சிறுகதை

சீர் – கமல தேவி சிறுகதை

கமல தேவி

மழை பெயருக்கு பெய்திருந்த முன்மதியம். மண்ணில் விழுந்து காய்ந்த துளிகளின் தடங்களின் மேலிருந்த சில பாதங்களைப் பார்த்தபடி அமுதா வாசல் படியில் அமர்ந்திருந்தாள். எதிர்த்தத் திண்ணையில் இரண்டு குழுக்களாகப் பிரிந்து வாயசாளிப் பாட்டிகளும், அம்மாக்களும், எதிர்வீட்டுஅய்யாவும் அடுத்தத் தெரு மாமாவும் தாயம் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

செல்லத்தின் குரல் கிழக்கே தெரு முடக்கில் தெளிவில்லாமல் கேட்டது. பதறியக் குரலாக இருக்கவும் அமுதா சட்டென எழுந்தாள். அதைப்பார்த்த எதிர்வீட்டய்யா, “என்னம்மா,” என்றார். சரியாகத் தெரியாமல், “ஒன்னுமில்லங்கய்யா,” என்றாள்.

குரல் நெருங்கி வந்ததும், “செல்லத்துக் குரல் கேக்கல,” என்றாள்.

தாயக்கட்டைகளை நிறுத்தி கூர்ந்தப்பின், “ஆமா… என்னன்னு தெரியலயே,”என்று எழுந்து தெருவின் நாற்சந்திப்பில் நின்றார்கள். ஒருப்பக்கம் துப்பட்டா வீதியில் இழுபட  வெள்ளய்யன் தாத்தா வீட்டில் பேசிவிட்டு விடுவிடு என்று வந்தாள்.

“நா என்னத்த செய்ய? எங்காளுக்கிட்ட என்ன பதில் சொல்றது?”என்று அழுதபடி வந்தாள். மேற்கு பக்கம் நின்றவள் நகர்ந்து வடக்குப் பக்கமாக நின்றாள்.

அய்யா கொஞ்சம் முன்னால் வந்து, “என்னாச்சு… பதறாம சொல்லு,” என்றார்.

செல்விஅம்மா, “கன்னுக்குட்டி எங்கடி,” என்றாள். மீண்டும் திரும்பி நின்று தலையைத் தடவிவிட்டுக் கொண்டாள்.

செல்லம் மூச்சு வாங்கியபடி அய்யாவிடம், “மாமா… கன்னுக்குட்டிக்கு தடுப்பூசி போட்டுக்கிட்டு பாலம் வர வந்துட்டேன். கன்னுக்குட்டி ஆத்துல பூந்துருச்சு,” என்றாள்.

“யாரையாச்சு கூப்பிட வேண்டியது தானே..” என்றபடி அவர் முன்னால் வந்தார்.

“அக்கம் பக்கம் ஆளில்ல மாமா. ஆத்துல எறங்கி பின்னாலயே ஓடுனா, அது ஓட்டத்துக்கு என்னால முடியல. மேல வயல்ல ஏறி மறஞ்சிருச்சி. கள்ளுக்கட முடக்குல ஆளுகளப் பாக்கவும் ஓடியாந்து சொல்லி அவங்க பைக்குல கொஞ்ச தூரம் பாத்துட்டு வந்துட்டாங்க..” என்றபடி இடையில் கைவைத்து குனிந்து வளைந்து நின்றாள்.

“ஜல்லிக்காளையில்ல… என்னப்புள்ள நீ..”

“அவன் அதுக்கு மீறின ஐல்லிக்காள. என்னப் பண்ணப் போறியோ?”

“ஆம்பிளயள போவச் சொல்லாம உனக்கதுக்கு?” என்ற பங்காரு அத்தை குரலை கடுமையாக்கினாள்.

“அதுதான் இன்னிக்கு நாளக்குன்னு பெரும்போக்கா இருக்கவும் நா போனேன்,”என்ற செல்லத்தின் குரல் வெட்டி வெட்டி நின்றது.

“குமாரு எங்க?” என்ற பூஞ்சோலை அம்மா வடக்குப் பாதையைப் பார்த்தாள்.

“அதுக்கு போன் பண்ணி கள்ளுக்கட முடக்குக்கு வந்துருச்சு. தேடிப் போயிருக்கு,”

“அடிச்சானா..” என்று சின்னசாமிமாமா குரலை தாழ்த்திக் கேட்டார்.

“ம். அங்கனயே.. ஆளுங்க வந்து தடுத்துட்டாங்க,” என்படி குனிந்து அழுதாள்.

“பின்ன கொஞ்சுவானா?” என்ற கிழவியின் குரலால் அமைதியானார்கள்.

“இன்னிக்கு அந்தக் கன்னுக்குட்டி என்ன வெலக்கி போகும். பொழப்புல கருத்து வேணாம். என்னத்த எழவு இந்த காலத்துப் பிள்ளங்க வெவரமும் பொழப்பும்,” என்று மணியக்கா சொல்லிக் கொண்டிருக்கையில் கலைந்தார்கள்.

அமுதா, “அது போனதுக்கு நீ என்ன பண்ணுவ… பேசாம இரு. ரெண்டு நாளில வேகம் குறஞ்சிரும். என்னப் பண்றது… நாம நெனச்சா நடக்குது,” என்றாள்.

படியாக போட்டிருந்த அகன்ற கருங்கல்லில் அமர்ந்தாள். ஆளாளுக்கு பேசிவிட்டு விட்ட இடத்திலிருந்து தாயத்தை தொடர்ந்தார்கள். வழியில் வந்தவர்கள் போனவர்கள் என்று அனைவருக்கும் செல்லம் ஒரே பதிலை சொல்லிக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு வயிற்றில் பசி எரிந்தது. எந்த நேரத்திலும் யாரும் வந்துவிட்டால் என்ன செய்வது என்று சோற்றுக் கிண்ணத்தைப் பார்த்தபடி தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் கல்லில் அமர்ந்தாள். பக்கவாட்டில் குந்தாணியில் அமர்ந்த காகம் தலையைகுனிந்து எடுத்துத் தின்றது.

மதியம் கடந்து வெயில் இறங்கிக் கொண்டிருந்தது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அலைபேசியை எடுத்தாள். வரும் வழியில் காலில் கல் குத்திய இடத்தை தடவிவிட்டபடி இருந்தாள்.

“கன்னுக்குட்டி பத்தி ஏதாச்சும் தெரிஞ்சுதாய்யா…”

“…….”

அலைபேசி நின்றதும் செல்லம் உதட்டை வளைத்தபடி அதை பக்கத்தில் வைத்தாள். மணியைப் பார்த்தாள். பிள்ளைகள் வரும் நேரம். சட்டென்று எழுந்தாள். தகரக்கதவை ஒருக்களித்து வைத்து அப்படியே இருக்க அகல கல்லை பின்னால் முட்டுகொடுத்துவிட்டு அலைபேசியை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

உள்கதவை ஒருக்களித்து வெளியில் பார்க்கும்படி நான்று அவசர அவசரமாக வெறும் சோற்றை அள்ளித் தின்றாள். தண்ணீர் குடிக்கையில் வண்டி சத்தம் கேட்கவும் கிண்ணிய மூடி வாயைத் துடைத்தபடி வந்தவள் தாழ்வாரத்திலிருந்த கருங்கல் தொட்டி நீரில் கையை அலசி துடைத்துவிட்டு வெளியே வந்தாள்.

“என்ன வேலய பண்ணித் தொலச்சிருக்க…” என்று கையை ஓங்கிக்கொண்டு வந்தவனை உடன்வந்த பயல்கள் பிடித்துக் கொண்டார்கள்.

“உங்கண்ணன் பொங்கலுக்கு சீராக் குடுத்ததுன்னு சீராட்டி வளத்தது இப்படி தர்மத்துக்கு ஓட்டிவிடத்தானா..” என்று கத்தினான்.

செல்லம் அசையாமல் நின்றாள். அவன் கத்திக் கொண்டிருந்தான்.

“நான் என்னப் பண்றது.. ஆள ஒருஇழுப்பு இழுத்து விட்டுட்டு ஓடிருச்சு. தடுமாறி பின்னால ஓடறதுக்குள்ள அது ஆத்துக்குள்ள நிக்குது. பின்னால ஓடி கன்னுக்குட்டியப் பிடிச்சவங்க யாரு?”

குமார், “நல்லா பேசு… இரு ஒனக்கு இருக்கு,” என்றான்.

பப்புலு அண்ணனுடன் ஓட்டமும் நடையுமாக வந்தாள்.

“ம்மா…மாமா ஊர்க்கு போலாமா,” என்று திருந்தாத மொழியில் கேட்டாள்.

“ஆமா…அது ஒன்னுதான் குறச்சல்,”என்று அவள் முதுகில் ஒன்று வைத்தான். அவள் வீல் என்று கத்தவும், அவள் அண்ணனும் சேர்ந்து அழுதான்.

“அந்தட்டம் போவல தூக்கிப் போட்டு மிதிச்சுப்புடுவன்,” என்று அவன் கத்திக் கொண்டிருக்க, பக்கத்து வீட்டிலிருந்து அவன் அக்கா வந்து பிள்ளைகளை தூக்கிக்கொண்டு போனாள்.

“த்த ப்பா அடிக்குது,”என்றாள்.

அத்தை, “செவல காணாமப் போச்சுடி,”என்றாள்.

“அது தண்ணிக் குடிக்க வந்துடும்,”என்ற பப்புலு இடையிலிருந்து இறங்கியபடி, “அப்பா அடிக்குதுன்னு அங்க போச்சா,”என்று கையை தூக்கிக் காட்டினாள்.

வெளியில் நடராசு ஆசாரியார், “டேய்…பழகுன கன்னுக்குட்டி காத்தால வந்துடும்,” என்றார்.

“அது என்ன நாய்க்குட்டியா வரதுக்கு,” என்றான். கன்று காணாமல் போன இடத்திலிருந்து முன்னப் பின்ன பக்கத்து ஊர்களில், வயல்காடுகளில் விசாரித்தான். ஒருவரும் கன்றை பார்த்ததாகக்கூட சொல்லவில்லை. வயல்காட்டுக்குள்ளயே போயிருக்கலாம் என்று சிலர் சொன்னார்கள். “ஒத்தக் கண்ணுலக் கூடவா படல,” என்று உடன்வந்தப் பயல்கள் சொல்லவும் ஆற்றுக்குள் இறங்கி ஆனமட்டும் தேடிவிட்டு வந்தார்கள்.

காலையில் வந்தால் ஆளைத் தேடும் என்று குமார் வயலில் போய் படுத்துக் கொண்டான்.

அதிகாலையில் அமுதா வாசல் தெளித்து கூட்டுவதற்காக தென்னம்மார் துடைப்பத்தை இடது உள்ளங்கையில் தட்டி சரிசெய்தாள். செல்லம் வாசல் தெளித்துவிட்டு கல்லில் உட்கார்ந்தாள். மெலிந்த தேகம் அவளுக்கு. கல்லூரிக்கு போகும் வயதில் பிள்ளைகள் பிறந்துவிட்டார்கள். செல்லத்துக்கு ஊரறிந்த காதல் கல்யாணம்.

சொந்தத்தில் கல்யாணத்தில் பார்த்த இவனைத்தான் கட்டிக்குவேன்னு வயசு பதினெட்டாக காத்திருந்து கல்யாணம் செய்து கொண்டதை நினைத்துக் கொண்ட அமுதா, “என்னாச்சு செல்லம்,” என்று கேட்டாள்.

“நேத்து சரியா சோறு திங்கல. நடுராத்திரி வர அந்தாளு பேசிக்கிட்ட இருந்துட்டு வயலுக்கு போயிருக்கு”

“கன்னுக்குட்டி வந்துரும் . மனசப்போட்டு குழப்பிக்காத. உங்கண்ணன் கல்யாணம் நாளக்கு தானே. போகலியா?”

இல்லை என தலையாட்டியபடி செல்லம் பெருமூச்சு விட்டாள். எழுந்து வாசலைக் கூட்டினாள்.

இருவரும் தெருவிளக்குக்கடியில் கூட்டிக்கொண்டு நெருங்கி வருகையில் நிமிர்ந்து நின்றார்கள். தெருவில் யாரும் விழிக்கவில்லை. ராசு தாத்தா மட்டும் டீ க்கடைக்கு போய்க் கொண்டிருந்தார்.

“வறக்காப்பியாச்சும் போட்டுக்குடி செல்லம்”

“பப்புலு ராத்திரி பசிக்குதுன்னு அழுதா. வறக்காப்பி ரெண்டு கிளாஸ் குடிச்சா.. மிச்சம் இருக்கு,” என்றாள்.

“அண்ணன் கல்யாணத்துக்கு போகனுமேன்னு இருக்கா?”என்று தோளில் கைவைத்தாள்.

“நீ வேறக்கா. என்னயவிட நொந்து போவியாட்டுக்கு,”

“இல்ல… அண்ணன் கல்யாணம்ன்னா ஆசதானே,” என்று கையை எடுத்துக்கெண்டாள்.

“கட்டிக்கிட்டு வந்தப்புறம் அண்ணன் கல்யாணம்ன்னாலும் சீரோட போனாதான் எல்லாம்..”

“எதும் வாங்கலியா?”

“எதுவும் வாங்காட்டி பரவாயில்லயே. எங்கண்ணங்கிட்ட வாங்கின கடன கல்யாண செலவுக்குக் கேட்டா, எங்காளு குடுக்காம எகத்தாளம் பேசுது. என்னால கூடப் பொறந்தவன் மூஞ்சியில முழிக்க முடியல. அதான்…”என்றபடி சுற்றிலும் ஒரு நோட்டம் விட்டாள்.

“அதான்.. அநியாயக்காரனுக்கு என்ன நியாயம்ன்னு நேத்து அண்ணன ஆத்துக்குள்ள நிக்க சொல்லி கன்னுக்குட்டிய ஓட்டிவிட்டுட்டேன்”

“ஐய்யோ… யாருக்கும் தெரிஞ்சுட்டா…”

“அண்ணன் ஆத்தோட கொண்டு போய் வித்து காசாக்கிருச்சு,” என்றபோது மேற்கால வீட்டுக்கதவு திறந்தது. செல்லம் குனிந்து கூட்டியபடி நகர்ந்து உள்ளே சென்றாள்.

“கூட்டிட்டு எடுப்பியா.. இந்நேரத்துல சாவகாசமா நின்னுக்கிட்டு. இந்த சந்தில சங்கிலிகருப்பன் ஓட்டம் இருக்குல்ல,” என்று மேற்கால வீட்டு அம்மா அமுதாவை விரட்டினாள்.

வானில் மெல்லிய ஔி பரவிக்கொண்டிருந்தது. கதவுகள் திறக்க அரைமணியாகும்  என்று நினைத்தபடி கோலத்தை வரைந்துவிட்டு எழுந்து பெருமூச்சு விட்டபடி செல்லத்து வீட்டைப் பார்த்தாள். கூட்டிப்பெருக்கிய வாசல் சந்தடியின்றி அரையிருளில் தெரிந்தது.

 

 

 

மூணு வார்த்த – ந. பானுமதி சிறுகதை

பானுமதி. ந

துல்லிய நீல வானம். மேற்கே பதுங்கும் சூரியன். மேகப் பூங்கொத்துக்களில் செந்தீ. ஊளையிடும் வடக்குக் காத்து. ஆறின் கடல் சங்கமம். பாறைகளில் சலம்பும் ஒலி. சிதறிப் பரவிய கூழாங்கல். செம்போத்து நாரையின் கேவல். படபடக்கும் சிறகோசைப் பறவைகள். குரலோசையால் எழுத்து நின்றது.

‘பறக்கற குருதைல முனி.காவ நிக்கும் தேவரு.அவரு செனந்தா அம்புட்டுத்தான். ரத்தம் பாக்காம ஓயாது. வாலிபம் மதத்து நிக்குது. அவரு என்னேரமும் குமரு. ஜல்லுங்குது கால்ல சதங்கை. சேணத்தில கொடி சொருகியிருக்காப்ல. கறுப்பு பட்டு உடுத்தியிருக்காரு. மேல நீலச் சட்ட. விர்ருங்குது சாட்டைக் கம்பு. உறுத்துப் பாக்குது விழி. செவப்பா நாக்கு காங்குது. ரத்தம் குடிச்ச வொதடு.வெடச்சு நிக்குது காது. வெள்ளாட்டுப் பாலின் வீச்சு. ராப்போதுல சுத்தி வாரான். நெலா வானத்ல ஒளிஞ்சுகிச்சு நாய்க்கெல்லாம் மூச்சு போச்சு. பூதமெல்லாம் பம்மி வருது.”

