பீட்டர் பொங்கல்

வீடு திரும்பும் வழிகள்

(Alejandro Zambra எழுதியுள்ள “Ways of Going Home” என்ற நாவலின் சில பகுதிகள்)

ஹாலில் இருக்கும் புத்தக அலமாரியைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. அது நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. “இங்கே லைப்ரரி இருப்பதால் உன் அம்மா படிக்கத் துவங்கி விட்டாள், நானும் படித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் உனக்கே தெரியும், எனக்கு சினிமா பார்க்கத்தான் பிடிக்கும்,” என்கிறார் அப்பா. அவர் கிளாடியாவைப் பார்ப்பதில்லை, மிகவும் கண்ணியமாக, கவனமாக நடந்து கொள்கிறார்.

மதியப்பொழுது, நிதானமான உரையாடலில் கழிகிறது- சில குறிப்பிட்ட கணங்களில், அது நாங்கள் குடித்துக் கொண்டிருக்கும் pisco sourகளின் ரிதத்திற்கு ஏற்ற வடிவம் எடுத்துக் கொள்கிறது. நாங்கள் கிளம்பவிருக்கும்போது என் அம்மா இறைச்சித் துண்டங்களையும் உருளைக்கிழங்குகளையும் எடுத்து வந்து டின்னர் செய்ய ஆரம்பிக்கிறாள் – மாற்று உணவாக வெஜிடேரியனும் சமைக்கிறாள்.

அம்மாவின் கேள்விக்கு, “நான் வெஜிடேரியன் அல்ல,” என்று கிளாடியா பதில் சொல்கிறாள்.

“இது வித்தியாசமாக இருக்கிறது, என் பிள்ளை எப்போதும் வெஜிடேரியன்களைதான் விரும்பியிருக்கிறான்,” என்கிறாள் அம்மா. எனக்கு கோபம் வருகிறது, ஆனால் கிளாடியா இயல்பாய், நெருக்கமாய்ச் சிரிக்கிறாள். (more…)

நவீனத்துவம், மாயம், புனைபடுதல் – 2

(சரியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் சில சுதந்திரங்கள் எடுத்துக்கொண்டு தமிழாக்கம் செய்யப்பட்ட கட்டுரை இது. கலைச்சொற்களின் தமிழாக்கமும் நம்பத்தகுந்ததாய் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. பிழை எது, சரி எது என்பதை சுயமாய்ச் சிந்தித்தறிய தூண்டுதலாக இருக்கும் என்ற நம்பிக்கையில் மட்டுமே இந்த மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது. விஷயத்தைச் சரியாக விளங்கிக் கொள்ள விரும்புபவர்கள், Michael Saler எழுதிய மூலக்கட்டுரையை ஆங்கிலத்தில் இங்கு வாசிக்கலாம் )

இந்தக் கட்டுரையின் முந்தைய பகுதி இங்கே – இப்படி முடிந்திருந்தது.

(நவீனத்துவம் மற்றும் மாயம் குறித்து நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் சொல்லாடல் விருப்பு வெறுப்பற்ற கதை கூறலல்ல, அது மதிப்பீடுகளை முன்வைக்கிறது. மாயமகற்றல் என்பது சமயமின்மைக்குச் சமமாகிறது, அதிருப்திக்கும் இணையாகிறது. இந்தச் சொல்லாடல், உலகின் மாயமின்மையை விவரிப்பதோடு உலகின் வசீகரமின்மையையும் ஒப்புக்கொள்கிறது. உண்மையில், பத்தொன்பதாம் நூற்றாண்டில், ‘disenchantment’ என்ற ஆங்கிலச் சொல் பெரும்பாலும் ‘பண்பாட்டு அவநம்பிக்கை’யின் இணைச்சொல்லாக இருந்து வந்தது. ஆர்தர் ஷோபன்ஹார் மற்றும் அவரது மாணவர்கள் அறிவுலகில் இத்தரப்பை முன்வைத்தனர்.

உதாரணத்துக்கு, 1885ஆம் ஆண்டு எட்கார் சால்டஸ் எழுதிய, The Philosophy of Disenchantment என்ற நூல், சமயசார்பின்மையின் வரலாற்றை விவரிக்கவில்லை, மாறாய் சமகால பண்பாட்டு அவநம்பிக்கையின் வரலாறாகவே இருந்தது, வெபரின் entzauberung (“removal of magic”) என்ற சொல், ஆங்கிலத்தில் ‘மாயம் அகற்றல்’ என்று மொழிபெயர்க்கப்படவில்லை. மாறாய், disenchantment என்று மொழிபெயர்க்கப்பட்டபோது, ஏற்கனவே நிலவி வரும் பண்பாட்டு அவநம்பிக்கையின் சாயல்கள் வெபரின் கருத்துக்கு அளிக்கப்பட்டன.)

