வெ. சுரேஷ்

நீர் நின்றன்ன – வெ சுரேஷ் சிறுகதை

“அப்பா கேபிள்ல நிறைய சானல்கள் வர்றதேயில்லை. நீங்க போய் அந்த கேபிள் ஆபிஸ்ல கேக்கறேன் கேக்கறேன்னுட்டு கேக்கவே இல்ல. இன்னிக்காவது கொஞ்சம் போய் கேட்டுட்டு வாங்கப்பா,” என்று பாதி கோரிக்கையாகவும் பாதி குற்றச்சாட்டாகவும் என் மகள் சொன்னபோது அந்த நாள் எனக்கு மிகவும் சங்கடமான நாளாக இருக்கப் போவதை நான் அறியவில்லை. “நாங்க போன் பண்ணிச் சொன்னா சரி சரிங்கறாங்க, ஆனா, அதே மாதிரிதான் இருக்கு’”.
“ஆமாம்மா மறந்து மறந்து போயிடறது, இன்னிக்கு ஒரு ஒன் டே மேட்ச் வேற இருக்கே… இரு, அந்த சானலாவது வருதா பாக்கறேன்,” என்று சொல்லிக் கொண்டே, அவசர அவசரமாக டிவியை ஆன் பண்ணி சோனி ஈஎஸ்பிஎன் சானலுக்குப் போனால், ஏதோ சப்ஸ்க்ரிப்ஷன் கட்டவில்லை, அதனால் வரவில்லை, என்று ஸ்க்ரால் ஓடிக் கொண்டிருந்தது. சரி, வேற வழியில்லை, இன்னிக்கு கேபிள் டிவி ஆபிசுக்கு நேரா போய்தான் பாக்கணும்.

டிபன் முடித்துவிட்டு, கேபிள் டி வி ஆபிசுக்குப் போய் மாடி ஏறும்போது வழியில் ஒரு முதியவர் தயங்கித் தயங்கி இறங்கி வந்து கொண்டே, “சார், இந்த கேபிள் டிவி ஆபிஸ்…” என்று இழுத்தார்.

”ஆமா சார், நானும் அதுக்குத்தான் வந்தேன்,” என்று சொல்லவும், அவர் முகத்தில் ஏமாற்றம். “ஓ, நீங்க கேபிள்காரர் இல்லையா…” என்று முனகினார். “என்னமோ தெரியல, நிறையச் சானல்கள் வரல, புகார் கொடுக்கலாம்னு வந்தேன்.”

“சரி மேல யாரும் இல்லையா?”

அவர் மெதுவான குரலில்,”யாருமே இல்லையே சார்,” என்று மீண்டும் முனகினார்.

யோசனையாக கீழே இறங்கினேன். மாடிப்படிக்கு பக்கத்திலேயே இன்னொரு ஹாலில் நாராயணன், கேபிள் பணம் வசூலிக்க வருபவர், இருந்தார். கொஞ்சம் நிம்மதியாக உள்ளே நுழைந்து, “பணம் கட்டின நிறைய சேனல் வரவேயில்ல நாராயணன், என்னனு பாக்கலாம்னு வந்தேன்,” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே அந்த பெரியவரும் தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்து அதையே சொன்னார்..

இரண்டு பேருக்கும் படிவங்களைக் கொடுத்து, “எதெது வரல்லன்னு டிக் பண்ணிக் குடுத்திடுறாங்க சார்,” என்றார் நாராயணன்.

கடகடவென்று டிக் பண்ணிக் கொடுத்து விட்டு, “எப்ப வரும்,” என்று கேட்டேன். “நீங்க வீட்டுக்குப் போறதுக்குள்ள சார்,” என்றார் நாராயணன். அடப்பாவி டெக்னாலஜி அவ்வளவு தூரம் வளர்ந்துச்சான்னு நினைத்துக் கொண்டே, சரி பாதி மேட்ச் ஆனும் பாத்துடலாம் என்று திரும்ப எத்தனித்தேன்.

பின்னாலிருந்து தீனமாக, சார், என்று ஒரு குரல். அந்த முதியவர்தான். “சார் எனக்கு ரொம்பக் குழப்பமா இருக்கு, எழுத்தும் ரொம்பப் பொடிப் பொடியா இருக்கு கண்ணுக்கே தெரியல, கொஞ்சம் ஹெல்ப் பண்றேளா?”

“ம்ம்… உங்களுக்கு என்ன சானல்ல்லாம் வேணுமோ அதைச் சொல்லுங்க சார்,” அவரிடமிருந்த படிவத்தை வாங்கினேன்.

“எனக்கு பழைய அந்த 100 ரூவா ஸ்கீமோட, சன், விஜய், இருந்தா போதும் சார், அது வர்ற மாதிரி பில் அப் பண்ணிக் குடுக்கறேளா அப்புறம் பணமும் கட்டணும்”

அதற்குண்டான பெட்டிகளை டிக் பண்ணினேன். நடுங்கும் விரல்களால் அவர் கையெழுத்திட்டவுடன் அவரிடமிருந்து பணத்தை வாங்கி நானே கட்டிவிட்டு, வெளியே வந்தேன். கூடவே அவரும் வந்தார். மேலும், தயங்கின ஒரு குரலில், “ஏன் சார் இந்த கிரிக்கெட் மேட்செல்லாம் இதுல வருமோ”

“இந்த விஜய் பேக்கேஜுல ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் வருங்கறாங்க சார். உறுதியா தெரியல,” என்று சொல்லிக்கொண்டே நிமிர்ந்து அவரைப் பார்த்தபோதுதான் எங்கேயோ பார்த்து பரிச்சயமான முகம் என்று தோன்றியது. நல்ல சிவந்த, படர்ந்த முகம், இந்த வயசுக்கு அடர்த்தியாக, ஆனால் வெள்ளை வெளேரென்ற நிறத்தில் தலைமுடி, நெற்றியில் நல்ல சிவப்பில் குங்குமப் பொட்டு. ரெண்டு நாள் தாடி, கண்ணைப் பெரிதாகக் காட்டும் தடித்த கண்ணாடி. அதற்குப் பின்னாலிருந்த கண்களில் குழப்பமும் தயக்கமும். காவியேறின வேட்டி, கொஞ்சம் அழுக்கான வெள்ளை அரைக்கை சட்டை. இதே கோலத்தில், பாவனையில் இவரை எங்கயோ பாத்திருக்கமே என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, ‘சார், உங்கள நான் எங்கயோ பாத்திருக்கேன்,” என்ற அவர் குரல் சிந்தனையைக் கலைத்தது.

“எனக்கும் அப்படிதான் தோணுது சார், நீங்க…?”

“என் பேரு ராமரத்னம்… இதோ இந்த ரோட்ட கிராஸ் பண்ணினா எதுக்க இருக்கே அதான் வீடு,” என்று சொல்லிக் கொண்டே மீண்டும் என்னைக் கூர்ந்து பார்க்கத் தொடங்கினார்.

“ம்ம்… நான் இங்கதான் கோவாப்பரேட்டிவ் காலனில இருக்கேன்,” என்றேன்.

“ஓ, அப்படியா சார், நான் அங்க வந்ததில்லை. நாங்க மொதல்ல டவுன்லதான் இருந்தோம். இப்பதான் ரெண்டு வருஷமா இங்கே குடியிருக்கோம்.. ஆனா உங்கள எங்கயோ பாத்திருக்கேன் முகம் ரொம்ப பரிச்சயமானதா இருக்கு…” என்று மீண்டும் என் முகத்திலேயே தன் பார்வையை நிறுத்தினார். எனக்கும் குழப்பம். இந்தக் குரல், இந்த தயங்கித் தயங்கிப் பேசும் விதம், முகத்தில் இருக்கும் ஒரு பரிதாபக் களை, எங்கே பார்த்திருக்கிறேன்?

அதற்குள் நாராயணன் அவரை கூப்பிட, “சார், இதோ ஒரு நிமிஷம், வந்துடறேன், இங்கயே இருங்க,” என்று சொல்லிக்கொண்டே திரும்பி உள்ளே நடந்தார். அந்த நடையில் சட்டென்று கன்னத்தில் ஒரு அறை விழுந்தாற்போல நினைவுக்கு வந்துவிட்டது அவர் யாரென்று. ஒரு கணத்தில் அப்படியே சட்டென்று வியர்த்துப் போய் ஸ்தம்பித்து நின்றேன். ஆமாம், அவரேதான், அதே முகம், அதே குழப்பமும், தயக்கமும் நிறைந்த கண்கள், இறைஞ்சும் குரல். அவை இவரின் நிரந்தர முகபாவமா, இல்லை, நாங்கள் சந்தித்துக் கொண்ட அந்த சந்தர்ப்பத்தில் வந்து அவருடன் ஒட்டிக் கொண்டதா?

ஐயோ… என்னவொரு சந்தர்ப்பம், அசந்தர்ப்பம் என்று சொல்ல வேண்டும். ஆம், 2008ம் ஆண்டு ஆகஸ்ட்டு இறுதியில் நாங்கள் சந்தித்திருக்கிறோம். இந்த பதினோரு ஆண்டுகளில் மேலும் தளர்ந்து போயிருக்கிறார். கண்களின் அந்தத் குழப்பமும் தயக்கமும் மேலும் அதிகரித்திருக்கிறது. அப்போதே 70க்கும் மேல் இருக்கும். இப்போது 80க்கும் மேல், அன்று நடந்ததற்குப் பின் இவர் உயிரோடு இருப்பதே பெரிது. இவர் இன்னும் அதிக நாள் தாங்க மாட்டார் என்றே அப்போது நினைத்தேன். இன்னுமா இருக்கிறார் என்று திகைப்புடன் அவர் போவதைப் பார்க்கும்போதே அந்த நடை, அவரை முதன் முதலாக பொள்ளாச்சி விருந்தினர் மாளிகைக்குள் அழைத்துப்போனதை நினைவுபடுத்தியது.

“ரமேஷ், சங்கரோட அப்பா, அம்மா, அக்கா, அவங்க ஹஸ்பண்ட், நாலு பேரும் இப்பதான் பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டு கிட்ட வந்திருக்காங்கன்னு போன் வந்திருக்கு, நீயும் மூர்த்தியும் உடனே போய் அவங்கள பாத்து பொள்ளாச்சி ஐபிக்குக் கூட்டிட்டு வந்துருங்க, சிவப்பு கலர் ஆல்டோ கார். நாங்க இப்பதான் சுல்தான்பேட்டையை நெருங்கிட்டிருக்கோம். இன்னும் சங்கரோட பாடி கிடைக்கல. இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்னும் தெரியல. அவங்கள அங்கேயே தங்கவும் வெக்க ஏற்பாடு பண்ணிருங்க… அதுல பிரச்னையிருக்காது, எஸ்ஈகிட்ட ஏற்கனவே ரூம்ஸுக்கு சொல்லியாச்சு என்ன ஓகேவா?“ மறுத்துப் பேச முடியாத கண்டிப்பில் நண்பர் பாண்டியனின் குரல் கட்டளையாக ஒலித்தது. நான் மூர்த்தியைப் பார்த்தேன். பாண்டியன் என்ன சொன்னார் என்று அவருக்கும் புரிந்திருக்க வேண்டும். ம்ம் சரி, என்று முனகிவிட்டு போனை கட் செய்தேன். பஸ் ஸ்டாண்டுக்கு கிளம்பினோம்.

