாபகம் இருக்கிறது, திருமணம் ஆகிவிட்டதா என்று கேட்டேன், ஏனெனில் அவளில் திருமனம் ஆனதற்கான குறிப்பு பொருட்கள் எதுவும் காண முடியவில்லை, ஆனால் அவளிடம் இருந்த சகஜம் அது தாண்டி என்னை ஒரு அடுத்த ஆன் என காணாத குணம் கண்டிப்பாக இவளுக்கு திருமணம் ஆகியிருக்கும் என்று எண்ண வைத்தது, அவள் ‘ஆம் ‘ என்று சொன்னாள், ஆனால் அந்த கேள்விக்கு பிறகு அவளில் இருந்த பேச்சின் உற்சாகம் குறைந்து போனது, அதன் பிறகு ஒன்றிரன்டு சொற்களுக்குளாக பேச்சு முறிந்து “பார்ப்போம் “என சொல்லி கொண்டு பிரிந்தோம்.

அடுத்த இரண்டு நாட்கள் உள்ளாகவே ராஜுவின் பணியிடமான sb பிரிண்டர் க்கு சென்றேன், அவளை பார்க்கவேண்டும் என்பதற்காகவே, ராஜு தீவிரமாக தொழில் பற்றி பேசிக்கொண்டிருந்தான், ஏன் இப்படி அறுத்து தள்ளி கொண்டிருக்கிறான் என்று எண்ணிக்கொண்டே அவன் சொல்வதை கவனமாக கேட்பவன் போல பாவனை செய்து கொண்டிருந்தேன், மனம் முழுதும் அவளை காணும் விளைவுதான் இருந்தது, அவள் அறைக்குள்ளேயே வரவில்லை, பின் சோர்ந்து” சரி வருகிறேன் ” என்று சொல்லி அறை விட்டு வெளியே வரும் சமயத்தில் சரியாக அவள் வந்து கொண்டிருந்தாள், என் மனம் பரிட்சை தாள் முடிவை அறியும் தத்தளிப்பில் ஆடி கொண்டிருந்தது, அவள் அதற்கு முன்பு என்னை பார்த்திராதவள் போல எந்த சலனமும் அற்று என்னை கடந்து ராஜுவின் அறைக்குள் சென்றாள்.

கோபம் கோபமாக வந்தது, மனதிற்குள் “தேவிடியா ” என்று சொல்லி கொண்டு அங்கிருந்து வெளியேறினேன், பின் இரண்டு நாட்கள் உள்ளாவே அவளை மறந்து போனேன், அவள் ஜாடையில் யாரையாவது பார்த்தால் மட்டும் அவள் ஞாபகம் வரும், கூடவே அவள் மீது ஒரு வசை சொல்லும் என் மனதில் எழுந்து நிற்கும்.

பிறகு இரு மாதங்கள் கடந்திருக்கும், ஞாயிறு காலை அன்று, செல்பேசியில் பெயர் பதியாத ஒரு எண் தொடர்ந்து அழைத்து கொண்டிருந்தது, யாராவது கடன்காரனாக இருப்பான் என்று எடுக்காமல் இருந்தேன், பிறகு அந்த என்னில் இருந்து நான் அம்பிகா என்ற ஒரு குறுந்செய்தி வந்தது, அதுவரை அது அவள் பெயர் என்று கூட தெரியாது, ஆனால் அந்த பெயர் அவள்தான் என்று உள்ளுணர்ந்தேன், அது சரியாகவும் இருந்தது. திரும்ப நானே அழைத்து ” யார் நீங்கள் ” என்று கேட்டேன், அவள் உடைந்த குரலில் ” உங்களை சந்திக்க முடியுமா ” என்று கேட்டாள், உடனே ” எங்கு இருக்கிறீர்கள் “என்று கேட்டேன்.

அன்று மதியமே அவளை டவ்ன்ஹால் அருகில் இருக்கும் ஒரு உயர்தர உணவகத்திற்கு விற்கு வரவழைத்து பேசினேன், அவள் நான் ஆர்டர் செய்திருந்த எதையுமே உண்ணாமல் வெறுமனே சிலை போல தலை கவிழ்ந்து சோகத்துடன் அமர்ந்திருந்தாள், இப்போது இங்கு எப்படி அமர்ந்திருக்கிறாளோ அப்படியே அன்றும் அந்த உணவகத்தில் அமர்ந்து என் பொறுமையை மென்மேலும் சோதித்து கொண்டிருந்தாள்.

கிட்டத்தட்ட மன்றாடி கொண்டிருந்தேன், இனி மேலும் ஏதும் சொல்லா விட்டால் எழுந்து போய் விடுவேன் என்று சொன்னேன், அப்போது லேசாக அசைவு தெரிந்தது, உடையும் உறைபனி கட்டிக்கள் போல, அந்த கணம் அவளை மிக விரும்பினேன், எல்லா நாளும் எல்லா கணமும் அவள் எண் உடனிருக்க வேண்டும் என்று விரும்பினேன், அவள் என்னிடம் மெதுவான குரலில் ஆனால் உறுதியான சொற்களில் ” எனக்கு ஒரு தொந்தரவு தராத துணை வேணும், நீங்க எனக்கு ஆதரவாக இருக்க முடியுமா ” என்றாள்,நான் ” இதற்கேன் இவ்வளவு தயங்கனீங்க, கண்டிப்பா ” என்றேன்.
அதன் பிறகு அவள் வேலையை விட்டு கம்பெனியில் சேர்ந்து கொண்டாள், ராஜு நான் நாசமாக போவேன் என்று பயமுறுத்தினான், ” இதெல்லாம் வேணாம்டா என்று கெஞ்சினான், என்ன இருந்தாலும் நான் வாழ்வில் மேம்பட வேண்டும் என மனதார விரும்பும் நண்பன் அவன், ஆனால் அதன் பிறகு அவன் பணி செய்த sb பிரிண்டர் க்கு போவதையே தவிர்த்தேன், வேறு பிரிண்டர்க்கு என் ஆர்டரை அளித்தேன், அவன் செல்பேசி எண்’னையே பிளாக் செய்தேன். என் மனம் முழுதும் வசந்தம் மட்டுமே இருந்தது, அதை சிதைக்கும் எதையுமே நான் உள்ளேயே வர விடாமல் செய்தேன்.
அவள் என் நிறுவனம் மேம்பட பாடுபட்டாள், அவள் அலுவலக நேரம் 6மணிக்குள் முடிந்து விடும், ஆனால் 8 மணி வரை வேலை பார்ப்பாள், ஆனால் கம்பெனியில் மற்ற நபர்கள் 7மணிக்குள் வெளியேறி விடுவார்கள், அதிகன் பிறகு அவளை பணி செய்ய விடாமல் நான் ஆட் கொள்வேன், எங்களுக்குள் இருக்கும் உறவு வெளியே காம்பௌண்ட் வாசல் வாட்ச்மன் வரை வெளியே தெரிய பரவியிருந்தது. அவள் எப்போதும் என் எண்ணங்களுக்கு எந்த மறுப்பும் இல்லாமல் ஆட்படுவாள், ஆனால் இந்த நாள் வரை ஒரு கணத்திலும் அவளில் இருந்து ஒரு தன்முனைவு கூட வெளிப்பட்டதில்லை, நான் விரும்பும் படியாக அவள் உடல் மாறும், அவ்வளவுதான், போலவே கெஞ்சியோ அல்லது விட்டு விடாதீர்கள் எனும் அபலை குரலோ அவளில் என்றுமே வெளிப்பட்டதில்லை, அதே சமயம் அவள் பிடி என்னை கட்டு படுத்துகிறது என்று எப்போதும் நான் சிறு அளவில் கூட உணர்ந்ததில்லை. அவள் வருகை என் நிறுவனத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றது, அவள் சொல்லுக்கு பணியாட்கள் மட்டுமல்ல மிசின் கூட கட்டுப்பட்டது, அவள் யாரையும் அதட்டி ஒரு சொல் கூட சொல்லி நான் பார்த்ததில்லை, அவளுக்கு நேர்மாறாக நான் முன்பு கோபம் வந்தாள் கெட்டவார்த்தைகளாக கொட்டுவேன், பிறகு கெஞ்சி கொண்டிருப்பேன், அவள் வந்த பிறகுதான் தொழில் என்பது மாடு பிடிக்கும் வேலையல்ல என்பதையெல்லாம் உணர்ந்தேன்.

அவளை விட்டு விலக நினைத்த முதல் கணம் கூட அப்படியே ஞாபகம் இருக்கிறது, அந்த அதிர்ச்சியை எல்லாம் என் கட்டை வெந்து அழிந்தாலும் மறக்க முடியாத நினைவுகளாக நின்றிருக்கும், ஒரு நாள் ஒரு பையனுடன் கம்பெனி வாசலில் பேசி கொண்டிருந்தாள், அவனை பின்பக்கமாகதான் முதலில் பார்த்தேன், அவளை விட்ட சற்று உயரமாக ஸ்டைலான உடையில் இருந்தான், மனம் பார்த்தவுடனே உள்ளிற்குள் பறையடிக்க ஆரம்பித்து விட்டது, மெதுவாக அவர்கள் பக்கம் வந்தேன், அவள் நான் வருவதை உணர்ந்ததும் மகிழ்ச்சியான முகத்துடன் ” என் பையன், +2 படிக்கிறான் ” என்று அறிமுக படுத்தினாள், அவன் என்னை பார்த்து சிரித்து வணக்கம் வைத்தான், எனக்கு அதிர்ச்சி தூக்கி வாரிப்போட்டது, அதை வெளிக்காட்டாமல் எந்த ஸ்கூல் என்று விசாரித்து பிறகு அவளிடம் ” நான் உள்ளே போகிறேன் ” என்று நகர்ந்தேன்.

அவளின் வயதை பற்றி நான் யோசித்ததே இல்லை, 32-33 இருக்கும் என்று நினைத்திருந்தேன், முக்கியமாக என் வயது எல்லாத்துக்கும் என்னை விட சற்று இளையவள் என்று இது வரை எண்ணியிருந்தேன், ஆனால் இந்த வயதில் ஒரு மகன் இருப்பான் என்று எண்ணியதே இல்லை, முன்பு ஏதோ ஒரு சமயத்தில் எனக்கு ஒரு மகன் உண்டு என்று சொல்லியிருக்கிறாள், அது சற்று உறுத்தினாலும் மேற்கொண்டு அதை பற்றி அவளிடம் பேசியதே இல்லை, அவள் கடந்த கால வாழ்வு பற்றி எனக்கு எதுவும் தெரியாது, அதிகம் போனால் அவள் வீடு பூமார்க்கெட் பக்கம் எங்கோ இருக்கிறது என்று மட்டும்தான் தெரியும். இந்த ஒரு விஷயம் இவளை என்னிடம் இருந்து வெகுதூரம் நகர்த்தி விட்டது அல்லது நான் மனதால் விலகி ஓடினேன்.

