சிவா கிருஷ்ணமூர்த்தி

A12 எனும் அருவியும் வழியெல்லாம் பெர்ரிச்செடிகளும் – சிவா கிருஷ்ணமூர்த்தி கட்டுரை

A12 எனும் அருவியும் வழியெல்லாம் பெர்ரிச்செடிகளும்

சென்ற ஆகஸ்ட் மாத மத்தியில், சேர்த்து வைத்திருந்த சில குட்டி வேலைகளைச் செய்ய வீட்டிற்கு ப்ளம்பர் வந்திருந்தார். கடைசியாக அவரைப் பார்த்தது ஒரு வருடம் முன்னர். அழுக்கு உடையுடன் கொரோனா முகமூடிக்குள் அசைந்த அவரது தாடையை ஊகித்தவாறு, “பார்த்து ஒரு வருடமிருக்கும், இருந்தும் உங்கள் புன்னகை இன்னும் நினைவிருக்கிறது” என்ற சொல்ல நினைத்து, “அதே புன்னகை!“ என்று மட்டும் சொன்னேன்.

அவர் தாடையை நன்கு அசைத்தவாறே, ”ஆனால் அப்போது நாம் சந்தித்த உலகம் வேறு; அந்த உலகத்தில், யாரையாவது சந்திக்கும்போது கைகுலுக்கும் வழக்கமிருந்தது,” என்றார்.

ஆம், இரு உலகங்களுக்கு இடையில் கைகுலுக்க முடியாத அழுத்தமான கோடு இன்றிருக்கிறது.

கோட்டிற்கு இந்தப்பக்க உலகில் கட்டாயத்தின் பேரில் நிறைய வழக்கங்களை எதிர் கொள்ள வேண்டியாகிறது. அதே சமயம் நேர்மறை பழக்கங்களும் இல்லாமல் இல்லை.

ஆகஸ்ட் மாதத்திலிருந்து, நான் வாழும் லண்டனிற்கு கிழக்கில் முப்பது மைல்கள் தள்ளி இருக்கும் இந்த நகரத்தில் வசிக்கும் இந்திய நண்பர்களுடன் சேர்ந்து சைக்கிள் பயணங்கள் ஆரம்பித்திருக்கிறேன்.

உண்மையில் அவர்கள் கடந்த ஒரு வருடமாகவே குழுவாக ஒவ்வொரு சனிக்கிழமை காலைதோறும் பயணங்கள் மேற்கொண்டு வருகிறார்கள், நான் சமீபத்தில்தான் சேர்ந்திருக்கிறேன்.

நாங்கள் ஆங்காங்கே குழு குழுவாகச் சேர்ந்து கொண்டு நகரத்திற்கு வெளியே அமைந்திருக்கும் ஒரு பெரிய நீர் தேக்கத்தை (Hanningfield) ஒரு சுற்று வருவோம். தோராயமாக முப்பது மைல்கள். சில சமயங்களில் சில நண்பர்கள் இன்னொரு சுற்றும் சென்று வருவதுண்டு.

நான் வீட்டிலிருந்து காலை 7 மணிக்கு கிளம்பி The Endeavour எனும் பப்பிற்கு வெளியே காத்திருக்கும் ஓரிரு நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு நகரத்தின் இன்னொரு மூலைக்கு சைக்கிளை விட்டு, நான்கு மைல்கள் தொலைவில் Blue Lion எனும் பப்பில் காத்திருக்கும் மற்ற குழு நண்பர்களுடன் இணைந்து கொண்ட பின் நகரத்திற்கு வெளியே செல்லும் ஒற்றைப் பாதையில் சீராகச் செல்வோம். பின்னர் The Three Compasses எனும் பப்பிற்கு வரும்போது எட்டு அல்லது பத்து மைல்கள் கடந்திருப்போம். அதன் பின் The Old windmill …இப்படியாக சிறு கிராமங்களை தொட்டுச் செல்லும் வழியெங்கும் மதுபான விடுதிகளே எங்களது மைல்கற்கள்.

இப்படியாக காலை 7 மணி வாக்கில் அவரவர் இருப்பிடங்களிலிருந்து ஓரிருவராக சேர்ந்து கொண்டு ஆரம்பிக்கும் பயணம் மெல்ல நகரத்தை விட்டு வெளியே ஒற்றை கிராம பாதையை நோக்கி நகரும். வழியில் ஓரிடத்தில் A12 எனும் மோட்டார் பாதையை நாங்கள் ஓர் குறுகிய பாலத்தின் வழியாக கடப்போம். பாலத்தின் அடியில்,இரு வழிப்பாதைகள் கொண்ட மோட்டார் சாலை. இம்மாதிரியான A சாலைகளில் விரைந்து கொண்டிருக்கும் வாகனங்களின் சராசரி வேகம் 70 மைல்கள்.

