‘நேத்து நம்ம துரையைப் போட்டு சாட்டிப்புட்டாங்களாம்ல. பசங்க சொல்லலயா?’
பெரிய நூல் உருண்டையை பிரித்து நுனியை நீட்டி, கரைத்து வைத்த நீலத்தில் முக்கியெடுத்தபடிக்கு இருந்த தயாளன், குமரப்பெருமாளின் அரவம் கேட்டதும், நூலை அப்படியே தரையில் கிடத்திவிட்டு கைகளை விரித்துக் கொண்டு பேசத் தொடங்கினார்.
நீண்டு கிடந்த போர்ட்டிகோ நிழலில் சுவரோரமாக சாய்த்திருந்த 5 X 8 சைஸ் பலகையில் ‘ஜெயரேகா ஹாஸ்பிடல் செல்லும் வழி’ என்று சைன் போர்டு எழுதுகிற வேலை. நீலத்தில் நனைத்த நூலை போர்டுக்கு இருமுனைகளிலும் இழுத்துப் பிடித்துக் கொண்டு சுண்டிவிட்டால் குறுக்கும் நெடுக்குமாக கோடுகள் விழும். அந்தக் கட்டங்களில் பென்சிலால் மெலிதாக எழுத்துகளை வரைந்துகொண்டு வண்ணம் தீட்ட வேண்டியதுதான். அரசரடி பேருந்து நிறுத்தத்தில் ஒன்று. அடுத்து காளவாசல் முக்கு. அப்படியே இடதுபுறம் பைபாஸில் திரும்பினால் சொக்கலிங்க நகர் முனை. தாஸ் டீக்கடை ஒட்டி வலதுபக்கம் திரும்பினால் முனியப்பன் கோவில் வாசலில் ஒன்று. (more…)
