எழுத்து

நிராகரிப்புகளைப் பட்டியலிடு…

இனியவன் காளிதாஸ் 

 

நிராகரிப்புகளைப் பட்டியலிடு…

எவ்வளவு முடியுமோ அவ்வளவு
தொலைவாய்
ஞாபகங்களைத் தூரவீசு

என்னை நினைவூட்டும்
எச்சங்களின் மிச்சங்களை
நெருப்பிட்டுக் கொளுத்து

வெறுப்பின் சுவரெழுப்பி
நேச சன்னல்களை இறுக மூடு

எல்லாம் முடிந்த
பின் கதவு திறந்து
வெளியே பார்

உனைக் கண்டதும்
வாலாட்டும் குட்டிநாய்க்கு அருகே
அமர்ந்திருக்கும்
எனை என் செய்யலாம் என இப்போது முடிவெடு.

ஊடலின் 4th கீர்

அர்ஜூன் ராச்

வெய்யில்
சமாதானமாகிக் கொண்டிருந்த வேளை
ஒரு துனிப்பின் பயணத்தில்
என் தோள்வனையாமல்
பின்னிருக்கையில் அமர்ந்தபடி
நம் பிரேமையின் உருகுநிலையில்
உறைந்து கொண்டிருந்தாய்

சட்டென இமைகீறி எதிர்ப்பட்ட வண்ணத்துப்பூச்சியொன்றின் நக உராய்வில்
குடை சாய்வது போன்ற என் திகைப்பில்
குற்றுயிர் சுவாசமுடன்
‘பாத்துங்க…’ என்று
இருக்கியணைந்தாய்
இமைகளோடு என்னை

‘பேசிட்ட பாத்தியா’ என்றதும்

நிலவுக்கு முகமடுத்து
மீண்டும் ஊடினாய்
அந்தியோடு அந்தியாய் வண்ணங் குழைந்த
உன் மந்தகாச ஒளிப்பினை
பிம்பமித்து,
பிரகாசம் கூட்டி எனக்கு
காட்டிக் கொடுத்துவிட்டது
நம் காதல் வாகனத்தின்
ரியர்வியூ கண்ணாடி.

கூடலின் 4th கீரில் வேகமுறுக்க
உனக்கும் எனக்குமிடையில்
அடிக்கடி தலைபட்டு,
வழக்கம் போல
வந்ததும் வராததுமாய் சில்லறுந்து
பின்வாங்கினாள்
தழுதழுத்த அருவமாய்
நம் ஊடல் பெரிய மனுஷி

அகாலத்தில் கரைந்த நிழல் – ஜிஃப்ரி ஹாசன்

-ஜிஃப்ரி ஹாஸன் – 

மாமா, இளைய சாச்சாவின் புதிய லுமாலா சைக்கிளையும், பெட்ரோல்மாக்ஸ் லைட்டையும் எடுத்துக் கொண்டு இருள் விலகியிராத அதிகாலை ஒன்றில் மாமியைக் கைவிட்டு விட்டு ஓடிப்போய் ஒரு வாரம் கழிந்து விட்டிருந்தது. மாமா ஓடிப்போன சம்பவம் வீட்டில் மாமியைத் தவிர வேறு யாரையும் பெரிதாக உலுக்கியதாகத் தெரியவில்லை. வாப்படம்மா கொஞ்சம் கடமைக்கு கவலைப்பட்டது போல் தெரிந்தது. இதுதான் நடக்கும் என்று அவர் ஏற்கனவே எதிர்பார்த்திருந்தது போல் இருந்தது. வாப்படப்பா வழக்கம் போன்று தனது சாய்மனைக் கதிரையில் சாய்ந்திருந்தபடி குர்ஆன் ஓதுவதில் மூழ்கி இருந்தார்.

ஒரு வாரத்துக்குள்ளேயே மாமா ஓடிப்போன சோகம் மெல்ல மெல்ல உருமாறி சாச்சாவின் சைக்கிள் மீதும் பெட்ரோல் மாக்ஸ் மீதும் மய்யங் கொண்டது. அவர் அதையெல்லாம் எடுக்காமல் ஓடிப் போயிருந்தால் பரவாயில்லை என்பதைப் போல் வீட்டின் சூழல் வேகமாக மாறிக்கொண்டு வந்தது. மாமா யாருக்கும் தெரியாமல் ஓடிப்போன நாளிலிருந்து மாமியின் முகத்தில் சோகம் கவிழ்ந்திருந்ததைப் பார்த்தேன். தனக்குள்ளேயும், சந்தர்ப்பம் கிடைக்கும் போது தனக்கு வெளியேயும் அழுது தீர்த்தாள். வீட்டின் உள்ளேயோ அல்லது மலசலகூடத்துக்குள்ளிருந்தோ கதவைப் பூட்டிக்கொண்டு அவள் அழும் சத்தம் வீட்டின் இரைச்சலிலும் என் கூர்மையான காதுகளில் பட்டுத்தெறித்துச் செல்லும். அப்போது அழுகையும் புகை போன்றதுதான் என நினைத்துக் கொள்வேன். உள்ளே இருந்து கொண்டு எப்படி கதவைச் சாத்தினாலும் அது வெளியே கேட்டுவிடும். புகையும் அப்படித்தான். நான் மலசலகூடத்தின் உள்ளே இருந்து பூட்டிக் கொண்டு திருட்டுத்தனமாக பீடி அடித்த போது புகை திரள் திரளாக வெளியேறி என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டது. மாமிதான் எனக்கு அடி கிடைக்காமல் காப்பாற்றிவிட்டாள். வீட்டில் யாரும் அவள் அழுகையை சட்டை செய்ததாகத் தெரியவில்லை. ஓடிப்போன மாமாவை தேடிச் செல்லவும் யாரும் முனையவில்லை. ஒரு நசிபட்ட பித்தளைச் செம்பு காணாமல் போனது போல வீட்டில் மாமியைத் தவிர வேறு யாருக்கும் நோகாத இழப்பாக அது இருந்தது.

பெரியம்மா மாமியைப் பற்றி வாப்படம்மாவிடம் திட்டிக்கொண்டிருந்தாள். வாப்படம்மாவின் மூத்த மருமகள் என்பதால் பெரியம்மா எப்போதும் குடும்ப விவகாரங்களில் அதிகம் தலையிடுவாள். அதிலும் மாமியை குற்றம் பிடிப்பதென்றால் அவளுக்குத் தனி விருப்பம் இருந்தது. பெரியம்மா நீண்ட காலமாகவே மாமியை உள்ளூர வெறுத்து வந்தாள். இந்த சம்பவம் மாமியைத் திட்ட அவளுக்கு வாய்ப்பாக ஆகிவிட்டது.

மாமிக்கு இப்படி நடந்தது இது மூன்றாவது முறை. இவரைக் கட்டுவதற்கு முதல் மாமி ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்தும் பெற்றிருந்தாள். ஆனால் அவளது முதல் திருமணத்தில் மட்டுமே அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அதுவும் இரண்டு வயதில் காய்ச்சல் வந்து இறந்து போனது. மாமியின் முதல் திருமணத்தின் போது நான் குழந்தையாக இருந்தேனாம். அதனால் அந்த திருமணம் என் நினைவில் இல்லை.

எனக்கு எட்டு வயதாக இருந்தபோது மாமி இரண்டாவது முறையாக அவளை விடவும் 15 வருடங்கள் மூத்த கிழத்தோற்றத்திலிருந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டாள். அவர் நெட்டைப் பனை மரம் போல் நெடுத்த ஒல்லியான உருவம். எப்போதும் முறிந்து விழலாம் என்ற தோற்றம். நரைத்த ஐதான முடி. முகத்தில் ஆங்காங்கே தாடி மயிர்கள் மலிக்கப்படாமல் இருந்தது. அது அவர் முகத்தை மேலும் அலங்கோலப்படுத்திக் காட்டியது. அவருக்கு 50வயது என்று இளைய சாச்சா கணக்குப் பார்த்துச் சொன்னார். மாமிக்கு அப்போது 35 வயதுதான் ஆகி இருந்தது.

“மறா அவரும் வாழ்றலியா” பெரியம்மா சாச்சாவை முறைத்துக் கொண்டு, இரகசியம் சொல்வது போல் சற்றுத் தாழ்ந்த குரலில் சொன்னாள். மாமி அவரைத் திருமண நாளன்றுதான் முதன் முதலாகப் பார்த்தாள். மாமாவைக் கண்டதும் மாமியின் முகத்தில் ஓர் ஏமாற்றச் சுழிப்பு படர்ந்து மறைந்தது. மாமியின் வெண்மையான முகம் ஆழ்ந்த சோகத்தில் இருண்டு போனது. எனக்கு அவளைப் பார்க்கையில் உள்ளுக்குள் வெப்பிசாரம் வெடித்தது. மாமா தன் காவிப் பற்களைக் காட்டி மாமியைப் பார்த்துச் சிரித்தார். அவர் வாய்க்குள் பற்கள் கூட முழுமையாக இல்லை என்பது தெரிந்தது. மாமி அவர் முகத்தைத் தவிர்த்து வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள். மாமா அதன் பிறகு சிரித்ததை நான் காணவில்லை. அவரிடமிருந்து சுருட்டு வாடை வந்து கொண்டிருந்தது. அந்த நெடி அவரது பிறப்பிலிருந்தே அவரிலிருந்து வந்து கொண்டிருப்பது போன்ற ஆதிப் பிணைப்போடு வரும் கனத்த வீச்சாக இருந்தது.

“புறக்கும் போதே இவரு சுருட்டோடுதான் புறந்திருப்பார்” என்று சின்னச் சாச்சா மாமாவின் காதில் விழாதளவு தொனியைத் தாழ்த்திக் கொண்டு குறும்பாகச் சொல்லிச் சிரித்தார். பெரியம்மா சாச்சாவை மீண்டும் கடுப்பாகப் பார்த்தாள். மாமி கன்னிகை இல்லைதான் இருந்தாலும் பல்லே இல்லாத கிழவனுக்கு கட்டி வைக்கப்பட வேண்டியவளில்லை என வாப்படம்மாவிடம் ஒரு பெண் பேசிக்கொண்டிருந்தாள். வாப்படம்மா அவளது கதையை கவனத்தில் எடுக்காமல் வேறு கதைக்கு வேகமாகத் தாவினார். அந்தப் பெண்ணும் அதைப் புரிந்துகொண்டவள் போல் தன் முகத்தை வேறுபக்கமாகத் திருப்பி வைத்துக் கொண்டு இருந்தாள்.

நான் மீண்டும் மாமியையும் மாமாவையும் உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றேன். மாமாவின் முகத்தில் ஓங்கிக் குத்த வேண்டும் என்றொரு வெறி மாமி மீதான பச்சாதாபத்தால் எனக்குள் தோன்றி மறைந்தது. அப்போது மாமி என்னை அழைத்து அவள் பக்கத்தில் வைத்துக் கொண்டாள். அவள் விரல்களில் மருதோன்றி சிவந்து கருத்திருந்தது. தங்கக் காப்புகள் அவளது சிவந்த கைகளின் அழகை மெருகூட்டிக் குலுங்கின. வெளிநாட்டு வாசனை அவள் உடலின் முழுப்பாகத்திலிருந்தும் கிளம்பிக் கொண்டிருந்தது. அருகில் இருந்த மாமா சேர்ட்டின் இரண்டு மேல் பொத்தான்களைத் திறந்து வைத்துக் கொண்டு காற்றுக்கு ஏங்கினார். சேர்ட் காலருக்குள் நீல நிற கைக்குட்டை ஒன்றை மடித்து வைத்திருந்தார். அவருக்கு காற்று வீசும்படி பெரியம்மா என்னிடம் விசிறி ஒன்றைத் தந்து விட்டுப் போனார். நான் சடசடவென்று வீசத் தொடங்கினேன். அந்தக் காற்று அவரிடமிருந்து வந்த சுருட்டு நெடியை வேறு திசை நோக்கி மாற்றிக் கொண்டு சென்றது. பெரியம்மா மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். ஒரு கிழவனை மாமி திருமணம் முடிக்கப் போவதையிட்டு பெரியம்மாவின் முகத்தில் எந்தக் கவலையும் தெரியவில்லை. மாறாக அன்றைய நாள் மிக மகிழ்ச்சியான நாள் என்பதைப் போல அவளது முகமும் உடலும் பூரித்திருந்தன.

மாமி வெளிநாடு சென்றுதான் அவள் வாழப் போகும் அந்த வீட்டைக் கட்டினாள். அதுவும் அரையும் குறையுமாகத்தான் இருந்தது. அவள் அனுப்பிய பணம் முழுமையாக அவளது வீட்டைக் கட்ட செலவு செய்யப்படவில்லை என்ற குறை அவளிடம் இருந்தது. அவள் கிட்டத்தட்ட ஏழு, எட்டு வருடங்கள் பணிப் பெண்ணாக மத்திய கிழக்கில் தொழில் புரிந்தாள்.  அவளது சகோதரர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கும் அவளது பணம் கரைக்கப்பட்டது. எஞ்சிய பணத்தில்தான் அரைகுறையில் அவளுக்கொரு வீடு.

இந்த இரண்டாம் கலியாணம் முடிந்த மறுநாள் மாமி எல்லாவற்றையும் வாப்படம்மாவிடம் சொல்லிச் சொல்லி அழுதாள். வாப்படம்மா அவளை ஏசுவது போலவும், சமாதானம் செய்வது போலவும் மாறி மாறி பாவனை செய்து கொண்டிருந்தாள். மாமி கேவிக் கேவி அழுத போது அவளது வெண்மையான முகம் சிவந்து வீங்கிக் கொண்டு வந்தது. என்னையறியாமல் நானும் அழுது கொண்டு நின்றிருந்தது வாப்படம்மா என்னை அதட்டிய போது தான் எனக்குப் புரிய வந்தது. இரண்டு வருடங்கள் கழித்து மாமி அந்த சுருட்டுக் கிழவரிடமிருந்தும் விவாகரத்துப் பெற்றுக் கொண்டு வெளிநாடு சென்றாள்.

2

சென்ற கிழமை ஓடிச்சென்ற மாமா மூன்று மாதங்கள்தான் மாமியோடு வாழ்ந்திருப்பார். அவரது சொந்த ஊர் குருணாகலை என்று மாமி சொன்ன ஞாபகம். எங்கள் ஊரில் பக்கோடா கலிலின் மலிகைக் கடையில் தினக்கூலிக்கு வேலைசெய்து கொண்டிருந்தார். கடைக்கார முதலாளியின் சிபாரிசின் பேரில் மாமிக்கு அவர் திருமணம் முடித்து வைக்கப்பட்டார். மாமி ஏற்கனவே இரண்டு திருமணங்கள் முடித்திருந்ததால் மாமாவைப் பற்றி பெரிதாக யாரும் விசாரிக்கவில்லை. அவர் அவரது ஊரில் திருமணம் முடித்திருந்தாரா இல்லையா விவாகரத்துப் பெற்றவரா என்றெல்லாம் விசாரித்துப் பார்க்காமலே மாமி அவரது கழுத்தில் கட்டப்பட்டாள். திருமண நாளன்றும் வாப்படப்பா வழக்கம் போன்று அவரது சாய்மனைக் கதிரையில் சாய்ந்து கொண்டு குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தார்.