கிராம ஒற்றை வரிசைப் பாதையில், சுற்றிலும் வேனிற்கால வண்டுகளையும் பூச்சிகளின் ரீங்காரங்களையும் மட்டும் கேட்டபடி சைக்கிளை மிதித்துக்கொண்டு போகையில் இந்த மோட்டார் பாதையின் இரைச்சல் தூர அருவிச்சத்தம் போல் மெல்லியதாய் கேட்க ஆரம்பிக்கும். மோட்டார் பாதையை நெருங்க நெருங்க அதிவேகமாகச் செல்லும் வாகனங்களின் இரைச்சல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகும். அருவி கண்களில் படாது. ஆனால் அருகில் பெரும் உற்சாக அருவியை உணர முடியும். திடுமென ஒரு திருப்பத்தில் சிறு பாலத்தைக் கடக்கும்போது A12 எனும் அருவி நமக்கு கீழே உற்சாகமாக கண்களில் படும்.

பாலத்தைக் கடந்து போகையில் அருவியின் இரைச்சல் மெல்ல மெல்ல தேய்ந்து தூரத்து இடி போல் மறைந்துவிடும்

பின் ஒடுங்கி குழைந்து வயல்களின் நடுவில் பெரிய அளவு வரப்பு போன்ற பாதையில் எங்கள் பயணம் போகும்.

வாழ்க்கை மாதிரி இந்தப் பாதையும். சீராக ஒரே நேர் நிலையில் இருப்பதில்லை. போய்க் கொண்டிருக்கும்போது திடீரென சரசரவென இறக்கம் இறங்கும். மிதிக்கத் தேவையில்லாமல் ஆகஸ்ட் காலை தாராள வெயிலும் காற்றும் முகத்தில் உற்சாகமாக அடிக்க ஆசுவாசமாக பக்கவாட்டில் பார்க்க ஆரம்பிக்கும்போது இறக்கம் சட்டென வலது புறத்தில் திரும்பும். திரும்பும் இடத்தில் கள்ளமாக இருக்கும் சிறு கற்களை கவனமாக கவனித்து தவிர்த்து திரும்பினால் பாதை பெரும் மேடாக நம் முன் நின்று சிரிக்கும். கியர்களை மாற்றி, வேகம் குறைந்து மூச்சிறைத்து மேட்டிற்கு பழகிக்கொண்டிருக்கும்போது மறுபடியும் இறக்கம் சிரித்துக்கொண்டே எதிர்படும்.

மேடுகள் நினைவிருப்பது போல் இறக்கங்கள் நினைவிலிருப்பதில்லை.

ஆகஸ்ட் இறுதி வாரங்களில் அறுவடை முடிந்திருந்த வயல்களில் நடுவில் மொத்தமாக குவித்து சுருட்டப்பட்ட வைக்கோற் பொதிகள் அமைதியாக அமர்ந்திருந்தன. பொதிகள் எனில் சாலை போடும் இயந்திரங்களின் உருளை அளவிற்கு சுருட்டப்பட்ட பொதிகள். பின் வந்த வாரங்களில் அவை வயல்களிலிருந்து அகற்றப்பட்டு பாதையோரத்தில் இருக்கும் பண்ணை முற்றங்களில் குவித்து வைக்கப்பட்டிருப்பதை கண்டேன்.

 


ஒரு L வடிவ பாதை திருப்பத்தில் கருப்பு பெர்ரிகள் கொத்து கொத்தாக காலை ஒளியில் மிளிர்ந்து கொண்டிருந்ததைக் கண்டேன். சைக்கிளை உடனே நிறுத்த முடியாது, திரும்ப வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என எண்ணிக்கொண்டே திரும்பினால் கருப்பு பெர்ரிகளும் மஞ்சள் நிற பெர்ரிகள் மீண்டும் தென்பட்டன…மீண்டும்…

மொத்தப் பாதை முழுவதும் இருமருங்கிலும் பெர்ரிச்செடிகள் ஏராளமாக வந்து கொண்டிருந்தன.

சில வருடங்களுக்கு முன் ஸ்காட்லாந்தில் ஒரு மலையேறு பயணத்தில் வழிகாட்டி, பிரிட்டன் காட்டுப் பகுதியில் காணக்கூடிய பெர்ரிச்செடிகளில் ஏழுவகை மனிதர் உண்ணக்கூடியவை என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் பாதையில் அந்த வகையான பெர்ரிகள் ஏராளமாக தென்பட்டன. நீல நிற பில்பெர்ரிகள், மஞ்சள் நிற பெர்ரிகள் (Rowan), சிவப்பு பெர்ரிகள் (Cloudberry, Crowberry, Cranberry) போன்ற பல வகையான பெர்ரிகள் தென்பட்டாலும் கருப்பு பெர்ரிகள் பொதுவாக சுவை மிகுந்தவை. இருபது மைல்கள் கொண்ட பாதையில் எங்கு சைக்கிளை நிறுத்தினாலும் கைக்கெட்டும் தூரத்தில், முட்களோடு இப்பெர்ரிகள் முது வேனிற்காலத்தில் ஆரவாரித்தன.

