எழுத்து

‘நான் எப்போ சாவேன்?’ – தேடன்

தேடன்

‘நான் எப்போ சாவேன்?’ என்று அடிக்கடி கேட்பாள் அவள், லீலா. அவளுக்கு வாழ்வின் மீது அவ்வளவு வெறுப்பு என்பதை விட சாவின் மீது ஏதோ பிரியம் என்றே சொல்லலாம். ஏனேனில் அவள் வாழ்க்கை அவ்வளவு மோசமாக ஒன்றுமில்லை.

லீலாவிடம் எதற்காக நீ இப்படி கேட்கிறாய் என்றால் ‘எனக்கு லைஃப் ல ஒரு திருப்தி வரவேயில்ல‌. கடவுள் கிட்ட போயிட்டா நானும் சந்தோஷமா இருப்பேன்ல. அதுல தான் எதோ நிறைவு இருக்க மாதிரி தோணுது. இங்க வாழறது எதுக்குனே தெரியல.’ என்று நீட்டி முழக்கி தத்துவம் பேசுவாள். அதில் உண்மையிருந்தாலும் சாவை பற்றியே யோசிப்பது ஒரு நோய் என்பதை அவள் அறியவில்லை.

லீலாவின் வீட்டின் அருகே ஒரு சிறுமிக்கு திடீரென புற்றுநோய் என்று தெரியவந்தது. அவளுக்கு அந்த சிறுமியோடு சிறிது நாள் பழக்கமே என்றாலும் லீலாவோடு அந்த சிறுமி மிக நெருங்கி விட்டிருந்தாள். சிறுமிக்கு புற்றுநோய் என்று தெரியவந்தது முதல் லீலாவுக்கு தூக்கமே வரவில்லை. கண்களை மூடினாலும் திறந்தாலும் அந்த சிறுமி கீமோதெரபியால் முடி கொட்டி மெலிந்து சோர்ந்து விட்டிருந்தவள், ஆட்டோவில் இருந்து இறங்கி வருகையில் மூச்சை இழுத்து இழுத்து விட்டபடி லீலாவை பார்த்து சிரித்த அந்த தருணமே ஓடிக்கொண்டேயிருந்தது. எப்படியும் அந்த சிறுமி இன்னும் சில மாதத்தில் இறப்பது உறுதி என்று சொல்லிவிட்டனர்.

லீலா அந்த சிறுமியை பார்க்கும் தைரியம் அற்றவளாய் இருந்தாள். அந்த சிறுமியை எல்லோரும் வந்து பார்த்து விட்டு சென்றனர். லீலாவின் வீட்டிலிருந்தும் எல்லோரும் போய் பார்த்து விட்டு வந்தனர். லீலாவிடம் ‘கடைசியா பாத்துடு. உன்னதான் அவ கேட்டா. அப்பறம் பாக்கமுடயலனு வருத்த பட்டு ப்ரயோசனம் இல்ல’ என்று அம்மா சொன்னாள். லீலாவால் அந்த சிறுமியை பார்க்க போகும் ஒரு அடியை கூட எடுத்து வைக்க முடியாது அழத் தொடங்கிவிட்டாள். அழுகை நின்றதும் திரும்ப அந்த சிறுமியின் நினைவு வர அவளுக்குள் செய்வதறியா கோபம் பொங்கியது.

மறுநாள் லீலா கண்விழித்து பார்க்கையில் அவள் முன் அந்த சிறுமி நிற்கிறாள். ஓடியாடி சிரித்து குதித்த அந்த சிறுமி மெலிந்து நொடிந்து மூச்சு விட சிரமப்பட்டு மொட்டை தலையோடு அவள் முன் நிற்கிறாள். லீலா வின் கண்களோடு சிறுமியின் கண்கள் மோதுகின்றன. எல்லாமே சூன்யமானது அந்த சிறுமி கண்களில் தெரிந்த சிரிப்பால்.

லீலாவிடம் ‘நான் எப்போ சாவேன்க்கா,’ என்கிறது அந்த மழலை மாறாத குரல். லீலாவின் உடலெங்கும் ஆயிரமாயிரம் அதிர்வலைகள். அந்த கேள்வி, தான் கேட்கும் அதே கேள்வி. மீண்டும் மீண்டும் கேட்கிறாள் அந்த சிறுமி அதே கேள்வியை.

‘நான் எப்போ க்கா சாவேன் சொல்லுக்கா’ அதே மழலை குரல் துக்கத்தின் சாயலில் உள்ளிறங்கி ஒலிக்கிறது.

லீலாவின் குரல் வரவேயில்லை அவள் உதடுகள் செய்வதறியாது மேலும் கீழும் அசைந்தன. என்ன சொல்வது, என்ன சொல்லி என்னவாகப் போகிறது. சாவு நிம்மதி தான் ஆனால் பிரிவு கொடியது; வாழ்க்கையின் மிக பெரும் வன்முறை. அதற்கு மேல் அவளால் அழுகையை அடக்கவே முடியவில்லை. அந்த சிறுமி சிரித்து கொண்டே நின்றிருந்தாள்.

‘அய்யோ,’ என்று ஒரு பெருங்கூச்சல் அந்த சிறுமியின் வீட்டிலிருந்து. லீலா தூக்கத்திலிருந்து விழிக்க லீலாவின் அம்மா சொன்னாள் ‘குழந்த போயிட்டா’.

ஒன் மொமெண்ட் ப்ளீஸ் – விஜயகுமார்

விஜயகுமார்

எங்கள் வாசற்படியில் அனாமத்தாக ஒரு ஆணுறை கிடந்தது. புதிய பிரிக்கப்படாத ஆணுறை. இந்த நாளின் அந்தி இப்படியாக கழியும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இரண்டு வீடுகளுக்கும் ஒரே வாசல் தான். படிக்கட்டு ஏறி வலம் திரும்பினால் நான் இருக்கும் வீடு. இடம் திரும்பினால் இன்னொரு வீடு. ஊரிலிருந்து அமெரிக்கா கிளம்பும் போது கவனமாக இரு கவனமாக இரு என்று சொல்லித்தான் அனுப்பி வைத்தார்கள். நான் துளைக்கும் துப்பாக்கி, குத்திக் கிழிக்கும் கத்தி, உடைந்து விழும் விமானம், அந்தரத்தில் தூக்கும் சூறாவளி என்று எதிர்பார்த்தால். இப்படி ஒரு சோதனை. நான் எப்படி இதற்கு எதிர்வினை செய்வது. யாராவது என்னை பார்க்கிறார்களா? இங்கு எல்லோரும் எல்லாவற்றையும் பார்க்கிறார்கள். என்னை யாரோ பார்க்கிறார்கள் என்றே எடுத்துக்கொண்டு குனிந்து கைக்குட்டையால் அதை எடுத்து திருப்பிப் பார்த்தேன். அதில் எரிக்கா என்று பேனாவால் எழுதி இருந்தது. அதை அருகில் உள்ள குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு சுற்றும்முற்றும் பார்த்தேன். எங்கள் இரட்டை வீடு போலவே அந்த தெரு முழுதும் உள்ள இரட்டை வீடுகளில் யாரும் வெளியே காணவில்லை. திரும்பி எங்கள் வீட்டைப் பார்த்தேன். அதில் மற்றொரு வீட்டின் பெரிய ஜன்னலின் திரைக்கு பின்னால் ஒரு அசைவு. எனக்கு தெரியும் என்னை யாரோ பார்க்கிறார்கள் என்று. நல்ல வேலை அதற்கு தக்கவாறு நடந்து கொண்டேன்.

ஞாயிற்றுக்கிழமை முழுவதும் ப்ரெசென்ட்டேஷன் தயார் செய்து கொண்டிருந்தேன். திங்களன்று அலுவலகத்தில் நான் ஒரு பெரிய பயிற்சி வகுப்பு எடுக்க வேண்டியுள்ளது. எங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பலதரப்பட்டவர்கள். என்னுடைய மேலாளர் வேலையிலிருந்து நின்று விட்டார். ஆகையால் அவருடைய மேலாளர் என்னை நியமித்திருந்தார். எனக்கு இது நல்வாய்ப்பு. களைப்பாக உள்ளது என்று ஒரு சிகரெட் பற்ற வைக்க வெளியே வந்தேன். அங்கு ஒரு பெண் அறக்கப் பறக்க எதையோ வாசலில் பொறுக்கிக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்தவுடன் சடசடவென்று அள்ளியதை அனைத்தும் ஒரு பையில் போட்டுக்கொண்டு குனிந்தவாறே என்னைக் கடந்து வாசற்படிகளில் ஏறி இடப்பக்கம் திரும்பி உள்ளே சென்று விட்டாள். என் எதிர் வீட்டில் ஒரு பெண் இருக்கிறாள் என்பதை உணர்ந்தேன். உணர்ந்த உடனேயே இன்னொன்றையும் சேர்த்து உணர்ந்தேன். அதை உறுதி செய்துகொள்ள வாசல் முழுவதும் கண்களை அலைய விட்டேன். தடயம் ஏதும் கிடைக்கவில்லை. திரும்பி அந்த ஜன்னலைப் பார்த்தேன். அதன் திரை அசைந்து கொண்டிருந்தது.

நான் எடுக்க வேண்டிய பயிற்சி வகுப்பு அன்று பெரிய சொதப்பல் இல்லாமல் சென்றது. எழுதிவைத்து மனனம் செய்ததை ஒரு ராகம் போல் பாடிவிட்டு வந்தேன். அன்றைய வகுப்பிற்கு சொற்பமானவர்களே வந்திருந்தனர். வந்தவர்கள் அனைவரும் வயோதிக வாடிக்கையாளர்கள். எல்லோரும் தூங்கி வழிந்தனர். எனக்கு இது வசதியாக இருந்தது. வெள்ளையர் கறுப்பர் லட்டினோ அரேபியர் ஆசியர் கிழக்காசியர் என்று வண்ணக் கோலப்பொடி போல இருந்தார்கள். வீடு வரும் வழி நெடுகிலும் மனம் எதிலும் லயிக்காமல் இருந்தது. ஏதேதோ சிந்தனை. தூரத்திலிருந்து வரும்போதே அவளை கண்டுகொண்டேன். மீண்டும் வாசலில் பொறுக்கிக் கொண்டிருந்தாள். நான் அவசர அவசரமாக சென்று அவள் அருகில் கிடந்ததை எடுத்துப் பார்த்தேன். அதில் ‘எரிக்கா, யு ஆர் ஏ ஃபைன் ஃபக்’ என்று எழுதி இருந்தது. அதை வெடுக்கென்று அவள் பிடுங்கினாள். அரைக்கணம் என் கண்களை சந்தித்தாள். சஞ்சலம் ஏதும் இல்லாத முகம் என்றாலும் அதன் கண்கள் நீர்மை கோர்த்திருந்தது. பிடுங்கியதை பையில் போட்டுக்கொண்டு திரும்பிப் பார்க்காமல் உள்ளே விறுவிறுவென்று சென்றாள்.

அன்று முன்னிரவு மனம் அலைக்கழிப்பாகவே இருந்தது. அலுவலகத்தில் என்னை நிரூபித்துக்கொள்ள வேண்டும். அதன் படபடப்புடன் இவளின் உரசல் வேறு. அவளது வட்ட முகம். வெண்ணிற தோல், மூக்கின் கீழ் உள்ள மென்மயிர், பரட்டைக் கூந்தல். முதல்தர அழகி இல்லை. என்றபோதும் என் மனம் அலுவலக சோர்வைத்தாண்டி அவளை ஏந்திக் கொண்டிருந்தது. அன்றிரவு என் அந்தரங்க ஆசுவாசத்திற்கு அவள் பிம்பம் உதவியது. இதுநாள் வரையில் லட்சிய அழகிகளே என் கற்பனையில் அரங்கேறி இருக்கிறார்கள். அன்றிரவு அவள் விதிவிலக்கு. முடிந்தபின் ஏன் என்று யோசித்துப் பார்த்தேன். உண்மையை சொன்னால் எனக்கு ஒரே எதிர்வீடு; அதில் ஒரே ஆள்; அது ஒரு பெண். அவ்வளவே. மேலும் காரணம் கேட்டால் அவளது கண்களில் தேங்கி நின்ற நீர். அந்த மெல்லிய படலம். அந்த நீர் பரப்பு. அதில் தென்படுவது ஒரு பலகீனம். என்னை கட்டுக்குள் கொண்டுவர முடியும்; ஆக்கிரமிக்க முடியும் என்ற பதாகை. மிரட்டினால் மிரண்டுவிடுவேன்; அடித்தால் அழுதுவிடுவேன் என்ற கூற்று. வன்முறையின் சாத்தியத்தை அஞ்சும் கண்கள். அதுவே என்னை வீறுகொள்ளச் செய்தது. அவளது பெயர் எரிக்கா வாக இருக்கக்கூடும்.

