ஆனந்த் குமார்
கதவைப் பற்றி
புகாரில்லை எனக்கு
அது ஒரு அற்ப ஜந்து.
இந்த ஜன்னலின்
அதிகாரம்தான்
பொறுப்பதற்கில்லை.
வானத்தை சரியான அளவில்
வெட்டி வைக்கிறது
மேலும் குட்டிக் குட்டிச்
சதுரங்களாய் வேறு பிரிக்கிறது.
அது காண்பிக்கிறது
தினம் தினம் ஒன்றேயென
வானத்தின் அளவை
அது சொல்கிறது
மாற்றமேதும் இல்லையென.
சரிதான் இருக்கட்டும் முத்தே
உன் இரு சதுரங்களினிடையில்
ஒரு பூ வேலைப்பாடு
தினம் தினம்
அது
கொஞ்சம் பூக்கிறதே என்ன ?