‘‘அய்யோ, நிறுத்தேன் முத்தம்மா’’

‘நம்மத் தேவரு மக்கா’

‘‘எனக்கு கேரா இருக்கில்ல’’

‘இதுக்கேவா பாட்டுப் படிக்கற’

‘‘பொறவு எதுக்கு சொல்லுதாக’’

‘அவுக உலா வந்தாயளா?’

‘‘விடமாட்டீயளா, ரவைப் போது’’

‘அந்தக் காச்சிய கண்டாக’

‘‘என்னத்த அப்படி கண்டாக?’’

‘என்னான்னு சொல்ல மக்கா’

‘‘சொல்லாம நிப்பாட்டிப் போடேன்’

‘அதுக்கா வந்து நிக்கேன்’

‘‘வம்பு வலிக்காம முடியல்ல’’

‘செட்டியாரு சம்சாரம் வந்தாக’

‘‘சிலுக்கப்பட்டி சின்ன மீனாளா’’

‘இலுப்பைக்குடி எங்கிட்டு வரும்?’

‘‘மேலே சொல்லு ஆத்தா’’

‘புனுகு அடிச்சு வீசுது’

‘‘ராவைக்கு அது என்னாத்துக்கு?’’

‘வாசம் வளச்சுப் போவுது’

‘‘தாக்கம் அப்படி போச்சாக்கும்’’

‘சிலும்பிட்டு நிக்கான் சிங்கம்புணரி’

‘‘யாரு அவுக நொழையறாக?’’

‘முனி பாக்க நொழயலாமா?’

‘‘அப்ப சேதம் ஏதுமா?’’

‘பொறவு? அடிச்சுப் போட்டகள்ள’

‘‘யார, ரண்டு உசிருமா?’’

‘ரத்தம் கக்கி செத்தாக’

‘‘போலீசு கேசு உண்டுமா?’’

‘முனிக்க சட்டம் உண்டுமா?’

‘‘அப்ப செட்டியாரு தப்பிச்சாரு’’

‘கேனப் பேச்சு மக்கா’

‘முனி முனைஞ்சா நிக்குமா?’

எழுத்திலிருந்து குதித்து நின்றாள். ஒரு முனி வேண்டும். சலம்பலைச் சாடும் முனி. சுவடில்லாத கடுங்காவல் அரசன். கருங்குதிரை ஏறும் காவலாள்.

“அப்ப,சேவுகன் செத்தானே?’’

‘அவன் கத வேற’

‘’பாவாட இல்லியா காரணம்?”

‘அது அப்பாவிப் புள்ள’

“பொறவு ஏன் செத்தாரு?’’

‘அவளுக்கு கன்னி கழியல்ல. சொய சுகம் கண்டுகிட்டா. பசிச்சா சோறு வேணுமில்ல? எம்புட்டு பட்டினி கிடக்க? யாரு கைய இழுத்தா? எவ குடியக் கெடுத்தா? களவாடி வாச இருக்கில்ல; யாருமில்லன்னு அதுல பொரண்டுட்டா. சேவுகன் அதப் பாத்துட்டாரு. அவள வப்பாட்டியா கேட்டிருக்காரு. த்ராணி செத்த மனுஷன். அவ போய்யான்னு ஒதுங்கிட்டா. இவருக்கு வஞ்சம் புடுங்கிச்சு. அக்கம் பக்கம் சொன்னாரு. கள்ளச் சிரிப்பு சிரிச்சாரு. பாவாடய ஊரே தொறத்திச்சு. நிம்மதியா கொறட்ல தூங்குனாரு. மக்காநா மசானம் போய்ட்டாரு’

“இதுவும் முனிக்க வேலயா?’’

‘பொறவு? நெனெச்சா செஞ்சிடுவாரே?’

இப்ப முனி எங்கேயிருப்பாரு? எழுத்தில் எழும்பியவள் நினைத்தாள். குதிரையில் மாப்பிள்ளை ஊர்வலம். சைலி அவசியம் என்றார்கள். கையிருப்பு பட்டாக வடிவெடுத்தது. சொத்து நகையாக மின்னியது. பெருமை பந்தியாய் இறைந்தது. பொருத்தமின்மை பார்வைகளில் சிரித்தது. லாங்ஷாட் புகைப்படங்களில் அவர்கள். காணொலிகளில் பக்கவாட்டுத் தோற்றம். எப்படி இணைந்தது புரியவில்லை. ஹோமத்தீயில் இரும்பை உருக்குவார்களா? சுடாமல் சுட்டுவிடும் எரியோ?

“முத்தம்மா, இன்னும் உண்டுமோ?”

‘ஏகமா கொட்டிக் கிடக்கு’

“அல்லாம் ஒழுக்க மாட்டாக்கும்?”

‘பேர் சொல்லிக்கு நடந்தது அதில்ல’

“அவரு என்ன செஞ்சாரு?”

‘முனியுட பாதைல படுத்திருந்தாரு.’

“வீட்டுக்குள்ள வருவாரா தேவரு?’’

‘அவரு ஜட்ஜூ மக்கா, வீட்டில எட்டிப் பாக்காதவரு’

“அப்ப தெருவில படுத்திருந்தாரோ?’’

‘ஆமாங்கேன்,மேலக் கேளு; ராவுல வந்தாரா தேவரு. சதங்கைய ஓங்கி ஒலிச்சாரு. சாட்டையால பேர்சொல்லியத் தொட்டாரு. இவரு கொறட்ட விட்டிட்டிருக்காரு. கட்டிலோட கண்மாய்ல வச்சுப்புட்டாரு. காலயில ஊரே சிரிக்குது’

“குடியில அங்கன படுத்திருப்பாரு”

‘மக்கா,கோட்டி செய்யாதீஹ. தப்புன்னு கன்னத்ல போடு’

எழுத்தில் இறங்கியவள் சிரித்தாள். புனித நெருப்பில் ஆஹூதி.வாழ்த்திச் சிதறிய அக்ஷதை. மலர்களின் சிலிர்ப்பு மழை. அப்பாவின் கன்னங்களில் ஈரம். பகலில் பார்த்த அருந்ததி. பொருள் புரியா சடங்குகள். அக்குரல்கள் மீண்டும் ஒலித்தன.

“பகல்ல காங்குமா முனி?’’

‘சூரியத் தேவரு பகலுக்கு’

“அவரு காயறாரே அல்லாரையும்”

‘அது எச்சரிக மக்கா’

“இத்தன காவல் என்னாத்துக்கு”

‘மீறி வெளயாடயில புடிக்கத்தான்’

எழுத்தின் நாயகி திகைத்தாள். சிறு வயதின் பாடல். ஒரு குடத் தண்ணியில ஆமா, ஆமா, ஆமாம் ஒத்தப் பூ பூத்தது, இரு குடத் தண்ணியில ஓஹோ, ஓஹோ, ஓஹோ ரண்டு பூ பூத்தது. ஏழு குடத் தண்ணில… எருக்கு அல்லவா பூத்தது? ஏழுக்கும் எழும்பாப் பூ!

“அக்குறும்பா இருக்கு முத்தம்மா”

‘ஒண்ணொணுக்கும் வில இருக்கு’

“என்னா சொல்ல வர?”

‘அறம் பொழச்சா அரம். மாட்டினா அறுத்து வீசிடும். மாட்டாத வர பொழச்சுக்க. முனி மன்னிச்சும் போச்சு’

“அவருக்கும் கருண உண்டுமா?”

‘தெய்வத் தேவரு அவரு’

“மெய்யாலும் அப்படிச் செஞ்சாரா?”

‘மேக்கத்தி காத்து வீசிச்சு. நெலாவச் சுத்தி கோட்ட. அப்பமே ஊருக்கு தெரிஞ்சிரிச்சி. இந்திரனுக்கும் வருணனுக்கும் சண்ட. கொட்டிக் கவுக்குது மழ. கண்ணுல காங்கல பூமி. ஆட்டுக்கு கூளம் இல்ல; செம்பட்டி சந்த சரக்கு. நிகுநிகுன்னு கண்ணப் பறிக்கும். சின்னவனுக்கு அதான் உசுரு.மேய் மழ நிக்காம பேயுது. வய வரப்பு வேலயில்ல. காஞ்சு எரியுது வவுறு. முனிக்க நேந்த ஆடு. அதுவும் கத்துது பசியில. வவுறு எல்லாத்துக்கும் ஒண்ணுதான? ஈனமா கத்திகிட்டு நிக்குது. கண்ணுல தண்ணீ முட்டுது. தாளல வெட்டிப்புடுன்னு கேக்குது. அவுத்தா வெள்ளத்ல போயிறும். அது எங்களத் தின்னாது. நாங்க அதத் தின்னுட்டோம்.  பொறவு முனிகிட்ட அழுதோம். சாராயத்தோட மன்னிச்சு விட்டாரு’

எழுத்தின் நாயகி சிந்தித்தாள். அறமும், அறப்பிழையும், எதுவென்பது?

இனி என்ன செய்ய? ’மம ஜீவன ஹேது’. நம் வாழ்வின் பொருள். நாம் இணை என்றும். நம் வாழ்வின் நிறைவு. எரியின் தழலே சாட்சி. ஒருவரின் நிழலென வருவோம். இருவருமாக சபதம் எடுப்போம். காதலாகிக் கண்ணீர் மல்குவோம். ஒரே உணவை உண்போம். முதலடியில் பகிர்வது பலம். இரண்டில் துடிப்பைப் பகிர்வோம். செல்வம் மூன்றாவதில் சமனாகும். நாலில் மகிழ்வு பெருகட்டும். ஐந்தில் வாரிசு வளரட்டும். ஆறில் பருவம் மாறாதிருக்கட்டும். ஏழில் தோழமை பெருகட்டும். எழாப்பூவின் ஏழு அடிகள்.

அன்றும் நீல வானம். கற்பனை செய்த முதலிரவு. எண்ண வண்ணங்களில் திளைப்பு. நாடிகளில் பயம் ஓடியது. அன்னையும் தோழியும் அருகில்லை. இயற்கைக்கு இத்தனை செயற்கையா? கலவியும் கள்வமும் ஒன்றோ? தூக்கணாங்குருவி கட்டும் கூடு. பெண்ணிற்கு இல்லாத உரிமை. நிதானமாக அருகே வந்தான். ’எனக்கு உன்ன புடிக்கல’

குரல்கள் இப்போ கிசுகிசுத்தன.

“முனிக்கு கண்ணாலம் ஆயிட்டோ?”

‘ராச்சுத்தறவன எவ கட்டுவா?’

“மெய்யாலுமா சொல்ற, ஆத்தா”

‘கண்ணாலம் அவருக்கு என்னாத்துக்கு?’

“எல்லா சாமியும் பண்ணிருக்கே”

‘இவரு ஐயப்பன் அம்சம்’

“நீலா இருக்குதே கொட்டாய்ல”

‘பொற வாசலோட சரி. அவரு பொம்பளய இச்சிக்க மாட்டாரு’

“அது எப்படி ஆத்தா?’

‘மேக்கூரை வனைய விடாது. செனந்து செனந்து காக்கும். ரா முச்சூடும் சுத்தும். கண்ணாலம் கட்டலன்னா விடேன். அதுக்கு நாட்டமில்லன்னா விட்டுடணும்.’

நெருப்பை அணைத்த கண்ணீர்.

 

இங்குப் பேனா – பிரவின் குமார் சிறுகதை

பிரவின் குமார்

அந்த கடையை நெருங்கும் நேரம் மட்டும் படபடப்பும், அவசரமும் எப்படியோ உடலுக்குள் ஒட்டிக்கொள்கிறது. அத்திசை மட்டும் வேண்டாம்… கிடைக்காத ஏதோ ஒன்றை ரோட்டில் தேடிக்கொண்டு நடந்து போ…. இன்னும் கொஞ்ச தொலைவு நடந்தால் வீட்டிற்கு திரும்பும் சந்து… அதுவரை நிமிராதே… இப்பொழுது மட்டுமல்ல பனிரெண்டு வருடங்களாக மனதின் சொல்படி இணங்க மறுத்து காந்தலின் விசை ஈர்ப்பு போல் அந்த கடையின் பக்கம் திரும்புவதில் தான் ஒரு லயிப்பு உண்டாகிறது.

எனக்கு தெரியும் நான் வரும் நேரங்களில் சட்டையின் கை மடிப்பை உயர்த்திக்கொண்டும், எப்பொழுதும் அலங்கரிக்கப்பட்ட தலையை விறுவிறுப்பாக அலங்கரித்துக்கொண்டும் கடையின் வாசலில் வந்து நிற்கும் ஐசக் இப்போது இல்லை என்று. அன்னை மரியா சலூன் கடை கொஞ்ச வருடங்களாக காயத்ரி மளிகை கடையாக மாறிவிட்டிருந்தது. பல பொழுது அந்த மளிகை கடையில் பொருட்கள் வாங்கவேண்டிய தேவை இருந்தும் கூட அந்த கடைக்கு இதுவரை நான் சென்றதில்லை. நெற்றியை சொரிந்துகொண்டு நிற்கும் ஐசக்கின் முகத்தை அந்த கடையில் ஏதோ ஒரு மூலையில் தேடவேண்டி இருக்குமோ என்னும் பயம்.

வீட்டிற்கு திரும்பும் தெருவை வந்தடைந்ததும் அருகில் உள்ள மெடிக்கல் ஷாப்பில் என் மகளுக்காக ஹக்கீசும் எனக்காக நாப்கினும் வாங்கிக்கொண்டேன் நாப்கினுக்கு மட்டும் ஸ்பெஷலாக செய்தி தாள்களை அணிவித்து கொடுத்தார்கள். பள்ளி முடிந்து வீட்டிற்கு விரையும் மாணவர்களின் நடமாட்டம் அத்தெருவை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது. நானும் என் ஆசிரியர் பணியை முடித்து தான் வீட்டிற்கு விரைந்துகொண்டிருக்கிறேன்.

ஐசக்கின் தங்கை எதிரில் வந்துகொண்டிருந்தாள் அவன் நிலை குறித்து அவளிடம் விசாரிக்க நினைக்கும் நேரத்தில் பாலத்தீன் கவரில் ஊசலாடிக்கொண்டிருந்த ஹக்கீஸ் கவரும், என் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த தாலியும் எனக்கு நினைவூட்டியது நான் தாயும், மனைவியும் ஆனவள். பாதங்களை முன்வைத்தும் மனதை பின்வைத்தும் நடந்து சென்றேன். எதிரில் வந்தவளின் முகத்தை பார்க்காமல் மீண்டும் தரையில் ஏதோ ஒன்றை தேட நேர்ந்தது.

வீட்டு வாசலை நெருங்கும் முன்பே குழந்தையின் விசும்பல். என் அம்மாவின் இடுப்பில் இருந்து என் இடுப்பிற்கு தாவியவளின் கால்கள் பட்டாம்பூச்சி சிறகாய் அடித்துகொண்டது. “அம்மா வந்துட்டேன்டா செல்லம் வீட்டுக்கு லேட்ஹா வரேன்னு கோவமா அம்மா மேல” தினசரி நான் உபயோகிக்கும் சொற்கள் ஐஸ்வர்யா மெர்லினுக்கு மட்டும் எப்படி சிரிப்பை கொடுக்கின்றதோ… புடவையில் இருந்து நைடிக்கு மாறியதும் ஐஸ்வர்யாவை தூக்கிக்கொண்டு மாடிக்கு சென்றேன். மாடியில் நின்றுகொன்று ஐசக்கின் வீட்டை சுட்டிக்காட்டி அவளோடு உரையாடிகொண்டிருந்தேன்.

விடைத்தாள்களை திருத்த வேண்டிய வேலை அதிகம் இருந்தது மாணவர்களின் தெளிவான கையெழுத்தின் உதவியோடு சில விடைத்தாள்களை வேகமாவும் பொறுமையாகவும் திருத்திக்கொண்டிருந்தேன். திடிரென்று ஐஸ்வர்யா மெர்லின் சிணுங்கிக்கொண்டு அழ ஆரம்பித்தாள் அவளை தட்டிகொடுத்துக்கொண்டே மடியில் வைத்து பாலூட்டினேன். நெஞ்சில் இருந்த பாரம் இறங்கியது போல் இருந்தது ஆனால் அவன் நினைவுகளின் பாரத்தை எப்படி இறக்குவது…? அவன் நினைவுகளை சிதைக்க நினைக்கும் பல வருட போராட்டத்தில் அவனே தான் கடைசியில் வெற்றி காண்கிறான். இப்பொழுதும் கூட மடியில் குழந்தையை வைத்துக்கொண்டும் நெஞ்சில் அவனை வைத்துக்கொண்டும் தவித்துகொண்டிருக்கிறேன். அன்று ஐசக் சொல்லிய வார்த்தை “அவ்ளோ சீக்கிரம் என்னைய மறந்துட முடியாது செலஸ்டினா” அந்த வார்த்தைகள் தான் ஒவ்வொரு இரவும் அவன் காதலை நிரூபித்துக்கொண்டிருக்கிறது. எவ்வளவு சுலபமாக சொல்லிவிட்டான்.