இனி- (more…)

டேவிட் மிட்சல்

The Bone Clocks அல்லது Cloud Atlas போன்ற நாவல்கள், ஓரளவுக்காவது கதைசொல்லும் கட்டமைப்பில் தேர்ச்சியைக் கோருவதாகக் கருதுகிறீர்களா? – வெவ்வேறு கதையாடல்களை ஒன்றோடொன்று இணைப்பது, காலத் தாவல்கள், நினைவுகூரல்கள், இது போன்றவை. உங்கள் நாவல்களின் இறுதி வடிவம் உருவம் பெறும்வரை நீங்கள் எத்தனை வரைவு வடிவங்களைத் திருத்தி எழுத வேண்டியிருக்கிறது?

முதலில் சோதனை முயற்சியாகத் துவக்கப்படும் வரைவு வடிவத்துக்கும் முடிவில் புத்தகமாகப் பதிப்பிப்படும் இறுதி வடிவத்துக்கும் உள்ள உறவு, ஒரு கிறுக்கலுக்கும் ஆயில் பெயிண்டிங்குக்கும் உள்ளது போன்றது, ஆனால் எதையும் துவக்குவதற்கு ஏதோ ஒரு இடம் தேவைப்படுகிறது. முதலில் கலங்கலான, சாதாரணமான, துல்லியமற்ற, கச்சிதமற்ற ஏதோ ஒன்று தோன்றுகிறது. இந்த நாவலில் எத்தனை பகுதிகள் இருக்கப் போகிறது என்பது பற்றிய ஒரு எண்ணம் அப்போது கிடைக்கிறது – நாவலை, பகுதிகளாகப் பிரித்துக் கொண்டாக வேண்டும்- இந்த நாவலில் ஆறு.

என்னென்ன பகுதிகள் இருக்கப் போகின்றன என்பது தெரிந்ததும், மீனின் எலும்புக்கூடு போன்ற ஒரு படம் போடுகிறேன், நேராக ஒரு பக்கவாட்டுக் கோடு, அதன் இரு புறங்களிலும் கைகள் மாதிரி கோடுகள். அதன்பின் ஒவ்வொரு கையிலும் ஒவ்வொரு ஐடியாவாக எழுதிக் கொண்டு வருகிறேன். அடிப்படையில் ஒவ்வொரு கையும் ஒரு காட்சி. இப்படிச் செய்யும்போது, என்னென்ன காட்சிகள் இருக்கின்றன என்பது தனித்தனியாகவும் தெரிகிறது, சரியான வரிசையிலும் தெரிகிறது. இந்தக் கைகளிலிருந்து பிற கோடுகள் கிளைக்கலாம்- பார்ப்பதற்கு நிறைய முடி முளைத்திருப்பது போல் தெரியும்- அதன்பின், ஒரு திசையில், ஏதோ ஒரு திசையில் உரையாடல் எழுத ஆரம்பிக்கிறேன், அதற்குக் கீழே இடம் இருந்தால், அங்கு இன்னொன்று எழுதுகிறேன்- என்ன செய்வது என்று தெரியாதபோது, நான் அங்கே ஒரு பாத்திரத்தின் முகம் கூட வரையக்கூடும்.

என் எழுத்தின் வரைவு வடிவம் இப்படிதான் இருக்கிறது. நான் எழுதி முடிப்பது இதையொட்டி இருக்கலாம், அல்லது மாறுபடலாம், ஆனால் எப்படி பார்த்தாலும் வெறுமையை வைத்துக் கொண்டு திண்டாடுவதில்லை. வெற்றுத்திரைதான் எதிரி. ஒன்றுமில்லாத இடத்தில் எதையும் மேம்படுத்த முடியாது. ஏதோ ஒன்று இருந்தால்தான் மேம்படுத்த முடியும், அது எவ்வளவு மோசமாக, துண்டு துண்டாக, அரைகுறையாக இருந்தாலும பரவாயில்லை. ஏதோ ஒன்று கிடைத்துவிட்டபின், வேலை செய்யத் துவங்கலாம் (more…)

நவீனத்துவம், மாயம், புனைபடுதல் – 1

-பீட்டர் பொங்கல்-

(சரியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் சில சுதந்திரங்கள் எடுத்துக்கொண்டு தமிழாக்கம் செய்யப்பட்ட கட்டுரை இது. கலைச்சொற்களின் தமிழாக்கமும் நம்பத்தகுந்ததாய் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. பிழை எது, சரி எது என்பதை சுயமாய்ச் சிந்தித்தறிய தூண்டுதலாக இருக்கும் என்ற நம்பிக்கையில் மட்டுமே இந்த மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது. விஷயத்தைச் சரியாக விளங்கிக் கொள்ள விரும்புபவர்கள், Michael Saler எழுதிய மூலக்கட்டுரையை ஆங்கிலத்தில் இங்கு வாசிக்கலாம் )