 


நானும் சக நண்பரும் ஓரிரு நிமிடங்களில் பெரிய பீங்கான் குப்பியில் நிரப்பிவிடக்கூடிய அளவிற்கு கருப்பு பெர்ரிகளைப் பறித்துவிட்டோம். பின்னர் செப்டம்பர் வாரங்களிலும் நிறைய பறிக்கக் கிடைத்தது.

திரும்ப வீட்டிற்கு வந்து நன்கு கழுவி விட்டு அவ்வப்போது கொறிக்க வைத்துக் கொள்வேன்.

இந்தியாவில் வாழும்போது பனம் பழம் அல்லது இலந்தை அல்லது வேறு பழங்கள் பறித்து தின்னல் போன்ற கிராம வாழ்க்கைக்கான அனுபவம் அமையவில்லை. மேட்டில் சைக்கிளை மிதிக்கையில், வழியெங்கும் பெர்ரிகளைப் பார்த்துக்கொண்டே வருகையில் அவற்றை நினைத்துக்கொண்டே வந்தேன்.

ஆனால், வழியில் பண்ணைகளை கடக்கும்போது ஓரிரு முறை சேவல்கள் கூவும் ஒலி கேட்டோம், குதூகளித்தோம்!

வழியில் அவ்வப்போது பெரும் பண்ணை வீடுகள் படும். பெயர்களும் வித்தியாசமாக இருக்கும். இல்லாவிட்டாலும் நானே வித்தியாசப்படுத்திக் கொள்வேன்.  ESK house எனும் எசக்கியின் இல்லம் எனக்கு ஓர் குறிப்பிட்ட மைல்கல்.

நீர்த்தேக்கத்தை (402  ஹெக்டர் பரப்பளவு) சுற்றி வரும் பாதையில் ஓரிடத்தில் நீர் தேக்கத்தின் கரையில் எதிர்படும் பாலத்தில் பயணத்தை நிறுத்தி இளைப்பாறுவது வழக்கம். ஒரு முறை வாழைப்பழத்தை உரித்துக்கொண்டே பாலத்தை ஒட்டிய கம்பிகள் வைத்த சுவற்றின் நானும் இன்னொரு நண்பரும் சாய்ந்து கொண்டு நீர்த்தேக்கத்தைப் பார்த்தோம். கரையின் ஓரத்தில் வரிசையாக அமர்ந்திருந்த கருப்பு கழுத்து வாத்துகள் சப்தங்கள் எழுப்பிக்கொண்டே ஒரு சேரப் பறந்து நீர்த்தேக்கத்தினுள் சென்று மீண்டும் அமர்ந்தன. ஓர் நீள கறுத்த மணி மாலை உரத்த சப்தங்களுடன் பறந்து போவதைப் போன்று இருந்தது.

அவைகளுக்கு எதிரே இன்னும் சற்று உயரத்தில் பெரு கொக்குகள் பெரும் V வடிவில் சப்தத்துடன் பறந்து கடந்து சென்றன

சட்டென சென்ற சனிக்கிழமை விஷ்ணுபுர நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த தியோடர் பாஸ்கரன் அவர்களின் இணைய வழி உரையாடல் நினைவிற்கு வந்தது.

தியடோர் பாஸ்கரன் சந்திப்பு

இயற்கையைப் பற்றி, கவனித்தலைப் பற்றி எழுத எப்படி ஆர்வம் ஏற்பட்டது எனும் கேள்விக்கு, 1967, ஒரு டிசம்பர் அதிகாலை 5:30 மணியளவில் திருச்சிக்கு அருகிலுள்ள ஓர் ஏரியில் பறவைகளைக் காண அமர்ந்திருந்த போது பனி மூட்டத்தினுள் பெரு வாத்துக்கூட்டம் (Bar headed goose) ஒன்று சப்தங்களுடன் வந்தமர்ந்த தருணம் அபார அனுபவமாக இருந்தது என்றும் அதைப் பற்றி எழுதிய அனுபவமே தனக்கு மேலும் எழுத தூண்டுதலாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த பெரு வாத்துகள் வானில் மிக அதிக உயரங்களில் பறக்கக்கூடியவை – 7,000 மீட்டர்களுக்கும் மேல் (23,000ft) உயரத்தில் காணப்பட்ட ஆவணங்கள் இருக்கின்றன.

டென்சிங், எட்மண்ட் ஹிலாரி குழுவின் ஒருவரான ஜார்ஜ், இப்பறவைகள் எவரெஸ்ட் சிகரத்தின் மேல் பறந்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.

ஓர்அதிகாலையில் ஏரியின் அருகில் இப்பெரும் வாத்துகளை கண்ட சந்தர்ப்பம் எத்தகைய அபார மனக்கிளர்ச்சியை கொடுத்திருக்கும் என்பதை ஓரளவிற்கு உணர முடிந்தது.