ஐஸ்வர்யா மெர்லின் இப்பொழுது தூங்கிவிட்டாள் அவளை மார்பின் மேல் கிடத்திக்கொண்டு படுக்கையின் மீது மெல்ல சாய்ந்தேன். எப்பொழுதும் போல் அவளிடம் என் கதையை சொல்லும் வழக்கத்தை மீண்டும் கையில் எடுத்தேன். “ஐஸு இன்னைக்கு என்ன நாள்னு தெரியுமா…? அந்த ஐசக் பய இந்த நாள்ல தான் அவனோட காதல என்கிட்ட சொன்னான்”
ப்ளஸ் டூ தேர்வுகள் நெருங்கிக்கொண்டிருந்த சமயம் அது சிறப்பு வகுப்பை முடித்துக்கொண்டு நான் பள்ளியிலிருந்து வந்துகொண்டிருந்தேன். எப்பொழுதும் போல் சலூன் கடை வாசலிலே எனக்காக காத்திருக்கும் அவன் நான் வரும் நேரங்களில் மட்டும் கடைக்கு எந்த ஒரு கஸ்டமரும் வந்துவிட கூடாது என்பதை மனதுக்குள் ஜெபித்துகொண்டிருப்பான்.. தன் காதலை சொல்ல நினைத்து தவறவிட்டு போன நாட்கள் எத்தனை என்பது அவன் ஒருவனுக்கே தெரியும். அன்று அவனுடைய நாளாக அமைந்துவிட்டது. ஐசக் என்னை பின்தொடரும் நேரங்களில் சிறு நடுக்கங்கள் ஏற்பட்டாலும் உதட்டிலிருந்து வெட்கச்சிரிப்பு எப்படியோ முளைத்துவிடுகிறது.

“செலஸ்டினா நில்லு” பலபொழுது என் பின்னே தொடர்ந்துகொண்டிருப்பானே ஒழிய என் பெயரை சொல்லி இதுவரை உறக்க கூப்பிட்டது கிடையாது. மெதுவாக திரும்பினேன் ரிப்பன் கட்டிய சிறிய பெட்டியை பேண்ட் பாக்கெட்டிற்குள் இருந்து எடுத்து என்னிடம் நீட்டினான். “என் தங்கச்சியும் உன்கிட்ட பல தடவ சொல்லிட்டா ஆனா நீ தான் இன்னும் எதுவுமே சொல்ல மாட்டேங்குற” அதை வாங்க மறுத்து அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். “சரி இத புடி செலஸ்டினா” “எதுக்கு ஐசக்” அவன் கை விரல்கள் அவன் சிகையையே கோதிக்கொண்டிருந்தது. தரையை பார்த்துக்கொண்டே தொடர்ந்தான் “இல்ல எனக்கு பயமா இருக்கு இப்போ பிளஸ் டூ முடிச்சதுக்கு அப்புறம் நீ காலேஜ்க்கு போய்டுவ, நானும் உன்ன லவ் பண்ணுறேன்னு நிறைய பேரு உன் பின்னாடி சுத்துவான்க நான் இப்போவே சொல்லிடுறேனே… எனக்கு உன்ன புடிச்சு இருக்கு செலஸ்டினா” ஒரு ஆணின் தயக்கத்தையும், வெட்கத்தையும் ஐசக்கின் உடல் நெளிவுகளில் முதல் தடவையாக ரசிக்க நேர்ந்தது. அப்பொழுது ஐசக் அழகாக இருந்தான். தாடியை சொறிந்துகொண்டு என் பதிலுக்காக காத்திருந்தான். அவன் கொடுத்த பரிசை வாங்கிக்கொண்டு லேசாக சிரித்தபடி அங்கிருந்து நகர்ந்தேன்.

சீருடையை கூட கழற்றாமல் ஐசக் கொடுத்த பரிசை பிரித்துப் பார்த்தேன். சிவப்பு நிறத்திலான பேப்பரில் சுற்றப்பட்டு இருந்த சிறிய பெட்டியில் கருப்பு நிற இங்குப் பேனா ஒன்றை வைத்திருந்தான். உடனே எழுதி பார்க்க வேண்டும்போல் தோன்றியது எனது குறிப்பேட்டின் கடைசி பக்கத்தில் எழுதுவதற்கு தயாராய் அப்பேனா என் விரல்களின் பிடியில் நின்றுகொண்டிருந்தது. என்ன எழுதுவது…? ஐசக்கின் பெயரை எழுதி பார்க்கவே எத்தனித்தேன் ஐசக்… உடலின் ரோமங்களின் மேல் ஊர்ந்து செல்கிறானோ… ஒவ்வொன்றும் தலை தூக்கியது. அவன் பெயருக்கு கீழ் என்னுடைய பெயரையும் எழுதினேன் செலஸ்டினா… இருவரின் பெயரையும் ஒரு ஆர்ட்டின் வடிவத்திற்குள் அடைத்தேன்.

காலையில் வேலைக்கு கிளம்ப இருக்கையில் ஐசுவின் அப்பாவிடம் இருந்து போன் வந்தது. அடுத்த வாரம் ஈஸ்டர் தினத்தன்று கிளம்பி வர இருப்பதாக சொன்னார். ஐஸ்வர்யா மெர்லின் பிறந்தபோது அவள் நெற்றியில் இதழ் பதித்து அன்றிரவே வெளிநாட்டிற்கு விமானம் ஏறியவர் அவளின் முதல் பிறந்தநாள் அன்று கூட வீடு திரும்பவில்லை. தோன்றும் நேரங்களில் தொடு திரையில் ஐஸ்வர்யா மெர்லின் முகத்தை பார்த்துக்கொண்டு இருந்தாலும் இருவருக்கான ஸ்பரிசம் பல மைல்களுக்கு இடையில் நின்று கையசைத்துக்கொண்டிருந்தது. வங்கிக்கு கட்டவேண்டிய வீட்டு கடன் பணத்தை என் கணக்கிற்கு பரிமாற்றம் செய்திருப்பதாக சொல்லி அழைப்பை துண்டித்தார்.

வாழையடி வாழையாக கடன் சுமையும் துரத்திக்கொண்டு தான் இருக்கிறது. ஐசக்கின் அம்மாவை விட்டால் கடன் வாங்குவதற்கு சுற்று வட்டாரத்தில் வேறு ஆட்களும் இல்லை. அன்றிரவு ஐசக் என் வீட்டிற்கு வந்திருந்தான். எப்பொழுதும் வட்டி பணத்தை வசூலிக்க அவன் வருவது தான் வாடிக்கை. அவன் அம்மாவின் வசை சொற்கள் எங்கள் வீட்டு வீதியில் தாண்டவமாடுவதை அவன் விரும்புவதில்லை. என் பெற்றோர்கள் வேண்டுவதும் கூட அது தான். அவன் ஒருவனே என் குடும்பத்தின் நிலை அறிந்தவன். எப்போதும் போல் அப்பா வாஞ்சையாகவே அவனிடம் “ரெண்டு வாரமா வேல இல்லாம வீட்ல தான் இருக்கேன் தம்பி இன்னும் எந்த ஒரு காண்டிராக்டும் வரல அடுத்த வாரம் கொடுத்திடுறேனு அம்மா கிட்ட சொல்லிடுறியா…?” அவன் எதிர்பார்க்கும் பதிலை கொடுக்க என் அப்பா எப்போதும் தவறியது இல்லை. “சரிங்கனா பொறுமையாவே கொடுங்க நான் அம்மா கிட்ட சொல்லிடுறேன்” சிரித்த முகத்துடன் அங்கிருந்து நகர்ந்தான். அந்த முகத்தை நினைத்துக்கொண்டே வேலைக்கு சென்றேன்.

பள்ளியில் சந்திப்பதற்கு முன்பே தெருவில் பார்க்கும் மாணவர்கள் “குட்மார்னிங் மிஸ்” என்று என் மீதான மதிப்பை வெளிபடுத்தினார்கள். அன்னை மரியாள் தேவாலயத்து ஊழியர்கள் சென்ற வருடம் குருத்தோலை ஞாயிறில் வைத்து வழிபட்ட ஓலையை சாம்பல் புதன் தினத்தில் வைத்து எரிப்பதற்காக ஒவ்வொரு வீடாக சென்று சேகரித்துக்கொண்டிருந்தனர். அதில் நன்கு பரிட்சயமான ஒரு ஊழியர் என்னை பார்த்ததும் நெருங்கினார்.

“செலஸ்டினா டீச்சர் உங்க வீட்லியும் போன வருஷம் குருத்தோலை இருக்குல”

“இல்லீங்க பிரதர் நான் கொஞ்ச வருஷமா எதிலும் கலந்துகுறது இல்ல”

“ஓ.. சரி ஈஸ்டர் அப்போவாவது சர்ச்சுக்கு வந்துட்டு போங்க…”

பள்ளியை நோக்கி விரைய துடங்குகையில் மீண்டும் ஐசக் மனதிற்குள் தடம் பதித்து உலாவினான். சாம்பல் புதன், புனித வெள்ளி, ஈஸ்டர் தினம், சிலுவை பாதை என்று பாதரிகளின் கட்டளைப்படி அனைத்து வேலைகளையும் முன்னமே செய்துமுடிப்பான். அன்றைய குருத்தோலை ஞாயிறிலும் கூட அதற்கான வேளையில் இயங்கிக்கொண்டிருந்தான் ஐசக்.

ஓலையில் சிலுவையை வடிமைத்து கொடுப்பதில் ஐசக் கைதேர்ந்தவன் அவனை சுற்றி சிறுசுகள் ஓலையை கையில் வைத்துக்கொண்டு “எனக்கு அண்ணா.. எனக்கு அண்ணா…” என்று அவனிடம் மன்றாடிகொண்டிருந்தார்கள். சிலுவையை வடிவமைக்க தெரியாமல் வெற்று ஓலையை வைத்துக்கொண்டு நான் அதனுடன் போராடிகொண்டிருந்ததை ஐசக் கவனித்தும்விட்டான். ஐசக்கின் மனம் என் கையில் இருக்கும் ஓலை அவன் கரங்களில் தஞ்சம் அடையவே காத்துக்கொண்டிருந்தது. சட்டென்று ஐசக்கின் தங்கை என்னிடம் இருந்த ஓலையை பிடுங்கிக்கொண்டு அவனிடம் விரைந்தாள் “இந்தானா இது செலஸ்டினா அக்காது அவங்களுக்கும் சிலுவ செஞ்சு கொடு” அவனிடம் கொடுத்துவிட்டு வரிசையில் நிற்க சென்றுவிட்டாள். உதடுகள் விரிய ஐசக் அந்த ஓலையை சிலுவையின் வடிவில் அவன் இதயத்தை உருமாற்றிகொண்டிருந்தான்.

ஓசான்னா பாடல் ஒலிக்க மரியாள் தேவாலயத்தை நோக்கி பாதிரிகள் எங்களை வழிநடத்தி சென்றார்கள். என் பின்னே ஐசக்கும் அவனது நண்பர்களும் சலசலத்தபடி இருந்தனர். நீண்ட நேரமாக மெல்லிய குரலில் ஐசக் என்னை அழைத்துகொண்டிருந்தான் என்னவென்று திரும்பி பார்க்கவோ, அவனுக்கு மருமொழியவோ அப்போதைய சூழலில் என் மனம் தைரியம் கொள்ளவில்லை. தேவாலயத்தை நெருங்கும் வரையிலும் அவனது முயற்சிகள் தோற்றுக்கொண்டிருந்தது. குருத்தோலை பவனி முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் தேவயாலத்தின் பின்புறம் அமைந்த சூசையப்பர் சிலை அருகே ஐசக் எனக்காக காத்திருப்பதை அவன் தங்கை என்னிடம் வந்து சொல்லிவிட்டு சென்றாள். அவன் மீதான கோபமே என்னை அவனிடம் கொண்டு சேர்த்தது.

“ஏன் ஐசக் ஊர்வலம் அப்போ அப்படி நடந்துக்குற… என்ன அவசரம் உனக்கு…?”

தன் சிகையை கோதிக்கொண்டே “ஸாரி செலஸ்டினா… இன்னைக்கு நான் தான் வட்டி காசு வாங்க போவேன்னு அம்மா அடம் புடிக்குது இன்னைக்கு நைட் நான் வர மாட்டேன். அதான் முன்னாடியே சொல்லிடலாம்னு உன்ன கூப்டேன்”. அவனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தேன். தேர்தல் நெருங்கும் நேரம் என்பதால் அரசியல் உருவங்களை சுவற்றில் வரைந்து காட்சியளிக்க அப்பா ஊரெங்கும் சுற்றிக்கொண்டிருந்தார். அப்படி கிடைக்கும் பணத்தில் அவரின் குடிக்கு போக துளியாய் விழும் சில்லறைகளில் தான் எனக்கும் அம்மாவுக்குமான வாழ்கை நகர்ந்துகொண்டிருந்தது.

சற்றும் எதிர் பார்க்காத நேரத்தில் அப்பா கொடுக்க வேண்டிய வட்டி பணத்தை ஐசக் என் கையில் திணித்தான். “அம்மா வந்து நைட்டு கேட்டா இந்த பணத்த கொடுத்துடு செலஸ்டினா” நான் வேண்டாம் என்று எவ்வளவு தடுத்தும் அவன் விடுவதாக இல்லை இம்முறை மட்டும் வாங்கிகொள்ளும்படி கட்டாயப்படுத்தினான். அதற்க்கு பிறகான வட்டி பணம் முழுவதும் அவன் மூலமாக தான் கட்ட நேர்ந்தது. கடைசியாக நான் ஊர்வலத்தில் வைத்து வழிபட்ட குருத்தோலையை என் ஞாபகமாக வைத்து கொள்வதாக சொல்லி என்னிடம் இருந்து வாங்கி சென்றான். நிச்சயம் அந்த குருத்தோலை உயிர்ப்புடன் இப்பொழுதும் அவனிடம் இருக்கும்.

மதியஉணவு இடைவேளையின் போது என்னுடன் பணிபுரியும் சக ஆசிரியை ஒருவர் பிறந்தநாள் என்று அனைவருக்கும் இனிப்பை பகிர்ந்துகொண்டிருந்தார். கலகலப்பான பேச்சுகளோடும் சிரிப்புகளோடும் ஆசிரியர்கள் அவரை வாழ்த்தி கொண்டிருந்தார்கள். என் ஒருத்தியால் மட்டும் ஆர்வமின்றி அதிலிருந்து விலகி செல்ல மனது முனைந்தது. வெளியே வந்து பால்கனி வழியாக செம்மண் போர்த்திய மைதானத்தை வெறித்து பார்த்தேன். இதே மைதானத்தில், இதே பள்ளியில் என் பிறந்தநாளையும், நான் தேர்ச்சி பெற்றதையும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இனிப்பு கொடுத்து ஐசக் என்னை கொண்டாடி இருக்கிறான். வேலைக்காக எக்ஸ்போர்ட் கம்பெனி வாசலை மிதிக்க இருந்த என்னை படிப்பிற்காக கல்லூரி வாசலை மிதிக்க வைத்தான். என் பெயருக்கு பின்னால் இருக்கும் B.A. B.Ed., என்னும் பட்டம் அவன் உழைப்பினால் ஆனது, கை நீட்டி வாங்கும் சம்பளங்களில் கூட அவனது முகம் தான் பிரதிபலிக்கிறது. எத்தனையோ முறை என் கைசெலவிற்க்கும் வீட்டு செலவிற்கும் பணம் கொடுத்து உதவி இருக்கிறான் என் சம்பள பணத்தை அவனது சட்டை பாக்கெட்டில் திணித்து உரிமை கொண்டாட நினைத்த சந்தர்ப்பம் இதுவரை நிறைவேறாமலே போய்விட்டது.

ஐஸ்வர்யா மெர்லின் பிறந்தநாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது ஐஸ்வர்யா அப்பாவும் இன்று இரவு வந்துவிடுவதாக செய்தி அனுப்பினார் முதல் வருட பிறந்தநாளை விட இந்த வருட பிறந்தநாளை விமர்சையாக கொண்டாட ஐஸ்வர்யாவின் அப்பா எண்ணி இருக்கிறார். வேலைகள் பல வரிசையில் காத்துக்கொண்டிருந்தது தலைமை ஆசிரியரிடம் இரண்டு நாட்களுக்கு விடுமுறை சொல்லிவிட்டு பள்ளியை விட்டு வெளியே வந்துகொண்டிருந்தேன்.