ஓடிச் சென்ற மாமா அநேகமாக இப்போது தனது சொந்த ஊருக்குச் சென்றிருக்கலாம். அல்லது தலைநகரில் வழக்கம் போல் ஒரு கடையில் வேலைக்குச் சேர்ந்திருக்கலாம். நகரத்தின் சந்தடிமிக்க பிஸியான வர்த்தகத்தில் மூழ்கி ஒரே நாளில் மாமியை நிரந்தரமாக மறந்தும் போயிருக்கலாம். அல்லது ஊரில் அவருக்கு என்னைப் போல் பிள்ளைகள் இருக்கலாம். மீண்டும் ஒரு தந்தையாக அவர்களை அவர் சென்றடைந்திருக்கலாம்.

இனி மாமியை என்ன செய்வது என்ற தீர்மானம் எடுக்கும் கூட்டம்தான் வாப்படம்மாவுக்கும் பெரியம்மாவுக்கும் நடந்து கொண்டிருந்தது. வாப்படம்மாவும் வாப்படப்பாவும் இப்போது தங்கி இருக்கும் வீடு மாமியின் தங்கையான என் சின்ன மாமியின் வீடு. அவர் மத்திய கிழக்கில் பணிப்பெண்ணாக இருப்பதால் அவரது வீட்டில்தான் அவர்கள் தங்கி இருப்பார்கள். அதனால் மாமியின் அரைகுறை வீட்டில் மாமியைத் தனியே வைக்க முடியாது. அதனால் மாமியைத் திரும்பவும் வெளிநாட்டுக்கு அனுப்புவதுதான் சரி என பெரியம்மா பிடிவாதமாக இருந்தாள். மாமி நீர்கோர்த்த கண்களோடும், அழுது புடைத்த முகத்தோடும் மௌனமாக இருந்தாள். ஆனாலும் பெரியம்மாவின் தீர்மானத்தை அவள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது அவள் முகத்தில் சூசகமாகத் தெரிந்தது.

“இனி இவளுக்கு கலியாணமே தேவல்ல. புடிச்சி வெளிநாட்டுக்கு அனுப்பிடுங்க. திரும்பயும் போய் வரட்டும்”

குடும்பம் முழுமையாக பெரியம்மாவை ஆமோதிப்பது போல் அவளின் முரட்டுத் தனமான குரலில் திரண்டு எழுந்த பேச்சை மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தது. மாமியின் விருப்பு வெறுப்புகள் கூட கவனத்திற்கொள்ளப்படாத ஓர் இறுக்கமான சூழல் அங்கே நிலவிக் கொண்டிருந்தது. மாமியே கூட எதுவும் பேசாமல் சிறிது நேரம் ஆழமான மெளனத்தில் உறைந்து போயிருந்தாள்.

“தனிய இருந்து என்ன செய்யப் போறாய்? வெளிநாட்டுக்குப் போனா கொஞ்சங் காசச் சம்பாதிச்சிட்டு வரலாம்.” பெரியம்மா திரும்பத் திரும்ப அதே பல்லவியையே பாடினாள்.

“இல்ல, நான் இனி வெளிநாட்டுக்குப் போமாட்டன். இவ்வளவு காலமும் நான் கஷ்டப்பட்டு அனுப்புன காசிக்கு என்ன நடந்திருக்கு. நான் இனிப் போரல்ல..”

விம்மலுடன் மாமியின் வாய் திறந்தது.

பெரியம்மா விடாமல் திரும்பத் திரும்ப அழுத்தம் கொடுத்தாள். மாமி என்ன நினைத்தாளோ தெரியவில்லை திடீரென்று வெறிகொண்டவள் போல் கத்தினாள். பெரியம்மா சில நொடிகள் மிரண்டு எழுந்துவிட்டாள்.

பின்னர் ஒவ்வொருவராக மௌனமாகக் கலைந்தனர். வாப்படப்பா சாய்மனைக் கதிரையில் சாய்ந்து கொண்டு குர்ஆனில் மூழ்கி இருந்தார். அவருக்கு சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி எதுவும் தெரியவில்லை. அவர் நிஜ உலகத்திலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டவர் போல் சஞ்சரித்துக் கொண்டிருந்தார். மாமி அவரை சில நொடிகள் வெறுப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

எல்லோரும் கலைந்துவிட்டிருந்த அந்த மாலைப்பொழுதில் நான் மாமியின் காதருகே சென்று மெல்லக் கேட்டேன்

”மாமி நாம ரெண்டு பேரும் மாமாவத் தேடிப் போவமா?” அவள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை. திடீரென்று உடைந்து அழத்தொடங்கினாள். முகத்தை முந்தானையால் மூடிக்கொண்டு சுவரோடு ஒட்டித் தரையில் குந்திக் கொண்டு. நான் அதனை அவளிடமிருந்து எதிர்பார்க்கவில்லை என்பதால் யாரும் காணு முன்னமே அங்கிருந்து தலைதெறிக்க ஓடினேன்.

3

மாமி சில நாட்களாக யாருடனும் எதுவும் பேசாமல் மௌனமாக ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தாள். அவள் எப்போதும் முணுமுணுக்கும் பாட்டு வரிகளைக்கூட இப்போது அவளிடமிருந்து கேட்க முடியவில்லை. எனினும் வாழ்க்கையை அதன் போக்கில் விட்டுவிடாமலும் வாழ்வதற்கான உத்திகளை மனதுக்குள் வரைந்துகொண்டும் முன்செல்லும் முடிவை நோக்கி அவள் சுயமாக நகர்ந்து கொண்டிருந்தாள். அந்த முடிவு ஓர் ஆத்ம விசையுடன் அவளைத் தாக்கியது. சுவரில் சாய்ந்து கொண்டு தரையில் குந்தியிருந்தவள் திடீரென்று தீர்மானத்துக்கு வந்தவள் போல் உடலை நிமிர்த்தி எழுந்தாள். பெரிய அலையொன்று முறுகித் திமிறி உயர்ந்து எழுவதைப் போல அவள் எழுந்தாள். அப்போது அவள் கண்களில் உலக மனிதர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் திரண்டிருந்ததைப் பார்த்தேன்.

யாரும் நுழைய முடியாத அடர்ந்த காட்டுக்குள்ளும் ஒரு வெட்டவெளி இருப்பதைப் போல வாழ்வதற்கான ஒருவெளியை அவள் கண்டடைந்தாள். அந்த வெளியில் ஒரு பயணி தங்கிச் செல்வது போல் தன்னை சுதாரித்துக் கொண்டு வாழ்க்கையை வடிவமைத்தாள். மாமா அவள் மனதிலிருந்தும் தேய்ந்து அழிந்து அரூபமாகக் கரைந்து விட்டிருந்தார். இருளில் கலந்து விட்ட நிழல் போல் அவர் உருவம் அவளிடமிருந்து அடையாளம் காண முடியாத மனத் தொலைவுக்குச் சென்றுவிட்டது.

“நான் வீட்ட போகப் போறன். தனியா வாழப் போறன். இனி எனக்கு கலியாணமெல்லாம் வாணா.” அவள் வாப்படம்மாவிடம் உறுதியாகச் சொன்னாள்.

“தனியா ஒரு பொம்புள நீ எப்புடி இருப்பாய்? உண்ட வீடும் அறுக்கல்லாம அரையும் குறையுமாக் கிடக்கு” வாப்படம்மா சந்தேகமாகக் கேட்டாள்.

“ராவெய்ல காவலுக்கு இவன் வருவான் எனடா?” என என்னைத் திரும்பிப் பார்த்துக் கேட்டாள். என்னை முதன் முதலாக ஒரு ஆண் மகனாக அவள் ஏற்றுக் கொண்டதில் எனக்குள் பிரளயமொன்று பீறிட்டது. இனம் புரியாத ஒரு சக்தி என் உடலெங்கும் பரவியது போல் உணர்ந்தேன். ஓர் ஆணுக்கான தகுதியை நான் அடைந்துவிட்டதாக அவள் நினைத்துவிட்டாள். அநிச்சையாக என் தலை அசைந்தது.

மாமா ஓடிச் சென்ற அந்த நாளுக்குப்பின் மீண்டும் மாமி தன் அரைகுறை வீட்டுக்கு என்னையும் அழைத்துக் கொண்டு சென்றாள். மாமி தன் வாழ்க்கையை முன்கொண்டு செல்வதற்கு தன் சொந்தக் கால்களையும், கைகளையும் மட்டுமே நம்பி இறங்கினாள்.  சிறுவர்கள், பெண்களுக்கான ஆடை வியாபாரம் ஒன்றைத் தொடங்கினாள். வீடு வீடாகச் சென்று விற்பது என்றொரு புதிய வியாபார முறையாக அது இருந்தது. ஊரில் அந்த வியாபார முறையை தொடக்கி வைத்த முன்னோடிகளுள் ஒருத்தியாக அவள் இருந்தாள்.

சனியும், ஞாயிறும்தான் நான் மாமியின் வியாபார உதவியாளனாக இருந்தேன். மற்ற நாட்கள் பள்ளிக்கூடம் போய் விடுவேன். ஆனாலும் எனக்கு பள்ளிக்கூடம் போவதை விடவும் மாமியின் வியாபார உதவியாளனாக இருப்பதே அதிகம் பிடித்திருந்தது. ஆனால் மாமி அதை விரும்பமாட்டாள். பள்ளிக்குப் போ என்று துரத்தி விடுவாள். எனினும் அவளால் ஒருபோதுமே புரிந்துகொள்ளப்படாமல், வெற்றிகொள்ளப்படாமல் போன ஆண்களின் உலகம் அவளைப் பின்தொடர்ந்தபடியே இருந்தது.

ஒவ்வொரு நாளும் மாமி தெருக்களில் வைத்து சீண்டப்பட்டாள். அசிங்கமான வார்த்தைகளால் ஆழமான மனக்காயங்களால் அவளது வாழ்வு புன்னாகியது. முடிந்தளவு அவள் அங்கேயே வார்த்தைகளாலும் உடல் மொழியாலும் எதிர்வினையாற்றிக் கொண்டே வருவாள். ஒரு முள்ளுத் துண்டைக் கவ்வுவதற்காக காத்துக்கிடக்கும் நாய்கள் போல் வெளியில் மனிதர்கள் அவளுக்காக காத்துக் கிடந்தனர். ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையிலான ஒரு சாதாரண விளையாட்டுப் போல் எனக்கு அது தெரிந்தது. உண்மையில் அது பெண்ணின் மீதான இளக்காரமான பார்வையிலிருந்தும் ஆண்களின் காமத்திலிருந்தும் முளைத்த முரண்பாட்டின் விளைவாக அது இருந்தது. அவளது அன்றாட அனுபவங்கள் அழிக்க முடியாத தழும்புகளாக மனதில் பதிந்து அவளை கீறிக் கிழித்தன.

அன்று பக்கத்து ஊருக்குச் சென்று விற்பனைக்காக ஆடைகள் வாங்கி வருவதற்காக பஸ்ஹோல்ட்டில் நின்று கொண்டிருந்தோம். வேறு யாரும் இல்லை. மாமியின் கையில் அவளது வழமையான சற்று ஊதிப் பெருத்த பயணப்பை இருந்தது. அந்தப் பைக்குள் அவள் அன்றைய நாளுக்குத் தேவையான அனைத்தையும் அடக்கி விடுவாள். நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒருவன் மிதிசைக்கிளில் வந்து கொண்டிருந்தான். மாமியின் அருகே வந்ததும் மிகத் தாழ்ந்த குரலில் கிட்டத்தட்ட மாமிக்கு மட்டுமே கேட்கக்கூடிய அடக்கமான தொனியில்,

“யாரக் காத்துக்கிட்டு நிற்காய்..? என்னோட வாரியா..” என்றான் மிக அலட்சியமாக கண்களைச் சிமிட்டிக்கொண்டே.

மாமியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. முகம் தணலாக சிவந்து வந்தது. செருப்பைக் கழற்றுவது போல் குனிந்து கொண்டே அவன் மீது வசவுகளை உமிழ்ந்தாள். சைக்கிளை நிறுத்தாமலே அவன் தொடர்ந்தும் மிதித்துக் கொண்டிருந்தான். எந்தக் குற்றவுணர்ச்சியும் அவன் முகத்தில் இல்லை. ஒரு பெண்ணை அசிங்கப்படுத்தி விட்டோம் என்ற பெருமிதம்தான் அவன் முகத்தில் பொங்கியது போல் தெரிந்தது. அவன் எதுவும் நடக்காதது போல் அநாயாசமாக சைக்கிளை மிதித்துக் கொண்டே சென்று கொண்டிருந்தான். யாரும் மாமியிடம் எதுவும் கேட்கவில்லை. அவனையும் யாரும் எதுவும் செய்யவுமில்லை. சுரணையற்ற மனிதர்களைப் போல் பலரும் அலட்சியமாக எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தனர். நான் இதை எல்லாம் பார்த்து இரசிக்கும் ஒரு பருவத்திலேயே இருந்தேன்.

மாமி ஆண்களின் காமச்சேட்டையிலிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்கு புதிய உத்திகளைக் கைக்கொள்ளத் தொடங்கினாள். அவள் தன்னை அலங்கோலப்படுத்திக் கொண்டாள். மாமியின் உடலில் முதுமையின் சுவடுகள் எதுவும் இல்லை. ஆனாலும் முதுமையின் சாயலைத் திட்டமிட்டே தன் உடலில் படியவிட்டாள்.  அவளுக்கு எந்தவிதத்திலும் பொருந்தாத மட்கிப் பொலிவிழந்த நிறத்தில் மிகப் பழைய சேலையும் பர்தாவும் அணியத் தொடங்கினாள். ஒரே ஆடையை குறைந்தது மூன்று நாட்களுக்காவது அணிந்துகொள்வாள். கோழியின் சடையிலிருந்து வரும் ஒருவித நெடி ஆடையிலிருந்து வந்தது. முன்பு அவளிடமிருந்து வரும் வெளிநாட்டு வாசனையை முகர்வதற்காக அவள் பக்கத்தில் நான் மூக்கை கூர்மையாக்கிக் கொண்டு குந்தி இருப்பேன். அவள் முகத்திலிருந்த இலட்சணத்தை சிரமப்பட்டு மறைத்தாள். புன்னகையை இழந்தாள். மகிழ்ச்சியான மிகவும் இனிமையான நளிமனமிக்க அவளது உடல் முறுகி இறுகியது.  காற்றில் கரைந்த நிழல் போல் அவள் தன் உருவைக் கரைத்துக் கொண்டு வந்தாள்.

அவள் தன்னோடு எப்போதும் தூக்கிச் செல்லும் பையின் அளவும் மாறியது. சற்றுப் பெரிதாக ஊதிப் பெருத்தது. அவளது மட்கிப் போன ஆடைகளுக்குள்ளும், ஊதிப் பெருத்த பைக்குள்ளும் வேண்டுமென்றே அவளது அழகு அவளால் மறைக்கப்பட்டது. மேகங்கள் நிலவை மூடிக் கொண்டதைப் போல. ஆனால் அதன் உள்ளே இருக்கும் அழகை நான் அறிவேன். மேகம் விலகியதும் பூரண சந்திரன் ஜொலிப்பதைப் போல வியாபாரம் முடித்து வீடு திரும்பியதும் அவள் தன் வேஷத்தைக் கலைத்துச் சிரிப்பாள். அவள் அழகு ததும்பி வழிந்து கொண்டிருக்கும். அவளது சிவந்த உடல் அயன் பண்ணப்பட்ட ஆடை போல் நேர்த்தியாய் மிளிரும்.

அவளது உத்தி அவளுக்கு கொஞ்சம் வெற்றியளித்தது. வீதியில் அவளுக்குத் தொல்லைகள் மெல்ல மெல்லக் குறைந்து கொண்டு வந்தன. ஆனாலும் அவளது துரதிஸ்டம் மொத்தமும் ஒரு ஆணாக மாறி வீடு தேடி வரத்தொடங்கியது.

