ஏ. நஸ்புள்ளாஹ்

ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள்

ஏ. நஸ்புள்ளாஹ்

புகை வடிவமான


சூடாக தேநீர் அருந்திக் கொண்ட
குவளைகள் இரண்டு பேசத் தொடங்கின
அவை என்ன பேசியிருக்கும் என்பதை
துவங்கும் போது
புகை வடிவமான
சுருள்கள் இரண்டு மேலெழும்பி
இருக்கைக்கு மேல் பாம்பாய் நெளிகின்றன
பின் அழகான மரமொன்றாய்
அசைந்து கிளைகள் பரப்புகின்றன
அங்கு கொசுக்கள் மொய்த்து சுவைக்க
வாய்ப்புகள் இருக்கவில்லை
அங்கு இரண்டு குளங்களை பார்க்க முடிந்தது
குவளையின் பெருந்தோல்கள்
கண்ணாடி வளையங்களால்
பொருத்தப்பட்டிருப்பதால்
எரியும் உடல் கொண்டு
இறந்து போவதில்லை
எனினும் அவைநோயுற்றிருக்கின்றன
இப்போது யாரோ
ஊதிவிட்ட காற்றில் தேநீர் அசைகிறது
இனி எளிய மனிதர்கள்
இருவர் பருகலாம்

..

காற்றின் கதை


இரவின் பிரதியை பிரித்தெடுத்து
விண்மீன்களின் தூரத்துக்கு
அழைத்துச் சென்று விளையாடுகிறது காற்று
நீளும் விளையாட்டில்
பாம்பாய் நெளிந்த இரவுவின் பிரதி
சிறகுகள் முளைத்த
மேகத்தின் சன்னல் திறந்து
வசிக்கத் துவங்குகிறது.
காற்றுக்கு பிரதியின் செயல்
மறு அறிவித்தல் வரும்வரை பிடிக்காததால்
வெளியேறி
காட்டு மரங்களின் கிளைகளில்
வந்தமர்கிறது
இப்போது காட்டு மரம்
பழங்களை பரிசளிக்கின்றது
பழங்களை காற்று உண்பதற்கு தயாராகும்போதெல்லாம்
பழங்கள் எரிகற்களாய் உருவத்தை மாற்றிக்கொள்கின்றன
இனி என்ன செய்வது மற்றுமொரு ஏமாற்றத்துடன்
காற்று முந்தின இரவின் தனிமைக்குள் சிநேகிக்க துவங்குகிறது.

தனிமை, குளிர் – ஏ. நஸ்புள்ளாஹ் கவிதைகள்

ஏ. நஸ்புள்ளாஹ்

தனிமை


நேற்றும் தனிமையை வரைய வேண்டியிருந்து
தனிமையை ஒரு இரவாக வரைந்தேன்
இரவிற்கு
சில நட்சத்திரங்கள் வந்தமர்ந்தன
இன்னும் சில பறவைகளும்
வந்து சேர்ந்தன
நிலா ராஜகுமாரி மேகத்திற்குள்
மறைந்து மறைந்து
புதிது புதிதாய் காட்சி தந்தாள்
பேச்சுக்கு துணை கிடைத்தது
ஒரு யுகத்தைக் கடந்தது போல் இருந்தது
தனிமை கறுப்பு நிறத்தையொத்தது
அது ஒரு பெரும் வனத்தின்
இருளை என் மீது சுமத்தியிருக்கிறது
இருள் என்பதும்
ஒரு வகை வலிதான்
அதனைத்தான்
பல நேரங்களில் தலையணைக்கடியில்
மறைத்து வைக்க வேண்டியிருக்கிறது
எப்படி மறைத்து வைத்த போதும்
அறை முழுக்க அது பரவிடுகிறது
இப்போது
மூன்றாம் சாமம் தாண்டியிருந்தது
தனிமையை ஒரு பகலாக வரையத் தொடங்குகிறேன்
பகலுக்குள் சில மனிதர்கள் நடமாறலாம்.