ரோட்டோரத்தில் அமைந்த ஒயின் ஷாப்பிற்குள் இருந்து ஒரு சிலரை மிரட்டல் தொனியுடன் போலீஸ்காரர்கள் ஜீப்பில் ஏற்றிக்கொண்டிருந்தனர். ஒயின் ஷாப்பிற்கு வருகை தந்தவர்கள் போலிஸ் வண்டியை சுற்றி சலசலத்தபடி குழுமி இருந்தார்கள். நிச்சயம் ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்க வேண்டும் சைரின் சத்தத்தை கிளம்பிக்கொண்டு போலிஸ் ஜீப்பிற்கு முன் சென்ற ஆம்புலன்ஸ் வண்டி அதை தான் உணர்த்தியது.

அங்கே நின்றிருக்க பிடிக்காமல் நடையில் வேகத்தை கூட்டினேன். ஐசக்கை முதுகில் அடித்து தரதரவென ஜீப்பில் ஏற்றிய சம்பவம் மீண்டும் மனத்திரையில் ஓடத் துடங்கியது. அப்போது நான் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்துகொண்டிருந்த சமயம். எங்கள் காதல் விவகாரம் வீட்டிற்க்கு மட்டுமல்ல எங்கள் குடியிருப்பு பகுதியிலும் கூட அனைவருக்கும் தெரிந்திருந்தது. பெரிதாக எந்த ஒரு தடையும் இல்லை ஐசக் தனக்கு மருமகனாக அமைய நேர்ந்தால் தோன்றும் நேரங்களில் பணம் வாங்கிக்கொள்ளலாம் என்பது அப்பாவின் எண்ணம். ஐசக்கின் வீட்டிற்கு நான் மருமகளாக செல்ல நேர்ந்தால் தன் மகன் படித்த பெண்ணை திருமணம் செய்துகொண்டிருக்கிறான் என்று கௌரவமாக தம்பட்டம் அடித்துக்கொள்ளலாம் என்பது ஐசக் அம்மாவின் எண்ணம். இதில் என் அம்மா மட்டும் தான் எந்த ஒரு முக சாயலையும் வெளிபடுத்தாமல் முழித்துக்கொண்டிருந்தாள்.

நான் கல்லூரி முடித்து தினமும் வீட்டிற்கு திரும்பும் பேருந்தில் என்னை காதலிப்பதாக சொல்லி ஓயாது நச்சரித்து பின்தொடர்ந்துகொண்டிருந்தவனை பற்றி ஐசக்கிடம் நான் பேசியதே இல்லை. ஆனாலும் அந்த விஷயம் ஐசக்கின் நண்பர்கள் மூலம் எப்படியோ அவன் காதிற்கு எட்டி விட்டது. அன்றிரவே ஐசக் எங்கெங்கோ அலைந்து அவனை பற்றி விசாரித்து நேரில் சென்று அவனை எச்சரித்திருக்கிறான். பேச்சுவார்த்தையில் துடங்கிய சம்பவம் கடைசியில் அடிதடியில் போய் முடிந்திருக்கிறது. ஐசக் அவசரத்தில் கையில் கிடைத்த கம்பியை கொண்டு வெறியோடு அவனை அடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பி இருக்கிறான். மறுநாள் காலையில் ஐசக்கை போலிஸ்காரகள் கைது செய்யும் பொழுது தான் தெரிந்தது அவன் இறந்துபோன விஷயம். மாரில் அடித்துக்கொண்டு ஐசக்கின் அம்மா ஜீப்பின் பின்னால் ஓடியதும், கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த என்னை கண்டடைந்து கண்களாலே ஐசக் எனக்கு சமாதானம் சொல்லியதும் இப்பொழுதும் நெஞ்சில் நீங்கா தழும்புகளாய் பதிந்திருக்கிறது.

அதற்கு பிறகான நாட்களில் விசாரணைக்காக நீதி மன்றத்திற்கும் காவல் நிலையத்திற்கும் அலைந்துகொண்டிருந்தேன். தான் கைது செய்யப்பட்டதை விட தன் காதலி அடிக்கடி வீட்டிற்க்கும், நீதி மன்றத்திற்கும் அலைந்துகொண்டிருந்தது தான் ஐசக்கிற்கு வருத்தத்தை கொடுத்தது. எவ்வளவு பணம் செலவழித்தும் ஐசக்கிற்கு சாதகமாக எதுவும் அமையவில்லை என்னை சந்திப்பதையும் ஐசக் தவிர்த்து வந்தான். கடைசி சந்திப்பில் தான் ஐசக் முதல் முறையாக அழுததை என்னால் பார்க்க நேர்ந்தது. அழுதுகொண்டே என்னிடம் அவன் கேட்டுக்கொண்ட விஷயம் “என்னைய அவ்ளோ சீக்கிரம் மறக்க முடியாது செலஸ்டினா ஆனா கண்டிப்பா பார்க்காம இருக்க முடியும், இனி என்ன பார்க்க வரதா” என் பதிலுக்காக காத்திருக்காமல் கண்களை துடைத்துக்கொண்டு வேகமாக சென்றான். வருடங்கள் ஓடி விட்டது அவனுடன் கழித்த நாட்களின் ஏதோ ஒரு நினைவில் தினமும் என்னை சந்தித்து கொண்டு தான் இருக்கிறான் சிரித்துக்கொண்டும்… அழுதுகொண்டும்…

ஆயிரம் புன்னகை உதட்டில் தவழ ஐஸ்வர்யாவின் அப்பா இரவு வீட்டிற்குள் நுழைந்தார். முத்தங்களாலே ஐசுவின் உறக்கத்தை கலைத்தார். நீண்ட நாட்களுக்கு பிறகான அரவணைப்புகளும் தழுவல்களும் அவ்விரவு நீண்டுக்கொண்டே இருந்தது. பல வடிவங்களில் பரிசு பொருட்களும் துணிமணிகளும் என்னையும் ஐசுவையும் சூழ்ந்துகொண்டிருந்தது. ஐசுவின் அப்பா எனக்கென்று பிரத்தியேகமா வாங்கி வந்திருந்த பரிசை என்னிடம் கொடுத்தார் வெளிநாட்டில் தங்கத்தால் செய்யப்பட்ட பேனா ஒன்று இருந்தது மீண்டும் பழைய காதலனின் நினைவுகளை என் கணவன் வாங்கிக்கொடுத்த பேனாவே தோண்டிக்கொண்டிருந்தது. எழுதி பார்க்க மனமின்றி அப்பேனாவை பீரோவில் வைத்து பூட்டினேன்.

மறுநாள் ஐஸ்வர்யாவின் அப்பா ஐசுவின் பிறந்தநாள் ஒட்டியும் ஈஸ்டர் தினத்தை ஒட்டியும் துணிமணிகள் வாங்க எங்கள் இருவரையும் கடைக்கு அழைத்துச்சென்றார். ஐஸ்வர்யாவிற்கு துணியை எடுத்தபின் எனக்கு புடவை எடுத்து கொடுக்க இரண்டாம் மாடிற்கு அழைத்து சென்றார். ஈஸ்ட்டர் தினம் நெருங்கிக்கொண்டிருப்பதால் கூட்டம் அலைமோதியது எப்படியோ கூட்டத்தை சமாளித்துக்கொண்டு கடைசியாக ஒருவரை அணுகினோம்.

வார்த்தைகளின்றி கேட்க்கும் நிறங்களில் புடவைகளை சரசரவென விரித்துக்கொண்டிருந்தான் அவன். பார்த்த மாத்திரத்தில் அவனால் என்னை அடையாளம்கொள்ள முடிந்தது என்னால் தான் சட்டென்று அடையாளம்கொள்ள முடியவில்லை மொட்டை அடித்து பாதி முளைத்திருந்த மயிர், உடல் மெலிந்து கூனி குறுகி நேருக்கு நேர் சந்திக்க வலுவற்று கீழே குனிந்தபடி சுழன்று கொண்டிருந்தது அவன் பார்வை. அவனே தான் ஐசக்…! வெளிவர துடித்துக்கொண்டிருந்த கண்ணீரை மனதின் பலம் கொண்டு முடிந்தவரை தடுத்தேன். ஐஸ்வர்யாவின் அப்பா சுட்டிகாட்டிக்கொண்டிருந்த புடவைகளை சலிப்பின்றி கான்பித்துக்கொண்டிருந்தான். அவனது கண்கள் சிவந்துகொண்டிருந்தது அவனும் கண்ணீரோடு போராடுகிறான். எங்கள் இருவருக்குமான சந்திப்பு இப்படியா அமைய வேண்டும்..? செலஸ்டினா… செலஸ்டினா… என்று தன் வாழ்நாளை கொண்டாடிகொண்டிருந்தவன் அதே செஸ்டினாவை பார்க்க விருப்பமில்லாமல் நாதியற்று நிற்கும் நிலைமை. என் மீதும், ஐஸ்வர்யா மீதும், ஐஸ்வர்யாவின் அப்பா மீதும் அவனது பார்வை வீசிக்கொண்டே இருந்தது. அவன் படும் அவஸ்த்தையை என்னால் பார்த்துகொண்டிருக்கமுடியவில்லை. உடல் எரிந்து சாம்பலாகிகொண்டிருப்பதை உணர்ந்தேன். அங்கிருந்து உடனே நகர வேண்டும் போல் இருந்தது கையில் சிக்கிய ஏதோ ஒரு புடவையை எடுத்துக்கொண்டு காரணங்கள் தேடி சமரசம் செய்து ஐஸ்வர்யாவையும், ஐஸ்வர்யா அப்பாவையும் அழைத்துக்கொண்டு வெளியே வந்தேன். படி இறங்கும் நேரத்தில் திரும்பி பார்க்கும் பொழுது இதழ்கள் விரிய ஐசக் லேசாக சிரித்துக்கொண்டிருந்தான். அனைத்தையும் இழந்து வெறுமையின் அரவணைப்பில் வாழ்ந்துகொண்டிருப்பதை உணர்த்தியது அந்த சிரிப்பு.

மேற்கொண்டு வேறு எந்த கடைக்கும் செல்லாமல் அர்த்தமற்ற காரணங்களை சொல்லி விடாப்படியாக இருவரையும் வீட்டிற்கு அழைத்து வந்தேன். சுதந்திரமாக கத்தி அழுவதற்கு ஒரு சுவர் கிடைத்தால் போதும் என்றிருந்தது. வீட்டிற்கும் வந்ததும் தாழ்பாளின் துணைகொண்டு கதவை அடைத்தேன். தரையில் சரிந்து கால்களை மடக்கி கழுத்தை தொங்கவைத்து அழுது தீர்த்தேன்.. ஒரு புறம் ஐசக்கின் குரல் என்னை சமாதானப்படுத்த முயற்சி செய்துகொண்டிருந்தது…

பீரோவின் மேல் இருந்த பெட்டியை கீழே இறக்கினேன் ஐசக் கொடுத்த இங்குப் பேனா பொலிவிழந்து உறங்கிக்கொண்டிருந்தது. ஆசையா… தோல்வியா… ஏமாற்றமா… எதுவென்று தெரியவில்லை ஐசக்கின் பெயரை எழுதி பார்க்க முனைந்தது. கட்டில் மேல் இருந்த என் டைரியை எடுத்து கடைசி பக்கத்தில் ஐசக்கின் பெயரை எழுதினேன்.. காற்றில் வரைய முயற்சிக்கும் எழுத்தக்களை போல் உருபெறாமலே இருந்தது ஐசக்கின் பெயர்… அந்த இங்குப் பேனா எழுதவில்லை. பேனாவை தரையில் உதறினேன் அந்த மை திட்டு திட்டுகளாக ஐசக்கின் ரத்தத் துளிகளை போல் காட்சியளிதுக்கொண்டிருந்தது. எவ்வளவு முயற்சித்தும் அந்த இங்குப் பேனா எழுதவில்லை… இனி எழுதப்போவதும் இல்லை. இந்நேரம் ஐசக் நான் கொடுத்த குருத்தோலையை வைத்து அழுதுகொண்டிருப்பான் என்று மட்டும் தோன்றியது.

மெட்ரோ- ராம்குமார் சிறுகதை

ராம்குமார் 

அப்பாவும் மகனுமாக ரயிலில் சைதாப்பேட்டை வந்திறங்கி, கொத்தால்சாவடித் தெருவில் சென்று நாலாவது சந்தில் திரும்பி அந்த  ப்ளாட் வாசலை அடைந்ததும் வாட்ச்மேன் இவர்கள் இருவரையும் வரவேற்கும் தொனியில், “வாப்பா, இன்னாபா அன்னிக்கு உன்ன புடிக்கவே முடியாம போயிடுச்சு .ரெண்டு நாளு முன்னாடி ரொம்ப சீக்காயிடுச்சுப்பா, ஆஸ்பத்திரிக்கு கூப்ட்டாலும் வர்றல, உனக்கு போன் பண்ணலாம் பாத்தாலும் உன்கிட்ட போன் இல்லையாமே, அந்த கோயிலே கதின்னு கடந்துட்டு இந்த மாரியாத்தா என்ன விட்டுட மாட்டானு சொல்லிக்கிட்டு இருந்துச்சி, நேத்து தான் தேறி வந்துச்சு, பின்னாடிதான் இருக்குது போங்க,” என்று அனுப்பி வைத்தார்.

வேலு தன் பத்து வயது மகனுடன் ப்ளாட்டின் பின்புறம் சென்றான். கூட்டிக்கிட்டு இருந்த ஜானகியம்மா எதெச்சையா இவர்கள் பக்கம் பார்த்து, ‘’அட வாங்க வாங்க,” என்று துடப்பத்தை கீழே போட்டுவிட்டு பேரனை அணைத்து கன்னத்தில் முத்தமிட, பேரன் ஆயாவைப் பார்த்து ரொம்பநாள் ஆனதால் என்ன செய்வது என்று தெரியாமல் புன்னகைத்தான். ”இருங்க,” போய் குழாயில் கை கழுவிவிட்டு ‘’வாங்க போகலாம்,’’ என இவர்களை அழைத்துக்கொண்டு வெளியே வந்தாள்.

தன் அறையில் இருந்த வாட்ச்மேனிடம் போய் ஜானகியம்மாள், ‘’ரவி ஒரு ஐநூறு இருந்தா கொடென் அடுத்த மாசம் சம்பளம் வந்த்தும் தந்திடுறேன்’’

“புள்ள பேரன பார்த்ததும் பரபரனு இருக்கா,’’ எனச் சிரித்தபடியே தன் சட்டைப்பையில் இருந்து ஐநூறு ரூபாய் தாளை எடுத்து இவளிடம் தந்தார்.

“வாங்க போலாம்,”  என அவர்களை அழைத்து டீக்கடைக்கு வந்தார்கள்.

”இன்னா கஜா எப்படியிருக்க கல்லால பாக்கவே முடியல”

”டி.நகர் கடைக்கு போயிடுறேன்மா”

தன் பால்ய நண்பன் வேலுவைப்பார்த்து, ”இன்னா வேலு எப்படி இருக்க, வேலைக்குலாம் ஒழுங்கா போறியா? இல்ல பழையபடி சீட்டு , குடினு தான் இருக்கீயா ?”

வேலு பேருக்கு பதில் சொல்லிவிட்டு வெளிய வர, ஆயா பேரனுக்கு பிஸ்கட் எடுத்துக் கொடுக்க, கஜா அத பார்த்துகிட்டே வெளிய வந்து வேலு தோளில் கையைப்போட்டு,  “இன்னா மச்சி ஏதாச்சும் நினைச்சிக்கிடியா? நான் சும்மாதான் கேட்டேன்டா. எப்படி அங்க ஏரியாலாம் செட் ஆகிடுச்சா?”

“என்னத்த செட் ஆகிச்சு, இங்கதான் நமக்கு வேலை இருக்கு. அங்க வாரத்துல நாலு நாள் தான் கிடைக்குது..”

கஜா அதை காதில் வாங்காமல்,  “நம்ம முத்தம்மா  ஆயா செத்துடுச்சு தெரியுமா?”

‘’எப்படி?” என  இவன் துக்கத்தை அவன் காது கொடுக்காததால்  சுரத்தை இல்லாமல் கேட்டான்.

