மித்யா

அமேஸான் காடுகளிலிருந்து- 7: கள்ளமில்லா மனது

மித்யா 

“அறை முழுவதும் மெல்லிய பச்சை ஒளி பரவியது. நான் கண்ணை மூடிக்கொண்டு பத்மாசனத்தில் உட்கார்ந்திருந்தேன். பச்சை ஒளி பரவியவுடன் அங்கு நிசப்தம் நிலவியது. ஓயாமல் அழுது கொண்டிருந்த ராணியின் குரல் சட்டென்று யாரோ குரல்வளையை நெருக்கியது போல் நின்றது. கதறிக் கொண்டிருந்த இளவரசியின் குரலும் அடங்கியது. எல்லோரும் திகைத்து நின்றிருப்பதை உணர்ந்தேன். வெளியில் இலைகளின் சலசலப்பும் பறவைகளின் ஓசையும் தவிர வேறேதும் இல்லை. என்ன நடக்கப் போகிறது என்று எல்லோரும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

“நீ யார்?” என்ற கேள்வி என்னை வந்து தாக்கியது. இது காதில் கேட்கக்கூடிய சப்தம் இல்லை. அது மொழியும் அல்ல. என் உள்ளுணர்வுடன் வேறொரு ஆத்மா உரையாடிக் கொண்டிருந்தது. இது என்னை தவிர வேறு யாருக்கும் கேட்கவில்லை, ஆனால் இந்த ஆத்மா பேசும்போது பச்சை ஒளி மங்கியும் பிறகு அதிகமாக மிளிர்வதாகவும் இருந்தது.

“நான் யார் என்பது இங்கு முக்கியமில்லை. நீ யார்? எதற்காக இங்கே வந்தாய்? எங்கிருந்து வந்தாய்?” (more…)

அமேஸான் காடுகளிலிருந்து- 6: ஆவி சூழ் உலகம்

மித்யா 

அத்தியாயம் 6 – ஆவி சூழ் உலகு

“உங்களுக்கு நான் ஒரு கதை சொல்லப்போகிறேன்” என்று ஆரம்பித்தான் அந்த இந்தியன். நடுநிசி நேரம். வானத்தில் பல ஆயிரம் நட்சத்திரங்கள். மெல்லிய காற்று வீசிக்கொண்டிருந்தது. பூச்சிகளின் இடைவிடாத ஒலி. காட்டுக்குள்ளிருந்து மிருகங்களின் ஊளை. மேலே எழும்பும் அக்னி ஜ்வாலைகள் இருட்டுடன் போராடிக் கொண்டிருந்தன.

அந்த இந்தியன் நெருப்பின் முன் உட்கார்ந்து தீப்பிழம்பின் ஒளியில் மிளிரும் கிறிஸ்டோவையும் ஆலிஸ்சையும் பார்த்தான். அவர்கள் இன்னும் சிவப்பாக தெரிந்தனர். அவன் கதை சொல்ல ஆரம்பித்தான்.

“ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். இல்லை இல்லை. இன்னும் இருக்கிறார். அவனுக்கு பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரு மகள் பிறந்தாள். குழந்தையே இல்லாத ராஜா ராணிக்கு மகள் பிறந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. அவர்கள் இந்த வரவை எப்படி கொண்டாடியிருப்பார்கள் என்பதை நீங்கள் ஊகித்துக்கொள்ளலாம்.

