சிகந்தர்வாசி

இரானி டீக்கடை- ஒரு கப் சாயுடன்

சிகந்தர்வாசி

உனக்குள் நுழைகிறேன்
தனிமையில், ஒரு கப் சாயுடன்
கோடியில் உட்கார்ந்துகொள்ள

சிகரெட் புகையுடன் கனவும்
கலந்து மிதக்கிறது இங்கே
எல்லோரையும் ருபாபாக பார்க்கும் வெயிட்டர்கள்
முன்பின் பார்த்தறியாதவரிடம்
தன் பிரச்சினைகளை பகிர்ந்து கொள்பவர்கள்
ஒரு கப் சாயுடன்

இரானி டீக்கடைக்கே உரிய
ஒஸ்மானியா பிஸ்கட், டை பிஸ்கட், பைன் பிஸ்கட்,
க்ரீம், சோட்டா சமோசா ஷெல்பில் இருக்கின்றன
ஒரு கப் சாயுடன் சாப்பிட

கடையினுள் குரல்களின் ஓசை
வெளியிலிருந்து வரும் வாகனங்களின் அலறலைத் தடுக்கிறது

எப்போதும் அந்த மேஜையில்
அதே ஆறு பேர், எங்கும் செல்லாத கனவுகளை
தினமும் காண்கிறார்கள்
ஒரு கப் சாய் அருந்திக்கொண்டே

அதோ, அங்கு டீ அருந்துபவன்
சாஸரிலிருந்து உற்சாகத்தை உறிகிறான்

சிலருக்கு இரானி டீக்கடை
ஆராமாக இருக்க ஒரு இடம்
சிலருக்கு இரானி டீக்கடை
ஒரு புகல், அன்றாட கஸ்ரத்திலிருந்து
தப்ப ஒரு இடம்.

இவற்றில் எது என்னைப் வசீகரித்து,
தினமும் இங்கு அமரச் செய்கிறது?
ஒரு கப் சாயுடன்​

கோடுறு தீக்கூற்றம்

 

சிகந்தர்வாசி

நீண்டு என் முகம் தொடும் கை
விரல்களின் சுருக்கங்கள் கன்னத்தின்
மழிக்கப்படாத சருமத்தில் சொரசொரக்கின்றன.
கண்டுகொண்டது போன்ற மென்சிரிப்பு
தோன்றியதும் மறைகின்றது, மின்னலெனக்
கண்களில் உயிர்க்கும் ஒளிக்கீற்றும்.
எப்போதும் நிலைகொண்ட தொலைதூரப் பார்வை,
திரும்பவும் தன் இடம் வந்தமர்கிறது.

மெல்ல நடக்கும் அவர் பாதையில்
இடம் வலம் உந்திச் செல்கிறேன்,
வலிக்காமல்- அவர் கைபற்றிச் செல்கையில்,
நடை நிறுத்தி போக்குவரத்தைப் பார்க்கிறார்,
தான் இருப்பதை விளங்கிக் கொள்ள.
உன்னி வெறிக்கும் அவர் பார்வை
எதிர்படும் ஒருவரை மிரளச் செய்கிறது.
முன்னறிவிப்பின்றி, காரணமின்றி,
எங்கிருந்தோ வருகிறது அந்தப் புன்னகை,
சிரிப்பு, அது வெறும் சிரிப்பு, தூய சிரிப்பு,
அவர் முகத்தை தனதாக்கிக் கொள்ளும்
அதன்பின் நினைவேதும் இல்லை,
அல்லது உண்டா? தெரியவில்லை.

நடக்கத் துவங்குகிறோம்.
எண்ணங்களில் என்னை இழக்கின்றேன்.
அவர்? தெரியவில்லை.
வீடு சேர்ந்ததும் புதிராய்ப் பார்க்கிறார்,
தன்னை உள்ளழைத்துச் செல்லும்
என் அம்மாவை.
இணை வரலாற்றின் சமச்சீர் குலைவில்,
ஆதாரம் இழந்துவிட்டன
அம்மாவின் நினைவுகள்.
அவற்றை மெய்ப்படுத்த வேண்டியவர்
அமைதியாய் இருக்கிறார்.
கோடுறு தீக்கூற்றுவன்
கொன்று கொண்டிருக்கிறான்
என் அம்மாவை.

image credit : ‘Two People. The Lonely Ones’, Edward Munch, MomA

மானுடம் குடியமர்ந்த கோள் – விடை பெறுதல்

சிகந்தர்வாசி

லிண்டா லூவும் நானும் சி லிங்கின் குடிலை நோக்கி நடக்கத் துவங்கினோம். அவருக்கு நூறு வயது கடந்து விட்டிருந்தது. “நூறு வயதுக்கும் மேல் என்பது சரி, ஆனால் ஒவ்வொரு ஆண்டையும் எவ்வாறு கணக்கு செய்கிறாய்?” என்று கேட்டாள் லிண்டா.