“ஆக்சிடெண்ட்டா ரோடு கிராஸ் பண்ணப்போ…”

”உங்கம்மாவ அங்கேயே கூட்டிட்டு போயிடலாம்ல… இங்கேயே கடந்து லோல்படுது பாவம்… ”

‘’ நான் வா அங்கனு தான் சொல்றேன்… இதான் இங்கதான் பொறந்தேன் இங்கதான் கல்யாணம் கட்டிக்கிட்டேன் இங்க தான் என் உயிர் போகணும்னு பெனாத்திக்கிட்டு இருக்கு’’

‘’ஆமா அதுக்கும் அம்பது, அறுபது வருசமா இருந்த இடத்தவிட்டு போனா பேஜாராதான் இருக்கும் …”

“இன்னாதான் குடிசைய காலி பண்ணி கல்லு வீடு கொடுத்தாலும் நான் இங்கதான் பிழைப்பேன்னு இருக்கு”

மாரியம்மன் கோவிலை தாண்டும்போது பேரனிடம், “இப்போ ஆயா வூடு இதான் கண்ணு,”  என சொல்லி வாசலில் இருந்தே, “ஆத்தா என் புள்ளையும் பேரனையும் காப்பாத்தும்மா,” என சற்று உரக்க சொல்லி வெளியில் எரிந்துக் கொண்டிருந்த சூடத்தை ஒத்தி பேரன் கண்ணில் ஒத்தினார்..

அடுத்த தெருவுக்கு சென்று இன்னொரு ப்ளாட்டினுள் நுழைந்து கீழ்தளத்து காலிங் பெல்லை அழுத்திவிட்டு, “இந்தம்மா வீட்ல நேத்துதான் வேலைக்கு சேர்ந்தேன், உன் புள்ளையும் பேரனும் வந்தா கூட்டிட்டு வாம்மானு சொல்லிச்சு, நல்லவங்க, ரீஜண்டானவங்க,” என சொல்லி இன்னொரு முறை காலிங் பெல்லை அழுத்த முற்படும்போதே கதவு திறக்கப்பட்டது.

அந்தம்மா, ஜானகியம்மாவைப் பார்த்துவிட்டு அவர்களையும் பார்த்தார்.

“புள்ள, பேரன் மா”

”உள்ள வாங்க”

சோபாவில் இருவரும் குறுகியபடி உட்கார்ந்திருந்தனர். அந்தம்மா ஜூஸ் எடுத்து வந்து கொடுக்க, இருவரும் கண்ணால் வீட்டை மனதுக்குள் கிரகித்துக் கொண்டிருந்தனர்..

“குடிங்க, அப்பறம் உங்க வைஃப் எப்படி இருக்காங்க ..”

வேலு சற்று தயங்கி, “அதுக்குன்னாங்க நல்லாருக்கு ”

காலிங் பெல் அடிக்கப்பட்டு கதவு திறக்கப்பட்டு ஒரு வாட்டசாட்டமான ஆள் வியர்வை வழிய உள்ளே வந்து இவர்களை கண்டும் காணாமல் போக, அந்தம்மா அவரிடம், “ஏங்க இவங்க ஜானகியம்மா பையன் , பேரன்,” என அறிமுகப்படுத்த அவர் செயற்கையாய் ஒரு புன்னகையை அவர்கள் மேல் வீசிவிட்டுச் சென்றார்.

“அவர் இப்போ கொஞ்சம் பிசிங்க, இந்த மெட்ரோ ப்ராஜக்ட் ஆரம்பிச்சதுல இருந்து நேரங்காலம் இல்லாம வேலை செய்ய வேண்டியதா இருக்கு… உங்க அம்மாக்கு இங்க எந்த பிரச்சினையும் இல்லே… என் அம்மாவப்போலதான் பாத்துக்குறேன்….”

வேல் சற்று கலக்கத்தோடு, சரி, என்பது போல மௌனமாக தலையசைத்தான்..

“சரி, நான் சமைக்கணும், அம்மாவ அனுப்புறேன்”

அந்த ஆள் ஒரு அரை நிஜாருடன் புத்துணர்ச்சி பொங்க வந்து மற்றொரு சோபாவில் குதித்தமர்ந்தார். அவர் இவர்களை பார்த்து ஏதும் கேட்பார் அல்லது புன்னகைப்பார் என்ற ஆவலில் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர். அவர் டி.வி ரிமொட்டை எடுத்து சேனல்களை மாற்றிக்கொண்டே, இவர்கள் பார்ப்பதை உனர்ந்தவராய் திரும்பி, ஒரு சிறு புன்னகையை வீசி, மீண்டும் டி.வியில் மூழ்கினார்.

பின் இவர்களைப் பார்த்து ”எங்க இருக்கீங்க இப்போ?”

“பெரும்பாக்கம்”

“அது எங்க இருக்கு”

“மேடவாக்கம் தாண்டி போகணும்”

“ஓ சாரி எனக்கு மேடவாக்கமே தெரியாது.. பையன் என்ன படிக்கிறான்.?”

“ஐஞ்சாவது படிக்கணும். ஆறு மாசமா ஸ்கூலுக்கு போகல சார்..அங்கிருந்து இவ்ளோ தூரம் அனுப்ப வேணாம்னு வீட்ல சொல்லிடுச்சு, ஒரு வருசம் படிப்பு போச்சு,” சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஜானகியம்மா சமையல் கட்டிலிருந்து வேலையை முடித்து வெளிவந்து இவர்களை அழைத்து,“வாங்க போகலாம், அவங்ககிட்ட சொல்லிட்டு வாங்க,” என்று சொல்லி, “அம்மா அம்மா கிளம்புறாங்களாம்” என்றதும் உள்ளிருந்து கைகளில் பத்து ரூபாய் தாள்களை எண்ணியபடி வந்த வீட்டுக்காரம்மா பையனிடம் கொடுத்து, “வைச்சுக்க” என்றதும் அவன் கூச்சப்பட, ஜானகியம்மா, “வாங்கிக்கோடா செல்லம், ஆண்ட்டிதானே கொடுக்குறாங்க,” என்றதும் தலையை கழுத்தோடு ஒட்டியபடி வாங்கினான்.

தெருவில் வந்ததும் பையன் அப்பாவின் கையை விடுத்து ஆயாவின் கையை பற்றிக் கொண்டான். ஆயாவும் பேரனை வழியெல்லாம் கொஞ்சிக்கொண்டே வந்தாள்.

ரயில்வே பாலத்தை தாண்டும்போது மதிய வெயில் அவர்களை பின் தொடர்ந்தே வந்த்து. வழியில் வந்த ஜூஸ் கடையில் நின்று, பேரனை பார்த்து ”இன்னா கண்ணு குடிக்கிற”

பையன் சற்று யோசித்தபடி ”ரோஸ்மில்க் ஆயா”என்றான்.

மூவரும் குடித்துவிட்டு போகும்போது பையன் உதட்டோரம் நாவினால் துடைத்துக் கொண்டே சென்றான்.

மீன் மார்க்கெட்டையே கடக்கும்போது, “இப்போலாம் நம்ம ரஜினிய பார்க்கிறியா?” என்றான்

“இல்லியே. அவன் ஏதோ பெயிண்ட் வேலைக்கு போயிட்டானாம்”

பின் ஆம்பூர் பிரியாணி என்று எழுதப்பட்டிருந்த கடையினுள் நுழையும்போதே இருந்த சிக்கன் லெக் பீஸ் படங்களை பார்த்து உள்நுழைந்த பையன் நாக்கில் எச்சில் சுரந்தது. மூன்று பேருக்கும் பிரியாணி தனித்தனி தட்டில் வந்ததும் பையன் ஆர்வமாக சாப்பிட ஆரம்பித்தான். ஜானகியம்மா தன் தட்டில் இருக்கும் கறித்துண்டுகளை களைந்து எடுத்து பேரனுக்கு ரெண்டு துண்டும் பையனுக்கு ஒரு துண்டும் என தட்டில் வைத்ததும் வேலப்பன், “எல்லாத்தையும் எங்களுக்கு வெச்சிட்டு நீ இன்னா துன்னுவ இந்தா,” என மறுபடியும் அவள் வைத்ததை அவளுக்கே வைக்கப் போக, அவள் கத்தி கொண்டு வருபவனை தடுப்பவள் போல தன் தட்டை வெடுக்கென பின் இழுத்து, ”அய்யோயோ எனக்கு வேணாம்பா சூடு அதிகமாயிடுச்சு அதான்” என்று சமாளிக்க அம்மாவை அறிந்தவனாக வேலப்பன் விட்டுவிட்டான்.

வெளியே வந்ததும் வள்ளியக்கா இவர்களைக் கடந்து சென்று யாரு என யூகித்து பின்வந்து, “என்ன ஜானகியக்கா எப்படி இருக்க, என்னப்பா வேலு கண்டுக்கவே மாட்றியேப்பா. அக்கா அங்க இருந்தவரை யக்கா யக்கானு இருந்த…”

“இப்போ எங்க கா இருக்க?”

“இதோ இங்கதான் அந்த மசூதி சந்து இருக்குல அதுல ராமர் கலரு வீட்ல..”

“வீட்ட வித்துட்டு இங்க வந்தப்புறம்தான் நாலுவீட்ல பத்து பாத்திரம் தேய்ச்சாவது காலத்த ஓட்டலாம், அங்கிருந்து நம்ம மனுசாளுங்க வாசனை இல்லனா செத்துடுவோம் போல இருந்துச்சு, அதான்”

“செல்வி எப்படியிருக்கு? கேட்டனு சொல்லுப்பா ”

ரயில்வே நிலையம் வந்ததும் காத்திருக்கும் நேரம் வேலு அம்மாவை, “நீ போ…அந்தம்மா ஏதோ வாங்கி வர சொன்னாங்கள,” என்றான்

“அது பரவால்ல,இப்போ போயிட்ட்டா அப்புறம் எப்போ என் பேரன் கூட இருக்கிறது?”

வேலப்பன், ” நீ வேணா அங்கேய வந்துடேன் .பக்கத்துல கூட எங்காயச்சும் வேலைக்கு போ,” என்றான்.

ஜானகியம்மா புன்னகைத்து, “வீடு வேணாம்பா இந்தக் கட்டை இங்கதான் கிடக்கணும்னு இருக்கு. என்னிக்காவது எதும் வேலை செய்ய முடியாத நெலம வரும்போது வேணா பாக்கலாம், அப்பக்கூட காசி, ராமேச்வரம்னு போயிடுலாம் இருக்கேன்..”

“ஆமா அங்கதான் எங்கப்பன் எடம் வாங்கி மாளிகை கட்டி வைச்சிருக்கான் உனக்கு. அந்த குவட்டர்ச வித்திட்டு இங்க வர்லானாலும் அந்த சனியன் இப்போதான் என் புள்ளைங்க பேருக்கு ஒரு வீடு இருக்க போவுதுனு அலையுது. எதோ அரண்மனைய இவளுக்கு எழுதி கொடுத்துட்ட மாதிரி. மூணு பேரு கைய கால விரிச்சு படுத்து தூங்க முடியுதா..”

“அப்புறம் ஏன் என்ன கூப்பிடுற?”

மௌனமாக இருந்தான்.

“என்னத்த பண்ண”

பையன் இருவரையும் பார்த்துக் கொண்டிருக்க, ரயில் சத்தம் கேட்கவும் பேரனின் கன்னத்தை இழுத்து எச்சில் படிய முத்தமிட்டாள்.பேரன் ஆயாவின் வாயின் துர்நாற்றத்தை வெளிக்காட்டாமல் அவனும்  பதிலுக்கு முத்தமிட்டான்..

வேலு தன் மகனுடன் ரயிலெறி படியில் நின்றபடி டாட்டா காட்ட, ஜானகியும் கண்களை முந்தானையால் துடைக்க, வேலு அதை காணாததுபோல வேறெங்கோ பார்த்தான். பேரனுக்கு அடிவயிற்றில் இருந்து ஏதோ உருண்டு பொங்கி வந்து தொண்டையை அடைத்து கண்கள் கலங்கின.

 

வேனிற்காலம் – காலத்துகள் சிறுகதை

காலத்துகள்

விடைத்தாள்களை வாங்கி மேஜையின் மீது அடுக்கி வைத்த ஸார், அறையின் வாசலுக்கு செல்வதும் திரும்புவதுமாக இருந்தார். முதல் மணிச் சத்தத்துடன் அனைத்து வகுப்பறைகளிலிருந்தும் எழுந்த கூச்சலினூடே வெளியே வந்தோம். கடைசி பரீட்சை முடிந்தபின் நடக்கும் சட்டையின்மீது இங்க் அடிக்கும் சடங்கில் என் நண்பர்கள் அடைந்துள்ள நிபுணத்துவம் என்னிடம் இல்லாததால், ‘டேய் டேய் போதும்டா’ என்று எப்போதும் போல் கூச்சலிட்டேன். வழக்கம் போல் என் வான் நீல பள்ளிச் சீருடை சட்டையின் மீது பல்வேறு வடிவங்களிலும், அளவுகளிலும் இங்க் துளிகள் பதிந்தன. இந்த விளையாட்டையும் அதனூடே நாங்கள் எழுப்பிக் கொண்டிருந்த ஊளைச் சத்தத்தையும் கண்டு கொள்ளாமல் விடைத்தாள் கட்டை ஆபிஸ் ரூமில் சேர்ப்பித்து கிளம்பும் அவசரத்தில் ஆசிரியர்கள் எங்களைக் கடந்து சென்றார்கள். ஆரம்ப அதீத உற்சாகம் சற்று அடங்கிய பின் ‘பாக்கலாம்டா’, ‘ஹாப்பி ஹாலிடேஸ்டா’களை பகிர்ந்து கொண்டவர்களில் விடுமுறைக்கு வேறு ஊருக்குப் போகாத நானும் சந்துருவைப் போன்றவர்களும் இருந்தோம்.

சைக்கிள் எடுப்பதற்காக சென்றிருந்த சந்துருவிற்காக காத்துக் கொண்டிருந்தபோது பெண்கள் ஸ்டேண்டினில் இருந்து வெளியே வந்த உமா சைக்கிள் மீதேற, ஒரு கணம் மேலெழும்பி அடங்கிய ஸ்கர்டினுள் அவள் முழங்கால் தெரிந்தது. இன்னும் இரு மாதத்திற்கு அவளை எங்கேனும் தெருவில் செல்லும்போது பார்த்தால்தான் உண்டு. என்னைத் கடந்து செல்பவளின், சாக்ஸினால் பாதி வரை மூடப்பட்ட ஆடுசதையின் திரட்சியில், மென் மயிர்கள் துல்லியமாக தெரிகின்றன. ஆறாவதில் இருந்து சைக்கிளில்தான் வருகிறாள், வீட்டில் கார்கூட உள்ளது. பார்வையை அவளிடமிருந்து விலக்கிக் கொண்டேன். சந்துரு வீட்டில் தண்ணீர் குடித்துவிட்டு செட்டித் தெருவை தாண்டியவுடன் ஓட ஆரம்பித்து மிச்சமிருந்த ஐந்து நிமிட நடையை ஒரு நிமிடத்திற்குள் கடந்து வீடு வந்தேன். உள்ளறையில் தூங்கிக் கொண்டிருந்த அப்பாவை எழுப்பாமல் உடை மாற்றிக் கொண்டு சாப்பிட்டவுடன், என்னுடைய மூன்று நூலக அட்டைகளை எடுத்து பார்த்தேன். மார்ச் மாதம் முழுதும் லைப்பரரிக்குச் செல்லவில்லை. நாளையிலிருந்து மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்.

ஹிந்துவில் நான் மிகவும் விரும்பும் விளையாட்டுப் பக்கத்தை சில நிமிடங்களுக்கு மேல் படிக்க இயலவில்லை. அடுத்து விளையாட்டு செய்திகளைத் தவிர, நான் தினமும் படிக்கும் ஒரே பகுதியான ‘திஸ் டே தட் இயரில்’ ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இதே தேதியில் ஹிட்லரின் வெற்றிகள் தொடர்ந்து கொண்டிருந்தன என்று தெரிந்து கொண்டேன். மீண்டும் முதலிலிருந்து இறுதி பக்கம் வரை புரட்டியவன் தினசரியை மடித்து வைத்தபின் வானொலியை இயக்கி ‘ஆப் கி பார்ச்மயிஷ்ஷில்’ இரண்டு பாடல்கள் கேட்டு முடிப்பதற்குள் அணைத்தேன். ஐந்து வயது வரை மெட்ராஸில் குடியிருந்தபோது அருகிலிருந்த தனியார் நூலகத்திலிருந்து எடுத்து வந்து திருப்பிக் கொடுக்காத மூன்று ஆஸ்ட்ரிக்ஸ் காமிக்ஸ்களின் பக்கங்களைப் புரட்டியபின், மீண்டும் வானொலியை இயக்கி அணைக்கும்போது மணி இரண்டாகி விட்டிருந்தது. என்ன பாடல்கள் ஒளிபரப்பப்பட்டன என்பதை நினைவுகூர முயன்று அது முடியாமல், வெளியே கிளம்பி தரையில் கிடந்த கல்லை மரடோனாவைப் போல் எட்டி உதைத்து நடக்க ஆரம்பித்தேன்.