பிறகு அவளை தவிர்க்க ஆரம்பித்திடேன், அதன் பிறகு அவள் உடல், அவள் இருப்பு எல்லாமே சலிக்க ஆரம்பித்து விட்டது, காரணமில்லாமல் திட்ட ஆரம்பித்தேன், அப்போதெல்லாம் மவுனமாக அழுவாளே தவிர சத்தம் போட்டு சண்டை எல்லாம் போட மாட்டாள், ஒரு வேளை என்னை சிறிது மிரட்டினாலும் அவளுக்கு அடங்கி போய்விடுவேன் என்பதை என்னை விட அவள் நன்குணர்வாள் என்றாலும் கூட. பிறகு அலுவலகம் செல்வதையே குறைத்தேன், தாபா சென்று விடுவேன், காலை பத்து மணி போனால் 1 மணி வரை அங்கு இருப்பேன், இரு பீர்கள் தாங்கும் உடல் என்னுடையது, மூணாவதற்க்கு முயன்றால் மட்டையாகி விடுவேன், சாயங்காலம் அலுவலகம் போய் அரைமணி நேரம் மட்டும் கூட இருக்க இருப்பு கொள்ளாமல் எழுந்து ஓடி விடுவேன், ஆனால் அலுவலகம் என்னை சற்றும் பொருட்படுத்தாமல் நல்ல நிலையில் சென்று கொண்டிருந்தது. நானும் அம்பிகாவும் பேசுவதே கிட்டத்தட்ட நின்று மாதங்கள் ஆகி இருந்தது. அப்படியே நகர்ந்து கொண்டிருந்தது,

பிறகு நேற்று மாலை அலுவலகம் நான் சென்று உள்ளே அமர்ந்ததும் அவள் உள்ளே வந்து அறை கதவை சாத்தினாள், என் போதை எல்லாம் இறங்கி அவளையே பார்த்து கொண்டிருந்தேன், நான் எதிர்பார்த்தது எல்லாம் அவளிடம் இருந்து இரு அறைகள், கூட நான்கு மிரட்டல் வார்தைகள், அப்படியே அவளிடம் சரணடைந்து மீண்டு விடுவேன். ஆனால் அவள் இருக்கையில் அமராமல் நேரடியான வார்த்தைகளில் என்னிடம் பேசினாள் ” நான் உங்கள்ட்ட கொஞ்சம் பேசணும்”, நான் ஒன்றும் சொல்லாமல் அவளையே பார்த்து கொண்டிருந்தேன். ” ஊருக்கே போயிடலாம் னு இருக்கோம், பையனும் சரினு சொல்லிட்டான், அங்க வீடு சும்மா கிடக்கு, இனி இப்படி ஊரை விட்டு இருக்காம அங்கேயே இருந்தடலாம் னு இருக்கோம், பையன் முன்னாடியே கிளம்பி போயிட்டான், நான் நாளைக்கு காலைல கிளம்ப இருக்கேன், என்ன வழியனுப்ப வருவீங்க னு நம்பறேன் ” சொல்லி என் பதிலை எதிர்பார்க்காமலேயே கதவை வேகமாக திறந்து வெளி கிளம்பினாள்.

மெதுவாக அவள் முகம் நிமிர்வது தெரிந்தது, முடியை தடவி சரி செய்து கொண்டாள், முகத்தில் சோகம் அப்பி கிடந்தது, அப்போது அவளில் இருந்த நிசப்தத்தை அறுக்கும் வாளாக ஒரு வெண்ணிற தனியார் பேரூந்து வந்து நின்றது, அவள் வேகமாக எழுந்து தன் கைப்பையை இடது தோளில் போட்டு அதன் மீதே அவள் அருகில் இருந்த இன்னொரு பெரிய துணி பையை போட்டு பேரூந்து நோக்கி நடந்தாள், நான் தன்னிச்சையாக அவள் அருகில் சென்று நின்றேன். எனை பார்த்ததும் அவள் வர விருந்த கண்ணீரை கஷ்டப்பட்டு மறைத்து புன்னகையை வரவழைத்து கொண்டு என்னை நோக்கினாள், அப்பொழுது அனிச்சையாக அவளது வலது கரம் என் கேசத்திலும் கன்னங்களும் மிருதுவாக அலைந்தது.

அபூர்வ மனிதர்கள் -மா.பா.குருசாமியின் ‘நான் கண்ட மாமனிதர்கள்’ நூல் குறித்து பாவண்ணன்

1959இல் சென்னை கிறித்துவக்கல்லூரியில் பொருளாதாரத்துறையில் பட்டப்படிப்பை முடித்தார் ஓர் இளைஞர். போட்டித் தேர்வெழுதி வெற்றி பெற்று அரசு வேலைக்கு எளிதாகச் செல்லும் தகுதி அவருக்கு இருந்தது. ஆனால் அவருக்கு அரசு வேலைக்குச் செல்ல விருப்பமில்லை. அவருக்குள் ஊறியிருந்த எழுத்தார்வம் அவரைத் தடுத்தது. தன் மனத்துக்குப் பிடித்த எழுத்தாளரும் பேராசிரியருமான மு.வரதராசனாரை நேரில் சந்தித்து ஆலோசனை கேட்டார். வாழ்க்கையை நடத்த ஒரு வேலையை உறுதிப்படுத்திக்கொண்டு எழுதலாமே தவிர, எழுத்துத்துறையிலேயே வாழ்வது சரியல்ல என்று ஆலோசனை வழங்கினார் அவர். அப்போதும் அந்த இளைஞர் அரசு வேலைக்குச் செல்ல விரும்பவில்லை. சென்னையிலிருந்து புறப்பட்டு வந்து கல்லுப்பட்டி காந்திநிகேதனில் வேலைக்குச் சேர்ந்தார். அவர் பெயர் மா.பா.குருசாமி.

கல்லுப்பட்டியில் தங்கியிருந்த ஜே.சி.குமரப்பாவின் தொடர்பு அவருடைய பொருளாதாரம் பற்றிய கருத்துகளை மெருகேற்றிக்கொள்ள உதவியது. அவர் எழுதிய பணம், வங்கி, பன்னாட்டு வாணிபம், பொதுநிதி இயல்கள் ஒரு முக்கியமான புத்தகம். கல்லுப்பட்டி ஆசிரமத்திலிருந்து அவர் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியச் சென்றார். மதுரைப்பல்கலைக்கழகம் காந்தியக்கல்வி என்னும் துறையைத் தொடங்கியபோது, அதில் பணியாற்றுவதற்காக மு.வ.வின் அழைப்பின் பேரில் சென்றார். அங்கிருந்தபடியே வள்ளலார் தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்று திருச்செந்தூர் கல்லூரிக்கே பேராசிரியராகத் திரும்பி வந்தார். அங்கேயே முதல்வராக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்றார். பணிக்காலத்திலும் அதற்குப் பிறகான ஓய்வுக்காலத்திலும் காந்தியம் சார்ந்தும் பொருளாதாரம் சார்ந்தும் அவர் எண்ணற்ற நூல்களை எழுதினார். காந்தியடிகளும் கார்ல்மார்க்சும் அவருடைய சிறந்த ஆய்வுநூல்.

நான் கண்ட மாமனிதர்கள் மா.பா.குருசாமியின் நூல்களில் மற்றொரு முக்கியமான நூல். அவருடைய நினைவலைகள் வழியாக விரிந்தெழும் பதினாறு ஆளுமைகளைப்பற்றிய சித்திரங்கள் இந்த நூலில் உள்ளன. காந்தியத்தில் தோய்ந்த ரா.குருசாமி, க.அருணாசலம், கோ.வேங்கடாசலபதி, ஜெகந்நாதன், வீ.செல்வராஜ், க.ரா.கந்தசாமி, ஜீவா, லியோ பிரவோ போன்றவர்களும் இப்பட்டியலில் அடக்கம். அவர்கள் தனக்கு அறிமுகமான விதத்தைப்பற்றிய சித்தரிப்போடு தொடங்கும் ஒவ்வொரு கட்டுரையும் அந்த ஆளுமைகள் செயல்பட்ட விதங்களையும் அவர்கள் ஆற்றிய சேவைகளையும் கோர்வையாகப் பட்டியலிட்டுக் காட்டுகின்றன. இவர்களுடை வாழ்க்கை வரலாறுகள் தனிநூலாகவே எழுதப்பட வேண்டியவை. மீண்டும் மீண்டும் வாசிக்கப்படவேண்டியவை. இவர்கள் வழியாகவே இலட்சியவாதம் அடுத்த தலைமுறைத் தொட்டு வளரவேண்டும்.

லியோ பிரவோ அபூர்வமான ஒரு ஆளுமை. பெல்ஜியத்தில் பிறந்து இந்தியாவுக்கு வந்து முப்பதாண்டுகளுக்கும் மேல் தமிழ்நாட்டில் வாழ்ந்து மக்களுக்குத் தொண்டாற்றி மறைந்தவர். இங்கு வாழ்கிறவர்களே தமக்கு அருகில் வாழ்கிற சகமனிதர்களைப்பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் ஒதுங்கி வாழ்கிற சூழலில் எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து இங்கு அவர்களைச் செல்லத் தூண்டிய விசைக்கு இலட்சியவாதம் என்னும் பெயரை அன்றி வேறெந்த பெயரைச் சூட்டமுடியும்? மா.பா.குருசாமி பிரவோ பற்றி எழுதியிருக்கும் நினைவலைகள் இந்த நூலின் மிகமுக்கியமான பகுதி.

லியோ பிரவோ பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்னால், அவருடைய கவனத்தை இந்தியாவின் பக்கம் திருப்பிய ஜோசப் ழீன் லான்சா டெல் வாஸ்டோவைப்பற்றி முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அவர் இத்தாலியில் தத்துவ இயல் படித்தவர். கவிஞர். காந்தியடிகளைப்பற்றி ரோமன் ரோலண்ட் எழுதிய புத்தகத்தைப் படித்துவிட்டு காந்தியடிகளைச் சந்திப்பதற்காக 1936இல் இந்தியாவுக்கு வந்தார். ஏறத்தாழ ஆறுமாத காலம் காந்தியடிகளோடு தங்கி, அவர் செல்லுமிடங்களுக்கெல்லாம் சென்று, அவருடைய செயல்பாடுகளைக் கவனித்தார். காந்தியடிகள் அவருக்கு சாந்திதாஸ் என்று பெயரிட்டார். அகிம்சைப் போராட்ட வழிமுறைகளைப்பற்றி தனக்கெழுந்த ஐயங்களையெல்லாம் காந்தியடிகளுடன் உரையாடித் தெளிவு பெற்றுக்கொண்டு இத்தாலிக்கு திரும்பிச் சென்றார் சாந்திதாஸ். தன் இந்திய அனுபவங்களைத் தொகுத்து ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டார்.

