கட்டுரை

சேவல் களம்- வெ.சுரேஷ் குறிப்பு

சேவல் களம்”பாலகுமார் விஜயராமன்.

எல்லோருக்கும் சொல்வதற்கு ஒரு கதையாவது உண்டு. ஆனால் (நல்ல வேளையாக ) எல்லோரும் எழுத்தாளர்களாகிவிடுவதில்லை,” என்று சுஜாதா தன்னுடைய ஒரு கட்டுரையில் குறிப்பிடுவார். அண்மையில்கூட ஓவியர் ஜீவா இதே போல ஒரு வரியை சொல்லியிருந்தார். எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்!!

நம்முடைய வாழ்க்கை அனுபவங்கள் எல்லாமே நமக்கு சுவாரசியமாக, சுவையாகத்தான் தெரியும். ஆனால் அவற்றை பதிவு செய்யும்போது பிறருக்கும் சுவாரசியமாகவும், சுவையாகவும் தோன்ற வேண்டுமென்றால், ஒருவர் அதுவரை எழுத்தில் பதிவாகாத ஒரு மாற்று வாழ்வை விவரிக்க வேண்டும். அல்லதுஏற்கனவே அவ்வாறு அறியப்பட்ட வாழ்வின் ஒரு புதிய கோணத்தை வெளிப்படுத்த வேண்டும். அப்படியுமில்லாமல், ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட கதைக்களமாக இருந்தாலும்கூட, அந்த வாழ்வின் சில பகுதிகளிலாவது புதிய வெளிச்சத்தைப் பாய்ச்ச வேண்டும். இது போன்ற கூறுகள்தான் டயரிக் குறிப்புகளை இலக்கியமாக மாற்றுகின்றன.

அண்மையில், பாலகுமார் விஜயராமன் அவர்கள் எழுதிய சேவல் களம் (சேவற்களம் என்பதுதானே சரி?) நாவலை படித்தபோது, மேலே சொன்ன உணர்வைத்தான் நான் அடைந்தேன். நாவல், மூன்று திரிகளாக பிரித்து சொல்லப்பட்டு இறுதியில் இணைகிறது. ஒன்று, சேவல் சண்டையும் அதன் சித்திரமும். இரண்டு, அதன் நாயகரான ராமர் மற்றும் அவரது பிள்ளைகளின் வாழ்க்கை, மூன்றாவதாக ராமரின் தங்கை ஆண்டாள் மற்றும் அவரது பிள்ளைகளின் வாழ்க்கை.

முதல் திரி, இதுவரை தமிழ்ப் புனைவின் பரப்பில் அதிகம் சொல்லப்படாத சேவல் கட்டு எனும் ஒரு விஷயத்தை தனது பேசுபொருளாக எடுத்துக் கொண்டதில் ஒரு புதுமை இருக்கிறது.சேவல் சண்டையை,சேவல்களின் பல்வேறு வகைகளை, சண்டைக்கான முன் தயாரிப்புகளை, சண்டைக்கு இடையே சேவல்களுக்கு செய்யப்படும் சிகிச்சை முறைகளை, எழுதியிருப்பது எல்லாம் மிக சுவாரஸ்யமாகவே இருக்கிறது. அதில் இருக்கும் ஒரு சரளத்தன்மை வாசிப்பை லகுவாக்கவும் செய்கிறது. அந்த விளையாட்டின் நுட்பங்களை அறியாத வாசகனுக்கு இது இயல்பாகவே ஒரு நல்ல சுவாரசியமான சித்திரத்தைத் தருகிறது. இந்தத் திரியின் கிளைமாக்ஸ் போல வரும் ராமர் பார்ட்டியின் உள்நாட்டு சாம்பல் வளவி சேவலுக்கும் ஹைதராபாத் பார்ட்டியின், நூரி வெள்ளைச் சேவலுக்குமான போட்டி மிக நன்றாக விவரிக்கப்பட்டிருக்கிறது. சேவல்களின் இயல்பான அறிவுக் கூர்மை, ஆபத்திலிருந்து தப்பும் வழிகள், தாக்குதல் முறைகள் எல்லாம் படிக்க சுவாரசியமாக இருக்கின்றன.

ஆனால், இந்த நாவலின் மற்ற இரண்டு திரிகளில் சொல்லப்படும் ராமரின் குடும்ப வாழ்க்கை மற்றும் அவரது தங்கையின் குடும்பத்தினர் வாழ்க்கை மிகச் சாதாரணமாக இருக்கிறது. உண்மையில் தீவிர இலக்கிய பரப்பில் இம்மாதிரியான எழுத்துக்கு என்ன இடம் என்றுதான் கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. எல்லோரும் நல்லவராக விளங்கும் இந்த விக்ரமன் சினிமா பாணி கதையில் ராமரின் இரண்டாவது பிள்ளை கம்ப்யூட்டர் விற்பன்னராக வந்து சில வில்லத்தனங்களை செய்கிறான். அதுவும் அப்படியே விட்டுப்போய்விடுகிறது. இதெல்லாம் அந்தக் கால, ராணி முத்து, மாலை மதி போன்ற புத்தகங்களில் வரும் ஒரு கதை போலத்தான் இருக்கிறது. முன்னுரை எழுதியுள்ள பெருமாள் முருகன் இதையே வேறு வார்த்தைகளில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஒரு 200 பக்க நாவலில் பாதிக்குப் பாதி, சேவல் சண்டை பற்றியது என்றால், இந்த குடும்பக் கதை மீதி. அதில் ஆசிரியருக்கு காத்திரமாக சொல்வதற்கு அதிகமில்லை என்பதாலேயே அந்த கடாவெட்டுக்கு ஆடு தேர்ந்தெடுக்கப் போகும் காட்சியும், காதுகுத்து கடா வெட்டு கொடுக்க குல சாமி கோவிலுக்குப் போகும் காட்சியும் அவ்வளவு நீளமாக படித்து சலித்துப் போகும் வண்ணம் எழுதுபட்டுள்ளது தெரிகிறது. பொறுமையையும் சோதித்துவிடுகிறது. அந்தப் பிரதேசத்தை சேர்ந்த வாசகர்களுக்கு வேண்டுமானால், அது அட, நம்ம வூட்ல நடக்கறத அப்டியே எழுதியிருக்காம்பா, என்ற வியப்பையும் மகிழ்ச்சியையும் தரலாம். அவ்வளவுதான். பின் இதில் ஒரு ஆச்சரியமான விஷயம், இந்தப்படைப்பில் எங்கும் சாதி குறிப்பிடப்படாதது. இதுவே இதை ஒரு தொலைகாட்சி தொடராகவோ திரைப்படமாகவோ எடுப்பதற்கு மிகவும் தோதாக மாற்றுகிறது. இன்று தீவிர இலக்கியம் என்ற போர்வையில் வரும் பெரும்பாலான படைப்புகளுக்கு இந்த ஒரு நோக்கம் இருப்பதாக தோன்றுகிறது.

இம்மாதிரியான ஒரு படைப்பு ஒரு வணிகப் படைப்பாக, நான் மேலே சொன்ன மாதாந்திர வெளியீடுகளில் வந்திருக்குமானால், நாம் பொருட்படுத்தத் தேவையில்லை. காலச் சுவடு போன்ற தீவிர இலக்கிய படைப்புகளை வெளியிடும் ஒரு பதிப்பகம் வழியாக வரும்போது, பெருத்த ஏமாற்றமே ஏற்படுகிறது. அவர்களது தேர்வில் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.

மீண்டும் முதலில் சொன்ன விஷயத்துக்கு போவோம். எல்லாரிடமும் சொல்வதற்கு ஒரு கதையாவது உண்டு. பலர் அதை சொல்லவும் சொல்வார்கள். ஆனால் அது எல்லாமே ஒரு நல்ல இலக்கிய படைப்பாகி விடாது.

கோவேறு கழுதைகள் குறித்து வெங்கடேஷ் சீனிவாசகம்

இந்த வண்ணாத்தி மவள மறந்துடாதீங்க சாமி” 

எப்படி மறக்கமுடியும் ஆரோக்கியத்தை? அவர் வாழ்வை? அவரின் கண்ணீரை? அவர் குடும்பத்தை? அவரின் “தொரப்பாட்டை”? அன்பில் தோய்ந்த அவர் மனதை? அவரின் “அந்தோணியாரை”? அவரின் கிராமத்தை?

