கவிதை

ஷ் – செல்வசங்கரன் கவிதை

செல்வசங்கரன்

அந்தச் சாலையில் விர்ர்ரென என்னை முந்திக் கொண்டு போனார்
அது விர்ர்ரெனவா என ஒரு டவுட்
என் பங்கிற்குக் கைகளைத் திருகியபடி நானும் முந்தினேன்
அதே பழைய சர்ச்சையைக் கிளப்பி அவர் முந்தினார்
அதையும் விட திருகி நான் முந்தினேன்
இப்பொழுது எங்களை இன்னொருவர் முந்திப் போனார்
எங்கள் எல்லோரையும் இன்னொருவர் முந்தினார்
திரும்பவும் அவர் என்னை முந்திக் கொண்டு போக
அவர்கள் எல்லோரையும் முந்திக் கொண்டு
நான் போய்க் கொண்டிருந்தேன்
அவர் என்னை விட்டபாடில்லை
திரும்பவும் என்னை முந்த முந்தப் பார்க்க
இப்பொழுது அந்தச் சாலையில் யாராலும் முந்த முடியவில்லை
தலை தெறிக்க சாலை கீழே ஓடிக்கொண்டிருந்தது
லேசாகக் குனிந்தாலும் மண்டையைக் குழப்பி விடும் ஓட்டம்
சாலை இப்படி ஓடுவதாலேயே வந்துவிட்டோம் வேறு வழியில்லையென
வண்டிகள் அதில் ஓடிக் கொண்டிருக்கிறதோ
ஆம் ஆம் அப்படித் தான்
இல்லையென்று கூறி விட்டால் அதுவே ஒரு பிரச்சினையாகி
வேறு வேறு பிரச்சினைகளைக் கிளப்பலாம்
சாலையின் நட்ட நடுவே இதெல்லாம் கூட ஒரு சிக்கலே
தலையை அங்கிட்டு இங்கிட்டு ஒரு சொட்டு திருப்பமுடியவில்லை
கைகள் மரத்துப்போனதால் அது இருக்கிறதா என்றே தெரியவில்லை
எது எப்படிப் போனாலென்ன
வண்டி சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது
ஆனால் ஏன் நிற்பது மாதிரி இருக்கிறது தெரியவில்லை
எதுயெதுவோ எதிரே கடந்து பறக்கும் போதெல்லாம்
விருட் விருட்டென ஒரு சவுண்டு
ஆனால் அது விருட் விருட்டெனவா என
திரும்பவும் அதே போல ஒரு டவுட்
அய்யய்யோ நேரங்காலம் தெரியாமல் இது வேறா
இனி இந்தச் சாலை உலகம் தான் என்னைக் காக்க வேண்டும்
நானே பறந்து கொண்டிருக்கிறேனோ மிதந்துகொண்டிருக்கிறேனோ
ஒரு கட்டத்தில் அந்தச் சாலையில் வேறெதுவுமே கேட்கவில்லை
வேறெதுவுமே எனக்குள் இல்லை
எல்லாம் ஷ் மயம் தான்
ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்………………………………ஷ்

டைனோஸார்களின் மகாமித்யம்- காஸ்மிக் தூசி கவிதை

காஸ்மிக் தூசி

நீங்கள்
நினைப்பது போல

என்றோ செத்துப்போன
அற்ப அறிவு
ஜீவராசிகள் அல்ல,
டைனஸார்கள்.

காலத்தைக் கடந்த
கடவுளைப் போல

அவை
சர்வ வல்லமையும்
கொண்டவை

தம்
பிரவேசம்
துல்லியமாக அமையும்
கணத்தை
தியானித்தபடி

அவை
நான்காம் பரிமாணத்தில்
காத்திருக்கின்றன

மேக வடிவெடுத்து
உங்கள் தலைக்குமேல்
மிதந்தபடியும்

பாதத்திற்கு கீழே
புதைந்து
பதுங்கிக்கொண்டும்

சுவரின் நிறத்தில்
உங்கள்
படுக்கை அறையிலும்

தாழ்வாரத்தின்
கூரைச் சரிவிலும்

தாழிடப்பட்ட
கழிவறையின்
கதவுக்குப்பின்னும்

மரத்தின் வடிவில்
வீட்டு
முற்றத்திலும்

மேசையில் நிற்கும்
போத்தலின்
திரவத்திலும்

அவை
மறைந்திருக்கின்றன,

கண்ணுக்கு தெரியாமல்
உங்களை
கண்காணித்தபடி.

ஒரு
சிறிய சபலம்
பேராசை
முரட்டுத்தனம்
அல்லது
ஏதோ ஒரு கணத்தின்
எதிர்பாரா
சிறு பிழை
போதும்

அவைகளை
நிகழ்காலத்துக்குள்
கொண்டுவர.

