மித்யா

அமேஸான் காடுகளிலிருந்து- விதி வலியது

மித்யா

அத்தியாயம் 2 : விதி வலியது

கிறிஸ்டோ காட்டின் யாரும் புகுந்து வெளிவராத பகுதிக்குள் சென்று ஒரு அனகோண்டா துணையுடன் வெளியே வந்தான் eஎன்ற செய்தி காடு முழுவதும் தீ போல் பரவியது. அந்தப் பிரதேசத்தில் உள்ள குழுக்களுடன் போர் செய்து வந்த பிற குழுக்கள் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு இந்த அதிசய மனிதனைக் காண வந்தார்கள். இவ்வாறாக, கிறிஸ்டோவிற்கு ராஜ மரியாதை கிடைத்த செய்தி ஜெப்ரி ஹைன்ஸ் காதுக்கு எட்டியது.

காட்டின் வேறொரு பகுதியில் வாழ்ந்துகொண்டிருந்த ஜெப்ரி, கிறிஸ்டோ இருக்கும் இடத்திற்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் முகாம் அமைத்து தன்னுடைய உதவியாளராகிய ஜிம் பார்சனை அங்கு என்ன நடக்கிறது என்று அறிந்துகொண்டு வரச்சொன்னார். ஜிம் அங்கு சென்று நாம் முந்தைய அத்தியாயத்தில் படித்த விஷயங்களை அறிந்து கொண்டு அவற்றை ஜெப்ரியிடம் கூறினான். இதை கேட்டு அவர் பொரிந்து தள்ளினார்.

“இவர்கள் காட்டுவாசிகள், காட்டுமிராண்டிகள் என்பதை நிரூபித்து விட்டார்கள். மனிதனாக பிறந்துவிட்டால் கொஞ்சமாவது பகுத்தறிவு இருக்க வேண்டும். இவர்களுக்கு கொஞ்சம்கூட அறிவு இல்லையா? இந்த கட்டுக் கதையெல்லாம் உண்மையென்று நம்புகிறார்கள்? நம்மவர்கள் எப்படி இவர்களை முட்டாள்கள் ஆக்க வேண்டும் என்பதை நன்றாக கற்றுக்கொண்டிருகிறார்கள். இந்த சின்ன வயதிலேயே இவன் எப்படி ஏமாற்றி இருக்கிறான் பார் இந்த கிறிஸ்டோ” என்றார்.

இதற்கு ஜிம், “இல்லை சார். அவனை அனகோண்டா கொண்டு போட்டதை அவர்கள் நிஜமாகவே பார்த்திருக்கிறார்கள். அவன்…”

ஜிம்மை முடிக்கவிடாமல் ஜெப்ரி வெடித்தார், “உனக்கும் அறிவு இல்லையா? உன் அப்பாவிடம் உன்னை ஒரு ஆண்மகன் ஆக்கி காட்டுகிறேன் என்று சவால் விட்டு வந்திருக்கிறேன். நீயோ இப்படி முட்டாள்தனமாக பேசுகிறாய். எனக்கு இப்பொழுது எழுபது வயது ஆகிறது. நான் ஐம்பது வருடங்களாக திரியாத காடு இல்லை. எந்த மனிதனும் கால் வைக்காத காட்டுக்குள் சென்றிருக்கிறேன். ஏன், சில இடங்களில் மிருகங்களே செல்ல அஞ்சும் காட்டுக்குள் சென்றிருக்கிறேன். நான் கண்டுபிடித்த நாடுகள், காடுகள் உலக வரைபடத்தை மறுபடியும் திருத்தி வரையும்படி செய்திருக்கின்றன. அப்படி இருக்கும் எனக்கே காது குத்துகிறார்களா?”

“அதில்லை சார்..”