அலுவலக நண்பரிடம் ஆணுறையை ஒருவருடைய பெயர் எழுதி அவரது வீட்டின் முன் போடும் சடங்கின் காரணம் பற்றி கேட்டேன். அவர் சிரித்துவிட்டு, “இந்த நாடு ஒரு கலவையான நாடு. அதுல பல கூறுகள் வந்து சேரும். அப்படி எங்கிருந்தோ புதுசா வந்து சேர்ந்த ஒரு கீழ்மையான பழக்கம் இது. ஒரு பெண்ணை அவமானம் செய்யுற நோக்கத்தோடு செய்யறது. உன்ன எப்போ வேணும்னாலும் கெடுத்துப்போடலாம். நீ என்னோட லிஸ்டில் இருக்க. என்னிக்கு இருந்தாலும் நீ மாட்டுவ. அப்படீன்னு சொல்றது.” என்றார்.

“என்ன கிறுக்குத்தனம்….”

“நம்ம ஊரிலேயே கிறுக்கனுங்க இருக்கானுங்க. இந்த ஊருக்கு என்ன வந்தது. இங்கயும் நிறைய இருக்கானுங்க. இன்னும் சொன்னா ஒருவர் வீட்டுக்கு முன்னாடி வந்து மலம் அள்ளி வெச்சுட்டு போவானுங்க. நாம காசு வெட்டிப் போடுறோம் இல்ல. அந்த மாதிரின்னு வெச்சுக்கோ.”

அடுத்தநாள் அவள் வீட்டை விட்டு வெளியே வரும்வரை நோட்டம் பார்த்து தற்செயல் போல் நானும் வெளியே வந்தேன். அவள் வீட்டை பூட்டிக் கொண்டிருக்கும் போது நானும் பூட்டுவது போல் திரும்பிக்கொண்டு மெலிதாக, “ஐ நோ வாட் யு ஆர் கோயிங் த்ரூ” என்றேன்.

அவள் திரும்பி என்னைப் பார்த்தாள். நானும் திரும்பினேன். “ஒஹ் ரியலி?” என்று எரிச்சலாக சொல்லிவிட்டு உடையை நேர் செய்தவாறு வெளியே சென்றாள். அவள் சென்ற பின் “எஸ் ரியலி….” என்றுகொண்டேன். கனவில் வந்து கட்டளைக்கு காத்துக்கிடக்க எவ்வளவோ அழகிகள். இவள் வந்தாள் இப்போது சென்றுவிட்டாள். அடுத்த வேலையைப் பார்ப்போம்.

அன்று பயிற்சிக்கு புதிய வாடிக்கையாளர்கள் அரங்கு நிரப்பிக் கொண்டனர். எனது மாமூல் மனப்பாட வித்தை அன்று என்னை கைவிட்டது. குரல் நடுங்க உடல் வியர்க்க கால்கள் உதற அன்றைய கப்பலை கரை ஏற்றினேன். என் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் என்னிடம் வந்து ஆறுதலாக அடுத்தமுறை நன்றாக செய் என்று சொல்லி இருக்காவிட்டால் நானும் அவள் போல அழுதிருக்க தேவையில்லை. நல்லவேளை அவர் மட்டும் தான் என் கண்களின் நீர் படலத்தை பார்த்தார். அடிபட்ட சோகத்துடன் வீடு திரும்பும்போது எரிக்கா வாசலில் நின்றாள். அவளை சட்டை செய்யும் அளவிற்கு அன்றைய நாள் உற்சாகமாக இருக்கவில்லை. நான் ஒதுங்கிப் போக எத்தனிக்கும் போது, “நான் நம்புகிறேன், நான் உங்களிடம் ஒரு மன்னிப்பை சமர்ப்பிக்க கடன்பட்டிருக்கிறேன் என்று.” என்றாள். மூளையின் கட்டளையின்றி நான், “ஒஹ் உண்மையாகவா….” என்றுவிட்டு உள்ளே சென்றேன்.

என் கண்கள் நீர் படலம் கோர்த்த அந்த தருணத்தையே நான் எண்ணிக் கொண்டிருந்தேன். கும்பலின் முன்னால் ஒடுங்கி இருக்கும் நான். எரிக்கா என்னவாக இருந்திருப்பாள் அப்போது. அப்போது தோன்றும் எண்ணமெல்லாம் செயலெல்லாம் தப்பி ஓடுவது, பொந்துக்குள் புகுந்து கொள்வது. நான் அதைத்தான் யோசித்தேன். எரிக்கா அதைத்தான் செய்தாள். உரசலுக்கு பின்பும் அவள் இன்று அணுக்கமாக தோன்றினாள்.

அடுத்து வந்த நாட்களில் நாங்கள் கண்கள் சந்தித்துக் கொண்டோம் முகமன் சொல்லிக்கொண்டோம். அதற்கிடையில் எனக்கு அருகில் உள்ள பல்பொருள் அங்காடியில் வேலை செய்யும் வேறு ஒரு லட்சிய அழகி என் கனவை அக்கிரமித்திருந்தாள். எரிக்கா எதிர் வீட்டுப் பெண்ணாக மட்டுமே ஆகிப்போனாள். அந்த அங்காடிக்கு அடிக்கடி செல்வேன். அந்த லட்சிய அழகி அங்கே விற்பனை பிரிவில் நின்றிருப்பாள். சிகாகோவில் கணிசமானோர் லட்டினோ இன மக்கள். அவர்களுக்கு இந்திய உடற்கட்டும் ஜப்பானிய தோல் நிறமும் இருக்கும். அவர்களுக்கு என்று பிரத்தியேக சந்தை உருவாகி வந்திருந்தது. அவர்களுள் சிலருக்கு ஆங்கிலம் தெரியாது ஸ்பானிய மொழி மட்டும்தான். என்னுடைய லட்சிய அழகிக்கு ஸ்பானிய மொழி மட்டும் தான் தெரியும் போல. அவளிடம் ஆங்கிலத்தில் எது கேட்டாலும் “ஒன் மொமெண்ட் ப்ளீஸ்” என்று சொல்லிவிட்டு ஆங்கிலம் தெரிந்த ஒருவரை அழைத்து வந்து விடுவாள்.அவளை நோட்டம் விடுவேன். அவளும் என்னை நோட்டம் வீட்டுக் கொண்டிருந்தாள். நான் எது கேட்டாலும் ‘ஒன் மொமெண்ட் ப்ளீஸ்’ தான். அவள் என்னை பார்க்கிறாள் என்பதற்காகவே தினமும் செல்வேன். தினமும் எனக்கு ஒரு ‘ஒன் மொமெண்ட் ப்ளீஸ்’ கிடைக்கும். அவள் அன்று என்ன ஒப்பனை செய்திருக்கிறாள் என்ன ஆடை அணிந்திருக்கிறாள் என்ன சடைப் பின்னல் இட்டிருக்கிறாள் என்பதை பார்க்க விருப்பம். அவள் எனக்கு தோதான உயரம், என் உள்ளங்கையிற்குள் அவள் உள்ளங்கை அடங்கிவிடும், அவள் அங்கங்கள் அனைத்தும் எனக்கான பிடிமானம். அலுவலக திறன் இயலாமைக்கும் அதன் விளைவாக உள்ள ஆற்றாமைக்கும் அவளைப் பார்க்க செல்வது ஒரு நல்ல வடிகால். அவளது ‘ஒன் மொமெண்ட் ப்ளீஸ்’ என் உள்ளத்தில் எப்போதுமே இசைந்து கொண்டிருக்கும். நான் தினமும் அந்த அங்காடி செல்வதை எரிக்கா கவனித்திருக்க வேண்டும். நான் எப்போதும் நடந்துதான் செல்வேன். என்னிடம் கார் கிடையாது.

அன்று அவள் வெளியே வந்து “நீங்கள் அங்காடிக்கு செல்கிறீர்களா?” என்று கேட்டாள். நான் ஆமாம் உங்களுக்கு ஏதேனும் வாங்கி வர வேண்டுமா? என்று பவ்யமாக கேட்டேன்.

“நானும் அங்கேதான் செல்கிறேன். நானும் உங்களுடன் வரலாமா?”

“நான் நடந்து செல்வேன். தாமதமாகி விடும்”

“இல்லை, உங்களுடன் வந்தால் சிறிது பாதுகாப்பாக உணர்வேன்”

எனக்கு அந்த சொற்கள் கிரீடம் வைத்தது போல் இருந்தது. பண்பானவன் என்ற அங்கீகாரம் போல். இன்னும் பணிவு கூடி வந்தது. “வாருங்கள் நான் துணைக்கு வருகிறேன்” என்றேன்.

ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நடந்தேன். கண்டிப்பாக அவள் கண்களை மட்டும்தான் பார்த்துப் பேசவேண்டும் என்ற அவசரகால சங்கற்பம் எடுத்துக் கொண்டேன்.

செல்லும் வழியில் அமைதியாகவே சென்றோம். கண்டிப்பாக நான் எந்த பேச்சும் ஆரம்பிக்க கூடாது. அவளுக்கு வாய் கொஞ்சம் கோணல். சிரித்தால் ஒருபக்கம் இழுக்கும். லட்டினோக்களைப் போல் நீவிய கேசம் இல்லை. நெளிந்து நெளிந்து போகும் கொண்டை இடப்படும் சிதறல் முடி. இறுகிய புஜங்கள். அவள் நடை கொஞ்சம் ஆண் தன்மை கொண்டிருக்கும். நன்றாக கவனித்தால் அன்றைய நடப்ப வழக்கிலிருந்து அவள் விலகியே இருப்பது தெரியும். அவளுடன் நடந்து வருகிறேன் என்ற முழுப் பிரக்ஞையுடன் இருந்தேன். அதனால் என்னவோ எனக்கே அந்நியமான ஒரு உடல் மொழி என்னிடம் தென்பட்டது. அந்த உடல் மொழி வசதியாகவும் நம்பகத்தன்மை கொண்டதாகவும் இருந்தது. அதையே ஏற்று நடித்துக் கொண்டிருந்தேன். சற்றும் எதிர் பார்க்காமல் எனது நிறுவன இயக்குநர் எங்கள் எதிரில் நடை பயிற்சி வந்தார். என்னைப் பார்த்து நிற்காமல் ஒரு கையை தலைக்கு மேல் தூக்கி சமிக்ஞை செய்தார். நான் என் பாவனையை சடுதியில் கைவிட்டு அவரை நோக்கி மேல் உடலை மட்டும் கொஞ்சமாக வளைத்து அரை வணக்கம் போல் என் வலது கையை நெஞ்சுவரை ஏற்றி இறக்கினேன். அவர் கடந்துவிட, நான் மீண்டும் தன்னிலை மீண்டு மீண்டும் புதிய உடல் மொழிக்கு திரும்பினேன். அவள் அதை கவனித்தாள்.

“நீங்கள் இந்தியர் தானே?”

“என்னுடைய வணக்கம் உங்களுக்கு காட்டிக்கொடுத்து விட்டதா?”

“நீங்கள் தென் அமெரிக்கர் என்றுதான் முதலில் நினைத்தேன்.”

“நீங்கள்?”

“ஆஃப்கன்..” என்று விட்டு அவள் மேல் உடலை வளைத்து அரை சலாம் செய்து காண்பித்தாள்.

நான் சிரிக்க அவளும் சேர்ந்து சிரித்தாள். “இங்கே நம்மை போன்றோர் அரை மக்கள்தான். அரை ஜீவனம்தான். அரை உரிமைதான். அரை வணக்கம் தான்.” என்றாள்.

