எழுத்து

பூச்சி

– கமலாம்பாள்-

தூரத்து அண்டத்தின்
ஓர் துகள்;
இரவின் இருளில்
சிறு உயிர்;
சிறு கடி; சிறு வலி;

பு ச் சி

பார்வையின் விளிம்பின்
ஒரு ஓரம்;
உற்றுப் பார்த்தால் நகரும்;
வாய் மட்டும்தான்;

புபூ ச்ச் சிசீ

ஒன்றுதான்..ஆனால்
எங்கும் எதிலும்;
சிதறிய கண்கள்;
விழித்துக்கொள்கிறது
மூன்றாவது கண்.

அதிகாரத்தின் மானுட முகங்கள் – பூமணியின் ஏட்டையாவும் ஆத்தியப்பனும்

– அஜய். ஆர்-

தினசரி செய்திகள், சொந்தங்கள்/ தெரிந்தவர்களின் அனுபவங்கள் மூலம் காவல்துறை பற்றி தெரியவருவதில் அந்தத் துறை குறித்து எதிர்மறையான கருத்துக்களே அதிகம் மக்களிடம் உள்ளன. ஆனால் காவல்துறை அதிகாரிகள் பற்றி திரைப்படங்கள், பல சாகச குற்றப்புனைவுகள் பொதுவாக அளிக்கும் பிம்பம், அவர்கள் எப்போதும் நீதியின்பால் நிற்பவர்கள், அதற்காக எதையும்/ யாரையும் எதிர்ப்பவர்கள், சாகசங்கள் புரிபவர்கள் என்பதாகும். இந்த ஒற்றைத் தன்மையிலிருந்து மாறுபட்ட ஆக்கங்களை மான்கெல் (Mankell) போன்றோர் தங்கள் குற்றப்புனைவுகளில் தந்திருக்கிறார்கள். ‘Ardh Sathya’ போன்ற திரைப்படங்கள் வந்துள்ளன. பொது இலக்கியத்தில், குறிப்பாக இடதுசாரி ஆக்கங்களில் வழிபாட்டுத் தன்மையற்ற சித்தரிப்புக்களைக் காண்கிறோம். இவற்றில் வெளிப்படும் காவல்துறை அமைப்பின் கோர முகம் அச்சுறுத்துவதாக உள்ளது- காவல்துறையினர் அரசு எந்திரத்தால் மனிதத்தன்மை அகற்றப்பட்டு (dehumanized), அவர்களே எந்திரங்களாக உள்ளனர். (more…)

கவிதைகள் – க்யூ, கட்டியம் கூறுதல்

-ஸ்ரீதர் நாராயணன்-

வால் வைத்த q

சிறுமி தனக்குத் தெரிந்த சின்ன q-வை எனக்குணர்த்த
கையைப் பின்னாடி முறுக்கிக் காட்டும் அழகு
எந்த எழுத்துருவிலும் காணவில்லை

கட்டியம்கூறல்

கோதுமை மணி அலகை குவித்தபடிக்கு
இசைத்து செல்கிறது ராபின் பறவை
இனிவரும் வசந்தமெல்லாம் உபரி

அதிகாரத்தின் ஆயுதங்கள் – வேல ராமமூர்த்தியின் சிறுகதையை முன்வைத்து

-ஸ்ரீதர் நாராயணன்-

நான் படித்த பள்ளியில் சீருடையாக காக்கி நிஜாரும் வெள்ளை சட்டையும்தான் இருந்தது. ஏனோ அந்த காக்கி கால்சட்டையை அணியவே பிடித்தம் இருக்காது. அக்கம்பக்கத்து பள்ளிகளில் அடர்நீலம், பழுப்பு வண்ணம் கொண்ட சீருடைகள் எல்லாம் பார்த்து ஏக்கமாக இருக்கும். ஏன்தான் இப்படி ஒரு நிறத்தை சீருடையாக தேர்ந்தெடுத்தார்களோ என்று பெரும் கோபம் கோபமாக வரும். ஆனால், ஒன்பதாம் வகுப்பில் தேசிய மாணவப்படையில் சேர்ந்த போது அந்த எண்ணம் அப்படியே தலைகீழாகிப் போனது. இருள்பிரியாத அதிகாலை வேளையில் தெருநாய்களை எல்லாம் எழுப்பும் வண்ணம் க்ரீச்சிடும் பூட்ஸ்களோடு, கஞ்சிப் போட்ட விறைப்பு காக்கி உடுப்பில் பரேடுக்கு மிடுக்காக நடந்து போய்க்கொண்டிருந்தேன். (more…)

எரிந்த கட்சி

-ஸ்ரீதர் நாராயணன்-

மங்கையொரு பங்குடைய சங்கரன் நுதல் விழியால்
மன்மதன் எரிந்த கதை பொய்யா – மெய்யா

ஆர்மோனியத்தின் சுருதியை அனுபவித்தபடிக்கு இலாவணி பாடத்தொடங்கினார். முதலில் விநாயகர் வணக்கம். அப்புறம் குருவணக்கம். பிறகு சுற்றி வந்து சலாம் போட்டபடிக்கு சபை வணக்கம் செய்துவிட்டு, அடுத்த கட்டை சுருதிக்கு தாவுகிறார்.

“இப்படியாகத்தானே………..

ராகவிருந்தன், அனங்கன், காமதேவன் என்றெல்லாம் அறியப்பட்ட மாரவேள்…. தன்னிடம்… வந்து மன்றாடிய மலைமகளாம் இமையவன் புத்திரியின் வேண்டுகோளைக் கேட்டபடிக்கு…..

‘ஆலாலக் கண்டன், சுடுகாட்டு சித்தனிடம் சிந்தையை தொலைத்த பேதையே… நானாகப் போய் எப்படி அவனிடத்தில் காமத்தை கெளப்புவது…. ஆளு ரொம்ப கோவக்காரனாச்சுது… என் ஆயுளுக்கு வந்த அபாயமாச்சுது’ (more…)