அந்த மகள் ஒரு அழகான ராஜகுமாரியாக மாறினாள். புற அழகு மட்டுமல்ல. அவள் அகமும் அழகாக இருந்தது. யாருக்கும் தீங்கு நினைக்காத ஓர் இளவரசியாக அவள் இருந்தாள். எல்லோருடனும் ஒரு சாதாரண பிரஜை போல் பழகினாள். முதலில் ராஜாவிற்கும் ராணிக்கும் இது பிடிக்கவில்லை. “என்ன இது. இளவரசி என்றால் சும்மாவா? கை அசைத்தால் ஆட்கள் ஓடி வரவேண்டும். கண் சைகையில் எல்லா வேலையும் முடிய வேண்டும். இவளோ இப்படி எல்லோருடனும் சரிக்கு சமமாக பழகுகிறாளே?” என்று ராணி ராஜாவிடம் வருத்தப்பட்டுக்கொண்டாள். ராஜாவும் இளவரசியின் பழக்க வழக்கங்களை மாற்ற பல ஆசிரியர்களை நியமித்தார். ஆனால் இளவரசியோ ஆசிரியர்களுக்கு தக்க மரியாதை செய்தாலும் அவர்கள் சொல்லிக் கொடுத்த எதையும் கடைபிடிக்கவில்லை. எப்பொழுதும் போல் எல்லோருடனும் ஆடிக் கொண்டிருந்தாள். (more…)

அமேஸான் காடுகளிலிருந்து- 5: இந்தியன்

 மித்யா

“ஹலோ மிஸ்டர் கிறிஸ்டோ” என்றாள் அந்த தேவதை.

அவள் வெள்ளை நிற கவுன் அணிந்திருந்தாள். திருமணத்திற்கு கிறிஸ்துவர்கள் அணியும் கவுன் போல் இருந்தது. இவ்வளவு பெரிய கவுனை இந்தப் பிரதேசத்தில் அவள் அணிந்திருந்தது அவனுக்கு ஆச்சரியம் அளித்தது. இங்கு எப்பொழுதும் புழுக்கமாக இருக்கும். இவளுக்கு இந்த கவுனை அணிந்தால் வெந்து போகாதா? அவள் ஒரு வெள்ளை தொப்பி அணிந்திருந்தாள். அதன் ஓரம் லேஸ் வைத்து தைக்கப்பட்டிருந்தது. லேசில் உள்ள சின்ன சின்ன ஓட்டை வழியாக சூரிய கிரணங்கள் அவள் முகம் மேல் திட்டு திட்டாக படிந்திருந்தன. தொப்பி அவள் முகத்தை ஓரளவுக்கு மறைக்க, லேஸ் வழியாக விழுந்த வெளிச்சம் அவள் முகத்தின் பிரகாசத்தை அதிகரித்தது. அவள் முகத்தை பார்த்தவுடன் அவள் மேல் கிறிஸ்டோ காதல் கொண்டான்.

“மிஸ்டர் கிறிஸ்டோ” (more…)

அமேஸான் காடுகளிலிருந்து- 4: தேவதை வந்தாள்

 மித்யா

அன்று இரவு கிறிஸ்டோவிற்கு தூக்கம் வரவில்லை. ஜெப்ரியின் கண்கள் இல்லாத சடலம் அவன் கண்களில் அடிக்கடி தோன்றி மறைந்தது. டேவிட் என்ன ஆனார் என்று யாருக்கும் தெரியவில்லை. ஜெப்ரிக்கு இந்த கதி என்றால் அவருடைய கதி என்னவோ? அவர் உயிருடன் இல்லை என்பது சர்வ நிச்சயம். ஆனால் அவர் எப்படி மாண்டிருப்பார்? ஜெப்ரி போல் அவரும் துடிதுடித்திருப்பாரா? அவரை எந்த மிருகம் கொன்றிருக்கும்? ஜெப்ரியின் மரணத்துக்கும் எந்த மிருகத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பதை எல்லோரும் ஒப்புக் கொண்டார்கள். மிருகத்தினால் சாவு வந்தால் ஒரு கை காணாமல் போயிருக்கலாம், அல்லது ஒரு கால் காணாமல் போயிருக்கலாம். ஏன், தலையே காணாமல் போயிருக்கலாம். இப்படி கண் மட்டும் காணாமல் போயிற்றென்றால் அது ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தியின் வேலைதான் என்று இந்த குழுத் தலைவன் நேற்றுதான் எல்லோரிடமும் கூறிக்கொண்டிருந்தான். சற்று நேரம் முன் எல்லோரும் வானைப் பார்த்து ஏதோ கத்தினார்கள். பல முறை காட்டை வணங்கினார்கள். அதற்கு பிறகு தூங்கச் சென்று விட்டார்கள்.