காந்திய வழியில் தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என முடிவெடுத்த சாந்திதாஸ் ஆர்க் சமுதாயம் என்னும் பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கினார். அவர் நினைத்த அளவுக்கு அது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. எல்லாக் குறுக்கீடுகளையும் கடந்து ஒத்த சிந்தனையுடையவர்களைத் திரட்டி அந்தக் குழுவை அவர் ஏற்படுத்தி அகிம்சைப்போராட்ட வழிமுறையைப்பற்றிய நம்பிக்கையை மக்களிடையே விதைத்தார். 1954இல் மீண்டும் இந்தியாவுக்கு வந்து வினோபாவுடன் பூமிதான யாத்திரையில் கலந்துகொண்டார். 1957இல் அல்ஜீரியப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் ஆர்க் சமுதாயத்தின் சார்பில் மக்களுடன் இணைந்து கொடுமைக்கெதிரான அமைதிப்போராட்டத்தை முன்னெடுத்தார். காந்தியடிகளின் வழியில் பிரான்சு அரசு நிறுவ திட்டமிட்டிருந்த அணு உலைகளுக்கு எதிராக, கண்டனத்தைத் தெரிவிக்கும் விதமாகவும் மக்களிடையில் விழிப்புணர்ச்சியை உருவாக்கும் விதமாகவும் 21 நாட்கள் உண்ணாவிரதமிருந்தார். போப் ஆண்டவர் போருக்கு எதிராக குரல் கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி ஒருமுறை ரோம் நகரில் 40 நாட்கள் உண்ணாவிரதமிருந்தார்.

ஆர்க் சமுதாயத்தின் கிளைகள் பல இடங்களில் உருவாக்கப்பட்டன. பெல்ஜியத்தில் அக்குழுவுடன் இணைந்த லியோ பிரவோ மிகக்குறுகிய காலத்திலேயே மிகச்சிறந்த தொண்டர் என்னும் பெயரைப் பெற்றார். அவருடைய தொண்டுணர்வைப் புரிந்துகொண்ட சாந்திதாஸ், அவரை இந்தியாவுக்குச் சென்று தொண்டாற்றும்படி கேட்டுக்கொண்டார். அவர் உடனே இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார். வார்தாவில் சிறிது காலம் தங்கியிருந்துவிட்டு கல்லுப்பட்டியில் உள்ள காந்திநிகேதனுக்கு வந்தார். ஓராண்டுக்கும் மேல் அங்கு தங்கியிருந்து காந்திய வழிகள் பற்றியும் ஆசிரம வாழ்க்கையைப்பற்றியும் கிராமப்பணிகள் பற்றியும் தெரிந்துகொண்டார். எல்லோரும் இன்புற்று ஒற்றுமையாக வாழ்கிற சர்வோதய சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்னும் விருப்பம் அவருக்குள் எழுந்தது.

பூமிதான இயக்கத்துக்காக கடவூர் ஜமீன்தார் தன்னிடம் இருந்த 300 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியிருந்த நேரம் அது. அந்த இடத்தின் பெயர் சேவாப்பூர். அங்கு தங்கி ஏழை மக்களுக்கு உதவும்படி பிரபோவிடம் கேட்டுக்கொண்டார் கெய்த்தான். கல்லுப்பட்டி காந்தி நிகேதனிலிருந்து சேவாப்பூருக்கு வந்து சேர்ந்தார் பிரவோ. இன்ப சேவா சங்கம் என்னும் பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி, அதன் வழியாக சேவாப்பூரில் ஒரு சமத்துவபுரத்தைக் கட்டியெழுப்பினார் பிரவோ. சேவாப்பூரைப்போலவே அவர் அமைத்த மற்றொரு புதிய கிராமம் வினோபாஜிபுரம். இதற்கு வேண்டிய நிதியின் ஒரு பகுதியை அரசு வழங்கினாலும் பெல்ஜியத்தில் வசிக்கும் நண்பர்கள் வழியாகவும் தன் சொத்துகளை விற்றுப் பெற்ற பணத்தின் வழியாகவும் பெரும்பகுதியான தொகையைத் திரட்டினார். ஏறத்தாழ முப்பதாண்டுக்காலம் ஏழை மக்களின் உயர்வுக்காக அந்தப் பகுதியிலேயே சேவையாற்றி மறைந்தார் பிரவோ.

காந்தியமே மக்கள் சேவைக்கான அடிப்படை விசை. க.அருணாசலம், கோ.வே., ரா.குருசாமி, ஜீவா போன்றோரைப்பற்றி எழுதியிருக்கும் நினைவலைகளிலும் இந்தப் புள்ளியை வெவ்வேறு கோணங்களில் தொட்டுக் காட்டுகிறார் மா.பா.குருசாமி. அவர் நினைவலைகள் வழியாக திரண்டெழும் ஜீவாவைப்பற்றிய சித்திரம் உயிர்த்தன்மையோடு காணப்படுகிறது.

ஜீவாவைச் சந்திக்கச் செல்லும்போது அவர் கல்லூரி மாணவர். சந்திரபோஸ் மணி என்பவர் அவருடைய கல்லூரி நண்பர். அவருடைய சித்தப்பா பொதுவுடைமைத் தலைவர்களில் ஒருவரான கே.டி.கே.தங்கமணி. ஒருநாள் தன் சித்தப்பாவைச் சந்திக்க மணி செல்கிறார். அப்போது அவருக்குத் துணையாக குருசாமியும் செல்கிறார். இருவரும் கட்சி அலுவலகத்துக்குள் நுழைகிறார்கள். உள்ளே கட்சியின் உட்குழுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்ததால் வெளியே அமரவைக்கப்படுகிறார்கள். தற்செயலாக அந்த அலுவலக வளாகத்திலேயே ஜனசக்தி இதழின் அலுவலகமும் இருப்பதைப் பார்க்கிறார் குருசாமி. அதைப் பார்த்ததுமே அந்த இதழின் ஆசிரியர் ஜீவாவின் நினைவு அவருக்கு வருகிறது. உடனே ஜீவாவை இருவரும் பார்க்கச் செல்கிறார்கள். அறைக்கு வெளியே இருந்த தோழரிடம் தம் விருப்பத்தைத் தெரிவிக்கிறார்கள். அவர் உள்ளே சென்று பார்க்கும்படி சொல்கிறார். உள்ளே யாருமில்லை. அந்தப் பக்கமாக வந்த ஒருவர் அவர் அச்சுக்கோர்க்கும் பகுதியில் இருப்பதாகவும் விரைவில் வருவார் என்றும் தெரிவித்துவிட்டுச் செல்கிறார். சிறிது நேரத்தில் அவரே வந்துவிடுகிறார். அற்புதமான ஓர் ஆளுமையான ஜீவாவின் அறிமுகம் அப்படித்தான் அவர்களுக்குக் கிடைக்கிறது.

ஒருமுறை கல்லூரி திருவள்ளுவர் மன்றத்தின் சார்பாக ஒரு நிகழ்ச்சியில் பேச ஜீவாவை அழைக்கிறார் குருசாமி. மகாகவி கண்ட கனவு என்னும் தலைப்பில் கையில் எந்தக் குறிப்புமின்றி அழகாக சொற்பொழிவாற்றுகிறார் ஜீவா. மற்றொரு முறை கம்பரைப்பற்றிப் பேச அழைக்கிறார். அப்போது அண்ணாவின் ‘கம்பரசம்’ வெளியாகி நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் பேச்சுகள் எழுந்த நேரம். அரசியல் கலக்காமல் பேசும்படி கேட்டுக்கொள்கிறார் துறைத்தலைவர். கம்பன் பாடல்களின் பொதிந்திருக்கும் கவிநயத்தையும் கற்பனை வளத்தையும் சுட்டிக்காட்டி தன் உரையை முடித்துக்கொள்கிறார் ஜீவா.

மா.பா.குருசாமியின் காலத்தில் நல்ல எழுத்தாளராகவும் இலக்கியப் பேச்சாளராகவும் விளங்கியவர் ம.ரா.போ.குருசாமி. அவர் மு.வ.வின் நேரடி மாணவர். கோவையில் பணிபுரிந்து வந்தார். இருவருமே தமிழ்நாடு என்னும் இதழில் எழுதி வந்தனர். ஒருமுறை திருநெல்வேலி தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ம.ரா.போ.குருசாமியை தம் கல்லூரிக் கூட்டத்துக்கு தலைமை தாங்க அழைக்க நினைத்தார்கள். ஆனால் அவர்களிடம் தொடர்பு முகவரி இல்லை. அதனால் அவர்கள் தமிழ்நாடு இதழுக்கு எழுதிக் கேட்டார்கள். அவர்களும் அனுப்பிவைத்தார்கள். ஆனால் அது மா.பா.குருசாமியின் முகவரி. அது தெரியாமல் அவரை கூட்டத்துக்கு அழைத்து வந்துவிட்டார்கள். நிகழ்ச்சிக்கு வந்த பிறகு, அவருடைய வயதைப் பார்த்த பிறகே அவர்களுக்கு உண்மை புரிகிறது. உடனே அவருடைய தலைமையில் பேசமாட்டோம் என ஆசிரியர்கள் மறுக்கிறார்கள். நிகழ்ச்சி தொடங்கவிருக்கும் நேரத்தில் இது என்ன புதுக்குழப்பம் என்று நினைக்கிறார் மா.பா.குருசாமி. தக்க சமயத்தில் இடையில் புகுந்த துறைத்தலைவர் இவர்தான் தலைமை தாங்குவார், போய் அமருங்கள் என்று ஆணித்தரமாக தெரிவித்துவிடுகிறார். அன்றைய தலைமை உரையை மிகச்சிறப்பாக நிகழ்த்துகிறார் மா.பா.குருசாமி. அன்று அவரை சங்கடத்திலிருந்து மீட்ட துறைத்தலைவர் பேராசிரியர் நா.வானமாமலை. இப்படி ஓர் அறிமுகத்தோடு தொடங்குகிறது அவரைப்பற்றிய கட்டுரை.