“நீ வாயை மூடு” வீராவேசமாக கத்தினார் ஜெப்ரி. “அமேசான் காட்டுக்குள் ஏது புலி? எங்கிருந்து வந்தது சிங்கம்? அறிவு கெட்ட ஜென்மங்கள். புலியை எதிர்கொள்ள வேண்டும் என்றால் இந்தியா செல்ல வேண்டும். சிங்கம் வேண்டும் என்றால் இந்தியாவோ, ஆப்பிரிக்காவோ செல்ல வேண்டும். இந்த அமேசான் காட்டுக்குள் பெரிய மிருகங்கள் இருக்க வாய்ப்பே இல்லை. விட்டால் இங்கு கரடியும் யானையும்கூட இருக்கிறது என்று சொல்லிவிடுவார்கள். இந்தக் காட்டுவாசிகளுக்கு புலி என்றால் என்ன, சிங்கம் என்றால் என்ன என்று எதுவும் தெரியாது. அவர்கள் அவற்றைப் பார்த்திருந்தால்தானே! அவன் என்ன சொன்னானோ, இவர்கள் என்ன கேட்டார்களோ? மொத்தத்தில் அவர்களை கிறிஸ்டோ நன்றாக ஏமாற்றிவிட்டான்”

ஜெப்ரி சொல்வதில் உண்மையிருப்பதை உணர்ந்த ஜிம் ஒன்றும் பேசாமல் இருந்தான். இன்னும் பேசினால் பெரியவருக்கு கோபம் அதிகமாகும். ஆனால் மனதுக்குள் அவன் கிறிஸ்டோ ஒரு அதிசய பிறவி என்றே நம்பினான்.

“இப்பொழுது என்ன செய்யலாம் சார்?”

“அதை நான் சொல்கிறேன்” என்று டென்ட் பிளாப்பை நகர்த்திவிட்டு டேவிட் லிவிங்ஸ்டன் உள்ளே வந்தான். அவன் ஜெப்ரிக்கு நேர் எதிராக இருந்தான். ஜெப்ரி அமேசான் காடுகளில் இருந்தாலும் வெள்ளை த்ரீ-பீஸ் சூட் அணிந்திருந்தார். வெள்ளை தொப்பி, வெள்ளை தோல், வெள்ளை முடி, வெள்ளை மீசை, வெள்ளை தாடி என்று எல்லாம் வெள்ளையாக இருந்தார். டேவிட்டின் சதை இப்பொழுது காப்பி நிறத்தில் இருந்தது. காக்கி சபாரி சட்டை அணிந்திருந்தான். தடிமனான கருப்பு பெல்ட். காக்கி ஷார்ட்ஸ், பிரவுன் பூட்ஸ் மற்றும் வேட்டையாடுபவர்கள் அணியும் தடிமனான காக்கி நிற தொப்பி அணிந்திருந்தான். ஜெப்ரியை பார்த்தால் எல்லோரும் அவரை ஒரு வயதான பிரிட்டிஷ் தாத்தா என்று தான் சொல்வார்கள். டேவிட்டை பார்த்தவுடன் அவனை ஒரு சாகசக்காரன் என்று எல்லோருக்கும் புரியும். ஆனால் ஜெப்ரி அவனுக்கு குரு. அவருடன் பல எக்ஸ்பெடிஷன்கள் சென்றுதான் அவன் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டான்.

“என்ன நீ இங்கே?” என்று ஆச்சரியமாக கேட்டார் ஜெப்ரி.

“நீங்க இங்கே வந்திருக்கீங்கன்னு கேள்விப்பட்டேன். கூடவே நீங்க எதற்கு இங்கே வந்தீங்கன்னும் கேள்விப்பட்டேன். அதனால்தான் நீங்கள் இந்த காட்டுக்குள் செல்வதாக இருந்தால் உங்களுடன் கூட வரலாம் என்று வந்தேன்”

இதைக் கேட்ட ஜெப்ரிக்கு ஒரே மகிழ்ச்சி. ஜிம்மைப் பார்த்து, “பார். இவனைப் போல் இருக்க வேண்டும். அதனால்தான் அவன் புகழ் ஐரோப்பா முழுவதும் எனக்கு ஈடாக பரவியிருக்கிறது. நீயும் இருக்கிறாயே, எதற்கும் உபயோகப்படாமல்!” என்று திட்டிவிட்டு டேவிட் பக்கம் திரும்பி, “எப்போ கிளம்பலாம்?” என்று கேட்டார்.

“நான் சென்று ஒரு முறை அந்த இடத்தை வெளியிலிருந்து பார்த்துவிட்டு வருகிறேன். அந்தக் காட்டுவாசிகள் எனக்கு பழக்கம். அவர்களிடமும் விசாரித்துவிட்டு வருகிறேன். நீங்கள் பயணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று கூறிவிட்டு வேகமாக அந்த இடத்தை விட்டு விலகினான் டேவிட்.