கிறிஸ்டோவின் குடிசைக்குள் அந்தப் பெண் நுழைந்தாள். கிறிஸ்டோவை தங்களுடைய குழுவில் உள்ள ஒருவனைப் போல் காட்டுவாசிகள் நடத்தினார்கள். தினமும் ஏதோ ஒரு பெண் கிறிஸ்டோவின் குடிசைக்குள் வந்து அவனுடன் படுத்துக் கொள்வாள். முதலில் கிறிஸ்டோவிற்கு இது குழப்பமாக இருந்தது. அவன் ஒரு பெண் மேல் மோகித்திருந்தான். அவளை அவனுக்கு ரொம்ப பிடித்தது. அவள் தன்னுடனேயே இருக்க வேண்டும் என்று எண்ணினான். ஆனால் அந்தப் பெண்ணோ பல ஆண்களுடன் கூடினாள். இதைக் கண்டு கிறிஸ்டோ வெகு கோபமாக இருந்தான். அவள் அவனுடைய குடிசைக்குள் இரவில் வந்தபொழுது தனக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லிவிட்டு அவளைத் தொடாமல் இருந்தான். இப்படி பல முறை நடந்தபின் கிறிஸ்டோ இவர்களுடைய விழுமியங்கள் தன்னுடைய விழுமியங்களுக்கு நேர் எதிராக இருப்பதை உணர்ந்தான்.

லண்டனில் ஒரு பெண் பலருடன் செல்வதுண்டு. ஆனால் ஒருவனுடைய காதலி ஆனபின் அவள் அவனுடன்தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம். இங்கு அது போல் எதுவும் இல்லை. யார் வேண்டுமானாலும் யாருடனும் கூடி இருக்கலாம். யாரும் யாருக்கும் சொந்தமில்லை. கிறிஸ்டோ முதலில் இதை ஒரு காட்டுமிராண்டி சமூகமாகப் பார்த்தான். ஐரோப்பியா இவர்களுக்கு நாகரிகம் கற்றுக் கொடுக்க கடமைப்பட்டிருக்கிறது என்று பல ஐரோப்பியர்கள் போல் அவனும் நினைத்தான். ஆனால் மெதுவாக அவன் கருத்து மாறியது. இந்த குழுவிற்குள் கற்பழிப்பு என்பது யாரும் கேட்டதில்லை. இரு குழுக்கள் சண்டையிட்டுக் கொண்டாலும் ஜெயித்தவர்கள் பெண்களை வன்கொடுமைக்கு உட்படுத்துவதில்லை. இந்த குழுக்களின் தலைவன் ஆணாக இருந்தாலும் எல்லோரும் சமமாகதான் கருதப்படுகிறார்கள். கிறிஸ்டோவிற்கு இதையெல்லாம் யோசிக்கும்பொழுது மிகவும் குழப்பமாக இருந்தது. அப்பொழுதுதான் குடிசைக்குள் வந்த பெண் அவனை முத்தமிட்டாள்.

கூடல் முடிந்தபின் அவள் ஆழ்ந்த உறக்கத்தில். கிறிஸ்டோ ஆழ்ந்த சிந்தனையில். ஜெப்ரி போன்ற மாவீரர்களை தின்று துப்பிய காடு என்னை ஏன் ஒன்றும் செய்யவில்லை? அப்படி எனக்குள் என்ன இருக்கிறது? இவர்கள் நம்புவது போல் நான் ஒரு தெய்வப் பிறவியா? அப்படியானால் அதை என்னால் ஏன் உணர முடியவில்லை? நான் இவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறேனா? தன்னுள் எழுந்து கொண்டிருந்த பல கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் குடிசையை விட்டு வெளியே வந்தான் கிறிஸ்டோ.