இந்த கருப்பு கழுத்து வாத்துகளுடன் வேறு ஏராளமான வாத்துகளும் கொக்குகளும் சிறு குருவிகளும், மேக்பைகளும் நீர் த்தேக்கப் பரப்பில் உலவிக்கொண்டும் பறந்துகொண்டும் இருந்தன. அவைகளுக்கேயான தனி பிரபஞ்ச உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தன.

கறுப்பு கழுத்து வாத்து என நான் குறிப்பிட்டிருந்தாலும் அவை வாத்து என்பதற்கான என் மனபிம்பத்திலிருந்து சற்று மாறுபட்டிருந்தன. மொபைல் போன் காமிரா கண்களின் வழி கவனித்தபோது அவற்றின் சிறு கண்கள் மோதிரத்தில் பொதிந்த பவழங்கள் போலிருந்தன – வீட்டிற்கு திரும்ப வந்து இணையத்தில் தேடியபோது அவை black necked Grebe எனப்படும் வாத்து வகை என அறிந்தேன்.

கொஞ்சம் ஆர்வம் கொண்டு கவனித்தாலே போதும், நம்மால் இது போல் நம்முடன் இருக்கும் ஆனால் நாம் உணரா இன்னொரு உலகை சற்றேயாயினும் கண்டுகொள்ள இயலும். காலின் இல்போர்ட் எனும் ஆங்கிலேய வனப் பாதுகாவலர் கானுறை வாழ்க்கையைப் பற்றி கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்-

இயற்கையை/கானுலகை கவனிக்கும் வழக்கம் உங்களை நிதானப்படுத்தும்; ஆச்சரியப்படுத்தும், வாழ்க்கை எனும் இப்பெரிய விஷயத்தை உங்களுக்கு அடையாளம் காட்டும், உங்களின் சிறிய, ஆனால் மிக முக்கிய பங்கைப் பற்றி யோசிக்கவைக்கும், என்று.

நம் இலக்கியங்களில் இயற்கையைப் பற்றிய விலங்குகள் பறவைகள் பற்றிய சித்திரங்கள் திகைக்க வைக்கும் அளவிற்கு குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

இளம் வயதில், பொம்மைத் துப்பாக்கியைக் கொண்டு சுட்ட குருவியின் கழுத்து வித்தியாசமாக, மஞ்சளாக இருப்பதைக் கவனித்து அதைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்து வாழ்க்கையே பறவையியலாக மாறிப்போன சலீம் அலியின் கதையை நாம் அறிவோம்.

நம் அனைவருக்கும் ஒரே வழி இல்லைதான். ஆனால் அனைவரின் வழியெங்கும் பல வகையான பெர்ரிகள் இருந்து கொண்டே இருக்கின்றன. ஏதாவது ஒரு தருணத்தில், திருப்பத்தில் கவனித்துவிட்டால் போதும்…

***

இப்படியாப்பட்ட ஓர் சனிக்கிழமை மதியத்தில் பக்கத்து வீட்டுக்காரரிடமிருந்து போனில் தகவல் வந்தது. எங்கள் வீட்டு தோட்டத்திலிருந்து செடிகள் அவரது தோட்டத்தில் படருகின்றன. வெட்டுவதில் ஆட்சேபணை உண்டா என்று கேட்டு. இல்லை என்று சொல்லிவிட்டேன். மாலை அவர் ஒரு தகவலும் படமும் அனுப்பியிருந்தார். “உங்கள் தோட்டத்திலிருந்து கரும் பெர்ரி செடிகளும் எங்களது தோட்டத்தில் படர்ந்திருக்கின்றன. அருமையான சுவை..!”

புத்தக கண்காட்சி 2020 – பதாகை பதிப்பக வெளியீடுகள்

ஒரு நாவல், இரண்டு சிறுகதை தொகுப்புகள், ஒரு கதம்ப படைப்பு மற்றும் ஒரு கட்டுரை தொகுப்பு என  பதாகை யாவரும் பதிப்பகத்துடன் இணைந்து இந்த ஆண்டு புத்தக கண்காட்சிக்கு ஐந்து நூல்களை கொண்டு வருவதில் பெருமிதம் கொள்கிறது.

கத்திக்காரன்- ஸ்ரீதர் நாராயணன் – சிறுகதைகள். 

