Author: பதாகை

​சுழல் – சரவணன் அபி கவிதை

சிறுவிதை
கடித்தெறிந்த கனித்தோல்
கிளையுதிர்ந்த இலை
கனியா பிஞ்சும் பூவும் ​​
அடித்தளம் சுற்றிலும்
உயிரோட்டம்
நில்லாது நடந்தேறும்
நாடகம்
உணவும் உணவின் உணவும்
உண்ணவும் உண்ணப்படவும்
அத்தனைக் களி
எதுவுமில்லை தன்னிரக்கம்
எதிலுமில்லை முயற்றின்மை
பேருரு தாழ்ந்து தாள் சேரும்
எதுவும் ஆவதுமில்லை வீண்

நூற்றாண்டுகளின் சர்ப்பம் – காஸ்மிக் தூசி கவிதை

கொசு கூட
உள் நுழைய முடியாதபடிக்கு
பாதுகாப்பாய் வலையடித்த
சாளரம் வழி
எப்படியோ நுழைந்து
வீட்டின்
வரவேற்பறை வரை
வந்து விடுகிறது
தன்னைத் தானே விழுங்கும்
சர்ப்பம்.

வாலைக் கவ்வி
விழுங்க முயன்று
மீள முடியாமல்
முறுக்கித் திருகி
பித்தளை வளையம்போல
செய்வதறியாது திகைத்து நிற்கும்,
கூடத்தின் நடுவில்.

தன்னைத்தானே
தளர்த்திக்கொண்டு
களைப்பில்
செயலற்று கிடந்தபின்
திடீரெனெ விழித்தெழுகையில்,

வாந்தியெடுத்த வால்
நினைவுக்கு வர,
அவசரமாய்
விழுங்க முயன்று
மீள்வினையின் சமன்பாடாய்
முறுக்கி நிற்கும்
மறுபடியும்.

இமைக்க முடியா
தம் விழிகளால்
பக்தர்களை இடைவிடாது
வெறித்தபடி
பிரகாரத்தில்
நிற்கும் சர்ப்பங்கள்

மின் விசிறியின் சுழற்சியில்
துடிதுடித்துப்பறக்கும்
காலண்டரில்
பெரியாழ்வார் பல்லாண்டு கூறிய
பள்ளி கொண்டானுக்குப் பின்புறம்
படமெடுத்து
படுத்த பைந்நாகமாய்
ரப்பர் குழாயைப்போல
பாற்கடலின் மீது மிதந்து
நெளிந்திருக்கையில்

குங்குமம் பூசி
பிய்த்தெடுத்த சாமந்திப்பூ
தூவப்பட்ட தலையுடன்
குருக்களின்
தீபம் ஏற்றிய தட்டை
அலட்சியப்படுத்தியபடி
எழுந்து நிற்கையில்,

ஏழுதலைகளுள்
தன் வாலை விழுங்க
எந்த வாயைத் தேர்ந்தெடுப்பது
என்ற குழப்பத்தை
அவற்றின் கண்களில்
நீங்கள் கவனித்ததுண்டா?

குவாண்டம் சமன்பாடுகள்
எளிதில் நிறுவமுடிகிற
மாற்று உலகம்
நம் காது மடல்களின் விளிம்பில்
கன்னக் கதுப்பின் தசையில்
படிய மறுத்து
துருத்திக்கொண்டிருக்கும்
தலைமுடியில் உரசி நிற்கையில்
எப்ப வேண்டுமானாலும்
நிகழும் அதன் வருகை.

புராண உலகத்திலிருந்து
நிகழ்காலத்துக்குள்
அத்துமீறி
நுழைந்து விடும் சர்ப்பத்தை
அஞ்சத்தேவையில்லை.
காலால்
தரையில் உதைத்து தட்டினால் கூட
போதுமானது.

காது கேளாதுதான்
என்றாலும்
தரையின் அதிர்வுகளைப்போலவே
உங்களின் எண்ணத்தையும்
தன் எண்ணற்ற பாதங்கள் வழி
உணர்ந்து விடும்.

கோடை மழையில்
நனைந்த
வண்டியின் பாரக்கயிறு
கற்தரையில் இழுபடுவதைப்பதைபோல
தன் கிழ உடலை இழுத்துக்கொண்டு
சுவரோரம் சென்று
மறைந்துவிடும்.

தன்னைத்தானே விழுங்கும் சர்ப்பம்
ஆகஸ்ட் ஹெக்குலேயின்
பென்ஸீன் வளையத்தைப்போல
தோற்றமளிப்பதில்லை
என்பது மட்டுமல்ல.
கனவிலும் நிஜத்திலும்
எப்ப வரும்
என்றறியவும் இயலாது.

இப்போதுங்கூட ஒன்று
இந்த அறையில் தான்
எங்கோ ஒளிந்திருக்கிறது
அப்படியே இருக்கட்டும்.
கைதொடு தூரத்தில் இருந்தாலும்
அவற்றை கண்டு கொள்ளாதீர்.