தரை ஈரமாக இருந்தது. மழை பேய்ந்து ஓய்ந்திருந்து. இங்கே எப்பொழுது மழை பெய்யும் என்றே சொல்ல முடியாது. இங்கு எப்பொழுதும் ஒரே போன்ற சீதோஷ்ண நிலைதான். இரவில் குளிர்ச்சி இல்லை. காற்றில் மிதமான வெப்பம் கலந்திருந்தது. மழை விட்டபின் வானம் சுத்தம் செய்யப்பட்டது போல் இருந்தது. பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருந்தன.

கிறிஸ்டோ தன் கால்கள் தானாக காட்டை நோக்கிச் செல்வதை உணர்ந்தான். தனக்கு தன் சொந்த கால்களின் மேல் எந்த அதிகாரமும் இல்லை என்பதை உணர்ந்தான். அவனை பயம் கவ்விக் கொண்டது. அவனுக்கு மறுபடியும் குடிசைக்குள் சென்றுவிடவேண்டும் என்று இருந்தது. ஆனால் அவன் கால்களோ அவனை காட்டுக்குள் அழைத்து சென்றன.

காட்டுக்குள் நுழைந்த கிறிஸ்டோவிற்கு ஒரு ஆச்சரியம் காத்துக் கொண்டிருந்தது. இரவு நேரத்தில் காடு இருட்டாக இருக்கும் என்றும், தன்னால் அந்த இருளில் ஒன்று பார்க்கமுடியாது என்றும் கிறிஸ்டோ எண்ணியிருந்தான். வானில் நிலவொளியும் இல்லை. ஆனால் காட்டுக்குள் அவனுக்கு எல்லாம் தெள்ளத் தெளிவாக தெரிந்தன. எல்லா பக்கமும் மரங்களும், மரத்தில் பொந்துகளும், பொந்துக்குள் குடியிருக்கும் ஆந்தைகளும், மரத்தின் கிளை மேல் படுத்திருக்கும் சிறுத்தையும், ஊர்ந்து செல்லும் பாம்பும் அவனுக்கு தெரிந்தன. ஆனால் காட்டை யாரோ ஒரு சன்ன பச்சை நிற போர்வையால் போர்த்துவிட்டதுபோல் இருந்தது. எங்கும் எதிலும் பச்சை நிறம் குடிகொண்டிருந்தது.

இவற்றையெல்லாம் ஆச்சரியமாக பார்த்தக்கொண்டே நடந்தான் கிறிஸ்டோ, எவ்வளவு நேரம் நடந்தான் என்பது அவனுக்குத் தெரியவில்லை. அவன் ஒரு நதிக்கரையை அடைந்திருந்தான். கால்கள் வலித்தன. ஓடும் நதியிலிருந்து தண்ணீரை கைகளால் மொண்டு குடித்தான். மிகவும் சோர்வாக இருந்தவன் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்தான். அந்த இடத்தின் அமைதியை ரசித்துக்கொண்டு கண்களை மூடினான். மூடியவுடன் அவனுக்கு உறக்கம் வந்தது. அப்படியே தூங்கிவிட்டான். காட்டின் அந்தப் பகுதியில் ஒலிகள் எதுவும் இல்லாததால்தான் அமைதி குடிக்கொண்டிருந்தது என்பதை அவன் கவனிக்கவில்லை. அவனுக்கு பத்தடி தூரத்தில் ஒரு ரைஃபில் இருந்ததையும் அவன் கவனிக்கவில்லை. அதன் அருகில் துண்டிக்கப்பட்டு கிடந்த காதும் அவன் பார்க்கவில்லை.