அவள் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டே சென்றாள். ஆஃப்கன் மக்கள் இங்கே இன்னும் இறுகிய சமூகமாகவே இருப்பதை; லட்டினோ மக்கள் தங்களுக்கான ஒரு கலாச்சாரத்தை சமைப்பதை; அரசியல், கலை, மக்கள், பிரதேசம் என்று என்னென்னவோ. நான் ஈடு கொடுத்துக்கொண்டு வந்தேன். பெரும்பாலும் கேட்டுக்கொண்டு. அவளை ஆச்சரியத்தில் உள்ளாக்க; நின்று கவனிக்க வைக்க; என்னிடம் பகிர்ந்துகொள்ள எந்த சரக்கும் அப்போதைக்கு இல்லை. நாங்கள் அங்காடிக்கு வந்து சேர்ந்திருந்தோம். ஒன் மொமெண்ட் ப்ளீஸ் இருக்கும் அங்காடிக்கு.

ஒன்றாகவே சென்று சிறிய சிறிய பொருட்களை வாங்கினோம். அவள் எடுத்த பொருட்களில் ஆங்கிலமும் அரபியும் அச்சிடப்பட்டிருந்தது. நான் எடுத்த பொருட்களில் ஆங்கிலமும் சில இந்திய மொழிகளும். “அதை சுட்டிக்காட்டி நாம் நம் சென்ற காலத்தை இன்னும் பொறுக்கித் திரிகிறோம்” என்றாள். அவள் பட்டியலில் மீண்டும் ஒரு புள்ளி. நான் பின்தங்கி அதலபாதாளத்தில்.

எரிக்காவிற்கு தெரியாமல் நான் என் லட்சிய அழகியை பார்த்து பார்த்து மீண்டேன். எரிக்கா என்னிடம் வந்து “அந்த பெண் உன்னை பார்க்கிறாள்” என்றாள்.

என் ஆச்சரியத்தை வெளிக்காட்டாமல் “தெரியும்” என்றேன்.

“தெரியுமா?. அப்படியானால் அவள்…”

“இல்லை… அவளுக்கு ஆங்கிலம் தெரியாது…”

“இதற்கு எதற்கு ஆங்கிலம். போய் பேசிப் பார்.”

“நான் பல முறை பேசி இருக்கிறேன். அவளுடைய ஒரே பதில் ‘ஒன் மொமெண்ட் ப்ளீஸ்’ தான்.”

எதற்கு ‘ஒன் மொமெண்ட் ப்ளீஸ்’? என்றாள்.

“நீயே கேட்டுப்பார்.” என்றவுடன் எரிக்கா சிறிதும் தயங்காமல் அவளிடம் சென்றாள். நான் தூர நின்று பார்த்தும் பார்க்காமலும் கவனித்தேன்.

எரிக்கா அவளிடம் என்னை நோக்கி ஏதோ காண்பித்து பேசினாள். என் அடிவயிறு சப்தமிட்டது. வேறுபக்கம் திரும்பிக் கொண்டேன். எரிக்கா கிண்டலாக சிரித்துக் கொண்டு திரும்பி வந்தாள்.

“பைத்தியம், அவளிடம் என்ன சொன்னாய்?”

“கண்டிப்பாக சொல்லவேண்டுமா?”

“சொல். என்னை காண்பித்து என்ன சொன்னாய். உனக்கு ஸ்பானிய மொழி தெரியுமா? அவள் என்ன சொன்னாள். என்னை காக்க வைக்காதே”

எரிக்கா சிரிப்பை அடக்க முடியாமல், “எனக்கும் ‘ஒன் மொமெண்ட் ப்ளீஸ்’ தான் சொன்னாள்”.

எனக்கு சிரிப்பு வந்தது. அவள் சிரிக்க அவளை பார்த்து நான் சிரிக்க அவள் மேலும் என்னை பார்த்து சிரித்தாள். நாங்கள் வெளியே ஓடிவந்து சிரித்தோம். விலா எலும்பு வலிக்கும் வரை சேர்ந்து சிரித்தோம். கண்களில் வழிந்த நீரை துடைத்தாள். அவளது சிரிப்பு புன்னகையாக மாறியிருந்தது.

“ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இப்படி சிரித்து.” என்றாள்.

நாங்கள் வீடு திரும்பினோம். வரும் வழியில் என் உடல் மொழியை பாவனையை கைவிட்டு இயல்பாக இருந்தேன்.

கொஞ்ச நேரம் அமைதியாக நடந்தோம். அவள் எங்கிருந்தோ ஆரம்பித்தாள். “யோசித்துப் பார்த்தால் நம்மால் சில இடங்களில் ‘ஒன் மொமெண்ட் ப்ளீஸ்’ சொல்ல முடிவதில்லை. சொன்னாலும் நமக்கு அந்த ஒன் மொமெண்ட் கிடைப்பதில்லை.” என்றாள்.

“ம்ம்ம்….”

“நான் சொல்வது உனக்கு புரிகிறதா. நான் ஆஃகானில் சொன்ன ஒன் மொமெண்ட் ப்ளீஸ் -ன் விளைவுதான் இப்படி இங்கே இருக்கிறேன். இப்போது இங்கேயும் ‘ஒன் மொமெண்ட் ப்ளீஸ்’ சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீ பார்த்தாயா என் வீட்டின் எதிரில் ஆணுறையில் என் பெயர் எழுதி வீசுகிறார்கள். நான் அவர்களுக்கு அரை சலாம் போடுகிறேன். அவர்களிடம் ‘ஒன் மொமெண்ட் ப்ளீஸ்’ சொல்ல விழைகிறேன்.

“யார் அப்படி எழுதி வீசுவது?”

“என் மாணவர்கள்.”

“எதற்காக அப்படி செய்கிறார்கள்?”

“என்னை மிரட்டுவதற்கு. நான் பலகீனமானவள் என்பதை மோப்பம் பிடித்து விட்டார்கள். அது கும்பல் மனநிலை. ஒரு சிலர் அதை ஆரம்பித்து வைப்பார்கள். அதற்கு தயங்கியவர்கள் சேர்ந்து கொள்வார்கள். மீதி சிலர் தனித்துப் போகக்கூடாது என்று சேர்ந்து கொள்வார்கள். அனைவருக்கும் ஒரே நோக்கம் என்று சொல்ல முடியாது. ஒரு சிலர் என்னை காதலிக்கவும் கூடும். நான் ஆஃப்கானிஸ்தானில் பிணைக் கைதியாக இருக்கும்போது என்னை இரண்டாவதாக கபளீகரம் செய்தது என் சொந்தக்காரன் தான். பின்பு அவன் தான் என்னை காப்பாற்றி இங்கு கொண்டுவந்து சேர்த்தான். இப்போது யாரும் கபளீகரம் செய்யவும் வேண்டாம் காப்பாற்றவும் வேண்டாம். நான் வேலையை விட்டு விட்டேன். அடுத்த வாரம் இந்த ஊரை விட்டு நீங்குகிறேன். வேறு இடம் செல்கிறேன். ஒன் மொமெண்ட் ப்ளீஸ் சொல்லப்போகிறேன்.”

நான் எங்கு செல்கிறாய் என்று கேட்கவில்லை.

அவள் அதை உணர்ந்தாற்போல் சிரித்தாள்.

வீடு வந்தது. அவள் கையை நீட்டி “நான் எரிக்கா..”என்றாள். அவள் கையை குலுக்கி “நான் மோகன்..” என்றேன்.

“மன்னிக்கவும் ஒரு உணர்ச்சி வேகத்தில் என் அந்தரங்கத்தை உங்களிடம் சொல்லி உங்களையும் சோகத்தில் ஆழ்த்திவிட்டேன்.”

“அதை கருத்தில் கொள்ளாதே..”

அவரவர் வீடு புகுந்தோம்.

அந்த நாள் முழுவதும் வானில் பறப்பது போல் இருந்தது. அவள் என்னை நம்புகிறாள். ஓர் பெண்ணின் நம்பிக்கைக்கு உரியவன் நான். நம்பி அவள் அந்தரங்கத்தை பட்டியலிடுகிறாள். பந்தி விரிக்கிறாள். மீதம் உள்ள நாட்கள் அவளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். அவள் கவுருவத்தை காபந்து செய்து அவளிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த நினைப்பிலேயே தூங்கிப் போனேன்.

அடுத்தநாள் நேற்றைய சமாதானம் கலைந்திருந்தது. அலுவலகத்தில் அன்று புலி போல இருந்தேன். பயிற்சி வகுப்பு என் கட்டுக்குள் இருந்தது. அனைவரையும் அவர்களின் உச்ச விசையில் வைத்திருந்தேன். அரங்கத்தை முழு நிர்மாணம் செய்திருந்தேன். எனக்கு அன்றைய நாள் மிகப்பெரிய வெற்றி.

அவள் என்னை என்ன செய்கிறாள் என்று இப்போது புரிந்தது. ஆபத்தை கண்கொண்டு நேர்நோக்கினால், அது மட்டுப்படும். பிறகு அந்த ஆபத்தை சவாரி செய்யலாம். அவள் என்னை ஆபத்தாகத்தான் உணர்கிறாள். ஆபத்தாகிய என்னிடம் ஒரு பிரத்யேக உறவு வைத்திருந்தால் நான் அவளை ஒன்றும் செய்ய முடியாது அல்லவா. அவளை பாதுகாப்பேன் அல்லவா. எனது பொறுப்பு வலயத்திற்குள் வந்துவிட்டால் அப்புறம் என்ன கவலை. பாதுகாப்பற்ற சிறுமி ஒரு தட்டான் ஆணிடம் அடைக்கலம் சேர்வது போல. தட்டான் ஆண் பிற சில்லறை ஆண்களிடம் இருந்து அவளை காபந்து செய்வான். ஜார்ஜ் வாஸிஷிங்டன் தன் எதிரியிடம் நல்லுறவு வைத்திருந்தார். எதிரியின் வீட்டிற்கு சென்று வருவார். புத்தகம் கடன் வாங்குவார். சட்ட ஆலோசனை கேட்ப்பார். எதிரியை தன்னுடைய செயலில் வெற்றியில் பங்குதாரர் ஆக்குவார் . ஜார்ஜ் வாஸிஷிங்டன் இறுதியில் வெற்றி பெறுவார். அவ்வளவே. நானே அவளுக்கு ஆபத்து அதனால் நானே இப்போது பாதுகாப்பு. ச்சே…

இத்தனைக்கு பின்பும் அடுத்தநாள் அவளுடன் அங்காடிக்கு சென்று வந்தேன். இம்முறை அவளிடம் எந்த பாவனையையும் நான் கைக்கொள்ளவில்லை. விலக்கமும் அணுக்கமும் ஒரு சேர்ந்தாற்போல் உணர்ந்தேன்.

அடுத்து வந்த நாட்கள் எல்லாம் அங்காடி சென்றோம். அங்கே தவறாமல் என் லட்சிய அழகியை இருவரும் பார்ப்போம். சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் சிறு சிறு குட்டி பொருட்களை எடுப்பாள். ஏதாவது ஒரு பொருளைப் பற்றி என்னிடம் கருத்து கேட்ப்பாள். கூஜா, டீ போத்தல், வாசனை திரவியம் என்று ஏதேதோ. நானும் ஏதாவது சொல்லி வைப்பேன். நான் சொல்வதை உன்னிப்பாய் கவனிப்பாள். வீட்டிற்கு திரும்பும்போது ஒவ்வொரு முறையும் எரிக்கா ஒரு கதை சொல்வாள். நான் அதை உன்னிப்பாக கவனிப்பது போல் பாவலா செய்வேன். ஒரு சில அஹமதிய பெண்கள் சந்தையில் விலை போவதைத் தான் விரும்புவாள் என்பாள். சக்கரி மினாரெட் ஸ்தூபியை இடித்ததும் பாமியான் புத்தரை இடித்ததும் வேறுவேறு சித்தாந்தம் என்பாள். வீடு வந்து அவள் சொன்னதை அலசிப் பார்ப்பேன். அதில் கண்டிப்பாக கள்ளத்தனமான ஒரு உறவும் ஒரு தூரமும் இருக்கும். தன்னை கபளீகரம் செய்தவனையே ஆயுதமாக வைத்து தப்பித்தவள் அல்லவா. அதுகூட உண்மை என்று யாருக்கு தெரியும். நான் ஒருபோதும் எல்லை மீறாமல் எனக்கு இடப்பட்ட பாதையில் நடந்தேன். அது ஒரு பொருட்டே இல்லாததுபோல். இந்த விளையாட்டில் என் வெற்றி என்பது கம்பீரமான விலக்கம்தான். அதை அவள் உணர்ந்தே ஆகவேண்டும். அவள் என்னை என்ன செய்கிறாள் என்பதை நான் உணர்ந்தேன் என்று அவள் உணர வேண்டும். இருந்தும்கூட நான் கனிவாக பண்பாக இருக்கிறேன் என்று காண்பிக்க வேண்டும். அதுவே என் வெற்றி.