ஐந்தாறு பேர் கொண்ட குழுவாக என்னைச் சூழ ஆரம்பித்த இங்கிலாந்து கால்பந்தாட்ட வீரர்களை, அவர்களின் கணுக்கால் சுளுக்கும்படி இடமும் வலமும் சுழன்று தாண்டிச் சென்று எண்ணற்ற கோல்களை அடித்து உலக கோப்பையை வென்றபின், மைக் டைசனாக உருவெடுத்து முதல் சுற்றில் முப்பது நொடிகளுக்குள்ளேயே எதிராளியை நாக்கவுட் செய்து முடிக்கும்போது நாடார் கடையருகே வந்திருந்தேன். ‘என்ன மேன் எக்ஸாம் முடிஞ்சாச்சா’ என்று நாடார் வரவேற்றார். ‘எல்லாம் ஓவர் நாடார், சோடா குடுங்க, பன்னீர்’ என்று ஐம்பது பைசாவை அவரிடம் தந்து, அவரிடமிருந்து சோடா பாட்டிலை வாங்கியவன் அதை உலகப் கோப்பை போல முகத்தின் நேரே தூக்கி பார்த்து குடிக்க ஆரம்பித்தேன். ‘என்னடா இன்னிக்கே வெளில சுத்திட்டு வரியா, வேர்த்து ஊத்துது பாரு’ என்று கேட்ட அடுத்த போர்ஷன் சுந்தரி அக்காவிடம் ‘சும்மாதான்கா’ என்று சொல்லிக் கொண்டே என் போர்ஷனுள் நுழைந்தேன். ஒரு மணி நேரத்திற்கு மேல் செங்கல்பட்டு வீதிகளில் கால்பந்தாட்ட சாகசத்தை நிகழ்த்தியிருக்கிறேன்.

வேலை முடித்து வரும்போது, மூன்று மற்றும் இரு பாகங்கள் கொண்ட இரண்டு சரித்திர நாவல்களை தன் பள்ளி நூலகத்திலிருந்து எடுத்து வந்தார் அம்மா. அவற்றை புரட்டிக் கொண்டிருந்தபோது வீட்டிற்கு வந்த சந்துருவுடன் வெளியே சென்று எந்த தெருக்களில் என்ன பேசிக்கொண்டே நடந்தோம் என்ற பிரக்ஞையில்லாமல் வீடு திரும்பியவன் அன்றிரவு மிகக் குறைவாகவே உண்டபின், மீண்டும் அன்றையை தினசரியை படிக்க முயன்று தோற்று, அம்மா எடுத்து வந்திருந்த புத்தகங்களை புரட்டி மூடினேன்.

oOo

அடுத்த நாள் காலையில் எட்டேகாலுக்கு நூலகத்தினுள் நுழைந்தேன். எட்டு மணிக்கு திறக்கும் செங்கல்பட்டு அரசு நூலகத்திற்கு தினமும் இதே நேரத்திற்கு வந்துவிடுவேன். பெரும்பாலான நாட்களைப் போல அன்றும் நூலக வருகைப் பதிவில் கையெழுத்திட்ட முதல் ஆள் நான் என்பது பெருமிதமாக இருந்தது. நேற்று எடுத்துச் சென்றிருந்த மூன்று புத்தகங்களை தந்துவிட்டு, அன்றைய புத்தகங்களை தேர்வு செய்தவன், அடுத்த நாள் எடுத்துச் செல்ல முடிவு செய்த ஒரு நூலை அறையில் இறுதியில் இருந்த அடுக்கில் வைத்தபின் புத்தக வரிசைகளை இன்னும் சில முறை சுற்றிப் பார்த்துவிட்டு கிளம்பும் போது மணி பத்துக்கு மேல் ஆகிவிட்டிருக்கும் என்பதை, நூலக விடுமுறை நாளான வெள்ளிக்கிழமைகளையும் இரண்டாம் சனிக்கிழமையையும் தவிர தினசரி காலை யாத்திரையாக அங்கு சென்று வந்து கொண்டிருந்ததால், நூலகத்தில் உள்ள கடிகாரத்தை பார்க்காமலேயே நான் அறிவேன்.

என் அப்பன் வேலைக்குச் செல்வதை நிறுத்தி இரண்டு மூன்று வருடங்கள் ஆகிவிட்டதால் அவனும் வீட்டில்தான் இருந்தான். உள்ளறையில் அவன் அன்றைய தினசரியை படித்துக் கொண்டிருக்க நான் ஹாலில் அமர்ந்து எடுத்து வந்திருந்த நூல்களை படிக்க ஆரம்பித்தேன். மாலைக்குள் இரண்டு புத்தகங்களையாவது படித்து முடித்தால்தான் மறுநாள் காலை வழக்கம் போல் நூலகத்திற்கு செல்ல ஏதுவாக இருக்கும். பன்னிரண்டு மணியளவில் வரி விடாமல் பேப்பரை படித்து முடித்த அப்பா ஹாலில் அமர்ந்து சாப்பிட ஆரம்பிக்க நான் உள்ளறைக்குச் சென்றேன். உண்டு முடித்தவன் ‘சாப்டுடா’ என்றபடி அறைக்குள் வர நான் வெளியேறினேன். அடுத்து ‘டீ போட்டு வெச்சிருக்கேன்’ என்று நான்கு மணி வாக்கில் அவன் என்னிடம் சொல்வதுடன் எங்களுக்கிடையே அன்றைய நாளுக்கான உரையாடல் முடிவடையும், அவன் தரப்பில் அந்த நான்கு வார்த்தைகளும் என் தரப்பில் தலையாட்டுதலும்.

மதியம் அவன் உள்ளறையில் தூங்கிக் கொண்டிருக்க, எங்கள் போர்ஷனின் பின்புறம் இருந்த எலுமிச்சை மரத்தடியில் அமர்ந்து வானொலியில் பாடல்கள் கேட்டுக் கொண்டிருந்தேன். மூன்று மணிக்கு ஒலிபரப்பு நிறைவடைய மரத்தையொட்டி இருந்த சுவற்றில் அமர்ந்து மறுபுறம் இருக்கும் காலி மனையை பார்த்தபடி, அந்த வெற்றிடத்தில் போர்க்களங்களை, மர்ம குகைகளை, நாசகாரர்களின் ரகசிய இடத்தைக் கட்டெழுப்பி, பல சாகசங்களை என் மனதினுள் நிகழ்த்த ஆரம்பித்தேன். உமாவையும், மீராவையும் ஏன் உலகையேகூட இத்தனையாவது தடவை என்று சொல்ல முடியாதபடி, மீண்டுமொருமுறை கொடியவர்களிடமிருந்து காப்பாற்றி முடிக்கும்போது வெய்யில் என்னுள் முழுமையாக இறங்கி வியர்வை கண்களில் வழிந்து எரிச்சலுறச் செய்ய ஆரம்பித்திருந்தது. உதடுகளில் சிந்தியிருக்கும் உப்புப் கரிப்பை நாவால் வருடியபடியே விழிகளை கசக்கிக் கொண்டு எழுந்து உள்ளே சென்றேன்.

நாலரை மணி வாக்கில் வீட்டிற்கு வந்த சந்துருவுடன் கிளம்பினேன். டப்பா ஸ்கூலின் அருகே சரவணன், பிரபு, ஜர்தா பீடா போட்டுக் கொண்டிருந்தபோது தகப்பனிடம் மாட்டி அடிவாங்கிய நாள் முதல் கஞ்சாவென்று அழைக்கப்படும் ரகுராமன், காத்துக்கொண்டிருந்தார்கள்.

‘முரளி வியாழக்கிழமை பெட்ரோல் பங்க் அனுமார் கோவிலுக்கு போறான்டா’ என்ற பரபரப்புச் செய்தியை சரவணன் தெரிவிக்க, அனுமார் கோவிலுக்கு ஏன் பெண்கள் வருகிறார்கள், அதுவும் குறிப்பாக வியாழனன்று, என்பது போன்ற விசாரங்களுளோடு நீண்ட உரையாடலை, ‘போதும்டா டேய்’ என்று முடிவுக்கு கொண்டு வந்த கஞ்சா, ‘ஒத்தா கபில்லாம் ரிடயர் ஆகணும்டா, ஸ்ரீநாத் நல்லா போடறான்’ என்று அடுத்ததையும் ஆரம்பித்து வைத்தான்.

‘என்னத்த போடறான்’

‘ஒத்தா நீ மூடு, கபில் என்னத்த போட்டான் லாஸ்ட் ரெண்டு வருஷமா’

‘ஸ்ரீநாத் போடறத நீ வெளக்கு புடிச்சு பாத்தியா’

‘அப்ப கபில் போடும் போது நீ வெளக்கு புடிச்சியா’

‘ஸ்ரீநாத்துக்கு கல்யாணம் ஆகலைல’

‘ஒத்தா கல்யாணத்துக்கும், போடறதுக்கும் என்னடா சம்பந்தம்’

இந்திய கிரிக்கெட் அணியையும், கலவி விதிமுறைகளையும் சீரமைத்து முடிக்கும்போது ‘மெட்ராஸ் டு பாண்டிச்சேரி’ படத்தில் ஒரு காட்சியில் சில நொடிகள் தலைகாட்டிய கலெக்டர் ஆபிஸ் பிள்ளையார் கோவிலை அடைந்திருந்தவர்கள், அதன் மறுபுறம் இருந்த சாலை வழியாக, தீயணைப்பு படை குவார்டர்ஸ், அரசுப் பள்ளி எல்லாம் கடந்து, செங்கல்பட்டில் புதுப் படங்கள் உடனே வெளியாகாமல் இரண்டு மூன்று மாதங்கள் கழித்தே வருவது குறித்து அங்கலாய்த்த படி ராமர் கோவிலை நெருங்கும்போது ‘இப்படி போய்டலாம்டா’ என்று ராமகிருஷ்ணா ஸ்கூல் மேட்டில் இறங்கினேன். அங்கு திரும்பாமல் நேரே கொஞ்ச தூரம் சென்றால் கோவில் குளத்தினருகே உமாவின் வீடு. அவள் மீது எனக்குள்ள ஈர்ப்பு இந்தப் பயல்களுக்கு தெரிந்து விடக் கூடாது.

oOo

என் வீட்டின் ஹாலில் அமர்ந்திருந்தவன், தான் ரமேஷ் என்றும், செங்கல்பட்டு அரசு கலைக் கல்லூரியில் படிப்பதாகவும் கூறியதற்கு நான் பதிலேதும் சொல்லவில்லை. சமையலறையில் இருந்து காபி எடுத்துக் கொண்டு வந்து அவனிடம் தந்துவிட்டு என்னிடம் மீண்டும் அதே அறிமுகத்தை என் அப்பன் கூறியதற்கும் நான் மௌனமாகவே இருந்தேன். அம்மாவிடம் சொல்லிக் கொண்டபின் கிளம்பிய ரமேஷுடன் என் அப்பனும் சென்றான். ‘இவன் எங்கேந்து புதுசா வந்திருக்கான்’ என்று நான் கேட்டதற்கு ‘நாலஞ்சு வருஷத்துக்கு ஒரு தரம் கிறுக்கு பிடிக்கும் போலிருக்கு. எங்கேந்து தான் ஆப்படறாங்களோ’ என்று தனக்குள் பேசிக் கொண்டிருந்த அம்மா என் அப்பன் திரும்பி வந்தவுடன் எதுவும் சொல்லவில்லை.

ஒரு வாரமாக ரமேஷ் வீட்டில்தான் காலைப் பொழுதைக் கழிக்கிறான். வழக்கமான அசௌகர்ய மௌனத்தினூடே அவர்களிருவரும் மெல்லிய குரலில் பேசிக் கொள்கிறார்கள். கிளம்புவதாகச் சொல்பவனிடம் ‘சாப்டுட்டு போ’ என்கிறான் என் அப்பன். தட்டுக்கள், பாத்திரங்கள் தரையில் வைக்கப்படும் ஒலி. பெரும்பாலும் நான் நூலகம் சென்றிருக்கும்போது தான் வீட்டிற்கு வருபவன், நான் திரும்பிய பத்து பதினைந்து நிமிடங்களில் சென்று விடுவான். தண்ணீர் குடிக்க நான் ஹாலுக்கு வந்த போது ரமேஷ் கிளம்பி க்கொண்டிருந்தான். ஒன்றிரண்டு முறை என்னிடம் பேச முயன்று அதன் பின் நிறுத்தியிருந்தான் ரமேஷ்.

‘சொல்லிட்டே இருக்கேன் பதில் பேசாம இருக்க, ஒனக்கு எதுலையும் இன்ட்ரஸ்ட் இல்ல’, ‘மூஞ்சியக் காட்டாத, பேசறது புடிக்கலைனா நேரடியா சொல்லு’, ‘என்ன பெரிய மயிறு சமையல்’. சமைத்துக் கொண்டிருக்கும் அம்மாவிடம் ஒருவர் மட்டுமே நிற்கக் கூடிய சமையலறையின் வாசலில் நின்று கொண்டு என் அப்பன் மாலை நேரத்தில் பேசிக் கொண்டிருந்தான். எப்போதும் போல் சந்துருவுடன் வெளியே சென்று விட்டு திரும்பியிருந்தேன்.அன்று காலை ரமேஷ் வீட்டிற்கு வந்திருக்கவில்லை. மதியம் இரண்டு மணி அளவில் வெளியே சென்ற என் அப்பன் எப்போது திரும்பினானோ. சமைத்து முடித்தபின் சாப்பிடுமாறு அவனிடம் கெஞ்ச ஆரம்பித்த அம்மாவிடம், ‘எனக்கு எந்த மயிறு சாப்பாடும் வேண்டாம், நீயே தின்னு’ என்று அவன் கத்திக் கொண்டிருக்க, ரமேஷ் வந்தான். ‘எங்கடா போயிருந்த, அவ்ளோ திமிர் புடிச்சிடுச்சா, ராஸ்கல்’ என்று அவனிடம் அவனை நோக்கி கத்த ஆரம்பித்தான். ‘வெளில கேக்கப் போகுது’ என்று அவனிடமும் ‘உள்ள வாப்பா’ என்று போர்ஷன் வாசலில் தயங்கியபடி நின்றுகொண்டிருந்த ரமேஷிடமும் அம்மா சொன்னாள். உள்ளே வந்தவன் யாரையும் பார்க்காமல் தரையையும், கூரையையும் பார்த்தபடி இருக்க, நானும் அம்மாவும் உள்ளறைக்குச் சென்றோம். சில நிமிடங்களில் சத்தம் அடங்கி மென் குரலில் பேச்சுக்கள். ‘ரமேஷுக்கு சாப்பாடு இங்கதான்’ என்று என் அப்பன் வந்து சொல்ல, அம்மா சமையலறைக்குச் சென்றாள். உள்ளறையிலிருந்து நான் பார்த்தபோது என் அப்பன் தொடர்ந்து பேசியபடியே இருக்க, தலை நிமிராமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் ரமேஷ், அருகே அம்மா நின்றுக்கொண்டிருந்தாள்.

அன்றிரவு சாப்பிடாமல் பேப்பர் திருத்திக் கொண்டிருந்த அம்மாவுடன் ‘இவனுக்கு என்ன பிரண்ட்ஷிப் இந்த பொறுக்கி ரமேஷோட’ என்று கேட்டேன்.

‘மொதல்ல மோரே இருந்தான், அப்பறம் வசந்தி, ராணி, இப்ப ரமேஷ், ஒங்கப்பன் பொறுக்கிதான் எல்லாத்துக்கும் காரணம்’ என்று அம்மா சொன்னதை அப்போதே புரிந்து கொண்டேன் என்பதை நான் என்னிடம் ஒப்புக்கொள்ள இன்னும் இரண்டு மூன்று வாரங்கள் தேவைப்பட்டது.

oOo

அன்றைக்கு வீட்டிற்கு வந்தவனிடம் “ஆபரேஷன் பண்ணனும் சொல்லிட்டாரு” என்றாள் அம்மா. மார்ச் மாதத்திலிருந்தே அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லாமல் ‘கைனக்’ ராஜராஜனிடம் சென்று கொண்டிருந்தாள். அது குறித்து நான் மேலே கேட்பதற்குள், “திமிரு புடிச்சவன்” என்றபடி ஹாலிலிருந்து உள்ளறைக்குச் சென்றான் என் அப்பன். “என்னாச்சு?” என்று அம்மாவிடம் கேட்டேன்.