ஸ்ரீதர் நெடுநாட்களாக இணைய உலகில் இயங்கி வருபவர். பதாகையின் தோற்றுனர்களில் ஒருவர். அமெரிக்காவில் வசிக்கிறார்.பூர்வீகம் மதுரை. ‘கத்திக்காரன்’ முழுக்க அமெரிக்க பின்புலத்தில் உருவான கதைகள். ‘வானவில்’ அமெரிக்க இந்திய  பதின்மரின் வாழ்வை பற்றி நுண்ணிய சித்திரத்தை அளிப்பது. பியாரி பாபு ஹோரஸ் அலெக்சாண்டர் பற்றிய நினைவுகளை சொல்லும் கதை. ஸ்ரீதரின் கதைகூறும் முறை பிசிறற்ற தெள்ளிய முறை என சொல்லலாம். இரா.முருகன் ஒரு நல்ல முன்னுரையை அளித்திருக்கிறார்.இந்த ஆண்டு ஸ்ரீதரின் தொகுப்பு நன்கு கவனிக்கப்படும் என்று நம்புகிறேன்.

ஒளி – சுசித்ரா – சிறுகதைகள்

சுசித்ரா, சுவிட்சர்லாந்தில் வசிப்பவர். உயிரியல் துறையில் ஆய்வு செய்து வருகிறார். இவரும் மதுரையை பூர்வீகமாக கொண்டவர். ஆங்கிலத்தில் வலுவான வாசிப்புடையவர். அண்மையில் சொல்வனம் இணைய இதழில் வெளிவந்த அவருடைய ‘ஒளி’ முன்னோடி எழுத்தாளர்கள் பலரால் கவனிக்கப்பட்டு பாராட்டப்பட்டது. தொகுதியில் வெளிவந்துள்ள ‘தேள்’ ஒரு நல்ல டிஸ்டோபிய கதை. இரண்டு அறிவியல்புனைவுகளும் வாழ்க்கையின் அடிப்படை வினாக்கள் மீது கட்டி எழுப்பப்பட்டவை. ‘ஹைட்ரா’ எனக்கு பிடித்த கதை. இந்த ஆண்டு மிகவும் பேசப்படும் தொகுதிகளில் ஒன்றாக இது இருக்கும் என நம்புகிறேன். படைப்பூக்கம் கொண்ட எழுத்து. வருங்காலத்தில் முக்கிய எழுத்தாளராக அறியப்படுவார்.

வீடும் வெளியும் – அனுகிரஹா – கதம்ப படைப்பு

அனுகிரஹா  சொல்வனம்  மற்றும் பதாகை ஆசிரியர் குழுவில் இருப்பவர். சேலத்தை பூர்வீகமாக கொண்டவர். பெங்களூரில் வசிக்கிறார். அவருடைய ‘வீடும் வெளியும்’ நூலை படைப்பு கதம்பம் என்றே சொல்ல வேண்டும். தமிழுக்கு இப்படியான வடிவம் முன்மாதிரி அற்றது என எண்ணுகிறேன். நான்கு தலைப்புகளில் கவிதைகள், சிறுகதைகள் மற்றும் அவரே வரைந்த ஓவியங்கள் என படைப்பின் எல்லா பரிணாமங்களும் கொண்ட நூல். அனுவின் கவிதைகள் மிக முக்கியமானவை. புதிய கோணங்களை திறப்பவை. அவை இவ்வாண்டு பேசப்படும் என்று நம்புகிறேன்.

இயர் ஜீரோ – காலத்துகள் – நாவல்

‘காலத்துகள்’ பதாகை வழி உருவாகி வந்த எழுத்தாளர். அவருடைய சிறுகதை தொகுப்பும் அடுத்து வர இருக்கிறது. ‘இயர் ஜீரோ’ செங்கல்பட்டில் தொண்ணூறுகளின் மத்தியில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்த ஒரு மாணவனின் கதை. நினைவுகளின் ஊடாக ஒரு தெறிப்பை காலத்துகள் இந்நாவலில் நிகழ்த்துகிறார். ஒரு தலைமுறையே அவருடைய கதையோடு தங்கள் நினைவுகளை பொருத்திப் பார்க்க முடியும். ஆத்மார்த்தமாக தன்னை கண்டடையும் நோக்கில், தன நினைவுகளை கிளறி எழுத்தாக்கும்போது அதன் நேர்மையின் ஆற்றலால் அப்படைப்பு நம்மை வசீகரிக்கிறது. தமிழில் வந்துள்ள சிறந்த ‘coming off age’ வகையிலான நாவல்களில் ஒன்று காலத்துகளின் ‘இயர் ஜீரோவை’ சொல்லலாம்.