நீங்கள் கண்டுகொள்ளாதவரை
அவைகளும்
உங்களை கண்டுகொள்வதில்லை.

ஆதவன் இறந்துவிட்டார்* – செல்வசங்கரன் கவிதை

211 ஆம் பக்கத்தை விரித்ததும் இருந்தது ‘நிழல்கள்’ கதை
இரண்டு மூன்று வரிகளைக் கடக்கும் போதே
ஹாஸ்டலின் பெரிய இரும்புக் கிராதிகளாலான கேட் தெரிய ஆரம்பித்தது
அவளை ஹாஸ்டலில் விட்டு அவன் இருப்பிடத்திற்குத் திரும்பவேண்டும்
கேட்டின் முன்பு அவனும் அவளும் உரையாடியபடியிருந்தனர்
திரும்பிச் செல்ல அவனுக்கு மனமில்லை
காதலியைப் பிரிய யாருக்குத் தான் மனம் வரும்
அன்று அவளோடு செக்ஸ் வைத்துக் கொள்வதற்காக
அவன் பூடகமாகப் பேசுவதையும்
வார்த்தையிலேயே அவள் நழுவி நழுவி ஓடுவதையும்
அந்த இரவு நேரத்தில் ஹாஸ்டல் முன்பு நின்று கவனிக்க
யாரும் பார்த்துவிடுவார்களோ என்ற பயம் என் நெஞ்சைக் கவ்வியது
இதைப் போய் ஏன் பார்க்கிறேன் என்ற அடுத்த கணத்தில்
மாடிப்படியின் திருப்பத்தில் ஒரு வாகான இடத்தில் அமர்ந்து
கதையை வாசிப்பதை நிஜமென உணர முடிந்த அந்த சமயம்
வெறும் செக்ஸுக்காக மட்டும் கெஞ்சவில்லை புரிந்துகொள் என்று
அவன் அவளிடம் மன்றாடிக் கொண்டிருந்தான்
கதையை வாசிக்கும் என்னையும் புத்தகத்தையும்
அங்கிருந்து எழுந்திருக்காமலே
வெளியே வந்து இடையிடையே ஒருமுறை நான் பார்த்துக் கொள்ள
கதை உச்சத்தை நெருங்கியிருந்தது
உன்னிடமிருந்து வேண்டுவது அதுவல்ல
எனக்கு வேண்டியது நீ பூரணமான திரைகளற்ற நீ முழுமையான நீ
அது மட்டுந்தான் புரிகிறதா என அவன் அவளிடம் கூறியதும்
யாரோ என்னை எங்கோ தூக்கி எறிந்தது போலிருந்தது
ஆமாம் அதை அவன் கூறவில்லை சாட்சாத் ஆதவனே கூறியிருக்கிறார்
அவர் முன்னால் கை கட்டி வாய் பொத்தி மண்டியிட்டு
இன்னும் சொல்லிவிட மாட்டாராயென
அந்த இரவு நேரத்தில் ஹாஸ்டல் முன்பு ஒரு ஓரமாகக் கிடந்தேன்
இன்னும் அந்த ஹாஸ்டல் வளாகத்தில் தான் சுற்றிக்கொண்டிருக்கிறேன்
ஆதவன் தான் எதுவுமே பேசமாட்டேனென்கிறார்

 

*ஜூலை 19,1987

அந்திக்கிறிஸ்துவின் வருகை – காலத்துகள் சிறுகதை

‘ஆண்ட்டை க்ரைஸ்ட் பொறந்துருக்காம்டா’ என்று இண்டர்வலின் போது திலீப் சொன்னதை மற்றவர்கள் கண்டுகொள்ளவில்லை. இவன் மட்டும் ‘யாருடா சொன்னாங்க’ என்று கேட்க, ‘சும்மா டூப்படிக்கறான்டா’ என்றான் சந்துரு. ‘இல்லடா எங்க சொந்தக்காரர் தான் சொன்னாரு’, ‘அவருக்கு எப்படி தெரியும்’, ‘பைபிள்ல ஏதாவது ஒரு பேஜ்ல சின்ன முடி இருக்காம், அதுக்கு சாத்தான் பொறந்திருக்குன்னு அர்த்தமாம். இப்ப நெறைய பேர் பாத்திருக்காங்கன்னு சொன்னார்’,
‘நீ செக் பண்ணியா’
‘எங்க வீட்ல பைபிள் இல்லடா’
‘ஒங்க ரிலேடிவ் வீட்ல’ என்று இவன் கேட்டதற்கு திலீப் பதில் சொல்வதற்குள் மணி அடிக்க வகுப்பறைக்குள் நுழைந்தார்கள். தார்சியஸ் ஸாரின் மேத்ஸ் பீரியட். அக்குளில் அவர் கிள்ளும்போது குதிகால் தரையில் படாமல் உடல் மேலெழும்பும். ஆறு முதல் எட்டாம் வகுப்பு படிப்பவர்களில் நிறைய பேருக்கு ஸார் தான் சாத்தான். ஆனால் இப்போது தான் சாத்தான் பிறந்திருக்கிறது என்கிறான் திலீப்.