காலையில் சூரிய வெப்பம் முகத்தில் அடித்து அவனை எழுப்பியது. கண்ணைத் திறந்து பார்த்தான். அவனுக்கு முன் வெள்ளை நிற உடையில் ஒரு தேவதை நின்று கொண்டிருந்தாள்.

அமேஸான் காடுகளிலிருந்து- 3 : நிசப்தம்

மித்யா

அத்தியாயம் 3 – நிசப்தம்

 

மறு நாள் காலை ஜெப்ரி, டேவிட் மற்றும் ஜிம் ஆகிய மூவரும் அந்தக் காட்டுப் பகுதிக்குள் செல்லக் கிளம்பினார்கள். அவர்கள் கையில் தலா ஒரு ரைஃபில் இருந்தது. ஜெப்ரியும் டேவிட்டும் தங்கள் ஹோல்ஸ்டரில் பிஸ்டல் வைத்திருந்தார்கள். காட்டுவாசிகள் அவர்களுடன் வர மறுத்துவிட்டதால் எல்லோரும் ஒரு பையை முதுகில் சுமந்துகொண்டு நடந்தார்கள். ஜெப்ரி காடுவாசிகளை திட்டிக்கொண்டே வந்தார்.

அவர்கள் காட்டுப்பகுதியின் எல்லைக்கு வந்தபோது அங்கு தங்கியிருக்கும் காட்டுவாசிகளின் குடிசைகளைப் பார்த்தார்கள். இவர்கள் அந்தக் காட்டுக்குள் செல்லப் போகிறார்கள் என்று காட்டுவாசிகளுக்கு புரிந்துவிட்டது. குடிசைக்குள் இருப்பவர்களைக் கூப்பிட ஆரம்பித்தார்கள். அவற்றில் ஒரு குடிசைக்குள்ளிருந்து கிறிஸ்டோ வெளியில் வந்தான். அவன் ஜெப்ரி மற்றும் டேவிட்டைப் பார்த்தவுடன் பரவசமடைந்தான். பிரிட்டனில் பல இளைஞர்களுக்கு நாயகர்களாக இருந்த இருவரை இவ்வளவு கிட்டத்தில் பார்த்ததில் அவனுக்கு மகிழ்ச்சி. வாயெல்லாம் பல்லாக, வலது கையை நீட்டி கொண்டு, “வெரி ப்ளீஸ்ட் டு மீட் யூ” என்று சொல்லிக்கொண்டு கிடு கிடு என்று அவர்களை நோக்கி ஓடி வந்தான். அவனைப் பார்த்து ஜெப்ரி உக்கிரமாக முறைத்தார். ஓடி வந்துகொண்டிருந்த அவன் உறைந்து நின்றுவிட்டான். அவன் முகம் வாடிவிட்டது.

காட்டுப்பகுதிக்குள் அவர்கள் நுழையும் தருணம், ஜிம், “நான் உங்களுடன் வரவில்லை. எனக்கு பயமாக இருக்கிறது. நான் இங்கேயே உங்கள் வரவை எதிர்பார்த்துக் கொண்டு காத்திருக்கிறேன்” என்றான். “நீ ஒரு கோழை. நீ ஒரு முட்டாள். உலகில் நீ முன்னுக்கு வரமுடியாது. இனி என் கண்ணில் முழிக்க வேண்டாம். உன் சாமான்களை எடுத்துக்கொண்டு லண்டனுக்குச் சென்றுவிடு. அங்கு ஏதாவது கிளார்க் வேலை தேடிக்கொள் இந்தக் காட்டில் உனக்கு வேலை இல்லை” என்று ஆவேசமாக் கத்தினார் ஜெப்ரி. “அவனை விடுங்கள். நாம் செல்லலாம்” என்று அவரை டேவிட் சமாதானப்படுத்தினான்.