4

மெலிதாக இருள் கவியத் தொடங்கும் போதே அவர் வந்துவிடுவார். மாமி அவரை வெறுப்பாகப் பார்த்துக் கொண்டு கதவருகில் அசையாது நின்றிருப்பாள். ஆனால் அவர் வரும் ஒவ்வொரு முறையும் அவரது முகத்தில் பெரிய மகிழ்ச்சி வழிந்தோடிக்கொண்டிருக்கும். அந்தத் தருணம் மாமியின் முகம் அடையும் உக்கிரத்துக்கு முற்றிலும் மாற்றானது அவர் முகம். நான் முற்றத்தில் நிற்கும் ஜே மரத்தின் கீழ் பாய் போட்டு படித்துக் கொண்டிருப்பேன். நன்றாக இருள் கவிழ்ந்து புத்தகத்திலுள்ள எழுத்துகள் உருத் தெரியாமல் மறையும் வரை நான் படித்துக் கொண்டிருப்பேன்.

சில நாட்களாக அவர் தொடர்ந்து வரத் தொடங்கி இருந்தார். அவர் இருள் செறிவாகும் நேரத்தில்தான் வருவது வழக்கம். அப்போது கூட என் சிறிய மண்டைக்கு அவர் பற்றி வேறுவிதமான சித்திரம் உருவாகவில்லை. அவர் வருகையை பற்றி எனக்குள் எந்த சலனமும் ஏற்பட்டிருக்கவில்லை. நாளடைவில் மாமி அவர் வருகையை விரும்பவில்லை என்பதை மட்டும் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்துகொள்ளத் தொடங்கினேன். நான் அப்போதுதான் சைக்கிள் செலுத்தக் கற்றுக் கொண்ட புதுப் பழக்கம். அதனால் சைக்கிள் ஓடும் ஆசை உடல் முழுவதும் ஓடிக் கொண்டிருந்தது. அவர் வந்ததும் சிலநாட்களில் எனக்கு அவரது புதிய லுமாலா சைக்கிளை ஓட்டிப் பார்க்கத் தந்துவிடுவார். நான் ஓட்டிக்கொண்டு வெகுதொலைவு வரை சென்று விடுவேன். அதுவரை அவர் மாமியோடு பேசிக்கொண்டிருப்பார்.

அவர் எங்களுக்கு தூரத்து உறவினராக இருந்தார். ஒரு நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க மனிதர். இராணுவத்தில் லான்ஸ் கோப்ரலாக பணியாற்றிக் கொண்டிருந்தார். தலைமுடியை ஒருபக்கமாகச் சரித்து மண்டையோடு ஒட்டி வைத்ததைப் போல் நேர்த்தியாகச் சீவி இருப்பார். அவர் தலைகூட எப்போதும் ஒரு பக்கம் கெளிந்தே இருக்கும். அவர் நடக்கும் போது தலை மேலும் முன்னோக்கி சரிந்து விழுந்து விடுபரைப் போலவே நடப்பார். அது இராணுவப் பயிற்சியிலோ அல்லது யுத்தத்திலோ அவர் உடலில் ஏற்பட்ட கோளாறாக இருக்கலாம் என அப்போது எண்ணிக் கொள்வேன். ஆனால் அவரது கெளிந்த தலையும் கெளிந்த நடையும் என்னை வசீகரித்திருந்தன. கையிலோ முகத்திலோ ரோமங்கள் எதுவும் இல்லை. எண்ணெய் பூசியது போன்ற பளபளப்பு எப்போதும் அவர் உடலில் இருந்துகொண்டே இருக்கும். மணிக்கட்டு வரை வழுகிக் கிடக்கும் தளர்வான கோல்ட் நிற வொட்ச் ஒன்றை கட்டியிருப்பார். அதன் மீதும் ஒரு அசட்டுக் கவர்ச்சி எனக்கு ஏற்பட்டிருந்தது. அநேகமாக அதே நிறத்திலேயே அரைக் கைச் சட்டை ஒன்றை அணிந்திருப்பார். கருப்புக் கால்சட்டையைத் தவிர அவர் வேறு நிற கால்சட்டைகள் அணிந்து வந்ததைக் காணவில்லை. அவரது உடலைப் போன்றே ஒரு கண்ணும் மிகப் பளபளப்பாக இருந்தது. பிறகு நன்றாக உற்றுப் பார்த்த போதுதான் அது பொய்க்கண் எனத் தெரிய வந்தது. போர் அவரில் ஏற்படுத்திய தழும்பு அது.

அவராகவே வீட்டுக்குள் வந்து நாட்காலியில் உட்கார்ந்து கொண்டு மணித்தியாலக் கணக்கில் மாமியுடன் பேசிக்கொண்டிருப்பார். அவர் மட்டுமே பேசிக் கொண்டிருப்பார். மாமி சுவரில் சாய்ந்து தரையில் குந்திக் கொண்டு அலட்சியமாக அவரது கதைகளைக் கேட்டுக்கொண்டிருப்பாள். “ம்..ஆ..” என்பதைத் தவிர வேறு எதிர்வினைகள் அவளிடமிருந்து வருவதில்லை. அதுவும் சுரத்தையில்லாமல் ஆழத்திலிருந்து வரும் குரல்போல மங்கியே கேட்கும்.

அவள் முகத்தில் வெறுப்பும் கோபமும் படர்ந்து வரும். அவளது அழகிய சிவந்த முகத்தில் ஒரு பெரிய மருப் போல் அந்த உணர்ச்சி வெளியாகி அவள் முகம் இறுகும். கண்களின் வளைவான இடுக்குகளில் நீர் கோர்த்து மின்விளக்கொளியில் பளபளப்பது தெரியும். சற்றைக்கெல்லாம் உடைந்து விடுபவளைப் போல் தெரிந்தாலும் அந்த கொந்தளிப்பை தனக்குள் அடக்கிக் கொண்டு “ம்ம்” என்ற ஒலியை தொடர்ந்தும் எழுப்பிக் கொண்டிருப்பாள். அவர் அதைக் கண்டு கொள்ளாமலே மாமியை எதையோ நோக்கி கதையால் அழைத்துச் செல்லும் உறுதியான தீர்மானத்தோடு இருப்பார். அப்போது அவர் தலைகுனிந்திருக்கும். கைகளை சடசடவென ஆட்டியபடி இருப்பார். அவரது ரிஸ்ட் வொட்ச் கலகலலென ஓசை எழுப்பியபடி மேலும் கீழும் ஏறி இறங்கிக் கொண்டிருக்கும். நான் மறு மூலையில் குந்தி இருந்து கொண்டு மாமியையும் அவரையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருப்பேன். இப்போது மாமிக்கு இது ஒரு புதிய பிரச்சினையாக உருவெடுத்திருந்தது. வீதியைச் சமாளிக்கத் தெரிந்த அவளுக்கு வீட்டைச் சமாளிப்பதும் தெரியாமலிருக்கப் போவதில்லை. கோப்ரல் தொடர்ந்தும் வரத்தொடங்கிவிட்டார். மாமிக்கு கொஞ்சமும் பிடிக்காத அருவருப்பான ஒரு மனிதனாக அவர் மாறினார்.

மாமியின் போக்கில் திடீரென்று சில மாறுதல்கள் நிகழத் தொடங்கின. திடீரென்று விசித்திரமாகப் பேசத் தொடங்கினாள். நீண்ட நேரமாகத் தொழுதாள். சில நாட்களில் நேரங்கெட்டும் தொழுதாள். நீண்ட பிரார்த்தனைகள். அது அவள் ஓதுவதைப் போலவே இல்லை. அவளது குரலிலிருந்த இனிமை மெல்ல மெல்லக் கரைந்து யாருடையதைப் போலவோ ஆனது. கரடுமுரடான ஒரு ஆணிண் குரல் போன்று அவள் சில இரவுகளில் அரற்றத் தொடங்கினாள். அவளிடமிருந்த நளினம் முழுமையாகவே இல்லாமல் போனது. சூரியன் மறைந்ததும் இருள் செறிவதைப் போல அவள் முகம் பொலிவிழந்து இருண்டது. வீதியில் பலருக்கும் அவளை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது. அவளும் யாருடனும் பேசிக் கொள்வதையும் தவிர்த்தாள். இப்போது பெரியம்மாவால் கூட அவளை இலகுவாக அடையாளம் காண முடியாது போயிற்று. வீட்டைக்கூட்டிப் பெருக்கும் போதும் ஏதேதோ பேசினாள். முன்பென்றால் அவள் வாசல் கூட்டும் போது வீட்டு வேலைகள் செய்யும் போது யாரும் கதைத்தாலும் கதைக்க மாட்டாள். இப்போது அதன் மறுபிம்பமாகத் தெரிந்தாள்.

வீட்டைப் பெருக்கிக் கொண்டிருக்கும் போது “அடிநடைக்குக் கூட்டவா, திண்ணைக்குக் கூட்டவா” என்று தும்புத் தடியை விரலிடுக்கில் வைத்து கிறுக்கிக் கொண்டே கேட்டாள். அவ்வப்போது கோரமான மொழியில் ஓதுகிறாள். தனியே கோரமாகச் சிரிக்கிறாள்.

நான் “மாமிக்கு என்ன?” என்றேன் தயங்கிய படி.

“எனக்கிட்ட ஜின் இருக்கு” என்றாள். அதைச் சொல்லும் போது அவள் கண்களில் தைரியத்தையும், முகத்தில் பெருமிதத்தையும் கண்டேன்.

“அது என்ன செய்யும்?” நான் கேட்டேன்.

“அது ஆண்களைக் கொல்லும்” அவள் சொல்லும் போது அவள் உடல் முறுகி ஏறி இறங்கியது.

“என்னையும் கொல்லுமா?” என் குரல் பயத்தில் இழுத்து இரைந்தது.

“இல்ல, அது கெட்ட ஆண்களத்தான் கொல்லும். நீ சின்னப் பையன்” என்றாள். என் முகத்தில் படர்ந்த அச்சம் அவளுக்குள் ஒரு பரவசத்தைத் தூண்டியது. என் முகத்தில் அவள் அப்போது கண்டது இந்தப் பிரபஞ்சத்திலுள்ள மொத்த ஆண்களினதும் பயத்தை.

அன்று இரவும் கோப்ரல் வந்திருந்தார். நீண்ட நேரமாகப் பேசிக்கொண்டே இருந்தார். என்னிடம் சைக்கிளைத் தந்து வெளியே தூரத்துக்குப் போய்விட்டு வரும்படி சொன்னார். மாமி அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.

“அவன் ராவெய்ல வெளிய போமாட்டான்” என்றாள். மாமி அப்படிச் சொன்னதும் அவர் முகத்தில் ஏமாற்றம் படிந்தது. அவரது எண்ணங்களுக்கு மாமியிடம் இடம் இல்லை என்பதை புரிந்தும் புரியாதவர் போல், விட்டுக் கொடுக்க முடியாதவர் போல், அமைதியானார். இச்சையைத் தணித்துக் கொள்ளும் வேட்கையின் உந்துதலில் அவர் உடல் முறுகிக் கிறங்கியது. மாமியின் உடல் மீதான அவரது வேட்கை இரவுப் பொழுதிலும் அனல் போல் அவர் முகத்தில் தகித்துக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் தன்னைத் தளர்த்திக் கொண்டு ஆற்றாமையுடன் அங்கிருந்து போனார். நான் என் அறையில் தூங்கிப் போய்விட்டேன்.

நள்ளிரவு நேரம். திடீரென்று கதவைத் தட்டும் ஒலி மாமியை எழுப்பியது. வந்திருப்பது அவர்தான். மாமி கதவைத் திறக்க மறுத்தாள். அவர் ஏதோ ஒன்றை மறந்துவிட்டுச் சென்றிருப்பது போல் பாவனை செய்து கொண்டு உள்ளே வந்துவிட்டார். சிம்னி விளக்கிலிருந்து வெளிச்சம் கசிந்து கொண்டிருந்தது. அந்த மங்கல் ஒளியிலும் மாமி பிரகாசமாகத் தெரிந்தாள். களைந்திருந்த அவள் ஆடைகள் அவள் அழகை பகிரங்கமாகக் காட்டின. கோப்ரல் அவள் அருகே ஒரு கரிய மரம் போல் நின்றிருந்தார். அவளைத் தீண்டும் வேட்கை அவரை சுயகட்டுப்பாட்டை இழக்கச் செய்திருந்தது.

“ராவெய்க்கு மட்டும் நான் இங்க தங்கிக்கிறன்” என்று அவர் சற்று அதட்டலான தொனியில் சொல்லிக் கொண்டே முன்னோக்கி வந்தார். மங்கல் வெளிச்சத்தில் காமம் வழியும் அவர் முகம் இறுக்கமாக இருந்தது. மாமியின் கையை அவர் சட்டெனப் பற்றிக் கொண்டார். மாமி வேகமாக உதறிப் பின்னகர்ந்தாள். கோப்ரல் ஒரு கணம் தடுமாறி பின் சுதாரித்து திடமானார். மாமியை மீண்டும் இறுக்கியணைக்க அவர் கைகள் மேலுயர்ந்து நீண்டன.

மாமியின் ஜின் விசுவரூபமெடுத்தது. சாந்த சொரூபியாய் இருந்தவள் திடீரென்று உக்கிர சொரூபியாய் மாறினாள். உண்மையான ஜின்னே ஒரு பெண் வடிவில் வந்துவிட்டதைப் போல் மாமியின் உருவும், குரலும் மாறின. யாரும் அவளிடமிருந்து அதுவரை கேட்டிராத தொனியில் அரற்றினாள்.

அவள் ஒரு பெண்ணே இல்லை என்பதைப் போல் தலையை விரித்துப் போட்டபடி கையில் உலோகப் புடி போட்ட டோர்ச் லைட்டை வேகமாக அசைத்துக் கொண்டு நின்றாள். அவள் உடல் ஆடிக் கொண்டிருந்தது. கோப்ரல் திணறி மேலும் மெல்ல மெல்லப் பின்வாங்கி கதவுப் பக்கமாக ஒதுங்கினார்.

குளிரில் நடுங்கும் குரங்கு போல் என் உடல் கட்டுப்பாட்டை மீறி அதிர்வதை உணர்ந்தேன். அவளைத் தொடர்ந்தும் பார்க்க முடியாது பயத்தில் மூத்திரம் போகும் உணர்வு சில்லிட்டது. அரபு மொழியில் மாமியின் ஜின் பேசியது. அதுவரை நாங்கள் கேட்டிராத கடுமையான தொனியில் அது பேசியது. அந்தக் குரலில் இருந்த கோரமும், மாமியின் உருவில் தெரிந்த குரூரமும் கோப்ரலை பின்வாங்கச் செய்தன. கோப்ரல் கதவைத் திறந்து தானாகவே வெளியேறி ஒரு திருட்டுப் பூனை பாய்ந்து ஓடுவதைப் போல் ஓடி இருளில் மறைந்தார்.