மாலை வீட்டுப் பாடங்களை எழுதி முடித்தான். ஆண்ட்டை க்ரைஸ்ட் பிறந்தால் உலகம் அழிந்து விடுமா? கலியுகத்தின் முடிவில் கல்கி வேறு வெள்ளை குதிரையில் வருவார் என்கிறார்கள், கல்கி தான் சாத்தானோ? அவதாரத்தை பற்றி இப்படி நினைத்தால் சபித்து விடக்கூடும். முனிவர்கள் தான் சாபமளிப்பார்கள், கடவுள் வேறேதேனும் தண்டனை கொடுப்பார், பரீட்சை வேறு வருகிறது. கல்கி வருவது சாத்தானுடன் மோதுவதற்காக கூட இருக்கலாம். திலீப் சொல்வதை எப்படி நம்ப? ஷெல்பிலுள்ள புத்தகங்களை எடுத்தான். அப்பன் முதலாண்டிற்கு பின் நிறுத்திவிட்ட மருத்துவ படிப்பின் எச்சமாக உள்ள கருப்பு அட்டையுடைய நூலையடுத்து, மழுங்கிப் போன பக்கங்களுடன் பைபிள். புரட்டினான், எதுவும் இல்லை. நூலை மூடியவன் இம்முறை மெதுவாக பக்கங்களை திருப்பிக் கொண்டு வந்தான். நகத்தினளவில் இருப்பது தூசியா, அது கருப்பாக இருக்காது, இது முடி தான். ஆண்ட்டை க்ரைஸ்ட் நிஜம்.

சுவற்றோடு சாய்ந்தமர்ந்தவன் மீண்டுமெழுந்து ஷெல்பிலிருந்து ‘ஓமன்’ முதல் பாகம் மற்றும் இறுதிப் பகுதியான ‘ஓமன் – பைனல் கான்ப்ளிக்ட்’டை எடுத்தான். ஓமனில் ஆண்ட்டை க்ரைஸ்ட் சாத்தானின் குழந்தை என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் அவனையும் சாத்தான் என்றழைப்பது சரியாக இருக்குமா? மகனென்றாலும் அவனும் அதே வம்சம் தான் என்பதால் அப்படி அழைப்பதில் தவறொன்றும் இல்லை. ‘அப்பா’ சாத்தானின், தந்தை யார், அவரும் ஆண்ட்டை க்ரைஸ்ட்டாகத் தான் இருக்க வேண்டும். ஆனால் அவனை தேவதையாக படைத்தது கடவுள், இப்போது பிறந்திருக்கும் சாத்தானின் தாத்தா. அவரையும் சாத்தானென்று எப்படி சொல்ல? சாத்தான் குடும்பத்தை பற்றி அறிந்து கொள்வதை விட, அவனை எதிர்கொள்வதே இப்போது முக்கியம். ஓமன் முதல் பாகத்தில் குழந்தையாக இருக்கும் போதே அழிவை ஏற்படுத்துகிறான், எனவே அவனை வளர விடக் கூடாது, கல்கி வரும் வரை காத்திருக்க தேவையில்லை. ‘பைனல் கான்ப்ளிக்ட்டில்’ சாத்தானை கொல்ல ஏழு கத்திகள் உள்ளன என்று சொல்லப்பட்டுள்ளது. ஆறு முறை தவறிய பின், ஏழாவது கத்தி வைத்திருப்பவன் தான் சாத்தானை கொல்கிறான். திலீப், மணி என ஐந்து கத்திகளை தந்து விடலாம். சந்துருவிற்கு ஆறாவது கத்தி, ஏழாவது எனக்கு. ஆண்ட்டை க்ரைஸ்ட்டை கொல்வது நானாகத் தான் இருக்க வேண்டும்.