இன்று வீட்டிலிருந்து தெருவில் இறங்கினால் ஒவ்வொரு நாளும் நடைபாதையில், பேருந்துகளில், புகைவண்டிகளில், சந்தைகளில், அரங்குகளில், பொழுதுபோக்கும் இடங்களில் என எண்ணற்ற இடங்களில் ஏராளமானவர்களை நாம் பார்க்கிறோம். அவர்களில் எத்தனை பேரை நேருக்கு நேர் நிமிர்ந்து பார்க்கிறோம், எத்தனை பேரிடம் உரையாடுகிறோம், எத்தனை பேரிடம் நட்புடன் இருக்கிறோம் என கணக்கிட்டுப் பார்த்தால் நம்மை நாமே எடைபோட்டுக் கொள்ளலாம். இப்படிப்பட்ட சூழலில் நட்பைத் தேடிச் செல்வதும் தொடர்வதும் ஒவ்வொரு நட்பும் வாழ்நாள் முழுதும் நீடிப்பதும் அபூர்வமான செய்திகள். அபூர்வமான மனிதர்களுக்கே அத்தகு அபூர்வமான வாய்ப்புகள் அமைகின்றன. மா.பா.குருசாமி அபூர்வமான மனிதர்களில் ஒருவர். தான் சந்தித்த மாமனிதர்களை தம் சொற்சித்திரங்கள் வழியாக நம்மையும் சந்திக்கவைக்கிறார்.

(நான் கண்ட மாமனிதர்கள். மா.பா.குருசாமி. சர்வோதய இலக்கியப்பண்ணை, மதுரை. விலை.ரூ70)

ஸ்ரீஜீ – காளிப்ரஸாத் சிறுகதை

ஸ்ரீமந்நாராயணன் தன் பஜாஜ் எம்.எய்ட்டியின் ஹார்னை விடாமல் அடித்தபடி இருந்தார். பரிதவிப்புடன் கழுத்தைத் தூக்கிப் பார்த்தபடியே இருந்தார். அவருக்கு இரு பக்கத்திலும் இருந்த பைக்காரர்கள் அடித்த ஹார்ன் ஒலியில் இது கேட்கவே இல்லை. இருந்தாலும் விடாமல் அவர் அடித்துக் கொண்டுதான் இருந்தார். அதுவும் தொண்டை கட்டிப்போன ஆட்டுக்குட்டி போல பரிதாபக் குரல் எழுப்பியது. தொலைவில் இரு கல்லூரிப் பேருந்துகள் யூடர்ன் அடித்துக் கொண்டிருந்தன. சாலையின் இருபுறங்களிலும் வண்டிகள் நின்றன. எக்குத்தாப்பாக எதிரில் இருந்து வந்த கார் இடையில் சிக்கி நிற்க ரசாபாசம் ஆகியிருந்தது. போலீஸ்காரரைப் பார்த்த அந்த பஸ் ட்ரைவர் கையை உயர்த்தி வணக்கம் சொல்லித் திருப்பிக் கொண்டிருந்தான்.

புடுங்கி.. இதே நம்ம வண்டின்னா ஓரங்கட்டி நிக்க வச்சிருப்பான்..’ என்றார் அருகில் நின்றவர்

ஸ்ரீமந்நாராயணன் முகத்தைக் திருப்பிக் கொண்டு எதிர் திசையில் பார்த்தார். இப்பொழுது சமூகம் குறித்து கவலைப்படும் நிலையில் அவர் இல்லை. போயும் போயும் இன்னைக்கா இப்படி ஆகனும் என்று அவர் படபடத்துக் கொண்டிருந்தார். மெல்ல வழி சீரானது.

அவசர அவசரமாக சென்று வண்டியை நிறுத்தி தன் அலுவலகத்திற்கு விரைந்தார். அலுவலகம் போய் மீட்டிங் ரூமுக்குள் நுழைந்து காலியான இருக்கையில் அமர்ந்தபடி சட்டை மேல் பட்டனைக் கழட்டி விட்டுக் கொண்டு, கைக்குட்டையை எடுத்து கழுத்து முகம் எல்லாம் துடைத்துக் கொண்டார். முன்மண்டையில் பாதிவரை இருந்த வழுக்கையையும் மெல்ல துடைத்தார். பின் தன் புகார் புத்தகத்தைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டு சுவர்க் கடிகாரத்தில் மணி என்ன என்று பார்த்தார். பத்து இருபத்தைந்து ஆகியிருந்தது

டி.ஜி.எம் அவரைக் கவனித்தாற்போல தெரியவில்லை. எப்படியும் தன்னுடைய பிரிவின் பிரச்சனைகளைப் பற்றி பேசியிருப்பார்கள். நோட்டுப் புத்தகத்தை விரித்து வைத்து, சென்ற வாரம் விவாதித்தவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தார். டி.ஜி.எம் இப்பொழுது உணவகத்தின் ஒப்பந்தம் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார்.

தட்டுல சாப்பாட்ட வைக்கிறப்போ ஒரு மரியாத இல்லை.. டங் குனு கரண்டியால தட்டுறானுங்க.. சாம்பார் கேட்டா இந்தப் பக்கம் போனைப் பார்த்துகிட்டு காரக்குழம்பை எடுத்து ஊத்தறானுங்க.. ஏதோ அன்னதானத்துல பரிமாறமாதிரில்ல கொட்றானுங்க.. அவங்க ஹிந்தி பேசறதும் புரியல.. ’ என்றார் அலுவலகஉணவக அமைப்பின் உறுப்பினர்

இந்த வாட்டி சின்னப் பசங்க வேணாம்னு சொல்லிட்டு கொஞ்சம் பெரியவங்களா போடச் சொல்லி கண்டிராக்டர்ட்ட சொல்லலாம் சார். அவங்கன்னா கொஞ்சம் பொறுமையா பார்த்து செய்வாங்க” என்றார் கேண்டின் மேற்பார்வையாளர்

பொறுமையான்னா எப்படி நம்ம நாராயணன் சார் மீட்டிங்க்கு வர மாதிரியா? ‘என்றார் டி.ஜி.எம்

கேண்டீன்காரர் தர்மசங்கடமாக ஸ்ரீமந்நாராயணனைப் பார்த்தார்

அவங்கிட்டயே கொஞ்சம் பார்த்து பரிமாற சொல்லுங்க.. இல்லாட்டி வேற பசங்கள மாத்துங்கஎப்படீன்னாலும் பசங்கதான் சரி. வேகமா வேலையை முடிப்பாங்க.. அதை மாத்தி வச்சா லன்ச் டைமை ரெண்டுமணி நேரமாக்கனும்.. என்ன சார்?’ என்றார் ஸ்ரீமந்நாராயணனைப் பார்த்து

அவரோ இன்னும் அஞ்சு வருஷத்துல உனக்கும் என் வயசுதாண்டா என்ற அர்த்தததில் டிஜிஎம்ஐப் பார்த்தபடி இருந்தார்

சாரி.. நல்ல ட்ராஃபிக்ரெண்டு காலேஜ் பஸ்ஸு..’

கவுந்துடிச்சா’

ஸ்ரீமந்நாராயணன் அமைதியாக இருந்தார்

ஜஸ்ட் மெய்ன்டெய்ன் டென்! காரணம்லாம் சொல்ல வேண்டாம்..இந்த வாட்டி ரமேஷை வச்சுப் பேசிட்டோம்.. தேங்ஸ்.. வில் ஜாய்ன் எகெய்ன் நெக்ஸ்ட் வீக்’

எல்லோரும் கலைந்தனர்

ண்டி நிறுத்தத்தில் இருக்கும் காவலன் மீட்டிங் ரூம் வெளியே நின்று கொண்டிருந்தான்

என்ன?’ என்றார் டி.ஜி.எம்

சாரோட பைக்க அவசரத்துல கார் பார்க்கிங்ல வச்சுட்டாரு.. மாத்தி வைக்கனும்’

இதோ வறேன்.. ‘ கிட்டத் தட்ட ஓடினார் ஸ்ரீமந்நாராயணன்

பைக்! ‘ என்று டி.ஜி.எம் சொல்லிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது.

அஞ்சாத நிருபர் வீரபத்திரன்..” என்று ஒருமுறை ஆட்கள் முன் அழைத்திருக்கிறார்..

கரடுமுரடான சாலையிலும் கட்டுறுதியான சவாரி..பஜாஜ் எமெய்ட்டி

ஸ்ரீமந்நாராயணனுக்கு ஆற்றாமையாக பொங்கி வந்தது

இருபத்தைந்து வருடங்கள் முன் இது சிறிய தொழிற்பேட்டையாக இருந்த போதிலிருந்து ஒவ்வொரு சின்ன கம்பெனி வரும்போதும் அதற்கு மின்சார கம்பி செல்லும் பாதைமுதல் கழிவு நீர் செல்லும் பாதைவரை பார்த்துச் செய்தவன். பதினைந்து வருடங்கள் முன்பு இந்தப் பகுதி சிறப்பு பொருளாதார மண்டலமாக ஆன பின்னும் சாலை விரிவாக்கம் முதல் அதன் ஓரமாக அனைத்து வித கேபிள் செல்லும் குழாயைப் பதிப்பதிலும் இறங்கி வேலை செய்தவன். அப்பொழுதெல்லாம் என்னவொரு மரியாதை இருந்தது. தன்னுடைய பழைய டிஜிஎம் களை நினைத்துக் கொண்டார். ஸ்ரீ என்று அழைத்தவர்களும் ஸ்ரீ சார் என்று அழைத்தவர்களும் ஓய்வு பெற்று சென்றுவிட்டனர். இப்பொழுது அனைத்து நிறுவனங்களும் நிலைபெற்று இந்த தொழில்முனைவோர் கூட்டமைப்பு நிறுவனமும் நிதானத்துடன் செல்கிறது. இப்படி சரியான நிலைக்கு வந்த பின் வந்த இந்த புது டிஜிஎம் முன் அவமானப்பட்டு நிற்க வேண்டியிருக்கிறது.

வயது ஆவது ஒரு குறையா என்ன? இன்றும் உட்கார்ந்த இடத்திலிருந்து எந்த கம்பேனி லைன் எங்க போகுதுன்னு சொல்ல முடியும். இதோ மேல போற ஏசி டக்ட் எங்க போய் எப்படி திரும்பும்னு சொல்லவா

எக்ஸல், பவர்பாயிண்ட்,ஆக்ஸஸ், ப்சண்டேஷன் புரொஜெக்டர்னு படம் காமிச்சே ரமேஷ் டிஜிஎம்மைக் கவுத்துட்டான்.. கூட குமாரும் ஆனந்தும் கூட அவனோட சேர்ந்துகிட்டானுங்க.. ’

அவர்களை நினைத்து முகத்தைச் சுளித்துக் கொண்டார். “பயிற்சி தொழிலாளர்களாக இருந்தவர்களை பணிநிரந்தரம் செய்த நன்றி கூட இல்லை. அதுவரை ஜி ஜி ன்னு கூப்டுகிட்டு என்னையே சுத்தி வந்தானுங்க.. இப்ப புரொஃபஷனல்லேந்து கன்ஃபார்ம் ஆக அவன் பின்னாடி சுத்தறானுங்க..’

