கவிதை

..என்று இருந்திருக்கலாம்

ஸ்ரீதர் நாராயணன் 

the_warmth_of_nostalgia
அத்தனை நொடிகளுக்கு
நிலைகுத்தியது போலிருந்த
பார்வையின் நேசம்
அப்போது புரியாமலிருந்திருக்கலாம்.

பொருள் புரிந்தபோது
எடுத்து சொல்வதெப்படி எனத்
தெரியாது மலைத்திருந்திருக்கலாம்.

அப்போதே பதிலிறுத்து
பருவத்தே செய்த பயிரென
இன்னுறவை இன்பமாய்
பேணியிருந்திருக்கலாம்.

கலப்பில்லா அன்பென
வீசிவிட்டு சென்ற வெம்மையை
நினைத்திடும் கணமெல்லாம்
உணரமுடியாமல்

இப்போது
தணிந்து உலர்ந்தும்
போயிருந்திருக்கலாம்

அணைதல்

சரவணன் அபி

கண்கள் எரிய

பார்த்துக் கொண்டிருந்தேன்

வெளியும் இருளும்
கலங்கிக் குழம்பி
வண்ணங்கள் மறைந்து தோன்றி
வடக்குவான் ஒளித்திரையின்
நினைவையழிக்கும்
குழப்பச் சித்திரம் போல்
நிறமற்ற நிறம்
ஒளியற்ற ஒளி

தெளிவைத்
தேடவும் தோன்றா
சுயஅழிவின் கவர்ச்சி

திரைவிலக்கி இருள்கூர்ந்து
ஒற்றைச்சுடர் ஒளிர்வில்
நிலைக்கக் கண்டேன்

ஒரு சுடரின் மறுச் சுடர் –
ஓராயிரம் சுடரூட்டுதல்
உயர்வன்றி வேறென்ன

மகளின் சித்திரங்கள்

ஜிஃப்ரி ஹாசன்

சித்திரம் போல் எதையோ
வரைந்து கொண்டிருக்கிறாய்
எவரும் கண்டுகொள்ளாத
உன் ஓவியத்தில் உயிரோட்டத்தையும்
அன்பையும் காண்கிறேன்
ஏற்றுக்கொள்ளப்பட்ட எல்லா வரையறைகளையும்
உன் கோடுகள் மீறியுள்ளன
இதயங்களை சுண்டி இழுக்கும்
நிறப் பூச்சுக்கள் அதில் இல்லை
எனினும் அதில் உன் துடிப்பான கனவுகளும்
வேட்கையுமுள்ளன
காகிதங்களில் பட்டாம்பூச்சிகளைப் போல்
நீ எதையோ கிறுக்குகிறாய்
நான் இப்போதெல்லாம்
நிஜப் பட்டாம்பூச்சிகளை இரசிப்பதே இல்லை
பூக்களை நீ வரைகிறாய்
காகிதங்களில் ஒரு நந்தவனத்தின்
வாசனை ஒட்டிக் கொள்கிறது
ஏதோ ஒரு மனித உருவைக் கிறுக்கி விட்டு
“தந்தையே, நான் உங்களை வரைந்துள்ளேன்“
என்கிறாய்
எனது புகைப்படத்தைக் காட்டிலும்
என்னை அது துல்லியமாய் காட்டுவதாக
உணர்கிறேன்
நம் வீட்டின் சுவர்களை
உன் கிறுக்கல்கள் அசிங்கப்படுத்தியிருப்பதாய்
சொல்லப்படும்போது
அவை அலங்காரங்கள் என
தயக்கமின்றிச் சொல்கிறேன்
நீ நினைக்கிறாயா?
உனது கிறுக்கல்களுக்கு
என்னைப் போல் ஒரு இரசிகன் கிடைப்பானென்று

புலரி

சிகந்தர்வாசி

கடற்கரையோரம் உட்கார்ந்துக்கொண்டு
அவன் கால் தடங்களை பார்க்கிறான்

சம்ஸார சாகரத்தில் ஒரு துளி ரத்தம் போல்
நீர் மேல் காலைச் சூரியன்

கண்ணுக்கு தெரியாத இலக்கை
நோக்கிப் பறக்கும் ஒற்றைப் பறவை

அவன் எழுந்து நடக்கிறான்

காலதேவன் மெல்லிய காற்றாய்
கால் தடங்களை அழிக்கத் துவங்குகிறான்

கிழக்கு வெளுக்கிறது

நெடுமரம்

ஸ்ரீதர் நாராயணன் 

 

tree-life-18184847

என் வழியில் நின்று கொண்டிருக்கும்
நெடுநெடுவன உயர்ந்திருக்கும் விருட்சம்.

இலைஇலையாக விரித்து
என்னைப் பற்றியிழுக்கிறது.
கிளைகிளையாகப் பற்றி
மேலேறுகிறேன்.
கணுக்கணுவாய் பிளந்து
கையில் எடுக்கிறேன்.
துகள்துகளாக்கி தொகுத்துக் கொள்கிறேன்.
செதில்செதிலாக சிதறடித்து
சேர்த்து எடுக்கிறேன்.

அள்ளிஅள்ளி உண்டு
ஆற்றல் பெருக்குகிறேன்.

நிமிர்ந்து எழுந்து வேரூன்றி
கிளைகள் பரப்பிக் காத்திருக்கிறேன்,
நீ கொண்டுவரும் கோடலிக்கென.

 

Picture courtesy: Deviant Art