இரண்டு மணி நேரம் கழித்து திரும்பி வந்தபொழுது அவன் நடையில் வேகம் இல்லை. அவன் முகத்தில் குடிகொண்டிருந்த நம்பிக்கை இப்பொழுது காணாமல் போய்விட்டது. மெதுவாக டெண்ட்டுக்குள் நுழைந்து ஜெப்ரியை பார்த்து இல்லை என்பது போல் தலையாட்டிவிட்டு டெண்ட்டை விட்டு வெளியே வந்தான். அவனைத் தொடர்ந்து ஜெப்ரியும் வெளியே வந்தார், ஆனால் சிந்தனையில் ஆழ்ந்திருந்த டேவிட்டைப் பின்தொடராமல் டென்ட்டுக்கு வெளியே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்.

டேவிட் கொஞ்சம் தூரம் நடந்த பிறகு ஓரிடத்தில் நின்று தன் பாக்கெட்டில்லிருந்து சிகரெட் எடுத்து பற்றவைத்துக் கொண்டான். அவனைச் சுற்றி உயரமான மரங்கள். பட்சிகள் கத்தும் சப்தம். மரங்களை ஊடுருவி வந்த சூரியன் திட்டு திட்டாக புல்வெளியில் படிந்திருந்தான். ஆனால் டேவிட் இதையெல்லாம் கவனிக்கவில்லை. முழு கவனமும் சிகரெட் புகையை உறிஞ்சுவதிலேயே செலுத்தினான். புகையை வெளியே விட்டபின் மறுபடியும் நடக்க ஆரம்பித்தான். மறுபடியும் நின்றான். மறுபடியும் புகை இழுத்து விட்டான். சட்டென்று கோபமாக சிகரெட்டை கீழே விட்டெறிந்து காலால் கசக்கினான். பிறகு சட்டென்று திரும்பி ஜெப்ரியிடம் வந்தான்.

“ஜெப்ரி. வேண்டாம். நாம் போக வேண்டாம்” என்றான்

“நீயும் ஜிம் போல் உளறுகிறாய்”

“உளறவில்லை ஜெப்ரி. நான் அங்கு சென்று பார்த்தேன். அந்த காட்டுப் பகுதி அமானுஷ்யமான ஒரு பகுதியாக எனக்கு தோன்றுகிறது. அங்குள்ள காட்டுவாசிகளுடனும் பேசினேன். என் உள்ளுணர்வு அங்கு போக வேண்டாம் என்று சொல்கிறது ஜெப்ரி”

“டேவிட் லிவிங்ஸ்டன்தான் பேசுகிறானா? ஜெப்ரி ஹைன்ஸ் மற்றும் டேவிட் லிவிங்க்ஸ்டன் என்பவர்கள் இப்பொழுது ஐரோப்பா முழுக்க ஹீரோக்களாக பார்க்கப்படுபவர்கள். நாம் செல்லாத காடு இல்லை, வெல்லாத நாடு இல்லை. அந்த ஜெர்மானியர்கள், ஸ்பானியர்டுகள், பிரெஞ்சு கோழைகள் நம்மை வழிபடுகிறார்கள். அப்படி இருக்க நாம் இருவரும் ஒரு சின்னப் பையன் சென்ற இடத்திற்குச் செல்ல பயப்பட்டோம் என்று தெரிய வந்தால் இவர்கள் எல்லாம் சிரிக்க மாட்டார்களா? நமக்கு என்ன மரியாதை இருக்கும்? பாட புத்தகங்களில் நம் வாழ்க்கை வரலாறு வருவதற்கு பதில் ஏதோ ஒரு வார இதழில் நம்மை பற்றி கார்ட்டுன் வரும். நாம் செய்த சாதனையெல்லாம் ஏமாற்று வேலை என்று எழுதுவார்கள். இவ்வளவு செய்த பிறகு எல்லோர் கண்ணிலும் ஒரு ஜோக்கர் ஆக விருப்பமில்லை. நீ வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி. நான் அங்கு செல்வது உறுதி”

ஒரு கணம் யோசித்த டேவிட், “இந்தியாவில் சொல்வார்கள் ‘விதி வலியது’ என்று. அது யாரையும் விடாது. என்ன நடக்கிறதோ நடக்கட்டும். நானும் வருகிறேன்”

“அதே இந்தியாவில் ‘விதியை மதியால் வெல்ல முடியும்’ என்றும் சொல்வார்கள் என்று தெரியாதா? நாளை காலையில் நாம் கிளம்புகிறோம்” என்று உறுதியாக கூறினார் ஜெப்ரி.