“ப்ரைவேட் க்ளினிக்ல வெச்சுக்கலாம்னு சொன்னா, டாக்டர் மாட்டேனுட்டார், கவர்ன்மென்ட் ஹாஸ்பிடல் நல்லாத்தான் இருக்குன்னு அவர் சொல்லிட்டார். திருப்பித் திருப்பி ப்ரைவேட்ல வெச்சுக்கலாம்னு அப்பா சொல்லவும் அவருக்கு கோவம் வந்துடுச்சு, அப்ப நீங்க வேற டாக்டர பாத்துக்குங்கனுட்டார், அதான்’ என்று அம்மா சொல்லும்போது அவள் சிரிப்பை அடக்கி கொள்வது தெரிந்தது. “டாக்டர் ஒத்துண்டா மட்டும் நம்மால ப்ரைவேட்ல முடியுமான்ன.”

“டேஞ்சரஸ்ஸாமா ஆப்பரேஷன்?”

“அதெல்லாம் இல்ல, நாலஞ்சு மணி நேரம் ஆகலாம், வலிக்கும். ஸ்டிச்சஸ் போடுவாங்க. ரெண்டு வாரமாவது ஆஸ்பிடல்லயே இருக்கணும்’ என்றாள்.

“என்னிக்கு ஆப்பரேஷன்?”.

“ஏப்ரல் எண்ட்லன்னு சொன்னார்”

“உங்க வீட்லேந்தோ என் வீட்லேந்தோ யாரும் வர வேண்டாம், ஒத்தனோட ஹெல்ப்புமில்லாம நாமளே பாத்துக்கலாம்” என்று சொல்லிய என் அப்பன், தேவைப்படும்போது அம்மாவை மெட்ராஸில் வசிக்கும் அவள் அத்தை வீட்டிற்கு அனுப்பத் தவறியதில்லை. மிலிட்டரி ரேஷனில் சில மளிகைப் பொருட்கள் மலிவாக கிடைக்கும் என்பதால் அவனே சில மாதங்களுக்கு ஒரு முறை திருவண்ணாமலைக்குச் சென்று தன் அம்மாவிடம் பேசி பொருட்கள் வாங்கிக் கொண்டும் வருவான். ஒன்றரை வருடங்களுக்கு முன் நடந்த சண்டையொன்றில் அவன் தள்ளி விட்டதில் தாத்தியின் கை உடைய, என் வீட்டிற்கு வரும் ஒரே உறவினரான அவளும் வருவதை நிறுத்தியிருந்தாள். ‘வேணாம் சுந்தரி, பெரிய ஆப்பரேஷன் இல்ல, அவர் இருக்காரு, இவனும் இருக்கான் போதும்’ என்று சுந்தரி அக்கா ஆஸ்பத்திரியில் ஒன்றிரண்டு நாள் இருப்பதாக கூறியதையும் தடுத்து விட்டாள்.

ஆபரேஷன் நடந்த காலையன்று நாங்களிருவர் மட்டும் அறுவை சிகிச்சை அறைக்கு வெளியே காத்துக் கொண்டிருந்தோம். ஏழெட்டு மணி நேரத்திற்குப் பிறகு விசாலமான பொது வார்டில் அனுமதிக்கப்பட்ட அம்மாவிற்கு முழுதாக நினைவு திரும்ப மாலையாகி விட்டது. பக்கத்து போர்ஷன் சுந்தரி அக்கா அன்றே அம்மாவைப் பார்த்துச் சென்றார். “நீ நைட் இங்கயே இருந்து அம்மாவ பாத்துக்கோ, காத்தால வீட்டுக்கு வந்து குளிச்சிட்டு திரும்ப ஹாஸ்பிடல் வந்துடு” என்று என்னிடம் சொல்லிவிட்டுச் என் அப்பனும் வீட்டிற்கு கிளம்பினான்.

செங்கல்பட்டின் ஒரு முனையில் இருந்த மருத்துவனையிலிருந்து காலை ஏழு மணிக்கு கிளம்பி இருபது நிமிடத்திற்கு மேலாகும் நடைக்குப்பின் வீட்டிற்கு வந்து சேருவேன். குளித்தபின், ஊரின் மறு முனையில் இருக்கும், அதே இருபது நிமிடத்திற்கு மேலாகும் நடை தூரத்தில் உள்ள, நூலகத்திற்குச் சென்று திரும்பி தண்ணீர் குடித்த பின் அம்மாவிற்கான மாற்று துணிகளுடன் உடனேயே மருத்துவமனைக்கு கிளம்புவேன். தனியாக வீட்டில் என் அப்பன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதைவிட மருத்துவமனையில் இருப்பதையே நானும் விரும்பினேன். அன்றைய தினம் எடுத்து வந்திருந்த நூல்களை படித்து முடிந்த பின் வெவ்வேறு வார்டுகள், புற நோயாளிகள் வருமிடம் என மாலை நேரத்தில் அலைந்து கொண்டிருப்பேன். அத்தகைய ஒரு இரவில் தான், அம்மா அனுமதிக்கப்பட்டிருந்த வார்டில் நைட் ஷிப்டில் இருந்த சுருட்டை முடியுடன், கண்ணாடி அணிந்த இளம் பெண் மருத்துவர் என்னுடன் பேச்சுக் கொடுத்தார். ‘ஒனக்கு எதுல இன்டிரெஸ்ட்?’ என்ற என்ற வழக்கமான கேள்வி எழ, ‘போயம்ஸ் படிக்கணும், எழுதணும்’ என்று நான் சொன்னதும் ‘இன்ட்ரஸ்ட்டிங், வித்தியாசமா இருக்கு’ என்று கூறியவர் முகத்திலிருந்த வியப்பை – கவிதைகளை விட புனைவையே நான் அதிகம் விரும்பினாலும் கவிதை தான் இந்த கேள்வியை கேட்பவர்களில் பெரும்பாலோனரை கூடுதலாக ஆச்சரியமடைய செய்யும் என்பதை கவனித்திருந்தேன் – பார்க்கும் போதுதான் அவர் அணிந்திருந்த மெல்லிய மூக்குத்தி முதல் முறையாக கண்ணில் பட அன்றிரவு வெகு நேரம் அந்த உரையாடலை என்னுள் நிகழ்த்தி, மீண்டும் மீண்டும் மூக்குத்தி ஒளிரும் அந்த வியப்பை உருவாக்கிக் கொண்டிருந்தேன். அன்றை இரவுப் பேச்சில் ‘கவிதை’ -நல்ல வேளையாக- ஆரம்பப் புள்ளியாக முடிந்து விட அதன் பின் அவருடன் பொதுவாக பேசிக் கொண்டிருப்பது தினசரி பழக்கமாகிப் போனது. உரையாடல் நடந்து கொண்டிருக்க நான் சில வருடங்கள் முன் சென்று அதே வார்டில் மூக்குத்தியுடன் வேலை பார்த்துக் கொண்டிருப்பேன். நான் மருத்துவம் படிப்பேன் என்பதில் எனக்கு அப்போது எந்த சந்தேகமும் இருக்கவில்லை.

இரண்டு நாட்கள் கழித்து காலை வழக்கத்தைவிட முன்பாக வீட்டிற்குச் சென்றேன். மடித்து வைக்கப்படாமல் இருந்த படுக்கைக்கு அருகே சில விஸ்கி பாட்டில்கள். விசிஆர் டெக் இருந்தது, வாடகைக்கு எடுத்திருப்பான். மேலுடம்பில் எதுவுமில்லாமல் பெர்முடா மட்டும் அணிந்திருந்த ரமேஷ் இரண்டு வீடியோ கேசட்களை ஷெல்பில் வைத்துக் கொண்டிருந்தான். தரையில் இருந்த புத்தகத்தை எடுத்துப் புரட்டி, ‘இரண்டு முயல் குட்டிகள் திமிறின’, ‘அவளைப் போட்டேன்’ போன்ற வார்த்தைகள் இருந்த பத்திகளைப் படித்துக் கொண்டிருக்கும்போது ‘என்னடா சீக்கிரம் வந்துட்ட’ என்று என் அப்பனின் குரல் கேட்டது. ‘என்ன படிக்கற, அது சும்மா’ என்று என் கையிலிருந்து என் அப்பன் பிடுங்கிய புத்தகத்தின் அட்டையில் ‘லைப் ஜுஸ்’ என்று எழுதப்பட்டிருந்தது. கிளம்பும் போது அம்மா பற்றி விசாரித்த சுந்தரி அக்கா “அந்த பையன் இப்பலாம் இங்கதான் படுத்துக்கறான்” என்றார்.

“வீட்டுலயே தூங்கறான் போலிருக்குமா அந்த ரமேஷு” என்று நான் சொன்னதற்கு ‘எப்படியோ ஒழிஞ்சு போட்டும் போ’ என்றாள் அம்மா. ‘மோரே’, ‘வசந்தி’ அனைவர் பற்றியும் அன்றிரவு அசைப்போட்டுக் கொண்டிருந்தேன். யாரையும் நான் பார்த்ததில்லை என்றாலும் வசந்தி குறித்து மட்டும் ஒரு முடிவுக்கு வந்திருந்தேன். பாலியல் ஈர்ப்புகள் குறித்து படித்து தெரிந்து கொண்டிருந்ததை வைத்து, மோரே குறித்தும் நான் சந்தேகித்திருந்தாலும், அன்றிரவு ‘மோரே பின்னாடியே சுத்தினான் ஒன் அப்பன்’ என்று அம்மா அவ்வப்போது புலம்புவதும், என் அப்பனுக்கு ரமேஷுடன் என்ன உறவு இருக்க முடியும் என்பதும் எனக்கு முன்பே புரிந்து விட்டன என்பதை ஒப்புக் கொண்டேன். என் அப்பன் ஏன் திருமணம் செய்து கொண்டான் என்பது குறித்து மட்டும் எனக்கு அப்போது பிடிபடவில்லை.

மே இரண்டாம் வாரம் அம்மா டிஸ்சார்ஜ் ஆனாள். எங்களுக்கு முன் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் அனைவரும், வார்டில் அதிகாரபூர்வமற்ற வழக்கமாக, அவர்கள் கிளம்பும் அன்று நர்ஸ்களுக்கு கூல் ட்ரிங்க் வாங்கித் வந்திருந்தார்கள். “ப்ளீஸ்மா, ரொம்ப கேவலமா நெனப்பாங்கமா” என்று அம்மா வார்டிலேயே கெஞ்சியதற்கு, “அதெல்லாம் காசு இல்ல, அவங்க ட்யூட்டிய செய்யறதுக்கு நாம எதுக்கு எக்ஸ்ட்ரா தரணும், டீன் கிட்ட கம்ப்ளைன் பண்ணுவேன்” என்று என் அப்பன் கத்தியதை வார்டிலுள்ளவர்கள் கவனித்தார்கள். கூட வந்திருந்த ரமேஷ் ஏதோ சொல்ல முயன்றதற்கு அவனுக்கும் வசவு விழுந்தது, விலகி நின்றவன் வேறு பக்கம் பார்க்க ஆரம்பித்தான். ‘ லூசுக் கூ’ என்று முணுமுணுத்துக் கொண்டேன். நான் என் பெற்றோருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல் போல் இருக்க முயன்று கொண்டிருந்தேன். அன்று ட்யூட்டியில் இருந்த மூக்குத்தி டாக்டர் என்னையே கவனிக்கிறார் என்று தோன்றிக் கொண்டே இருந்தது. அதன் பின் கிளம்பும் வரை எந்த நர்ஸும் எங்களிடம் எப்போதும் போல் சகஜமாகப் பேசவில்லை. மூக்குத்தி டாக்டரை தவிர்க்க எண்ணி, அவர் ஏதோ எழுதிக் கொண்டிருக்கும் போது விரைவாக கடக்க முயல, நிமிர்ந்தவர் “கிளம்பியாச்சா. குட் லக் ந்யூராலஜிஸ்ட்” என்று சிரித்தபடி சொன்னார். “தேங்கஸ் டாக்டர்” என்று மட்டும் சொல்லிவிட்டு தலையை குனிந்தபடி நகர்ந்தேன்.

oOo

“டெக் போட்டு பாத்திருக்கீங்க, கூல் ட்ரிங்க் வாங்கித் தர காசு இல்ல”

வீட்டிற்கு வந்தவுடன் சண்டை ஆரம்பித்தது. ‘மோரே, வசந்தி’, ‘ஒங்களுக்கு கொஞ்சம் கூட இரக்கமில்லையா’, ‘இவ்ளோ வருஷம் ஒங்களுக்காக ஒழச்சு கொட்டிருக்கேனே’ என்று அம்மாவிடமிருந்தும் ‘நான் அப்படித்தான்’, ‘எனக்கு யாரும் தேவையில்ல’, ‘எவங்கூட வேணா போவேன், என்னிஷ்டம்’ என்று என் அப்பன் தரப்பிலிருந்தும் நான் முன்பே பலமுறை கேள்விப்பட்டிருந்த வார்த்தைகள் வந்து கொண்டிருக்க, நான் என் அப்பனை கவனித்தபடியே இருந்தேன். சண்டையின்போது, அவன் அம்மாவை அடிப்பது சில வருடங்களுக்கு முன்பு வரைகூட சாதாரணமான நிகழ்வுதான், இந்த முறை கொஞ்சம் எல்லை மீறிப் போய் விட்டது. நான் வளர்ந்து விட்டதும் அதற்கு காரணமாக இருக்கலாம். “வேலைக்குப் போறதுனாலதான பேசற” என்றபடி அம்மாவின் பி.எட் சான்றிதழை கிழிக்க முயன்றது அவன் தப்பு. அவனிடமிருந்து அதை பிடுங்கும் போது அவன் தோளை நான் உந்தினேன். “என்னடா சப்போர்ட்டா, நீ என்னத்த படிச்சு புடுங்கறன்னு பாக்கறேன்”, என்று என அப்பன் சொல்ல, “என்னத்த வேணா பண்ணு, ” என்றேன். “நீ வெளில போடா”, என்று என்னை பிரித்துத் தள்ளிய அம்மா, ‘நீங்க செர்டிபிகேட் கிழிப்பேன்னு சொன்னதுனாலதான் அவன் அப்படி செஞ்சான். ஒண்ணும் பண்ணிடாதீங்க, ஒங்க மேலையும் அவனுக்கு அப்பெக்க்ஷன் இல்லையான்ன’ என்று அவனிடம் கெஞ்ச ஆரம்பித்தாள். “எப்படியோ ஒழி” என்றபடி சான்றிதழை அவள் மீது நான் வீச “நீ எதுக்குடா வீட்லயே இருக்கணும், ப்ரண்ட்ஸோட பேசிட்டு வா போ ” என்றாள். போர்ஷனின் வாசலில் நின்றிருந்த ரமேஷைப் பார்த்து ‘ஒத்தா லவடாக் கூ, ஒன்னால தாண்டா இவ்ளோ பிரச்சனை’ என்று கூறிவிட்டு சென்றேன். சந்துரு ஆறு மணிக்கு வருவதாக சொல்லியிருந்தான், யாரையும் பார்க்கபிடிக்காமல், எந்த இலக்குமின்றி செங்கல்பட்டின்வீதிகளில் அலைந்து கொண்டிருந்தேன். ரமேஷை அறைந்திருக்க வேண்டும், இவ்வளவு கடுமையாக பேசியிருக்க வேண்டாம், அப்பனிடம் சொல்லக்கூடும், சொன்னாலும் ஒன்றுமில்லை அந்தப் பொறுக்கி ஏதாவது கேட்டால் மண்டையைப் பிளந்து விடலாம், அம்மா தடுத்திரா விட்டால் இன்றே அதை செய்திருப்பேன். சண்டைகளின் போது அவள் தான் என்னை தடுத்து விடுகிறாள் என்பதில் உள்ள இயலாமையையும், கோழைத்தனத்தையும் நான் உணர்ந்தாலும் அந்தச் சமாதானம் எனக்குத் தேவைப்பட்டது. வீடு திரும்பியபோது என் அப்பன் படுத்துக் கொண்டிருந்தான். சாப்பிடும் போது ‘என்னாச்சு’ என்று அம்மாவிடம் கேட்டேன். தலையசைத்தாள். ‘ரமேஷ் போயிட்டானா’

‘அவன் நீ வெளில கெளம்பினவுடனே போயிட்டான்’

‘இவன்ட்ட ஏதாவது சொன்னானா’

‘இல்லையே’

அடுத்த நாள் என் அப்பன் என்ன செய்யப் போகிறான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். என்னிடம் அவன் எதையும் கேட்காதது ஏமாற்றமாகவும் அதே நேரம் நிம்மதியளிப்பதாகவும் இருந்தது.