‘டேய் எங்க வீட்டு பைபிள்ல முடி இருக்குடா’ என்று அடுத்த வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் கத்தினான். ‘என்ன பைபிள்’ என்றான் சந்துரு.
‘அதான் ஆண்ட்டை க்ரைஸ்ட்டா’
‘டேய் திலீப் புளுகறான்னு சொன்னேன்ல’,
‘இல்லடா இந்த தடவை அவன் சொன்னது உண்மை. நான் நேத்து நைட் பைபிள்ல பார்த்தேன்’
‘என்ன பாத்த’ என்றான் சரவணன்.
‘முடிடா’,
‘மயிறு, ஒங்க வீட்ல எப்படிடா பைபிள் இருக்கு’
‘முன்னாடி பக்கத்து போர்ஷன்ல குடியிருந்த கோம்ஸ் மிஸ் விட்டுட்டு போயிருப்பாங்கன்னு நினைக்கறேன்’.
‘எல்லா பைபிள்லயும் சாத்தானோட மயிறு எப்படி வரும்டா லூசு’
‘அப்பத் தான யாராவது ஒருத்தராவது அதை கவனிப்பாங்க, ஆண்ட்டை க்ரைஸ்ட் பொறந்திருக்குன்னு தெரிய வரும்’
திலீப் வந்தவுடன் அவனை அருகில் அமர வைத்துக் கொண்டவன் ‘ஓங்க ரிலேடிவ் சொன்னது உண்மை தான், பைபிள்ல செக் பண்ணிட்டேன். சாத்தானை சொல்றது பத்தி ஏதாவது சொன்னாரா, ஏழு கத்தி..’ என்று இவன் சொல்லிக்கொண்டிருக்க ‘அவர் ஊருக்கு போயிட்டார்டா’ என்றான் திலீப். ‘நான் சொல்லிட்டேருக்கேன் இவன போய் நம்பற, கரெக்ட்டா இந்த விஷயத்த சொல்லிட்டு கிளம்பிட்டாராம்’ என்று சந்துரு ஆரம்பிக்க ‘டேய் அவர் இன்னும் ரெண்டு மூணு மாசத்துல வீட்டுக்கு வருவாருடா, அப்ப அவர் கிட்ட கூட்டிட்டு போறேன்’ என்றான் திலீப்.

அன்று மதியம் காலாண்டு தேர்வுகளுக்கான டைம் டேபிளை தந்தார்கள். இரண்டு வாரத்தில் ஆரம்பம். ‘போன வாட்டி மேத்ஸ்ல பெயில்’
‘நீ ஒரு சப்ஜெக்டல தான, நான் மூணுல அவுட்டு’
‘மேத்ஸ்டா பெயில் டா. வீட்ல அடிக்கறத தாங்கிக்கலாம் தார்சியஸ் ஸார் கிட்ட கிள்ளு வாங்க முடியாது’.
யாருக்கும் உலகம் எதிர்நோக்கியிருக்கும் ஆபத்தை பற்றிய அக்கறையில்லை. சாத்தான் பெரியவனாகி விட்டால் அவனை கொல்வது இன்னும் கடினமாகி விடும். இப்போதே அதை சுற்றி பாதுகாவலர்கள் இருப்பார்கள். அவன் எங்கு பிறந்திருப்பான்? முடி இருக்கும் பைபிள் பக்கத்தை திறந்து பார்த்துக் கொண்டிருந்தான். அரை வட்ட சந்திரனின் வடிவில் சாத்தான் பிறந்துள்ளதற்கான அத்தாட்சி. வீட்டிலுள்ள பைபிளில் தென்படுகிறது என்றால் சாத்தானும் அருகில் தான் இருக்க வேண்டும். எங்கு? பருத்த உடல்வாகு, சுருட்டை முடி, நெற்றியில் அப்பிய திருநீறுக்கு மத்தியில் பெரிய குங்குமப் பொட்டு இட்டு, கழுத்தில் ருத்திராட்ச மாலை அணிந்திருக்கும், அடுத்த வீட்டில் வசிக்கும் ராட்சஸி பில்லி சூனியம் செய்யக் கூடியவர் என்று சொல்கிறார்கள். விபூதி எல்லாம் இட்டுக்கொள்பவர் சாத்தானை எப்படி வழிபடுவார். திருநீறு அணிந்து சூனியம் வைக்க முடியும் என்றால் சாத்தானை துதிப்பதில் என்ன தடையிருக்கக் கூடும். ஆனால் அவர் கர்ப்பமாக இல்லை, தவிர அவருக்கு முடியெல்லாம் நரைத்து விட்டது. ஓமனில் ஆண்ட்டை க்ரைஸ்ட் ஓநாய்க்கு தான் பிறக்கிறான். அதில் குழந்தை சாத்தானை பாதுக்காக்க தாதியாக வருபவளின் உருவ அமைப்பு ராட்சஸியை ஒத்துள்ளது எதேச்சையானதாக இருக்க முடியாது. தெருவில் ஓநாய்கள் கிடையாது. ஆனால் நாய்களும் ஓநாய்களும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவை, ஜெர்மன் ஷெப்பர்ட் இனத்தின் புகைப்படங்களை பார்த்தால் ஓநாய் போலவே தோற்றமளிக்கின்றன. ராட்சஸி வீட்டில் நாயில்லை. ஓநாய் நாயாக நடித்தபடி தெருவில் உலவிக் கொண்டிருக்கக் கூடும், ஆண்ட்டை க்ரைஸ்ட்டை ஈன்றவுடன் ராட்சஸியிடம் தந்து விடும்.