இருவரும் காட்டுக்குள் நுழைந்தார்கள். அவர்களுக்கு காடு புதிதல்ல. நுழைந்தவுடன் அவர் காதுகள் கூர்மையாகின, கண்கள் எல்லா இடங்களையும் தேட ஆரம்பித்தன. அவர்கள் உடம்பு முறுக்கிக் கொண்டிருந்தது. ஒரு சின்ன அசைவையும் அவர்களின் கண் பார்த்தது. எல்லா ஒலிகளும் அவர்கள் காதை வந்தடைந்தன. அவர்கள் இருவரும் காட்டு மிருகங்கள் போல் மாறியிருந்தார்கள். இருண்டிருந்த காட்டில் பூச்சிக்கடியைக்கூட அவர்கள் பொருட்படுத்தவில்லை. மரத்திலிருந்து கீழே ஊர்ந்து வரும் பாம்பு ஒன்றை டேவிட் கையால் பிடித்து, கீழே வீசி, தன் பூட்ஸ் காலால் நசுக்கினான். துடிதுடித்து இறந்தது அந்தப் பாம்பு. மரத்தை விட்டு மரத்துக்கு தாவிக் கொண்டிருந்த கொரில்லா ஒன்றை ஜெப்ரி சுட்டு தள்ளினார்.

மூன்று மணி நேரம் நடந்த பின்பு அவர்கள் நதிக்கரைக்கு வந்தார்கள். இங்கு வெளிச்சம் நிறைந்திருந்தது. ஒரு பெரிய மரத்தின் கீழே இருவரும் அமர்ந்தார்கள். ஒரு ஃபிளாஸ்க்கிலிருந்து நீரை அருந்திவிட்டு ஜெப்ரிக்கு ஃபிளாஸ்க்கை கொடுத்தான் டேவிட். இருவரும் சற்று நேரம் ஒன்று பேசிக்கொள்ளவில்லை.

பிறகு டேவிட் ஜெப்ரியைப் பார்த்து கேட்டான், “இந்த வயதிலும் நீங்கள் ஏன் இது போன்ற ஆபத்தான முயற்சியில் ஈடுபடுகிறீர்கள்? உங்களுக்கு இல்லாத செல்வமா, புகழா? லண்டனில் பெரிய பங்களா, எஸ்செக்ஸ்ஸில் ஒரு கோட்டை. நீங்கள் இப்பொழுது ஒரு நைட்டாகி விட்டீர்கள். உங்களுக்கில்லாத அரசியல் செல்வாக்கா? நீங்கள் லண்டனில் ஹாயாக ஓய்வெடுக்கலாமே? எதற்கு இப்படி கஷ்டப்படுகிறீர்கள்?”

“ஹ்ம்ம். நீ இதை கேட்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நமக்குள் காடு இறங்கி பல வருடங்கள் ஆகிவிட்டன. நம்மால் நகரத்திற்கு செல்ல முடியாது. அங்கு சென்றுதான் என்ன செய்வோம். எனக்கு பெண்கள் மோகம் என்றோ தணிந்து விட்டது. அரசியலில் எனக்கு ஈடுபாடு இல்லை. பதவி, பட்டம் இதையெல்லாம் துச்சமாக மதிக்கிறேன். நமக்கு பட்டம் கொடுக்க யாருக்கு தகுதி இருக்கிறது? இடத்தை விட்டு நகராமல் அரசியல் செய்யும் ஆட்கள் நமக்கு பட்டம் கொடுக்க, நாம் அதை வாங்குவது வெட்கக்கேடு. லண்டன் சென்றால் என்ன செய்யலாம்? தினமும் ஒரு பார்ட்டி அல்லது பால் செல்லலாம். அங்கு சென்றால் என்ன நடக்கும்? எல்லோரும் நம்மைச் சூழ்ந்து கொண்டு நம்மிடம் கதை கேட்பார்கள். நாமும் நம் வீர சாகஸ கதைகளை சொல்ல வேண்டும். சொல்லி முடித்தவுடன், “ஜெப்ரி எவ்வளவு நன்றாக கதை சொல்கிறார்’ என்று பாராட்டுவார்கள். அதற்கு பிறகு ஒவ்வொரு பார்ட்டியிலும் நாம் கதை சொல்ல வேண்டும். நம்மை ஏதோ கூத்தாடி போல் நினைக்க ஆரம்பித்து விடுவார்கள். இவர்களை மகிழ்விப்பதே நம் வேலை போல் நினைத்துக் கொள்வார்கள். எல்லோரும் சூழ்ந்திருந்து கதை கேட்டு நம்மைப் பாராட்டும்போது நன்றாகதான் இருக்கும். ஆனால் பிறகுதான் தெரியும் அவர்கள் நம்மை ஒரு வேட்டைக்காரனாக பார்க்கவில்லை. நம்மை ஒரு கதைசொல்லியாக பார்க்கிறார்கள் என்று. டேனியல் போன்றவர்கள் சில வருடங்கள் காட்டில் இருந்துவிட்டு இப்பொழுது கதை சொல்வதையே வேலையாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பல பெண்கள் அவன் மேல் மோகம் கொண்டிருக்கிறார்கள். அவன் என்றோ கூத்தாடியாகிவிட்டான். நான் அப்படி மாறத் தயாராக இல்லை” என்று ஆவேசமாக முடித்தார்.