மாமிக்கு கடுமையாக மூச்சு வாங்கியது. “ம்ஹ்..ம்ம்ஹ்“ என இடையிடையே முணகலும் அரபும் கலந்த ஒரு பாஷையில் அவள் இடையறாது ஓதிக் கொண்டே இருந்தாள். மாமி கதவைச் சாத்தி விட்டு திண்ணையில் தொழுகைப் பாயை விரித்தாள். அதே முணகலுடன் அவள் உடல் நடுங்கிக் கொண்டே இருந்தது. தொழுகைப் பாயில் கால் மடித்து உட்கார்ந்து கொண்டு முன்னும் பின்னுமாக அவள் உடல் அசைந்து கொண்டிருந்தது. ஓங்காரமாக ஓதத் தொடங்கினாள். மந்திரம் போல் திரும்பத் திரும்ப ஒரே வசனங்களையே ஓதினாள். கையிலிருந்த தஸ்பீஹ் மணிக் கோர்வை விரல்களுக்குள் சீரான வேகத்தில் சுழன்று கொண்டிருந்தது. படுக்கையை விட்டும் எழாமலே மருட்சியான கண்களால் அவளைப் பாரத்துக் கொண்டு பாயில் கிடந்தேன். மாமியின் ஜின்னுக்கு ஆண்களைப் பிடிக்காது என்று அவள் சொன்னது ஞாபகம் வந்தது. நானும் அதுக்குப் பிடிக்காதவனாக ஆகிவிட்டேனோ? என்ற அச்சம் தலைதூக்கவே மறு பக்கமாக திரும்பிப்படுத்துக் கொண்டேன்.

சிறிது நேரத்தில் மாமி ஓங்காரமாக உடைந்து அழும் சத்தம் கேட்டது. அந்த அழுகை அவளது சொந்தக் குரலில் அந்த அறை எங்கும் நிறைந்து கொண்டிருந்தது.

 

சில கனவுகளும் சிலைகளும் – இவான் கார்த்திக்

இவான்கார்த்திக்

கிணற்றின் நுனியில் நின்றுகொண்டு குதிக்க எத்தனிக்கும் சமயம் அதனுள் நான் ஏற்கனவே நீந்திக்கொண்டிருக்கிறேன் எனபது தெரிகிறது. இருவரும் ஒருவரையொருவர் திகைப்புடன் பார்க்கும் கணத்தில் அவன் உருவம் கலைந்து இன்னொருவனாகியதும் கனவு கலைந்தது. கைகள் தற்செயலாக கார்த்திகாவின் புடைத்த வழுவழுப்பான வயிற்றை தடவிக்கொண்டிருந்தது. நகம் பட்டால் கிழிந்துவிடும் என்ற பயம் உறக்கத்திலும் இருந்தது. உறக்கத்தில் அவள் எழுந்து மறுபக்கம் சரிந்து படுத்தாள். முன்பென்றால் அப்படியே புறண்டு படுத்துவிடுவாள். எழுந்து திரும்பி படுக்கவேண்டிய கட்டாயம் இப்பொழுது. இருந்தும் சிலசமயம் மறந்து வெடுக்கென்று திரும்பி காலையில் அதற்காக தன்னையே நொந்து கொள்வாள். விஜிலெண்ட் பூங்காவில் சிலைகள் சூழ்ந்த கிணற்றிலேயே அந்த கனவு சம்பவிக்கின்றது. கனவில் என் பின்புறமிருக்கும் சிலைகளை எவ்வளவுதான் முயற்சி செய்தும் ஞயாபகப்படுத்த முடியவில்லை.

கரு உண்டாக்க நாங்கள் கடும் முயற்சியில் இருந்த நாட்களில் ஓர் நாள் காலையில் ஸ்டாக்கோமிலிருந்து பஸ் பிடித்து இறங்கி வரும் பொழுது நான் எண்ணிக்கொண்டு வந்தது அந்த பூங்காவைப்பற்றியே. அவளிடம் அதனைப்பற்றி தினமும் ஒரு தடவையாவது சொல்லுதிர்க்காமல் இருந்ததில்லை. ஒற்றை மனிதால் அவன் வாழ்நாளில் வடித்து உருவாக்கப்பட்ட சிலைகள். அத்தனை சிலைகளுக்கான ஒரு திறந்த வெளி மியூசியமாகவே நார்வே நாடு உருவாக்கியிருந்தது. தலைநகர் அதற்குண்டான தனிமையுடன் இருந்தது. இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் பாச்சா போல மக்கள் கூட்டம் இருக்கையில் புது வாசிகளுக்கு இது மட்டுமல்ல வடதுருவ நாடுகள் எல்லாவற்றிலும் தலைநகரத்திற்கான அங்க அடையாளங்களை காண்பது கடினமானதே. தெரிந்தவர் தெரியாதவர்களுக்கு ஒரு சிறிய ஹாய் மட்டுமே பரிமாற்றப்பட்டு அப்படியே கடந்து சென்று விடும் இந்த மக்கள் நிச்சயமாக சாதரணவர்கள் அல்ல. அந்த சிரிப்பு எழுந்து அடங்க ஒரு நொடியிலும் குறைவாகவே ஆகும். அதற்கு பதில் அளிக்கும் முன் அவர்கள் அடுத்த முகங்களுக்கு ஹாய் சொல்லி கிளம்பியிருப்பார்கள். அவர்கள் கைகளில் இருக்கும் காப்பி கோப்பை எப்பொழுதாவது முடியும் என்று நானும் எதிர்பார்க்கிறேன். என்றும் தீராத அட்சய பாத்திரம் போல நிரம்பிக்கொண்டே வருகிறது. மூன்று வேளையும் சோற்றுக்கு பதில் காப்பு குடிப்பதாக ஒருவர் சொன்னதை நான் முழுதாக நம்பிய காலம் உண்டு.

நேற்றிரவு முழுவதும் பெய்த பனி பஸ்ஸின் கண்ணாடிகளில் அடித்துக்கொண்டே இருந்தது. காலையில் உளசட்டை வெளிச்சடையென்று மொத்தம் நான்கு அணிந்து ஓர் தேர் ஊர்வலம் போல இறங்கியும் அவள் பற்கள் முன்போல இன்றும் கிட்டித்ததை பலமுறை அதிகப்படியான சிரிப்புடன் நகைச்சுவையாக முயற்சித்திருருந்தேன். மெலிந்த என் உடலை மேற்சட்டைகள் மூடி வலுவான தோற்றம்கொள்ள செய்திருந்தது. சாலைகளின் ஓரத்தில் பனி ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது சாலை வழுக்காமலிருக்க சிறு சல்லிகள் போடப்பட்டிருந்தன. இவையெல்லாம் நம்மை காப்பாற்றும் என்று நினைத்தால் அது முட்டாள்தனம். சத்தியம் செய்து சொல்லுவேன் நீங்கள் வழுக்கி விழுவீர்கள் நாளுக்கு ஒரு தடவையாவது. இன்றைகான அந்த கணத்தை மனதில் வைத்து கால்களை உரசாமல் தூக்கி வைத்து நடந்தோம்.

என்னை கடந்து சென்ற குழந்தை அவளுக்கான தள்ளு வண்டியில் சாதரணமாக சாய்ந்து படுத்து வாயில் ஜொள் வடிய உலகை மக்களை கூடவே என்னையும் பச்சை விழி கொண்டு மலங்க மலங்க விழித்தது. நிமிடத்திற்கொருமுறை அம்மா குழந்தையை குனிந்து அது கூறிய செய்திகளை அதன் மொழியிலேயே விளக்கி ஜொள்ளை துடைத்து மீண்டும் தொடர்ந்தாள். இதனை இப்படியே காப்பி செய்து பேஸ்ட் செய்தது போல இங்குள்ள அனைத்து அம்மா குழந்தைகள் இப்படியே இருக்கின்றனர். கார்த்திகா இதற்கு முழுவதுமாய் தயாராக இருந்தாலும் எனக்கு இதில் விருப்பமில்லை. அவர்கள் வாங்கிய அதே வண்டியை வாங்கி தள்ளிச்செல்வதில் எந்த ஈடுபாடுமில்லை. இது ஒரு நடிப்பு. அன்பெனும் அரவணைப்பெனும் நடிப்பு. நான் ஆஸ்காருக்கு அடிபோடவில்லை.

வீடு , கடைகளின் கூரைகளில் பனி பாளம் கட்டி நின்றது. குச்சிகளை வைத்து தட்டி சரித்து விட்டுக்கொண்டிருந்தனர். வெயில் சரிந்து பனி பொன்னொளி கொண்டிருந்தது. அவை இரவில் வெண்ணிறம் கொள்ளும். விளக்குகள் இல்லாமல் கூட நடக்கலாம். மின் கம்பங்களில் நீர் வழிந்து உறைந்து வியர்த்திருந்தது. இரும்பு வாசல் கதவுகளுக்கு பின்னால் பனிதாங்கி நின்றன சிலைகள். நான் நடக்க பூங்கா என்னை நோக்கி அடிவைத்து வந்தது.

மூன்றடி அகலம் கொண்ட பாதையின் இருபுறமும் வரிசையாக வெளிர் பச்சை நிற வெண்கல சிலைகள் , கீழே வெண்பனி மூடிய கரை நடுவே கரும்பச்சை நிற நதி ஓடியது. இலைகளற்ற மரங்கள் பனிப்பூச்சூடீ தலை தாழ்த்து நின்றன. சிம்பொனி இசைக்கோப்பின் தொடக்கம் போல ஒவ்வொன்றாக கடந்து நடுவில் ஓர் நீருற்று வளைவு, அதனைச்சுற்றி சிலைகள் , அது ஓர் கோர்வை உச்சத்தில் முடிந்து மற்றது தொடங்கும் தருணம். அதன் பின்னால் படியேற மனித உடல்கள் முறுக்கி நிற்கும் ஸ்தூபி அதனை சுற்றி இரண்டாள் கனத்தின் கற்சிலைகள் அது கடைசி உச்சம். அதன் பின்னால் இறங்கிச்சென்றால் பன்னிரண்டு ராசிகள் பதித்த சிறிய வட்டமான வளைவு. அதன் மேல் சூரிய மணிக்காட்டி. இறுதியில் முனங்கலுடன் சிம்பொனி கச்சேரி முடிந்துவிடும்.

முதல் சிலை குழந்தையை அணைத்தபடி நின்ற அம்மா. அரவணைப்பு என்பதை தாண்டி உள்ளிருந்து வெளியியெடுத்துவிட்ட வருத்தம் அவள் முகத்தில் தோய்ந்து கிடந்தது. முதிரா முலைகள். ஒரு வேளை குந்தியாக இருக்கலாம். “பெத்த உடனே கடம ஆரம்பிச்சாச்சு. நல்லா பாத்தியா. அந்த அம்மா அழுகுறாங்க” என்றேன். கார்த்திகா அதனை விரும்பவில்லை என்பது தெரிந்தது. இல்லையேல் அதற்கு குறைந்தபட்சம் ஒரு சிணுங்கலாவது பதிலாக வந்திருக்கும். முதல் சிலையின் பக்கவாட்டிலும் எதிர்புற வரிசையிலும் தம்பி தங்கைகள் விளையாட்டு பாவனையுடன் நின்றனர். ஒருவன் அவன் தம்பியை தலையில் தூக்கி பிடித்து வைத்திருந்தான். இரு குழந்தைகள் மகிழ்ச்சியின் உச்சத்தில் கைகளை விரித்து ஓடிக்கிண்டிருந்தனர். அவை கடந்த காலத்தில் தங்கிவிடாமல் நிகழ்ந்து கொண்டிருந்தன. அவை அசைந்து கொண்டிருந்ததில் பனி உதிர்த்து கலைசலான பேச்சுத்தங்கள் கேட்பது போன்ற பிரம்மை எழிப்பியது. மறுகணம் பனியில் உறைந்து நிறுத்தப்பட்ட உயிர்கள் போலிருந்தன. ஒவ்வொரு சிலையின் முன்னும் பத்து பதினைந்து நிமிடங்கள் நின்று ஊழ்கத்தில் நிறைக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன். அவர்களின் சிறு தொந்தி , பிரியாத பிரிந்த அதரங்கள் , கால்களின் நகங்கள் , விலா எலும்புகள் , துருத்தி நிற்கும் கருவிழிகள். மேற்கே நிழல் நீண்டு வீழ்ந்து கிடந்தது. எல்லா குழந்தைகளும் தங்கள் அம்மா அப்பாக்களுடன் இல்லாமல் தனியே நிற்கையில் அமைதியுடன் நிம்மதியுடன் முழுமையான சந்தோசத்துடன் இருப்பது தெளிவாகவே தெரிகிறது. பெற்றொர்களின் அருகில் நிற்பவர்கள் என்றும் விடுதலையற்ற சோகத்தில் ஆழ்ந்து தலை சாய்த்து நிற்கின்றனர்.

எதிரிலிருந்த குழந்தையை சந்தேகத்துடன் பார்ர்கும் வளர்ந்த ஆண் அல்லது தந்தையின் சிலை.
உனக்கு என்னிடம் எந்த சம்பந்தமுமில்லை என்பதை அறுதியுட்டு கூறுவது போலிருந்தது அந்த சிலையின் அமைப்பு. கண்களின் கண்டிப்பு குழந்தையின் தொங்கிய தலை. ஆம் அந்த ஆண் சொல்வது உண்மையே. எப்படி எந்த ஒரு உயிரியல் தொடர்பு இல்லாத ஒருவன் குழந்தையை அணைத்து இறுக்கிக்கொள்ள முடியும். தத்து எடுத்துக்கொள்கிறார்கள்தான் , ஆனால் அதன் ஆழத்தில் குழந்தைகள் அவர்களுக்கான துணையே. இல்லையேல் சமூக அக்கறை என்ற போலிபெயரில் குழந்தைகளை தத்து எடுத்துக்கொள்கிறார்கள் தங்களுக்கோர் அடையாளாத்தை சமூகத்தினுள் ஏற்படுத்திக்கொள்ள. என்னால் நம்ப முடியவில்லை. என் அண்ணனோ தம்பியோ குழந்தைகள் பெற்று அவர்களை அன்பால் நிறப்பதாக கூறி கண்ணீர் விடும் பொழுது உள்ளூர சிரிப்புதான் வருகிறது.

கார்த்திகா என் கைகளை பிடித்துக்கொண்டு ஆட்டிக்கொண்டேயிருந்தாள். இவளை காதலித்து கல்யாணம் செய்து கொண்டேன். இவளுடனும் மனம் ஒட்டவில்லை. நான்காண்டுகளாகியும் அதே நிலை. காதலைச்சொன்ன அன்றும் அப்படியே பின்பு ஏன் சொல்லி கல்யாணம் வரை சொண்டு சென்றேன். எனக்கு தேவைகள் இருந்தன. அதனை பூர்த்தி செய்து கொண்டேன். அந்த அளவுக்கு நான் ஒன்றும் பயந்தவன் இல்லையே. நேரடியாக ஒரு விபச்சாரியிடம் சென்றிருக்கலாம். ஆனால் அவள் என்னை உதாசினம் செய்யும் பொழுது தெரியும் நான் அவளை கண்டிப்பாக காதலிக்கிறென் என்பது. விபச்சாரிகளிடம் அந்த நிலை வருவதில்லை. ஆனால் குழந்தை விசயத்தில் இது நடக்கக்கூடாது என்பதில் நான் தெளிவுடன் இருந்தேன். நடிப்பு பசப்பு அறவே இருக்ககூடாது. எனக்கே தோன்ற வேண்டும்….”ஆம் இப்போது பெற்றுக்கொள்ளாலம்”. அவளுக்கு புரியவைக்க முயற்சித்தேன். அவள்மேலுள்ள என் அபிப்பிராயத்தை மறைத்து.