‘சங்கரோட பாடி’ அந்த வார்த்தை இப்போது மிகக் கடுமையாக ஒலித்தது. நேற்று பின்னிரவு வரை கூட நாங்கள் அப்படி சொல்லத் துணியவில்லை, ஆனால் இப்போது நண்பர்கள் எல்லோருக்குமே வேறு எப்படியும் சொல்ல முடியாமல் போய்விட்டது. நண்பர்கள் என்றால் இங்கே என்னுடன் இருக்கும் மூர்த்தியையும் பாண்டியனோடு போயிருக்கும் ப்ரகாஷையும் தவிர மற்றவர்கள், சென்னையிலிருந்து வந்தவர்கள்- சங்கர், பாண்டியன், கதிர், சந்துரு, மற்றும் பிரசாத் ஆகியோர்.

முந்தா நாள் சென்னையிலிருந்து நீலகிரி எக்ஸ்பிரஸில் கிளம்பி நேற்று அதிகாலை திருப்பூரில் இறங்கி வேன் வைத்துக் கொண்டு உடுமலைப்பேட்டையில் இருக்கும் கதிரின் வீட்டுக்குப் போய் விட்டு முற்பகலில் கிளம்பி டாப்ஸ்லிப், அதனைத் தொடர்ந்து பரம்பிக்குளம் என்று போவதாக ஒரு திட்டம். இரவுத் தங்கலுக்கு பரம்பிக்குளத்தில் விருந்தினர் மாளிகையில் ஏற்பாடாகியிருந்தது போல. கதிரின் வீட்டுக்குச் சென்று சேருவது வரை எந்தப் பிசகும் நேரவில்லை. தவறு நேர்ந்தது உடுமலை போகும் வழியில், கெடிமேடு வாய்க்காலைப் பார்த்ததில்தான். பரம்பிக்குளம் ஆழியாறு ப்ராஜெக்ட்டின் பிரதான கால்வாய் அது. பிஎம்சி என்பார்கள். இவர்கள் கிளம்புவதற்கு முந்தைய நாள்தான் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டிருக்கிறார்கள். கால்வாய் நிரம்பி ஓடிக்கொண்டிருக்கிறது. கால்வாயைப் பார்த்தவுடன், கதிர் வீட்டுக்குப் போய் குளித்துவிட்டு டாப்ஸ்லிப் கிளம்ப இருந்த திட்டத்தைச் சற்றே மாற்றி கதிர் வீட்டிலிருந்து கால்வாய்க்கு வந்து அங்கே குளித்து விட்டு மீண்டும் கதிர் வீட்டுக்கே சென்று டிபன் சாப்பிட்ட பின்னர் கிளம்புவதாக மாற்றியிருக்கிறார்கள். கதிரின் அம்மா, “இப்பதான் டேம் திறந்து விட்ருக்காங்கப்பா, புதுக் தண்ணி உடம்புக்கு ஆகாது. மழை வேற வர மாதிரி இருக்கு, வூட்டிலயே வெந்நீர் போட்டுத் தரேன். குளிச்சி டிப்பன் சாப்டுட்டு கெளம்பிருங்க,” என்று சொல்லியும் கேட்காமல் கால்வாய்க்கு குளிக்க வந்திருக்கிறார்கள்.

கெடிமேடு- உடுமலை ரோட்டில் கால்வாய் குறுக்கிடும் இடத்துக்கு அருகில் எப்போதும் லாரிகளும் வேறு வாகனங்களும் கழுவிக் கொண்டிருப்பார்கள். எனவே கால்வாய் ஓரமாகவே சற்று தெற்கே உள்ளே போய் ஒரு தென்னந்தோப்புக்கு அருகில் குளிப்பது என்று தீர்மானித்துப் போயிருக்கிறார்கள். எல்லோருமே நீச்சல் தெரிந்தவர்கள்தான். கால்வாயின் தண்ணீர் வேகத்தையும் ஓரளவுக்கு ஊகித்து, கால்வாயின் இரண்டு கரைகளுக்குமாக கம்பத்தில் கயிற்றைக் கட்டிக்கொண்டுதான் இறங்கி குளிக்க இறங்கியிருக்கிறார்கள். கதிர், சந்துரு, பாண்டியன், பிரசாத் எல்லாம் ஒரு புறம் குளித்துக் கொண்டிருக்க, இருப்பதிலேயே இளையவனும் அபாரமான வாலிபால் விளையாட்டு வீரனுமான சங்கர் மட்டும் ஒருமுறை கால்வாயில் குதித்துக் குறுக்காக நீந்தி மறுகரையில் ஏறி அங்கிருந்து ஒரு தாவு தாவி உள்ளே குதித்து இவர்கள் பக்கம் வந்திருக்கிறான்.

இந்த இடத்தில் தான் என்ன நடந்தது என்று இவர்களால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. உள்ளே குதித்த சங்கரிடம் தண்ணீரைத் தொட்ட சில கணங்களுக்குப் பின் ஏதோ தடுமாற்றமும் நீந்துவதற்கு சற்றே திணறலுமிருந்ததை பாண்டியன் கவனித்திருக்கிறான். சங்கர் மல்லாந்து நீந்த முயல்கிறானா அல்லது கால்வாயின் நீரோடு மிதந்து அடித்துச் செல்லப்படுகின்றானா என்ற குழப்பத்துடன் அவனுக்கு எதிரே சென்று கைகளை விரித்து தடுக்க முயன்றிருக்கிறான். ஆனால், அவன் கைகளில் பட்டு கைகளின் அடியே வழுக்கிக் கொண்டு போய்விட்டான் சங்கர். இவர்கள் அங்கே போயிருந்த அந்த 9-9.30 மணிக்கு இவர்களின் கூக்குரலை கேட்க தோப்பின் அருகில் யாருமே இருக்கவுமில்லை. கத்திக்கொண்டே கெடிமேடு உடுமலை சாலை சந்திப்பு வரை ஓடியிருக்கிறார்கள். ஆனால், அதன் பின் சங்கரை அவர்கள் பார்க்கவேயில்லை. ஒரு மணி நேரத்துக்குப் பின் பொள்ளாச்சி பொதுப்பணித் துறையிலிருந்த நண்பர் பிரகாஷுக்கு விஷயத்தைச் சொல்ல, அவர் அங்கே இருக்கும் பொறியாளர்களிடமும் லஸ்கர் எனப்படும் களப்பணியாளர்களுக்கும் சொல்ல, தேடுதல் வேட்டை தொடங்கியிருக்கிறது. மதியமே பிரகாஷ், மூர்த்திக்கும் எனக்கும் செய்தி வரவும் நாங்கள் ஈரோட்டிலிருந்தும் கோவையிலிருந்தும் மாலைக்குள் பொள்ளாச்சி வந்து சேர்ந்தோம்.

சங்கர், சங்கர்ராமன் கோவையைச் சேர்ந்தவன்தான் என்றாலும் எனக்கு அவ்வளவு பழக்கமில்லை. கடந்த பதினைந்து ஆண்டுகளாகவே நான் தலைமையகத்தில் இருந்ததைவிட வெளியே அயல்பணியில் இருந்ததே அதிகம். இவன் அங்கே சேர்ந்து ஐந்தாறு வருடங்கள்தான் ஆகியிருக்கும். இரண்டு மூன்று முறை நான் அங்கே போனபோது இந்த நண்பர்களோடு பார்த்திருக்கிறேன். அவனது உயரத்துக்கும் ஆகிருதிக்கும் சம்பந்தமில்லாமல் ரொம்ப அடக்கமாக இருப்பான். மிக மென்மையாகவே பேசுவான். பெரும்பாலும் பேசவே மாட்டான். எனக்கும் கோவை என்பதால் ஒரு சந்திப்பில் சற்று இணக்கம் கூடி குடும்ப விவரங்களை சுருக்கமாக சொல்லியிருக்கிறான். கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில்தான் பூர்வீக வீடு. ஆனால், சென்னையில் வேலைக்கு வந்தபின் வயதான பெற்றோரையும் அழைத்துக் கொண்டு வந்துவிட்டான். அவனது ஒரே அக்காவின் குடும்பம் ஏற்கனவே சென்னையில்தான். இவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதும் தெரியும். வயதும் 27, 28தான் இருக்கும்.

நேரம் ஆக ஆக எல்லோருடைய நம்பிக்கையும் குறைந்து கொண்டே வந்தது. இருட்டில் இனியும் தேடுவது முடியாது என்ற நிலையில் நாங்கள் அனைவரும் பொள்ளாச்சி ஆய்வு மாளிகைக்கு வந்து சோர்ந்து உட்கார்ந்திருதோம். ஆனால் மாலை 5.30 மணிக்கே அங்கிருந்த களப்பணியாளர்கள், “சார் இதுவரைக்கும் கண்டு பிடிக்க முடியலன்னா இனி சுல்தான்பேட்டை சைப்பன்லதான் பாடி கிடைக்க சான்சு,” என்றார்கள். ‘பாடி’ என்ற சொல் எல்லோரையும் நிலைகுலைய வைத்து விட்டது. ஆனால், அவர்கள் இம்மாதிரி எத்தனையோ பார்த்தவர்கள். என்ன நடக்கும் என்று அறிந்தவர்கள். “வேற வழியில்லை சார், காலைல செய்தி வரும் பாருங்க,” என்று சொல்லிவிட்டு சுல்தான்பேட்டையிலிருந்த ஆட்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டுப் போய்விட்டனர். பொறியாளர்கள் அனைவருமே அவர்கள் சொன்ன மாதிரிதான் நடக்கும், வேறு வாய்ப்பில்லை என்றார்கள்.

இதற்கிடையே, ஊருக்குப் போன மகன் போன் பண்ணவில்லை என்று சங்கரின் அப்பா பாண்டியனின் செல்லுக்கு ஐந்தாறு முறை அழைத்துவிட்டார். அங்கே இருந்தவர்களில் பாண்டியன்தான் சங்கருக்கு மிகவும் நெருக்கம். அவரால் என்ன பதில் சொல்வது என்றே தீர்மானிக்க முடியவில்லை. ஒவ்வொரு முறையும் என்னென்னவோ சொல்லி சமாளித்திருக்கிறார். ஆனால், களப்பணியாளர்களும், பொறியாளர்களும் இப்படி சொன்னதற்குப் பின் மாலை 7 மணியளவில், சங்கரின் அக்கா கணவரை அழைத்து, இங்கே சங்கரை கொஞ்ச நேரமாக காணவில்லை, தேடிட்டிருக்கோம், முடிஞ்சா நீங்க மட்டும் கொஞ்சம் இப்பவே கிளம்பி பொள்ளாச்சி வந்துருங்க, என்று சொன்னார். பின் திரும்பி எங்களிடம், “இவருக்கே கொஞ்சம் பத்தாது, ஆனால் சங்கருக்கு அண்ணன் தம்பி யாரும் இல்ல, அப்பாகிட்டயும் சொல்லவே முடியாது, வேற வழியில்லாமதான் இவருகிட்ட சொன்னேன், என்ன பண்ணப் போறாரோ,” என்று பரிதாபமாகச் சொன்னார்.