இரண்டு நாட்களாக தேடித் பார்த்தாகி விட்டது. பெரிய, சின்ன மணிக்காரத் தெருக்களில் புதிதாக எந்த நாயும் வந்ததுள்ளது போல் தெரியவில்லை, நீண்ட நாட்களாக சுற்றிக் கொண்டிருப்பவற்றில் எதற்கும் ஓநாய் ஜாடை இல்லை. கர்ப்பமாக உள்ள நாய்களோ, சமீபத்தில் பிரசவிக்கப்பட்டுள்ள குட்டிகளோ இல்லை. இதை வைத்து எந்த முடிவுக்கும் வர முடியாது, சாத்தான் தந்திரங்களில் தேர்ந்தவன். பூனைகளுக்கும் அமானுஷ்யத்திற்கும் தொடர்புள்ளதென்று சொல்கிறார்கள், குறிப்பாக கருப்பு நிற உடலும், பச்சை நிற கண்களும் கொண்டவை. எனவே அவன் பூனை வயிற்றிலும் பிறந்திருக்கக் கூடும். பூனைகளை கவனிக்க ஆரம்பித்தான். கறுப்புப் நிறத்தில் எதுவும் இல்லை. அலமேலு வெள்ளை நிறம், தவிர ஆறேழு மாதங்கள் முன்பே தன் நிறத்திலேயே குட்டிகளை ஈன்றிருந்தாள், அவை பெரிதாகி வேறெங்கோ சென்றும் விட்டன. அவற்றையோ, அவளையோ கொல்லும் மனத்திடம் இருந்திருக்காது.

சாத்தானின் இருப்பிடத்தை கண்டுபிடிப்பது ஒரு புறமிருக்க, அவனை கொல்வதற்கான ஆயத்தங்களை செய்து தயார் நிலையில் இருக்க வேண்டும். ஆசிர்வதிக்கப்பட்ட கத்திகள் கிடைக்க வாய்ப்பில்லை. சமயலறையில் அம்மா வெங்காயத்தையும், தக்காளியையும் நறுக்கி தட்டில் வைத்திருக்கிறாள், அருகில் தக்காளி விதைகள் ஒட்டியிருக்கும் கத்தி. சாத்தானின் ரத்தமும் சிவப்பு நிறமாக இருக்குமா, சாவியில் வந்த தொடர்கதையில் பச்சை நிறத்திலிருப்பதாக எழுதப்பட்டிருந்தது. கத்தியை எடுத்து அதில் படிந்திருந்த வெங்காயமும், தக்காளியும் கலந்த மணத்தை முகர்ந்தவன், கண்களில் சிறு எரிச்சல் ஏற்பட கத்தியை மேடையில் வைத்தான். இதை தான் உபயோகப்படுத்த வேண்டும். கத்தியை பூஜையறையில் வைத்து வழிபட்டால் இறைசக்தி கத்தியில் இறங்கும். ‘யார்’ படத்தில் எல்லா மதத்தினரும் கூட்டாக பிரார்த்தனை செய்து தான் சாத்தானை அழித்தார்கள். பள்ளியிலுள்ள மேரி மாதா சிலைக்கு முன்பும் வைத்து வேண்டிக் கொள்ளலாம். மசூதிக்குள் நுழைய முடியமா என்று தெரியவில்லை. அங்கு வைத்து வழிபட முடியாமல் போகலாம், ஆனால் மூன்றில் ரெண்டு இடத்தில் வைத்து வழிபட்டால் கூட சாத்தானை அழிக்கும் ஆற்றல் கத்திக்கு வந்து விடும். கத்தி தயார். அடுத்து சாத்தானை கொல்ல ஏற்ற இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.

ஆண்ட்டை க்ரைஸ்ட்டை தேவாலயத்தில் வைத்து தான் அழிக்க முடியும் என்று ஓமனில் சொல்லப்பட்டுள்ளது. சாத்தானின் வளர்ப்புத் தந்தை சர்ச்சில் அவனை கொல்ல முயற்சிப்பதை பார்க்கும் போலீஸார் அவருக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று எண்ணி சுட்டுக் கொன்றுவிடுகிறார்கள். எனவே மக்கள் நடமாட்டமுள்ள இடத்தில் செய்யக் கூடாது. பின்னாலுள்ள காலி மனை தான் சரியான இடம். மதிய நேரத்திலோ, இரவிலோ ஆண்ட்டை க்ரைஸ்ட்டை அங்கு கொண்டு சென்று கொன்று விட வேண்டும். சாத்தான் என்றாலும் ஓமனில் வருவது போல் அழகான குழந்தையின் உருவத்தில் இருக்கும், அதை அழிக்க மனதை திடப்படுத்திக் கொள்ளவேண்டும். முக்கியமாக கத்தி நன்கு கழுவப்பட்டிருக்க வேண்டும், இல்லையென்றால் சாத்தானை கொல்ல அதை ஓங்கும் போது வெங்காய நெடியில் கண்ணெரிச்சல் அவன் தப்பித்து விடுவான். ஆயுதம், இடம் தயார், சாத்தானின் இருப்பிடம் மட்டும் தெரிந்தால் போதும்.