“ஏன், நமக்குக் கற்றுக் கொடுத்தபடி கணக்கு பண்ணப் போகிறோம்,” என்றேன் நான், “689 நாட்கள் ஆனால் ஓராண்டு, இல்லையா?”

“அது செவ்வாய் ஆண்டு. சீனத்து ஆண்டுதான் பூமியின் ஆண்டு, 365 நாட்கள்”

“அப்படியானால் பூமி கனகுப்படிதான் அவருக்கு நூறாண்டுகள் ஆகின்றன என்று சொல்கிறாயா?”

“ஆமாம், அதுதான் சந்தேகமாக இருக்கிறது. எப்படி பார்த்தாலும் ஆச்சரியமான மனிதர்தான்”

உண்மையில் அவர் ஆச்சரியமான மனிதர்தான். அவரது தொல் சுருக்கங்கள் நிறைந்திருந்தது, கண்கள் குழியுள் ஆழ உட்சென்றிருந்தன, அவருக்கு கண்களே இல்லை என்பது போல் அவரது தோற்றம் இருந்தது. சி லிங் உயரம் குறைந்த மனிதர், கூன் போட்டிருந்ததால் இன்னும் குள்ளமாகத் தெரிந்தார். லிண்டா லூ உயரமான பெண், அவர் முன் அவள் மிக உயரமாகத் தெரிந்தாள். லிண்டா லூ அவரது பிரியத்துக்குரிய பெண், எனவே அவளைப் பார்த்ததும் அவர் சிரித்தார். வாயில் ஒரு பல் இல்லை. இந்த வயதிலும் அவரது பார்வை பழுதற்றிருந்தது, துல்லியமாகக் காது கேட்டது, சிரிக்கும் வாய்ப்பு எதையும் அவர் தவற விடவில்லை – குறிப்பாக, பெண்களிடம் நிறைய சிரித்துப் பேசினார். (more…)

நின்னையே சரணடைந்தேன்…

சிகந்தர்வாசி

கோடை அருவி போல் உன் கன்னங்களில் ஒற்றைத் துளி விழுந்து உருண்டோடுவது எனக்குத் தெரிகிறது, உனக்குத் தெரியாமல். மூடப்பட்டிருக்கின்றன உன் கண்கள், மோன நிலையில் நீ. இமை போர்த்த விழிகளில் கருங்கல் சிலை, வெம்மையால் சிவந்திருக்கும் உன் முகம்.

கருங்கல் சிலைதான். என் அறிவியல் பார்வை அனைத்தையும் பகுக்கின்றது, எது பகுபடாததோ அது ஒன்றே மிச்சமிருக்கிறது. வெறுமை? சாத்தியம்தான். ஆனால் உன்னைப் போல் நான் அழ முடியாது, ஒரு கற்சிலையைப் பார்த்து. அல்லது, ஒரு ஆதர்சத்தில், ஒரு லட்சியத்தில் என் துக்கங்களைக் கரைத்துக் கொள்ள முடியாது. என் முன்னிருப்பது கற்சிலை. வெறிக்கும் என் கண்களை உயிரற்று வெறித்துக் கொண்டிருக்கிறது.

சிலைக்கு ஒளியூட்டுகிறது தீபாராதனை. என் அருகில் இருப்பவன் ஆனந்த நிலையில் இருக்கிறான். என் எதிரில் நிற்கும் பெண்மணி கண்கொட்டாமல் சிலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள், அவள் இவ்வுலகில் இல்லை. கற்சிலை ஊமையாய் நிற்கிறது, எனக்கு மட்டும். உன்னிடம் அது என்ன சொல்கிறது? அல்லது, உன் ஆசைகளை அதன்மேல் சுமத்துகிறாயா? நீ எங்கு அழக் கற்று கொண்டாய்?

இங்கிருப்பவர்களுக்கு என்ன வேண்டும்? சாந்தி என்கிறாய், ஆனால் சாந்தம்தான் என்ன? துன்பமின்மை? ஆசைகளின் பலிதம்? உன் பிரார்த்தனைகள் இந்தச் சிலையிடம் என்ன சொல்கின்றன? உனக்கு என்ன வேண்டும்? அல்லது, உன் கண்களை மூடிக் கொண்டு அனைத்தையும் கடந்து அப்பால் செல்கிறாயா? ஏதுமில்லா இடத்துக்கு? எல்லாம் உள்ள இடத்துக்கு? இருப்பும் இல்லாமையும் நீங்கிய, பொருளற்ற இடத்துக்கு? கணப்பொழுதேனும் ஆசைகள் அற்றுப் போயினவா?