நவீனத்துவம் மற்றும் மாயம் குறித்து நிகழ்த்தப்படும் உரையாடல்களின் பின்னணியில் ஓங்கி நிற்கும் இறுகிய முகம் மாக்ஸ் வெபருக்கு உரியது. அதைவிடச் சற்றே மகிழ்ச்சியான முகம் கொண்ட சார்லஸ் டெய்லரும் அங்குண்டு. மலர்ந்த முகம் கொண்டவரும் உண்மைகளை அப்பட்டமாய் பேசுபவரும், கரிக்கோல் ஏந்தியிருப்பதாய் குற்றம் சாட்டப்படுபவருமான லுட்விக் விட்கென்ஷ்டைனும் இவர்களுடன் இணைத்துப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது.

இது நினைத்தே பார்க்க முடியாத தேர்வு என்ற எண்ணம் எழலாம். காரணம், விட்கென்ஷ்டைன் மாயத்தன்மை குறித்து அதிகம் எழுதியதில்லை. மேலும், மொழியின் பிழை புழக்கத்தால் ஏற்பட்ட மயக்கங்களை, தத்துவத்துறைக் கருவிகளைக் கொண்டு கலைத்து வசியமிழக்கச் செய்தவர் என்றுதான் அவரைப் பற்றி பெரும்பாலும் கருதப்படுகிறது. அவரே எழுதியதுபோல், “மொழியினால் ஏற்பட்ட நம் அறிவு மயக்கத்துக்கு எதிரான போராட்டம்தான் தத்துவவியல்” “Philosophy is a battle against the bewitchment of our intelligence by means of language”). (more…)

நகை எனும் மெய்ப்பாடு

Public Seminar என்ற தளத்தில் Dmitri Nikulin எழுதிய, “Why Comedy Matters”, என்ற கட்டுரையின் தமிழாக்கம்

தார்மீக முடிவுகளோ அரசியல் முடிவுகளோ தீர்மானிக்கப்பட வேண்டியிருக்கும் நிலையில், நம் கைவசமுள்ள நாடகங்கள் மற்றும் இலக்கியத் தொகுப்பில் பதியப்பட்டுள்ள வழமைச் சொற்களை அடிக்கடி பயன்படுத்துகிறோம். அவற்றை நாம் எவ்வாறு வடிவமைத்துக் கொள்கிறோம் என்பதையொட்டி அவை புரிந்து கொள்ளப்படுகின்றன என்பதையும் அவ்வாறே நம் செயல்களும் அமைகின்றன என்பதையும் அறிந்திருக்கிறோம். நம் வசமுள்ள வகைமைகள் அனைத்தைக் காட்டிலும், நகைச்சுவையையே நாம் எப்போதும் ரகசியமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது – பிறரோடு நாம் எவ்வளவு தீவிரமாகவும் நேர்மையாகவும் பழகுகிறோம் என்பதைச் சரியாக விவரித்து விவாதிக்கும் ஆற்றல் நகைச்சுவைக்கு உண்டு என்பதை முழுமையாக விளங்கிக் கொள்ளாமல்தான் இதைச் செய்கிறோம்.

ரோமானியப் பேரரசில் உள்நாட்டு யுத்தம் துவங்கும் சீஸர், “பகடையை உருட்டியாயிற்று,” என்று பிரகடனம் செய்தான் (“The die has been cast.”). சீஸர் இதைத் தன் தாய்மொழியான லத்தீனில் கூறினார் என்கிறார் சூடோனியஸ் (alea iacta est). ஆனால், ப்ளூடார்க்கோ, சீஸர் கிரேக்க மொழியைப் பயன்படுத்தினான் என்று பதிவு செய்கிறார் (anerrhiphtō kybos)- இதைச் செய்கையில் அவன், நியூ காமெடி என்று அழைக்கப்படும் வகைமையின் பிதாமகர் மெனாண்டர் எழுதிய, தற்போது தொலைந்துவிட்ட, நகைச்சுவை நாடக வசனம் ஒன்றை மேற்கோள் காட்டியிருக்க வேண்டும். கோரிந்தியர்களுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் புனித பால்கூட மெனான்டரை நோக்கித் திரும்புகிறார், Thais என்ற நகைச்சுவை நாடக மேற்கோள் ஒன்றை அவர் இங்கு கையாள்கிறார்: “ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்” (more…)