குளிர்


இது மூன்றாம் ஜாமம்
நான் தற்செயலாக எழுந்திருக்கவில்லை
அப்படி எழுந்திருப்பவனுமல்ல
என்னை யாரோ
எழுப்பி இருக்க வேண்டுமென
நீங்கள் நினைக்கலாம்
என்னை நான் எழுப்பி இருக்க வேண்டுமென
நீங்கள் யூகிக்க முடியாது
நான் நன்றாக தூக்கத்திலிருந்ததை
நீங்கள் இப்போது வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இப்படி முடிவிற்கு வரலாம்
மழை நாட்கள் என்பதால்
ஒரு குளிர் என்னை
எழுப்பி இருக்கலாம்
அல்லது நுளம்புகள் சில
எழுப்பி இருக்கலாம்
நுளம்பு எழுப்புவதற்கு வாய்ப்பில்லை
வலையை கட்டிலில் மனைவி
சென்ற வாரந்தான்
ஒரு கூடாரம் போல் அமைத்திருந்தாள்
அப்படியெனில்
குளிர்தான் இந்த வேலையைச் செய்திருக்க வேண்டும்
குளிரை இனி அருகி்ல் வைத்திருக்க முடியாது
அதனை குளிர்ச் சாதனப் பெட்டிக்குள் வைக்க வேண்டும்
குளிர் என்னிடம் இருக்கிறது
மன்னிக்கவும், பெட்டி உங்களிடம் இருக்கிறதா.

இறுதி நிலம்

ஏ. நஸ்புள்ளாஹ்


எனது எல்லாவிதமான அவாவுதலும்
முதல் நிலத்தின் மையப் புள்ளிக்குள் மாத்திரமே
மயக்கமுற்றுக் கிடக்கிறது.
எ்னக்கான நிலமொன்று
வானக் கிளையில் அமர்ந்து
பறவை போல காத்திருப்பதை
மறக்கவே எத்தனிக்கிறேன்.

எனக்கான பிரதியும்
அதன் நிசப்த வாசிப்பும்
அந்நிலத்தில் விளையும்
அப்பிள் கனிகளும்
நான் விரும்பிய உயர்ந்த மதுக்குவளையும்
அங்குதான் இருக்கின்றன.

எனது முதல் நிலம்
வெற்றுத்தாளில் பறக்கும்
வண்ணத்துப் பூச்சியை ஒத்ததும்
வண்ணமற்றதுமான நிறப் பிரியை
என்பதை எனக்குள்ளிருக்கும்
நான் அறிவதற்கு
மறுப்புத் தெரிவித்துக் கொண்டிருக்கிறேன்.

வீடு திரும்புதல் மிக அவசியமானது
ஆரம்பித்த இடத்தில் முடிப்பதே
பறவைகளின் கூடு திரும்புதலின்
இன்னுமொரு யுக்தி
வனத்தில் வாழும் குரங்குகளும் அப்படிதான்
எனினும் நான்
வீடு திரும்ப விரும்பாதவனாய் இருக்கவே விரும்புகிறேன்.

எனது இறுதி நிலம் காத்துக் கிடக்கிறது
தொன்மங்களை அள்ளிக் கொண்டு
நான் முதல் நிலத்திலேயே
தாவிக் கொண்டிருக்கிறேன்
நிணம் தின்னும் பிசாசுகளுடன்
வாழ்வது எனக்குப் பிடித்துப் போய்விட்டது.
மன்னிக்க,
நான் என்பது எழுத்துப் பிழை.

 

வலிமையான போராட்டம்

ஏ. நஸ்புள்ளாஹ்

அலாதியாய் வெடிக்கும் காற்று
அசைவற்ற
என் தனிமையையும்
என் மௌனத்தையும்
இசைக்கத் தொடங்குகிறது.

ஆர்ப்பரித்த
என் ஆழி
கனா தந்த என் யாக்கை
எல்லாம் வாசனையற்றும்
உயிரற்றும்
இவ்வுலகில் வீழ்ந்து கிடக்கின்றன
வலிமையான போராட்டம்
தொடங்கியிருக்கிறேன்.

நேரிடையான சம்பவங்களின்
நிழல்களுக்குள்
ஆழமாய் வீழ்த்தப்பட்ட
பால்யம் என்கிற
துரோகத்தின் துன்பியம்
நிலமெங்கும் வழியத்தொடங்கியதன்
கோத்திரம் புரியவில்லை

அன்பின் மூதாதையத்தை
அளவீடு செய்யத் தெரியாத
நபராகவே நான் வாழ்ந்திருக்கிறேன்
என்கிற பின்னணி நாகரீகத்தை
பின்னரே அறிந்தேன்.

உயர்ந்த அன்பின்
மதுக் கோப்பை எங்கும்
நுரை தள்ளியபடி
தனிமை முளைத்து நின்ற கதை
நேற்று அறைக்குள் புகுந்த
சர்ப்பமொன்றின் விஷத்துளியிலிருந்து
நான் கவனிக்கத் தொடங்குகிறேன்.