எப்படி ஆண் குழந்தைகளை ஒன்றாக தனக்குள் அன்பில் நிறைந்ததாக கண்டுகொள்ள தொடங்கினான். வெறும் உயிரணு மட்டும் கொண்டு பிறக்கும் அவனோ அவளோ ஓர் தனித்த உயிர் மட்டுமே. நானும் கூட தனித்தவனே….குழந்தைகளை வளர்ப்பது கடமை சார்ந்த செயல் மட்டுமே. தந்தை என்பதே கடமைக்கு சமமானமான சொல். ஓர் ஆண் அன்பால் மட்டுமே நிறைந்து குழந்தையை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அப்படியிருந்தால் அது தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும் நடிப்பு….நான் வயதான காலத்தில் ஆண்கள் பிள்ளைகளை நினைத்து அவர்களின் வாழ்க்கையை சில தந்தைகள் நினைத்து நொந்து கொள்கின்றனர். இதனை அன்பு சார்ந்ததாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. தன்னை அவன் பிரதிபலிக்கவில்லை தன் பெயர் காப்பாற்றப்படவில்லை என்பதால் கூட இருக்கலாம். இல்லை மற்றொன்றாகவும் இருக்கலாம். இதனை கார்த்திகாவிடம் பலமுறை சொல்லி புரியவைக்க வேண்டியிருந்தது.

காலை நேரமாகியதால் மொத்தமாகவே பத்துபேர்க்குள்ளாகவே பூங்காவிற்குள் இருந்தோம். என் மனைவிக்கு சிலைகள் முக்கியமில்லை போல் தெரிந்தது. கைகளை குளிருக்காக நெஞ்சோடு கட்டிக்கொண்டிருந்தாள். வெண் தொப்பியும் முழங்கால் வரை நீண்ட மேல்கோட்டினுள் மறைந்து சிறுமி போலிருந்தாள். என்னவோ சொல்ல நினைத்து மறைக்கிறாள் சொல்லட்டும் பொறுத்திருப்போம் என்று நானும் அடுத்த சிலைக்கு சென்றேன். அவளும் ஒட்டிக்கொண்டாள். மீண்டும் பனி பெய்ய ஆரம்பித்தது மென்மையான பஞ்சு தூறல்கள் மரம் சிலிர்த்த சிறு வெண்பூச்சிகளென ஒன்றன் மீதொன்று விழுந்து தடையமற்ற மற்றொன்றானது. காதுகளை மூடுவது என் பழக்கமல்ல. குளிரில் விறைத்து அவை சிவந்து வலிக்கையில் தொப்பியணிந்து கொள்வேன். அது குளிரை முழுவதுமாய் உணர உதவும்.

அந்த வரிசையில் இருந்த சிலைகள் விடலைப்பருவ ஆண்களும் பெண்களும். அவர்கள் காமத்தை உணர்ந்து கொள்ள தயாராக காத்திருந்த தோற்றம். ஒருவரையொருவர் கைகோர்த்து மூக்குரசி நிற்கும் சிலைக்கருகில் நின்ற பொழுது என் மனைவி என்னைப்பார்த்து முறுவலித்தாள் வெட்கத்துடன். எனக்கோ அவர்கள் இருவரும் சோகத்துடன் இருப்பது போலிருந்தது…அந்த தருணம் முடிந்தும் வரும் ஏக்கம் தனிமை எதையோ இழந்து விட்ட வெறுமை. அவள் கரு தரித்திருப்பதைக்கூட சொல்லியிருக்கலாம். அடுத்தலில் வட்ட வளைவினுள் இருவர் கைகால் கோர்த்து சுழன்று நின்றனர். இருவரும் அடுத்தவர் கால்களை தொட்டிழுத்து ஒருவர் மற்றொருவரை துரத்தி பிடிக்க முயன்றிருந்தனர். ஒருவருக்கொருவர் அகப்பட்டுக்கொள்வர் என்று நினைக்கும் கணம் தப்புத்துக்கொண்டேயிருந்தனர்.

முடிகளை சிலுப்பி விட்டு இளமைக்கான கூர்முலைகள் குலுங்க ஒருகால் தூக்கி ஆடி நின்றாள் இன்னொருத்தி. மயிர் கற்றைகளில் பனி படர்ந்து வெள்ளை மல்லிச்சூடி அவள் அழகில் அவளே மெச்சி தரை நோக்காமல் விண் நோக்கி நின்றாள். கார்த்திகாவை முதல் முறை காணும் பொழுது அவள் தலைமுழுவதும் பிச்சிப்பூ வைத்திருந்தாள். பூ உதிர்வது போல அவள் மூச்சும் சிரிப்பும் சிதறி பறந்து வரும் இருவரும் கூடி முயங்கும் பொழுது. இருவரும் இருமுறை உச்சம் அடைந்தாலொழிய அன்றைக்கு முடியாது. அவளுக்கும் அப்பொழுது கூர் முலைகள். திமிருடனேயிருந்தாள். கடைக்கண்ணால் ஏளனத்துடன் காண்பதற்கு நான் தவம் கிடக்க வேண்டும் என்பது அவள் எண்ணம். அவளது தட்டையான வயிற்றை கார்த்திகா பிளந்த வாயுடன் பார்த்துக்கொண்டிருப்பதை நான் தற்செயலாக கவனித்து விட்டேன். “இப்புடி சிலுப்பி நிண்ணுதான் நீ கொழந்த பெத்துக்கிற , பின்னால சிலுப்ப முடியாது பாத்துக்க” என்றேன் நக்கலுடன். அவள் அதற்கு எரிச்சலான முகத்தை பதிலாக முன்பே தயாரித்து வைத்திருந்தது போல காட்டினாள்.

விடலை ஆணும் பெண்ணும் சண்டையிட அவன் அவளை தூக்கி வீசுகிறான். நரம்புகள் புடைத்த கைகளுக்கிடையில் பெண்ணின் தலையிருந்தது. அவள் அந்தரத்திலிருந்தாள். எதிரில் அதே பெண்ணை தோளில் தூங்கி விளையாட்டாக நின்று கொண்டிருக்கிறான். இரு வரிசைகளின் முடிவிலிருந்த தூணில் டிராகன் போன்றதொரு உருவம் அதன் செதில் வாலால் நின்றிருந்த அடைபட்ட நிலையிருந்த பெண்ணை சுற்றி வைத்திருந்தது. குழந்தை பெற்றுக்கொள்ள நடந்த பேச்சுவார்தையில் கார்த்திகாவை அடித்திருக்கிறான்.

“என்ன எல்லாரும் மலடுனு சொல்ல நீங்க கேட்டுக்கிட்டு தான இருந்தீங்க. இனிமே யாராச்சும் கேட்டா நீங்க இம்பொட்டன்ட் அப்படீனு சொல்லிருவேன்…பாத்துக்கோங்க….என்னால இனி பேச்சு கேக்க முடியாது. எனக்கு வயிறு நிறம்பனும். உங்களால முடியலன வேற யாட்டையும்…..”

அதனை முடிக்கும்முன் நான் அவளை அடித்திருந்தேன். விழுந்தவள் எழும்பும் முன் என் உடம்பு நடுக்கத்தைக்குறைக்க கதவை சாத்திவிட்டு வசந்த கால பூக்களைக்காண சென்றுவிட்டேன். இளஞ்சிவப்பு வெள்ளை மஞ்சள் பூக்கள் இலைகளில்லா மரங்களில் நிறைந்திருந்தன. வசந்த காலம் இல்லையேல் இந்த மரங்கள் பூக்காமல் மலடாய் கிழட்டுக்கிழவிகளைப்போல் நின்றிருக்கும். அன்று முடிவெடுத்தேன் ஒன்றாவது பெற்றுக்கொள்ளலாம் அவளுக்காகவாவது. வேறுயாருடனும் போய் பெற்றுக்கொள்ளக்கூடாதே…

அவள் அந்த கோவக்கார பையன் சிலையின் முன் தங்கியது ஆச்சரியமளிகவில்லை. அம்மாக்களுக்கு அழும் குழந்தைகளை கைவிட மனமிருக்காது. அவை நிதம் அம்மாக்களை தேடிக்கொண்டேயிருக்கின்றன. குழந்தைகள் கோவத்தையும் அழுகையிலேயே காட்டுகின்றன. அதனால் அவள் அந்த சிலை முன் நின்றுவிட்டாள். குட்டி தொப்பையுடன் அந்த சிலை கோப அழுகையில் காலகாலமாக நின்று விட்டது. அவன் அழுதுகொண்டேயிருந்தான் கார்த்திகா போன்ற அம்மாக்களுக்காக. நான் அவள் அருகில் சென்றதும் “நேத்துலருந்து சொல்லணும்னு வச்சிட்டேயிருக்கேன். இந்த அழுவினி பையன பாத்ததும் சொல்லலாம்ணு தொணுது” என்று அந்த சிலைக்காட்டினாள். தலையிலிருந்த வெள்ளைப்பனி அவனிக்கு தொப்பி போட்டது போலிருந்தது. “இந்தாங்க..சர்ப்ரைஸ்….” என்று சிரித்தவாறு பயிலிருந்த ஒன்றை எடுத்துக்காட்டினாள். அந்த சிறிய குச்சி போன்ற நீளமான சாதனத்தின் கண்ணாடிக்கு பின் இரு சிவப்பு கோடுகள் இருந்தன. தலை தூக்கிப்பார்க்கவும் அவனுக்கு எதிரிலிருந்த சிலை ஒரு கைக்கு இரண்டாய் மொத்தம் நான்கும் மேல்புறமும் கால்களில் அதே போல நான்கு குழந்தைகளை கீழும் விசிறியடிக்கும் தந்தையின் கோபாவேச சிலை. கைகால்களில் தினவு புடைத்து நிற்க உதடுகள் இறுகி கண்கள் பிதுங்கி வெளியேறுவது போலிருந்தது. நிச்சயமாக அந்த குழந்தைகள் இறந்துகொண்டிருக்க வேண்டும். ஆனால் அவை சிரித்துக்கொண்டே பறந்திருந்தன. வெறுப்பை உமிழும் தந்தையின் முன் சிரிப்பு ஏளனத்துடன் குழந்தைகள்.

“வருத்தமில்ல. ஆனா சந்தோசமா இருக்கேனானு தெரியாது” என்றேன்.

“ஏன் சந்தோஷமான விசயம் தான?” என்றாள். அவள் முகம் மாறியிருந்தது. சிறுமிக்கான அடையாளங்களற்று பெண்ணானாள்

“ஆமா. ஆனா நாம கொண்டு வர்ர உயிருக்கு ஒரு மதிப்பிருக்கணும். கடமைக்கே பெத்து வளக்கக்கூடாது. இதெல்லாம் நாம முன்னாடியே பேசுனதுதான். திரும்பவும் சொல்றேன் நீ பெத்துக்க ஆனா எனக்கு இஷ்டமில்ல. எங்கிட்ட நீ எதிர்பாக்குற சப்போர்ட் கிடைக்காண்ணு பின்னாடி நீயோ இல்ல பொறக்கப்போற கொழந்தையோ கொற சொல்லக்கூடாது….நான் இப்பொவே அதுக்கு இடங்கொடுக்கலங்குறத நினப்புல வச்சிக்க ”

“உங்க தத்துவத்த நிறுத்துங்க. எவ்வளவோ கேட்டு பொறுத்தாச்சு. இந்த குழந்தைக்காக நிறைய கஷ்டப்பட்டுடேன். நீங்க தடுத்ததாலதான் இவ்வளோ நாள் பண்ணாம இப்போ பண்ணி வந்திருக்கு….அதுக்கும் ஆறு வருசம் காத்திருந்தாச்சு….நீங்க சம்மதிச்சனாலதான் இப்பொவும் பெத்துக்கலாம்னு நானும் மருந்து எதும் சாப்புடல. ரெண்டு மாசம் ஆக போகுது. இனிமே என்னோட வயிறு தாங்குமானு தெரியல. இதுதான் கடைசியா கூட இருக்கலாம். ” என்று கதறினாள்.

“நான் சம்மதிச்சதுதான். எனக்கு அதுக்குண்டான தருணம் வரணும். நீங்க நெனச்ச உடன் அம்மாவாகிறலாம். பால் சொரந்தா போதும். பத்தாததுக்கு உங்களுக்குள்ளயே வளத்து ரத்தமும் சதையுமா ஆக்குறீங்க. நான் வெளிய இருக்கேன் , எனக்கு டைம் வேணும். உண்மையாவே அது என்னோட உயிர்னு நினைப்பு வரணும்”

நான் சொன்னதை அவள் ஏற்றுக்கொண்டாற்போலிருந்தது “எவ்வளவு நாள்…” என்ற கேள்வியுடன் சீறினாள்.

“இன்னும் கொஞ்ச நாள்”

“என்னால முடியாது…” என்று கத்தினாள்.

“சத்தம் போடாத” என்று அவள் கைகளைப்பிடித்து அழுத்தினேன். கண்டிப்பாக வலித்திருக்க வேண்டும். அவள் அமைதியானாள். நான் தனித்து விடப்பட்டேன். தொடர்ந்து சிலைகளை பார்ப்பதாக முடிவெடுத்தேன். அவள் எனக்கு முன் தனியாக நடந்து நீரூற்றைத்தாண்டி சென்று விட்டாள். இது வாழ்நாளில் ஒருமுறை அமையும் தருணம் , திரும்ப வரப்போவதில்லை. சண்டையை பிறகு வைத்துக்கொள்ளலாம் வீட்டிலோ காட்டிலோ என்ற எண்ணமேயிருந்தது.

நீர்த்திவலைகள் தெறித்து நனைத்த சிலைகள் அதனை சுற்றி நின்றன. எல்லா சிலைகளும் ஒற்றை மரத்தின் கீழ் நின்றன. கனத்த மேல் சட்டையை நீரின் குளிருக்கு ஈதமாய் இறுக்கிக்கொண்டு அவற்றைத்தாண்டி படியேறிச்சென்றேன்.

கனத்த கற்படிகள் வெள்ளை நிறத்திலிருந்தன. ஒருபடியேறி நடந்து பின் அடுத்த படியேற வேண்டியிருந்தது. படிகளின் ஒன்றன் மீது ஒன்றாய் அடுக்கியிருந்த வட்டத்தின் விளிம்புகளிலிருந்தன வெண் கற்சிலைகள். நடுவில் குழந்தைகள் ஆண்கள் பெண்கள் உடல்கள் பின்னி பிணைந்த வெண் கல் ஸ்தூபி. வெளிவர துடிக்கும் உள்புக ஏங்கும் உடல்கள் கொண்டு மண்ணிலிரிந்து விண்னோக்கி எழுந்த ஆண்குறி போலிருந்தது. ஒருவரையொருவர் அரவணைத்து கழுத்தைக்கட்டி அமர்ந்த ஆண் பெண் , முதுகு பார்த்து அமர்ந்த கிழவிகள். முதுகொட்டி அமர்ந்த கன்னிகள் , மனைவியை தூக்கி எறியும் ஆண் , மடியில் ஏசுவைப்போல படுத்திருந்த கிழவி மரியாவாகா தாடிக்கிழவன் , சண்ணையிடும் ஆண் பெண் குழந்தைகள்.

கார்த்திகா ஓர் சிலையின் முன் நின்று கொண்டிருந்தாள். அந்தச்சிலை அவளை ஆட்கொண்டிருந்தது. குனிந்து நின்ற அம்மையின் முலைகளை பிடிக்க பிதுங்கி நிற்கும் குழந்தைக்கூட்டம். அருகில் குழந்தைக்கூட்டம் ஏறி சூழ்ந்து அசையவிடாமல் செய்யப்பட்ட அம்மை. பருத்த முலைகள் தொங்கி அதிர்ந்த நிலையிலிருந்தன இரு அம்மைகளுக்கும். இரண்டையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தாள். இருவரும் பார்த்துக்கொண்டனர் ஒன்றும் பேசவில்லை. பூங்காவைச்சுற்றிவிட்டு இறங்கி வந்தனர்.