இலக்கியம் என்ன செய்யும்?” என்ற கேள்விக்கு பதிலாய் இருக்கும், ”கோவேறு கழுதைகள்” வாசித்து முடித்த, கோடைக்காற்று வீசும் இக் கென்யப் பின்னிரவில், நெகிழ்ந்து உணர்வு வசப்பட்டுக் கிடக்கும் இம்மனநிலையை எப்படி விவரிப்பது?. 4500 கிலோமீட்டர்களுக்கு அப்பால், கடல்தாண்டி இருக்கும், ஓர் ஆப்பிரிக்க நாட்டில், எழுதி இருபத்தைந்து வருடங்களுக்குப் பின், வாசித்து முடித்த ஒரு படைப்பு மனதை இந்த அளவிற்குப் பாதித்து, வசியம் செய்து, பரவசப்படுத்தி, வளர்ந்த கிராமத்தின் பதின்ம நினைவுகளையெல்லாம் தொட்டெடுத்து மீட்டி, மனம் நிறைத்து, பின்னிரவில் தூக்கம் மறக்க வைத்து, மங்கிய நிலவொளியில், கிளைகள் அசையும் மரங்களினூடே இப்படி நடக்க வைக்கிறதென்றால்…”இலக்கியம்” எனும் பேராற்றல் முன் வணங்கி நிற்கத்தான் முடிகிறது.

ஆரோக்கிய நிகேதனம்” படித்து முடித்த இரவிலும், “பிஞ்சர்” பார்த்த இரவிலும், “ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்” படித்து முடித்த இரவிலும் இப்படித்தான், பண்ணையின் பசுங்குடில்களுக்கு நடுவே சூரிய சக்தி விளக்குகளின் வெளிச்சத்தில் இலக்கில்லாமல் மேலும் கீழும் நடந்துகொண்டிருந்தேன். ஆரோக்கியத்தின் வாழ்வு இலக்கியத்தில் பதியப்பட்டு, சாகாவரம் பெற்றுவிட்டது. அவர் வாழ்வு மட்டுமல்ல, அவரைப் போன்ற ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வியல், எழுத்தாணி கொண்டு பொறிக்கப்பட்டு விட்டது. இலக்கியம் இதற்குத்தானே?. ராச்சோறு எடுக்கும் ஆரோக்கியத்தின் “சாமி, உங்க வண்ணாத்தி மவ வந்திருக்கேன் சாமி” என்ற வீட்டுவாசல் குரல், என் கிராமத்து நண்பன் ஆறுமுகம் வீட்டுவாசலில் எண்பதுகளில் கேட்ட அக்கம்மாவின் “அக்கம்மா வந்திருக்கேன்சோறு போடுங்க தாயி…” குரலை துல்லியமாக காதுகளில் ஒலிக்கவைத்தது. முப்பத்தைந்து வருடங்களுக்குப் பின், அக்கம்மாவின் அக்குரல் இந்த நள்ளிரவில் மனதில் மேலெழுந்து வந்து கண்களில் நீர் துளிர்க்க வைக்கிறது.

அப்போது நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அக்கம்மாவின் குடும்பம் எங்கள் கிராமத்தில் சலவைத் தொழில் செய்யும் குடும்பம். தெப்பக் குளத்தின் தெற்குப்புறம் கடைசியில் இருந்த காலனியில் பின்பக்கமாயிருந்தது அவர்கள் வீடு. மண்வீட்டின் முன் கருவேல மரத்தில் கழுதை ஒன்று கட்டப்பட்டிருக்கும். ராச்சோறு எடுப்பதற்கு அக்கம்மாவோ, அவர் கணவனோ, சிலநாட்கள் அவர் பெண் பூரணமோ முன்னிரவில் வீடு வீடாகச் செல்வார்கள். பூரணத்திற்கு என்னைவிட ஐந்தாறு வயது அதிகமிருக்கும் என்று நினைக்கிறேன். முன்னிரவு நேரத்தில், தெப்பக்குள சுற்றுச்சுவற்றில் உட்கார்ந்து நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் சில நாட்களில், துவைத்த துணிகளை வீடுகளில் கொடுப்பதற்காக, பெரிய மூட்டையை தலைமேல் தூக்கிக் கொண்டு அக்கம்மாவுடன் செல்லும் பூரணத்தைப் பார்த்திருக்கிறேன்.

ஒருநாள் சாயங்காலம் சென்னம்பட்டியிலிருந்து பள்ளிக்கூடம் விட்டு சைக்கிளில் வரும்போது, தெப்பத்தின் கிழக்கு மூலையில் ஆலமரத்தடியில் கூட்டமாக இருந்தது. ஆர்வத்தில், சைக்கிளை ரோட்டோரம் நிறுத்திவிட்டு, பக்கத்தில் கூட்டத்தினருகே சென்று எட்டிப்பார்த்தேன். பஞ்சாயத்து போர்டு பிரெஸிடண்டோடு இன்னும் மூன்று நான்கு பெரியவர்கள் பெஞ்சில் உட்கார்ந்திருந்தார்கள். இடுப்பில் துண்டோடு பூரணத்தின் அப்பா கைகூப்பி முதுகு வளைத்து நின்றிருந்தார். பக்கத்தில் அக்கம்மாவும், பூரணமும் தலைகுனிந்து கண்ணீரோடு நின்றிருந்தார்கள். பெரியப்பாவும், மாமாவும் தனியே மடக்கு சேரில் உட்கார்ந்திருந்தார்கள். காலனிப் பையன் ஒருவன் சட்டையில்லாமல் கிழிந்து போன பனியனோடும், இடுப்பில் துண்டோடும் எல்லோர் காலிலும் விழுந்து கும்பிட்டுக் கொண்டிருந்தான். எனக்கு என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. “இருபது ரூபா ஜாஸ்திங்க சாமி, தயவு பண்ணணும்” அந்தப் பையன் மறுபடியும் ஒரு பெரியவரின் காலில் விழுந்து கும்பிட்டான். ”நீ பண்ண தப்புக்கு இருபது ரூபா கம்மிடா” என்றார் ஒருவர். என்னைப் பார்த்துவிட்ட சீனி மாமா, முறைத்து வீட்டிற்குப் போகச்சொல்லி சைகை காட்டினார். நான் நகர்ந்து போய் சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினேன். வீடு வரும்வரைக்கும், பூரணத்தின் கண்ணீர் நிரம்பிய அந்தக் கண்கள்தான் மனதில் நின்றிருந்தது.    

பத்து/பனிரெண்டு வயதில் நான் பார்த்து, ஆழ் மனத்திற்குச் சென்று மறைந்து போன அக்குடும்பத்தை, இந்த நாற்பத்தாறு வயதில், “கோவேறு கழுதைகள்” ரத்தமும், சதையுமாய் கண்முன் கொண்டுவந்தது. அக்கம்மாவும், ஆரோக்கியமும் வேறுவேறல்ல. படிக்கும்போது அக்கம்மாவும் இப்படித்தானே வாழ்ந்திருப்பார் என்று யோசித்து யோசித்து மனம், நெடுகிலும் நெகிழ்ந்துகொண்டேயிருந்தது. இப்போது பூரணம் எங்கிருக்கிறாரோ, என்ன செய்துகொண்டிருக்கிறாரோபெருமூச்சுடன் அவருக்காக பிரார்த்தித்துக்கொண்டேன்.

உருட்டுக் கட்டையாட்டம் இருக்கிற இந்த உடம்பாலதான் ஊருல எல்லார்கிட்டயும் எனக்குச் சண்டை வருது. கீழ்ச் சாதின்னு கூடப் பார்க்காமக் கடிக்க வரானுங்க. மீசை நரைச்ச கெயவன்கூட எங்கிட்டக் கேலி பேசுறான். கோவமா வருது. என் அடி வவுத்தையே பாக்குறாங்க. நா இனிமே துணி எடுக்கப் போகல”  மேரியின் அழுகைக் குரல் மனதை என்னவோ செய்கிறது. எது நடந்துவிடக் கூடாது என்று மேரி பயந்துகொண்டிருந்தாளோ, அச்சம்பவம் நடந்த அத்தருணம்சடையனிடம் மாட்டிய மேரியின் கெஞ்சும் குரல்மனதை அறுப்பது

வாண்டாம் சாமி…”

தப்பு சாமி…”

நல்லதில்ல சாமி…”

மானம் மருவாத பூடும் சாமி…”

தெருவுல தல்காட்ட முடியாது சாமி…”

குடும்பம் அயிஞ்சுபூடும் சாமி…”

வண்ணாத்தி சாமி…”

வாக்கப்படப் போறவ சாமி…”

சாதிக் குத்தமாயிடும் சாமி…”

உசுரப் போக்கிப்பேன் சாமி…”

உங்களுக்குக் காலுக்குக் கும்பிடுறேனய்யா…”

உங்களுக்கு மவளாப் பொறக்கறனய்யா…” 

மேலே வாசிப்பைத் தொடரமுடியாமல் கலங்கடித்த இடம் அது.