“இது மதியை மீறிய விஷயம் ஜெப்ரி” என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் டேவிட்.

விதி வலியதா மதி வலியதா என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.

ஒளிப்பட உதவி – nolano.net

அமேசான் காடுகளிலிருந்து…

மித்யா

ஒன்று

ஜார்ஜ் ட்ருக்கர் என்பவர் எழுதிய ‘லைப் ஆப் எ லிவிங் செயின்ட்’ என்ற புத்தகம் பத்தொன்ம்பதாம் நூற்றாண்டு இறுதியில் வெகு பிரபலமடைந்து பல சர்ச்சைகளுக்கு வித்திட்டது. பிரிட்டன் மற்றும் அமெரிக்கா இந்தப் புத்தகத்தைத் தடை செய்யவும், அந்தத் தடையை எதிர்த்து பல வாசகர்கள் வீதியில் இறங்கினார்கள். இவர்களுக்கு எதிராக தடை கோரியவர்களும் வீதியில் இறங்கவே கைகலப்பு நடந்து பிறகு போலீஸ் தடியடி நடந்து பலர் காயப்பட்டு லண்டன் நகர வீதிகள் நான்கு நாட்களுக்கு மூடப்பட்டன.

இந்தப் புத்தகம் கார்ல் கிறிஸ்டோ என்பவரின் இறுதி ஐந்தாண்டு கால வாழ்க்கையைச் சித்தரிக்கிறது. கிறிஸ்டோ என்பவர் 1850இல் பிறந்து 1882 வரை முப்பத்திரண்டு வருடங்கள் உயிர் வாழ்ந்தார். இருபத்தேழு வயது வரை சாதாரண இளைஞனாக இலக்கில்லாமல் சுற்றிய இவர், பல ஐரோப்பிய ‘எக்ஸ்ப்ளோரர்’ கதைகளைக் கேட்டு தானும் அது போல் ஏதாவது சாகசம் செய்ய வேண்டும் என்று எண்ணி அமேசான் காடுகளுக்கு 1877இல் புறப்பட்டார்.

அமேசான் காடுகளில் அங்குள்ள வனவாசிகள் துணையுடன் சுற்றிக்கொண்டிருந்தவர், எல்லோரும் அந்தக் காட்டின் ஒரு பகுதிக்குள் நுழைய மறுப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். விசாரித்ததில் அந்தப் பகுதியில் புலிகள், சிங்கங்கள், கரடிகள், அனகோண்டாக்கள் மற்றும் பிரான்ஹா மீன்கள் அதிகமாக இருப்பதாகவும், அந்தப் பகுதிக்குள் சென்ற யாரும் உயிருடன் திரும்பியதில்லை என்றும், எல்லோரும் கோர மரணத்தை அடைந்தார்கள் என்றும் தெரிய வந்தது. இதையெல்லாம் நம்ப மறுத்த அவர், தான் அந்தக் காட்டுக்குள் சென்று உயிருடன் திரும்பி வருவதாக சவால் விட்டு, எல்லோரும் தடுத்ததை பொருட்படுத்தாமல், வனவாசிகள்கூட வர மறுத்ததைக் கண்டுக்கொள்ளாமல், அந்தக் காட்டுப்பகுதிக்குள் நுழைந்தார்.