சின்னப் பையனா எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுச் செய்யறது சரிதான். ஆனால், வயசானப்புறமும் ஏன் இப்படி அல்லாடுறீங்க.. உடம்பு ஒத்துழைக்க வேணாமா.. இனிம வேலையை குறைச்சுக்கோங்க” என்று மனைவி கேட்டு ஒருவருடம் ஆகவில்லை

எந்த நேரத்துல அப்படிச் சொன்னியோ மகராசி.. சுத்தி இருந்த தேவதை எதுவோ ‘சரி’ ந்னு சொல்லிடுச்சு போலிருக்கு..’ என்று நேற்று கூட சாப்பிடும்போது அங்கலாய்த்துக் கொண்டார்

அப்பா.. எல்லா வேலையும் நம்ம தலையில இருக்குங்கிறது மேல இருக்கறவங்களுக்கு உறுத்திக்கிட்டுதானிருக்கும்…அதனால புதுசா வந்தவங்க ஏற்கனவே வருஷக்கணக்கா இருக்கறவங்களைத் தட்டி வைக்கப் பார்ப்பாங்க..’

அப்ப, நம்ம கிட்ட ஒண்ணுமே இல்லங்கிறது உறுத்தாதா.. நீ போயி, டிகிரி எப்ப முடிக்கப் போறோம்.. என்ன வேலைக்குப் போகலாம்னு மட்டும் யோசி’ மகனிடம் பொரிந்தார்

டிஜிஎம் கூட பிரச்சனையில்லை. எனக்குத்தான் அவரு பாஸ். அவருக்கு அவரிடம் வேலைசெய்யும் பலரில் நானும் ஒருத்தன். என்னையே பார்த்துக்கிட்டு இருப்பது அவரோட வேலையில்லை. ஆனால் கூடவே இருக்கும் ரமேஷ் இருந்த சமயத்தில் நல்லா விளையாடறான். அவனோட கூட அந்த புதுப்பசங்களும் சேர்ந்து அவன் சொல்றதைதான் கேட்குறாங்க.. நேத்துவரை சார் சார் ந்னு என்னையே சுத்திக்கிட்டு இருந்தாங்க’

போதும் சாப்பிடுங்க.. நூறுவாட்டி ஆச்சு.. இன்னும் இதையே எத்தனை வாட்டித்தான் சொல்லுவீங்க.. முன்னாடி கொஞ்சம் சம்பளம் வாங்கிக்கிட்டு ராப்பகலா உழைச்சீங்க.. இத்தனை வருஷத்துல கொஞ்சம் கொஞ்சமா ஏறி இப்ப கொஞ்சம் நல்லா சம்பளம் வருது.. அதுக்கு இணயா முன்னைவிட நிறையா வேலை செய்யலைன்னு பதட்டப்படறீங்க..அனா ஒட்டுமுத்தமா பார்த்தா எல்லா கணக்கும் சரியாத்தான் இருக்கும்..’

பார்க்கிங் பகுதிக்கு வந்திருந்தார் ஸ்ரீமந்நாராயணன்

ஆனால் முன்னெப்போதும் விட ஏன் ரமேஷ் ஆர்வமா இருக்கான்? ஏதேதோ காரணம் சொல்லி சீக்கிறம் வீட்டுக்குப் போறவன், கொஞ்ச மாசமா பத்து மணிநேரம் ஆபீஸ்ல இருக்கான். டிஜிஎம் போன அப்புறம்தான் போறான். டெய்லி ரிப்போர்ட் முதல் சப்ளை வரை அனைத்தையும் கவனமா அவன் வழியாவே போவது போல பார்த்துக்கிறான். இதில் ரமேஷுக்கு வேறு ஒரு கணக்கும் கண்டிப்பா இருக்கனும். எப்படியும் எனக்குத் தெரியாமப் போயிடுமா என்ன? தான் பொருட்கள் வாங்கிய இடங்களில் இப்பொழுது அவன் வாங்குவது இல்லை. புதிதாக வேறு ஒருவர் சப்ளை செய்ய வர ஆரம்பிச்சுட்டார். கொஞ்சம் கொஞ்சமா தன் கையொப்பம் இல்லாமலேயே பொருட்கள் வாங்கப்படுது. இப்போது இங்கே தான் இல்லாமல் கூட எல்லாம் நடந்துடும்.

பார்க்கிங்கில் இருந்த காவலன் மொபைல் பார்த்தபடி அமர்ந்திருந்தான். அருகில் இருந்த அலுவலக உதவியாளனுடன் ஏதோ விவாதம். அவன் இளமையாக இருந்தான். ஸ்ரீமந்நாராயணன் அவர்களைக் கடந்து போய் வண்டியை நகர்த்தி வைத்து திரும்ப வரும் வரை அவர்கள் இவரைக் கண்டும் போனிலேயே மூழ்கியிருந்தனர்.

அந்த வண்டிய கொஞ்சம் நகத்தனும் வறியா..’

அவர்களில் இளமையாக இருந்த அலுவலக உதவியாளன், வேண்டாவெறுப்பாக எழுந்து வந்தான்

சார்.. மில்லியன்னா எவ்வளவு சார்.. ஒரு கோடிதான.. இவன் பத்தாயிரம் கிறான்..’

ஏண்டா என்ன ஆச்சு..’

இங்க பாருங்க சார்.. அழகுராணியோட வீடியோ பக்கம்சீக்கிரம் ஒரு மில்லியன் ஃபாலோயர்ஸ் வந்துடுவாங்க.. மில்லியன்னாஒரு கோடிதான சார்”

அவனை சற்று எரிச்சலாகப் பார்த்தார் ஸ்ரீமந்நாராயணன். சின்னப்பையன்.. பொம்பள ஆடற வீடியோவைக் காட்டறான். அதுவே, தனக்கு கீழ் பொறுப்பில் இருக்கும் ரமேஷ் வந்தால் இவர்கள் போனை ஒளித்துக் கொள்வார்கள். ஆணையிடுங்க சார் என்று காத்து நிற்பார்கள்.. ஆனால் நம்மகிட்ட அந்த பொம்பள ஆடறதையேக் கொண்டுவந்து காட்டறான். எப்படியோ குமாரும் ஆனந்தும் மாதிரி இவனுங்க கூட கண்டுபுடிச்சுடறாங்க. யார் எப்போது முக்கியம்னு. தான் ஒருமுறை கூட அவர்களைச் சொடக்கு போட்டு அழைத்ததில்லை. ஆனால் அந்த எண்ணனும் மரியாதையும் இவர்களுக்கும் இல்லை.. ஆனால் அப்படி அழைப்பவர்கள் முன் போய் பணிந்து விடுகிறார்கள் சல்லிப்பசங்க..

ரமேஷ் எப்போதிலிருந்து சொடக்கு போட ஆரம்பித்தான்..

நாராயணன், நாளைக்கு 4ம் குறுக்கு சந்துல ஒரு டக்ட் தோண்டனும்.. எப்பன்னு நான் டைம் உங்களுக்கு டெக்ஸ்ட் பண்றேன்..’ என்றார் டிஜிஎம்

டெஸ்டா..என்ன டெஸ்ட் பண்ண போறீங்க சார்.. சாயில் டெஸ்டா.. ஏற்கனவே அதான் மொத்த ஏரியாக்குமே பண்ணியாச்சே சார்..” என்றார் ஸ்ரீமந்நாராயணன் அப்பாவியாக

அவர்கள் ஏன் அப்படிச் சிரித்தனர்? ஒருவேளை டிஜிஎம் தன்னை விட்டு ரமேஷை அழைக்க ஆரம்பித்ததும் அதற்குப் பின்னால்தானோ. அவர்களது உரையாடல்களுக்குள் தனக்கு இடமில்லை. அதற்குப் பின் சில நாட்களில் அவர்கள் இருவரும் ஒன்றாகவே உணவருந்த கூடச் செல்லத் துவங்கி விட்டனர். அவங்க நல்ல நண்பர்களாகவே இருந்துட்டுப் போகட்டும்.. நூறு வயசுக்கும் இளமையாவே இருக்கட்டும்.. ஆனால் அதற்காக சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தன்னை அவமானப்படுத்தும் அளவு இவர்கள் எப்படித் துணியலாம்? ஏதோ முட்டாளை எதிர் கொள்வது போன்ற எள்ளல்.. அலட்சியம்..

தள்ளிக்கொண்டு வந்த வண்டியைப் பார்க்கிங்கில் சரியான இடத்தில் நிறுத்தினார்

–X—

தற்கு அடுத்தவாரத்தில்தான், கேண்டீனில் வைத்து அவரிடம் ’ஃபோர்த் ப்ளாக்லேர்ந்து நைன்த் வரைக்கும் ஒரு டனல் போடறோம்.. இதான் எஸ்டிமேட்…’ என்றான் ரமேஷ்

போட்ரலாமே .. ஒரு வாரத்துல ப்ளான் போட்டு கொண்டுவறேன்.. ஆறாவது ப்ளாக்ல ஏற்கனவே..’

எல்லாம் டிஜிஎம் கிட்ட கொடுத்து அவர் அனுமதி எல்லாம் கொடுத்துட்டார்லேபர்களை குமாரும் ஆனந்தும் ஏற்பாடு பண்றாங்க.. ‘

நான் இன்னும் ப்ளானைப் பார்க்கலை ரமேஷ்..’

சரி.. கொண்டுவந்து காட்றேன்..’

நான் அப்ரூவல் பண்ணனுமே..’

என்னையே பார்க்கச் சொல்லி டிஜிஎம் அப்ரூவல் பண்றேன்னு சொன்னாரு.. நான் ப்ளானை சீட்ல கொண்டுவந்து காட்றேன்.. ’ கிளம்பிச் சென்றான் ரமேஷ்.

வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார் ஸ்ரீமந்நராயணன்

நீங்க போனால் கம்பேனிக்குப் பெரிய பிரச்சனையா? ஒண்ணும் இல்லையே.. செய்த வரைக்கும் உழைச்சாச்சு.. அதுக்கேத்த ஊதியம்னு இல்லைன்னாலும் சம்பளம்னு ஒண்ணு கொடுத்துட்டாங்க.. முன்னாடி இண்டஸ்ட்ரீஸ் வந்துகிட்டு இருந்துச்சு..இது ஓடிக்கிட்டு இருந்தது.. இப்ப எல்லாம் நிலையா நிக்குது.. நமக்கு இப்போ மெய்ண்டனென்ஸ் மட்டும்தான்அதான் அவனுங்க ஆணவம் தலைக்கேறிப் போச்சு.. உழைச்சவங்களை எல்லாம் உதச்சுப் பார்த்து விளையாடறாங்க’ என்று கேண்டீன் மேற்பார்வையாளர் ஒருநாள் கூறினார். என்னா ஆனாலும் மனுசன் சாப்ட்டுத்தான ஆகணும். அவருக்குப் பிரச்சனையில்லை. அடித்துப் பேசலாம்

ஸ்ரீ.. நீ இப்ப இருக்கிற இடத்திலேயே இரு.. வேற எங்கேயும் மாறவேணாம்.. எனக்குமே இங்க சூழ்நிலை சரியில்லை.. உன்னை ஒண்ணும் வேலை இல்லைன்னு சொல்லி அனுப்பலையே.. கொஞ்சநாள் ஜாலியா இருமய்யா..’ என்றார் இங்கிருந்து சென்ற சமீர் பாய்

மரியாதை இல்லய்யா இங்க.. வேலைய விட்டு வீட்டுலயும் இருக்க முடியாது.. ஒருத்தன் என் வண்டிய வச்சு என்னைக் கிண்டல் பண்றான்யா.. இன்னொருத்தன் கேண்டீன்ல வச்சு புது வேலை ஆரம்பிக்கறதப் பத்தி சொல்றான்.. இவனுக்குத் தெரியுமா.. எங்க எப்படி ரூட்டு போகுதுன்னு.. அசிங்கப்பட்டு வறதுக்குள்ள நாமளே கிளம்பிடனும்.. எனக்கும் பசங்க படிக்கணும்.. அவங்களுக்கு கல்யாணம் பண்ணனும்.. வேலை போச்சுன்னு சும்மா உட்கார முடியாது.. கொஞ்சம் கொஞ்சமா சேர்த்துகிட்டு இருக்கேன்.. இவனுங்க கிட்ட அசிங்கப் படறத விட, விட்டு கிளம்பிடனும்யா. ஏதாவது வேலை இருந்தா சொல்லுய்யா’ என்று கத்தினார் ஸ்ரீமந்நாராயணன்

சும்மா கத விடாத ஸ்ரீ.. எல்லாம் ஆனா மட்டும் நீரு சும்மா உட்கார்ந்திடுவீரா.. சுத்தியலத் தட்டாம இருந்தா உமக்குத்தான் கை நடுங்குமே.. நல்ல போன் வாங்கி படம் பாருய்யா.. வாட்சப்பு, யூட்யூபு, டிக்டாக்கு ஏதாவது தெரியுமாய்யா உனக்கு. எடுத்துபாரு யாரு கேட்கப் போறா..’ சிரித்தார் சமீர் பாய்

ஆமா.. இங்க இருக்கிற மரியாதைக்கு அது ஒண்ணுதான் குறைச்சல்…மயிறு” கோபமாக போனை வைத்தார் ஸ்ரீமந்நாராயணன்

–X–

கேபிள் டனல் வேலை முடிஞ்சிருச்சின்னு சொன்னேன்.. நாளைக்கு நம்ம வேலையைப் பார்க்க ஆடிட்டர் வறாரு.. ஃபோர்த் ட்டூ நைன்த் ப்ளாக் வரை போட்ட டனல்தான் காட்டப் போறோம். ரமேஷ்.. எல்லாம் ரெடியா இருக்கா..” என்றார் டிஜிஎம் போனில் ரமேஷை அழைத்தபடி

ஸ்ரீமன்நாராயணன் பத்துமணிக்கே மீட்டிங் க்கு வந்திருந்தார்

முகர்ஜிதான் ஆடிட்டர். கேபிள் தரத்தை எல்லாம் ரொம்ப நோண்டுவான்னு சொன்னாங்க. எல்லாம் நம்ம ஸ்டாண்டர்ட் படி நல்ல ஒர்க் தான?’

ஒண்ணும் பிரச்சனையில்லை சார்.. நேத்தோட எல்லாம் தயார்” என்றான் ரமேஷ் மறுமுனையில்

சரி.. நான் நாராயணன் கிட்ட சொல்லிடறேன்.. ஆடிட்டிங்ல அவரை உங்களுக்கு ஹெல்ப்புக்கு வச்சுக்கங்க.’

நாராயணன்.. ஆடிட்டிங் முடியற வரை ரமேஷ்க்கு ஒத்தாசையா இருங்க..’

தலையசைத்தார்.

அவருக்கு என்ன வேணுமோ செய்யுங்க.. கொஞ்சம் வேகமா இருக்கனும்..’

மீட்டிங் முடிந்து கிளம்பிச் சென்றனர். போகும் வழியில் இருந்த முற்றத்தில் அலுவலக உதவியாளன் அமர்ந்திருந்தான். டிஜிஎம்மைப் பார்த்து ஒளித்து வைத்த போனை எடுத்து மீண்டும் பார்க்க ஆரம்பித்தான்.. பின்னால் வந்த ஸ்ரீமந்நாராயணன் அவனைக் கடந்து வெளியே சென்று டீ வாங்கிக் குடித்தார். போனை எடுத்தார்..

என்னயா ஸ்ரீ.. புது போனு வாங்கிட்டீரா..நாலு நல்ல போட்டோ இருக்கு வாட்சப்புல அனுப்பலாமா…” என்றார் சமீர்பாய் எடுத்த எடுப்பிலேயே

யோவ் நான் சொன்னது என்னய்யா ஆச்சு. மறைமலைநகர் ஸ்ரீபெரும்புதூர் எங்கயாச்சும் வேலை இருந்தாலும் சொல்லுய்யா.. இங்க நடக்குறது தெரியாம விளையாடாத.. இங்க என்னைய அவனுக்கு அசிஸ்டென்டா போடறன்யா…’

மொத்தக் கதையும் சொல்லிமுடித்தார்..

..முகர்ஜியா.. சுபாஷ் சந்திர போஸ்னு நெனப்பு அவனுக்கு… அஞ்சு வருஷம் கழிச்சு திரும்ப வறானா.. அப்ப உனக்கு மூணாவது டைமு.. அவன்லாம் வருமான வரித்துறைக்கு போக வேண்டியவன்யா.. ரொம்பவும் துருவுவானே அவன்ட்டயா திரும்ப உன்னை விடறாங்க..”

ஆமாம்.. போஜாருயா அவனோட.. அவன் எங்கே போய் எப்படி நோண்டுவான்னு யாருக்குமே தெரியாது.. எல்லோரும்போல கேபிளோட தரம், இரும்புக் கம்பின்னு பாக்க மாட்டான். திடீரென நடுவில் ஒரு இடத்தில் இருந்து ஆரம்பிப்பான். ஸ்டாக்கைப் பார்ப்பான். அதிலிருந்த பழைய பொருளை எங்காவது போட்டோமா என்று நோண்டுவான்.. ஓரமா வைத்திருக்கும் உடைசல்களையும் கணக்கு கேட்பான். சாவடிப்பான்.. இன்னும் ஞாபகம் இருக்கா உனக்கு..”

ஆமாம் ஆமாம்.. மொத ஆடிட்டிங்கில அவனோட குடைச்சலைத் தாங்காமஅடுத்த ஆடிட்டிங்கிற்கு அவன் வறதுக்குள்ள ஓரமாக கிடந்த பழைய கேபிள் எல்லாத்தையும் அள்ளிகிட்டுப் போயி கண்காணாத தெருவில் ஓரமாக வீசிட்டு வந்தோமேகூடவே கண்கிரீட் மூடிங்களையும் போட்டுட்டு வந்தோம்.. நீயும் நானும்தான தூக்கிட்டுப் போனோம்… சுனாமி வந்தப்போ வெள்ளம் வந்தப்போக்கூட அப்படி ஓடலைய்யா நானு…’

வெள்ளத்தை வுடு.. சாதாரண மழைக்கே முட்டிக்கல் வரைக்கும்ல நிக்குமே இங்க.. ப்லேகிரவுண்டுல போஸ்ட்டு ஷாக் அடிச்சு ரெண்டு மாடு செத்து போச்சுன்னு ஓவர் நைட்ல அத்தனையையும் சரி பண்ணோமே.. மாடு செத்த விஷயமே கூட நம்ம ஆபீஸ்ல ஒருத்தனுக்கும் தெரியலையே..”

அப்பல்லாம் எவன் எங்க வத்தி வைப்பான்னு கத்தி வைப்பான்னு தெரியும்.. அதுக்கு முன்னாலயே நாம் போய் நின்னோம்.. இப்பா சலிச்சுப் போச்சுயா.. அந்த ஆட்டத்த ஆடறவன பாத்தாலும் சலிப்பு வருது…சும்மா வுடுங்கடா நான் பாட்டுக்கு என் வேலைய பார்த்துட்டுப் போய்ட்டே இருக்கேன்…’

சர்தான்.. அங்க தெருவுல இருக்குற லைட்லேந்து தள்ளுவண்டி நிக்கிற ப்ளாட்ஃபார்ம் வரைக்கும் நம்ம பாத்து பண்ணதுய்யா.. இன்னைக்கு அங்க டீ விக்கிறவனுக்குத் தெரியுமா இதெல்லாம்… சரி..அதவிடு டீக்கடை வச்சிருந்தாளே அவ பேரு என்னய்யா.. நல்ல பேரு திடீர்னு மறந்துபோச்சு..”

நீ அவ பேர மறந்துட்டியா.. நான் நம்பணுமா..”

பேரு மட்டும்தான்யா மறந்துடுச்சி.. மத்த எல்லாம் ஞாபகம் இருக்கு…சரி நம்ம விஷயத்துக்கு வா.. முகர்ஜீக்கு அப்புறம் எவனாவது வந்தானா…”

ஆமாம்.. அதுக்கப்புறம் வேற ஒருத்தன் வந்தான்.. அவன் நாம் சொன்னத கேட்பான்.. போயிருவான்.. இப்ப முகர்ஜி திரும்ப வாறான்.. இந்த வாட்டி இவனுங்க என்ன பண்ணி வச்சிருக்காங்கன்னு தெரியலையே..”

உன்னைதான் அவனுங்க இந்த வேலையப்ப சேர்க்கவே இல்லையே.. அதனால இத லைட்டாவுடு.. என்ன ஆனாலும் இது உன் பிரச்சனையே இல்லையே..”

சரிதான்… ஆனால் அந்த டீம்ல நானும் இருக்கேன்யா.. இவனுங்க எப்ப நம்ம தலைய உருட்டலாம்னுதான் இருக்கானுங்க.. அதுவும் கொஞ்சம் பயமாவும் இருக்கு..”

