அர்ஜூன் ராச்
வெய்யில்
சமாதானமாகிக் கொண்டிருந்த வேளை
ஒரு துனிப்பின் பயணத்தில்
என் தோள்வனையாமல்
பின்னிருக்கையில் அமர்ந்தபடி
நம் பிரேமையின் உருகுநிலையில்
உறைந்து கொண்டிருந்தாய்
சட்டென இமைகீறி எதிர்ப்பட்ட வண்ணத்துப்பூச்சியொன்றின் நக உராய்வில்
குடை சாய்வது போன்ற என் திகைப்பில்
குற்றுயிர் சுவாசமுடன்
‘பாத்துங்க…’ என்று
இருக்கியணைந்தாய்
இமைகளோடு என்னை
‘பேசிட்ட பாத்தியா’ என்றதும்
நிலவுக்கு முகமடுத்து
மீண்டும் ஊடினாய்
அந்தியோடு அந்தியாய் வண்ணங் குழைந்த
உன் மந்தகாச ஒளிப்பினை
பிம்பமித்து,
பிரகாசம் கூட்டி எனக்கு
காட்டிக் கொடுத்துவிட்டது
நம் காதல் வாகனத்தின்
ரியர்வியூ கண்ணாடி.
கூடலின் 4th கீரில் வேகமுறுக்க
உனக்கும் எனக்குமிடையில்
அடிக்கடி தலைபட்டு,
வழக்கம் போல
வந்ததும் வராததுமாய் சில்லறுந்து
பின்வாங்கினாள்
தழுதழுத்த அருவமாய்
நம் ஊடல் பெரிய மனுஷி