அங்கே மரங்கள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து சூரிய கிரணங்களை தடுத்து காட்டை இருளில் மூழ்கச் செய்திருந்தன. பறவைகளின் கூக்குரலும் பூச்சிகளில் இடைவிடாத கர்ணகடூரமான சப்தத்திற்கும் நடுவே வியர்க்க விருவிருக்க கிறிஸ்டோ நடந்து கொண்டிருந்தார். திடீரென்று புதருக்குள் சலனம் ஏற்பட, அது என்ன என்று கிறிஸ்டோ திரும்பிப் பார்ப்பதற்குள் அவர் மேல் ஒரு புலி பாய்ந்தது. இளைஞரான கிறிஸ்டோ சட்டென்று குனிய புலி உயரத் தாவிச் சென்று ஐந்தடி தாண்டி இறங்கியது. இறங்கியவுடன் சட்டென்று திரும்பி மறுபடியும் அவரை நோக்கி தாவி வந்துக் கொண்டிருந்தது. கிறிஸ்டோ ஓட்டம் பிடிக்க, புலி அவரை துரத்த, ஓடும் நதி முன் வந்து மாட்டிக் கொண்டார் கிறிஸ்டோ. புலி அவர் மேல் வேகமாகப் பாயவும், இந்த முறை சட்டென்று தரையில் படுத்துக் கொண்டார் கிறிஸ்டோ. புலி அவரைத் தாண்டிச் சென்று ஓடும் நதியில் விழுந்தது. கீழே விழுந்து கிடந்த கிறிஸ்டோ எழுந்து நிற்க முடியாத அளவிற்கு முட்டியில் காயம் பட்டிருந்தது. இதை கவனித்த புலி நதியில் மெதுவாக நீந்திக்கொண்டு கிறிஸ்டோவை நோக்கி வந்தது. இனி தனக்கு மரணம்தான் என்று கிறிஸ்டோ எண்ணிக் கொண்டிருக்கையில் காட்டைப் பிளப்பது போல் புலியிடமிருந்து ஓர் ஓலம் எழுந்தது. முதலில் திடுக்கிட்ட கிறிஸ்டோவிற்கு நிலைமை மெதுவாக பிடிபட ஆரம்பித்தது. அந்தப் புலியை நதியில் இருக்கும் பிரான்ஹா மீன்கள் தின்ன ஆரம்பித்து விட்டன. அந்த வலி தாங்க முடியாமல் புலி கத்திக்கொண்டிருந்தது. மூன்று நிமிடத்திற்குப் பின் காடு நிசப்தமானது. புலியின் எலும்புக்கூடு தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது.

தான் காட்டுவாசிகளின் சொல்லை கேட்டு நடந்திருக்க வேண்டும் என்றும் இனி இங்கிருந்து தப்பிச் செல்வது முடியாத காரியம் என்றும் கிறிஸ்டோ நினைத்துக் கொண்டார். நாலாபுறமும் காடு சூழ்ந்திருக்க அவருக்குத் திரும்பிச் செல்லும் வழி எதுவென்று தெரியவில்லை. போதாததற்கு முட்டியில் பலத்த அடி. இனி எல்லா பாரமும் இறைவன் மேல் போட்டுவிட்டு ஏதோ ஒரு திசையில் நடந்து செல்ல வேண்டும் என்று கிறிஸ்டோ முடிவெடுத்தார்.

மெதுவாக நொண்டிக் கொண்டு நதியோரமாக கிறிஸ்டோ நடந்தார். ஆழ்ந்த சிந்தனையில் நடந்து கொண்டிருந்தவர் ஒரு மரத்துக்குப் பின்னாலிருந்து அவரைப் பார்த்துக் கொண்டிருந்த சிங்கத்தை கவனிக்கவில்லை. சப்தம் செய்யாமல் தன் பிடரியை சிலிர்த்துக்கொண்டு அவரைச் சிங்கம் பின்தொடர்ந்தது. தன் இளமைக் காலம் பற்றியும், லண்டனில் இருந்திருந்தால் இந்நேரத்திற்கு அருமையான தேநீர் அருந்திவிட்டு ஷேக்ஸ்பியர் நாடகத்தை பார்த்துக் கொண்டிருக்கலாம் என்றும் கனவுலகில் மிதந்து கொண்டிருந்த கிறிஸ்டோ தரைக்குத் தள்ளப்பட்டார். ஆம், கீழே விழுந்து உருண்டு மல்லாக்கப் படுத்திருந்த கிறிஸ்டோ, அந்தச் சிங்கம் தன்னைப் பார்த்து சிரிப்பது போலிருக்கக் கண்டார். இப்போது தனக்கு மரணம் நிச்சயம் என்று அறிந்த கிறிஸ்டோ சிங்கத்தைப் பார்த்து விரக்தியாகச் சிரித்தார்.

