–வெ கணேஷ்–
“நான் எண்ணற்ற பௌத்தர்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் தான தர்மங்கள் செய்கிறேன்; பல புத்த கோயில்களுக்கு நிவந்தங்கள் அளிக்கிறேன். இத்தகைய செயல்கள் எனக்கு என்ன மாதிரியான நல்-விளைவுகளைத் தரும்?” என்று அரசன் கேட்டபோது தயக்கமோ, முதன்முதலாக தென்- சீனாவின் பேரரசனைச் சந்திக்கிறோம் என்ற வியப்புணர்வோ இல்லாமல் அந்த அயல்நாட்டு பௌத்தர் மறுப்பது போல் தலையசைத்து, “ஒரு விளைவும் தராது” என்றார்.
அரசன் நெற்றி சுருக்கினான்; பிறகு சுதாரித்துக் கொண்டு வினவினான். “புத்தர் இருக்கிறாரா? அவரைக் காணுதல் சாத்தியமா?”
இம்முறை போதி தர்மர் பதிலளிக்கச் சில வினாடிகள் எடுத்துக் கொண்டார், “இல்லை”.
போதி தர்மரின் பதில்கள் அரசனுக்குச் சினமளித்தன. “என் முன் நில்லாதீர். இங்கிருந்து எங்காவது சென்று விடுங்கள்,” என்று அவன் ஆணையிட்டதும் போதி தர்மர் புன்னகைத்தார். அவர் உதடுகள் திறந்த மாதிரி தெரியவில்லை என்றாலும் உள்ளுக்குள் ஒரு பதற்றமுமில்லாமல் அவர் சிரித்துக் கொண்டிருக்கிறார் என்பதை அவரின் விழிகள் சபையோருக்கு உணர்த்தின. (more…)