வெளியேறும் பாதையில் அவன் கண்ணில் தென்பட்டது அச்சிலை. இரு குழந்தைகளை கையில் ஏந்திக்கொண்டு புன் சிரிப்போடு நிற்கும் ஆண். கைகளில் இருக்கும் குழந்தைகள் அதனை மகிழ்ந்து கைகால் முறுக்கிக்கிடந்தன. அந்த ஆண் தந்தைக்குரிய அனைத்து லட்சணங்களும் பொருந்திய உடல் கொண்டு மகிழ்ச்சியே நிறைந்தவனாக குழந்தைகளை ஏந்திக்கொண்டிருந்தான். இருதயம் நின்று காலம் நின்று பிறந்து இறந்ததைப்போல உணர்ந்தேன்.

“இதான் என் கனவுல அடிக்கடி வர்ர சிலை. இப்பொதான் ஞாபகம் வருது. நம்ம குழந்த பெத்துக்கலாம். எத்தன வேணும்னாலும். எனக்கு நம்பிக்க இருக்கு. என்னால சந்தோசமா ஏத்துக்க முடியும்ணு இப்போ தோணுது. நான் தேடுனது என்ன தாண்டுன ஒரு விசயத்துல இருந்து வர்ர அழைப்பு இல்லானா ஒரு அக்னாலெஜ்மெண்ட்” எனக்கெ சொல்லிக்கொண்டது போலிருந்தது. அவள் நான் சொல்வதை உள்வாங்கிகொள்ளவில்லை. அதற்கு சரியென்பது போல பார்த்தாளா என்பது சந்தேகம். ஆனால் நான் சரியென்றே எடுத்துக்கொண்டேன். அன்றிரவு தங்கிவிட்டு அடுத்த நாள் ஸ்டாக்கோமிற்கு கிளம்பிவிட்டோம். ஏழு மாதத்தில் இரட்டையர்கள் நல்லபடியாக பிறந்தனர் மெல்ல வளர்ந்தனர்.

இணையற்ற அன்னையாக குழந்தைகளை வளர்த்தாள். இறக்கும் தருணம் அதைச்சொன்னாள் “எனக்கும் ஒரு கனவு வர்ரதுண்டு. மூக்கணாங்கயிறு கட்டுன அம்மா. அதுக்கு மேலயிருக்குற இரண்டு குழந்தைங்க அத புடிச்சி சவாரி போறாங்க. கொஞ்சநாளா டெய்லி வருது. நீங்க அந்த பார்க்ல இருக்கும் போது சொன்னது சரிதான்” அன்று பின்னரவில் சிறிது கஞ்சி குடித்து மடிந்து படுத்து காலையில் இறந்து போனாள். அவள் மூக்கு ரொம்ப நாளாக சிவந்திருந்ததை அன்றுதான் கண்டேன்.

நான் குழந்தைகளுடன் சந்தோசமாகவே இருந்தேன் கடைசிவரை, ஆனால் அவளும் நானும் எங்களுக்கு இரட்டையர் பிறந்ததற்கு பின்னும் காட்டிக்கொள்ளவில்லை நான் இம்பொட்டண்ட் என்பதை.

உண்மையான வாழ்க்கை.

பிரார்த்தனை – ஸிந்துஜா

ஸிந்துஜா

இன்னும் பனி விலகவில்லை. வைகறை இருட்டின் மீது காதல் கொண்டாற் போல சில்லென்று காற்று தவழ்ந்து வந்தது. மனிதர்களைப் படுக்கையிலிருந்து எழுப்புவதற்காகவென்று மரங்களிலிருந்து தத்தம் இனிய குரல்களுடன் பறவைகள் பறந்து சென்றன. இதெல்லாம் போதாது என்று சொல்வது போல ஒரு வீட்டு வாசல் வழியே எம்.எஸ். சுப்ரபாதம் சொல்வது கேட்டது. தில்லியில் பல நாள்கள் எட்டு மணி எட்டரை மணிக்குதான் பக்கத்து பிளாட்டிலிருந்து சுப்ரபாதம் கிளம்பி வரும்.

தெரு ஆரம்பத்தில் ஒரு வீட்டு வாசலில் கோலம் போட்டு விட்டு உள்ளே செல்லும் ஒரு பெண்ணை சபரி பார்த்தான். கோலத்தின் நடுவில் மஞ்சள் பூசணிப் பூ பளீரென்று மின்னிற்று. கல்யாணத்துக்கு நிற்கும் பெண் போலிருக்கிறது. அந்த வீட்டில்தான் பதினைந்து வருஷம் ஹேமு இருந்தாள்.

அவன் வீட்டை நெருங்கியதும் சபரி ஆட்டோவை நிறுத்தச் சொன்னான். வாசல் கம்பியைப் பிடித்துக் கொண்டு அம்மா நிற்பதைப் பார்த்தான். பையை ஆட்டோவிலிருந்து எடுத்துத் தோளில் மாட்டிக் கொண்டு ஆட்டோக்காரரிடம் பணம் கொடுத்தான். அம்மாவை நெருங்கும் போது அவள் “வராதவன் வரானேன்னு ட்ரெயின்காரனும் சரியான நேரத்துக்கு வந்துட்டானா?” என்று சிரித்தாள். அந்தச் சிரிப்பில் அவர்கள் ஒருவரை யொருவர் பார்த்துக் கொள்ளாத ஒன்பது வருஷ தூரம் தூக்கியெறியப் பட்டது என்று சபரிக்குத் தோன்றிற்று.

“திருஷ்ணாப்பள்ளிக்கு மூணு மணிக்கே வந்தவனை அவுட்டர்லே போட்டான். அப்படியும் வண்டி தஞ்சாவூருக்கு நாலு அம்பதுக்கு டாண்ணு வந்துடுத்து” என்றான் சபரி.

“என் காலத்து இன்ஜின் டிரைவர் போல!” என்ற அம்மா “உள்ளே வா” என்று சொல்லி விட்டுத் திரும்பி உள்பக்கம் நடந்தாள்.

சபரி உள்ளே நுழைந்தான். வாசலைத் தாண்டி நடை ஆரம்பத்தில் இரு பக்கமும் நீண்ட திண்ணைகள் உட்கார்ந்திருந்தன. வலது பக்கத் திண்ணையில் முக்கால் வாசி இடத்தை மூட்டைகள் அடைத்துக் கொண்டிருந்தன. நவரைப் பட்ட நடவு தொடங்கும் சமயத்தில் வேண்டியிருக்கும் உரங்களை அடக்கிய மூட்டைகளாயிருக்கும். இடது பக்கத்துத் திண்ணை ஹோவென்று விரிந்து கிடந்தது. ஒரே சமயத்தில் நான்கு படுக்கைகளைப் போட்டுத் தூங்கலாம். அவன் இடது கையை வைத்துத் திண்ணையைத் தடவினான். வழக்கம் போலக் குளிர்ச்சியும் வழவழப்புமாக அவனைக் கூப்பிட்டது. பகலில் விளையாட்டுத் ‘திடலா’கவும் வெய்யிலோ, மழையோ, பனியோ எதுவாக இருந்தாலும் இரவு அவனைப் போட்டுக் கொஞ்சுமிடமாகவும்தான் அது இருந்தது என்று நேசத்துடன் நினைத்தபடி உள்ளே சற்றுக் குறுகலாக ஓடிய ரேழியைக் கடந்து கூடத்தில் நுழைந்தான்.

கூடத்து ஊஞ்சல் மீது தோள்பையை வைத்தான். வலது பக்கமிருந்த அறை வாசலில் சார்த்தியிருந்த கதவுக்கு முன்னால் அம்மா நின்றாள். அந்த அறைக்குள்தான் அப்பா படுத்துக் கொண்டிருக்கிறார். அவர் கட்டிலை விட்டு எழ முடியாமல் படுத்த படுக்கையாய் அங்கே வாசம் செய்கிறார் என்று அன்று அண்ணாசாமி ஊருக்குத் திரும்பிப் போகுமுன் அவனுக்குப் போன் பண்ணிச் சொன்னான். அவன் அம்மாவை நெருங்கியதும் அவள் கதவைச் சத்தமில்லாமல் திறந்தாள். அவன் பார்வை கட்டில் மீது விழுந்தது. படுக்கையில் ஒரு ஈர்க்குச்சி படுத்திருப்பதைப் பார்த்துத் திடுக்கிட்டான். மை காட்! என்னமாய் உருக்குலைந்து கச்சலாகி விட்ட உடம்பு ! வயல்காடுகளில் ஆஜானுபாகுவாகத் திரிந்து ஆட்களை வேலை செய்யச் சொல்லி விரட்டியடித்த ராஜமய்யரா இப்படி பிரேதமாகப் படுத்துக் கிடக்கிறார்? ராஜமய்யரது கண்கள் மூடியிருந்தன. ஏறி இறங்கும் மார்புதான் உயிரை இழுத்துப் பிடித்திருக்கும் உடம்புக்குச் சாட்சி சொன்னது. ‘தூங்கட்டும்’ என்பது போல் சைகையில் தெரிவித்து விட்டு அம்மா கதவை மூடினாள்.

அவளுடன் சேர்ந்து சபரியும் சமையலறைக்குச் சென்றான்.

“என்னம்மா இப்பிடி ஆயிட்டார் அப்பா?” என்று அவன் தாங்க முடியாது கேட்டான்.

“சொல்றேன் அப்புறம்” என்றாள் அம்மா. அடுப்பைப் பற்ற வைத்துப் பால் குக்கரை ஏற்றினாள். அவனிடம் “பெங்களூர் ஸ்டைலா இல்லே திருவையாத்து ஸ்டைலா நீ இப்ப காப்பி குடிக்கப் போறது?” என்றாள்.

“வென் யூ ஆர் இன் ரோம் யூ மஸ்ட் பீ எ ரோமன்” என்றான் சபரி. “பல் தேச்சிட்டு வந்து காப்பி குடிக்கிறேன்.”

பிறகு “ரொம்ப இளைச்சிட்டியேம்மா” என்று அவள் கையைப் பிடித்துத் தன் கையில் வைத்துக் கொண்டான். “பாரு, எப்படி நரம்பெல்லாம் தெரியறது?” என்று வருத்தமான குரலில் கேட்டான்.

“ஆமா, இப்ப எனக்கு பதினஞ்சு வயசுதான் ஆறது திம்மு திம்முன்னு இருக்கறதுக்கு!” என்றாள். “நீயும் கூடத்தான் பாக்க சகிக்காம இருக்கே. ராஜா மாதிரி எப்படியெல்லாமோ இருந்திருக்க வேண்டியது..ஹூம், நாமென்ன கடவுளா நினைச்சதை நினைச்சபடி நடத்தி முடிக்க?” என்றாள் அம்மா.

அவள் பேச்சை எங்கே நகர்த்துகிறாள் என்று அவனுக்குத் தெரியும். “சரி, நான் போய்ப் பல் தேச்சிட்டு வரேன்” என்று ஊஞ்சலை நோக்கி நடந்தான். அவள் பெருமூச்சு விட்டாள். கையில் பிடிபடாமல் பறக்கப் பார்க்கும் நாகணவாய். காப்பிப் பொடியை டப்பாவிலிருந்து எடுத்து ஃபில்டரின் அடிப்பாத்திரத்திற்கு மேலே இருந்த வட்டமான சிறு சல்லடையில் போட்டு அதன் மேலே வெந்நீரை ஊற்றினாள். அப்பாவுக்கும் பிள்ளைக்கும் காப்பி திக்காக இருக்க வேண்டும். எவ்வளவோ விஷயங்களில் இருவருக்கும் ஒரே குணம். விருப்பு வெறுப்பு எல்லாவற்றிலும் இருவருக்கும் அப்படியொரு பொருத்தம். ஒன்றைத் தவிர. சபரி ஹேமுவைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள அவர் ஒப்புதல் தெரிவிக்க மறுத்து விட்டார்.

சபரி தாழ்வாரம் வழியே வீட்டின் பின்புறமிருந்த தோட்டத்தை அடைந்தான். கண்ணை இறுக்கி மனசில் பரவசத்தை ஊட்டும் பச்சை சுற்றிலும் நிரம்பியிருந்தது. துணி துவைக்கும் கல்லில் இரண்டு தையல் சிட்டுக்கள் அவைகளும் பச்சையில் மயங்கியனவாகத் தோற்றம் தந்து உட்கார்ந்திருந்தன. அவனைப் பார்த்ததும் கொண்டையை நாலைந்து முறை ஆட்டி ‘கீ’ ‘கீ’ என்று குசலம் விசாரித்து விட்டுப் பறந்தன. ஹேமுவுக்கும் இந்தப் பச்சை மரங்கள், செடி கொடிகள் மீதும் பறவைகள் மீதும் அப்படி ஒரு ஈர்ப்பு. அவளை நினைக்கும் போது மழைநீர் ஒற்றிய சாயங்காலத்தில் திடீரென்று சிரித்துக் கொண்டு வானில் வளைய வரும் வில், காவேரியாய்ப் புரளுகிறோம் என்ற கர்வத்தில் அலைகளுடன் பொங்கி ஓடும் கணபதி அக்கிரகார ஆறு, ஐயாறப்பர் சன்னதியில் இருட்டை அண்ட விடாது மினுங்கிக் கொண்டிருக்கும் ஆளுயர எண்ணெய் விளக்கு இவையெல்லாம் ஞாபகத்துக்கு வருகின்றன.அவளும் இப்போது ஓடிச் சென்ற சிட்டுக்களைப் போலத்தான் பறந்து போய்விட்டாள். சிட்டுக்களைப் போவென்று விரட்டாத மாதிரிதான் சபரி ஹேமுவிடமும் இருந்தான். ஆனால்?

பற்பசை ஈஷிக் கொண்டிருந்த பிரஷ்ஷை வாயில் வைத்துக் கொண்டு கிணற்றிலிருந்து நீரை எடுத்து அங்கு கிடந்த வாளியில் ஊற்றினான். பற்களைத் தேய்த்து விட்டு வாயைக் கொப்புளித்தான். வாளியில் மிதந்து கொண்டிருந்த செம்பை நீரில் முக்கி கைகளிலும் கால்களிலும் விட்டுக் கொண்டான். இரு கைகளாலும் நீரை அள்ளி முகத்தில் அடித்துக் கொண்டான். பாதி குளித்து விட்ட முயற்சியில் உடல் சூடு இழந்து மலர்ச்சியை ஏற்படுத்திவிட்டதாக உணர்ந்தான்.

அவன் முகத்தைக் கையில் வைத்திருந்த டவலால் துடைத்துக் கொண்டே சமையலறைக்குச் சென்றான். அம்மா ஃபில்டரின் மேல் மூடியை வைத்து ஃபில்டரைத் தட்டி டிகாக்ஷன் இறக்கிக் கொண்டி
ருந்தாள். அவனைப் பார்த்தும் காப்பி கலந்து கொடுத்தாள்

அவன் ஒரு வாய் அருந்தி விட்டு “ஆஹா பிரமாதம்” என்றான். அம்மா அதைக் கேட்டுச் சிரித்தாள்.

“அப்பாவுக்குக் கொண்டு போய்க் கொடுக்கட்டா?” என்று கேட்டான்.

“அப்பாவுக்கா? அவருக்குக் காப்பியை நிறுத்தி ரெண்டு மாசமாச்சு” என்றாள் அம்மா.

“ஏம்மா?”