ரமேஷ் வராமல் ஒன்றிரண்டு நாட்கள் கழிந்த பின் காலையில் வீட்டை விட்டுச் சென்ற என் அப்பன் மாலையில் வந்த அன்று எதுவும் பேசாமல் சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றான். ரமேஷைத் தேடி அவன் வீட்டிற்கு சென்று வந்திருக்கிறான், அவன் வர முடியாதென்று கூறியிருப்பான் என்று நான் யூகித்தது அதன் பின்பும் ரமேஷ் வீட்டிற்கு வராததால் உறுதியானது. என் அப்பன் அடுத்துச் உருவாக்கக்கூடிய பிரச்சனைகளை எதிர்பார்க்க ஆரம்பித்தேன். நான் நினைத்ததைப் போலவே, நேரடியாகச் சண்டையிடுவது, அடிப்பதை தவிர என் அப்பனிடமிருந்த மற்றுமொரு யுத்தியையும் இப்போதும் செயல்படுத்தினான். காலையில் பதினொன்று மணிக்கு மேல் எழுந்திருப்பவன், பல் தேய்க்காமல், குளிக்காமல் சாப்பிட்டு விட்டு மீண்டும் படுத்து, மூன்று நான்கு மணிக்கு எழுந்து காப்பி குடித்து விட்டு தூங்குவான். ஏழு மணிக்கு மீண்டும் துயில் நீக்கம், இரவுணவு, தூக்கம். உண்மையில் அவன் தூங்குகிறானா அல்லது வெறுமனே படுத்துக் கொண்டிருக்கிறானா என்று எனக்கு சந்தேகம் உண்டு. ‘அவன் என்ன வேணா பண்ணுவான், மெடிசன் படிப்ப ஒரு வருஷத்துல விட்டவன்தான, ஸ்கூல் படிக்கும்போதே லீவ் போட்டுட்டு ரெயில்வே ஸ்டேஷன்ல படுத்து தூங்க வேண்டியது, அங்கேயே அக்கவுண்ட்ல சாப்பிட்டு, மேகசின் வாங்க வேண்டியது,’ என்று முன்பொரு சண்டையின்போது இதே போல் நடந்து கொண்டது குறித்து நான் கேட்டதற்கு அம்மா சொன்னாள். உள்ளறையில்தான் அவன் படுத்துக் கொண்டிருப்பான் என்பதால் மற்றவர்கள் அவனை பார்க்க இயலாது என்பதில் எனக்கு நிம்மதி. ‘ஒங்கப்பனுக்கு ரமேஷ பாக்கணும், அப்பறம் எல்லாம் சரியாயிடுவான்,’ என்று அம்மா சொன்னாள். ‘அவன் வீடு எங்க இருக்குனே தெரியல’ என்றவனிடம், ‘பயர் சர்விஸ்மென் குவார்டர்ஸ்ல, அவங்கப்பாக்கு அங்கதான் வேலை,’ என்றாள். தூங்கிக்கொண்டிருந்த அப்பனைச் சுட்டி ‘அவன்கிட்ட கேட்டியா’ என்று கேட்டதற்கு பதில் எதுவும் வரவில்லை. ‘பின்ன எப்படி அவன் வீடு உனக்குத் தெரியும்’

‘…’

‘அவன போய் கூட்டிட்டு வான்னு ஒன்கிட்ட சொல்றானா’ என்று நான் கேட்டதற்கு ‘ரமேஷுக்கே இங்க வரதுக்கு இஷ்டம் இல்ல. இவன் தான் போய் அலையறான்’ என்றாள்

‘அதெப்படி சொல்ற’

‘இந்த ரமேஷ் ஒங்கப்பன் ஏதோ நல்லா பேசறான்னு அவங்ககூட இருந்திருப்பான், அவன பத்தி தெரிஞ்சவுடன கட் பண்ணிட்டான்..’

எதுவும் பேசாமல் இருந்தேன். அம்மாவே தொடர்ந்து ‘மோரே மட்டும் என்ன பிடிச்சா இருந்தான், நல்லா சுருட்டினான். நல்ல காலம் இவன் சீக்கிரத்திலேயே போயிட்டான். நீ வேணா பாரு, ஒங்கப்பன் என்னிக்காவது எவன் கிட்டயாவது அடி வாங்கி சாகப் போறான்’

‘சீக்கிரம் கழட்டிக்கிட்டா ரமேஷ் பொறுக்கி இல்லையான்ன’

‘இல்லடா’

‘ஒனக்கெப்படி தெரியும்’

‘எனக்கு தெரியும்டா ஒங்கப்பன’

எதுவும் சொல்லாமல் எழுந்து சென்றேன். அன்று ரமேஷிடம் நான் சொன்னதை அவன் என் அப்பனிடம் கூறியிருக்கலாம். அல்லது அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து வீட்டிற்கு வந்திருக்கலாம். நான் அவனை அடித்து விரட்டியிருக்க முடியாது. அவனிடம் பேச வேண்டும், ஏன் என் அப்பனிடம் நட்பு கொண்டான், அவன் வயதையொத்த நண்பர்கள் யாரும் அவனுக்கு இல்லையா, அவன் வீட்டில் யாரும் எதையும் கண்டு கொள்வதில்லையா?

oOo

அம்மா வீட்டிற்கு வந்து பத்து பதினைந்து நாட்கள் கழித்து காலை ஆறரை மணி வாக்கில் நாடார் கடைக்குச் சென்றபோது இன்னும் திறக்கப்படாத கடை முன் நாலைந்து பேர் நின்றிருந்தார்கள். ‘நாடாரு லேட்டா தெறக்க மாட்டாரே, நான் நேத்து சாங்காலம் பாத்தபோது கூட நல்லாத்தானே இருந்தாரு’ என்று ஒரு பெண் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அங்கு நின்று கொண்டிருந்த இன்னொரு பெண், பெரிய மணிக்காரத் தெருவைச் செட்டித் தெருவுடன் இணைக்கும் சாலையின் திசையில் கைகாட்டி கத்த, அந்தப் பக்கம் திரும்பினோம். சேஷன் திருமண மண்டபத்தின் வாயிலுக்கு முன் குழுமியிருந்த கும்பல் அதை உடைக்க ஆரம்பித்திருந்தது. நாடார் கடைக்கு அடுத்திருந்த வீட்டிலிருந்து வெளியே வந்தவர் ‘கட இன்னிக்கு தொறக்கறது கஷ்டம், ஸ்ரீபெரம்பத்தூர்ல பாம்ப் வெடிச்சு ராஜீவ் இறந்துட்டாரு,’ என்று சொன்னார். வீட்டிற்கு வந்தபோது, அம்மாவிற்கும் வானொலி வழியே செய்தி தெரிந்து, ‘இத பாருங்கமா, என்ன ஆயிருக்கு பாருங்க,’ என்று அப்பனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

எழுந்தபின் தலையிலடித்துக் கொண்டும், ‘ப்ளட், ப்ளட்’ என்று குழறிப் பேசிக் கொண்டும் என் அப்பன். வியப்பளிக்கும் வகையில் அம்மா ரமேஷ் வீட்டிற்கு செல்ல மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்ததால் மனப் பிழற்வு ஏற்பட்டவன் போல் சில நாட்களாக என் அப்பன் நடந்து கொள்ள ஆரம்பித்திருந்தான். அதைக் கண்டு ரமேஷை அழைத்து வர சென்று விடப் போகிறாள் என்று ‘சும்மா நடிக்கறான்மா’ என்று அம்மாவிடம் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தேன். உண்மையிலேயே அவனுக்கு மனச் சிதைவு ஏற்பட்டால் ஏதேனும் மருத்துவனையில் சேர்த்து தொலைத்துக் கட்டி விடலாம் என்று நான் ஆசைப்பட்டாலும் அது நடக்கக் கூடியது அல்ல என்பதை அறிந்திருந்தேன். ‘நம்ம எல்லாரையும் பைத்தியமாக்கிட்டு அவன் நல்லா இருப்பான்மா’. சிறிது நேரம் புலம்பியவன் ஏழெட்டு நாட்கள் கழித்து அன்று தான் குளித்தவன், வெளியே கிளம்ப ‘வெளில பிரச்சனையா இருக்கும்மா, அப்பறம் போங்க’ என்று அம்மா சொன்னதைக் கேட்காமல் போனான். ‘ரமேஷ் வீட்டுக்குத்தான போறான். ரோட்ல எந்த கும்பல் கிட்டயாவது நல்லா அடி வாங்கி சாகட்டும்’ என்று நான் சொன்னாலும் நிலைமை கட்டுக்குள் வந்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுந்தது.

சில நிமிடங்களுக்குப் பின் என்னுள் தோன்றிய எண்ணத்தைத் தொடர்ந்தபடி நானும் வீட்டை விட்டு வெளியேறினேன். பயர் சர்விஸ்மென் குவார்டர்ஸ் செல்லும் வழி எனக்குத் தெரிந்ததுதான். ராமகிருஷ்ணா ஸ்கூலையொட்டி உள்ள மேட்டின் மீது நடந்து சென்று கொண்டிருந்தான் அப்பன். நானும் மேடேறினேன். அரசு பள்ளியைத் தாண்டி சாலை இரண்டாகப் பிரியும் இடத்தில் வலது புறத்தில் சென்றுகொண்டிருந்தான். இந்த வழி சாதாரண நாட்களிலேயே ஆளரவமற்றதாக இருக்கும், இன்று கேட்கவே வேண்டாம். அந்த இடத்தில் அப்பனை அடித்துக் கொன்று விட்டால், கலவரத்தில் அடிபட்டு செத்தான் என்றுதான் தோன்றும் என்ற எண்ணத்தில்தான் அவன் பின்னால் வந்திருந்தேன். என் கையில் இரும்பு முட்கள் பதிக்கப்பட்டிருந்த நீண்ட கட்டை. அதைக் கொண்டு அவனை பின்னந்தலையில் அடித்து தரையில் சாய்த்து, சாலையில் உருண்டவனின் உடலெங்கும் கட்டையால் அடித்தேன். உயிருடன் விட்டு விடுமாறு என்னிடம் கெஞ்சுபவனின் முகத்தில் என் செருப்பை வைத்து தேய்த்து கூழாக்கி விட்டு நிமிரும் போது அவன் தொலைவில் சென்று கொண்டிருந்தான். இறுக மூடியிருந்த முஷ்டி எதையும் பிடித்துக் கொண்டிருக்கவில்லை. சுற்று முற்றும் பார்த்தேன், கத்தியோ, உருட்டுக் கட்டையோ எங்கு கிடைக்கும்? பெட்ரோல் இருந்தால் கொளுத்தி விடலாம். பாதையில் பெரிய கல்கூட எதுவும் இல்லை. நிற்க முடியவில்லை, சாலையில் குத்திட்டு அமர்ந்தேன்.

சிறிது நேரம் கழித்து எழுந்து வீட்டுக்கு திரும்பும்போது, கஞ்சாவைப் பார்க்கப் போனேன். ‘என்னடா திடீர்னு’ என்றவனிடம் ‘ந்யூஸ் பாத்தேல’ என்றேன். ‘யாருடா பண்ணிருப்பாங்க?’ கஞ்சா தனக்கு அடுத்த போர்ஷனில் இருப்பவர்கள் அடிதடியில் ஈடுபடுபவர்கள் என்று முன்பொருமுறை என்னிடம் சொல்லியிருந்தான். அவர்களிடம் உதவி கேட்கலாம் என்ற புது எண்ணம். என் அப்பனைப் பொறுத்தவரை கை, கால்களை உடைப்பதோடு அவர்கள் நிறுத்திக் கொள்ளத் தேவையில்லை, துண்டு துண்டாக வெட்டிப் போட்டாலும் எனக்கு அது உவப்பானதே. ஆனால் அது குறித்து கஞ்சாவிடம் எதுவும் சொல்லாமல் பொதுவாக பேசிக்கொண்டிருந்து விட்டு கிளம்பினேன். இன்னும் சில அடிகள் எடுத்து அடுத்த போர்ஷனுக்கு சென்றிருந்தால்கூட பெரிதாக எதுவும் நடந்திருக்கப் போவதில்லை. என்னை விட தைரியசாலிகள் என்றாலும், சிறுவனான நான் சொல்வதற்காக அவர்கள் அதை செய்திருக்கப் போவதில்லை, அப்படியே அவர்கள் தயாராக இருந்திருந்தாலும், அவர்களுக்குத் தர என என்னிடம் கூலியென்று எதுவும் அப்போது இல்லை.

என் அப்பன் திரும்பியபோது, வறுத்த கடலை பொட்டலம் விஸ்கி பாட்டிலுடன் வந்தான். அன்றிருந்த சூழ்நிலையில் எங்கிருந்து வாங்கினானோ. கடலையை தட்டில் பரப்பி குடிக்க ஆரம்பித்தான். யாரிடமும் எதுவும் பேசவில்லை. உள்ளறையில் அவன் குடிக்கும் வாசம் ஹாலுக்கும் வர நான் பின்புறச் சுவற்றில் சென்றமர்ந்தேன், காலி மனையில் அன்று எண்ணற்ற முறை கோரமாக, துடிதுடித்து இறந்தான் என் அப்பன். சிரிஞ்ச் இருந்தால், விஷத்தை அதில் ஏற்றி என் அப்பன் தூங்கும் போது ஊசிபோட்டு, பாம்பு கடித்து இறந்து விட்டான் என்று சொல்லிவிடலாம். சிரிஞ்ச் வீட்டில் இல்லாததோடு, ‘பாய்ஸன்’ என்று ஆங்கிலத்தில் எழுதி ஒட்டியிருக்கும் பாட்டிலோ, எலி மருந்தோகூட வீட்டில் இல்லை. பினாயில் நெடி காட்டிக் கொடுத்து விடும் என்பதால் அதை உபயோகிக்க முடியாது.

oOo

மே மாத இறுதி வந்திருந்தது. நூலகம் சென்று திரும்பியவனிடம் ‘ஒங்கம்மா பயந்து போய் பாத்ரூம்ல இருக்காங்க, யார் கூப்டாலும் வர மாட்டேங்கறாங்க,’ என்று சுந்தரி அக்கா சொன்னார். குளியறையின் சுவற்றில் சாய்ந்து, காலை நீட்டியபடி வெறித்த பார்வையுடன் அமர்ந்திருக்கும் அம்மாவின் நைட்டி காற்பகுதி சற்று மேலேறி இருக்க, பாதங்கள் வீங்கியிருந்தன, அழுத்தினால் சதையில் குழி உருவாகி மறையும். ‘உள்ள போ மாட்டேன், போ மாட்டேன்’ என்று அனத்திக் கொண்டிருந்த அம்மாவை எழுப்பி என் போர்ஷனின் வாசலருகே நடத்திக் கூட்டிக் கொண்டு வர, ‘இப்பத் தான் ஆப்பரேஷன் ஆகியிருக்கு, இப்படி ஓடலாமா, தையல் பிரிஞ்சிருமேக்கா’ என்றார் சுந்தரி அக்கா.

ஹாலில் என் அப்பன் நாற்காலியில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தான். அம்மாவின் முழங்கையை பிடித்து உள்ளே செல்ல முயன்றவனிடம், ‘என்ன கொன்னுடுவான், கொன்னுடுவான்’ என்று முனகினாள். பேப்பரை மடித்து வைத்து விட்டு கூரையைப் பார்த்தபடி நாற்காலியில் சாய்ந்த அப்பனின் மீது, என் செருப்பை எறிந்தேன். ‘ராஸ்கல்’ என்று கத்திக் கொண்டு அவன் வெளியே வர, கிணற்றடியில் இருந்த பிளாஸ்டிக் பக்கெட்டை அவன் மீது வீசி, ‘தேவிடியாப் பையா, பாஸ்டர்ட்’ என்று நானும் கத்தினேன். ‘இந்த அசிங்கம்லாம் வெளில தெரியக் கூடாதுன்னுதான இவ்ளோ நாள் கஷ்டப்பட்டேன். நியே இப்படி பண்ணறியேடா, எல்லாரும் பாக்கறாங்கடா’என்று கத்திக் கொண்டே பின்னாலிருந்து தடுத்த அம்மா, அப்பாவுக்கும் எனக்கும் இடையில் புகுந்து, ‘சின்னப் பையன் தெரியாம பண்ணிட்டான், எனக்காக விட்டுடுங்க, விட்டுடுங்க ப்ளீஸ்’ என்றபடி அப்பாவை உள்ளறைக்கு அழைத்துச் சென்றாள். ‘ஒத்தா, லவட புண்ட, மயிராண்டி, கூதி நாயே’ என்று கத்திக் கொண்டிருந்தவனின் கைகளைப் பற்றி மடக்கி ‘அழாதடா, அழாதடா’ என்றபடி சுந்தரி அக்கா, என்னை தன் போர்ஷனுக்கு அழைத்துச் சென்றாள்.

அந்த கோடையில் எந்த கொலையும் நடக்கவில்லை. ஆனால், ஏற்கனவே மிக மெல்லிதாக இருந்த, என் அப்பனுக்கும்எனக்குமான உறவு அன்று மரணித்தது.