எதிர்பாராமையின்
ஒற்றை நொடியில்

உங்கள்
பாதங்களைப் பற்றி
பாதாளத்துள்
ஆழ்த்திவிடும்

படுக்கையறையின்
சுவற்றிலிருந்து
பாய்ந்து வந்து
பிடித்து விடும்

நீட்டி வளைத்து
மரத்தின் கிளைகளாகி
உங்கள் கழுத்தை
நெறித்தும் விடும்.

கண்ணுக்குத்
தெரியவில்லை
என்பதால்

தொலைவில்
இருப்பவை பற்றி

நீங்கள்
தைரியம் கொள்ளத்
தேவையில்லை

மரங்கள்
அடர்ந்த தீவுகள்
மின் வேலிகள்
இரும்புக்கோட்டைகள்

கதவுகள்
சங்கிலிகள்
ஆயுதங்கள் ஏந்தி நிற்கும்
பலசாலிக் காவலர்கள்
அனைத்தையும் தாண்டி

சரியான ஒளியுடன்
அமைந்துவிட்ட
புகைப்படத்தில்
கச்சிதமான கோணத்தில்
காட்சியளிப்பது போல

உயரமான
ஒரு இடத்தில்
ஏறி நின்று
உரக்க ஓலமிட்டபடி

எப்படியாவது
வந்து சேர்ந்துவிடும்
உங்கள்
வரவேற்பறைக்கு.

நீங்கள்
உறக்கத்திலிருக்கும்
படுக்கையறை
கூரையிலும்

விழிக்க காத்திருக்கும்
சாளரத்தின்
சதுரத்தின்
முன்னும்

நடந்து
செல்ல இருக்கும்
சமையலறையின்
தரையிலும்

கொடுக்கு போன்ற
ஒற்றை நகத்தை
தட்டிக்கொண்டு

கொடிய பற்களை
காட்டிக் கொண்டு

சரியான நேரத்திற்கு
வந்து காத்திருக்கும்

நெடுஞ்சாலையைப்பிடித்து
வாகனத்தில் விரைந்து
எப்படியாவது
தப்பிவிடலாம்
என்று மட்டும்
நினைக்காதீர்கள்

இந்த டிரெக்ஸ் மட்டும்
ரொம்பவே
பொல்லாதது

இதில்
காண்பதை விடவும்
வஸ்துக்கள்
உங்களுக்கு
மிகவும் அருகில்
இருக்கின்றன

என்ற வாசகம் பொறித்த
பக்கக் கண்ணாடியில்
நீங்கள் பார்த்து
திரும்புவதற்குள்,

பாய்ச்சலாய் ஓடிவந்து
உங்களை
பாய்ந்து பிடித்துவிடும்.

ஆகவே,
டைனோஸார்களை
அஞ்சுவதும்
வழிபடுவதும்
மட்டுமே

தப்பிப் பிழைக்க
ஒரே வழி

ஆமென்!
தத் சத்.

இறப்பதற்கு முன்பு… – இஸ்ஸத் கவிதை

இஸ்ஸத்

ஒரு முறையேனும் பார்த்திட வேண்டும்..
என் ஆவி நீங்கிய நிர்வாண உடலை அருவருப்பின்றி குளிப்பாட்டுபவரை.
எனக்காக இரு வரி இரங்கல் எழுதப் போகும் கவிஞனை, எழுத்தாளனை அல்லது என்னைப் போன்றவனை.
என் உடல் போர்த்த வேண்டி நெய்யப்பட இருக்கும் அணியை உருவாக்க காத்திருக்கும் பருத்திச் செடியை, பஞ்சை, நூலை, நெசவை, நெசவாளியை அல்லது நெய்து தயார் நிலையில் எங்கோ ஓர் மூலையில் உறங்கிக் கொண்டுடிருக்கும் அந்த சிரிய வெள்ளை துணி மூட்டையை.
என் பூத உடலை சுமப்பவரை அல்லது சுமக்க பிரயாசைப்படுபவர்களை.
என் உடல் சுமந்து செல்லப்படுகையில் ஏதோவொரு பச்சாதாபத்தில் தன் வாகனத்தை விட்டு வீதியில் இறங்கி நிற்கும் அந்த ஓர் சிலரை.
என் உடல் புதைக்க குழி தோண்டப்பட இருக்கும் இடுகாட்டின் குறிப்பிட்ட பரப்பை, என்னை குழியினுல் இடப்போகின்றவரை.
என் குழியை மூட மண் போட காத்திருப்பவர்களை, குழி மூடி பலர் விடை பெற்ற பின்பும் நின்று நிதானித்து எனக்காக பிரார்த்தித்து நகர்பவர்களை.
என் மண்ணறை மேலே பிடுங்கி நடப்பட்ட்டும் வேர் விட்டு பூக்காமல் கருக காத்திருக்கும் நித்திய கல்யாணியை.
எல்லாவற்றிற்கும் மேலாக என் இந்த எதிர்பார்ப்பில் இல்லாத, எனக்காக கழிவறை சென்று வாய் பொத்தி வெடித்தழ காத்திருக்கும் முகமறியா அந்த யாரோ ஒரு

 