“திடீர்ன்னு ஒரு நாள் வாண்டாம்னுட்டார். காப்பிக்குப் பதிலா ஒரு வாய் ஹார்லிக்ஸ் குடிப்பார். சாப்பாடும் இப்ப ரொம்ப கொறஞ்சு போயாச்சு. எல்லாம் கரைச்சுக் கொடுக்கறதுதான். இட்லி பண்ணினாக் கூட மிக்சிலே அரைச்சு ஜூஸ் கொடுக்கற மாதிரி கொடுத்திண்டு இருக்கு. சாப்பாடுன்னா மோர் சாதம்தான். அதையும் கரைச்சுதான் கொடுக் கறேன். லேசா காரம் இருந்தாக் கூட பீச்சிண்டு அடிக்கறது. டாக்டர் வந்து பாத்துட்டு காரமில்லாம கஞ்சி மாதிரி வாட்டரியா கொடுங்கோ, ஜீரண சக்தியும் குறைஞ்சாப்பிலே இருக்குன்னுட்டார்.”

“ஏன் திடீர்னு இப்படி?”

“நீ லண்டனுக்குப் போய் நாலைஞ்சு மாசம் ஆனப்போ இவர் படுக்கையிலே விழுந்தாச்சு. அன்னிலேர்ந்தே இந்தக் கஷ்டகாலம் ஆரமிச்சிடுத்தே” என்றாள் அம்மா.

சபரிக்கு அண்ணாசாமி போன் பண்ணிய அன்றைய தினம் ஞாபகத்தில் தெளிவாக இருந்தது. அப்போது அவன் படுக்கையில் இருந்தான். வெளியே லண்டன் மழை தூறிக் கொண்டிருந்தது. அந்தக் குளிர் நசநசப்பும் ஞாயிற்றுக் கிழமையும் அவனைச் சோம்பேறித்தனத்தில் ஆழ்த்திக் காலை எட்டு மணிக்குக் கூடப் படுக்கையிலிருந்து எழ வைக்கவில்லை. இன்னும் ஒரு மாதத்தில் இந்தியாவுக்குத் திரும்பிப் போக வேண்டும். அவனுடைய ஆறு மாத டிரெய்னிங் காலம் முடிந்து விடும்.

கைபேசி அடித்த போது எடுத்துப் பார்த்தான். தெரிந்த நம்பராக இல்லை.

“ஹலோ! சபரி ஹியர்.”

“சபரி, நான் அண்ணாசாமி பேசறேன்டா. எப்படியிருக்கே? இன்னிக்கிக் காத்தாலேதான் எங்க குலதெய்வப் பிரார்த்தனைன்னு திருஷ்ணா
பள்ளிலேந்து காரை எடுத்துண்டு வீரசிங்கம்பேட்டைக்கு வந்தேன் அம்பாளுக்கு அபிஷேகம் முடிஞ்சதும் பதினோரு மணிக்கு இங்கே ஆத்துக்கு வந்தேன். சித்தப்பாவையும் சித்தியையும் கூடவே தரிசனம் பண்ணிட்டுப் போலாமேன்னு” என்ற அவனது இயல்பான குரல் அவனுக்கு முதலில் எந்த சந்தேகத்தையும் எழுப்பவில்லை. அண்ணா சாமி அவனுடைய பெரியப்பாவின் பையன்.

“எங்கே ஆத்திலேர்ந்தா பேசறே? வேறே என்னமோ சத்தம்லாம் கேக்கறதே?”

“இங்கே ஆஸ்பத்திரிக்கு வந்திருக்கோம்.”

“ஏன்? யாருக்கு என்னாச்சு?” என்று அவன் பதறியபடி படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தான்.

“நான் ஆத்துக்கு வந்து சித்தே நாழி ரெண்டு பேர் கிட்டேயும் பேசிண்டு இருந்தேன்.அரை மணி கூட ஆகலே. திடீர்னு சித்தப்பாக்குத் தலை கிறுகிறுத்து நடக்க முடியாம போயி எல்லாரும் தஞ்சாவூருக்கு ஓடி வந்தோம். மீனாட்சியிலேதான் அட்மிட் பண்ணியிருக்கு. பி.பி., சுகர்லாம் எகிறிக் கிடக்குங்கறா. திடீர்னு கொலஸ்ட்ரால் வேறே ரொம்ப ஜாஸ்தியா இருக்காம். அப்பப்போ பாக்காம விட்டுட்டுதுனாலே இப்ப இப்படி ஆயிடுத்துங்கறார் டாக்டர்” என்று அண்ணாசாமி சொல்லும் போது சபரிக்கு உடம்பு ஒரு தடவை நடுங்கி விட்டுப் பழைய நிலமைக்குத் திரும்பியது.

“இப்ப எப்படி இருக்கார்? நான் இன்னிக்கிக் கிளம்பி வரட்டா?”

“இரு. அம்மாகிட்டே கொடுக்கிறேன். நீ அடுத்த மாசம் திரும்புவேன்னு உங்க ஆபீஸிலே கேட்டதுக்கு சொன்னா. இன் பாக்ட் உன்னோட போன் நம்பரையே நான் உன் ஆபீஸ்லேர்ந்துதான் வாங்கினேன்.”

அம்மா அவனிடம் நேரடியாக “நன்னாயிருக்கு. நீயென்ன மாயவரத் திலேயா இல்லே கும்பகோணத்திலேயா இருக்கே பஸ் பிடிச்சு உடனே கிளம்பி வரதுக்கு? டாக்டர் வாயிலே ஐயாரப்பர் வந்து உக்காந்து உயிருக்கு ஒண்ணும் ஆபத்தில்லேன்னு சொல்லிட்டுப் போயிட்டார். ஒரு வாரம் இங்கே அப்பா இருக்கணும். அப்பா ஆத்துக்குத் திரும்பி வரவரைக்கும் அண்ணாசாமி கூடவே இருக்கேங்கறான். நீ கிளம்பி வந்தா ஆஸ்பத்திரி வாசல்லே வேப்பமர நெழல்லே உக்காந்துண்டு போறவா வரவாளோட கவலை மூஞ்சிகளைப் பாத்துண்டு இருக்கலாம்” என்றாள். அப்பா ! என்ன ஒரு நிதானம்! ஒரு இம்மி அளவு பயம், நடுக்கம் எதுவும் தெரிவிக்காத குரல்!

அடுத்து வந்த நாள்களிலும் அவன் அவளுக்குப் போன் போட்டுப் பேசும் போதெல்லாம் அவனுக்கு எதெது எவ்வளவு தெரிய வேண்டுமோ, அவ்வளவு தெரிஞ்சால் போதும் என்பது போலப் பேசுவாள். அவள் சொல்வதை வைத்து அவன் மேற்கொண்டு எதுவும் கேட்க விடாத மாதிரி அவள் பேச்சு இருக்கும். அப்பா ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனது, அவர் சாப்பிடும் மாத்திரை, மருந்துகள், டாக்டர் வந்து போனது, அவரை வந்து பார்த்து விட்டுப் போன உறவு ஜனம் என்று ஏதோ நிறைய விஷயங்களை சொல்லி விட்டது போன்ற பாவனையை ஏற்படுத்தி விடுவாள். அவர் காப்பி சாப்பிடுவதை நிறுத்தியது, நீர் ஆகாரமாய் சாப்பிடுவது, உடல் இவ்வளவு மோசமாகத் தேய்ந்து போய்விட்டது பற்றியெல்லாம் இன்றுதான் அவன் தெரிந்து கொண்டான். தொலைவில் தனியாக இருக்கிறவன் கவலையில் கிடந்து மன்றாடக் கூடாது என்று நினைத்திருப்பாள்.

அம்மா கையில் ஹார்லிக்ஸ் எடுத்துக் கொண்டாள். இருவரும் அப்பாவின் படுக்கைக்குச் சென்றார்கள். ராஜமய்யர் விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவனைப் பார்த்ததும் அவர் முகத்தில் சந்தோஷம் தோன்றுவதை சபரி கவனித்தான். கையை மெல்ல அசைத்து அவனைத் தன் பக்கம் வரச் சொன்னார். அம்மா அவன் கையில் ஹார்லிக்ஸ் தம்ளரைத் தந்தாள். சபரி அவர் ஹார்லிக்ஸ் குடிப்பதற்கு உதவினான்.அவர் மிகவும் மெல்லிய குரலில் அவனிடம் ஏதோ கேட்டார். சற்றுக் குழறலாய்த் தொனித்த வார்த்தைகளை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

“‘நீ எப்போ வந்தே? சௌக்கியமா இருக்கியான்னு கேக்கறார்” என்றாள் அம்மா.

அவன் சற்று உரத்த குரலில் “நா நன்னாயிருக்கேம்ப்பா. உங்களுக்கு எப்படி இருக்கு? ரொம்ப மோசமாயிருக்கேளே?” என்றான்.

அம்மா சபரியிடம் “நீ குரலை ஒசத்திப் பேச வேண்டியதில்லே. உன் உதடைப் படிச்சு நீ கேக்கறதைத் தெரிஞ்சுப்பார்” என்றாள்.

அப்பா அவனுடைய வலது கையைப் பற்றித் தன் கையுடன் கோர்த்துக் கொண்டார். வாடிய பூ தன் கையை உரசுவது போல அவனுக்கு இருந்தது.

‘நீ ஏன் இப்படி இளைச்சுப் போயிருக்கே? ஒழுங்கா சாப்பிடறதுக்கு என்ன? லண்டனிலேந்து நேரே இங்கே வந்தியா? எப்போ திரும்ப ஊருக்குப் போய் வேலையிலே ஜாயின் பண்ணனும்? எனக்காக நீ இங்கே தங்க வேண்டாம். ஆனா நாலஞ்சு நாள் இருந்தேன்னா மரூருக்குப் போய் நிலத்தைப் பாத்துட்டு வா. திருநாவு கணக்கெல்லாம் சரியாய் எழுதி வச்சிருக்கானான்னு ஒரு பார்வை பாத்துட்டு வா. அவன் நல்லவன்தான். ஆனா யாரும் பாக்கலே கேக்கலேன்னா சோம்பேறியா ஆயிடுவான். எழுத வேண்டிய செலவை மறந்து போயிடுவான், அதுக்குத்தான் சொல்றேன்’ என்று அவரது கேள்விகளையும் உத்திரவுகளையும் அம்மா மொழிபெயர்த்துக் கொண்டே இருந்தாள்.

அவனும் அம்மாவும் அவரிடமிருந்து வெளியே வந்ததும் சபரி அம்மாவிடம் “ரொம்ப தெளிவாதானே இருக்கார்” என்றான் சற்று உற்சாகத்துடன்.

“எல்லாம் உன்னைப் பாத்த சந்தோஷம்தான்” என்றாள் அம்மா. “ஆனா இன்னிக்கே இன்னொரு சமயம் வேறே மாதிரி அவதாரத்தில் இருப்பார். உனக்கு அப்ப அவரைப் பாத்தா வாழ்க்கையே வெறுத்துப் போயிடும்.”

சபரி அவளை உற்றுப் பார்த்தான்.

“அவர் மனசிலே என்ன ஓடறதுன்னு யாருக்கு தெரியறது? கத்துவார். கூப்பாடு போடுவார். வாயிலிருந்து அவ்வளவு நாத்தமான வார்த்தைகள் நாராசமா வரும். கட்டில்லேர்ந்து கீழே விழறதுக்கு அப்படி ஒரு ஆகாத்தியம் பண்ணுவார். அப்போல்லாம் எதுத்தாப்பிலே நிக்கறது யாருன்னு தெரியாது. என்னோட அப்பாவைக் கூட்டிண்டு வாடின்னு என்னைப் பாத்து சத்தம் போடுவார்.செத்துப் போனவாளைக் கொண்டு வர நான் என்ன கிருஷ்ண பரமாத்வாவா இல்லே என் மாமனார்தான் பரீக்ஷித்தா?”

“இப்படி தினமும் நடக்குமா?”

“ஆமா. அவரைப் பாசத்தோட பரிவோட பாக்க வராளே சொந்தக்காராளும் சினேகிதாளும், அப்ப அவாளைத் துச்சமாப் பார்த்து அவர் காரி உமிழ்றது இருக்கே அது எல்லார் மனசையும் குத்திப் பிடுங்கிடும். எப்படி இவரோட இருக்கேன்னு பயத்தோட, ஆச்சரியத்தோட மரியாதையோட கனிவோட என்னைப் பாத்துட்டுப் போவா. இவ்வளவுக்கும் அவருக்கு ஒண்ணும் கல்லு மனசு இல்லே, அவாளைக் காயப்படுத்தணும்கிற வெறி எதுவும் இல்லேன்னு அவாளுக்கு ரொம்ப நன்னாவே தெரியும். ஆனா ஒரு தடவை வந்தவா ரெண்டாவது தடவை வந்தான்னு இதுவரை இருக்கலே. ஒரு நா காத்தாலே லால்குடியிலேந்து ஹைமவதிப் பாட்டி வந்தா. ‘தொண்ணூறு வயசுக்கு எதுக்கு இப்பிடி நீங்க டிரெயினிலேயும் பஸ்சிலேயும் அவதிப்பட்டுண்டு வந்தேள்?’ன்னு கூட நான் கேட்டுட்டேன். “பாக்கணும் போல இருந்துதுடி. நா தூக்கி வளர்த்த பிள்ளையாச்சே’ன்னா. கண்ணுலே கரகரன்னு ஜலம் ஊத்தறது. கட்டிலுக்குப் பக்கத்திலே போய் கிழவி நின்னா. இவர் இமைய அசைக்காம அவளையே முறைச்சுப் பாத்துண்டு இருக்கார். அவள் பேசற எதையும் கேக்கறதுக்குத் தனக்குக் காதே இல்லாத மாதிரி ஒரு முக்கல் முனகல் இல்லாமே முறைச்சிண்டு இருக்கார். அஞ்சு நிமிஷம் ஆச்சு. பத்து நிமிஷம் ஆச்சு. அப்புறம் வேறே பக்கம் திரும்பிப் படுத்துண்டு அசையவே இல்லே.”

சபரிக்குத் திகைப்பாக இருந்தது. ஏதோ மாந்தரீகத்தின் பிடியில் சிக்கிக் கொண்டு தவிப்பவர் போல ஆகி விட்டாரா? அவரது உடல்நிலமையின் சீரழிவு அவர் மனதை ஆட்டிப்படைக்கும் விஷயங்களில் பொதிந்தி ருக்கிறதா? என்ன மாதிரியான விஷயங்கள் அவை?

அம்மா “சரி. நீ போய்க் குளிச்சிட்டு வா. நான் தோசைக்கு அரைச்சு வச்சிருக்கேன். சாப்பிட்டு விட்டு கொஞ்சம் தூங்கு. ராத்திரி பூரா முழிச்சிண்டு கவலைப்பட்டுண்டு வந்திருப்பே” என்று சமையலறையை நோக்கிச் சென்றாள். அவன் குளித்து விட்டு சுவாமி கும்பிட பூஜை அறைக்குச் சென்றான். சுவாமி மாடத்தில் குத்து விளக்கு அரை வெளிச்சத்தில் ஆடிக் கொண்டிருந்தது. அவன் மர பீரோவுக்குப் பின்னால் இருந்த சுவிட்சை அமுக்கினான். விளக்கு எரியவில்லை. ஃபியூஸ் ஆகி விட்டது போல என்று நினைத்துக் கொண்டே சுவாமி கும்பிட்டான். டிபன் சாப்பிட்டு முடித்ததும் மாடியில் இருந்த அறைக்குச் சென்று படுக்கையில் விழுந்தான். படுத்த உடன் தூங்கியும் விட்டான்.