முகர்ஜிக்கு ஒரு இடத்துல சந்தேகம்னு வந்தாதானே நோண்ட ஆரம்பிப்பான்.. அப்படி வராம பாத்துக்கஆரம்பத்துல அப்படி ஏதும் சந்தேகம் வரலைன்னா அவனும் போய்ட்டே இருப்பான். அதான அவன் கேரக்டரு.. அவ்வளவுதான…”

அவ்வளவுதான்.. ”

ஸ்ரீமந்நாராயணன் வீட்டிற்குப் போகும் வழியில் அந்தத் தெரு வழியாகச் சென்றார். பழைய பொருட்கள் போட்டு வைத்த ஒதுக்குப்புறமான காலியிடம் புதர்மண்டிப் போய் ஏழாவது ப்ளாக் அருகே கிடந்தது. அந்தத் தெரு மட்டுமே முட்டுச்சந்து என்பதால் பெரிதாக போக்குவரத்தும் இருக்காது. மறுபக்கம் குடியிருப்புப் பகுதிதான். ஆகவே அங்கு கண்காணிப்பும் இல்லை. லேபர்கள் அங்குதான் குடிப்பதற்கு ஒதுங்குவர். வேறுசிலவும் நிகழ்வதாக சொல்லப்படுவதுண்டு. அந்தப் பழைய கான்கிரீட் மூடிகள் இன்னும் அங்கேயே இருந்தன. மணல்மூடிப் போய்க் கிடந்தைப் பார்த்தார்.. கேபிள்களையெல்லாம் அப்பவே தூக்கிட்டுப் போயிருப்பானுங்க.. இங்க எதுவுமே காசுதான். கான்கிரீட் மூடிக்கு பெரிய மதிப்பு கிடையாது.. புசுசே நூறு ரூபாய்தான் இருக்கும்.. அதான் வுட்டுட்டுப் போயிட்டானுங்க..” என்று எண்ணியபடி ஓரமாகக் கிடந்த ஒரு கம்பியை எடுத்துக் குத்திப் பார்த்தார். இருட்டில் சலசலப்பு இருந்தது. பாம்பா பல்லியா அல்லது ஆளா என்று கூட தெரியவில்லை. மூத்திரம் பெய்ய வந்தவர் போல திரும்பிச் சென்றார். அதிகாலையில் வந்தால் இங்கு நடமாட்டமும் இருக்காது. பயமும் இல்லை. யாராவது இருந்தாலும் தெரிந்துவிடும்.

ஸ்ரீமந்நாராயணன் மறுநாள் அதிகாலையில் வந்தார். ஓரளவு வெளிச்சம் இருந்தது. அங்கிருந்த முறுக்குக் கம்பியைக் கொண்டு அந்த கான்கிரீட் மூடியை நெம்பினார். நாலாவது குத்தில் பெயர்ந்து வந்தது.. இரண்டாவது மூடியையும் நெம்பித் தள்ளினார். ஏதோ ஒரு சப்தம் கேட்டது. அதிர்ந்து நிமிர்ந்து பார்த்தார். மரத்தின் மீதிருந்த பறவைகள் பறந்து சென்றன. அவருக்கு ஆசுவாசமாக இருந்தது. அக்கம்பக்கம் யாரும் இருக்கிறார்களா என்று மீண்டும் சுற்றிவரப் பார்த்தார். அருகிலிருந்த குடியிருப்புப் பகுதியின் மாடியில் ஒரு பெண்மனி இவருக்கு பின்புறத்தைக் காட்டியபடி சேலையை உதறிக் கொண்டிருந்தாள். சற்று ஒளிந்து கொண்டு அவள் போகும்வரைக் காத்திருந்தார் ஸ்ரீமந்நாராயனன். பின் மெல்ல அந்த கான்கிரீட் மூடிகளை புது டனலின் வாயிலில் வைத்து மூடியவர் ஏற்கனவே இருந்த இரும்பு மூடிகளை தூக்கிச் சென்று அருகில் இருந்த சாக்கடைக்குள் பொத்தெனப் போட்டார்

–X–

டிஜிஎம் ரமேஷை பார்த்த பார்வையில் கனல் எரிந்தது. ரமேஷ் குமாரையும், குமாரும் ஆனந்தும் ஒருவரை ஒருவரும் பார்த்துக் கொண்டனர். ஆள் இல்லாத இடத்தில்தான் முகர்ஜி முதலில் பார்ப்பான் என்ற அவரது கணிப்பு சரியாகியிருந்தது.

எட்டாயிரம் கணக்கு காட்டின ரெண்டி இரும்பு மூடிக்கு பதிலா நூறு ரூபாய் கான்கிரீட் மூடி போட்டிருக்கீங்க.. வாங்க அப்படியே மொத்தமா தோண்டிப் பாத்துடலாம்…’

ஸ்ரீமந்நாராயணன் அமைதியாக பார்த்தபடியிருந்தார். நடுவில் உள்ள கேபிள்களிலும் கம்பிகளிலும் தானடா எப்படியும் உங்க கைவரிசைய காட்டிருப்பீங்க. அதனால்தான வேலை முடியும்வரை என்னை அண்டவும் வுடல.

மொத்த ஸ்டாக்கையும் பார்க்கனுமேயார் அப்ரூவல் பண்ணியது?’

டிஜிஎம் அமைதியாக நின்றார்

இனி தாம் இறங்க வேண்டிய இடம்.

முகர்ஜி.. அந்த ரோட்டுக்கு அந்தப் பக்கம் மக்கள் வாழற குடியிருப்பு இருக்கு.. அங்க இருந்து பசங்க ஏறிக் குதிச்சு வந்து இப்படி தூக்கிட்டுப் போய் பழைய இரும்பு கடையில பாதி விலைக்கு வித்துட்டு அந்தக் காசுல தண்ணி அடிப்பாங்க.. அது ஒரு முட்டு சந்து.. பக்கத்துல வெறும் காலி இடம்தான் இருக்கு. அதான் வசதியாப் போச்சு.. இதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்.. மத்த ஆறு தெருவுலயும் இந்தப் பிரச்சனை இல்லை. நல்ல மூடிதான் இருக்கு.. நீங்களே வந்து பாருங்க..’

ஆனா.. இப்படி வசதியான காரணம் இருக்கிற இடத்துலதான் கம்பேனி காரங்களும் கைவரிசை காட்டுவாங்க ஸ்ரீஜீ… நான் இப்ப தோண்டிப் பார்த்தே ஆகணும்”

ஆனால், அங்க மூடி ஜிஐ மூடி தான் போட்டேன்.. அதை லேபரோ இல்லாட்டி இவனுங்க யாராவதோதான் எடுத்திருக்கனும்..சொல்லுங்கடா என்றான்” என்றான் ரமேஷ் குமாரையும் ஆனந்தையும் பார்த்து ஆவேசமாய்

அவர்கள் கண்களில் தெரிவது மிரட்சியா கோபமா என்று பார்த்தார் ஸ்ரீமந்நாராயணன்.

நாங்க லேபரைக் கூப்பிட்டு வந்தோம்.. எங்களால எப்படிப் பண்ண முடியும் ஜீ.. எங்களுக்கு கொடுத்த பொருளைப் பொருத்தினோம். அவ்ளோதான் ஸ்ரீஜீ’ என்றனர் குமாரும் ஆனந்தும்’ ஸ்ரீமந் நாராயணைப் பார்த்து

உங்களுக்குக் கொடுத்த பொருள்னா என்ன அர்த்தம்?” என்றார் டிஜிஎம்

ஆர்டருக்கும் பொருளுக்கும் சரிபார்த்துதான் வாங்குனீங்க..’

ஆனந்தும் குமாரும் ரமேஷைப் பார்த்தனர்

ரமேஷ் தலை கவிழ்ந்து நின்றான். அவனைத் துருவிக் கேட்டதில் தரமற்ற பொருளை வாங்கிப் போட்டுக் கமிஷன் அடித்ததை ஒப்புக் கொண்டான். பின் மெல்ல விசும்பினான்.. அப்புறம் அழத் துவங்கினான். டிஜிஎம் நம்பிக்கையை மோசம் செய்து விட்டேன் என்று கதறினான்.

ஆனா சத்தியமா அந்த மூடி இரும்புதான் போட்டேன்ங்க..”

செண்டிமெண்ட் வேணாம் ஜீ.. அதை உங்க ஹெச் ஆர் பாத்துப்பாங்க. ’

சார்.. நீங்க ரெண்டுநாள்ல நீங்க வேலையை சரியா முடிங்க.. நான் பில்லை அப்ரூவ் பண்றேன்..’ என்று இறங்கி வந்தார் முகர்ஜீ

டிஜிஎம் முகத்தில் ஒரு ஆசுவாசம் ஏற்பட்டது.

நீங்க கொஞ்சம் இதைப் பார்க்க முடியுமா ஸ்ரீஜீ’

துறு துறுவென ஓடிச் சென்று வேலையைச் முடித்தார் ஸ்ரீமந்நாராயணன். அவர் பேசியதில் பொருட்களை அதே சப்ளையரே மாற்றிக் கொடுத்தான். நீண்டநாள் கழித்து வேலை செய்யும் ஆர்வமும் ஏற்கனவே முகர்ஜியை இருமுறை சமாளித்திருந்த அனுபவமும் அவருக்குக் கைகொடுத்தன.

ஸ்ரீஜீ..குட் வொர்க்.. உங்க எக்ஸ்பீரியன்ஸ் நல்லா ஹெல்ப் பண்ணிச்சு.. தேங்ஸ்.. நம்ம ரெபுடேஷன காப்பாத்திட்டீங்க ” ஏன்றார் டிஜிஎம் மகிழ்ச்சியுடன்..

ஆனால் ரமேஷ் இப்படி நம்பிக்கை துரோகம் பண்ணுவான்னு எதிர்பார்க்கலை ஸ்ரீஜீ… நான் அவனை ரொம்ப நம்பிட்டேன்.. போற இடத்துலயாவது அவன் ஒழுங்கா இருக்கட்டும் ”

அவருடன் பேசிக்கொண்டே அவர் இருக்கை வரை வந்தவர் அங்கு அவருக்கு மீண்டும் ஒருமுறை கைகொடுத்துவிட்டுக் கிளம்பிச் சென்றார். ஸ்ரீமந்நாராயணன் தன் இருக்கையில் அமர்ந்து நிமிர்ந்து பார்த்தார். ஓரமாக நின்று மொபைல் பார்த்துக் கொண்டிருந்த அந்த அலுவலக உதவியாள இளைஞன் மொபைலை ஒளித்துக் கொண்டான். அசடு வழிந்தான்

என்னடா? ம்..’ ஒரு சொடக்குப் போட்டார்

அவன் ஓடி வந்து நின்றான்.. அவன் கையிலிருந்த மொபைலைப் பற்றிக் கொண்டு’ என்னடா.. எப்படி இருக்கா உன் அழகுராணி..அந்த ஒரு மில்லியன் வந்துடுச்சா.. ம்…”

ஆமா சார்.. ஆமா சார்..” என்று நெளிந்தவன்.. டிஜிஎம் தண்ணீர் கேட்பதைக் கண்டு அவரை நோக்கி பதறி ஓடினான்..