பாண்டியாட்டம் – நம்பி கிருஷ்ணன் – மேலை இலக்கிய கட்டுரைகள்

நம்பி கிருஷ்ணன், அமெரிக்காவில் வசிக்கிறார். சொல்வனத்தில் தொடர்ச்சியாக உலக இலக்கியங்களை அறிமுகப்படுத்தி கட்டுரைகளை எழுதி வருகிறார். அரூ அறிவியல் புனைவு போட்டியில் அவருடைய கடவுளும் கேண்டியும் மூன்றாவது பரிசு பெற்றது. அவர் எழுதிய Ecco homo எனக்கு பிடித்த காந்தி கதைகளில் ஒன்று. தமிழிலிருந்து ஆங்கிலத்தில் செறிவான மொழியாக்கங்களை செய்திருக்கிறார். தமிழில் அவர் அளவுக்கு அயல் இலக்கிய வாசிப்பு உரியவர்கள் மிகக் குறைவு என்பது என் கணிப்பு. ‘பாண்டியாட்டம்’ உண்மையில் அப்படி பிரதிகளின் மீது அவர் தாவித்தாவி செல்லும் கட்டுரைகளின் தொகுப்புதான். பெருமைக்குரிய மிக முக்கியமான அறிமுகம் என நம்பியின் இந்த கட்டுரை நூலை கருதுகிறேன். ஓவியர் ஜீவானந்தத்தின் கோட்டுச் சித்திரங்களோடு நூல் தயாராகிக் கொண்டிருக்கிறது, கண்காட்சி முடிவதற்குள் வந்துவிடும்  என நம்புகிறேன்.

பதாகை இணைய தளம் தொடர்ந்து செயல்பட காரணமாக இருக்கும் வாசகர்கள், எழுத்தாளர்கள் அனைவருக்கும் நன்றி. பதிப்பகமாக மலர்ந்திருக்கும் பதாகையையும் ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

முந்தைய ஆண்டு பதாகை- யாவரும் கூட்டாக வெளியிட்ட

1. பாகேஸ்ரீ- எஸ்.சுரேஷ்- சிறுகதைகள்

2. வெளிச்சமும் வெயிலும் – சிவா கிருஷ்ணமூர்த்தி – – சிறுகதைகள்

3. வளரொளி- நேர்காணல்கள், மதிப்புரைகள்- சுனில் கிருஷ்ணன்

ஆகியவையும் விற்பனைக்கு உள்ளன.

இந்த நூல்கள் புத்தக கண்காட்சியில் யாவரும் அரங்கில் (189 & 190) கிடைக்கும். ஆன்லைனில் பெற http://www.be4books.com or Whatsapp no.9042461472யை தொடர்புக் கொள்ளலாம்.

முன் நின்று கல் நின்றவர்

மூன்று வாரங்களுக்கு முன், சூரியன் பிரகாசமாக புன்னகைத்துக் கொண்டிருந்த ஓர் வேலை நாள். காலை 8:30 மணி. கனத்த போர்வையாக குளிர். வழக்கமாக இந்த நேரத்தில் அலுவலகம் செல்லும் வழியில் கிட்டதட்ட பாதி தூரத்தைக் கடந்து கொண்டிருப்பேன். ஆனால் அன்று இருபது நிமிடங்களாக ஒரே இடத்தில் என் கார் நின்று கொண்டிருந்தது.

வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 20 மைல்கள் கிராமப் பாதையில் போய், பின்னர் ஒரு மோட்டார் சாலையில், பெரு வழிகள் சாலையில் போய் இணையும் சந்திப்பிற்கு ஒரு மைல் தொலைவிற்கு முன்பிருந்தே, கார்கள் தேக்க நிலையில் இருந்தன. அவ்வப்போது மெல்ல ஊர்ந்தன. நானும் சாலையின் இரு புறங்களையும் பார்த்துக்கொண்டே ஊர்ந்தேன்.

கடந்த இரு வருடங்களுக்கு மேலாக இந்தச் சாலையில் போய் வந்து கொண்டிருந்தாலும் இப்போது கண்களில் படுபவை இதுவரை படாதவை. வலது புறம் பெரிய புல்வெளி மேடு. மேட்டின் உச்சியில், தூரத்தில், சடசடக்கும் கொடிகள் போல சிறுமரங்கள். சட்டென ஒரு ராட்சச பறவை போல், தாழப் பறக்கும் கிளைடர் விமானம் போல் மேக நிழல், சாலையை, என் காரை, தடவி, கடந்து செல்வதை கவனித்தேன். அது அப்புல்வெளியை அலை அலையாய் நடுக்கிவிட்டு, சாரலாகத் தூவிவிட்டுச் சென்றது. ஒரு நிமிடத்திற்கும் குறைவாகத்தான் இருக்கும். நிழல் கடந்தவுடன் சூரியன் திரும்ப பிரகாசமாக புன்னகைத்தான்.

புல்வெளி முழுக்க துளிநீர் மின்னிக்கொண்டிருந்தது.

சட்டென இமைப்பன என்ற வார்த்தை தோன்றியது. மின்னி மின்னி தெரிவதை இமைப்பன என்ற வார்த்தையால் கம்பர் குறிப்பிட்டிருப்பது நினைவிற்கு வந்தது. கூடவே, ஒரு குறள் நினைவிற்கு வந்தது. பலமுறை நினைத்து புன்னகைத்துக் கொண்ட குறள்தான் அது.