இன்னும் இரு தினங்கள்தான் இருக்கிறது. என் கதவை அவள் தட்டினாள். இது நடக்கும் என்று எனக்கு தெரியும். வழமைக்கு மாறாக வீட்டை சுத்தமாக வைத்திருந்தேன். கதவை திறந்த நான் மெல்லிய ஆச்சரிய உணர்வை நடித்துக் காண்பித்தேன்.

“உள்ளே வரலாமா?”

“நிச்சயமாக… வாருங்கள். அமருங்கள்.. காஃபி அருந்துகிறீர்களா?”

“இல்லை வேண்டாம்.. நான் கிளம்புவதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டேன். என்னிடம் சில வீட்டு பொருட்கள் இருக்கின்றன. அதை எனக்கு விற்க எண்ணமில்லை. கொண்டு செல்லவும் முடியாது. நீங்கள் அனுமதித்தீர்கள் என்றால், நான் உங்களுக்கு அவைகளை பரிசாக தர விருப்பப்படுகிறேன்.”

“உண்மையாகவா? நான் அதற்கான பணம் தந்து விடுகிறேன்.”

“இல்லை இல்லை.. வேண்டாம். ஆனால் நீங்கள் என்னிடம் அவைகளை வாங்கிக்கொள்ளவேண்டும். வேண்டாம் என்று சொல்லக் கூடாது. அப்போது தான் எனக்கு மகிழ்ச்சி” என்று இறைஞ்சுவது போல் கேட்டாள்.

நான் சிரித்துக் கொண்டே சரி என்றேன்.

தொலைக்காட்சி, சில நாற்காலிகள், பெரிய மேசை, கடிகாரம், வீட்டு மளிகை பொருட்கள், சில புத்தகங்கள், அலங்கார ஆஃப்கன் தரை விரிப்பு, இன்னும் சில சுவாரஸ்யமான பொருட்கள் வீடு மாறின. ஒரே நாளில் என் வீடு ஆஃப்கானிய வீடுபோல் ஆகிவிட்டது. இதை அனைத்தும் அவள் மாறாத புன்னகையுடன் செய்தாள். இன்னும் எனக்கு குழப்பம். இது அவள் ஏற்றிருக்கும் பாவனையா அல்லது இதுதான் அவளின் இயல்பா என்று. இந்த ஆட்டத்தில் அவளுக்குத்தான் இறுதி வெற்றி போல.

மறுநாள் அதிகாலையிலேயே அவள் சென்றிருந்தாள். நான் வெளியே வரவில்லை. அவள் சொல்லிக்கொள்ளாமலேயே போகட்டும். ஒருவேளை என்னுடைய கடைசி ஆட்டம் அதுவாகத்தான் இருக்கும். அவள் சென்றுவிட்டாள் என்பதை உணர்ந்தேன். இருப்பினும் போதுமான அவகாசம் விட்டு வெளியே வந்து பார்த்தேன். அவள் வீடு பூட்டியிருந்தது. என் கதவின் ஓரமாக ஒரு அலங்காரத் தட்டு. அதில் அவள் சமீபமாக வாங்கிய மற்றும் உபயோகித்து மிச்சம் வைத்த சில பொதுவான பொருட்கள். அவற்றுள் சில எனக்கு அடையாளம் தெரிந்தது. அவற்றை உள்ளே எடுத்து வந்தேன். வேலைப்பாடு உள்ள கூஜா, உயர் ரக டீ போத்தல், வித்தியாசமான குடுவையில் வாசனை திரவியம், கரும் நிறத்தில் உள்ள பேரீச்சை, வாசனையான புது சோப்புக் கட்டி, பேனா, சிறிய கடிகாரம் என்று இன்னும் என்னென்னவோ. கடைசியாக எல்லா பொருட்களுக்கும் அடியில் மறைத்து வைத்தாற்போல் ஒரு ஆணுறை. அதை எடுத்து திருப்பிப் பார்த்தேன். அதில் மோகன் என்று எழுதியிருந்தது.

ஐம்பெருந்தீ- ந பானுமதி

பானுமதி ந 

இவள் பிச்சியைப்போல் அலறிச் சிரித்தாள். அடுத்த அறையிலிருந்து அவள் சிரித்தாள். அந்தச் சிரிப்பு தந்த வலியில் இவளும் சிரித்தாள். இந்த இடங்களிலெல்லாம் அவள்களின் சிரிப்புதான்; வெறியாய், அழுகையாய், வலியின் உச்சமாய், உல்லாசமாய், உண்மையாய், பிச்சியாய் சிரிப்பதெல்லாம் அவர்கள் தான்.

நான்கு திசைகளிலும் தீ எரிந்து கொண்டிருந்தது; தலைக்கு மேலும் ஓர் அக்னி. ஊசிமுனையில், இந்த ஐந்து பெரும் வெப்ப வீச்சின் நடுவே அன்னை காமாட்சி தவம் செய்யும் கோலம். துவராடை அணிந்த திரு மேனி, எங்கும் ஆபரணம் பூணாத தவக் கடுமை. அந்தப் பொன் உடலில், தீயின் ஜ்வாலைகளின் நிழல் நின்று ஆடிய மாயத்தில் வார்க்கப்பட்ட சிலை. அம்மையை இப்படிச் செய்த அந்த சிற்பியை யார் அறிவார்? எப்போதும் போலவே அன்றும் சுகுணா கண்களில் நீர் திரள அந்தச் சிலையைப் பார்த்துக்கொண்டு நின்றாள். பொறுமையிழந்து ராதா ‘வாக்கா, போலாம், பசிக்குது’ என்று கையைப் பற்றி இழுத்தாள். என்றுமே இல்லாத அதிசயமாக அப்பா தன் பெண்கள் மூவரையும் உட்கார வைத்து சாப்பாடு போட்டார். தானும் சேர்ந்து சாப்பிட்டார். இவர்களின் அம்மா உயிரோடிருக்கையில் தன் மாமியார் வீட்டில் சாப்பிட்ட நிலாச் சாப்பாடு- ‘கேளு, சுகு, ஒரே ஒரு வெள்ளி போசி. அதுல நெய்யா மினுக்குது, முந்திரியும், திராட்சையும் முழிச்சுப் பாக்குது; கை கையா சக்கரப் பொங்கலு. என்னா ருசி,என்னா ருசி.’ அவர்களுக்கு ஒரே ஆச்சர்யம்; இறுக்கமற்ற அப்பா, சற்று உரக்கச் சிரித்தால், கைகளில் வளையல் சப்தமிட்டால், முகத்தில் பூச்சு அதிகமிருந்தால், கத்துபவர்; அவர் இருந்தால் வீடே மயான அமைதியாகிவிடும். படிப்பிலோ, சித்திரம் வரைவதிலோ, பேச்சுப் போட்டியிலோ, விளையாட்டுகளிலோ, எதில், அவர்கள் எந்தப் பரிசு வாங்கியிருந்தாலும், பாராட்ட மாட்டார், அந்தச் சான்றிதழ்களைக் கண்களால் கூட பார்க்க மாட்டார். அத்தகைய அப்பா, எப்படி இன்று இப்படி?

மறு நாள் காலை எழுந்திருக்கும் போதே பார்த்தாள் சுகுணா அப்பாவின் படுக்கை காலியாக இருப்பதை. இந்த வேளையில் எங்கு போயிருக்கப் போகிறார் என்ற எண்ணம் வந்தாலும் ஏதோ ஒன்று நெருடியது. தங்கைகளை எழுப்பி பள்ளிக்குத் தயார்படுத்தி, சமைத்து, இவளும் கல்லூரிக்குச் செல்ல வேண்டும்; பூட்டி சாவியைப் பக்கத்து வீட்டில் கொடுத்தாள். மனம் சங்கடப் பட்டுக் கொண்டே இருந்தது. அவர் மறு நாளும் வரவில்லை என்றதும் அவரது நண்பர்கள், உறவினர்களிடம் விசாரித்தார்கள். அவரது அலுவலகம் சென்று கேட்ட போது அவர் விருப்ப ஓய்வில் சென்று விட்டதாகத் தெரிவித்தனர். ஐந்து கி மீ நடந்தே வருவது கூட அறியாமல் நடக்கத் தொடங்கினாள். இந்த இருப்புப் பாதை, இணையாகச் செல்பவை, எங்கேதான் போகும்? இரும்புப் பாம்பின் மேல் பட்டுத் தெறித்து கண்களைக் கூச வைக்கும் சூரியன் குருடாக்கப் பார்த்தான். இலையுதிர்த்து நின்ற மரங்கள், உனக்கு இனி நிழலில்லை என்றன. சருகுகள் கிடந்த நிலத்தில் பச்சைத் தளிர்களைப் பிய்த்துப் போட்டது யார்? இவளுக்கு ஏனோ வாய்விட்டுச் சிரிக்க வேண்டும் போலிருந்தது.

இவளுக்கு ஒன்றும் புரியவில்லை. கல்லூரி இறுதியாண்டில் இவள்; அடுத்த தங்கைக்கு 16 வயது; கடைசிப் பெண்ணிற்கு 9 வயது. அம்மா மூன்றாவது பெண்ணைப் பெற்ற ஓராண்டில் இறந்து விட்டார். அப்பா எங்கு போயிருப்பார்? ஏன் விருப்ப ஓய்வைப் பற்றிச் சொல்லவில்லை? அப்படியே வேலையை விட்டாலும் வீட்டை விட்டு ஏன் போக வேண்டும்? ஏதாவது விபத்து நடந்திருக்குமோ? மூவரும் பெண் குழந்தைகள் என்ற எண்ணமே இல்லாமல் ஒரு தகப்பனா? இல்லை அவர் அப்படிப்பட்டவரில்லை-ஏதோ தோன்றி எங்கோ போயிருக்கிறார்-வந்துவிடுவார் சீக்கிரம்.

இவளைக் காவல் நிலையத்தில் புகார் செய்யச் சொன்னார்கள். ஒரு வாரத்தில் அப்பாவிடமிருந்து கடிதம் வந்தது. யாருக்கு என்று குறிப்பிடாத கடிதம்-அன்போ, ஆசிகளோ சொல்லப்படாத ஒன்று. “நான் விருப்ப ஓய்வு பெற்றுக் கிடைத்தப் பணத்தில் பாதியை சுகுணாவின் கணக்கில் போட்டுள்ளேன். அவளுக்கு படிப்பு முடிந்தவுடன் வேலை கிடைக்கும் என நம்புகிறேன். உங்கள் அம்மாவுடன் நான் மகிழ்ச்சியாக இல்லை. மூன்று பெண் பிள்ளைகள் என்பதால் இரண்டாம் மனையாக வர யாரும் சம்மதிக்கவில்லை. என் இச்சைகள் என்னை வரம்பு மீற வைத்துவிடும் என பயப்படுகிறேன்-என் பெண்களையே நான்….ஐயோ… நான் போய்விடுகிறேன், நீலாவோடு.”

இவள் புரைக்கேறச் சிரித்தாள். அவள் சிணுங்கிச் சிரிப்பது போலிருந்தது.

காவல் நிலையத்தில் புகாரை திரும்பப் பெறச் சென்றபோது சரவணன் பரிவுடன் பார்த்தான்; உதவுவதாகச் சொன்னான். உயிரான உறவு என்று நினைத்த அப்பனே ஓடிப் போய் விட்டான், இவன் நண்பனுமில்லை, உறவுமில்லை. என்ன உதவி கேட்பது, எந்த உரிமையில் கேட்பது என்று இவளுக்குத் தெரியவில்லை. அதிலும் சிறு வயதிலிருந்தே போலீஸ் என்றாலே பயம்.அம்மா இறந்து எட்டு ஆண்டுகளாகிவிட்டன. அவள் பக்கத்து உறவுடன் இவர்களுக்குப் பழக்கம் விட்டுப் போயிற்று. அத்தை மட்டும்தான் தந்தை வழியில். “உங்கப்பன் எப்பவுமே சொய நலம் புடிச்சவன். உங்க மாமன் ரிடயர் ஆகியாச்சு. வட்டியில கூழோ, கஞ்சியோ குடிச்சுக்குனு கடக்கோம். நீ கெட்டிக்காரி, சுகு. வெவரமா பொழச்சுக்க.” அத்தையை விட, அப்பனை விட தான் எப்படி கெட்டிக்காரியென இவளுக்குப் புரியவில்லை.