மேல்நாரியப்பனூர் அந்தோணியார் கோவிலுக்குப் போவதிலிருந்து துவங்கும் நாவல், அம்மக்களின் வாழ்வை அச்சு அசலாய் அத்தனை இயல்பாய் அக்கிராமத்தின் எல்லாப் பின்னணியோடும் கண்முன் விரிக்கிறது. கிராமத்தின் எழவு வீட்டின் காரியங்கள், அறுவடைக் காலம், களம் தூற்றும் நிகழ்வுகள், ஊர்ச் சோறு எடுப்பது சம்பந்தமாக ஆரோக்கியத்திற்கும் சகாயத்திற்கும் நடக்கும் சண்டைகள், தெரசா, திரவியராஜ் குடும்பம், திரவியம்மேரியின் கல்யாணம், திரவியராஜின் மரணம், பெரியானின் வாழ்க்கை, தைப் பொங்கலில் கிராமத்தின் முகம், மேரிக்கும் ராணிக்கும் இடையிலான நட்பு, குடுகுடுப்பைக்காரனின் இரவு வாக்கு, மாரியம்மன் கோவில் திருவிழா, ஆடு, மாடு, பன்றித் தலைகளுக்கு நடக்கும் பஞ்சாயத்து, ஊர்ச்சோறு எடுக்கும்போது ஆரோக்கியத்தின் அனுபவங்கள், கிராமத்தில் தேர்தலின் முகம், அந்த மழை, வளரும் பெரியானின் பேத்தி, கிராமத்தில் நடக்கும் பிரசவம், ஆரோக்கியம் நீக்கும் பால்கட்டு

நாவல் படித்து முடித்தபோது, என் கிராமத்தில் மறுபடி வாழ்ந்து வெளியில் வந்ததுபோல் இருந்தது.

இந்து தமிழ் திசையில் வெளியான, அரவிந்தன் எடுத்த இமையத்தின் பேட்டியை, “கோவேறு கழுதைகள்” படித்துமுடித்த அந்த இரவில்தான் வாசித்தேன். ஒரு நள்ளிரவில் தான் கேட்ட ஆரோக்கியத்தின் அழுகுரல்தான், “கோவேறு கழுதைகள்” நாவலை உருவாக்கியது என்று சொல்லியிருந்தார். அந்த நள்ளிரவின் அடர்ந்த இருட்டில் சாதாரணமாய் கரைந்து போயிருந்திருக்கக் கூடிய ஓர் ஒட்டுமொத்த வாழ்வின் அழுகுரலை அழுத்தமாய் பதிவு செய்ததற்காக இமையத்தை கட்டிக்கொள்கிறேன். பேட்டியில் செடல் எனும் தெருக்கூத்தாடும் அழகான பெண் குறித்து சொல்லும்போது

ஒரு கரிநாள் அன்று பொங்கல் காசு கேட்பதற்காக வந்த செடல் மாமன் மகனே பொங்க காசு தாங்க சாமிஎன்று கேட்டு காலில் விழுந்து கும்பிட்டு, “பால் பொங்கிடிச்சா?” என்று கேட்டார். அவர் என் காலின் முன் விழுந்து கிடந்த அந்த கணத்தில்தான் தமிழ் நாவல் இலக்கியத்தின் மாபெரும் கதாநாயகி செடல் என்று தோன்றியது”  

என்று குறிப்பிடுகிறார். இந்த ஒரு வரியே என் மனதை நிரப்பப் போதுமானதாய் இருந்தது. செடல், எங்கள் கிராமத்தின் ”வெள்ளையம்மா”வாக இருக்கலாம். மனம் இப்போதே பரபரக்கிறது. வரும் நாட்கள் செடலுடன்தான்.

வீழ்ச்சியின் மீதான ஒரு தியான நடவடிக்கை – மீஸான் கற்கள் குறித்து வே.நி சூர்யா

இன்றைக்கு ஒரு மொழிபெயர்ப்பு நூலை கையிலேந்துகையில் சில விநோதமான வாக்கியங்களுக்கு அவை அழைப்பு விடுக்கின்றன. சில பத்திகளை காக்கைகள் தூக்கிச் சென்றிருக்குமோ.. கூகுள் மொழிபெயர்ப்பின் கைங்கர்யமோ. இப்படியான இத்தனை கேள்விகளையும் சில்லறை அவநம்பிக்கைகளையும் தாண்டித்தான் ஒரு மொழிபெயர்ப்பு புத்தகத்திற்குள் நுழைய வேண்டியிருக்கிறது. இப்பின்னணியில் இரண்டு விஷயங்கள் முக்கியமான கருவிகள் ஆகின்றன. ஒன்று, உள்ளுணர்வு. பிறிதொன்று பிற மொழி அறிவு. ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட மிக மோசமான தமிழ்மொழிபெயர்ப்புகளை எதிர்கொள்ளும்போது அப்படியே வளைவுப்பாதையில் சென்று ஆங்கில புத்தகத்தையே தேர்வுசெய்து என்னை காப்பாற்றிக் கொள்வதுண்டு. நமக்கு தெரியாத மொழியிலிருந்து மொழியாக்கம் எனும்பட்சத்தில் உள்ளுணர்வுதான் வழிநடத்துநர். அவர் என்ன சொல்கிறாரோ அதுதான் அம்மொழியாக்கம் குறித்த என் மதிப்பீடு. எனக்கு மலையாளம் தெரியாது என்ற எல்லைக்குள் நின்றுகொண்டே குளச்சல் மு. யூசுப் அவர்கள் மொழிபெயர்த்த மீஸான் கற்கள் நாவலை ஒரு நல்ல உள்ளுணர்வுடன் வாசித்தேன். ஏற்கனவே அவருடைய மொழிபெயர்ப்பில் பஷீரினுடைய படைப்புகளை வாசித்திருந்தேன். இலக்கியச் சுத்தமானமொழி, பிரதேச மொழி என அந்தந்த படைப்புகளுக்கு ஏற்றவாறு அவரால் ஒரு சட்டையை கழற்றி புதுசட்டை அணிந்துகொள்வது போல ஒரு நடையை சுவீகரித்துக் கொள்ளயியல்கிறது. மேலும் கதாபாத்திரங்களின் தொனியை அவரால் அப்படியே கடத்த இயல்கிறது. இந்த தொனியை மொழிபெயர்ப்பது என்பதுதான் தமிழில் எழுதப்பட்டது என்றெண்ண வைக்கும் ஒரு சரளமான அசல்த்தன்மையை நாவலுக்கு போர்த்துகிறது என்றே நினைக்கிறேன். மேலும் கசிந்துருகச்செய்யும் வரிகளை உக்கிரம் கொப்பளிக்கும் வரிகளாக மொழிபெயர்த்துவிடுகிற அபாயம் பெருகிவிட்ட தற்கால மொழிபெயர்ப்புச் சூழலில் மேற்குறிப்பிட்ட இரண்டும் முக்கியமான பண்புகள்.

ஒற்றைவரியில் சொல்ல முயன்றால் மீஸான் கற்கள், ஒரு அந்த கால இஸ்லாமிய நிலப்பிரபுத்துவ குடும்பத்தின் வாழ்க்கையையும் அதன் வீழ்ச்சியையும் சித்தரிக்கும் நாவல். புனத்தில் குஞ்ஞப்துல்லா அப்படியே நம் முன் ஒரு கதையை தூக்கிவீசுகிறார். அவர் அந்த கதையில் யாருடைய தரப்பையும் தேர்ந்தெடுப்பதில்லை. மாறாக, முன்பு இது இப்படி இருந்தது ஆனால் இன்று பாருங்கள் இது இப்படி மாறிவிட்டது என்று சொல்கிறார். காலத்தால் சிறுசிறுக துருவேறி பொடிப் பொடியாக மாறிவிட்ட உடைக்கயியலாத இரும்புத்துண்டத்தை போன்ற வாழ்க்கையே அவருடைய விசாரணையின் மையம். விசாரணை அறிக்கையில் இறுதி முடிவு எனும் இடத்தை பெரும்பாலும் வெற்றிடமாக விட்டுவிடுகிறார். மீஸான் கற்கள் நிறைந்த பள்ளிவாசல், அப்பள்ளிவாசலில் பாங்கு சொல்லும் எரமுள்ளான், அந்த பள்ளிவாசலையொட்டிய அறக்கல் இல்லம், கருணை மற்றும் குரூரத்தின் விநோதமான கலவையுடன் குறுநில மன்னர் போல அந்த அறக்கல் இல்லத்தில் வசித்துவரும் கான்பகதூர் பூக்கோயா தங்ஙள், அவருடைய மனைவி ஆற்றபீவி, அவருடைய மகள் பூக்குஞ்ஞி, பூக்கோயா தங்களின் பணியாளர்கள், பூக்கோயா தங்ஙளால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்படும் நீலியின் மகன் குஞ்ஞாலி, பாடகனான பட்டாளம் இபுறாகி இவர்கள் நாவலின் பிரதான கதாபாத்திரங்கள். கூடவே மரணமும் கட்டுக்கடங்காத இச்சையும் ஒரு கதாபாத்திரம் போல இந்நாவலில் அலைகிறது.