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது

விசும்பு என்ற சொல்லிற்கு, பொதுவாக மேகம், வானம் என்ற பொருள் எடுத்துக்கொள்ளப்பட்டாலும் அதை விண்வெளியாக எடுத்துக்கொண்டு அக்குறள் இன்னொரு திறப்பு நிகழ்த்தியிருப்பதைப் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் பலமுறை சிலாகித்துப் பேசியிருக்கிறார்.

குழந்தை ரயில் வண்டிப் பெட்டிகள் போல் தொடர்ச்சியாய், ஒன்றையொன்றை சிறு முடிச்சுகளால் தொட்டுக்கொண்ட எண்ணங்கள் தொடர்ந்து வந்தன. அல்லது ஒரு கட்டுரைக்கு கொடுக்கப்பட்ட tags போல.
விசும்பிலிருந்து புல்லும், புல்லிருந்து குறளும், குறளிலிருந்து ஜெமோவும் வந்தபின், இந்த வருடம், 2017 ஜனவரியில் அவர் கோவையில் மூன்று நாட்களாக நிகழ்த்திய “குறளினிது” என்ற தலைப்பில் ஆற்றிய உரைகளும் நினைவிற்கு வந்தன.

தேய்வழக்கு – இந்த சொல்லிற்கு உடனடியாக ஓர் உதாரணம் சொல் என்றால் திருக்குறள் என்று சொல்லி விடலாம். அந்த அளவிற்கு தமிழ்நாட்டில் திருக்குறள் கையாளப்பட்டு வந்திருக்கிறது. கொதிக்கும் பஸ்ஸினுள்ளும் கொந்தளிக்கும் அரசியல்வாதிகளின் பேச்சுகளிலும் எங்கெங்கும் தென்படுவது ஆச்சரியம்தான்.
திருக்குறளிற்கான உரைகளுடனும் மொபைல் ஆப்களே வந்துவிட்டன. சலிக்கச் சலிக்க, சுற்றிச் சுற்றி எங்கும் தென்பட்டாலும், பொன், பொன்தானே.

குறளை ஒரு கவிதை நூலாக வாசிக்கலாம் என்று தன் உரையில் குறிப்பிட்டார் ஜெயமோகன். குறள் நீதி நூல் அல்ல; கவிதை வடிவில் நீதியைச் சொன்ன நூல். அந்த மூன்று நாள் உரைகளின் முக்கிய சாரங்களில் ஒன்று இது. அவரது பார்வைகளில், கட்டுரைகளில், அதிகம் கவனத்தை ஈர்க்காதவைகளில், திருக்குறளைப் பற்றிய பார்வையும் ஒன்று என்பது என் எண்ணம்.

இன்றைய தமிழ் சூழலில், அதிகம் பேசப்பட்ட குறள்களையும் அதிகம் பேசப்படாத குறள்களையும் எடுத்தாண்டு ஆற்றிய மிக முக்கிய உரையானது அது.

அதில் ஒரு குறளை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

நடுகற்கள் என்பவை இந்தியாவில் மட்டுமல்லாது உலகமெங்கும் இருந்திருக்கும் ஓர் வழக்கம்.
இங்கிலாந்தில், Stonehenge என்ற இடத்து பிரமாண்ட நடுகற்களை இதுவரை இரண்டு முறைகள் பார்த்திருக்கிறேன்.

என்னை முன் நில்லன்மின் – என்று துவங்கும் ஒரு குறளின் விளக்கங்களின் சாரம்- பகைவர்களே! என் தலைவன் முன் (எதிர்த்து) நிற்காதீர்; அப்படி நின்றவரெல்லாம் தற்போது நடுகல்லாய் நின்று கொண்டிருக்கிறார்கள், நீங்களும் அப்படி மாறப்போகிறீர்கள் என்று பகைவரை எச்சரிக்கை செய்தலாகும்.

என்னை முன் நில்லன்மின்-தெவ்விர்! பலர், என்னை
முன் நின்று கல் நின்றவர்.

ஜெயமோகன் தர்மபுரியில் வாழ்ந்த வந்த காலத்தில் ஒரு முறை கவிஞர் திரு. விக்கிரமாதித்யன், அவரைச் சந்திக்க அங்கு போயிருக்கிறார்.

இருவரும் மாலையில் அதியமான் கோட்டை என்ற இடத்தில் இருக்கும் ஏரிக்கரையில் நின்றிருக்கும் பல நடுகற்களை பார்த்துக்கொண்டே நடக்கிறார்கள். வேறு யாருமே அங்கில்லை. சூரியன் மறையும் நேரம். தன்னை விட மிக நீண்ட நிழல் கொண்ட நடுகற்கள். விளக்க முடியா சோகம் கவ்வும் தருணம். அந் நேரத்தில் கவிஞர், அதியமானை எதிர்த்து நின்றவர்கள் நிற்கும் நடுகற்கள் இவை என இக்குறளை நினைவு கூறுகிறார்.
ஜெயமோகனுக்கு அக்குறள் தரும் திறப்பு வேறு.