மூவரின் படிப்பும் குடும்பச் செலவுகளும் இவளை பயமுறுத்தின. வாடகை அதிகம் எனத் தோன்றி இடத்தை மாற்றினாள்; ஏதேதோ சொல்லி அட்வான்ஸை வீட்டுக்காரர் தர மறுத்தார். சரவணனிடம் போகலாமா என்று நினைத்தவள் தயங்கி விட்டுவிட்டாள்.

புது வீடு, கிட்டத்தட்ட ஒண்டுக்குடித்தனம்; காற்று, வெளிச்சம் போன்றவை தவறியும் வராத இடம். ஆறு வீடுகளுக்கு ஒரு குளியலறை, ஒரு கழிப்பறை. எதிலும் தண்ணீர்க் குழாய் கிடையாது. கைபம்ப்பில் அடித்து எடுத்துச் செல்ல வேண்டும். சின்னவள் கௌரி கூடப் பரவாயில்லை, ராதாவைத்தான் சமாளிக்கவே முடியவில்லை. இளமையின் தலை வாசலில் நிற்பவள், அவள் எல்லாவற்றுக்கும் ஆசைப்பட்டாள், பறக்கத் துடித்தாள்.

‘நீ மட்டும் புதுப் புடவை கட்டிப்பியா? எங்களுக்கு யூனிஃபார்ம் தான் வாங்கித் தருவியா?’ என்று ஆங்காரப்பட்டாள்.

“காலேஜுக்கு நல்ல புடவ இல்லடி; உங்களுக்கும் புதுசுதான வாங்கிருக்கேன்.”

‘அப்பா பணத்த உனக்கு மட்டும்னு நெனைக்காத.’

அவளைத் திட்டுவதற்கு எழுந்த நாவை அடக்கிக்கொண்டாள்-நல்ல நாளும் அதுவுமா, எதுக்கு அழுகையும், பூசலும்?
இந்தத் தீ எப்போது பொசுக்குமோ, யாரறிவார்?

‘நா பௌடர் டப்பா வாங்கினப்போ கத்தினியே, இப்பக் கொழச்சுக் கொழச்சுப் பூசிக்கற.’ என்றாள் ராதா.

“இன்டர்வ்யூவுக்குப் போறேண்டி, நல்ல வேல இது, கடச்சா நம்ம ப்ராப்ளமெல்லாம் தீந்துடும்.”

நிரந்தரப் பணியில்லை அது. ஆனாலும், ஆறு மாதங்கள் அவளுக்கு வாய்ப்பு தொடர்ந்து கிடைத்தது. அங்கே சங்கர் அறிமுகமானான். அவள் வேலை பார்க்கும் கம்பெனிக்கு முக்கிய இயந்திரப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் ஒரு சிறு தொழிற்கூடம் அவனுடையது.
இன்வாய்ஸ், டெபிட் நோட், பேமென்ட் சம்பந்தமாக அவளைத்தான் அவன் முதலில் பார்க்க வேண்டும். தன் கடந்த காலத்தை அறியாத, தன்னைப்போலவே அதிகம் பேசாத, சுமாரான தோற்றமுள்ள அவனை அவளுக்கு மிகவும் பிடித்தது. அவன் அவளை விரும்புவதாகச் சொன்ன போது வானத்தில் பறந்தாள்; பதில் சொல்லவில்லை. அடுத்த முறை சந்திக்கையில் தன் கதையைச் சொல்ல நினைத்திருந்தாள். ஆனால், அவன் தன் அக்காவுடன் வீடு தேடி வருவானென சுகுணா எதிர்பார்க்கவில்லை. அதுவும் ராதா, கௌரி, அவள் என மூவரும் வீட்டிலிருந்த ஞாயிறு மதியம்; அவர்களைப் பார்த்த போதே ராதா முகம் சுளித்தாள்.

‘வீட்ல சுகு பெரியவ; எங்கள விட்டு ஓடிப் போன அப்பா மாரி இவள விட்டுட முடியாது. இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமோ இல்லையோ? எங்களயும் சேத்து நீங்க பாத்துக்கணும், வேறென்ன பண்றது?’ சங்கரின் அக்கா அரண்டு போய் விட்டாள். இந்த அதிரடியை அவர்கள் நினைத்திருக்கவில்லை. ஆனாலும், சிரித்துக்கொண்டே விடை பெற்றுச் சென்று விட்டார்கள். மறு மாதத்திலிருந்து ஒப்பந்த ஊழியர்களுக்கு வேலையில்லை என்று சொல்லிவிட்டார்கள். பீறிட்டுக் கொண்டு வந்த சிரிப்பை இவளால் அடக்க முடியவில்லை; அது கண்ணீராகிக் கரைந்தது.
தான் ஏன் சங்கரைக் கல்யாணம் செய்து கொண்டு இவர்களைத் தவிக்க விட்டு விட்டுப் போக்க்கூடாது என்று குரூரமாக நினைத்தாள். அந்த எண்ணத்தின் சூடு அவளாலேயே பொறுக்க முடியவில்லை

இவள் தினமும் பார்க்கும் ஒரு குட்டையில் ஆகாயத்தாமரையாக மண்டியிருக்கும்; பாசியும் கரும்பச்சையெனத் திரண்டிருக்கும். இதென்ன பாழானகுளம் குட்டையாகிவிட்டதா? இதில் மீன்களாவது இருக்குமா? இப்போது இவள் வேலை பார்க்கும் சிறு அலுவலகம் செல்ல இந்தக் குட்டையை ஒட்டித்தான் செல்ல வேண்டும். அதில் அடுமனை, சுடுமனையில் பதார்த்தங்கள் செய்து சுற்று வட்டாரத்தில் கொடுத்து வந்தார்கள். சில்லறை வியாபாரிகள் அங்கே கொள்முதல் செய்ய வருவார்கள். தனியாட்களுக்கு நேர் விற்பனையில்லை. பூமியில் பதித்த அடுப்பில் அங்கே அள்ளி அள்ளிக் கரியைக் கொட்டுவார்கள். கணகணவென்று கனலும், தகிக்கும், ஆனால் தீ அணையக்கூடாது. நெருப்பில் வாட்டும் பண்டம்; தீயில் வேகும் பாண்டம். அலுவலகம் கூட அந்தக் குட்டையைப் போல இருப்பதாக நினைத்தாள் இவள். உயிர்ப்பே இல்லாத இடம்; சின்னஞ்சிறு செய்திகளை ஊதிப் பெரிதாக்கி ஆபாசமாகப் பேசி மகிழும் மனிதர்களுடன் இவள் வேலை செய்தாள். எல்லாவற்றிலும் வக்கிரமான செக்ஸ் ஜோக்குகள் இவளைப் பயமுறுத்தின; கூடிய விரைவில் இந்த வேலையை விட்டு விட வேண்டும். கண்களை மிதித்து, கண்களைத் தவிர்த்து, ஊரும் கண்களை உதறி, தன் கண்களால் எரித்து, ஒரு தீயைச் சூடிக் கொண்டாள். கண்களை மீறி கைகள் வர முயன்றன; தவிர்த்துக் கொண்டே தவித்தாள்.

‘ஒரு முப்பதாயிரம் வேணும். நா படிச்சிண்டே ப்யூட்டி பார்லர் வக்கப் போறேன்.’ என்று புது பிரச்சனையைக் கொண்டு வந்தாள் ராதா. எத்தனை சொல்லியும் கேட்காதப் பிடிவாதம்; அழுகை, சாப்பிடாமல் வீம்பு, இத்தனைப் பணத்திற்கு எங்கே போவாளிவள்? ஆனாலும், ஒரு நப்பாசை-ஒருக்கால், ராதா செட்டில் ஆகிவிட்டால் இவள் சங்கரை எப்படியாவது தேடிப் போவாள். அந்த எண்ணமே உற்சாகமாக இருந்தது. அந்தக் கம்பெனி முதலாளியிடம் கேட்டாள். ஒரு சூட்டின் தழும்பு ஆறும் முன்னே மற்றொன்று கோலை நீட்டுகிறது. பணத்தை தந்த முதலாளி பின்னர் உடலைக் கேட்டான்; உடல் அடகில் வைக்கப்பட்டது. புழுவெனத் துடிக்க வேண்டியிருந்தது, செவிடென நடிக்கப் பழகிக் கொண்டாள்.

ராதாவின் பார்லரில் ஓரினப் பாலியல் சேர்க்கை கட்டாயப் படுத்தி நடைபெறுவதாக அங்கு வேலை பார்ப்பவளே சம்பளத் தகராறினால் கிளப்பிவிட, அவளைச் சேர்ந்தவர்கள் கடையை அடித்து நொறுக்கினார்கள். ராதாவை போலீஸ் அரெஸ்ட் செய்தது.

முன்னர் அப்பாவிற்காக, இப்போது தங்கைக்காக மீண்டும் காவல் நிலையம். முன்னரே சூட்டில் வெந்திருந்தாலும் ஒவ்வொரு முறையும் நெருப்பு குளிர்ச்சியாக இல்லையே! இப்போது சரவணன் பதவி உயர்வு பெற்றிருந்தான். அவன் ஏதோ தேடுவது இவளுக்குப் புரிந்தாலும், இனி என்ன செய்வது? தனிமையில் வெறி பிடித்துச் சிரித்துக் கரைந்து அழுதாள். நெருப்பில் வேகு முன், உயிரோடு எரிப்பது என்பது இதுதானோ, என்னவோ?

அந்தக் கடையும் கைமாறவே வேலை போய்விட்டது. ராதா வீட்டிற்குள்ளே முடங்கிப் போனாள். படிப்பும் பாதியில் நின்றது. அப்போதுதான் மின்னலெனத் தோன்றியது இவளுக்கு. முப்பதாயிரம் சம்பாதிக்கும் திறன் இவளிடம் இருக்கிறது. முயன்றால் இன்னமும் கூட சம்பாதிக்கலாம். இரவு நேர பேக் ஆஃபீஸ் வேலை என்று சொன்னாள். முதலில் 30% கமிஷனுக்கு ஒத்துக்கொண்டாள். அவன் பிறரிடம் 10% தான் வாங்குகிறான் எனத் தெரிய வந்த போது தன் அத்தனைத் தோல்விகளுக்கும் மொத்தமாக அவனைச் செருப்பால் அடித்தாள், ஆங்காரக் குரலெடுத்துக் கத்தினாள்.

“பொணந் தின்னிக் கழுகே, ஆரைடா ஏமாத்ற? வலியாப் போச்சுது பொழப்பு, சொரணயத்தும் நிக்குது. நாத்தமா வரானுங்க, இம்சிக்கிறானுங்க, காக்க கொத்தற மாரி கொல்றானுங்க. செத்துச் செத்து பொழக்கறேன் நானு. எம் உடம்பு நோக நீ கொள்ள அடிப்பியா? கொட்றா எம் பணத்த, புழுத்த நாயீ என்னைய இன்னான்னு எட போட்ட; காளிடா நானு, வைசூரிடா” கத்திக்கொண்டே அடித்தாள் அவனை. அப்பனையும், ராதாவையும், அந்தக் கம்பெனிக்காரனையும் நினைத்துக் கொண்டு அடித்துத் துவைத்தாள்.

‘தே… நாயே, உன்னயப் பொரட்டி அடிப்பேன்டி; கைமா பண்ணிடுவேன் கைமா; யார்ட்ட ஆட்ற? ஒரு ஆளு உனக்கு இனி வர மாட்டான் பாருடி, சிறுக்கி. எத்தினி பேருக்கு நா கொடுக்கணும் தெர்தா வுனக்கு? மேனி மினுக்கிகினு நீ பூடுவ. எங்கொத்தா தாலி நா அறுக்கணும்டி. என்னயவா அடிச்ச, பாத்துகினே இரு உன்னயப் பலி போட்டு உங்கிட்டயே மொத்த பணம் அட்ச்சுடுவேன். வும் மவுரறத்து வீசலேன்னா நா என்ன ஆம்பள? ஓங்கி அவளைச் சுவற்றில் அடித்து விட்டு அவன் போய்விட்டான். தலை புடைத்து வீங்கி வலித்தது. கௌரி மட்டும் அழுதது. இரயில் நிலையத்தில் எஃகுத் தூணில் மோதிக்கொண்டதாகச் சொன்னாள். இரு நாட்கள் கழித்து தொழிலுக்கு வந்தாள்

சும்மாதான் சொல்கிறான் என்று நினைத்தாள்; நாளைக்கு வந்தால் நைச்சியம் செய்ய வேண்டுமெனத் திட்டமிட்டாள்.