ஒன்றும் செய்வதற்கில்லை. இனி விடியற்காலையில்தான் தேடுதலைத் தொடங்கவும் முடியும். சென்னையிலிருந்து வந்தவர்களும் நாங்கள் உள்ளூர்க்காரர்களும், ஆளாளுக்கு ஒன்றைச் சொல்லி அரற்றியபடியே இரவைக் கழித்தோம். மறுநாள் காலை 7 மணிக்கே, பிரகாஷ் ஏற்பாடு செய்திருந்த ஜீப்பில் ஏறி அவரும் கதிரும் பாண்டியனும் சுல்தான்பேட்டைக்கு புறப்பட்டனர். அப்போதுதான் அவருக்கு சங்கரின் அக்கா கணவரிடமிருந்து போன் வந்திருக்க வேண்டும். தொடர்ந்து என்னிடம் கூப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.

பாண்டியன் பயந்தபடியே சங்கரின் அக்கா கணவர் சொதப்பிவிட்டார். சங்கரின் அம்மா அப்பாவிடமும் விஷயத்தைச் சொல்லி அவர்களையும் அழைத்து வந்து விட்டார். இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்கள் கலக்கம் கூடியது. பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் அருகே காரில் இருந்த சங்கரின் அம்மாவையும் அப்பாவையும் பார்த்தவுடன் அந்தக் கலக்கம் பன்மடங்கு அதிகமாகிவிட்டது. அந்த முகங்களில் இருந்த பேதைமையும் நம்பிக்கையும் எங்களை வாயடைக்க வைத்தது. ஒன்றும் பேசாமல் ஐ.பிக்கு கூட்டிச் சென்றோம். சங்கர் அங்க இருக்கானா, என்ற முதியவரின் கேள்விக்கு ஒருவரும் பதில் சொல்லவில்லை. ஐ.பிக்குச் சென்று அறைகளுக்குள் அனுப்பி, ரெப்ரெஷ் செஞ்சுட்டு வாங்க சார், காபி டிபன் சாப்பிடலாம், என்று சொல்லிவிட்டு வெளியே உட்கார்ந்து கொண்டோம். சங்கரின் அம்மாவையம் அக்காவையும் பார்க்கவே துணிவில்லை.

சங்கரின் அப்பா எதையோ ஊகித்திருக்க வேண்டும். உள்ளே போனவர் மெதுவாக வெளியே வந்து, “சார் நான் சங்கர்கிட்ட இந்த ட்ரிப்பே போக வேணாம்னேன். கல்யாணத்துக்கு ஜாதகம் எடுக்கலாம்னு ஜோசியர்ட்ட இவன் ஜாதகத்தை கொண்டு போனப்ப அவரென்னவோ அத ரொம்ப நேரம் பாத்துட்டு, நீங்க இந்த ஜாதகத்தை அடுத்த மாசம் ஒண்ணாந் தேதிக்கு அப்பறம் கொண்டு வாங்க அப்ப பாத்துக்கலாம். இப்ப வேணாம்னு சொல்லிட்டார். அதுலேருந்து ஏனோ எனக்கும் மனசே சரியில்லே. இந்த வெளியூர்ப் பயணம்லாம் வேண்டாம்டான்னேன். என்னவோ அப்பறம் ஏதோ ஆபிஸ் எக்ஸ்சாம்லாம் வருது. படிக்க உக்காந்துட்டா எங்கயும் போக முடியாது, இந்த ஒரு தடவை ரெண்டுநாள்தானே போயிட்டு வந்துடறேன்னான். இவரு, பாண்டியனும் நாங்க பாத்துக்கறோம் சார், அனுப்புங்கன்னார். கடவுள் மேல பாரத்தைப் போட்டுட்டு அனுப்பிச்சு வெச்சோம். ஒன்னும் பிரச்னையில்லயே,” என்று மென்று முழுங்கிக் கேட்டார். எதையோ சொல்லி சமாளித்து மீண்டும் உள்ளே அனுப்பி வைத்தோம்.

அவர்கள் வெளியே வருவதற்குள் பாண்டியனின் அழைப்பு வந்துவிட்டது. எதிர்பார்த்தபடியே இவர்கள் போவதற்கும் சங்கரின் உடல் சுல்தான்பேட்டை சைப்பனில் கிடைப்பதற்கும் சரியாக இருந்திருக்கிறது. பாண்டியன் போனிலேயே கதறி விட்டார். என்னால் அவருக்கு ஒரு பதிலும் சொல்ல முடியவில்லை. அவருக்கு.அவரே சற்றுத் தேற்றிக் கொண்டு, “பொள்ளாச்சி மருத்துவமனைக்குத்தான் கொண்டு வந்தாக வேண்டும், போஸ்ட் மார்ட்டம் பண்ணாம முடியாது, கூடுமான வரைக்கும் பாடிய ரொம்ப சேதப்படுத்தாம பாத்துக்கலாம்னு நம்ம இன்ஜினீர்செல்லாம் சொல்லிருக்காங்க, நீங்க இப்போதைக்கு அவங்ககிட்ட எதையும் சொல்ல வேண்டாம், அப்புறம் பாத்துக்கலாம்,” என்று சொல்லி போனை வைத்தார்.

பொள்ளாச்சி மருத்துவமனைக்குள் எடுத்து செல்லப்படும் முன்னர் சங்கரின் உடலைச் சில கணங்கள் மட்டுமே பார்த்தேன். நல்ல ஆஜானுபாகுவான உடல், ஒரு விளையாட்டு வீரனின் உடல், நீருக்குள் இருந்ததால் உப்பிப் பெருத்து இன்னும் பெரியதாக இருந்தது. கண்கள் இருந்த இடததில் பள்ளங்கள். மீன்கள் கடித்துத் தின்றிருக்கும் என்றார்கள் அங்கிருந்தவர்கள். அதற்கு மேல் பார்க்க முடியாமல் ஓடி வந்துவிட்டேன். அதற்குப்பின் நடந்ததெல்லாம் கனவு போல இருந்தது. எப்படி அவர்களிடம் விஷயத்தைச் சொன்னோம், எப்படி சங்கரின் உடலை தகனம் செய்தோம், .எப்படி அவர்களை ஊருக்கு அனுப்பினோம் என்று இப்போதும் என்னால் முழுமையாக நினைவுக்கு கொண்டு வர முடியவில்லை.

சங்கரின் அப்பா, “சார், நாங்க முன்னாடி போறோம் நீங்க சங்கரைக் கூட்டிண்டு வந்துருங்கோ,” என்று எங்கள் ஒவ்வொருவரிடமும் திருப்பித் திருப்பி சொல்லிக் கொண்டிருந்தார். சங்கரின் அம்மா விஷயத்தைச் சொன்ன மறுகணம் மயங்கி விழுந்தவர், பின் அதிலிருந்து மீண்டு ஊர் திரும்பும் வரை ஒன்றுமே பேசவில்லை. ஆனால், அவர் எங்களை அனைவரையும் பார்த்த பார்வையில் இருந்தது என்ன என்றுதான் இனம் கண்டு கொள்ளவே முடியவில்லை. அது குற்றச்சாட்டா இறைஞ்சலா என்று ரொம்ப நாள் குழம்பிக் கொண்டிருந்தேன்.

ஆனால் பதினொரு ஆண்டுகள் என்பது நீண்ட காலம்தான் போல. இவரையா, சங்கரின் அப்பாவையா நான் அடையாளம் தெரிந்து கொள்ளவில்லை, என்று மனம் நொந்து கொண்டது. அந்தச் சம்பவங்களின்போது மனதில் தோன்றிய இனம்புரியாத குற்றவுணர்வு மீண்டும் குடையத் தொடங்கியது. சங்கரின் அம்மாவின் பார்வை மீண்டும் மனதில் எழுந்தது. கூடவே இவருக்கு என்னை அடையாளம் தெரியாதது சற்றே ஆறுதலாகவும் இருந்தது.

இந்த எண்ணவோட்டங்களை, ‘சார் உங்களுக்கு சிரமமா இல்லேன்னா என்னைக் கொஞ்சம் இந்த ரோட்ட கிராஸ் பண்ணி எதிர்க்க ஆத்துல விட்டுர்றேளா,” என்ற அவரின் குரல் அறுத்தது. வேறு வழியில்லை. இதைக்கூட செய்யாவிட்டால் எப்படி என்று மெதுவாக அவரை அழைத்துக் கொண்டு ரோட்டைக் கடந்து வீட்டு வாசலில் விட்டேன். திரும்பலாம் என்று நினைக்கும்போதே, “சார் உள்ள வந்து ஒரு வாய் காப்பி சாப்பிட்டுட்டு போங்க சார்,” என்று சொல்லத் தொடங்கினார். அதற்குள் வீட்டிற்குள்ளிருந்து, “இதே வேலையாப் போச்சு உங்களுக்கு, சொல்லிட்டுப் போனாத்தான் என்ன, எங்கயாவது விழுந்து வெச்சா உங்க மகளுக்கு நான்தானே பதில் சொல்லணும்?” என்று காட்டமாக ஒரு பெண் குரல் ஒலித்தது.

அதற்குள் அவர் பின்னால் நான் வீட்டின் முன்னறைக்குள் நுழைந்திருந்தேன். உள்ளே ஏதோ ஒரு ஒவ்வாத வாடை அடித்தது. என்னவென்று பார்க்கும்போதே பக்கவாட்டு அறையில், கட்டிலில் ஒரு முதிய பெண்ணுருவம் படுத்திருந்தது தெரிந்தது. அவர் கத்தியிருக்க முடியாதே என்று நினைக்கும்போதே உள்ளறையிலிருந்து எளிய தோற்றத்திலிருந்து ஒரு பெண்மணி வந்தார். என்னைப் பார்த்ததும் அவரது முகபாவம் மாறியது.

“இதுதான் லட்சுமி, எங்கள பாத்துக்கறா, எம் பொண்ணு இங்கிருந்து நாலு மைல் தள்ளி இருக்கா, ரெண்டு நாளைக்கொரு தரம் பாக்க வருவா,” என்றார் பெரியவர்.