சிங்கம் அவரிடம் மெதுவாக வந்து அவர் கழுத்தைக் கவ்வ இருந்த நேரத்தில் தண்ணீரிலிருந்து ஒரு ராட்சத அனகோண்டா வெளியே பாய்ந்து வந்தது. அனகோண்டா வருவதை கிறிஸ்டோவோ சிங்கமோ உணர்வதற்குள் அனகோண்டா சிங்கத்தைச் சுற்றிக்கொண்டது. சிங்கம் பலம் கொண்ட மட்டும் போராட, அனகோண்டாவும் சிங்கமும் சகதியில் புரண்டன. கடைசியில் அனகோண்டாவின் அணைப்பைத் தாங்க முடியாத சிங்கம் உயிர் விட்டது. அனகோண்டா ஊர்ந்து வந்து கிறிஸ்டோவை சுற்றிக்கொண்டு, ஒரு பந்து போல் உருண்டு சென்று கிறிஸ்டோ எங்கிருந்து புறப்பட்டாரோ அதே இடத்திற்கு வந்து அவரை தன் பிடியிலிருந்து அவிழ்த்துவிட்டு மறுபடியும் காட்டுக்குள் சென்று விட்டது. இந்த நிகழ்வைக் கண்ட வனவாசிகள் வாயடைத்துப் போனார்கள்.

இதறக்கு பிறகு என்ன நடந்தது என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.

ஒளிப்பட உதவி – Shukernature

இருத்தலியத்தின் கடைசி மூச்சு – மித்யா

மித்யா

பிலிப் லீ மார்டே என்பவர் எழுதி இயக்கிய ‘Still Waiting for Godot?’ என்ற பிரெஞ்சு நாடகம் இப்பொழுது ஐரோப்பிய நாடக உலகை உலுக்கியுள்ளது. இந்த நாடகம் பல சர்ச்சைகளை எழுப்பி ஐரோப்பிய நாடக உலகத்தை இரண்டாகப் பிரித்துள்ளது. ஒருசாரார் இந்த நாடகத்தை ரொம்பவும் சுமாரான நாடகம் என்று விமர்சித்து வருகிறார்கள். அவர்களில் சிலர் இதை நாடகம் என்றே ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்.

“This is the most pretentious drama that I have seen in my whole life and believe me, I have seen a lot of dramas in my life. In fact I would say that calling monstrosity a drama is giving more dignity than it deserves. I totally reject this concept and refuse to call this work as drama. Every art needs artifice but artifice alone cannot be art”1
என்று ழீன் பால் பாஸ்டர் கூறியுள்ளார்.

இந்தக் கருத்தை பலர் ஆமோதித்து தங்கள் எண்ணத்தை இது பிரதிபலிக்கிறது என்று எழுதியுள்ளனர். இதற்கு நேர்மாறாக இன்னொரு கட்சி இருக்கிறது. அவர்கள் இதை மிக முக்கியமான ஒரு நாடகமாகக் கருதுகிறார்கள். சோர்ந்து போயிருக்கும் நாடக உலகத்துக்கு புத்துயிர் கொடுத்த நாடகமாக இதைக் கொண்டாடுகிறார்கள்.

ஐரோப்பிய கலைச்சூழலை இரண்டாகப் பிரிக்கும் இந்த நாடகத்தின் ‘கதை’ இதுதான்- திரை விலகியவுடன் ஒரு பெண் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருக்கும் காட்சி நமக்கு தெரிகிறது. அவள் எங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறாள் என்று நமக்கு தெரியாதபடி அந்த பெண்ணுக்குப் பின்னால் ஒரு பச்சைத் திரை இருக்கிறது. அந்தப் பெண் ரோடினின் புகழ்பெற்ற சிற்பம் போல் ஆழ்ந்த யோசனையில் அமர்ந்திருக்கிறாள். அவள் தன் இடது பக்கம் திரும்பி யார் வரவையோ எதிர்ப்பார்ப்பவள் போல் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவள் அசையாமல் அதே போஸில் ஒரு மணி நேரம் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். ஒரு மணி நேரம் கழித்து மெதுவாக எழுந்து பார்வையாளர்கள் பக்கம் திரும்பி அவர்களை நோக்கி கை நீட்டி ஏதோ பேச ஆரம்பிக்கும்போது திரை விழுகிறது.