திடீரென்று பலத்த சத்தம் கேட்டு விழிப்பு ஏற்பட்டது. பிளிறலைப்
போன்று தாங்க முடியாத சப்தம். அவன் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து கடிகாரத்தைப் பார்த்தான். இரண்டு மணி நேரத்துக்கும் மேல் தூங்கி விட்டது தெரிந்தது. கீழே சென்றான். அப்பாவின் அறையிலிருந்துதான் சத்தம் வந்து கொண்டிருந்தது. திறந்திருந்த கதவின் வழியே அவன் உள்ளே பார்த்தான். அம்மா அப்பாவை அமுக்கிக் கட்டிப் பிடித்துக் கொண்டிருக்க அவர் திமிறி அவளிடமிருந்து விடுபட முயன்று கொண்டிருந்தார். அவர் உடம்பில் ஒரு பொட்டுத் துணி இல்லை.

“ஏ முண்டே, ஏண்டி இங்கே வந்து என் உயிரை எடுக்கறே? என் டிரெஸ்ஸெல்லாம் அவுத்துப் போட்டு… இந்த வயசிலே உனக்கு இவ்வளவு ஆசையா? அவ்வளவு ஆசை இருந்தா யாராவது சின்னப் பயலை இழுத்துப் பிடிச்சிண்டு அலைய வேண்டியதுதானேடி? கொஞ்ச நாள் என்னைப் பாத்துக்கன்னு ஒரு கிணடனைக் கூட்டிண்டு வந்து ஆத்திலே வச்சிண்டிருந்தே. அவன் எதுக்கு ஓடிப் போயிட்டான்னு தெரியலே. என்னை இப்படி டிரெஸ் இல்லாம பாக்க உனக்கு வெக்கமா
இல்லியா? மானங் கெட்ட கழுதை. நீ இப்பிடி இருக்கறதுனாலேதான் ஒரு சொந்தம் என்னை எட்டிப் பாக்கறது இல்லே. எனக்கு இந்த அவமானமெல்லாம் தேவையா? கடவுளே, என்னை சீக்கிரம் கொண்டு போயிடேண்டா. இவ பாட்டுக்கு இவ இஷ்டப்படி ஊர் மேலே திரியட்டும். அடியேய். என் மேலே கை வச்சேன்னா தெரியும். அப்பிடியே முறிச்சுப் போட்டுடுவேன். ஏய், ஏய் என்ன நான் சொல்லிண்டே இருக்கேன். நீ என் கையை அமுக்கிக் கீழே தள்ளிண்டு இருக்கே… நாயே!”

அம்மா அவர் கத்துவது எதுவும் தன் காதில் விழாதது போல அவரது இடுப்பில் கையை வைத்துத் தூக்கி வேட்டியை இடுப்போடு சுற்றிக் கட்டினாள். அவர் திமிறுவதை கொஞ்சமும் லட்சியம் செய்யாது இரு கைகள் வழியாக சட்டையைப் போட்டு விட்டாள். அவர் கால்களை அசைத்துத் திமிருக்கையில் அவை அவளது உடம்பில் உதைகளாக விழுந்தன.

சபரி கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே புகுந்தான் சத்தம் கேட்டு அம்மா நிமிர்ந்து பார்த்தாள். அவனைக் கண்டதும் அவள் முகம் இறுகிற்று. கடுமையைத் தெரிவிக்கும் முகத்துடன் அவள் கண்களாலேயே அவனை வெளியே போகச் சொன்னாள். சபரி தயங்கியபடி காலைப் பின் வைத்தான். கதவை சத்தமில்லாமல் சாத்தினான். கூடத்து ஊஞ்சலில் போய் உட்கார்ந்து கொண்டான். அவனால் சற்று முன் கண்ட காட்சியையும் கேட்ட நாராசங்களையும் நம்ப முடியவில்லை. மூன்று மணி நேரத்துக்கு முன்னால் அவனுடன் அன்பும் பரிவும் சாந்தமும் தெளிவும் நிரம்பிய உடல் மொழிகளுடன் உரையாடியவரையா இப்போது பார்த்தோம் என்று அதிர்ந்தான்.

அவனருகில் அம்மா வந்து நின்றாள். அவள் முகத்தில் களைப்பும் சோர்வும் தெரிந்தன. கலைந்து முன் நெற்றியில் விழுந்திருந்த தலை மயிரை ஒதுக்கிக் கொண்டே அவனருகில் அமர்ந்தாள்.

அவன் அவள் கையைப் பற்றி “என்னம்மா இப்படி ஆயிட்டார்?’ என்று கேட்டான் நடுங்கும் குரலில்.

“ரெண்டு மாசமா இப்பிடித்தான் போயிண்டிருக்கு.”

“யாராவது ஆள் போட்டு இந்த க்ளீன் பண்ணற வேலையை எல்லாம் பாத்துக்கச் சொல்லலாமே? நான் தஞ்சாவூருக்குப் போய்ப் பாத்து கூட்டிண்டு வரேன் இன்னிக்கி” என்றான் சபரி.

“அந்தக் கந்திரகோலமெல்லாம் ஆயாச்சு” என்று அம்மா பெருமூச் செறிந்தாள். “டாக்டர் சௌரிதான் கூட்டிண்டு வந்தார். வந்தவனுக்கு நாப்பது வயசு இருக்கும். ஈச்சங்குடிலே விவசாயம் பாத்துண்டு இருந்தவன். இப்பதான் மழையே அத்துப் போயி தண்ணிக்கு வெளி லேர்ந்து ஓடி வர்ற காவேரியைத்தானே நம்பிண்டு கிடக்கு ஜனங்கள். நாலு மாசம் உதவிக்கு இருக்கட்டும்னு அழச்சிண்டு வந்தார் டாக்டர். வந்தவன் பலசாலி. உங்கப்பாவைப் பட்டுப் போலத் தூக்கி இறக்கி ஏத்தி அப்பிடி சிஷுரூட்சை பண்ணினான். எண்ணி அஞ்சு நாள்தான். கொஞ்ச நாழிக்கு மின்னே கிண்டன்னும் எதனாலேயோ ஓடிட்டான்னும் கத்தி னாரே! அவனை இருக்க விடாம அடிச்சுத் துரத்தினது இவர்தான். பகல்பூரா தூங்கிண்டுதான் இருப்பார். இன்னிக்கி என்னமோ அதிசயம் ஒரு பொட்டுத் தூக்கம் இல்லே. நேத்தி ராத்திரி பூரா தூங்கவே இல்லை. தினம் ராத்திரி தூங்காம இந்த மாதிரி நாராசமா கத்திண்டிருப்பார். அதனாலே பகல்லே அவர் தூங்கிண்டு இருக்கறச்சே அவனைக் காய்கறி வாங்க, மளிகைக்குப் போகன்னு அனுப்புவேன். ரொம்ப ஒத்தாசையா இருந்தான். வந்து அஞ்சாம் நாள் என்கிட்டே வந்தான். அம்மா, இந்த அஞ்சு நாளா உங்க கிட்டே நான் வந்து சொல்லலே. நீங்க படற கஷ்டம் போறாதான்னு என் வாயைத் தச்சுப் போட்டுக்கிட்டு கிடந்தேன். ஆனா இப்ப வேறே வழியில்லே. போறதுக்கு முன்னாலே மகாலட்சுமி நீங்க உங்க கிட்டே சொல்லிடுப் போகணும்னு தோணிருச்சு. அய்யாஎன்னைப் பாத்து பேசாத பேச்செல்லாம் பேசுவாரு. சரி வலியிலே பேசறாருன்னு விட்டிருவேன். அப்புறமா என் குழந்தைகளை என் பொண்டாட்டியைன்னு எல்லோரையும் சபிப்பாரு. என்னைத் தொடாதேடா பாவின்னா நீ கேக்க மாட்டேங்கிறே, உன் குடும்பம் என் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிட்டு நாசமாய்ப் போகன்னு கத்துவாரு. உம்பசங்க ஒருத்தனும் உருப்படமாட்டாங்கன்னு சாபம் கொடுப்பாரு. நீயும் உன் பொண்டாட்டியும் இந்த பிராமணனை இப்படிப் போட்டு நீ கொல்லு றதுக்கு தெருவிலேதான் போய் நிக்கப்போறீங்கடான்னு என் மேலே எச்சியைத் துப்புவாரு. ரெண்டு நாளைக்கி மின்னாலே என் மூத்த மகன் வேலைக்குப் போனான். ரோடு ஓரமா நடந்து போனவனை ஒரு மோட்டார் சைக்கிள்காரன் அடிச்சுக் கீழே தள்ளிட்டு ஓடிட்டான். ஆஸ்பத்திரிக்குப் போயி கட்டுப் போட்டுக்கிட்டு வந்து வீட்டிலே உக்காந்திருக்கான். பத்து நாள் நகரப்பிடாதுன்னு டாக்டர் சொல்லிட் டாராம். செலவுக்கு செலவு. மனசுக்கு நிம்மதி இல்லே. பத்துப் பதினஞ்சு நாள் கூலி போயிருச்சு. அய்யா திட்டிதான் இப்பிடி ஆச்சுன்னு நான் சொல்லலே. ஆனா அந்த நினைப்பு தானா வந்து குத்திகிட்டே இருக்குன்னு சொல்லி அழுதான். நான் என்னத்தைப் பண்ணறது? அஞ்சு நாள் சம்பளத்தோடு கூட ஒரு ஐநூறு ரூபாய் வச்சுக் கொடுத்தேன். அதுக்கப்புறம் யாரையும் இவர் வரவிட மாட்டார்னு நானே செய்ய ஆரமிச்சிட்டேன்” என்றாள் அம்மா.

சபரி “நான் இங்கே இருக்கற வரைக்கும் இதையெல்லாம் நானே செய்றேம்மா” என்றான்.

அவள் மறுத்துத் தலையை ஆட்டினாள். “உங்கிட்ட சொல்லித்தான் ஆகணும். ஹேமுவை நீ கல்யாணம் பண்ணிக்க விடாம தடுத்தி நிறுத்தினது தான் செஞ்ச பெரிய பாவம்னு அவருக்குள்ளே ஓடிண்டு இருக்கு. ஒரு தடவை என்கிட்டே சொல்லி அழுதுட்டார். நடக்கறது தானே நடக்கும். நீங்க நிறுத்தாட்டா வேறே யாராவது வந்து தடுத்து நிறுத்தியிருப்பா. ஒருத்தன் பொண்டாட்டியை இன்னொருத்தன் கட்டிக்க முடியாதுன்னு தெரியாமலா சொன்னா?ன்னேன். அவருக்கு சமாதான மாகலை. அப்படீன்னா சபரிக்குன்னு பொறந்தவளை அவன் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கான்னார். என்ன பதில் சொல்றது?” என்று சிரித்தாள். உயிரற்ற அந்தச் சிரிப்பை அவனால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை.

அன்று மாலை சபரி ஐயாறப்பர் கோயிலுக்குப் போனான். சுவாமி சன்னதியில் அதிகக் கூட்டமில்லை. தரிசனத்தை முடித்து விட்டு அம்மன் சன்னதிக்குச் சென்றான். தர்ம சம்வர்த்தினி அம்மன் சர்வாலங்கார பூஷிதையாய் நின்றாள். அன்று அஷ்டமி என்று கூட்டம். நல்ல நாள் அல்ல என்று மக்கள் ஒதுக்கி விட்ட அஷ்டமியன்று அம்மன் திருமணம் செய்து கொள்ளும் வைபவத்தைக் காணவே கூட்டம். எல்லா நாளும் நல்ல நாளே என்று சிரித்துக் கொண்டு நின்ற அம்மனிடம் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஒவ்வொரு தினமும் நல்லதினமாக ஆகக் கடாட்சம் புரியுமாறு வேண்டிக் கொண்டான். பிறகு கடைத் தெருவுக்குப் போய்ப் பழங்கள் காய்கறிகள் வாங்கினான். வரும் வழியில் ஒரு எலெக்ட்ரிக் ஷாப்பில் பல்பு வாங்கிக் கொண்டான். வீட்டுக்குள் நுழைந்த போது வீடு அமைதியாக இருந்தது. அப்பாவின் அறைக்கதவை மெல்லத் திறந்து பார்த்த போது அவர் கண்களை மூடியபடி படுத்திருந்தார். வலது கால் லேசாக ஆடிக் கொண்டிருந்தது. காமிரா உள்ளில் அம்மா ஏதோ சுலோகம் சொல்லும் குரல் கேட்டது. முகம் அலம்பி விட்டு தலை வாரிக் கொள்ள அங்கே வந்திருப்பாள் என்று சபரி நினைத்தான். அவன் கையி லிருந்த பைகளை சமையல் அறைக்குள் சென்று வைத்து விட்டு பூஜை அறைக்குச் சென்றான். அம்மா இன்னும் வந்து விளக்கேற்றாததால் வெளி வெளிச்சத்தையும் மீறி அறையினுள் இருட்டு குடியிருந்தது.

இருட்டில் லேசாகத் தடுமாறிக் கொண்டு போய்க் கை எட்டும் தூரத்தில் உயரே தொங்கிக் கொண்டிருந்த ஹோல்டரில் பல்பைச் சொருகினான். இரண்டு மூன்று தடவை முயற்சித்த பின் அது சரியாக உட்கார்ந்து கொண்டது. அவன் மர பீரோவை நெருங்கினான். அதன் பின்புறம் கையை நுழைத்து சுவிட்சைத் தேடினான். அப்போது அறையுள் ஸ்லோகக் குரலுடன் அம்மா நுழைந்தாள்.அவன் அவளை அந்த இருட்டில் கலவரப்படுத்த வேண்டாம் என்று பீரோவின் பின்னே நகர்ந்து நின்றான்.

அம்மா சுலோகத்தைத் தொடர்ந்து கொண்டே சுவாமி மேடையில் இருந்த விளக்கில் எண்ணெய் ஊற்றி அங்கிருந்த தீப்பெட்டியை எடுத்தாள். விளக்கேற்றினாள். பழக்கப்பட்ட இருட்டு என்று சரளமாக அவள் காரியம் செய்கிறாள் என்று சபரி நினைத்தான். அப்போது அவள் குரல் நின்று விட்டதால் சுலோகம் முடிந்து விட்டது போல என்று சபரி நினைத்தான். திடீரென்று அம்மாவின் குரல் கேட்டது. “தாயே புவனேச்வரி. இப்பிடி வாய் விட்டுக் கேக்க வச்சிட்டியேன்னு நான் அழலை. நானும் தினமும் உன்கிட்டே மன்னாடிண்டுதான் இருக்கேன். இந்த மனுஷன் படர பாடு அவராலே தாங்கிக் கொள்ளவே முடியாதபடி இருக்கே. நீதான் கருணை காட்டணும், மனசு வக்யணும். சீக்கிரம் அவரைக் கொண்டு போயிடும்மா. அதை நான் தாங்கிண்டுடுவேன். ஏன்னா எனக்கு அப்புறம் அவரைப் பாத்துக்க யாரும் வரமாட்டா. வந்தாலும் அவரைப் பாத்துக்க அவர் விடமாட்டார். அப்புறம் அவருக்கு உயிரோடேயே நரகம்தான். அதை என்னாலே நினைச்சக் கூடப் பாக்க முடியலே. சர்வேஸ்வரி நீதான் எல்லோருக்கும் நல்லது பண்ணறவ. இவரை சீக்கிரம் நாளேக்கே கூட கூட்டிண்டு போயிடு.”

அம்மா விசும்பும் சத்தம் கேட்டது. சற்றுக் கழித்து எழுந்து அவள் வெளியே சென்றாள் . ஆடாமல் அசையாமல் எரியும் குத்துவிளக்கின் திரியைப் பார்த்தபடி சபரி அரையிருட்டில் நின்றான்.