பரீட்சைக்கு மூன்று நாட்கள். ‘சாத்தான் சாத்தான்னு சொல்லிட்டே இரு, சாவடி தான் வாங்கப் போற பாரு’, சந்துரு கூட ஆண்ட்டை க்ரைஸ்ட்டை பற்றி இவன் சொல்வதை கேட்க தயாராக இல்லை. அப்பனிடம் பேசி ஒரு வருடத்திற்கு மேலாகப்போகிறது. சாத்தான் பற்றி அம்மாவிடம் சொன்னதற்கு ‘அப்படியா’ என்று மட்டும் கூறினாள். அடுத்த போர்ஷனில் வசிக்கும் சுந்தரி அக்காவிடம் சென்றான். இவன் அவர் முன் நீட்டிய பைபிளின் பக்கத்தை பார்த்து விட்டு ‘என்னடா’ என்று கேட்டார்.
‘இங்க பாருங்க’
‘என்னது,தெரியலையே’
‘முடி பாருங்க, ஆண்ட்டை க்ரைஸ்ட் பொறந்திருக்கு’
‘ஆண்ட்டை.. அப்டினா’
‘சாத்தான்க்கா, அது பொறந்திருக்காம்’ என்று விளக்க ஆரம்பித்து ‘ராட்சஸி மேல தான் எனக்கு சந்தேகமா இருக்கு’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது, சுந்தரி அக்கா சிரித்தபடியே’ஏண்டா செவன்த் வந்துட்ட, இப்பவும் இதெல்லாம் நம்பறியே’ என்றார்.
‘ராட்சஸி சூனியம்லாம் வெப்பாங்கன்னு நீங்க தான சொன்னீங்க’
‘அது வேற டா’
‘அப்ப இந்த முடி இங்க எப்படி வந்தது’
‘மயிலிறகா இருக்கும்டா, புக்ல அதை வெச்சுப்பாங்கல்ல, அது வெளியே விழும் போது துண்டு மட்டும் மாட்டிக்கிட்டிருக்கும், இல்லைனா இத படிக்கும் போது தலைலேந்து உதிர்ந்திருக்கலாம். இத போய் சாத்தான்னு சொல்லிட்டு, அதெல்லாம் சும்மாடா’
‘கார் ஆக்ஸிடென்ட்ல கை பிராக்சரோட தப்பிச்ச உங்க சித்தியை, அதுல செத்துப் போன இன்னொரு லேடி ராத்திரி ராத்திரி தன் கூட வரச் சொல்லி கூப்படறாங்கன்னு நீங்க தான சொன்னீங்க, அப்ப பேய் ஆவிலாம் இருக்கு தானே’
‘ஆவி வேற, சாத்தான் வேற டா’
‘ரெண்டுத்துக்கும் என்ன டிப்பரன்ஸ்’
‘அதெல்லாம் ஒனக்கு புரியாது’
‘நீங்க அன்னிக்கு ஒருநாள் கிளி ஜோசியம் பாத்தீங்களே அது’,
‘அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம், உன்கிட்ட பேசி புரிய வைக்க முடியாது’.
போர்ஷனுக்குள் நுழைந்தவன் பைபிளை ஷெல்பில் வைத்து விட்டு பைனல் கான்ப்லிக்ட்டை எடுத்தான். கருப்பு நிற அட்டையில் நீண்ட பற்களுடன் வாயைப் பிளந்து ஊளையிடும் ஓநாய். அதன் பற்களிலிருந்து வடியும் குருதி முன்னமே இருந்ததா? யாருக்கும் வரவிருக்கும் அபாயம் புரியவில்லை.

காலாண்டு விடுமுறை ஆரம்பித்து இரு நாட்களாகிவிட்டன. முந்தைய நாள் படித்து முடித்த காட்பாதரின் இறுதிப் பக்கத்தை மட்டும் மீண்டுமொருமுறை வாசித்தான். மைக்கேலின் வீட்டில் அவனுடைய அலுவல் அறை. ரோமானிய பேரரசன் போல் நின்றுகொண்டிருப்பவனின் முன் க்ளிமென்ஸாவும் மற்றவர்களும் வணங்கி ‘டான் கார்லியோநெ’ என்றழைப்பதை நேற்றிலிருந்து நான்காவது முறையாக பார்க்கிறான்.

இடது கையை இடுப்பில் வைத்தபடி காலி மனையின் நடுவே பள்ளி சீருடையில் நின்றுகொண்டிருக்கிறான். அருகில் சந்துரு. செங்கல்பட்டின் காட்பாதர் இவன் தான். முழுதும் அடிபணியாமலிருக்கும் எதிரணி தலைவன் பற்றி சந்துரு சொல்ல, அவனை அழைத்து வருமாறு கூறிவிட்டு ‘ஐ வில் மேக் ஹிம் அன் ஆபர் ஹி கான்ட் ரிப்யுஸ்’ என்கிறான் இவன். தார்சியஸ் ஸார் இவன் முன்னே வந்து, ‘டான் XXX’ என்று மெல்லிய குரலில் இவன் பெயர் சொல்லி அழைத்த பின் குனிந்து அவனது வலது கை மணிக்கட்டை பற்றி முத்தமிடுகிறார். அவரைத் தொடர்ந்து பி.டி ஸார் மற்றும் இன்னும் சிலர் அதையே செய்ய, சக்கரவர்த்தி போல் அவர்களின் வணக்கத்தை ஏற்றுக் கொண்டிருக்கும் போது காலி மனையை நிறைக்கும் ஓலம் அந்தக் கணம் தான் பிரசவித்திருக்கும் ஓநாயினுடையதாக இருக்கக் கூடும்.