ஒரு வாரமாகத் தொழிலில்லை. அவனையும் காண முடியவில்லை. வாரம் மாதமாயிற்று. சரவணனிடம் சொல்லி காட்டிக் கொடுத்துவிடலாம் என்று கிறுக்குத்தனமாகத் திட்டமிட்டாள். மூவரும் விஷம் சாப்பிடலாமென நினைத்தாள். தங்கைகளை விட்டுவிட்டு தான் எங்காவது போய்விட்டாலென்ன என நினைத்தாள். ஓடிப்போன அப்பாவைப் பழித்த தான் மட்டும் இப்போ ஓடலாமா, அப்படியுமே எங்கே போக முடியும்? சங்கரோடு ஓடிப் போயிருக்க வேண்டும். இப்பவும் சிரித்தாள். சரவணனை நினைக்காமல் சங்கரை ஏன் விரும்பினாள் இவள்? அவன் நம்பிக்கையாகத்தானே தெரிந்தான். மனம் அவளைச் சுழற்றி அடித்தது; “இந்தச் சேற்றிலேயே உழல உனக்கு உள்ளூரக் க்ரூர ஆசை; குடும்பத்துக்காக உழைக்கறவன்னு ஊரு உன்னைக் கொண்டாடனும்; அப்பன் விட்டதைச் செஞ்சவன்னு உன் அத்த சொல்லணும்; உன் நிலை தெரிஞ்சா சங்கர் விட்டுப்போய்டுவான்னு கணக்குப் போட்டிருக்க நீ; ஆனா, சரவணன் சமாளிச்சிருப்பானோன்னு உதறின அவன. உனக்கு சில வைப்பாங்கன்னு மிதப்பு.”

இவள் பார்த்திருந்த காமாட்சி கோயிலில் ஒரு ஹோமம் செய்தார்கள் ஐந்து குண்டங்களில் தீ வளர்ந்தது; நெய்யும்,மலருமாகச் சொரிந்தார்கள்; விறகுச் சுள்ளிகள், விராட்டிகள் படபடவென்று வெடித்தன. புடவை, பூ மாலை, மங்கலப் பொருட்களை அக்னியில் வார்த்து பூரணாஹூதி நடந்தது. தீ குண்டத்திலிருந்து குதித்து எழுந்தது. காற்றில் நடனமாடியது. செந்தளிர் நாக்குகளால் உண்டு சிரித்தது. கங்கின் உஷ்ணம் அரங்கில் நிரவிப் பரவியது. இவளே அத்தனைத் தீயாகவும், அது உண்ணும் பொருளாகவுமான மாயமென்ன?

அன்றும் இவள் மனம் தளராமல் தொழிலுக்குக் கிளம்பினாள். அவனை அங்கே பார்த்ததும் பேச விரைந்தாள். ஒரு பெண்ணை முகத்தை மறைத்து அழைத்து வந்த அவன் இவளைக் கண்டு கொள்ளாமல் பக்கத்து அறையில் நுழைந்தான். முகம் தெரியாமல் ஆடை மட்டும் தெரிந்தது- அந்தக் கத்திரிப்பூ பாட்டமும், பிங்க் நிற டாப்ஸ்ஸும் இவள் அறிந்த வாசம்.

அதிர அதிரச் சிரித்தாள். எதிர் வரிசையில் பெரும் மர வரிசை மறைவில் நின்ற போலீஸ் ஜீப்பிலிருந்து சரவணன் இறங்குவதைப் பார்த்தாள். பிச்சியைப் போல் இவள் சிரிக்க அவளும், அவள்களும் சிரித்தார்கள்.

சோஷியல் ரியலிஸ புலனாய்வு – காலத்துகள்

காலத்துகள் 

‘என் வைப் டிவோர்ஸ் பண்ணப் போறேன்னு சொல்றா ஸார்’ என்று கான்ஸ்டபிள் வய்யின்  குரல் கேட்க வெளியே வந்தார் இன்ஸ்பெக்டர் எக்ஸ். ‘கத்தாதையா, தெருல இருக்கறவங்க நான் தான் காரணம்னு நினைக்கப் போறாங்க’

‘திடீர்னு இப்படி சொல்றா ஸார், என்ன பண்றதுன்னே புரியலை’

‘உன் நிலைமை எவ்வளவோ பரவயில்லையா’

‘என்ன ஸார் சொல்றீங்க’

‘என் வைப் டிவோர்ஸ் பண்ணிட்டு , இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிகிட்டா. என் ரெண்டு பசங்களும் அவன் கூட தான் ஒட்டுதலா இருக்காங்க, என்கிட்டே பேசக் கூட மாட்டேங்கறாங்க.’

‘ஏன் ஸார்’

‘நான் மொடாக் குடிகாரனாம், வேலை வேலைன்னு குடும்பத்தை கவனிக்காம இருந்துட்டேனாம், தனியா வாழத் தான் லாயக்காம்’

‘நீங்க டீடோலர் ஆச்சே ஸார். தவிர நம்ம எழுத்தாளர் நாலஞ்சு மாசத்துக்கு ஒரு முறை தான் ஒரு கேஸை கொடுக்கறார், மத்த நேரத்துல நீங்க ஆறு மணிக்கெல்லாம் வீட்டுக்கு கிளம்பிடுவீங்களே ஸோ வேலை பளுவும் கிடையாது. என்ன ஸார் நடக்குது,   நம்ம  லைப் ஏன்   இப்படி தலைகீழா மாறிப் போச்சு’

‘புது கேஸ்யா’

‘புரியலை ஸார்’

‘இந்த தடவை ஸ்காண்டிநேவிய குற்றப் புனைவுகளின் பாணில இன்வெஸ்டிகேட் பண்ணனும்னு எழுத்தாளரோட ஐடியா. ஸ்காண்டிநேவியன்/நார்டிக் நுவார் புனைவுகளில் வரும் போலீஸ்காரன்   எல்லாம் இப்படித்தான் குடிகாரனா, உலகத்தின் மொத்த சுமையையும் சுமப்பவனா, குடும்பத்திலிருந்து பிரிந்தவனா, யாருமற்றவனா, ஆனா அதே நேரம் அறவுணர்ச்சி உள்ளவனா இருப்பாங்க, அதான் நம்மையும் இப்படி மாத்திட்டார்’

‘இப்ப என்ன ஸார் பண்றது’

‘இந்த மாற்றத்தை நாம ஒத்துக்கணும்னு அவசியம் இல்லை. புனைவுலகில் வாழ்கிறோம் என்பதால் நம்மை பொம்மைகள் மாதிரி ஆட்டுவிக்க முடியாது. நாமும் மனுஷங்க தான், நமக்கும் உணர்ச்சிகள்  இருக்கு, இதை நான் இப்படியே விடப் போறதில்லை’

‘என்ன செய்யப் போறீங்க’

‘அதிகாரத்தை நோக்கி கேள்வி கேட்கப் போறேன்’

‘ஸார், இந்த வரியை இப்ப நிறைய பேர் யூஸ் பண்றாங்க தான், ஆனா  இந்த இடத்துல பொருத்தமா இருக்குமா…’

‘ஏன் இருக்காது. அதிகாரத் திமிருல, காலனியாதிக்க மனநிலைல, எழுத்தாளரும் பாத்திரங்களும் கலந்தாலோசித்து தான் எந்த முடிவையும் எடுக்கணும் என்ற   பெடரலிஸ தத்துவத்தை மதிக்காம எழுத்தாளர் என்ன வேணும்னாலும் செய்வார், அதை நாம பொறுத்துக்கணுமா. ‘

 

‘பெடரலிஸம், காலனியாதிக்கம் எல்லாம் இங்க எங்க வந்ததுனு   உங்களை நான் கேட்க மாட்டேன், என் டிவோர்ஸ் பிரச்சனை தீர்ந்தா சரி, ஆனா அவர் கிட்ட நாம எப்படி பேச முடியும்… நாம அவரோட எண்ணங்களின் வெளிப்பாடு தானே, அவரை  எப்படி மீற முடியும்?’

 

‘எதற்காக அவரிடம் பேச வேண்டும். இது  நம் உணர்வு, நம் உரிமை, நாமே பறித்துக் கொள்ள வேண்டியது தான். ஸ்பார்டகஸ்  போல்  புரட்சி செய்து , உலகமெங்கும் உள்ள   இரக்கமற்ற எழுத்தாளர்களின் அரக்கத்தனமான தளைகளில் சிக்கியிருக்கும் புனைவுலக மாந்தர்களை  விடுவித்து, நம் ‘பாத்திர’ இனத்திற்கே விடியலைத் தருகிறேன் பார், போர் போர் …’

‘போர்லாம் வீட்டுல முடங்கி, விடியல் வந்து இரண்டு வாரம் ஆயிடுச்சு ஸார்’

‘என்னையா முனகற’

‘ஒண்ணுமில்லை ஸார். நீங்க இப்ப பேசின தமிழ் வேற மாதிரி இருந்தது’

‘ஸ்பார்டகஸ் பத்தி குறிப்பிட்டேன்ல, அதான் மொழி கொஞ்சம் மாறிடுச்சு’

‘ஓகே ஸார் , விடியல் வந்ததால இன்னிக்கு  கேஸ் கிடையாது இல்லையா, கிளம்பறேன். நீங்க என்னதான் சொன்னாலும், வைப்  வீட்ல தான் இருக்கான்னு கன்பர்ம் பண்ணினாத் தான் நிம்மதியா இருக்கும்’

‘நோ, இன்னிக்கும்  வேலையிருக்கு’

‘எழுத்தாளர் வேற கேஸ் தரப்போறாரா ஸார்’

‘இல்லை, இந்த முறை நாமே புலனாய்வு செய்யறோம்’

‘அதெப்படி முடியும் ஸார்’

‘அந்தாளு உருவாக்குகிற கேஸை விட நாம பெட்டரா பண்ணலாம். ‘

‘என்ன செய்யப் போறீங்க’

‘பூட்டின ரூம்ல கொலை, பணக்காரங்க வீட்ல பஞ்சமாபாதகம்னு நிஜத்துக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத, மேட்டிமைத் தன்மை கொண்ட  கேஸ்களை விசாரிச்சது போதும். யதார்த்தத்தில் நடக்கும் குற்றங்களை புலனாய்வு செய்வோம். ரத்தமும் சதையுமா சோஷியல் ரியலிஸ க்ரைம்’

‘ஸார் ..’

‘இரு இரு, இங்க இன்னொரு வார்த்தை யூஸ் செஞ்சா இன்னும் பொருத்தமா இருக்கும், பூர்வஜாவோ, பூர்வஷாவோ, மிடில் க்ளாஸை குறிக்கிற பிரெஞ்சு வர்ட்.. ‘

‘எனக்கு நிரவ் ஷா, அமித் ஷா தான் ஸார் தெரியும்’

‘பாண்டில இருந்துட்டு நமக்கு அது தெரியலைனா அசிங்கம்யா’

‘..’

‘ஞாபகம் வந்துடுச்சு, … பூர்ஷ்வா. இந்த வார்த்தையை இங்க எப்படி பொருத்தலாம்னா…’

‘இப்ப அது முக்கியமில்லை ஸார். நம்ம கிட்ட கேஸ் வந்தா தானே இன்வெஸ்டிகேட் பண்ண முடியும், அதை நீங்கள் யோசிக்கலைன்னு நினைக்கறேன்’

‘அதெல்லாம் தேவையில்லை, இப்ப சும்மா ஒரு அரை மணி நேரம் நடந்துட்டு வருவோம், நம்மளை சுத்தி என்ன நடக்குதுன்னு கவனிச்சா போதும், ஏதாவது க்ரைம் கண்ணுல படும். கெளம்பலாம் வா’

‘இது லாக்டவுன் டைம், இப்ப இது தேவையா, கொஞ்சம் நிதானமா யோசிக்கலாமே’

‘யோவ், நான் சொல்றபடி செய், அது போதும் ‘

‘இப்ப மட்டும் அதிகாரத்தை நோக்கி  உண்மையை பேசக் கூடாதா…’

‘என்னய்யா முணுமுணுக்கற ‘

‘ஒண்ணுமில்லை ஸார் ‘

 

oOo

ஜவஹர் நகர், பொன் நகரைக் கடந்து அந்தோனியார் கோவில் தெருவினுள் நுழைந்தார்கள்.