பூக்கோயா தங்ஙள் நிலப்பிரபுத்துவத்தின் மானுட உருவம். கருணை, இச்சை, அதிகாரம் என்ற முக்கோணத்திற்குள் அலையும் முன்தீர்மானிக்க முடியாத குணாம்சங்களின் தொகுப்பாகவே நாவலில் அவருடைய கதாபாத்திரம் வெளிப்படுகிறது. தனது குதிரையில் ஏறி மீனவக் குடிசையில் அத்துமீறுவது அவருடைய ஒரு முகம் என்றால் ஊரில் காலாரா வந்து மக்கள் அவதிப்படும்போது அதற்கு முன்னால் வந்து நிற்பது அவருடைய இன்னொரு முகம். கான்பகதூர் பூக்கோயா தங்ஙள் தன் இச்சையை பொருட்டு குத்தி வீழ்த்தபடும்போது நாவல் தன்னுடைய இன்னொரு வீச்சை அடையத் தொடங்குகிறது. அதிகாரம் இருக்ககையில் அதை பயிற்சி செய்ய ஆள் இல்லாதபோது உண்டாகும் வெற்றிடம் அந்த அதிகாரத்தையே விழுங்க முயல்வதும் இன்னொரு ஆளை தேடுவதுமான காட்சி ஒன்று நாவலிலிருந்து எழுந்துவருகிறது. அறக்கல் இல்லம் மண்ணில் புதைக்கப்பட்ட சவத்தை போல உருகுலையத் தொடங்குகிறது. தற்கொலை, மரை கழறல், விட்டு வெளியேறுதல் என அறக்கல் இல்லத்து மாந்தர்கள் சரிந்துவீழ்கிறார்கள்.

ஏதோ முடிந்தால்தான் ஏதோ தொடங்கும் என்பதுபோல, ஒருகட்டத்தில் நாவலின் பாத்திரங்கள் இறந்துபோகிறார்கள் அல்லது அதற்கு நிகரான நிலையை அடைகிறார்கள். காமம் மரணத்தின் முகமூடியை அணிந்துகொள்கிறது. மரணம் காமத்தின் முகமூடியை பதிலுக்கு அணிந்துகொள்கிறது. சிலசமயம் காமமும் மரணமும் ஒன்றேபோல் ஆகிவிடுகின்றன நாவலில். வடக்கு மலபார் முஸ்லீம்களின் வாழ்வியல் நாவலெங்கும் விவரிக்கப்படுகிறது. அவர்களது பழக்கவழக்கங்கள், தொன்மங்கள், கல்வி முறை என அனைத்தும் நாவலின் வாயிலாக ஒரு இயங்கும் சித்திரமாக எழுந்துவருகிறது. இந்நாவலில் வருகிற ஜின்களை குறித்த பகுதி கனவுத்தன்மையை உண்டாக்கிச்செல்கிறது. நாவலின் சாரத்தை தொகுத்துக்கொள்ள முயலும்போது இப்படி ஒரு உருவகம் மனதில் தோன்றுகிறது. எல்லா சன்னல்களும் திறந்திருக்கும் நிறைய ஆட்களை ஏற்றிச் செல்லக்கூடிய வாகனம். அதை இயக்குமிடத்தில் இச்சையையும் அதிகாரத்தையும் உடல் பாகமாக கொண்ட மனிதர். வாகனம் புறப்படுகிறது. இறுதியில் மரணம் எனும் நிறுத்தத்தில் வாகனம் பழுதடைந்து நிற்கிறது. அதை வருங்காலம் வெறித்துப் பார்த்துபடி கடந்துசெல்கிறது. இன்னொருவிதமாக கூற முயன்றால், வீழ்ச்சியின் மீதான ஒரு தியான நடவடிக்கை என்று கூட சொல்லலாம். இது வெறும் வீழ்தல் அல்ல, ஒளியின் வருகையையும் தீர்க்கதரினசமாக தன்னுள் பொதிந்து வைத்திருக்கம் ஒரு வீழ்ச்சி.

ஏராளமான கதாபாத்திரங்கள். எக்கச்சக்கமான தருணங்கள். கிராமத்து வாழ்க்கையின் அப்பாவித்தனங்கள். அதன் உன்மத்தங்கள். சகலத்தையும் பாரபட்சமின்றி கேலியுடன் அணுகும் ஒரு நவீனத்துவ குரல். ஒரு எடைமிகுந்த காலத்தின் கடைசி மூச்சிரைப்பு சப்தம் என இந்நாவல் ஒரு பரந்த பரிணாமத்துடன் பூரணித்து நிற்கிறது. இந்நாவலை மிகச் சிறந்த முறையில் தொய்வில்லாமல் மொழியாக்கம் செய்து தந்திருக்கும் குளச்சல் மூ யூசுப் அவர்களையும் பாராட்டியே ஆகவேண்டும்

மீஸான் கற்கள் புனத்தில் குஞ்ஞப்துல்லா

காலச்சுவடு வெளியீடு

காலம் குறித்து கார்லோ ரோவேலியுடன் ஒரு நேர்முகம்- மார்க் வார்னர், எமானுவல் மொஸ்காடோ: ரா. கிரிதரன் தமிழாக்கம்

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: 

காலமும் இலக்கியமும்

எனக்குக் காலமே என்னவென்று தெரியவில்லை. செய்கையே காலம். அல்லது ஒரு செய்கைக்கும் அடுத்ததற்கும் உள்ள இடைவெளி. செய்கை இடைவெளி இரண்டும் கலந்ததே காலம். அல்லது ரெண்டுமே இல்லை. என்னைப் பொறுத்ததுதான் காலம். என் உணர்வுக்கு ஒன்றை விடுத்து அடுத்தது என்று ஏற்படும்போதுதான் காலம். அப்படியென்றால் என்னைப் பொறுத்தவரை ரெயில் நின்றுகொண்டிருக்க்கிறது.

– அசோகமித்திரனின் ‘காலமும் ஐந்து குழந்தைகளும்

காலம் என்பது இயற்பியலுக்கு எந்தளவு தேவையான கருத்தாக இருக்கிறதோ அதேயளவு நெருக்கமான கருத்தாக கலை இலக்கியத்துறைக்கும் இருந்து வந்திருக்கிறது. காலம் நிலத்தடி நீராக ஒவ்வொரு கலைப்படைப்பின் கீழும் இருக்கிறது. செவ்வியல் படைப்புகளில் காலம் ரெட்டை மாட்டு வண்டியைப் போல நிதானமாக ஊர்ந்து செல்லும். சில நேரங்கள் காலம் என்பது நின்றுவிட்ட உணர்வையும் எழுத்தாளர் உருவாக்கிவிடுவார். அதை வெற்றிகரமாகச் செய்து காட்டிய நவீன சிறுகதைகளில் அசோகமித்திரனின் ‘காலமும் ஐந்து குழந்தைகளும்’ முக்கியமான ஒன்றாகும். இங்கு ஒருவன் ரயிலைப் பிடிக்க ஓடுகிறான். இன்னும் ஐந்து நிமிடத்தில் அவன் ஏற வேண்டிய வண்டி புறப்பட்டுவிடும். வீட்டிலிருந்து கிளம்பிய நேரத்திலிருந்து வழி நெடுக தடங்கல்கள் பல. ஒவ்வொரு தடங்கலும் அவனைப் பொறுத்தவரை காலத்தை நிறுத்துகிறது, பின்னோக்கி ஓட வைக்கிறது. தடை உருவானதும் சிந்தனை வேறொரு காலத்தில் அந்தத் தடையைப் பிந்தொடர்கிறது. எல்லையற்ற மனோவேகம் வேறொரு காலத்தில். இவன் பெரிய மூட்டையைத் தூக்கிக்கொண்டு அதிலிருக்கும் தம்ளர் விலா எலும்பை நோகும்படி ஓடுகிறான். அவனைச் சுற்றி காலம் வேறொரு வேகத்தில் இருக்கிறது. தெரு ஓரப் பிச்சைக்காரர்கள் தங்களது ஐந்து குழந்தைகளுக்கு மயக்க மருந்து கொடுத்து காலத்தை நிறுத்திவிட்டதாக அவன் நினைக்கிறான். போதாத நேரமாக காலமற்ற கடவுள் அவன் எதிரே வந்து தாமதத்துக்கான காரணங்களை நினைத்துப் பார்க்கச் சொல்கிறார். அவன் கடவுளை, “அந்தாலே போ,” எனச் சொல்லிவிட்டு ஓடி வரும்போது ரயில் புறப்பட்டு விடுகிறது. ஒரு கணம் திகைத்து நிற்பவன், தன் உளநிலையே காலம் எனும் முடிவுக்கு வரும்போது ரயில் அங்கேயே நிற்பதைப் பார்க்கிறான். நிதானமாக ஏறி உட்கார்ந்து கொள்கிறான். தம்ளர் இடித்த விலா எலும்பின் வலியில் குறைவில்லை.