மறுபடியும் மௌனம் நிலவியது.

சமநிலைக்கு வந்தபின் ஜெப்ரி டேவிட்டை கேட்டார், “நீ லண்டன் சென்று விடலாமே? ஏன் இன்னும் இங்கு சுற்றுகிறாய்?” என்று.
டேவிட் சற்று நேரம் பதில் ஏதும் சொல்லாமல் உட்கார்ந்திருந்தான். பிறகு மெல்லிய குரலில், “என் மனைவியின் நிழல் என்னை இன்னும் துரத்துகிறது ஜெப்ரி. உங்களுக்கு நான் அவளை எவ்வளவு நேசித்தேன் என்பது தெரியும். அவளுடன் இருந்த அந்த மூன்று வருடங்கள் என்னால் மறக்க முடியவில்லை ஜெப்ரி. அவளை போல் என்னை நேசித்தவர்கள் யாரும் இல்லை. அவள் வேண்டாம் என்று சொல்லியும் நான் அவளை என்னுடன் காட்டிற்கு அழைத்து வந்தேன். அவள் சொல் கேட்டு லண்டனில் தங்கி இருக்க வேண்டும். அவள் என்னுடன் காட்டுக்கு வந்து, என்ன என்று தெரியாத கொடிய நோய் தாக்கி, அழுகி செத்தாள்.” டேவிட் கண்களில் கண்ணீர் துளிகள். “அவள் டேவிட் டேவிட் என்று முனகிக்கொண்டிருந்தது இன்னும் என் காதில் ரீங்கரிக்கிறது. எவ்வளவோ சாதனைகள் செய்த நான் அவளைக் காப்பாற்ற முடியாமல் தவித்தேன். இன்றும் தவித்துக் கொண்டிருக்கிறேன்”

மெல்லிய குரலில் ஜெப்ரி கேட்டார், “அவள் நினைவு உன்னை வாட்டுகிறது என்றால் அதே காடுகளில் எதை எதிர்பார்த்துச் சுற்றுகிறாய்?”

“மரணத்தை. இங்குதான் என் மரணம் இருக்கிறது. ஆனால் அன்று நான் இந்தப் பகுதிக்கு வந்து பார்த்தபோது என்னை பயம் கவ்விக்கொண்டது. மரணத்தை நான் வரவேற்பேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் ஆனால்…” திடீரென்று பேசுவதை நிறுத்திவிட்டு கண்களை அகல விரித்து அங்கு இங்கும் பார்க்கலானான் டேவிட்.