சுபிட்ச முருகன் நாவல் குறித்து விஜயகுமார்

மெய்யுணர் வழிகள் என நம் மரபு எவற்றையெல்லாம் சுட்டிக்காட்டியுள்ளது என்று கணக்கு எடுத்தால் அது நீண்ட பட்டியலாகத்தான் இருக்கமுடியும். உதாரணமாக காஷ்மீரி சைவ நூலான விஞ்ஞான பைரவ தந்திரத்தில் அவற்றை 112-வழிகளாக பொதுமைப் படுத்தியுள்ளது. ஒரு சார்வகனிற்கோ லௌகீகனிற்கோ இது அனைத்தும் பிறழ்வாகவே தோன்றும். அவ்வளவு ஏன்? இன்று அனைத்தும் தீர்மானிக்கின்ற ஜனநாயக நுகர்வோனுக்கு மெய்யுணர்தல் என்ற ஆன்மீக சாராம்சமே பொருள்சேர் என்ற கருதுகோளாகவே புரியும். இதுவே ஒரு பிறழ்வுதான்.

அறுதி உண்மையான மெய்ஞானப் பாதையில் உள்ளோர் எக்காலத்திலும் சிறுபான்மையினராகவே உள்ளனர். அப்படி இருந்தும் ஒரு பொது சமூகம் அந்த சிறுபான்மையினரை அடையாளங்கண்டு ஏற்றுக்கொள்வதென்பது அந்த பாதைக்கு வலுசேர்ப்பதாக இருக்கும். மேலும் பொது சமூகத்திற்கு அது நல்லதும்கூட. ஆனால் அதில் ஒரு சிக்கல் உள்ளது. பிறழ்வே வழியாகக் கொண்டோரை இந்த சமூகம் எப்படி ஏற்கும். கொடிறுடைக்கும் கூன்கை கொண்ட சமூகம் அவர்களுடன் வன்முறையால்தான் உரையாடும். அதுவே பிறழ்வின் பக்கவிளைவு.

சமூகம் தன் எண்ணற்ற நடத்தைகளில் பிறழ்வை எப்படி அடையாளங்காணும்? மனக்கட்டுறுதி குழைதல் எனும் விழுக்காட்டு வரையறைக் கணக்கில்தான். அந்த வரையறைக்கு மேலோ கீழோ போகும்போது அது பித்து பிறழ்வு என்றாகிவிடுகிறது. மனக்கட்டுறுதி என்பது சமூக ஏற்புப் பரப்பில் அந்த விழுக்காட்டு வரம்பிற்கு உட்பட்டவையாக இருத்தல் வேண்டும். அதுவே ஏற்புடையது என்று நம் பொதுபுத்தி கருதுகிறது.

இந்த நாவலின் நாயகன் பிறழ்வின் வழி சேர்ந்தவன். அவ்வழி அவனை அறுதி பிரக்ஞையான மெய்ஞானத்திற்கு இட்டுச்சென்றதா? அப்பாதைக்கு அவனை கொண்டுசேர்த்தது என்ன? அங்கே அவன் கண்ட சாபங்கள் வரங்கள் விமோச்சனங்கள் என்ன? ஆதாரப்புலன்களால் ஆட்கொள்ளப்பட்டபோது அதனிடம் தன்னை விரும்பி ஒப்புக்கொடுத்தானா? அல்லது புயலில் மாட்டியவன் கதியென ஆனானா? இப்படி பல கேள்விகளாக நம் மனம் விரியும்.

மனக்கட்டுறுதி உடற்கட்டுறுதி குழைதல் என்ற அந்தகாசத்தில் தெய்வங்கள் நிகழும். இதை காரண காரியத்திற்கு உட்பட்ட பட்டுணர்ச்சி தொட்டுணர்ச்சி விதிகளின் கீழ் நிரூபிக்கமுடியாது. அப்படி நிரூபிக்கமுடியாத ஆனால் ஆழுள்ளம் அறிந்த ஒன்றை இப்படி கதைகள் கவிதைகளின் மூலம் சொல்லிவிடலாம்.