மிக எளிமையான கதையாக இருந்தாலும், காலம் எப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வகையில் அமைந்திருக்கிறது எனும் வகையில் உள்ள ஒரு கதையாக இது இருக்கிறது. ஆனால், கதையில் வரும் காலத்தை எல்லாம் ஒட்டுமொத்தமாகத் தொகுக்கும் வகையில் புனைவின் கால வேகம் அமைந்திருக்கிறது. சம்பவங்களைக் கோர்த்துச் செல்லும்போது ஒரு நீண்ட ஜரிகையாக எல்லாமே அமைந்திருக்கின்றன – பலவேறு காலங்களில் நடந்தாலும் கூட.

அறிவியல்பூர்வமாக பார்க்காமல் இதை தத்துவ வழியில் அணுக முடியும். தத்துவமும் இன்று உண்மையான காலத்தையும் அவரவருக்கு சார்புள்ள காலத்தையும் தனித்தனியே ஆராய்ந்து வந்தாலும்கூட, தத்துவம் எப்போதும் தனிமனித காலத்துக்கும் உலகளாவிய காலம் எனும் கருத்துக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை முன்வைத்தபடிதான் இருக்கிறது. இதனாலேயே பிரத்யட்ச உண்மைக்கு வலிமை இருந்தாலும், நம் அறிதல்முறை காலத்தைக் கடந்து ‘இன்றைய’ காலத்தில் அல்லாது அனுமானங்களையும் உண்மையாகக் கொள்கிறது.

கார்லோ ரொவேலி இந்தக் கட்டுரையில் சொல்வது போல காலத்தை நாம் ஒரு துறையின் அறிவைக்கொண்டு முழுவதும் அறிந்துகொள்ள முடியாது. இலக்கியம், நரம்பியல் துறை, தத்துவம், உளவியல் என பல துறைகளை முழுமையாக இணைக்கும் அறிதல் முறை நமக்கு அவசியமாகிறது. தனித்தனியாக துறைகள் நிபுணத்துவம் அடைந்து வரும் காலத்தில் Integrated thought systems நாம் அறிந்த அனைத்தையும் ஒன்று சேர்க்க உதவும். அப்படி அனைத்தையும் ஒருங்கிணைக்கும் ஒரு துறையாக நாம் இலக்கியத்தைப் பார்க்க முடியும்.

இனி நேர்முகம்.

oOo

உங்களுடைய ‘காலத்தின் ஒழுங்கு’ எனும் புத்தகத்தைப் படிக்கும் வாசகர்கள் நேரடியாகவும், உலகளாவிய உண்மையாகவும், இருக்கும் காலத்தைப் பற்றி இத்தனை தீவிரமான அக்கறை அவசியமா என வியக்க மாட்டார்களா? ஒரு இயற்பியலாளருக்கு ஏன் காலம் மீது ஆர்வம் வர வேண்டும்?

உலகத்தின் உண்மை இயல்பு பற்றி யாருக்கும் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை. ஆனால் நம் அனுபவ அறிவுக்கு முற்றிலும் வேறொரு வகையில் காலம் இயங்குவது உண்மை. இத்தனை சிக்கலில்லாமலும் இயல்பாகவும் இருக்கும் ஒன்று நம் அறிதலுக்கு முற்றிலும் புறம்பானதொரு வகையில் செயல்படுவதை ஆர்வத்துடனும் ஆச்சர்யத்துடனும் பார்க்க வேண்டியுள்ளது.

காலத்தைப் பற்றிய நமது அடிப்படை புரிதல் தவறு என்கிறீர்களா? அல்லது அது உலகளாவிய ஒன்றாக இருப்பதில்லையா?

நமது அனுபவ எல்லைக்குள் வரும் காலத்தை ஊதிப்பெருக்கி உண்மை ரூபமான காலத்தின் மீது போட்டுப் பார்க்கும்போதுதான் சிக்கல் ஏற்படுகிறது. தட்டையான உலகம் எனும் படிமம் அழகான ஒன்று. லண்டனின் பூமி சமதளமானது எனச் சொல்வதில் தவறில்லை. ஒரு கட்டிட வல்லுநர் வீடு கட்டும்போது பூமி சமதளத்தில் இருக்கிறது எனும் முன் அனுமானத்தோடு மட்டுமே அணுக வேண்டும். வீடு விழாது. ஆனால் தூரத்திலிருந்து உலகத்தைப் பார்க்கும்போது அது தட்டையாக இல்லை. இந்த முரண் உங்களுக்குத் தெளிவாகப் புரிகிறது. நமது கண்ணோட்டம் தவறல்ல, ஆனால் முழுமையானதாக இல்லை. நம்மைச் சுற்றி இருக்கும் உலகின் புரிதலைக் கொண்டு அண்டம் முழுவதையும் அறியத் தொடங்குவது தவறாகும்.

சரி, காலத்தை நாம் எப்படி முழுமையாகப் புரிந்துகொள்வது? தட்டையான உலகத்துக்கான உங்கள் படிமம் என்ன? வளைந்திருக்கும் உலகத்தைப் பார்க்க நாம் சற்றே விலகிச் செல்ல வேண்டியதாக இருக்கிறது. அது போல உண்மையான காலத்தைப் புரிந்துகொள்ள என்ன செய்ய வேண்டும்?

நாம் யுத்தம் புரிந்து ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்ளாமல் உலகத்தில் தொடர்ந்து வாழ முடிந்தால், ஒரு நாள் ஒளியைவிட வேகமான பயணம் செய்த ஒருவர் தன் குழந்தைகளைவிடச் சிறுவனாக மாறி திரும்ப முடிவது நம் முன்னே நடப்பதோடு மட்டுமல்லாது அது மிகச் சாதாரண அனுபவமாகவும் இருக்கும்! காலம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேகத்தில் செல்கிறது எனும் உண்மை புரிந்துகொள்ள எளிமையானதாகிவிடும். அப்போது, இறுக்கமான காலத்தின் பிடியில் நமது உடல்கள் சிக்கிக் கொண்டிருக்கிறது எனும் அறிவு உலகம் தழுவிய உண்மையாக இருக்காது.

காலத்தைப் பற்றி நமக்கு ஏற்கனவே என்ன தெரியும்? நம் அறிதலின் நிலை என்ன?

ஐன்ஸ்டீனின் பொது சார்பு நிலை கொள்கையில் விவரிப்பதைக் கொண்டு நமக்கு ஏற்கனவே நிறைய தெரியும். குவாண்டம் இயற்பியலின் புரிதலைப் போல, துகள் இயற்பியல் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் பிரித்துப் பார்க்கவில்லை என்பதும் நமக்கு நன்றாகத் தெரியும். அதாவது கடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் விரிபார்வையில் மட்டுமே புலப்படும் நிகழ்வு..

காலத்தைப் பற்றி நமக்குத் தெரியாததில் எது எளிமையானது?

கடந்த கால புகைப்படங்கள் இருக்கும்போது எதிர்காலப் படங்கள் ஏன் இல்லை? முட்டாள்தனமான கேள்வியாகத் தோன்றினாலும் இது அத்தனை முட்டாள்தனமானது அல்ல. இயல்பான உலகம் காலத்தால் வரையறுக்கப்படுவது – அதாவது கடந்த காலம் முடிந்தது என்றும், எதிர்காலம் திறந்த ஒன்று என்றும் சொல்லப்படுகிறது. நமக்கு இருக்கும் ஞாபகங்களும், கடந்த காலப் படங்களும் எதிர்காலத்தை அல்ல, நடந்து முடிந்தவற்றை சேகரித்து வைத்திருக்கின்றன. ஆனால் இயற்பியலில் கடந்தகாலம் மற்றும் எதிர்காலம் ரெண்டுக்கும் வித்தியாசங்களைத் தேடத் தொடங்கினால் நாம் குழப்பமான இடத்துக்கு சென்று சேருவோம். கடந்த காலத்தில் உலகம் நூதனமான நிலையில் இருக்கிறது. இயற்பியலாளர்கள் அதை குறைவான குலைதி (Entropy) என்கிறார்கள் (குலைவுறும் தன்மை/நிலைகுலையும் தன்மையின் அளவையியல் என்ற பொருளில் நான் இங்கு பயன்படுத்துகிறேன்). கடந்த கால அண்டத்தில் குலைதி குறைவு என்பதாலேயே இது மட்டுமே எதிர்காலத்துக்கும் கடந்த காலத்துக்கும் வித்தியாசமாக இருக்க முடியும். குறைவான குலைதி என்பது ஒழுங்கமைதியுள்ள அமைப்பைச் சுட்டி நிற்பதால் இதுவும் ஒரு குறைபாடுள்ள விளக்கமே.

இயல்பாகவே வஸ்துக்களின் ஒழுங்கமைதி குலைகின்றன என்பது  மட்டுமே எதிர்காலத்துக்கும், கடந்த காலத்துக்கும் உள்ள வேறுபாடு என்றால் நமக்குப் பல கேள்விகள் தோன்றுகின்றன: கடந்த காலத்தில் ஏன் நிகழ்வுகள் ஒழுங்கமைதி கொண்டிருந்தன? அச்சீரமைப்பை உருவாக்கியவர் யார்? இது இன்றுவரை பதிலில்லாத கேள்வி.