அதற்குள் அந்த லட்சுமி, “தெரிஞ்சவாளா சார், கொஞ்சம் சொல்லிட்டு போங்கோ! இப்படி சொல்லாம கொள்ளாம வெளில போயிடறார், ஏதாவது ஆச்சுன்னா நான் அவர் மகளுக்கு என்ன பதில் சொல்லறது? நான் படுத்துருக்கற அந்த மாமியோட பீ மூத்தரம் அள்ளுவனா, சமயலப் பாப்பனா, மத்த வீட்டு வேலைய கவனிப்பனா? இல்ல, இவரையே பாத்துண்டிருப்பனா? என்னதான் கைய நீட்டிக் காசை வாங்கினாலும் இவ்வளவு வேலையை ஒண்டிமா எப்படி சார் செய்யறது. சொல்லுங்கோ,” என்று பொரிந்து தள்ளிவிட்டார்.

பெரியவர் முகத்தில் இப்போது ஒரு அசட்டுக் களை வந்திருந்தது. வாயே திறக்கவில்லை. என் பார்வை அந்தத் ரூம் பக்கம் போவதைப் பார்த்து மெல்லச் சொன்னார், “என் வைஃப்தான் சார், இப்ப ஒரு நாலு வருஷமா படுத்த படுக்கையாயிட்டா, எல்லாம் பெட்லதான். பாவம், இந்த லட்சுமிதான் எல்லாம் செய்யறா. நல்லவா சார். என்ன, அப்பப்ப என்னைக் கொஞ்சம் திட்டுவா,” என்று சொல்லி குழந்தை மாதிரி சிரித்தார்.

என் கவனம் உள்ளே படுக்கையிலிருந்த பெண்மணியின் மேலே இருந்தது. இப்போது அவர் சற்றே திரும்பி ஒருக்களித்து எங்களைப் பார்க்கத் தொடங்கியிருந்தார்.

பெரியவர், “லட்சுமி, சாருக்கு ஒரு தம்பளர் காபி போடு, அப்படியே எனக்கு அரை தம்பளர் குடு,” என்று சொல்லிக் கொண்டிருந்தார். லட்சுமி முணுமுணுப்புடன் உள்ளே போக, நான் அவசர அவசரமாக, “இல்ல சார், நான் காபி டீ குடிக்க மாட்டேன். அப்பறம் ஒரு வேலையிருக்கு உடனே போகணும்,” என்றேன்.

வாய் இதைச் சொல்லிக் கொண்டிருந்தாலும், கண்கள் அந்த அறையில் படுத்திருந்த சங்கரின் அம்மாவையேதான் பார்த்துக் கொண்டிருந்தன.. அப்போது சட்டென்று அவரும் என்னை பார்த்தார். ஒரு கணம் என் கண்களை சந்தித்தது அவரின் கண்கள். என்னவோ சொல்ல எத்தனிக்க, வாய் கோணத் தொடங்கியது, கொஞ்சம் இனம் புரியாத சத்தங்கள் வந்தன. பெரியவர், “சார், அவ உங்களப் பாத்துதான் ஏதோ சொல்ல ட்ரை பண்றா,” என்றார்.

பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அந்த முதிய கண்கள் அப்போது பெற்ற கூர்மை என் வயிற்றிலிருந்து ஒரு சங்கடத்தைக் கிளப்பி நெஞ்சை லேசாக அடைத்தது. அர்த்தமற்ற ஒலிகள் இப்போது சற்றே தெளிவடையத் தொடங்கின. என்னை மிகக் கூர்மையாக பார்த்தபடி, மிகத் தெளிவாக அவர் சொன்ன, “பொள்ளாச்சி, பொள்ளாச்சி,” என்ற சொற்கள் என் காதைக் கிழித்தன. அடுத்த கணம் நான் அந்த வீட்டிலிருந்து வெளியேறி ஒரு கணத்தில் ரோட்டைக் கிராஸ் செய்து வண்டியை அடைந்து உதைத்துக் கிளம்பினேன்.

பின்னர் இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் அந்தப் பக்கம் போனபோது அந்த வீட்டில் ஏதோ விசேஷம் போல ஒரு சிலர் வெளியே போவதும் வருவதுமாக இருந்தார்கள். எனக்கு ஏதோ புரிந்தது போலிருந்தது. வெளியே வந்த ஒருவரின் பின்னால் தொடர்ந்து சென்று மெதுவாக, “சார், அந்தத் வீட்ல என்ன சார்?” என்று தயங்கியபடியே கேட்டேன். உனக்கென்ன அதில், என்ற தொனியில் எற இறங்கப் பார்த்தாலும், “ஒரு டெத்து சார், காரியம்லாம் முடிஞ்சு இன்னிக்கு 13ம் நாள் கிரேக்கியம்,” என்றார்.

“அடடா முடியாம படுத்திருந்தாங்களே அந்த அம்மாவா?”

”அந்தக் கொடுமையை ஏன் சார் கேக்கறீங்க? அப்படியாவது நடந்திருக்கலாம். அவங்க ஆத்துக்காரர், எனக்கு சித்தப்பா முறை, அவர் போயிட்டாரு சார், திடீர்னு,” என்றார். நான் எதுவும் பதில் சொல்வதற்கு முன், “சார் அதோ பஸ்ஸு வந்துடுத்து,” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று நடந்து சென்று விட்டார். நானும் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தேனே தவிர எவ்வளவு நேரமான பின்னும் என்னால் உள்ளே போக முடியவில்லை.

சேவல் களம்- வெ.சுரேஷ் குறிப்பு

சேவல் களம்”பாலகுமார் விஜயராமன்.

எல்லோருக்கும் சொல்வதற்கு ஒரு கதையாவது உண்டு. ஆனால் (நல்ல வேளையாக ) எல்லோரும் எழுத்தாளர்களாகிவிடுவதில்லை,” என்று சுஜாதா தன்னுடைய ஒரு கட்டுரையில் குறிப்பிடுவார். அண்மையில்கூட ஓவியர் ஜீவா இதே போல ஒரு வரியை சொல்லியிருந்தார். எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்!!

நம்முடைய வாழ்க்கை அனுபவங்கள் எல்லாமே நமக்கு சுவாரசியமாக, சுவையாகத்தான் தெரியும். ஆனால் அவற்றை பதிவு செய்யும்போது பிறருக்கும் சுவாரசியமாகவும், சுவையாகவும் தோன்ற வேண்டுமென்றால், ஒருவர் அதுவரை எழுத்தில் பதிவாகாத ஒரு மாற்று வாழ்வை விவரிக்க வேண்டும். அல்லதுஏற்கனவே அவ்வாறு அறியப்பட்ட வாழ்வின் ஒரு புதிய கோணத்தை வெளிப்படுத்த வேண்டும். அப்படியுமில்லாமல், ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட கதைக்களமாக இருந்தாலும்கூட, அந்த வாழ்வின் சில பகுதிகளிலாவது புதிய வெளிச்சத்தைப் பாய்ச்ச வேண்டும். இது போன்ற கூறுகள்தான் டயரிக் குறிப்புகளை இலக்கியமாக மாற்றுகின்றன.

அண்மையில், பாலகுமார் விஜயராமன் அவர்கள் எழுதிய சேவல் களம் (சேவற்களம் என்பதுதானே சரி?) நாவலை படித்தபோது, மேலே சொன்ன உணர்வைத்தான் நான் அடைந்தேன். நாவல், மூன்று திரிகளாக பிரித்து சொல்லப்பட்டு இறுதியில் இணைகிறது. ஒன்று, சேவல் சண்டையும் அதன் சித்திரமும். இரண்டு, அதன் நாயகரான ராமர் மற்றும் அவரது பிள்ளைகளின் வாழ்க்கை, மூன்றாவதாக ராமரின் தங்கை ஆண்டாள் மற்றும் அவரது பிள்ளைகளின் வாழ்க்கை.

முதல் திரி, இதுவரை தமிழ்ப் புனைவின் பரப்பில் அதிகம் சொல்லப்படாத சேவல் கட்டு எனும் ஒரு விஷயத்தை தனது பேசுபொருளாக எடுத்துக் கொண்டதில் ஒரு புதுமை இருக்கிறது.சேவல் சண்டையை,சேவல்களின் பல்வேறு வகைகளை, சண்டைக்கான முன் தயாரிப்புகளை, சண்டைக்கு இடையே சேவல்களுக்கு செய்யப்படும் சிகிச்சை முறைகளை, எழுதியிருப்பது எல்லாம் மிக சுவாரஸ்யமாகவே இருக்கிறது. அதில் இருக்கும் ஒரு சரளத்தன்மை வாசிப்பை லகுவாக்கவும் செய்கிறது. அந்த விளையாட்டின் நுட்பங்களை அறியாத வாசகனுக்கு இது இயல்பாகவே ஒரு நல்ல சுவாரசியமான சித்திரத்தைத் தருகிறது. இந்தத் திரியின் கிளைமாக்ஸ் போல வரும் ராமர் பார்ட்டியின் உள்நாட்டு சாம்பல் வளவி சேவலுக்கும் ஹைதராபாத் பார்ட்டியின், நூரி வெள்ளைச் சேவலுக்குமான போட்டி மிக நன்றாக விவரிக்கப்பட்டிருக்கிறது. சேவல்களின் இயல்பான அறிவுக் கூர்மை, ஆபத்திலிருந்து தப்பும் வழிகள், தாக்குதல் முறைகள் எல்லாம் படிக்க சுவாரசியமாக இருக்கின்றன.

ஆனால், இந்த நாவலின் மற்ற இரண்டு திரிகளில் சொல்லப்படும் ராமரின் குடும்ப வாழ்க்கை மற்றும் அவரது தங்கையின் குடும்பத்தினர் வாழ்க்கை மிகச் சாதாரணமாக இருக்கிறது. உண்மையில் தீவிர இலக்கிய பரப்பில் இம்மாதிரியான எழுத்துக்கு என்ன இடம் என்றுதான் கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. எல்லோரும் நல்லவராக விளங்கும் இந்த விக்ரமன் சினிமா பாணி கதையில் ராமரின் இரண்டாவது பிள்ளை கம்ப்யூட்டர் விற்பன்னராக வந்து சில வில்லத்தனங்களை செய்கிறான். அதுவும் அப்படியே விட்டுப்போய்விடுகிறது. இதெல்லாம் அந்தக் கால, ராணி முத்து, மாலை மதி போன்ற புத்தகங்களில் வரும் ஒரு கதை போலத்தான் இருக்கிறது. முன்னுரை எழுதியுள்ள பெருமாள் முருகன் இதையே வேறு வார்த்தைகளில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஒரு 200 பக்க நாவலில் பாதிக்குப் பாதி, சேவல் சண்டை பற்றியது என்றால், இந்த குடும்பக் கதை மீதி. அதில் ஆசிரியருக்கு காத்திரமாக சொல்வதற்கு அதிகமில்லை என்பதாலேயே அந்த கடாவெட்டுக்கு ஆடு தேர்ந்தெடுக்கப் போகும் காட்சியும், காதுகுத்து கடா வெட்டு கொடுக்க குல சாமி கோவிலுக்குப் போகும் காட்சியும் அவ்வளவு நீளமாக படித்து சலித்துப் போகும் வண்ணம் எழுதுபட்டுள்ளது தெரிகிறது. பொறுமையையும் சோதித்துவிடுகிறது. அந்தப் பிரதேசத்தை சேர்ந்த வாசகர்களுக்கு வேண்டுமானால், அது அட, நம்ம வூட்ல நடக்கறத அப்டியே எழுதியிருக்காம்பா, என்ற வியப்பையும் மகிழ்ச்சியையும் தரலாம். அவ்வளவுதான். பின் இதில் ஒரு ஆச்சரியமான விஷயம், இந்தப்படைப்பில் எங்கும் சாதி குறிப்பிடப்படாதது. இதுவே இதை ஒரு தொலைகாட்சி தொடராகவோ திரைப்படமாகவோ எடுப்பதற்கு மிகவும் தோதாக மாற்றுகிறது. இன்று தீவிர இலக்கியம் என்ற போர்வையில் வரும் பெரும்பாலான படைப்புகளுக்கு இந்த ஒரு நோக்கம் இருப்பதாக தோன்றுகிறது.