நான் என்ன கண்டேன்: ஆனந்தம் என் மனம் அனுமதிக்காத ஆடம்பர நிலை. எப்போதும் நான் என்னைக் கண்டு கொள்கிறேன். எப்போதும் நான் பிறரைக் கண்டு கொள்கிறேன். உண்மை என்னை ஒளியை நோக்கிச் செலுத்துகிறது, ஒளி என்னை அண்டங்களைக் கடந்து அழைத்துச் செல்கிறது. எனக்குள் என்ன இருக்கிறது? அதுவா முக்கியம்? உள்ள பொருள், அதை ஆய்கிறது என் உள்ளம். ஆன்மா உள்ளதா, ஆய்வுக்கு உட்பட்டதா? கணிதச் சமன்பாடுகளின் மொழியில் பேசாத எதுவும் எனக்குப் பயன்படாது.

இல்லை. உன்னைப் பார்த்து நான் சிரிக்கவில்லை. நீ கரையேறிவிட்டாய். உன் முன் உள்ள பாதை ஒளிர்கிறது. சாகும்வரை நீ அதில் பயணிப்பாய். மரண கணத்தில் உன் முகம் நிறைவின் புன்னகையாய் மலரும். என் கேள்விகள் உனக்கில்லை. அறிவியலின் தீர்மான்மின்மைகள் உனக்கில்லை. எனவேதான் நீ எப்போதும் என்னருகில், என்னுடன் இருக்க வேண்டும். ஐயங்கள் பாலையாய் என் வாழ்வைச் சுட்டெரிக்கின்றன, நீதான் என் புகல். அவ்வப்போது உன்னைக் கண்டு மகிழ்கிறேன்.

கற்சிலைகளை கடந்து தொடர்கிறது என் தேடல். என் தேடல் தொடர்ந்தாக வேண்டும். மதங்களுக்கு அப்பால், கண்ணீருக்கு அப்பால், இன்பங்களுக்கு அப்பால். என் தேடல் புதிய சமன்பாடுகளை உருவாக்குகிறது. பழைய சிக்கல்களை அவிழ்க்கிறது. புதிய உலகங்களைத் திறக்கிறது. மேலும் மேலும் கடினமான பாதைகள், முடிவற்ற பாதைகள். நான் பயணித்தாக வேண்டும். ஓய்வில்லை எனக்கு. என் கேள்விகள் ஓயும் முன் என் வாழ்வு ஓயும் என்பதை நான் அறிவேன். உனக்குக் கேள்விகள் கிடையாது, கேள்விகள் எழுமுன் பதில்களைப் பெற்றுக் கொள்கிறாய். உனக்கு எப்போதும் உண்டு, இந்தக் கருங்கல் சிலை, அதன் காட்சியும், கண்ணீரில் நீ கரைதலும்.

மானுடம் குடியமர்ந்த கோள் : உண்மையின் துலக்கம்

சிகந்தர்வாசி

…சிறிது தேடலுக்குப்பின் இறுதியில் நான் லிண்டா லூ இருக்குமிடத்தைக் கண்டுபிடித்தேன். அவள் ஆற்றங்கரையில் அமர்ந்திருந்தாள். நான் கண்டுபிடித்ததை எல்லாம் பரபரப்பாக அவளிடம் சொல்லிவிட்டு என் கையில் இருந்த காகிதங்களையும் மின் அஞ்சல் பரிமாற்றங்களின் அச்சு ஆவணங்களையும் அவளிடம் காட்டினேன்.

அவை அனைத்தையும் பொறுமையாக படித்துப்பார்த்த லிண்டா, சிறிது நேரம் மௌனமான, ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்தாள். அதன்பின், “என் குழப்பங்கள் சிலவற்றுக்கு இவை விளக்கம் அளிக்கின்றன,” என்றாள் அவள்.

“உனக்கு குழப்பமாக இருந்த விஷயங்கள் எவை? இப்போது என்ன புரிந்தது?|

“புரிந்து விட்டது என்று சொல்ல முடியாது, ஆனா மெல்ல மெல்ல கடந்த காலத்தில் என்ன நிகழ்ந்திருக்கும் என்பதைப் பற்றிய ஒரு சித்திரம் கிடைக்கிறது,” என்று சிரித்தாள் லிண்டா.

“என்ன நடந்திருக்கும் என்று நீ நினைக்கிறாய்? இதில் சில விஷயங்கள் எனக்குப் புரிகின்றன, ஆனால் செவ்வாய் பயணம் இங்கு எங்கு வந்தது?”

“இதை ஒவ்வொரு அடியாக யோசிப்போம். முதலில் பூமி என்ற கோள். அங்குதான் நம் மூதாதையர் வசித்திருந்தனர். இங்கிருந்து இரவில் நாம் பூமியைப் பார்க்க முடியும்…” (more…)