காலத்தைப் பற்றி நமது எதிர்காலப் புரிதல் எப்படிப்பட்டதாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?

என்னைப் பொருத்தவரை காலம் ஒரு குழப்பமான கருதுகோள். அது ஒற்றைப் படைத்தன்மை கொண்டதல்ல. அது பல்வேறு கோணங்களில் அணுகக்கூடிய வகையில் பல தளங்கள் கொண்ட அமைப்பு. அதனால்தான் என் புத்தகங்களில் இலக்கியம், நிறைய தத்துவங்கள், உளவியல் மற்றும் சொந்த அனுபவங்களைக் கொண்டு எழுதுகிறேன். நாம் அவற்றின் பல கோணங்களை இணைக்க வேண்டியிருக்கிறது. பல துறைகளும் தேவைக்கு அதிகமாகப் பிரிந்து கிடப்பதே என்னைப் பொருத்தவரை இன்றைய காலத்தின் குறைபாடாக இருக்கிறது. காலம் போன்ற சிக்கலான கருதுகோளைப் புரிந்துகொள்ள நம் நரம்பியல் நிபுணர்கள், தத்துவவாதிகள், இயற்பியலாளர்கள், ஏன் இலக்கியங்கள் கூட ஒன்றுடன் ஒன்று கலந்துரையாடல் நடத்த வேண்டும். என் புத்தகத்தில் நான் ப்ரெளஸ்ட் பற்றி நிறைய எழுதியிருக்கிறேன்.

காலம் என்பதை உணர்வுத்தளத்திலும் நாம் அனுபவிக்கிறோம். உணர்வுரீதியான பாதிப்பை நமக்கு காலம் அளிக்கிறது. காலம் பற்றிய உரையாடல்களில் நாம் காலம் குறித்த உணர்வு ரீதியான பாதிப்பு இல்லாமல் பேச முடியாது. காலம் கடக்கும்போதெல்லாம் நாமும் கடந்து போகிறோம் என்பதும் ஒரு காரணம். ஒரு இயற்பியலாளராகச் சிந்திக்கும்போதுகூட நாம் உணர்வுத்தளத்தை மறந்தோமென்றால் குழம்பிப் போவோம். ஏனென்றால் கடந்து போகும் காலம் குறித்த கவலையற்ற இயற்பியல் துறையில்கூட நாம் உணர்ச்சிரீதியான உரையாடலை எதிர்பார்க்கிறோம். நம் நரம்பு மண்டலத்துடன், நமது உணர்வு ரீதியான வாழ்க்கையுடன் தொடர்புடையது காலம். இது இயற்பியல் அல்ல. காலம் கடக்கும் எனும் உணர்வு நமது மூளையை பாதிக்கிறது. ஆகவே இயற்பியலாளருடையது அல்லாது நரம்பியல் வல்லுனரின் சிக்கலாக மாறுகிறது. இயற்பியல் தளத்தில் காலம் என்பது மிகவும் பலகீனமானது என்பதால் இப்படிப்பட்ட கருதுகோள்களின் மீது தத்துவத்துறை புது வெளிச்சத்தை பாய்ச்சக்கூடும்.

காலத்தின் உணர்வு ரீதியான கட்டமைப்பு உங்கள் சிந்தனையை பாதித்திருக்கிறதா?

ஆமாம். தத்துவவியலாளர்கள் எழுதி இதுவரை வெளியான புத்தகங்களிலேயே மிகச் சிறப்பான புத்தகத்தை எழுதிய ஹான்ஸ் ரெய்ன்பாக் எனும் தத்துவவாதி, காலாதீதமான கருதுகோளைத் தேடுவது காலத்தைக் கண்ட பயத்தினால் விளைந்த தத்துவம் என்கிறார். எல்லையற்ற மாற்றங்களுடனான சமரசமே காலத்தைப் பற்றிய அறிதலின் பயணம் எனத் தோன்றுகிறது. புத்த தத்துவத்தின் நிலையற்ற கருதுகோள் போல அசைவில் அசைவற்ற நிலை. காலத்தை கவனித்து வருபவனாக வாழ்வை கழித்து வரும் நான், எதுவும் நிலையானதல்ல எனும் நம்பிக்கையை ஏற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டேன். இது நான் அறிவியல் படிப்பதால் வந்த மாற்றமா அல்லது வயதானதாலா எனத் தெரியவில்லை.

 எல்லாவற்றையும் ஒருங்கிணைக்கும் இரு கோட்பாடுகள்

நம் அண்டத்தைப் புரிந்துகொள்வதில் நம்மிடையே இருக்கும் சிறப்பான இரு கோட்பாடுகளைப் பற்றிப் பேசலாம். சிறிய துகள்களின் இயங்குவிதிகள் பற்றிய குவாண்டம் இயற்பியல் மற்றும் அதிக எடையுள்ள பொருட்களின் இயங்குவிதிகளை பற்றிய பொதுச்சார்புக்கொள்கை. இரண்டு கோட்பாடுகளுக்கிடையே பல முரண்பாடுகள் உள்ளன. ரெண்டுமே அதனதன் தளங்களில் உண்மைக்கு நெருக்கமாக உள்ளன. ஆனால் அந்த உண்மைகளுக்கிடையே பல முரண்கள் உண்டு. இரண்டு கோட்பாடுகளையும் இணைக்கும் முயற்சிகள் பல நடந்துள்ளன. லூப் குவாண்டம் ஈர்ப்புக்கோட்பாடும் , இழைக்கொள்கையும் அம்முயற்சியில் இறங்கியுள்ளன. அவற்றைப் பற்றி மேலும் விவரங்கள் சொல்ல முடியுமா?

இவ்விரண்டும் பொது சார்புக்கொள்கையையும், குவாண்டம் இயற்பியல் கருதுகோளையும் இணைக்கும் உத்தேசமான கோட்பாடுகளாகவே கருதப்படுகின்றன. நமக்குப் புரிந்தவரை இவ்விரண்டில் ஒன்று மட்டுமே உண்மையாக இருக்க முடியும். இவ்விரண்டில் இழைக்கொள்கை பெரிய கேள்விகளை நோக்கி பயணம் செய்கிறது. எல்லாவற்றையும் ஒரே சமன்பாட்டில் அடைக்கும் பெரு முயற்சியில் உள்ளது. நமது தூலப்பொருட்களின் அடிப்படைக் கட்டுமான துகள்களான எலெக்ட்ரான், குவார்க் போன்ற அனைத்துமே இழைகளால் அமைந்தவை எனும் ஆதாரக்கொள்கையின் அடிப்படையில் இழைக்கோட்பாடு இயங்குகிறது. ஒரே கோட்பாட்டின் மூலம் அனைத்தையும் இணைக்கும் முயற்சி. லூப் குவாண்டம் ஈர்ப்புக் கொள்கைக்கு பெரிய குறிக்கோள்கள் இல்லை. குவாண்டம் இயற்பியலின் புரிதலைக்கொண்டு பொதுச் சார்புக்கொள்கையை விவரிக்கப் பார்க்கிறது. வெளி மற்றும் காலத்தின் கொள்கைக்கு குவாண்டம் வடிவம் கொடுக்கும் கோட்பாட்டு முயற்சி மட்டுமே. நம்மைச் சுற்றியிருக்கும் வெளி தொடர்ச்சியான ஒன்றாக அல்லாமல் சிறு துணுக்குகளின் தொகையாக (குவாண்டம்) இருப்பதாக கணிக்கும்போது சிறு சிறு குவாண்டம்களாய் உள்ள வெளி, அதாவது, சிறு சிறு துகள்களாலான வெளி, இந்தத் துகள்களும் சின்னஞ்சிறு லூப்களாக உள்ளன என்று அமைத்துக் கொள்ள முடியும். இந்த குவாண்டம் வெளித் துகள்கள் வெளி எனும் வெற்றிடத்தை நிறைக்காமல் இவையே வெளியாக அமைகின்றன – சிறு சிறு பஞ்சு இழைகள் சேர்ந்து நாம் அணியும் சட்டையாவது போல இந்த குவாண்டம் வெளித் துகள்கள் வெளியென்ற ஒன்றாகின்றன.

இழைக்கொள்கைக்குப் பெரிய குறிக்கோள்கள் இருந்தாலும் முற்றிலும் புதிய ஒன்றை அது முன்வைக்கவில்லை. இழைகள் வெளியினில் நகர்வதால் காலத்துக்கும் வெளிக்கும் இடைவெளி இருப்பதை ஏற்றுக் கொள்கிறது. ஆனால் லூப் குவாண்டம் ஈர்ப்பு விசையில், இருக்கும் இடமோ இருக்கும் காலமோ இல்லையாதலால், அனைத்துமே குவாண்டா என்று அழைக்கப்படும் துணுக்குகளாய் தோன்றுகின்றன. அதாவது காலமும் வெளியும் இருவேறு கருதுகோள்கள் அல்ல; ரெண்டுமே ஒன்றிலிருந்து விளைந்தவை எனும் புதுமையை இது முன்வைக்கிறது. இவற்றில் எது சரியானது என நமக்கு இப்போது தெரியாது. ஆனால் விஞ்ஞானம் பலவேறு கோட்பாடுகளுக்கிடையே பெரிய உரையாடல்களை நிகழ்த்தியபடி முன்னகர்ந்துள்ளதால் இதுவும் நல்லதுதான். இந்த சிக்கலைத் தீர்க்காதவரை எந்த ஒரு ஒற்றைக்கொள்கையும் நமது சுதந்திரமான சிந்தனைக்கு இடையூறாக இருப்பதில்லை.

