கவிதை

இயற்கை அழைக்கிறது

எஸ் வீ. ராஜன்.

அலங்கரித்து
வண்டீர்க்கத்
தயாராய் நின்ற
பூச்செடிக்கு
பனிமுத்தமிட்டுச்
செல்லும்
ஐப்பசி
அதிகாலை.

இளம்சிவப்புச்
சூரிய வட்டத்தின்
குறுக்காக
நிழல்கோடிட்டபடி
கடந்து செல்லும்
அழகைக்கவனியெனும்
பறவைக்கூட்டபவனி.

குளக்கன்னத்தில்
குழிவிழக்
குதித்துக்களிக்கும்
தவளைக்கு
பயந்தார்ப்போல
தாமரையிலைமேல்
தவ்வியேறும்
நீர்த்திவலை.

இதையெல்லாம்
பார்ப்பதற்கே
சீக்கிரம்
எழுப்பிவிட்டதாய்
சொல்லத்தெரியாத
என்
இயற்கை அழைப்பு.

வேதம் ஓதும் சாத்தான்

ஜிஃப்ரி ஹாஸன்

இந்த இரவுகள் என்னை
அவளிடமிருந்தும் அந்நியப்படுத்தியுள்ளன
அருகருகான உறக்கத்தில்
ததும்பும் பேரின்பத்தை
எதிர்பார்த்த கண்களிலிருந்து கசியும்
ஏகாந்தம் அறை முழுதும்
வியாபகங் கொள்கிறது

ஆ.

இந்தப் பொழுதுகள்
மகிமைக்குரியன
இந்த இரவுகள் வணக்கத்துக்குரியன
இறை காதல் கொண்டு
துயிலில் அரற்றுகிறாள் அவள்.
தவம் பூண்ட சந்நியாசியாய்
படுக்கையின் ஓரங்களில்
ஆணி அடித்து அறையப்பட்டிருக்கிறது
என் உடல்
எனினும்
ஆன்மா சாத்தானின் குகைக்குள்
ஒடுங்கித் திரிகிறது

இ.

வேதத்தை ஓதி
இறை காதலனாய் ஆகவும்
அவன் மீது தீராக் காதல் கொண்டு
ஒரு சூபியாய் உரு மாறவும்
இந்த சலனமற்ற கருப்பு இரவுகளில்
என்னைப் பணிக்கிறாய் நீ
நான் சாத்தானின்
உணர்வுகள் கொண்டு
இறை காதலை எப்படி அடைவேன்?

ஈ.

புனிதப்படுத்தப்பட்ட நாட்களில்
என்னை உதறித் தள்ளியபடி
இருள் சூழ்ந்துவிட
இந்த அறை எங்கும் அவள் மவுனத் தவம்
உறைகிறது.
அலட்சியப்படுத்தப்பட்ட
என் அன்பின் ஆழமான வார்த்தைகளை
ஒரு மவுனத்தால் வென்று விட்டவள் நீ
உயிரின் ஆழம் அவாவி எழும்
என் தவிப்பை இறை காதல் கொண்டு
நிரப்புகிறாய் நீ

இந்த நாட்கள் மகிமைக்குரியன
இந்த இரவுகள் வணக்கத்துக்குரியன
நம்மைச் சூழும் இருட்டின் கருமையிலும்
பிரகாசிக்கின்றன
உன் சொற்கள்

வேதத்தின் சொற்கள்
இருட்டை விரும்புவதில்லை!

பிரக்ஞை

பெ. விஜயராகவன்

காலைப் பொழுதின் மழைத்தூறலில்
மிக ஞாபகமாய்
கக்கத்தில் மடங்கிய குடையுடன்
மெல்ல நிதானித்து நடக்கும்
நரை கூடிய கிழவன் நடையில்
காண்கிறேன்
பிரக்ஞையின் பெருவெளித் தடத்தை.

ஒரு சிவப்பு பாட்டில்

அதிகாரநந்தி

img_20161103_170038-01

என் முன்னே இருக்கும்
இந்தச் சிவப்பு பாட்டில்
ப்ரான்ஸில் செய்யப்பட்டது
ரத்தம் மாதிரி இருக்கிறதே நீர்
என்று ஓரோர் நாள் நினைத்ததுண்டு-
தொண்ணுற்று ஒன்பது ரூபாய்க்கு கொடுத்திருக்கிறான்
அதுவும் ப்ரான்ஸிலிருந்து. ரத்தம்தான்,
ஆனால் யாருடையதோ.

சண்டமாருதம்

ஸ்ரீதர் நாராயணன்

koothu1

பூசிய சந்தனமும்
வீசிய அரிவாளுமாக
வெறிகொண்டு எழுகிறது
துடியான முனி.

துள்ளி ஆடுகிறது
எகிறிக் குதிக்கிறது
இரத்தம் கேட்கிறது
துடியான முனி.

சன்னதம் கொண்ட
சண்டமாருதமென
புறப்படுகிறது வேட்டைக்கு
துடியான முனி

வழியில் குறுக்கிடும்
ஆடு அகப்பட்டால்
ஒரே போட்டில் போட்டுவிடும்
துடியான முனி

எதிரில் வந்து நின்ற
அடுத்த ஊர் சாமியை
நாக்கை துருத்தி
நின்று பார்த்துவிட்டு
எல்லையைச் சுற்றிக் கொண்டு
திரும்பி ஓடுகிறது.

Image courtesy சொல்வனம்