இம்மாதிரியான ஒரு படைப்பு ஒரு வணிகப் படைப்பாக, நான் மேலே சொன்ன மாதாந்திர வெளியீடுகளில் வந்திருக்குமானால், நாம் பொருட்படுத்தத் தேவையில்லை. காலச் சுவடு போன்ற தீவிர இலக்கிய படைப்புகளை வெளியிடும் ஒரு பதிப்பகம் வழியாக வரும்போது, பெருத்த ஏமாற்றமே ஏற்படுகிறது. அவர்களது தேர்வில் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.

மீண்டும் முதலில் சொன்ன விஷயத்துக்கு போவோம். எல்லாரிடமும் சொல்வதற்கு ஒரு கதையாவது உண்டு. பலர் அதை சொல்லவும் சொல்வார்கள். ஆனால் அது எல்லாமே ஒரு நல்ல இலக்கிய படைப்பாகி விடாது.

எம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’- வெ. சுரேஷ் விமரிசனம்

எம்.கோபாலகிருஷ்ணன் அவர்களை தியாகு புத்தக நிலைய நண்பர்கள் ஒரு நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் சொல்வனம் இதழுக்காக ஒரு பேட்டி எடுத்தோம். அப்போதே, அவரது ‘மனைமாட்சி,’ நாவல் மிக விரைவில் வெளிவரும் என்ற தகவலும், அது பற்றிய ஒரு சிறு குறிப்பும் அதில் இடம்பெற்றன. ஆனால், ‘மனைமாட்சி,’ அதற்குப்பின் மிகவும் காலம் தாழ்த்தி, இந்த ஜூலை மாதத்தில்தான் வெளியாகி இருக்கிறது. ஆசிரியரின் பணிச்சுமை, இடமாற்றம், போன்றவை காரணமாக இவ்வளவு காலதாமதமாகி விட்டது என்று அறிந்தேன். நாவல் வெளிவரத் தாமதமாகும் காரணத்தாலேயே அதன் மீதான எதிர்பார்ப்பும் கூடிக் கொண்டே வந்தது. கோபாலகிருஷ்ணன், தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். அவரது இரு நாவல்களான, ‘அம்மன் நெசவு’ம் ‘மணல் கடிகை’யும் விமர்சகர்களால் தமிழின் முக்கிய படைப்புகள் என்று அடையாளம் காட்டப்படுபவை. அவரது சிறுகதைகளும் சோடை போனதில்லை. தவிர, மொழிபெயர்ப்புகளும் செய்திருக்கிறார். ஆனாலும், அவர் இன்னமும் அதிகம் எழுதியிருக்க வேண்டியவர் என்பதே இலக்கிய வாசகர்களின் எதிர்பார்ப்பு. இவையெல்லாம் சேர்ந்து இந்த நாவலுக்கு மிகுந்த எதிர்பார்ப்பினை உண்டாக்கியிருந்தது. அவ்வளவு ஆவல், எதிர்பார்ப்புகளுக்கிடையில் அவரது இந்த ‘மனைமாட்சி’ நாவலை வாசித்து முடித்தேன்.

இது நிறைய கேள்விகளை மனதில் எழுப்பும் புத்தகம். முதல் கேள்வி, ஏன் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத மூன்று நாவல்களை ஒரே புத்தகமாக போட்டிருக்கிறார்கள் என்பது. எல்லாமே இல்லறம், அதாவது மனைமாட்சி சம்பந்தப்பட்டதாக இருப்பதால் என்று வைத்துக் கொள்ளலாம். மேலும்,இந்த ஒவ்வொரு நாவலிலுமே இரண்டு கதைகள் உள்ளன. அதுவும் ஏன் என்று கேள்வி வந்தது. அவற்றை ஏதோ ஒரு சின்ன நூலிலாவது கட்டி ஆசிரியர் தொடர்பு ஏற்படுத்திவிடுகிறார். அதனால் அவை ஒரே நாவலாக முன்வைக்கப்படுவதில் ஒரு நியாயம் இருக்கிறதென்று வைத்துக் கொள்ளலாம்.

ஒரு வியப்பூட்டும் அம்சமாக, இந்த நாவல்களைப் படித்துக் கொண்டிருக்கும்போது மனதில் உடனடியாக தோன்றுவது, திஜா.வின் ‘அன்பே ஆரமுதே’, லக்ஷ்மியின் ‘தேடிக் கொண்டே இருப்பேன்’, சிவசங்கரியின் ‘அடிமைகள்’, போன்ற நாவல்கள் மற்றும் மணிரத்னத்தின் ‘மௌன ராகம்’, பாக்யராஜின் ‘அந்த ஏழு நாட்கள்’, போன்ற திரைப்படங்கள். இன்னும் நிறைய வணிக நாவல்களின், தொலைக்காட்சி கேளிக்கை நெடுந்தொடர்களின் தருணங்களும் ‘மனைமாட்சி’ நாவலை வாசிக்கும்போது ஆங்காங்கே நிழலாடுகின்றன.

முதல் நாவல் ஒரு தொலைக்காட்சி நெடுந்தொடருக்குத் தோதான நாவல். இதில் இரண்டு கதைகள் சொல்லப்படுகின்றன- ஒன்று, மகா பொறுமைக்கார தியாகு, மகா கொடுமைக்கார சாந்தி இவர்களின் புயலடிக்கும் குடும்பக் கதை. இன்னொன்று, வைத்யநாதன் என்ற மராத்திய (சவுராஷ்டிர?) பிராமணர் இளவயதில் திருமணம் ஆகி, அந்தப் பெண்ணுக்கு (ராஜம் பாய்) தொழுநோயோ என்று பயந்து அவளைக் கைவிட்டு (குடும்பத்தினரின் வற்புறுத்தலால்) இன்னொரு திருமணம் செய்து கொண்டு நல்லபடியாக வாழ்கையில், முதல் மனைவி நன்றாக இருப்பதைக் கேள்விப்பட்டும் அவளாகவே தொடர்பும் கொண்டதாலும், கும்பகோணம் சென்று அவருடன் மீண்டும் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் கதை. இந்த இரண்டு கதைகளுக்கும் என்ன சம்பந்தம், ஏன் அவை ஒரே கதையாக சொல்லப்படுகின்றன என்றால், வைத்யநாதனின் மகள் ரம்யா தியாகுவின் முன்னாள் காதலி, தியாகுவின் இளம்பருவத்து தோழனும் இப்போது அவனுக்கு எல்லாவிதத்திலும் உதவி புரிபவனுமான செந்திலின் மனைவி.

ரம்யா -தியாகு காதல் செந்திலுக்குத் தெரியும், தியாகு இடையில் டிராக் மாறி, சாந்தியை கல்யாணம் செய்து கொண்டதும் தெரியும். இவர்களின் இன்னொரு நண்பன் குமரேசன், ரம்யாவின் அண்ணன் வைத்யநாதனின் மகன். செந்திலுக்கும் ரம்யாவுக்கு நடந்தது, காதல் திருமணமா அல்லது பிராமணர் அல்லாத செந்திலுக்கு ரம்யாவை மணம் செய்து வைக்கும் அளவுக்கு வைத்யநாதன் குடும்பத்தினர் அவ்வளவு புரட்சி மனப்பான்மை கொண்டவர்களா? இரண்டு பெண்களுக்கு ரம்யா, காயத்ரி, என்று பெயர் வைத்திருக்கும் ஒரு மராத்தி அல்லது சவுராஷ்டிர பிராமணர் குடும்பத்தில் மகனுக்கு குமரேசன் என்று பெயர் வைப்பார்களா? தியாகு என்ன சாதி என்று சொல்லும் கதாசிரியர், செந்தில், சாந்தி எல்லாம் என்ன சாதி என்று ஏன் சொல்வதில்லை போன்ற கேள்விகளையெல்லாம் புறந்தள்ளி விட்டு கதைக்குள் போனால், கீழே உள்ளவற்றை மேலும் கேள்விகள் கேட்காமல் நம்ப வேண்டியிருக்கிறது.

வேலையே கதி என்றும் வீட்டில் என்ன நடக்கிறது என்றும் தெரியாத அடிமையான தியாகு, திடீரென்று எல்லாம் அறிந்த சாந்திக்குத் தெரியாமல் மகள்களுக்கு கோவை ஸ்கூலிலிருந்து டி.சி. வாங்குவது, ஐதராபாத் பள்ளியில் அட்மிஷன் வாங்குவது, தாங்கள் ஊருக்கு கிளம்பும்போது, பாலில் தூக்க மாத்திரை கலந்து சாந்திக்குக் கொடுப்பது, பின் விழித்து எழும் சாந்தி, தான் கைவிடப்பட்டதை அறிந்து தற்கொலை செய்து கொள்ள தூக்க மாத்திரை சாப்பிட்டதும், பொறுப்பாக, கரெக்ட்டாக, அவள் அம்மாவுக்கு போன் செய்வது, அவர்கள் ‘வசந்த மாளிகை’ க்ளைமாக்ஸ் காட்சி போல சரியான நேரத்தில் வந்து காப்பாற்றுவது (ஆம், இங்கேயும், அந்தக் காட்சியில் மழை உண்டு, நிச்சயமாக); பின் இவர்களின் இளைய மகள் மீனா ஐதராபாத்தில், திடீரென்று, “அம்மா எப்பப்பா வருவாங்க?” என்று கேட்பது, பக்கத்து வீட்டுப் பெண் வயதுக்கு வந்தவுடன், தன் பெண் வயதுக்கு வரும்போது என்ன செய்வோம் என்று தியாகு கலங்குவது எல்லாவற்றையும் எந்தக் கேள்வியும் இல்லாமல் படித்து முடித்துவிட்டால், தியாகுவுக்கும் சாந்திக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் வைத்தியநாதனுக்கும் அவரது முதல் மனைவி ராஜம் பாய்க்கும் கண்ணீர்விட்டு துக்கப்படலாம். இடையில், கால் ஊனமான, பலவீனமான, ரம்யா, தன் கணவன் தியாகுவின் கைகால்களையே அவ்வப்போது உடைத்துப்போட்டு உட்கார வைக்கும் பலம் வாய்ந்த சாந்தியின் வீட்டுக்கு வந்து அவளுடன் கைகலப்பில் ஈடுபட்டு அவளையே வீழ்த்தும் ஒரு சண்டைக்காட்சியும், பின், சாந்தி மொத்த ஆடைகளையும் அவிழ்த்துவிட்டு தெருவில் ஓடி விடுவேன் என்று பாதி ஆடையை அவிழ்த்துக் கொண்டு தியாகுவை மிரட்டும் (ஏற்கனவே சாந்தி சிறு வயதில் அப்படி செய்திருக்கிறாள்) திகில் காட்சிகளும் உண்டு.