முதல் முறை இந்த நாடகம் நடத்தப்பட்டபோது பலர் பொறுமையாக கால் மணி நேரம் காத்திருந்தபிறகு சப்தம் செய்ய ஆரம்பித்தார்கள். அரை மணி நேரம் கழித்து பலர் வெளியேறினார்கள். நாடகம் முடியும்பொழுது நான்கு பேர்தான் அந்த பிரம்மாண்டமான அரங்கில் இருந்தார்கள். அடுத்த நாள் பிரான்ஸின் முக்கியமான பத்திரிகைகள் இந்த நாடகத்தின் விமர்சனத்தை முதல் பக்கத்தில் பிரசுரித்தன. “பரிட்சார்த்த முயற்சிகள் பிரான்சின் ரத்தத்தில் ஊறியவை. உலகத்தில் உள்ள எந்த தேசத்தை விடவும் பிரான்ஸ் நாட்டில்தான் சோதனை முயற்சிகளுக்கு மரியாதை அதிகம் என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள். ஆனால் நம் சோதனை முயற்சிகள் இப்பொழுது நகைப்புக்குரியதாக இருக்கின்றன. இந்த நாடகத்தை வேறு நகரங்களுக்கு நாம் கொண்டு சென்றால் அவர்கள் நம்மைப் பார்த்து கைகொட்டிச் சிரிப்பது நிச்சயம். இது போன்ற முயற்சிகள் இங்கு தேவையா?”

என்று ‘லே மோன்டே’ என்ற பத்திரிக்கையின் நிருபர் விமர்சித்திருந்தார். “பிரான்ஸ் நாட்டுக்கு தீரா களங்கம் இந்த நாடகம்” என்ற தொனியில் பல பத்திரிகைகள் எழுதின. இரண்டு நாட்களிலேயே இந்த நாடகத்தை அரங்கை விட்டு தூக்கிவிடுவார்கள் என்று எல்லோரும் எண்ணிக் கொண்டிருந்தபொழுது எடுமொன்டு-டீ-மாரியாக் எழுதிய விமர்சனம் இந்த நாடகத்தின் தலையெழுத்தை மாற்றியது.

பிரான்ஸ் நாட்டின் மிக சிறந்த ‘கல்சுரல் கிரிடிக்’ என்று அறியப்படும் எடுமொன்டு-டீ-மாரியாக் ஒரு தத்துவ பேராசிரியர். அவர் இந்த நாடகத்தை தத்துவ நோக்கில் அணுகினார்.

“This is existentialism’s last stand, the last breath, the last gasp before it is forever buried. The drama deals with extraordinary precision about the ordinariness of life combining spirituality, absurdity and existentialism in a very original manner. The composite philosophy advocated by the author makes us question our own worth in this universe. As the drama unfolds, nothing unfolds on the stage but slowly we start watching our own selves. Time does not pass in this drama leading us to question the very concept of time and the mind with a scientific temper maps time to the equations of Einstein which proved that time was not a constant flowing object but rather which morphed itself based on the speed at which the subject travelled. Constantly questioning the concept of time and making us question ourselves, the drama raises multiple existentialist questions within ourselves. This drama breaks all our known notion of drama and transcends the genre gloriously. At last France has something to celebrate”,

என்றார் அவர்.

இது பிரசுரமானவுடன் நாடகத்தின் புகழ் வெகுவாக உயர்ந்தது. நாடகத்திற்கு டிக்கெட் கிடைப்பது கடினமானது. இரண்டு நாட்களுக்குப் பிறகு ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த முதன்மையான பெண்ணியவாதியான ‘சொப்ஹி-டி-மெல்லோ’ எழுதிய விமர்சனம் நாடகத்தை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அவர் எழுதியதில் ஒரு பகுதி:

“பெண் என்பவள் எப்பொழுதும் எதற்காகவோ காத்துக் கொண்டிருக்கிறாள். இந்த நாடகத்தின் பெண்ணும் அப்படியே. யார் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்? நியாயத்தின் வரவை. பெண்களை ஆண்களுக்கு நிகராக நடத்தும் ஒரு காலத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறாள்.கடைசியில் அவள் எழுந்து உங்களைப் பார்த்து கையை நீட்டுவது உங்களை குற்றம் சாட்டத்தான். நீங்கள் இன்னும் பெண்களுக்கு விடுதலை அளிக்கவில்லை. இன்னும் அவளை அடிமையாகவே பார்க்கிறீர்கள். அவள் பின்னால் ஒரு திரை இருந்ததைப் பார்த்தீர்களா? அங்கு ஓர் இயற்கைக் காட்சியை ஏன் வைக்கவில்லை இயக்குனர்? ஏனென்றால் எல்லா இடங்களிலும் பெண்கள் இப்படிதான் நடத்தப்படுகிறார்கள். அதைச் சுட்டிக்காட்டதான் அவர் பின்னால் ஒரு திரையை வைத்திருக்கிறார். இந்த நாடகம் ஆண்களுக்கு ஒரு சவுக்கடி”

