01
மலையொத்த சாபமொன்றை தோளில் சுமந்து
அடர்வனத்தின் வழியே அலைவுருகிறேன்.
சமுத்திர சமமாய் என் காதலையும், கருணையையும்
ஒரு கிண்ணத்தில் இட்டு நிரப்பியுள்ளேன்,
அருந்த வாவென்று சமிக்ஞை செய்கிறாய்-
சாபத்திற்கும், கருணைக்குமிடையிலான தூரத்தில்
யதார்த்தமும் பிரமையும் தாயக்கட்டையை
உருட்டி உருட்டி விளையாடுகின்றன
02
அரூபமான இப் பின்னிரவில்
காற்றை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும்
வெள்ளை பூனைக்குட்டிக்கு
விம்பங்களை தொலைத்த இருட்டுக்கு
முகமில்லை என்ற சங்கதி
விடியும் வரையும் தெரிவதில்லை