லூப் குவாண்டம் ஈர்ப்புக் கோட்பாட்டை சரியானது என ஏன் நினைக்கிறீர்கள்? இழைக் கொள்கையின் சிக்கல் என்ன? கறாரான சோதனை முடிவுகளைக் கேட்கவில்லை, உங்கள் உள்ளுணர்வு இதைப் பற்றி என்ன சொல்கிறது?

சோதனை மூலம் வெற்றி கண்ட ஐன்ஸ்டீனின் பொதுச்சார்புக் கொள்கையின்படி காலமும் வெளியும் ஈர்ப்பலையின் வெவ்வேறு வடிவங்களே. என்னைப் பொருத்தவரை என்றென்றும் அழியாத கண்டுபிடிப்பாக இது இருக்கும். அண்டத்தின் மையத்தை நாம் கண்டடைந்தது போன்றது இது. அறிந்து கொண்டதும் நாம் உலகத்தை புதுவிதமாகப் புரிந்துகொள்கிறோம்.

என்னுடைய உள்ளுணர்வைப் பற்றிக் கேட்டீர்கள் – வெளிச்சம் ஒரு மின்னணு அலை மட்டுமல்ல, ஃபோட்டான்களால் உருவானதுமாகும். வெளியும் ஈர்ப்பலையினால் உருவானது மட்டுமல்லாது குவாண்ட்டாக்களாகவும் இருக்கும், வெளிச்சத்தைப் போல. வெளியை குவாண்டாக்களாகப் பிரிக்கும்போது வெளி என்பது வெளித்துகள்களின் வரிசையாகவும் இருக்கும் – இது என்னுடைய ஆழமான உள்ளுணர்வு.

அதாவது நாம் பார்க்கும் வெளி தொடர்ச்சியான ஒன்றாக இல்லாமல் சிறுத் குவாண்டாக்களாலான வெளி என்று அறிவோம் இல்லையா? இதை எப்படி சோதித்துப் பார்க்க முடியும்? எவ்விதமான சோதனை முடிவுகளின் மூலம் காலம், குவாண்டம் ஈர்ப்பு பற்றி சரியான திசையில் ஆய்வுகள் நடத்த முடியும்?

ரெண்டு திசைகளில் இந்த ஆய்வு சுவாரஸ்யமாகச் செல்லக்கூடும். முதலாவது நமது அண்டத்தின் பெருவெடிப்பு. அண்டவியல் வளர்ந்து கொண்டிருக்கும் துறை. கிட்டத்தட்ட 13 அல்லது 14 பில்லியன் வருடங்களுக்கு முன்னால் நடந்த இந்த நூதனமான நிகழ்வான பெருவெடிப்பை நாம் இன்னும் முழுவதுமாகப் புரிந்துகொள்ளவில்லை. அண்டவியல் தகவல்கள், வானவியல் கண்காணிப்புகள், பெருவெடிப்பில் எஞ்சியவை போன்றவற்றை லூப் குவாண்டம் ஈர்ப்புக் கோட்பாட்டின் கணக்குகள் கொண்டு ஆராய்வது அந்தக் கோட்பாட்டை நிரூபணம் செய்யும் முடிவுகளை அடைவதற்கு நல்ல வழிமுறையாகும்.

மற்றொரு குவாண்டம் ஈர்ப்பு ஆய்வுக்கான தளம் எனக்குத் தனிப்பட்ட வகையில் ஆர்வமூட்டக்கூடியது – கருந்துளை. அண்டம் முழுவதும் கருந்துளை நிரம்பியிருப்பதை நாம் அறிவோம். சிறியதும் பெரியதுமாகப் பல கருந்துளைகள். முப்பது வருடங்களுக்கு முன்னர் அண்டத்தில் இவை இருப்பதை நாம் அறியவில்லை. தற்பொழுது அண்டம் முழுவதும் மிகப்பெரிய கருந்துளைகள் குவாண்டம் கோட்பாட்டின் விதிகளுக்கு உட்பட்டு இருக்கும் சாத்தியங்கள் உள்ளன. அவை வெடித்துச் சிதரும்போதும் ஆவியாக காணாமல் போகும்போதும் சிறு தடயங்களை விட்டுச் செல்லும்.

கருந்துளையிலிருந்து வெண்துளையாக மாறும்போது வெளியாகும் கதிர்களை ஆய்வு செய்யும் வழிமுறையில் என் சகாக்களுடன் ஈடுபட்டு வருகிறேன். இது போன்ற கதிர்களை முன்னரே கவனித்திருந்தாலும் தெளிவான முடிவுகளை எட்ட முடியவில்லை. ஆய்வுகள் முன்னேறியபடி உள்ளன. நாம் இன்னும் சென்று சேரவில்லை என்றாலும் எங்கும் முட்டியும் நிற்கவில்லை .

நான் ஆய்வு மாணவனாக இருந்தபோது தத்துவ நோக்கில்லாததால் பல புதிய தரிசனங்களை புரிந்துகொள்ள முடியாதவர்களாக இருக்கிறோம் என சந்தேகித்திருக்கிறேன். இன்றைய விஞ்ஞான சொல்லாடல்கள் மிகவும் குறுகிவிட்டதாக நினைக்கிறீர்களா? நாம் சரியான கேள்விகளைக் கேட்கிறோமா?

இதில் நானும் உங்கள் பக்கம்தான். பெரும்பாலான நேரங்களில் முன்னேற்றம் விஞ்ஞான தர்க்கத்தில் இல்லாமல் கோட்பாடு சார்ந்தே இருக்கிறது. குறிப்பாக விஞ்ஞான வளர்ச்சியின் வரலாற்றையும் அங்கு நடந்த பெரிய பாய்ச்சல்களையும் பார்க்கும்போது இந்த எண்ணம் வராமல் இல்லை. நியூட்டன், ஃபாரடே, ஐன்ஸ்டீன், ஏன் மாக்ஸ்வெல் அல்லது ஷ்ரோடிங்கர் அல்லது ஹைசென்பர்க் என யாரை எடுத்துக்கொண்டாலும் சரியான சமன்பாடு கண்டுபிடித்தது மட்டுமே மிகப்பெரிய பாய்ச்சலாக மாறவில்லை. பெருமளவு நேரங்களில் மிகவும் வித்தியாசமான கோணத்தில் அணுகுவதால் பிரச்சனையின் அடிப்படை மாறிவிட்டிருந்தது. இதுவே அவர்களது வெற்றி. விஞ்ஞானத்தில் முன்னேற்றம் என்பது நமது மூளைகளை திறந்து வைத்திருப்பதால் மட்டுமே உருவாவதல்லாது துறை அதிநிபுணத்தனத்தால் உருவாவது அல்ல எனும் என் நம்பிக்கை மீண்டும் உறுதியாகி இருக்கிறது.

உங்கள் புத்தகத்தினால் ஆர்வமேற்பட்டு மேற்கொண்டு படிக்க நினைக்கும் இளம் வாசகருக்கு நீங்க பரிந்துரைக்கும் புத்தகங்கள் என்னென்ன?

நான் எல்லாவற்றையும் படிக்கும்படி சொல்லுவேன். தன்னைச் சுற்றிலும் கவனிப்பதுடன் தொடர்ந்து படிப்பது மட்டுமே நம் அறிவைத் திறக்கும். நான் சிறு வயதில் வரையறை இல்லாமல் சகலத்தையும் படிப்பவனாக இருந்தேன். ஒரு இளைய வாசகன் தன்னை மெலிதாகக்கூட ஈர்க்கும் எல்லாவற்றையும் படித்து மூளையில் ஏற்றிவிடவேண்டும். பின்னர் மறந்துவிடும் என்றாலும் உள்ளே மூளைக்குள் எல்லாமே பயன்பாட்டில் இருக்கும், நாம் மறந்தால்கூட. நாம் படித்த அத்தனையையும் மறந்தபின் எஞ்சி இருப்பதுதான் கலாச்சாரம் என யாரோ சொல்லியிருக்கிறார்கள்.