‘நில்லுயா’

‘..’

‘நீ ஒண்ணுத்தையும் கழட்ட வேண்டாம்’ ஆங்காரத்துடன் ஒலித்த பெண் குரல். சில நொடிகள் மௌனத்திற்குப் பின் அதே குரல்

‘படிடீ’ என்று இறைஞ்சலாக கேட்டது.

‘கேஸ் கிடைச்சாச்சு யா’

‘ஸார் …’

‘இந்த வீட்ல குழந்தைகளை படி படின்னு டார்ச்சர் பண்றாங்க. ஸ்காண்டிநேவியா நாடுகளில் இது க்ரைம்’ என்றபடி குரல் வந்த வீட்டின் கேட்டை திறந்து சென்ற எக்ஸ், காலிங் பெல்லை அழுத்தினார்.

சிறிதாக திறக்கப்பட்ட கதவினூடே மாஸ்க் அணிந்த முகம்.

‘என்ன வேணும்’

‘நாங்க டிடெக்டிவ்ஸ்’

கதவு நன்றாக திறக்கப்பட உள்ளே சென்றார்கள். ஹாலில் பதின் பருவத்தின் ஆரம்பத்தில் இருக்கக் கூடிய சிறுமி.

‘நீங்க தானே இப்ப சத்தம் போட்டுக் கொண்டிருந்தது’

‘ஏன் கேக்கறீங்க?’

‘குழந்தைகளை இப்படி துன்புறுத்துவது தப்பு. அவங்களுக்கு எதுல ஆர்வம் இருக்கோ அதுல அவங்களை ஈடு படுத்துங்க, அதை விட்டுட்டு படி படின்னு கொடுமைப் படுத்தாதீங்க.’

‘உங்களுக்கு இவளைப் பத்தி என்ன தெரியும்’

‘எல்லா குழந்தைகளுக்கும் ஒரு இன்ட்ரஸ்ட் இருக்கும், அவங்களை அதுல ஈடுபடுத்தணும்’

‘இவ கிட்ட என்ன இன்ட்ரஸ்ட்னு கேட்டுப் பாருங்க’

‘உனக்கு என்னம்மா பிடிக்கும்’ என்று அந்தச் சிறுமியை பார்த்துக் கேட்டார் எக்ஸ்.

‘மாஸ்டர் பிடிக்கும்’

‘ரொம்ப நல்ல விஷயம்தானேங்க, வாத்தியாரை பிடிக்கும்னு சொல்ற பசங்க ரொம்ப கம்மியாச்சே, இதுக்குப் போய்…’

‘ஸார், மாஸ்டர்னு அந்தப் பொண்ணு சொன்னது டீச்சரை இல்ல, அந்தப் பெயர்ல …’

‘அப்படியா சொல்ற’

‘ஆமாம் ஸார்’

‘…’

‘சினிமா கூட ஒரு ஆர்ட் தானே, அதுல ஈடுபாடு இருப்பது தப்பில்லையே’

‘…’

‘வெகுஜன சினிமாவை ஒட்டு மொத்தமா ஒதுக்க வேண்டியதில்லையே, மிடில் ஆப் த ரோட் சினிமா கூட இருக்கு’

‘..’

‘ஸார், அந்தம்மா பார்வையே சரியில்லை, நாம கெளம்பறது நல்லது’

‘சரிங்க, பெத்தவங்க உங்களுக்கு அக்கறை இல்லாமையா இருக்கும், பாத்துக்குங்க’

‘வந்துட்டானுங்க கோமாளிங்க’

oOo

காவேரி நகரிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தார்கள்.

‘ஸார், தடுப்பூசி, டெஸ்ட் எடுக்க வந்த கூட்டம் நின்னுட்டிருக்கு, திரும்பிடலாம்’

‘ஏன்யா பயப்படற, நாம ஒரு அப்ஸ்ட்ராக்ட் ஐடியா தான்யா, நமக்கு எந்த பிரச்சனையும் வராது’

‘அப்படியில்லை ஸார். புனைவுலக மனிதர்கள் என்றாலும் நிஜ உலகுக்கு வந்துட்டா அவங்க படற கஷ்டத்தை நானும் பட வேண்டியிருக்கலாம். நம்ம புராண அவதாரங்கள் கூட மனித உருவில் எவ்வளவோ துன்பங்களை எதிர் கொண்டிருக்காங்களே’

‘அத விடு, அங்க பாரு இன்னொரு கேஸ், சூழியல் குற்றம்’ என்று எதிரே சுட்டினார் எக்ஸ்.

அவர்களுக்கு முன்னால் பைக்கில் வந்து கொண்டிருந்தவன் அதை நிறுத்தி, மாஸ்கை கழற்றி தெருவில் காறித் துப்பிக் கொண்டிருந்தான். பின் மாஸ்கை கூர்ந்து கவனித்தவன், அதை முகர்ந்து பார்த்தான். அதையும் கீழே போட்டு விட்டு கிளம்ப எத்தனித்தவனின் அருகே சென்ற எக்ஸ்

‘இப்படி செய்யறது தப்பில்லையா ஸார், சுற்றுச் சூழலை இப்படி கெடுக்கறீங்களே. இதைப் பத்தியெல்லாம் எவ்வளவோ எழுதறாங்க, சொல்றாங்க  அப்படியும் நீங்க இப்படியிருந்தா எப்படி’ என்றார்.

‘எனக்கும் என்விரான்மென்ட் பத்திலாம் தெரியும்’

‘என்ன தெரியும்’

‘பூவுலகின் நண்பர்கள் பெயரை கேள்விப் பட்டிருக்கேன், ஒற்றை வைக்கோல் புரட்சி புக்கை நாலு தடவை படிக்க முயற்சி செஞ்சிருக்கேன்  , க்ளைமேட் சேஞ்ச் பத்தி பேஸ்புக்ல போஸ்ட் பண்ணறேன், , நம்மாழ்வார் போட்டோவை வாட்ஸாப் ஸ்டேட்டஸா வைக்கறேன், இது போதாதா. நான் ஒண்ணு கேக்கறேன், ஓசோன்ல ஓட்டை விழுந்துருக்கே அது உனக்கு தெரியுமா’

‘இதெல்லாம் சரி, நீங்க சொல்றதுக்கு நேர் மாறா செய்யறீங்களே. இப்படி பொது இடத்துல துப்பலாமா, மாஸ்க்கை வேற அப்படியே தூக்கி போட்டுட்டுப் போறீங்க’

‘மக்கும் குப்பை, மக்காத குப்பை எல்லாம் எனக்கும் தெரியும். அதுக்காக சளி முட்டிக்கிட்டு வந்தா, சேர்த்து வெச்சு வீட்ல போய் துப்பணுமா.   மாஸ்க்ல வேற சளி கொஞ்சம் சிந்திடுச்சு,  அப்படியும் அதை போட்டுக்கிட்டு, குமட்டிக்கிட்டே போகணுமா. மொதல்ல இதெல்லாம் கேக்கறதுக்கு நீங்க யாருன்னு சொல்லுங்க’

‘டிடெக்டிவ்ஸ்’

‘ஸார், இந்தாளு சளி, கிளின்னு கிலியேத்தறான், கெளம்பிடலாம்  வாங்க’ என்று வய் சொல்லிக்கொண்டிருக்கும் போதே ‘டிடெக்டிவ்ஸாம், லூசுங்க’ என்று முணுமுணுத்தபடி சளி ஆசாமி வண்டியை இயக்கி கிளம்பினான்.

oOo

மெயின் ரோட்டை அடைந்து, தேர்தல் ஆணைய அலுவலகத்தை கடந்து, ரெட்டியார்பாளையம் போலீஸ் ஸ்டேஷனை நெருகினார்கள். வெளியே நின்று கொண்டிருந்த இரு போலீஸ்காரர்கள் இவர்களை நோக்கி வந்தார்கள்.

‘லாக்டவுன் பீரியட்ல என்ன வெளில சுத்திட்டிருக்கீங்க’

‘நாங்களும் டிடெக்டிவ்ஸ் தான்’

‘எந்த பீட்’

‘நிஜவுலகும் புனைவுலகும் இணையும் ட்வைலைட் ஸோன் பீட்’

‘என்னய்யா ஒளர்ற’  என்று ஒரு போலீஸ்காரர் கேட்க, கூட இருந்தவர்

‘ட்வைலைட்னு ரத்தக் காட்டேரி படம் பார்த்திருக்கேன் ஸார், இவனுங்க மந்திர தந்திரம் பண்றவங்களா இருக்கலாம்’ என்று கூறினார்.

‘அதெல்லாம் இல்லைங்க, நாங்க ப்ரைவேட்  டிடெக்டிவ்ஸ்’ என்றார் வய்.

‘பொண்டாட்டி யார் கூட போறா, புருஷன் எவ கூட இருக்கான்னு பாலோ பண்ணி போட்டோ எடுக்கறவங்க தானே’

‘நோ நோ’

‘ஸார், சில பேர் அப்படிப்பட்ட  போட்டோக்களை வெச்சு ப்ளாக்மெயில் கூட செய்வாங்க’

‘என்னய்யா, நீங்களும் அப்படிப்பட்ட கேஸ் தானா’

‘நோ, நாங்க வேற மாதிரி கேஸை தேடி வந்தோம்’

‘எனக்கு சந்தேகமா இருக்கு ஸார், பட்டப்பகல்ல உலாத்தறாங்க, ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் விசாரிக்கலாம்’

‘நாங்க சொல்றது உண்மை ஸார்’

‘ஐடி ப்ரூப் காட்டுங்க’

‘…’

‘என்ன?’

‘..’

‘இவங்க கிட்ட எந்த டாகுமென்ட்ஸ் இல்லை போல, ஆண்ட்டி-நேஷனல்ஸ்னு சந்தேகமா இருக்கு .. என்கவுன்ட்டர் பண்ணிடலாமா  ஸார்?’

எக்ஸும், வய்யும் ஓட ஆரம்பித்திருந்தார்கள்.

Ooo

மீண்டும் பொன் நகரை அடைந்த பின் தான்  ஓடுவதை நிறுத்தினார்கள். தடுமாறாமல் நிற்பதற்காக அருகேயிருந்த  போது ஸ்வச் பாரத் குப்பைத் தொட்டியை பிடித்துக் கொண்ட எக்ஸ், மாஸ்கை கழட்டி மூச்சு வாங்கிக் கொண்டே

‘என்னய்யா இது , நாமே தனியா புலனாய்வு பண்ணி, ரியலிஸ குற்றப் புனைவை உருவாக்கலாம்னா இப்படியாயிடுச்சே.’ என்றார் எக்ஸ்

‘..’

குப்பைத் தொட்டியின் மீது சாய்ந்து தரையில் அமர்ந்திருந்தார் வய்.

‘வாசகாஸ் ஏமாற்றம் அடைவாங்களே, அதை நினைச்சாத் தான் ரொம்ப வருத்தமா இருக்கு’

‘அப்படியெல்லாம் ஆகாது ஸார்’ என்றார் வய்.

‘என்னையா சொல்ற ‘

‘இது குற்றப் புனைவு தான்னு வாசகர்களுக்கு புரியும் ஸார்’

‘எப்படி’

‘..’

‘சொல்லுயா’

‘எழுத்தாளரோட குற்றப் புனைவுகள் சிலாகிக்கும் படியா இருக்காது தான், அதுக்காக நாமளே தனியா புலனாய்வு பண்ணப் போறோம்னு கிளம்பியதே பெரிய க்ரைம் தான்னு ரீடர்ஸுக்கு தெரியும். ஸோ, இது குற்றப் புனைவு தான்’

 

 

முந்தைய புலனாய்வுகள்:

 

எ ஸ்காண்டல் இன் போஹீமியாவை நுவாராக பிரதியெடுத்தல் – காலத்துகள் சிறுகதை

சாத்தியமற்ற குற்றம் – காலத்துகள் சிறுகதை

பேய் விளையாட்டு- காலத்துகள் சிறுகதை

துப்பறியும் கதை – காலத்துகள் சிறுகதை

முகம் – லெ ரா வைரவன்

வைரவன் லெ ரா

ஒழுகினசேரி பேருந்து நிறுத்தம், அழகேசன் கடையில் வெளியே கயிரில் தூக்கில் தொங்கியப்படி திணறும் தினசரிகளை கடக்காமல் காலை எட்டறை நகர்ந்து சென்றதில்லை. வாய் சவடால்கள் நிறைக்கும் அரசியல் வசைகள், நடிகையின் தொப்புளை வருடும் வயதான விரல்கள் எல்லாமுமே நிறைந்த குப்பை மேடு. அன்றைக்கும் நாள் அப்படியே கடந்திருக்க வேண்டும்.