இரண்டாவது நாவல், என்ன வகை என்றே தெரியாமல், வாயடைக்கச் செய்யும் விதத்தில் அமைந்திருக்கும் படைப்பு. என்னால் அதை வகைப்படுத்தவே முடியவில்லை. சற்றும் ஒட்டவுமில்லை. இதிலும், சற்று ‘மௌன ராக’த்தின் சாயல் உண்டு என்றாலும், இடம்பெறும் மனிதர்கள், நடக்கும் சம்பவங்கள்- எல்லாம் எங்கோ நம்பகத்தன்மைக்கு அப்பால் தலைக்கு மேலே பறந்து கொண்டு இருக்கிறார்கள்/ இருக்கின்றன. எனவே, இதைப் பற்றி ஒன்றும் சொல்லவே தோன்றவில்லை எனக்கு.

மூன்றாவது நாவல், கல்யாணம் முடிந்த மறுநாளே, கணவனிடம் விவாகரத்து கேட்கும் துவக்கத்தில், ‘மௌனராகம்’ வகை, முடியும்போது, “சாரே, எண்ட காதலி நிங்ஙள் பெண்டாட்டி ஆகலாம், பட்ச்சே, நிங்ங்கள் பெண்டாட்டி, ஒரு போதும் எண்ட காதலி ஆகிட்டில்லா,” என்று சம்பந்தப்பட்ட காரெக்டர் சொல்லாவிட்டாலும், ஆசிரியர் சொல்லிவிடும்,‘அந்த ஏழு நாட்கள்’ வகை. இடையில் வழக்கம் போல வரும் இரண்டாம் கதையில் ஒரு (கல்யாணமான) குட்டியை ஏகப்பட்ட குட்டன்கள் காதலிக்கிறார்கள், குட்டி யாருக்கு என்று ஒருபோதும் ஊகிக்க முடியாமல் கதையை முடிப்பதில் மன்னன்கள் என்று ஜேஜே சொல்லும் வகை. இந்த ஏகப்பட்ட கூட்டங்களில், முதல் கதையின் நாயகனும் உண்டு என்பதுதான் இரண்டு கதைகளுக்கும் உள்ள சம்பந்தம்.

முதல் கதை தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தந்தை இந்நாள் கணவனா அல்லது முன்னாள் காதலனா, என்று அந்தப் பெண்ணுக்கே பெண்ணே தெரியாமல் மலைக்கும் புரட்சி வகையும்கூட. இரண்டு ஆண்கள் ஒரு ஓரு பெண்ணை மணந்து கொண்டு குடும்பம் நடத்தி பின் விலக்கம் ஏற்படும் பா. ராகவனின் ‘ரெண்டு’ நாவலில்கூட, அந்தப் பெண்ணுக்கு தனது குழந்தையின் தகப்பன் யாரென்று தெரிகிறது. இது அதையும் தாண்டிய புரட்சி. இதிலும் சில பாத்திரங்களின் மொழி சாதி போன்றவை தெளிவாக சொல்லப்படுகின்றன, சில பாத்திரங்களது சொல்லப்படவில்லை. சொல்லப்படுவதால் என்ன தெரிகிறது, சொல்லப்படாததால் என்ன மறைக்கப்படுகிறது, அதில் என்ன லாஜிக் என்றும் எனக்குப் புரியவில்லை.

இக்கதைகளை ஏன் தீவிர இலக்கிய வகையில் வைத்துப் பேச வேண்டி இருக்கிறது, மாத இதழ்களில் வரும் நாவல் என்று ஏன் சொல்லக் கூடாது என்று இயல்பாகவே ஒரு கேள்வி எழுந்தது. அதற்கான பதில்களில் முதன்மையானது, இந்நாவலாசிரியரின் முந்தைய நாவல்களின் தரம். நான் யோசித்ததில் இரண்டாவதாக எனக்குத் தோன்றிய காரணம், அவற்றில் இடம் பெறாத சில அம்சங்கள் இதில் இருப்பது. உதாரணமாக, உரையாடல் முடியும்போது பக்கத்தில் இருந்த மைனா பறந்தது, எதிர்வீட்டுச் சிறுவன் சிரித்தபோது அவன் முன்பற்களைக் காணவில்லை, அந்தச் செடி அப்படி வளைந்து நின்றது, என்றெல்லாம் விவரிக்கும் வரிகளும், கதைமாந்தர்கள் குடிபுகும் அடுக்கக வீடுகள் அதற்கு முன்பு என்னவாக இருந்தன, கோவை அன்னபூர்ணா காபியின் சுவை, மாதிரியான அசலான தகவல்கள் கொட்டிக் கிடப்பதும் பெண் பாத்திரங்களின் உடல் மணம், கூந்தல் மணம், அவர்கள் உபயோகிக்கும் சோப், ஷாம்பூ எல்லாம் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றியெல்லாம் ஓடும் ஆண் பாத்திரங்களின் மனவோட்டங்களும்தான் என்று தோன்றுகிறது. இவற்றையெல்லாம் சேர்த்து ஒரு புகழ் பெற்ற பதிப்பகம் மூலமாக பிரசுரித்தால் அது முக்கியமான தீவிர இலக்கிய புத்தகம் ஆகிவிடும் என்ற நம்பிக்கை வருகிறது. இதில் புத்தகத்தை வெளியிடும்போதே படித்துவிட்டு யாரும் எந்தக் கருத்தும் சொல்வதற்கு முன்னமே அந்த பதிப்பகம் அதை CLASSIC என்று அட்டையில் போட வேண்டியதும் மிக முக்கியமானது. போலிருக்கிறது. இன்று ஒரு படைப்பின் உள்ளடக்கத்தைவிட, அதை யார் வெளியிடுகிறார்கள் என்பதை வைத்தே அது தீவிர இலக்கிய வகையா அல்லது வெகுஜன எழுத்தா என்று தீர்மானிக்கப்படும் ஒரு நிலை வந்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அண்மைக்காலமாக வெளிவரும் பல படைப்புகளும் அதிகம் காட்சி ஊடகங்களால் பாதிக்கப்பட்டவை போலவே தோன்றுகின்றன. ஒரு வகையில், நம் எழுத்தாளர்கள் எல்லோருக்குமே சின்னத் திரை அல்லது பெரிய திரையில் பிரகாசிப்பதற்கான ஆர்வம் அதிகமாகியிருப்பதால், எழுத்தும் சுலபமாக ஒரு வணிக நெடுந்தொடர் அல்லது கேளிக்கைத் திரைப்படம் எடுக்கத் தோதாக மாறி வருகிறதோ என்றும் தோன்றுகிறது. இன்னும் ஒரு முக்கியமான விஷயம், இன்று வாரப் பத்திரிக்கைகளில் தொடர்கதை எனும் வெகுஜன எழுத்துவகை முற்றிலும் அழிந்துவிட்ட சூழலில், அவற்றுக்கும், தீவிர இலக்கிய படைப்புகளுக்கும் இடையேயான வேறுபாடும் அழிந்து கொண்டே வருகிறதோ என்று நினைக்க வைக்கிறது. உதாரணமாக, ஒரு மகரிஷிக்கும் அசோகமித்திரனுக்கும், ஒரு தாமரை மணாளனுக்கும் வண்ண நிலவனுக்குமான வித்தியாசத்தை, பேரைக் கொண்டல்லாது எழுத்தைக் கொண்டே கண்டுபிடிக்கும் நிலையில் இன்றைய இளம் வாசகர்கள் இருக்கிறார்களா என்று கேட்க வேண்டியிருக்கிறது. இந்த நாவல்கள், முன்பு ஓரளவு வெற்றிகரமாக எழுதிக்கொண்டிருந்த எஸ். பாலசுப்பிரமணியம் என்பவரின் எழுத்தை எனக்கு நினைவுபடுத்தியது. கோபாலகிருஷ்ணன், இதைவிட இன்னும் மிகச் சிறப்பாக எழுதக் கூடியவர். அவர் இடையில் சற்று நீண்ட இடைவெளி விட்டுவிட்டதால், இந்தத் தடுமாற்றம் ஏற்பட்டிருக்கிறதோ என்று சந்தேகமாக இருக்கிறது. இந்தக் காலகட்டத்திலேயேகூட அவரது சில சிறுகதைகளின் தரத்தைக் கொண்டு நோக்குகையில், மீண்டும் அந்த பழைய ஃபார்முக்கு வந்துவிடுவார் என்ற நம்பிக்கையும் எனக்கிருக்கிறது.

இறுதியாக, இங்கு நம்பகத்தன்மை என்னும் ஒரு விஷயத்துக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதோ, ஏன் இது போன்ற சம்பவங்கள் நடக்காதோ என்று கேட்பவர்களுக்கு, மார்க் ட்வெயினின் இந்த வரிகளைத் தருகிறேன்: “The only difference between reality and fiction is that fiction needs to be credible.” ஆம், நிஜத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். அதன் புனைவடிவம் ஒரு கலைப் படைப்பாக மாற வேண்டுமென்றால் நிஜமாக நடந்ததென வாசகனை நம்ப வைப்பதில் அது வெற்றி காண வேண்டும்.