நன்றி: The Spectator

 

 

 

ஆட்கொல்லி – க. நா. சுப்ரமண்யம் முதற்பதிப்பிற்கான முன்னுரை

க. நா. சுப்ரமண்யம்

ஏதோ ஒரு உறவினர் வீட்டுக் கல்யாணத்துக்குப் போனபோதுஅங்கு பிள்ளை வீட்டாருடன் உற்றார் உறவினர் என்று சொல்லிக் கொண்டு அதிகம் பேர் வந்திருக்கவில்லை என்று கவனித்தேன். ஏன், என்ன என்று விசாரித்தபோது ஒரு உண்மை தெளிவாயிற்று. அவர்கள் பணக்காரர்கள்; பணம் சேர்க்கிற காரியத்தில் மும்முரமாக இருந்த அவர்கள் உற்றார் உறவினர் நண்பர்களை லக்ஷ்யம் செய்யாதது மட்டுமில்லை, உற்றார் உறவினர் நண்பர்களை நசுக்கியே பணம் சேர்த்தார்கள். ஆகவேதான் ஒரு முக்கியமான கட்டத்தில் அவர்களை எல்லாரும் கைவிட்டு விட்டார்கள் என்று அறிந்து கொண்டேன். “ஆட்கொல்லி” என்று பணத்தைச் சொல்வதற்கு ஒரு புது அர்த்தம் அங்கு காணக் கிடைப்பது போலப் பட்டது எனக்கு. சாதாரணமாக பணத்திடம் ஈடுபாடுள்ளவனை, அவனுடைய நல்ல தனங்களைக் கொன்றுவிடும் பணம் என்றுதான் இதற்கு வியாக்கியாயனம் செய்வார்கள். ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் பணம் சுற்றத்தைக் கொன்றுவிட்டது என்பதனாலேயும் அதற்கு ஆட்கொல்லி என்கிற பெயர் பொருந்தும் என்று தோன்றிற்று எனக்கு.

என் மனத்தில் பல வருஷங்களாக ஊறிக் கிடந்த இந்த விஷயத்தை வெளிக்கொணர சென்னை அகில இந்திய ரேடியோவில் பணியாற்றும் என் நண்பர் டி. என். விசுவநாதன் எனக்கு உதவினார். ரேடியோவில் வாராவாரம் வாசிக்க ஒரு நாவல் வேண்டுமென்று அவர் கேட்டபோது இதை எழுதித் தந்துவிடுவதாக ஒப்புக்கொண்டேன். நாவலை சுலபமானதாக, சம்பவங்கள் நிறைந்ததாக, சுலபமாக வாரா வாரம் பின்பற்றக்கூடிய சுவாரசியமான தொடர்கதையாக அமைக்க விரும்பவில்லை நான். ரேடியோ மூலமும் கனமான கருத்துள்ள, ஆழ்ந்து கவனிக்க வேண்டிய நாவல் ஒன்று வெளியிட்டுவிட வேண்டும்- சமூக சித்திரம் என்று முன்பு எழுதிய ஒரு லேசான கதைக்குப் பரிகாரமாக என்று எனக்குத் தோன்றியது. அப்படியே செய்தேன். அதற்கு வாய்ப்பளித்த என் நண்பருக்கு நன்றி.

தொடர்கதை படிக்கும் ரஸிகர்கள் பெருகப் பெருக நாவல் கலை தேய்ந்து கொண்டுதான் வரும். அது தவிர்க்க முடியாத இலக்கிய விதி, தொடர்கதையும் நாவல்தானே என்று கேட்பது இலக்கியத்தின் அடிப்படைகளை அறியாததால் எழுகிற கேள்வி. தொடர்கதை என்பது இலக்கியத்தில் ஒரு தனி ரகம். நாவல் என்பது தனி ரகம்.

நாவல்தான் உயர்ந்தது என்று நான் சொல்வதை, படிக்க முடியாததுதான் உயர்ந்தது என்று நான் சொல்வதாக எண்ணிக் கொண்டு கேலி செய்யலாம். சந்தர்ப்ப விசேஷங்களினால் நல்ல நாவல்கள் சிலவும் தொடர்கதைகளாக வெளிவந்ததுண்டு. இருந்தாலும் நாவல்தான் இலக்கியக் கலையிலே இந்தக் காலத்தில் முதல் பிரிவு, கவிதைகூட இன்று பின்னர் வருகிற பிரிவுதான் என்கிற திடமான அபிப்பிராயம் உள்ளவன் நான்.

இந்த நாவலில் உருவாகிற வேங்கடாசலத்தையோ , ஜானகியையோ, மருமானையோ, ஏன், கண்ணப்பனையோகூட நான் அனுதாபத்துக்கோ, கோபத்துக்கோ, வெறுப்புக்கோ உரிய பாத்திரமாக நினைத்து சிருஷ்டித்துத் தரவில்லை. உங்களுக்கோ எனக்கோ பிடிக்கிறது என்பதற்காக இது இப்படி இல்லை. பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் இது இப்படித்தான் என்கிற ஒதுங்கி நிற்க முயலும் ஒரு சிருஷ்டி தத்துவத்தைக் கடைபிடித்துத்தான் நான் இந்த நாவலை எழுதினேன். சில சமயங்களில் மனிதனின் பலஹீனம் கலைஞனின் திடத்தை அசைத்து விடுகிறது. அந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில், “இப்படி நேர்ந்துவிட்டதா? அடடா! இனிமேலாவது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்,” என்று எண்ணிக்கொண்டு மேலே முயற்சி செய்ய வேண்டியது கலைஞனின் கடமை. இந்த மாதிரி பலஹீனம் இந்த நாவலைப் பற்றிய வரையில் கடைசிக் கட்டத்தில் ஒரு இடத்தில் வந்து விட்டதாக எனக்குத் தோன்றுகிறது. வேங்கடாசலத்தின் ஒரு மருமான் கல்யாணத்துக்கு வந்திருக்கிறான். இன்னொரு மருமான் சமையல்காரனாகப் பெண் வீட்டார் வீட்டில் வேலை செய்ய வந்திருக்கிறான் என்று நான் முடிக்கிற இடம் தொடர்கதை ரஸிகர்களுக்கு என்று ஏற்பட்ட மெலோட்ராமா (Melodrama). அதிகப்படுத்திக் கூறல், கோயின்ஸிடென்ஸ் (Coincidence)என்கிற வகையைச் சேர்ந்து விட்டது. அதை நான் மாற்ற முயலவில்லை. அப்படித்தான் வந்தது, போகட்டும், என்று விட்டுவிட்டேன்.

இந்த ஒதுங்கி நிற்கிற தத்துவ விஷயத்தில் உலகத்தில் பெரிய கலைஞர்கள், சிருஷ்டி கர்த்தாக்கள் எல்லோரும் ஒன்றுதான். அதை விவாதிக்க, விவாதித்து முடிவு கட்ட, இது இடமல்ல; ஓரிரண்டு கோடிகள் மட்டும் காட்டுகிறேன். ஹாம்லெட்டைப் பற்றி கவிஞன் நம்மை அழச் சொல்கிறானா? அனுதாபப்படச் சொல்கிறானா? கோவலன்- கண்ணகி முடிவைப் பற்றி எண்ணி நம்மைச் சிலப்பதிகார ஆசிரியன் கண்ணீர் உகுக்க எங்காவது சொல்லி இருக்கிறானா? பின்னர் எழுந்த நாடகங்களையும், நடுக்கால ஐயோ அந்தோ பரிதாப வியாக்கியானங்களையும் வைத்துக்கொண்டு சொல்லாதீர்கள். “கடவுள் போல் மறைந்து சிருஷ்டிக்குப் பின் ஒதுங்கி நின்று நகத்தைக் கிள்ளுவதில் ஈடுபட்டிருப்பவன்தான் கலைஞன்,” என்பது முப்பது வருஷங்களுக்கு முன் ஜேம்ஸ் ஜாய்ஸ் எழுதிய வாக்கியம். “கண்ணீர்த்துளி வர உள்ளுருக்குதல்,” கலையின் ஒரு கோடிச் செய்கை. அசைந்து கொடுக்காமல் ஒதுங்கி நிற்கச் செய்வது கலையின் மறு கோடி. இதுவரையில் இலக்கிய உலகில் மிகப் பெரியவர்கள் என்று சொல்லக்கூடிய ஒரு நாலைந்து பெர்வழிகளுக்கே கைவந்த கலை அது.

இந்த ஆட்கொல்லிச் சிந்தனையை வேறு ஒரு கோணத்திலிருந்து பார்த்து இன்னும் ஒதுங்கி நின்று, சிந்திக்க வேண்டும் என்ற ஆசை எனக்குண்டு. இன்னும் பத்து வருஷங்களில் கைகூடலாம் அது. அவசரம் ஒன்றுமில்லையே?

திருவனந்தபுரம், 25.3.57.

க. நா. சுப்ரமண்யம்

 

(நன்றி: சிறுவாணி வாசகர் மையத்துக்காக, பவித்ரா பதிப்பகம், 24-5, சக்தி மஹால், சின்னம்மாள் வீதி, கே.கே. புதூர் (P.O), கோவை – 641038. siruvanivasagar@gmail.com., 94881 85920/ 99409 85920)