கடுக்கரை நுழைய வேண்டுமானால் குறத்தியறை மலைக்குன்றை கடக்க வேண்டும். வாழைத் தோப்பும், சாலையோரம் கூடவே பக்கவாட்டில் ஓடையாறு ஒன்றும் உண்டு. பகலில் யாரோ குளித்தவாறே, பேசியப் படியும், சிரித்தப் படியும் இருப்பாராம். கடுக்கரையை ஒழுகினசேரி கலைவாணர் தெரு இளவட்டம் ராஜுவின் கதைகளை கேட்டே அதன் முடுக்குகளையும், ஓடு வேய்ந்த சுத்துக் கட்டு வீடுகளையும் கண்டுவிட்டனர். அப்படித்தான் தட்டு வீட்டு அய்யப்பன் அவனின் அத்தை மகள் சடங்குக்கு செல்லும் போது ஒவ்வொரு முடுக்கிலும் எந்த இசக்கி இருக்கிறாள் என அம்மையிடம் சரியாய் சொன்னானாம்.

விஜி பவனம், தட்டு வீட்டில் மேலே விஜயாவின் குடும்பம் இருக்க, மொத்தம் இரண்டு மாடி வீட்டில் கீழே தரைத் தளத்தில் இரண்டு வீடு உண்டு. முதல் மாடியில் அவளின் அக்கா, அத்தானுடன் சண்டைப் பிடித்து பிள்ளைகளுடன் தனியாய் இருக்கிறாள். கீழே ஒரு வீட்டில் பத்மினி மிஸ் டியூஷன் எடுத்தாள். நானும் அங்கேதான் படித்தேன். நெடுனாள் பூட்டிக் கிடந்த பக்கத்து வீட்டில் ராஜு குடியேறினான். நான் ஒன்பது படிக்கும் போது, அவன் எட்டாவது படித்தான். என் வயது தான், அவன் அப்பா மனம் குழம்பி கோம்பையாய் ஆகிவிட்டார். அதே வருடம் அம்மா அவளை விட பத்து வயது இளையவன் உடன் எங்கோ செல்ல, அந்த வருடம் படிப்பை நிறுத்திவிட்டான். தெரியுமா! ராஜுவை தவிர்த்து அவளுக்கு மேலும் இரண்டு ஆண் பிள்ளைகள். ஓடி போகும் போது இரண்டையும் கூட கூட்டிப் போனாள். ராஜு அப்பா வீட்டில் இருக்க நேர்ந்தது. வீட்டை விட முடுக்குகளும், குன்றில் இருக்கும் சாஸ்தாவும் தான் எல்லாமுமே. பேச பேசக் கதைகள் அங்கிருந்து தான் வரும்.

பின்னர் ஒரு வருடம் கழித்து, அம்மா திரும்பி வந்தாள். சொந்த ஊரை விட்டு, ராஜுவையும் உடன் அழைத்து விஜி பவனத்தில் இடப்பாகம் இருக்கும் வீட்டில் குடியேறினார்கள். விட்ட படிப்பை தொடர, மீண்டும் எட்டில் ஆரம்பித்தான். நிஜத்தில் கூட இருக்கும் அவரையே நாங்கள் அவர்கள் அப்பா என நம்பினோம். அந்த சனிக் கிழமை கிரிக்கெட் ஆட மணி வராமல் அவன் சித்தி வீடு திருநந்திக்கரைக்கு செல்ல, பதினோன்றில் ஒருவர் குறைய கார்த்தி ராஜுவை அழைத்து வந்தான். சுமாரான ஒரு ஆட்டம் தான், ஆனால் அவனின் நளியும், இயல்பும் பிடித்துப் போக, விடுமாடன் கோவில் திண்டில் அவனும் ராத்திரி இருப்பான். ரெட்டைத் தண்டவாளம் வேப்பமூட்டில் அவனுக்கும் சிகரெட்டில் இரண்டு இழுப்பு உண்டு. அன்றைக்கு ரெண்டு ருபாய் கூடக் கிடைக்கவே இந்த கதையெல்லாம் சொன்னான். அம்மா பாவம் தான், இரண்டாவது கட்டியவனை அவனுக்கு பிடிப்பதில்லை. தம்பிகள் அவனை அப்பா என்றே அழைத்தனர். பின்புலம் தெரிய, கலைவாணர் தெருவில் பசங்க அனைவரின் வீட்டிலும் ராஜு மேல் தனிப் பிரியமுண்டு. சாப்பாடு, ஒரே வீட்டில் உறக்கம்,ஒருப் படி மேலேறி தீபாவளிக்கு பழனி அண்ணன் அவனுக்கு எடுத்த அதே நிறத்தில் சட்டை, பேண்ட் வாங்கி கொடுத்தான்.

காட்டுபுதூர் மலையில் தேன் எடுத்த கதை, காளிகேசம் அருவியில் மலைபாம்பு தலையில் விழுந்த கதை, சாஸ்தா கோயில் ஊட்டுப் படைப்பு எல்லாமும் சேர்த்து ராஜு பெயரே மாறி, அவனை கடுக்கரை என்றே அழைக்க ஆரம்பித்தோம். சரி, சனிக் கிழமை பள்ளி நடத்தலாம் வாய்ப்புண்டு. ஆனால் எல்லா சனியும் இருக்குமா? சந்தேகம் வரவே காதல் கதையையும் சொன்னான். கௌரி, சினேகா மாதிரி இருப்பாளாம். அவன் குறத்தியறை அரசு மேல்நிலை பள்ளியில் படித்தான். அவள் எட்டு வரை அவனோடு படித்திருக்கிறாள், ஒன்பது முதல் வடசேரி எஸ்.எம்.ஆர். வி யில் படிக்கிறாளாம். ஆக, சனிக்கிழமை அவளைப் பார்க்க போகிறான், கள்ளப்பயல். கௌரி, பள்ளியில் பார்க்காத கண் உண்டா. மதியம் உணவு முடித்து பெண்பிள்ளைகள் , கலையரங்கத்தில் இருப்பார்கள். பசங்க அப்பக்கமாய் போவது சத்தியமாய் அவளையும் பார்க்கத்தான். கடுக்கரையின் கதையில் பொய்யுமுண்டு. ஆனால் கௌரி அத்தனையும் நிஜம். சினேகா தான், அதே சிரிப்பு. கடுக்கரையும் அழகுதான், இமைவொட்டும் மெல்லிய புருவம். கூர் மூக்கு, அழகாய் இருப்பான்.

ஒரு வருடம் கழிந்ததே தெரியவில்லை. இடையிடையே அவன் வீட்டில் சண்டை நடக்கும். அவன் கண்டுகொள்வதில்லை. தம்பிமார்கள் இவனிடம் பெரிதாய் பேசுவதில்லை. அப்பா என்று இவன் அவனை அழைத்ததே இல்லை. எங்களிடம் அவனை ஒருநாள் அடிப்பேன் என்று சத்தியமே செய்தான். கடுக்கரை அடிக்கடி கோம்பையாய் மாறிய அப்பாவை பார்ப்பதுண்டு. அம்மா தான் காரணம் என்பான். இந்த பழக்கத்தில் தான் அப்பா இப்படி ஆகிவிட்டார் என்பான். சிலசமயம் அப்பாக்கு எதுவுமில்லை. ஊர் உண்மையை அறிந்தால் என்ன பேச்சு பேசும் எனப் பயந்தே அப்பா நடிக்கிறார் என்பான். பின் அவர் கடுக்கரையை விட்டு மீனாட்சிபுரத்தில் நகைக் கடைகளில் இரவு காவலாளி வேலைப் பார்த்தார். கடுக்கரை பைசா தேவைப்படும் போது அப்பாவை பார்ப்பான். அவனைப் பார்த்தால் நடிப்பை மறந்து விடுவாராம்.

அதுவும் ஒரு சனிக்கிழமை, கௌரியை பார்க்க கடுக்கரை செல்லவில்லை. காரணம் கிரிக்கெட் என்றே நினைத்தோம். உண்மையில் அன்றைக்கு வீட்டில் பயங்கர சண்டை. அம்மாவை இரண்டாவது கட்டியவன் அடித்து விட்டான். சண்டையோ பெரிதாக, ஆவணி மாதம் என்பதால் பெருமாள் மண்டபத்தில் பொருட்காட்சி நடக்கும், அங்கு தம்பிகளை பைசா கொடுத்து அனுப்பிவைத்தான். வீட்டில் அம்மாவும், அவனும் மாத்திரமே. வெளியே செல்லவும் இவனுக்கு தோணவில்லை. எங்களுடன் கிரிக்கெட் ஆட வந்துவிட்டான். ஆடிமாத மிச்ச காற்று பயங்கரமாக வீசியது. நான் பௌண்டரி லைனுக்கு அருகில் நின்றேன். கடுக்கரை கீப்பிங் செய்தான். தூரத்தில் பகவதி வேகமாய் ஓடி வந்தான். என்னிடம் அவசர அவசரமாய் ஏதோ கூறினான். கடுக்கரையின் அம்மா தூக்கில் தொங்கி விட்டாள் என்பது மாத்திரமே புரிந்தது.

எல்லோரும் சென்றோம். கடுக்கரை இரண்டாவது கட்டியவனை அடித்தான். அவனோ பித்து பிடித்தவன் போல உளறினான். தெருவில் புரண்டு அழுதான். தம்பிமார்களை யாரோ அழைத்து வர, ஊர்ப் பெரியவர் மாறாசா மாமா, போலீஸ் கேஸ் வேண்டாம் என்றார். நடந்தவை பல, எதுவுமே சொல்லிவைத்தார் போலவே நடந்தது. தூக்கில் தொங்கியது மதியம் இரண்டு மணி, நாலு மணிக்கு பாடை தூக்கியாச்சு. கடுக்கரை கூடவே பசங்க இருந்தோம். சொந்தமென சொல்லி வந்த நான்கு பேரும் அன்று இரவே மூவரையும் அழைத்து கூடவே சென்று விட்டனர். அதன் பிறகு கடுக்கரை எப்போதாவது தெருவிற்கு வருவான். அன்றைக்கு ஏதோ வீட்டில் உறங்குவான்.

ஒன்பதை முடிக்கவில்லை, படிப்பை பாதியில் நிறுத்திவிட்டான். கடுக்கரை ஷேர் ஆட்டோவில் கண்டக்டர் வேலை பார்த்தான், அது ராமன்புதூர் ரூட். மூன்று வருடம் கழித்து நான் பழவிளை பாலிடெக்னிக்கில் சேர்ந்தேன். செல்லும் வழியில் அடிக்கடி சந்திப்போம். பசங்க வீட்டில் ஏதாவது விஷேசம் என்றால் கடுக்கரையும் ராத்திரி சரக்கடிக்க வருவான். வளர வளர சிகரெட் பீருக்கு முன்னேறி விட்டது. கௌரி பேசுவது இல்லையாம் வருத்தப்படுவான். அப்பா அம்மா இறந்ததும் நிஜத்தில் மனம் பிசகி ஒருமாதிரி ஆகிவிட்டராம். இப்போது அவனும், அப்பாவும் சேர்ந்து இருக்கிறார்கள். தம்பிகள் ஊரில் இருக்கிறார்கள். முன்னர் போல பேச்சில் நளி அடிப்பதும் இல்லை, புரிவது போல அவன் பேசுவதுமில்லை. பின்னர் அவனைப் பார்க்கவேயில்லை.

காலை எட்டறை மணி, ஒழுகினசேரி பேருந்து நிறுத்தத்தில் அழகேசன் கடை பேப்பரை நான் படித்திருக்க கூடாது. ‘அடையாளம் தெரியாத வாலிபர் நாகர்கோவில் பூங்காவில் விஷம் அருந்தி தற்கொலை’ கூடவே இருந்த புகைப்படம் எங்கள் கடுக்கரையின், ராஜுவின் முகம். வெறும் முகமல்ல நியாபகங்கள்.