ராஜ கோபுரம் -காஸ்மிக் தூசி கவிதை

காஸ்மிக் தூசி

மேலூர்சாலை குறுக்கே கடந்து
மேற்குச்சித்திரை வீதியில்
ரங்கநாயகித்தாயார் சன்னதி
தாண்டி நிமிர்ந்தால்

கோயில் வாசல் முன்
செங்குத்தாய்
ஒரு தனிக்கோயில்

அதற்குள் படிப்படியாய்
இன்னும் பலநூறு
சிறு கோயில்

இரு நூற்று
முப்பத்தொன்பது அடி
உயரத்தில்

புறா குருவி வவ்வால்கள்
சீரியல் விளக்குகள் இடையில்
தனக்கென தனிமாடம்
கிடைத்துவிட்ட பெருமையில்

வழக்கத்தைவிட
சற்று அதிகமாய்
வளைந்து நின்றாலும்
அளவாய் புன்னகைக்கும்
கடவுள்கள்

தண்டனைகள்
பிரார்த்தனைகள் போர்க்காட்சிகள்
மத்தியிலும்
தியானத்தை கைவிடாத
தேவர்கள்

நின்ற அமர்ந்த படுத்த
நிலைகளில்
நிமிர்ந்த பெரும் கொங்கை கொண்ட
தேவதைகள்

இன்னும் அதிகமாய்
ஆயுதம் ஏந்த வேண்டி
கூடுதலாய் கைகள் கொண்ட
கிங்கரர்கள்

முட்டைக்கண்
முறுக்கிய மீசையில்
அணிவகுத்து பயமுறுத்தும்
பச்சை நிறத்தசை திரண்ட
பூத கணங்கள்

சிங்கத்தலை கொண்ட
பூத முகங்கள்

கடவுளரின் சேவகர்கள்
சேவகரின் காவலர்கள்
காவலரின் ஏவலர்கள்

மற்றும் அவர்தம்
வளர்ப்பு பிராணிகள்
விருப்ப பல்லக்குகள்

ஆபரணங்கள்
ஆயுதங்கள்
குண்டலங்கள்
இசைக்கருவிகள்
விளக்குச் சரங்கள்

மாலை ஏந்தி
வரவேற்கும் யானைகள்
பல் மருத்துவர் முன்
பரிசோதிக்க
நிற்பது போல்
விரிவாய் வாய் திறந்த யாழிகள்
ஆடை நெகிழ்ந்த அழகிகள்
நெழிவுகள் சுழிவுகள்

நெஞ்சம் புடைத்த வீரர்கள்
வரிசையாய் வாத்துக்கள்
வளைவுகள் சரிவுகள்
மாலைகள் மனிதர்கள்
மாடங்கள் மேடைகள் திண்டுகள்
பூக்கள் கொடிகள் குடைகள்
பறவைகள் தேர்கள்,
இத்யாதிகள்.

அடுக்கடுக்காய்
நெருக்கமாய்
வரிசையாய்
நடுவிலும்
சுற்றிலும்
மேலும்
கீழும்.

இத்தனைக்கும் மேல்
சேட்டுக்கடை இனிப்பின்
சதுரங்கள் போர்த்தி
திரண்டெழுந்த மேடை

அதன்மேல்
வட்டக் கிரீடம் வைத்து
கூரிய முனைகொண்ட
கூம்பின் கீழ்

தலைகீழாய் மூடிக் கவிழ்த்து
ஆண்டுகள் பலநூறு
ஆன பின்பும்

பளபளப்பு மங்காத
பித்தளை கும்பாக்கள்
சுமார் பதிமூன்று

மற்றும்
அவற்றுள்
பயன்பாட்டில் இல்லாத
பழைய தானியம்,
கொஞ்சம் போல.

இதென்ன பிரமாதம் என
தொலை நோக்கியில்
அலட்சியமாய் பார்க்கையில்

ஏதோ ஒரு
வரிசையின் இடுக்கில்
மேளம் கொட்டும் சிற்பமாய்
முறைத்து நிற்கும்
ஒரு மீசை மனிதர்

அவர் மார்பில்
மாலைகள்,
நகைகள்
பூக்கள்
ஆ..ஆ…

!

நினைவு – ஏ. நஸ்புள்ளாஹ் கவிதை

ஏ. நஸ்புள்ளாஹ்

நினைவு நகர்ந்து நகர்ந்து
கடலில் இறங்குகிறது

எனது படுக்கையறையிலிருந்து
நழுவிய நினைவு அது

பால்யம் தாழ்ப்பாள் இட்டுக் கொள்ள
பிரிந்து
ஒதுங்கிய நினைவு அது

இரவைக் கடப்பதைப் போல
அல்லது
ஒரு கடலைக் கடப்பதைப் போல
நினைவைக் கடக்க முடியவில்லை

நினைவோடு சேர்ந்து
நானும் கடலில் இறங்குகிறேன்

இச்சம்பவத்தை மேசைமீது
வைத்திருக்கிறேன்
முடியுமானவர்கள் கவிதை எழுதிக் கொள்ளுங்கள்.