நூல் விமரிசனம்: சொல் என்றொரு சொல்- ரமேஷ்-பிரேம்

வெ. சுரேஷ்

ரமேஷ்-பிரேம் இரட்டையர்கள் எழுதியுள்ள இந்தப் புத்தகம், நீண்ட காலமாகவே படிக்க வேண்டும் என்று நினைத்திருந்த, தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்த ஒன்று. எழுத்தாளராக அறிமுகமாகி இப்போது நண்பராகிவிட்ட கார்த்திகை பாண்டியனின் தூண்டுதலால் இதை இப்போதுதான் படிக்க முடிந்தது. பல இடங்களில் பிரமிப்பூட்டும் மொழியும் நடையும் அமையப் பெற்ற ஒரு நாவல்- ‘நாவல்’ என்று சொல்ல முடியுமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை-, பல்வேறு காலகட்டங்கள், பல்வேறு நிலப்பகுதிகள் ( முதன்மையாக தமிழ்நிலம்தான்), ஒரே பெயர் கொண்ட பலவகையான கதாபாத்திரங்கள் இருந்தாலும், எந்த தனிப்பட்ட மனிதரையும் குறிப்பிடுவதாக இல்லாமல், வகைமாதிரிகளைக் குறிப்பிடும் தன்மை கொண்டதாய் உள்ள இந்த நாவலில் ரமேஷ்-பிரேம் தமிழக வரலாறு குறித்த ஒரு மீள்பார்வையையும் மறுகூறலையும் முன்வைக்கிறார்கள். கூடவே இலங்கைப் பிரச்னையும் வரலாற்றுக் காலம் தொட்டு சமகாலம் வரையிலான (2004ல் எழுதப்பட்டிருக்கிறது) தமிழகத்தின் அனைத்து அரசியல், சமூக கலாச்சார நெருக்கடிகளையும் படைப்புக்குள் கொண்டுவந்திருக்கிறார்கள்

நாவலில் வெகு உக்கிரமான, முகத்தில் அறையும், சம்பவங்கள் இருக்குமளவுக்கே,. அற்புதமான, நெஞ்சை உருக்கும், நெகிழ வைக்கும், பெரும் மனவெழுச்சியை உருவாக்கும், சித்திரங்களும் இருக்கின்றன. இதற்கு,இரண்டு இடங்களை உதாரணமாகச் சொல்லலாம். புத்தரின் இறுதி மணித்துளிகளைப் பற்றிய விவரிப்பு, புத்தருக்கும் அவர் தன்னை விட்டு விலகிப் போகச்சொல்லும் சிஷ்யருக்கும் இடையே நிகழும் உரையாடல் ஒன்று. பின், ஆனந்தருக்கும் புத்தருக்கும் இடையேயான உரையாடல்கள் கொண்ட பகுதி. இவை தமிழ் புனைவிலக்கியத்தின் எந்த ஒரு சிறந்த படைப்பின் வரிசையிலும் இடம் பெறத் தக்கது. இருந்தாலும், இந்த நாவலைப் படிக்கும்போது,பின்தொடரும் நிழலின் குரலில்,இயேசுவின் இரண்டாம் வருகை பற்றி இடம் பெற்றுள்ள சிறுகதையை மனம் தன்னால் நினைவு கூர்ந்தது. இரண்டாவதாக,கொற்றவை உபாசனையில் ஈடுபடும்,தேவியின் அழகில், தேவியையே காதலிக்கும் அந்த இளம்பூசாரியின் கதை.

இவை போன்ற சில பகுதிகள் இருந்தும் நாவல் ஒரு முழு நிறைவைக் கொடுக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. அதற்கு முக்கியமான காரணம், மேலே குறிப்பிட்ட சில இடங்களைத் தவிர, இதில் நேரடியான அனுபவங்களை முன்வைக்கும், அல்லது பிறரது அனுபவங்களை புனைவின் வழியே ஆசிரியர் தம் அனுபவங்களாக மாற்றி நமக்கும் கடத்தும் இடங்கள் அரிதாகவே இருப்பது. முன்னரே நிலைப்பாடுகள் எடுக்கப்பட்ட பிரச்னைகளைக் குறித்து, அந்த நிலைப்பாடுகளை பிரதிபலிக்கும் பாத்திரங்களைக் கொண்டே கதை சொல்லப்படுவது அலுப்பூட்டுகிறது. ஒரு பாத்திரம் தன் சொந்த வாழ்க்கை அனுபவம் மூலமாக வரலாற்றின் முன் நிற்கும் தருணங்கள் அன்றி (எ.கா: பதினெட்டாவது அட்சக் கோடு ), வரலாற்றின் தருணங்களுக்கான படைப்பாளிகளின் அரசியல் நிலைப்பாடுக்குக்கேற்ப முன்னரே தயார் செய்யப்பட்ட எதிர்வினைகளின் வகைமாதிரிகளாக பாத்திரங்களை படைத்திருப்பதும், இந்தச் சம்பவங்களில் கதாசிரியர்கள் எந்தப் தரப்பின் பக்கம் நிற்கிறார்கள் என்பது நன்றாகவே புலப்படுவதும், அவை ஒரு போலியான முற்போக்கு, இடதுசாரி அரசியல் சரிநிலைகளை அனுசரித்தே எழுதப்பட்டுள்ளதும்தான் இந்த அலுப்புக்கான முக்கிய காரணங்கள்.

இதற்கு ஒரு சரியான உதாரணமாக, சைவ வைணவ சமயங்களுக்கும், சமண பௌத்த சமயங்களுக்குமான பூசல்கள் பற்றிய இடங்களையம், பின்னர் நாளந்தா பல்கலைக்கழகத்தில், புத்த பிக்குகள் மீதான தாக்குதல் குறித்த சம்பவங்கள் விவரிக்கப்படும் விதத்தையும் சொல்லலாம். சமணர்கள், சைவர்கள், வைணவர்கள் பற்றிய பூசல்களை எழுதுமிடத்து, சைவர்களால் சமணர்கள் கழுவேற்றப்பட்டார்கள் என்பதை எந்தத் தயக்கமுமின்றி தீர்மானமாக புனைவுக்குள் கொண்டுவரும் கதாசிரியர்கள், நாளந்தா பல்கலைக் கழக புத்த பிக்குகளின் படுகொலைகள் வர்ணிக்கப்படும் இடத்தில், அந்தப் படுகொலைகளை புரிந்தவர்கள் யார் என்ற எந்த அடையாளங்களையும் குறிப்பிடாமல் வாட்களையும் பிற கொலைக்கருவிகளையும் மட்டுமே குறிப்பிடும்போது இந்தப் புனைவில் எவ்வகையிலும் நம்பிக்கை கூடுவதில்லை. இத்தனைக்கும், இரண்டாவது சம்பவத்தை நிகழ்த்தியது, குத்புதீன் அய்பக்கின் தளபதி முஹம்மது பக்தியார் கில்ஜி என்பது வரலாற்று ஆவணங்கள் வழியாக தெளிவான ஒன்று. ஆனால், சமணர்கள் கழுவேற்றப்பட்ட நிகழ்வோ, இன்னமும்கூட சற்று உறுதிப்படுத்தப்படாத ஒன்று. இவற்றில், நாளந்தா சம்பவத்தை நிகழ்த்தியர்வர்களைப் பற்றிய அடையாளமற்ற விவரிப்பு, படைப்பாளிகளின் நேர்மையை கேள்விக்குள்ளாகிறது. இதில் விவரிக்கப்படும், வரலாற்று சம்பவங்களெல்லாம், வரலாற்றில் ஒரு மேலோட்டமான அறிமுகமுள்ள, அன்றாடம் செயதித்தாள் படிக்கும் ஒரு சுமாரான வாசகனுக்கே அறிமுகமானவை.

ஒரு நல்ல படைப்புக்கு மொழி வளமும் புதுமையான கதை கூறுமுறையும் இருந்தால் மட்டும் போதாது என்பதையும் இது உறுதிபடுத்துகிறது. வரலாறு மற்றும் சமூகச் சூழலைக் களமாய்க் கொண்ட புனைவுகளில் கதாபாத்திரங்களின் படைப்பில் நம்பகத்தன்மையும் சம்பவங்களின் நிகழ்வில் யதார்த்தமும் முக்கியமான அம்சங்கள் என்றும் சொல்ல வேண்டும். இதில் அவை முழுமையாக வளர்த்தெடுக்கப்படவில்லை. கட்டுரைகளில் சொல்லிவிடக் கூடிய விஷயங்களை புனைவாக மாற்றுவதில் உள்ள தோல்வி இதில் தெரிவது வருந்தச் செய்கிறது.

‘1801’, டாக்டர் மு.ராஜேந்திரன், இ.ஆ.ப.

வெ. சுரேஷ்

 

தமிழக வரலாற்றில் திரும்பத் திரும்ப படிக்கக்கூடிய காலகட்டம் என்பது, அது புனைவாக இருந்தாலும் சரி, பாடப்புத்தகமாக இருந்தாலும் சரி, கி.பி. 7ம் நூற்றாண்டு துவங்கி 13ம் நூற்றாண்டு வரையிலான ஒன்று. அதற்கு முந்தைய காலகட்டத்தில் தெளிவில்லை. நிகழ்வுகளுக்கான போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை. அதே சமயம், சுவையான வரலாற்று ஆவணங்கள் இருந்தாலும் 13ம் நூற்றாண்டு துவங்கி 20ம் நூற்றாண்டு வரையிலான தமிழக வரலாறு அவ்வளவு விரும்பி படிக்கப்படுவதில்லை- முக்கியமாக, 18ம் நூற்றாண்டும் 19ம் நூற்றாண்டும் தமிழக வரலாற்றின் அவலமான காலகட்டங்கள். வலுவான மையப்பேரரசு என்று ஏதுமில்லை. பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு, குறுநில மன்னர்களாலும் பாளையக்காரர்களாலும் ஆளப்பட்டு வந்த காலம், ஐரோப்பியர் முதன்முதலாக ஆட்சியுரிமையை விலைக்கு வாங்கிய காலகட்டம். ஒரு தமிழனாகப் படிக்க பெரும் சோர்வூட்டும் காலக்கட்டம். ஆனால் ஒரு வரலாற்று ஆர்வலனுக்கோ மாணவனுக்கோ அது அப்படியல்ல. பெரும் மாற்றங்களைச் சந்தித்த அந்த காலகட்டமே பெரும் ஆர்வமூட்டக்கூடிய ஒன்றெனக்கூட சொல்ல முடியும். ஆனால் அந்தக் காலகட்டம் பற்றிய புனைவுகள் தமிழ்ப் பரப்பில் (நான் அறிந்த வரையில்) அனேகமாக இல்லை என்றே சொல்லலாம். ஒப்பு நோக்க தமிழ் சினிமாவில் வீரபாண்டிய கட்டபொம்மன், சிவகங்கைச் சீமை ஆகிய படங்களில் (அவற்றின் அத்தனை வரலாற்றுப் பிழைகளோடும்) அக்கால நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. ஒன்று மகத்தான வெற்றி பெற்றதும், இன்னொன்று தோல்வியடைந்ததுமேகூட இதில் ஆராயக் கூடிய விஷயங்கள்.