அறுதி நிலை என்பது உலகியல் எல்லைக்கு அப்பால் உள்ள வீடுபேறு எல்லைக்குள் வரும் என்று நாம் ஊகிக்கலாம். அந்த விழுமிய எல்லைகளில் பயணிப்பவர்களுக்கு கட்டுறுதி குழைதல் என்பது இன்றியமையாதது. குரு என்பவர் தன் கட்டுப்படுத்தப்பட்ட பாதுகாப்பான அந்தகாசப் பரப்பில்; ஞானப் பாதையில் இருப்பவனை குழைத்தும், மறுத்தும், தகர்த்தும் மாற்றியமைப்பார். அது தன்னிலை அழிதல். எந்த ஆன்மீக முறைமைகளும் தன்னிலை அழிதலையே பிரதானமாக செய்யும். அப்படி குரு இல்லாத பயணிப்பவனுக்கும் பித்தனுக்கும் குண வித்தியாசங்கள் இருப்பதில்லை. நாவலில் இதுவே நடக்கிறது

விஷ்ணுபுரம் நாவலில் வரும் பிங்கலன் தன் புலன் அறிவையே பிரமானமாகக் கொண்டு அதையே மெய்காண் முறைமையாக வகுத்துக்கொண்டவன். ஆனால் நம் கதை நாயகனோ காம யட்சியால் ஆட்கொள்ளப்பட்டவன். தன்னிலை அழிந்து பிறிதொன்றாக ஆனவனல்லன். வேறொன்றாக ஆனதினால் தன்னிலை அழிந்தவன். சாபம் சாபவிமோசனம் என்று புராண கதை மரபில் பார்த்திருக்கிறோம்; அதையே இந்நாவல் நவீன மொழியின் ஆழ்பரப்பில் நிகழ்த்திக் காட்டுகிறது. நம் அறிவுசேகர எல்லைக்கு அப்பால் உள்ள, அனுபவ அளவைகளால் அள்ள முடியாத ஒன்று உள்ளது என்று நம் ஆழ் மன பிரக்ஞை அதை கற்பனையால் உரசி அறிகிறது. இதுவே இந்நாவலின் வெற்றியாக எனக்கு படுகிறது.

நாவலில் பல்வேறு இடங்களில் நம் மனம் மேலெழுந்து பரவசம்கொள்கிறது. நாவலின் ஆரம்பத்தில் வரும் ராஜநாகம் ஒரு பெரிய குறியீட்டு வெளியாக மனதில் பதிகிறது. காமத்தையும் அதன் பிறழ்வுகளையும் கதாசிரியர் தன் முதற்தர சொற்தேர்வுகளால் அதன் ஆதார அம்சத்தை நம் கண் முன் விரித்து காட்டுகிறார்.

மெய் தீண்டிய கதை நாயகனிடம் ஒரு வெள்ளாட்டு குட்டி இயல்பாக வந்து ஓட்டுகிறது நாவலில் ஒரு இடத்தில். மயில்வாகனனிற்கு ஆதியில் அஜவாகனம் என்று நினைக்கையில் அந்தக் காட்சி மேலும் துலங்கி மனதின் பீடத்தில் அமர்கிறது.

வளர்த்த குழந்தையைத் தீண்டும் கரங்கள், அங்கு நிலைகொள்ளும் சாபம், உயிர்பலிகள், அதுவே கதை நாயகனின் திரிப்பிற்கான ஊற்றுக்கண், கடைசியில் யட்சியின் பழிதீர்த்தலும் சாபவிமோசனமும் என்று நாவல் முழுவதும் வரும் அதிர்ச்சிகள்.

ஞானப் பாதையில் மனிதனிற்கு மட்டும்தான் மேற்கூரை இடப்படாமல் இருக்கிறது. அவனது கால்கள் மண்ணில் நிலைபெற்றிருந்தாலும் அவன் மேல் எழும்போதெல்லாம் தன்பிரக்ஞை வான் நிறைக்கும். மற்ற ஜீவராசிகளிற்கு ஜீவித்தல் மட்டுமே விதிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் மனிதன் ஜீவித்தலோடு நிறுத்த தேவையில்லை. அவன் மேலெழும் பாதை எதுவாகவும் இருக்கலாம். பிறழ்வாகக்கூட.

இதையே நாம் வேறுவிதமாகவும் பார்க்கலாம். புராண நெடுகிலும் சிவனின் சுக்கிலத்தில் இருந்து அதிசய பிறப்புகளும் நிகழ்வுகளும் காணக்கிடைக்கிறது. முருகனே அப்படி பிறந்தவன்தான். யோக தந்திரத்திலும்கூட ஒருவனின் வீரிய பாதுகாப்பு பேசப் படுகிறது. பாதுகாப்போ விரயமோ ஏதுவாகிலும் அறுதி ஞானத்திற்கு அதுவே வழியாக அமையும். நாவலில் நம் கதை நாயகனை குழந்தையாக, காதலனாக, பிறழ்வுற்ற பித்தனாக, முடவனாக, மெய்தீண்டியவனாக, இறுதியில் சுக்கில மணியாக என ஆறுமுகமாக காண்கிறோம். அங்கிருந்து மேலும் நம் மனம் பல திசைகளில் விரிந்து சென்றுகொண்டே இருக்கிறது.

இந்த தேசம் புண்ணிய பூமி என்று எனக்கு எள்ளளவோ சொல்லளவோ சந்தேகமில்லை. சுபிட்ச முருகன் இங்கு மட்டுமே நிகழக்கூடியது.