ஜெப்ரிக்கு ஒன்றும் புரியவில்லை. டேவிட்டைப் பார்த்து புருவங்களை உயர்த்தினார். டேவிட் பதில் சொல்லாமல் இங்கும் அங்கும் வெறி பிடித்தவன் போல் பார்த்துக்கொண்டிருந்தான். அப்பொழுதுதான் ஜெப்ரி அதை உணர்ந்தார்.

காடு நிசப்தமாக இருந்தது.

காட்டுக்குள் செல்பவர்களுக்கு தெரியும் காடு எப்பொழுதும் தூங்குவதில்லை, காடு எப்பொழுதும் நிசப்தமாக இருந்தது இல்லை என்று. ஆனால் இப்பொழுது விவரிக்க முடியாத அமைதி குடிகொண்டிருந்தது. ஓர் இலையும் அசையவில்லை. பட்சிகளின் குரல் இல்லை. பூச்சிகளின் ரீங்காரம் இல்லை. நதியின் சலசலப்பும் இல்லை.

சட்டென்று தன் துப்பாக்கியை எடுத்து வானை நோக்கிச் சுட்டார் ஜெப்ரி. அதன் எதிரொலி காடு முழுக்க கேட்டது. ஆனால் ஒரு பறவையும் மரத்தை விட்டுப் பறக்கவில்லை. எதிரொலி அடங்கியபின் மறுபடியும் மயான அமைதி.

ஜெப்ரி மரத்தின் கீழே நின்றிருக்க ரைஃபிலைக் கையில் ஏந்தி முன்னே சென்றான் டேவிட். நூறடி சென்ற பின்பு சட்டென்று நின்றான். அவன் முன் பச்சை நிறத்தில் புகை போன்ற ஒன்று தோன்றியது. அதை உருவம் என்று சொல்லமுடியாதபடி அதன் வடிவம் மாறிக்கொண்டே இருந்தது.

டேவிட் ரைஃபிலை உயர்த்தி அதைச் சுட தயாரானான். அப்பொழுது அவன் உடல் வெடித்தது. வெடிக்கும் சப்தம் எங்கும் நிரம்பியது. வெடித்துச் சிதறிய உடலிலிருந்து ஒரே ஒரு காது பறந்து வந்து ஜெப்ரியின் முன் விழுந்தது.

வாழ்க்கையில் முதல் முறையாக ஜெப்ரியின் மனதில் பீதி உண்டானது.

இதைப் போல் அவர் என்றும் பயந்ததில்லை. பல மிருகங்களை, பல காட்டுவாசிகளை ஒண்டிக்கு ஒண்டி சந்தித்தபோதும் அவர் பயந்ததில்லை. ஆனால் இப்பொழுது பயத்தில் அவர் கண்கள் விரிந்தன. பச்சைப் புகை தன்னை நோக்கி வருவதை கண்டார். தன்னையும் அறியாமல் அவர் கண்கள் விரிவதை உணர்ந்தார். ‘படக்’ என்ற ஓசையுடம் அவர் இரண்டு கண்களும் உடலை விட்டு வெளியே விழுந்தன.

இவர்கள் திரும்பி வருவார்கள் என்று நம்பி உட்காந்து கொண்டிருந்த ஜிம்முக்கு முன் கண்கள் இரண்டும் இல்லா ஜெப்ரியின் சவம் வந்து விழுந்தது. அதைப் பார்த்து கத்த ஆரம்பித்த ஜிம் பல மணி நேரம் நிறுத்தவில்லை. அவன் புத்தி பேதலித்தது.

பிணத்தை பார்த்த காட்டுவாசி பெண்கள் பலர் மூர்ச்சையானார்கள். பிணத்தை யாரும் தொடத் தயாராக இல்லாததால் அதன் மேல் விறகுகளைப் போட்டு பிணத்தை எரித்தார்கள்.

இனி அடுத்த பலி யார்?

(தொடரும்)

ஒளிப்பட உதவி – The Written Word