எழுத்து

கவியின்கண் – 5 “கையகத்தது அது பொய் ஆகாதே”

– எஸ். சுரேஷ்-

ஒரு நாள் செல்லலம் இரு நாள் செல்லலம்
பல நாள் பயின்று பலரொடு செல்லினும்
தலை நாள் போன்ற விருப்பினன் மாதோ
இழை அணி யானை இயல் தேர்
அதியமான் பரிசில் பெறூஉங் காலம்
நீட்டினும் நீட்டாது ஆயினும் யானை தன்
கோட்டு இடை வைத்த கவளம் போலக்
கையகத்தது அது பொய் ஆகாதே
அருந்த ஏமாந்த நெஞ்சம்
வருந்த வேண்டா வாழ்க அவன் தாளே.
– ஔவை, புறநானூறு 101 (more…)

ருசி

நரோபா

அந்தப் பொட்டலம் என்னவோ அங்கேயேதான் கிடக்கிறது, சீந்துவாரில்லாமல்.

பட்டணத்து ரயில் நிலையங்கள் ஒரு பிரம்மாண்டமான உயிர்க் காடு. பலரும் தொலைந்துபோன, தொலைத்துக் கொண்ட காடு. எவரையும் கண்கொண்டு பார்க்க முடிவதில்லை, எப்போதும் எவரோ நம்மிடமிருந்து ஏதோ ஒன்றை அடித்துப் பிடுங்கி விடுவார்கள் என்ற அச்சம் நிலைகொண்டிருக்கும். பையை இறுகப் பற்றிக் கொண்டு ஊர் திரும்பக் காத்திருக்கிறேன்.

அத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் அவன் சிக்குவான் என எதிர்பார்க்கவில்லை. நேற்றிரவுதான் கிருஷ்ணமூர்த்தி அவனைப் பார்த்ததாக போனில் சொன்னான். காலையில் கிளம்பிவிட்டேன். ஆவேசமும் கோபமும் உள்ளூர நுரைத்துப் பொங்கின. இரவெல்லாம் நினைப்புகள், கற்பனைகள். அவனை விதவிதமாகச் சிறுமை செய்வது போல், அவமதிப்பது போல், பெரியமனுஷத்தனத்துடன் மன்னிப்பது போல், அவனிடம் கெஞ்சி இறைஞ்சுவது போல், குத்திக் கிழிப்பது போல், பளாரென்று அறைவது போல். உறக்கமின்றி லயித்துக் கிடந்தேன். அவனைக் கண்டதும் என்ன செய்வது என்பதை இனிதான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் அவனைச் சந்தித்தாக வேண்டும். நானிருக்கிறேன், உன்னைக் கண்டுபிடித்துவிட்டேன் என்றாவது அவனுக்கு உணர்த்தியாக வேண்டும். (more…)

திறந்த சாளரம்

Saki (H. H. Munro)

ஹெக்டர் ஹ்யூக் மன்றோ பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரிட்டிஷ் எழுத்தாளர். ‘சகி’ என்கிற புனைப்பெயரில் பல படைப்புகள் எழுதி ஓ ஹென்றி, டோரதி பார்க்கர் போன்றவர்களுடன் ஒப்பிடக்கூடிய அளவுக்கு கூர்மையான சிறுகதைகள் எழுதியவர். இவர் கதைகளில் காணப்படும் திகில் நிறைந்த அங்கதம் தனித்துவமானது. வெளியாகி நூற்றாண்டுகளுக்கு மேலாகியும் The Open Window சிறுகதையின் சுவாரசியம் கடுகளவும் குறையவில்லை. 1986ல் ஷியாம் பெனகலின் இயக்கத்தில், தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘கதா சாகர்‘ தொடரில் இக் கதையும் இடம்பெற்றது.

oOoOoOoOoOoOoO

னது அத்தை சிறிது நேரத்தில் கீழே வந்துவிடுவார் திரு. நட்டல்’, பதினைந்து வயதான, வெகு மிடுக்கான பெண் ஒருத்தி சொன்னாள், “அதுவரை நீங்கள் என்னோடுதான் பொழுதை கடத்த வேண்டும்”

ஃப்ராம்டன் நட்டல் வரப்போகும் அவளுடைய அத்தையை மறக்காமல், எதையாவது நல்லபடியாகச் சொல்லி, அந்த கணத்தின் மகத்தான மருமகளை மகிழ்வுறச் செய்ய தீவிரமாக முயன்றுக் கொண்டிருந்தான். உண்மையில், இப்படியான அறிமுகமில்லாதவர்களை வரிசையாக சந்திப்பதால்,  அவன் அப்போது மெற்கொண்டிருக்கும் நரம்புமண்டல சிகிச்சைக்கு ஏதும் நலம் பயக்குமா என்று பலமாக சந்தேகித்தான். (more…)

Dare Me – Megan Abbot

– அஜய். ஆர்-

“Ages fourteen to eighteen, a girl needs something to kill all that time, that endless itchy waiting, every hour, every day for something—anything—to begin.”

“There’s something dangerous about the boredom of teenage girls.”

மேகன் ஆபட்டின் (Megan Abbot) ‘Dare Me’ நாவலில் பதின்பருவத்தைப் பற்றி வரும் வரிகள் இவை. அந்தப் பருவத்தின் சிக்கல்கள், எதிர்பாலின ஈர்ப்பு, பாலின குழப்பம், எதையும் (குறிப்பாக, தடை செய்யப்பட்டுள்ளதை) முயற்சி செய்ய/ அறியும் விழைவு, நட்பு வட்டாரத்தால் எப்போதும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற அழுத்தம் (peer pressure), வாழ்வின் யதார்த்தங்கள் அறிந்திராத காலத்தில் முடிவற்று நீளும் எனத் தோன்றும் இளமை என பலதரப்பட்டவை. சுயத்தை அறியவும் உறுதி செய்ய​வும்​ நாம் நம்மையறியாமல் செய்பவைகளாக இவற்றைக் கொள்ளலாம். அப்படி ‘தன்னையறிதலை’ மையமாக வைத்து, குற்றப்புனைவின் களத்தில் மேகன் ஆபட் இந்த நாவலை எழுதி உள்ளார். (more…)

பெரும்பாய்ச்சல்

புதிதாக குடியேறிய வீட்டில்
எங்கள் கண்கள்
ஒன்றோடு ஒன்று உறைந்த
முதல் நொடி

தத்தியாக நான் நின்றுகொண்டிருக்க
தீர்க்கமான ஒரு முறைப்பு
வாழ்நாள் முழுமைக்குமான பகை

***********************************************

மாடிப்படியின் கைப்பிடிச் சுவற்றில்
மேலே பார்த்துக் கொண்டு
பிசிரற்ற கவனத்தோடு
எதற்கோ தயாராகிக் கொண்டிருக்கிறது

ஐந்தடிக்கு அப்பால்
தான் சாத்தியப்படுத்தும் உண்மை
தெரியுமா  அந்தப் பூனைக்கு

**********************************************

என்ன சத்தம்
பூனையா பறவையா
பூனையின் பிரசவமா
அல்லது அதன் பயமா
கூடுவதற்கான சமிக்ஞையா
இந்த நள்ளிரவிலா

என்ன லட்சியம் ஒழிந்து
போய்விட்டதென்று இந்தக் கதறல்

விளக்கிட்டுத் தேடினால்
பூனையும் இல்லை
கதறலும் இல்ல

                                                                  –  அதிகாரநந்தி