இப்பொழுதெல்லாம் நாடகத்திற்கு டிக்கெட் ஒரு மாதம் முன்பே வாங்க வேண்டும். அரங்கம் நிரம்பி வழிகிறது. இன்னும் அங்கு இரண்டு கட்சிகளுக்கு இடையே சண்டை நடந்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் பாரிஸ் சென்றால் தவறாமல் இந்த நாடகத்தைப் பாருங்கள், நீங்கள் எந்த கட்சி என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

முன்னால் இருந்தது இப்பொழுது பின்னால் இல்லை – கவிதை நூல் விமர்சனம்

மித்யா

“Future is no longer the past” – New poems by Gregory Hart

cover

Surrealism, Dadaism, Modernism, Expressionism, Post-Modernism என்று பல பாதைகளில் பயணித்த ஐரோப்பிய கவிதை இப்பொழுது தனக்கென தேர்ந்தெடுத்துக்கொண்ட பாதைதான் Dual Merge poetry. இதற்ககான manifesto எழுதிய போலிஷ் கவிஞர் Ceslaw Krapunski Dual Merge கவிதையை இவ்வாறு விவரிக்கிறார், “In the modern world it becomes very important that we keep our roots intact. The problem of rootlessness affects the modern youth who want to dissociate themselves from the past. While this attitude does give their poetry a sense of urgency and is able to relate to other youth, the poems themselves refuse to stand scrutiny because their foundations are weak. Only the poetry which is anchored in the past does it stand on its own for a long time. The Dual-Merge poetry tires to merge the past and future and the resultant poem reflects the present. Poets earlier have taken the past as their subject of their poetry and tried to draw parallels with the current situation. So we know the poet is talking about the past and we are able to clearly see how the poet s talking of the past and the way in which he is relating it to the present. Dual Merge poetry on the other hand only merges the past with the future into a single whole. The poet becomes both a protector of the past as well as a prophet. It is in this poetry that the poet achieves his ultimate standing in the society1

போலிஷ் கவிஞர்கள் முதலில் இதை முன்னெடுத்தார்கள். அதற்கு பிறகு ஐரோப்பியா முழுவதும் இந்த டிரெண்ட் பரவியது. கிரேக்க காவியங்களையும் வரப்போகும் விஞ்ஞான புரட்சிகளையும் இணைத்து பல கவிதைகள் வர ஆரம்பித்தன. இந்தக் கவிதைகளை எழுதிய கவிஞர்கள் வெகுவாக புகழப்பட்டார்கள். இந்தக் கவிதைகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. முடங்கிக் கிடந்த பதிப்பங்களுக்கு இந்த டிரென்ட் புத்துயிர் ஊட்டியது. (more…)

மோன்-ரோஷ் : சினிமாவின் பன்முகத்தன்மை

மித்யா

image

கொரியன் இயக்குநர் சோவா-குர் இயக்கிய ‘மோன்-ரோஷ்’ என்னும் படத்தை நேற்று பார்த்து பிரமித்து போனேன். உலக சினிமாவின் ஆகச்சிறந்த உன்னதங்களில் ஒன்றாக இந்த படம் கருதப்படுவதில் ஆச்சரியம் இல்லை.

ஆனால் நான் இந்த படத்தை பார்க்க செல்லும்பொழுது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் சென்றேன். நீங்கள் இந்த இயக்குநரின் பெயர் கொரியன் பெயர் போல் இல்லாததை கவனித்திருப்பீர்கள். அதே போல் படத்தின் பெயரும் வேறு மாதிரி இருப்பதை கவனித்திருப்பீர்கள். இரண்டு பெயர்களையும் திருப்பி போட்டால் உங்களுக்கு கிடைப்பது: ரோஷ்மோன் மற்றும் குரோசோவா- ஆம், இந்த படத்திற்கும் குரோசோவாவின் படத்துக்கும் சம்பந்தம் இருக்கிறது. (more…)