இவ்வுலகின் பேரரசன், காலம்தான். மாபெரும் சக்கரவர்த்தி. THE EMPEROR. மாந்தர்கள் அனைவருமே அச்சக்கரவத்தியின் பகைவர்கள்தான். அவன் முன்னால் எவரும் தோற்றே ஆக வேண்டும், கற்களாகத்தான் நின்றே ஆகவேண்டும். எவரும் வெல்ல முடியாது; தப்ப முடியாது. உடல் கொண்டு நிற்பவர், என்றாவது ஒரு நாள் கல் கொண்டு நிற்கத்தான் வேண்டும்.

என் ஐ (அரசன்) முன் நின்று கல்லாய் நின்றவர்….

இப்புவி, காலத்தின் பகைவர்களாகிய நமது நடுகற்களால் நிறைந்திருக்கிறது.

காலந்தோறும் நடந்து கொண்டிருப்பதுதான் இது. ஆனால் குறளின் வடிவில், இந்த திறப்பு நிகழும் போது கண நேரம் உறைந்துவிட்டேன்.

நேரடி விளக்க “கல்லாய்” இறுகியிருக்கும் குறள், உண்மையில் விதையாய், அச்சொற்களின், அவ்வாக்கியங்களின் அனைத்து சாத்தியங்களாகவும் திறக்கும் சிறந்த உதாரணம் இந்த உரை.

எல்லாரும் ஒரு நாள் நடுகல்லாய்தான் போக வேண்டும் என்றாலும் சிலரின் கற்கள் பெரியதாயும் நீண்டதாயும் ஆகின்றன. அவர்களது எண்ணங்களால், செயல்களால், படைப்புகளால்.

இந்தக் குறள் சொற்பொழிவின் இரண்டாம் நாளன்றுதான் வானவன் மாதேவி இயற்கை எய்துகிறார். அதை அன்றைய சொற்பொழிவின் ஆரம்பத்தில் ஜெயமோகன் குறிப்பிடுகிறார். இனி என்றைக்கு, யார், இந்த உரைகளை கேட்கும் போதும் வானவன் மாதேவியைப் பற்றி எண்ணாமல் இருக்கமுடியாது. வானவன் மாதேவியின் கல் நிச்சயம் பெரியதாய், அவரது மனவுறுதியாலும் செயல்களாலும் நிறைந்திருக்கும்.

23 மார்ச் அன்று இயற்கை எய்திய தமிழின் மிக மிக முக்கிய எழுத்தாளர், திரு.அசோகமித்திரன் அவர்களின் கல் அவரது படைப்புகளால் ஆனது. மாலை நிழலைவிட மிக நீண்டதாய், ஆனால் எக்காலத்திலும் குறையா நீளமாயும், உறுதியும் நிறைந்திருக்கும். பிரமாண்டதாய் உயர்ந்திருக்கும்.

உண்மையில் புலிக்கலைஞன் அசோகமித்திரன்தான். படைப்புலக காட்டில், அவர் ஒரு நிஜப்புலிதான். மிகக் கம்பீரமான புலி. வெளியிலிருந்து புரியாமல் பார்ப்பவர்களுக்குத்தான் அவர் வெறும் புலி வேஷம் கட்டினவர். கல் நின்றவர், பெருங்கல் நின்றவர், அழியா கல் நின்றவர் அசோகமித்திரன். காலமெனும் சக்கரவர்த்திக்கு எதிராய் பெருங்கல்லாய், பேரமைதியாய், கம்பீரமாய் நிற்கிறார் – அவருக்கு வணக்கங்கள்.

ஒரு நாள் முடிகிறது

சிவா கிருஷ்ணமூர்த்தி

 IMG_1969

ஓரிரு வருடங்கள்தான் ஆகியிருக்கும். அப்போது நான் ஒரு வருடமாக காதன்பர்க்கில், ஸ்வீடனில் வேலை செய்துகொண்டிருந்தேன். ஒரு ராஜஸ்தானிய நண்பரின் ப்ளாட்டில் நானும் ஒண்டிக்கொண்டிருந்தேன்.

என்னுடன் இன்னொரு நபரும் ஒட்டிக்கொண்டிருந்தான். என்னை விட பல வருடங்கள் இளையவன் என்பதாலும் ஒரு வாஞ்சையாலும் அந்த ஆந்திரனை அவன், இவன் என்ற ஏகவசனம் அவ்வளவுதான்!

அதுவோர் இலையுதிர் காலம். மதியம் தாண்டியவுடன் காலம் ஸ்தம்பித்து நின்றுவிடும். முடிவே இல்லாத மாலை. அத்தனை வெளிச்சத்தை காலை மணி ஒன்பது என்றால் நம்பலாமே தவிர இரவு மணி ஒன்பது என்று சொல்லவே முடியாது. (more…)