பாளையக்காரர்கள், ஐரோப்பியர்களான ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆர்க்காட்டு நவாப், தஞ்சை மராத்திய அரசு, நாயக்க அரசர்களின் கடைசி வாரிசுகள் என்று ஒருவரோடு ஒருவர் தங்களுக்குள் இணைந்தும் பிணங்கியும் உருவாக்கிய அந்தக் குழப்பமான காலகட்டம் பற்றி இன்று படிக்கும்போது யார் யாருக்குத் துணை, யாருக்கு எதிரி என்பதெல்லாம் எவ்வளவு விரைவில் மாறியிருக்கிறது என்பது மிகவும் வியப்பூட்டுகிறது. உதாரணமாக ஒன்றைச் சொல்ல வேண்டும். மருது பாண்டியர்கள் கட்டபொம்மனை ஆதரித்தார்களா அல்லது எதிர்த்தார்களா? அல்லது, ஏன் ஆதரிக்கவில்லை? அவர்களுக்கும் வேலு நாச்சியாருக்கு என்ன உறவு? கட்டபொம்மன் விடுதலைப் போர்வீரனா? அல்லது வெறும் கொள்ளைக்காரனா? எட்டப்பனும் புதுக்கோட்டை மன்னரும் ஏன் ஆங்கிலேயரோடு சேர்ந்து கொண்டார்கள் என்பதற்கெல்லாம் தெளிவான விடைகள் ஏதும் இல்லை. கே.கே. பிள்ளை அவர்கள் எழுதி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள, ‘ தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும்’, என்கிற பெரிதும் மதிக்கப்படுகிற நூலில், அதன் 500 பக்கங்களில், இந்த காலகட்டத்தின், ஆங்கிலேயர்களுக்கு எதிரான பாளையக்காரர்களின் கிளர்ச்சிக்கு வெறும் ஒன்றரைப் பக்ககங்கள்தான் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்று சில புதிய தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அந்தக் காலகட்டத்தின் வரலாறு முழுமையாக எழுதப்படும் என்று தோன்றுகிறது.

இந்த நிலையில் இப்போது வெளிவந்திருக்கும் “1801” நாவல் இந்தக் காலகட்டத்தைப் பற்றியது என்பதால் மிகவும் ஆவலோடு வாசித்தேன். நாவல், கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட ஒரு மாதத்துக்குப் பின் தொடங்கி, மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டு அந்தக் கிளர்ச்சி முற்றிலும் ஒடுக்கப்படுவதோடு முடிகிறது. இடையில், கட்டபொம்மனின் சகோதரர்களான ஊமைத்துரை, சிவத்தையா, இரண்டாம் பாஞ்சாலங்குறிச்சிப் போர், ராமநாதபுரச் சீமை சேதுபதி பட்டத்துக்கான வாரிசுரிமைப் போர் என்று பல நிகழ்வுகளினூடாகப் பயணிக்கிறது.

பல புதிய தகவல்களை இந்நாவல் அளிக்கிறது. உதாரணமாக, கட்டபொம்மனின் தம்பியான ஊமைத்துரை பிரபலமானவர். ஆனால் அவரது முதல் தம்பியான சிவத்தையா? அவரைப் பற்றி இதுவரை நான் எதுவும் கேள்விப்பட்டதில்லை, படித்ததில்லை. ஆனால், கட்டபொம்மனின் மறைவுக்கு சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, பாளையங்கோட்டை சிறையில் ஏற்பட்ட ஒரு கலவரத்தின் மூலம், அங்கிருந்து வெளியே வந்து தன் தம்பி ஊமைத்துரையின் துணையுடன், பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை மீண்டும் கட்டி எழுப்பி ஆட்சி புரிந்திருக்கிறார் இவர் என்ற தகவலை நான் இந்த நாவலில்தான் படிக்கிறேன். இரண்டாம் பாஞ்சாலங்குறிச்சிப் போரில், கர்னல் அக்னியுவால் (Agnew), தோற்கடிக்கப்பட்டு தூக்கிலிடப்படுகிறார் இவர். அது இந்நாவலில் விரிவாகவே வருகிறது.

அதேபோல், மருது சகோதரர்கள் மராட்டிய சிவாஜியின் படைத்தளபதிகளில் ஒருவரான தூந்தாஜி வாக், மற்றும் கோவை ஹுசேன், விருப்பாச்சி கோபால நாயக்கர், ஊமைத்துரை ஆகியோர் ஆதரவோடு புனேவிலிருந்து நாங்குநேரி வரையிலான ஒரு ஒருங்கிணைந்த போரை ஆங்கிலேயருக்கு எதிராக துவங்கியதையும் இந்நாவல் காட்டுகிறது. மிக முக்கியமாக, மருது சகோதரர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக திருவரங்கத்தில் வெளியிட்ட விடுதலைப் பிரகடனமும் இந்நாவலில் இடம் பெறுகிறது..அதுமட்டுமில்லாமல் சிவகங்கை மன்னர்கள், ராமநாதபுரம் சேதுபதி, இரண்டு பாளையகாரர்களின் நெருங்கிய உறவினையும்,முக்கியமாக, பிணக்கினையும், அவை எப்படி அந்தக் காலகட்டத்தில் ஆங்கிலேயரின் கை தென்னகத்தில் ஓங்கிட வழி வகுத்தன என்பதையும் சித்தரிக்கிறது..

இவ்வளவு அருமையான களத்தினையும் காலத்தையும் கருப்பொருளாக தன்னகத்தே கொண்டிருந்தும் இந்த நாவல் அது அடைய வேண்டிய உயரத்தினை அடையவில்லை என்பதே இதன் பெரிய சோகம். ஆசிரியரின் புனைவுத் திறன் மற்றும் மொழி, நடை ஆகியவற்றில் உள்ள போதாமைகளே இதற்கு முக்கிய காரணம். பல இடங்களில் பத்திரிக்கைகளில் வெளிவரும் வெறும் தகவல் கட்டுரையை படிக்கும் உணர்வே மேலிடுகிறது. உணர்ச்சி மிகுந்த காவியமாக வெளிப்பட்டிருக்க வேண்டிய தருணங்கள் ஆகியவற்றை எல்லாம்கூட மிகத்தட்டையான தன் எழுத்தின் மூலம் சாதாரணமாக்கி விடுகிறார் ஆசிரியர். இருப்பதற்குள்ளேயே ஓரளவாவது சுமாராக வந்துள்ள இடங்கள் என்று, மருது சகோதரர்கள் தாம் தூக்கிலேற்றப்படுவதற்கு முன் கர்னல் அக்னியுவுடன் வாதாடும் இடத்தை சொல்லலாம்.

இம்மாதிரி சமகாலத்துக்கு மிக அருகாமையிலுள்ள வரலாற்றுக் காலத்தைப் பற்றி ஒரு புனைவை எழுதும்போது அதன் மொழியும் நடையும் எப்படி அமைந்திருக்க வேண்டும் என்பது ஒரு முக்கியமான விஷயம். கல்கி, சாண்டில்யன், போன்ற வரலாற்றுக் கதாசிரியர்களின் செந்தமிழ் மொழியா, அல்லது இன்று வழங்கும் மொழியா என்பதைத் தீர்மானிப்பதில் ஆசிரியர் மிகவும் குழம்பி இருக்கிறார். பல இடங்களில் தற்கால மொழி பயன்படுத்தப்படுவது நாவல் நடக்கும் காலத்துக்கு நியாயம் செய்யத் தவறிவிடுகின்றது. மேலும், இன்று வழங்கப்படும் கலைச்சொற்களை அந்த காலகட்டத்துக்கு பயன்படுத்துவதும் துருத்திக்கொண்டு நிற்கிறது. உதாரணமாக, மருது சகோதரர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக மேற்கொண்ட மறைந்திருந்து தாக்கும் போர்முறை. இதை நாவலில் வரும் பாத்திரங்கள் “கொரில்லாப்” போர்முறை என்று சொல்வது எப்படிப் பொருந்தும்? அந்த சொல் தமிழ் மொழியில் எந்தக் காலத்தில் புழக்கத்துக்கு வந்தது போன்ற விஷயங்களை ஆசிரியர் கவனிக்கவேயில்லை என்று தெரிகிறது.

இன்னொன்று. நாவலின் காலகட்டத்தில் நிகழாத சம்பவங்களை சொல்லும்போது அவற்றை மீண்டும் மீண்டும் பாத்திரங்களின் உரையாடலின் மூலமே முற்றிலும் வெளிப்படுத்தும் பாணி சலிப்பூட்டுவதாகவும் எப்போதும் யாரேனும், பேசிக்கொண்டே இருப்பதைப் போன்ற, படிப்பதைவிட உரை கேட்பதைப் போன்ற ஒரு உணர்வையும் தருகிறது.

தகவல் களஞ்சியமாகத் திகழும் இதில், தகவல் பிழைகளும் இருக்கவே செய்கின்றன. உதாரணமாக, மராட்டிய சிவாஜியின் வரலாற்றை விவரிக்கும் ஒரு இடத்தில் சிவாஜி, ஒளரங்கசீப் இருந்தவரையில், மலைகளில் மறைந்திருந்து போர் புரிவதையே கைக்கொண்டார் எனவும் ஒளரங்கசீப் இறந்த பின்னர்தான் வெளியே வந்தார் எனவும் குறிப்பிடப்படுகிறது. ஆனால், உண்மையில் சிவாஜி ஒளரங்கசீப்புக்கு முன்னரே மறைந்து விட்டார் என்பதும், அவர் மறைந்து 17 ஆண்டுகள் கழித்தே ஒளரங்கசீப் மறைந்தார் என்பதுமே வரலாறு. நாம் அறிந்த இடங்களில் இருக்கக்கூடிய இது போன்ற பிழைகள், நாம் அறியாத இடங்களை விவரிக்கும் பகுதிகளை சந்தேகத்தோடு பார்க்க வைக்கிறது.

ஸ்காட்லாந்துக்காரரான கோர்லே என்பவர் இந்தக் காலத்திய நிகழ்வுகளை பற்றி எழுதிய குறிப்புகளை வைத்து சில ஆண்டுகளுக்கு முன்னால் பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய மருதுபாண்டியர்கள் பற்றிய ஒரு கட்டுரையேகூட ஒரு புனைவுக்குரிய சுவாரஸ்யம் கொண்டிருந்தது. ஆனால், தமிழர்களின் மிகச் சோதனையான, படிக்கப் படிக்க மிகுந்த மன வருத்தத்தினைத் தரும், மிகப்பெரிய சவாலான ஒரு காலகட்டத்தினை எடுத்துக் கொண்டு, அதற்கான தகவல்களை சேகரிப்பதில் மிகக்கடினமான உழைப்பையும், அர்ப்பணிப்பையும் தந்து, மிகுந்த பிரயாசையுடன் உருவாக்கப்பட்ட ஒரு படைப்பு, அந்த படைப்பாளியின் புனைவுத்திறன் மற்றும் மொழிநடை போதாமைகளால் திருப்தி அளிக்காத ஒன்றாக மாறி இருப்பது மிகுந்த வருத்தத்தையே அளிக்கிறது.

‘1801’, டாக்டர் மு.ராஜேந்திரன், இ. ஆ.ப., ரூ.500, அகநி