டேய் மொபைல் இந்தாடா..’ என்று வாயெடுத்தவர்.. அதில் அந்த அழகுராணி வீடியோவைக் கண்டார். திகைத்தார். மெல்ல இரு விரல்களால் அதை அகலமாக்கினார்

அதில் ஒரு மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டிருந்த அழகுராணி ‘சலக்கு சலக்கு சேலை..அதைக் கட்டிக்கத்தானே’ என்று இடுப்பை நெளித்து ஆடிக்கொண்டிருக்க, அவளுக்குப் பின்னால் தொலைவில், லில்லிபுட் உயரத்தில் இருந்த ஸ்ரீமந்நாராயணா மங்க்கி தொப்பி அணிந்துகொண்டு இருப்புக் கம்பியால் தரையில் மண்ணுக்குள் பதிந்து போயிருந்த கான்கிரீட் மூடியை நெம்பிக் கொண்டிருந்தார்

ரா.கிரிதரனின் காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை சிறுகதை குறித்து வை.மணிகண்டன்

ரா.கிரிதரனின் “காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை”,2009 ல் தொடங்கி 2019 வரை வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டுள்ள பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு இந்தப் புத்தகம்.

புத்தக தலைப்பாய் அமைந்துள்ள “காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை” சிறுகதை ஜெர்மன் சிறையில் நடந்த ஒரு இசை அரங்கேற்றம் குறித்து எழுதப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் வரலாற்று பின்புலம் எதுவும் அறியாது நாம் வெறுமனே இந்தக்கதையை வாசிக்கையில் எழும் அடிப்படையான கேள்வி “நாம் ஏன்  கடினமான சூழல்களில் இசையை நாடி செல்கிறோம் ? ” என்பது.

நடந்த இசை அரங்கேற்ற  நிகழ்ச்சியின் பின் புலம் குறித்து, வரலாறு  குறித்து  ஒரு புத்தகமே எழுதப்பட்டுள்ளது – For the End of Time: The Story of the Messiaen Quartet – Rebecca Rischin என்னும் ஒரு clarinet கலைஞரால் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. . இந்த சிறுகதை உண்மையில் நடந்த  நிகழ்ச்சியின் பிரதியாக இருப்பதால், நிகழ்ச்சியை விட இந்நிகழ்ச்சி குறித்து விளக்க ஆசிரியர் எடுத்துள்ள தேர்வுகளே நாம் கணக்கில் கொள்ள வேண்டியது.

கடினமான சிறை சூழல் , ஒரு இசை மேதைமை குறித்த வியப்பு அதே நேரத்தில் அந்த இசை மேதைமையை இறுக்கமான சூழலோடு பொருத்தி பார்த்து எடை போடும் தன்மை , இசைமேதையின் பதில் – இதுவே இந்த நிகழ்ச்சியை விவரிக்கும் சிறுகதையின் வடிவம் -கதையில் சிறை சூழலின் புற விவரிப்பு நன்றாக அமைந்து வந்திருக்கிறது,  அதே நேரத்தில் வாசகனுக்கு இவ்வரலாற்று நிகழ்வு குறித்த அனுமானங்களை வலிந்து வந்து கூறுவது போல் கட்டுரை போல் அமைந்து விட்டது , இந்தக் கதையில் ஆலிவர் போன்ற இசை மேதை அல்லாது வேறு ஒரு பெயர் அறியாத கலைஞன் இசைத்திருந்தால் ?அந்த இசை தொகுப்பு ” quartet for the end of time ” போல் அல்லாது யாருமறியா ஒரு இசை கலைஞனின் ஆத்ம சங்கீதமாக இருந்திருந்தால் ? இங்கு நாம் “மோகமுள்” நாவலில் வரும் ஒரு வடக்கத்திய பாடகரையும் அவரது மகனையும் நினைவு கூறலாம்.

இந்தத் தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த கதை ” நந்தாதேவி” என் கணிப்பில் இச்சிறுகதை தொகுப்பின் தலைப்பாக வைத்திருக்க பட வேண்டிய ஒன்று . இந்திய ராணுவத்தின் மலையேற்ற குழுவின் அனுபவம் குறித்து அட்டகாசமான நிகழ்த்து தன்மையுடன் அமைந்துள்ள சிறுகதை – ஜாக் லண்டன் முதல் அசோகமித்திரனின் “மிருகம்” வரை மனித வாழ்வின் விளிம்புகளை நினைவூட்டும் தொடர்ச்சியாக அமைந்திருக்கிறது,

“நீர் பிம்பத்துடன் ஒரு உரையாடல் ” – நூறு ஆண்டு கால வரலாற்று நிகழ்வுகளின் சரளமான தொகுப்பு போல் அமைந்துள்ளது – ஆசிரியர் தேர்ந்தெடுத்து இருக்கும் உத்தி முறை ரசிக்கும் வண்ணம் அமைந்திருந்தது தொடர் நிகழ்வுகளின் அவலங்களின் சித்திரத்தை அதே நேரத்தில் எந்த ஒரு பார்வையையும்  கோணத்தையும்  வலிந்து திணிக்காது கால மாற்றத்தின் மௌன சாட்சி போல் அமைந்துள்ளதே இந்தக் கதையின் சிறப்பு. நீண்ட நீண்ட வாக்கியங்களை படிக்கையில் தமிழின் சிறந்த நாவல்களின் ஒன்றான ” தாண்டவராயன் கதை ” நினைவுக்கு வந்தது – வரலாற்று நிகழ்வுகளின் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்ச்சியை மையமாக வைத்து எழுதப்படும் கதைகள் ஒரு புறம் , வரலாற்றையே ஒரு மாபெரும் புனைவு வெளியாக்கி எழுதப்படும் கதைகள் இன்னொரு புறம் , பின்னதின் சாயலில் அமைந்துள்ள ” நீர் பிம்பத்துடன் ஒரு உரையாடல் ” எந்த ஒரு இலக்குமற்று எதேச்சையின் கரங்களால் உந்தப்பட்டு செல்லும் காலம் குறித்த நினைவலைகலாக அமைந்துள்ளது.

இசை குறித்தும் வரலாற்று பின்புலத்தில் அமைந்துள்ள கதைகள் யாவும் தகவல் செறிவு காரணமாகவும் நிகழ்ச்சியின் முக்கியத்துவம் காரணமாகவும் கவனத்தை கோருகின்றன , அதே நேரத்தில் அரசியல் சரி நிலைகள் குறித்த பிரக்ஞை காரணமாக நிகழ் தன்மை குறைந்து கட்டுரை போல் நீளும் இடங்கள் ஆசிரியர் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

இருள் முனகும் பாதை – நாவலாக வந்திருக்க வேண்டிய சிறுகதை – ஷுமன் கிளாரா என்னும் இசை துருவங்கள் குறித்த ஒரு கோட்டு சித்திரமாக அமைந்து விட்டது – பென்னட் என்னும் பார்வையாளன் ஷுமனின் மேதைமையை புரிந்து கொண்டவன் , இயந்திரத்தனமான வெற்றியை நோக்கி பயணித்த கிளாரா,பென்னெட்டிடம் , தன் மொத்த இருப்பின் பொய்மையை உணர்ந்து உருகுகிறாள்,  இயந்திரம் Vs இயற்கை என்று சட்டகம் வழியே கதையை அணுக நினைக்கையில் ஷுமன் என்னும் காதலன் தன் காதல் கடிதங்களை நமக்கு வாசிக்க அளிக்கிறான் , கடைசி ஸ்டாப்பை அறிந்திருந்தாலும்  , கடைசிக்கு முந்தைய ஸ்டாப்பில் எந்த ஒரு பெரிய கலைஞனும் இறங்கி விடுவான் என்பதின் சாட்சியாக ஷுமன் கிளாரா காதல். இந்த இடத்தில சங்கர ராமசுப்ரமணியனின் இந்த கட்டுரை மிக முக்கியமானது , அனைத்துக்கும் ஆசைப்பட்டபடியே அத்வைதம் போதிக்கும் கலைமனதை உணர்கையில் மேலும் நாம் ஷுமனின் தவிப்பை புரிந்து கொள்ள முடியும் – (https://www.shankarwritings.com/2019/12/blog-post_26.html?m=1)

பலி மற்றும் மௌன கோபுரம் சிறுகதைகளில் தலைப்பு மற்றும் குறிப்புகள் சுட்டும் விஷயங்கள் நேரடியாக உள்ளது. பலி சிறுகதை ஒரு “abstract ” தன்மையுடன் அழகாக உள்ளது ,” பலி” என்னும் தலைப்பு வலிந்து வந்து ஆசிரியர் கூற விரும்புவதை சுட்டுகிறது , வேறு ஒரு மெல்லிய உருவக தலைப்பு பொருத்தமாக இருக்கக் கூடும் – இவ்விடத்தில் ஆல்பர்ட் காம்யுவின் ” The guest ” குறித்து இணைத்து வாசிக்க சில விஷயங்கள் உள்ளன – ” கதாபாத்திரத்தின் பெயர் நேரடியாக ” அரபி” என்றும் தலைப்பு ” தி கெஸ்ட் ” என்றும் உள்ளது – இக்கதையில் சுமி மற்றும் லியோன் , கதையின் தலைப்பு “பலி” – இந்த வலிய தலைப்பு எதிர்மறை அம்சம் கொண்டதாக உள்ளது – மொத்த கதையின் சாரமும் ஏன் இரண்டு அல்லது மூவர் சேர்ந்து இருக்க முடிவதில்லை ஸ்தூலம் இல்லாத எதோ ஒன்று எப்படியோ அதை ஏன் தடுத்துவிடுகிறது என்ற கேள்வியில் இருக்கிறது , இந்த சிறுகதை Godard ன்  Bande à part  திரைப்படத்தை நினைவூட்டியது.

வரலாறு இசை மற்றும் புலம் பெயர் வாழ்வு என்கிற வெவ்வேறான தளங்களில் ஒரு நிறைவான வாசிப்பு அனுபவமாக “காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை” சிறுகதை தொகுப்பு அமைந்துள்ளது