விடைத்தாள்களை வாங்கி மேஜையின் மீது அடுக்கி வைத்த ஸார், அறையின் வாசலுக்கு செல்வதும் திரும்புவதுமாக இருந்தார். முதல் மணிச் சத்தத்துடன் அனைத்து வகுப்பறைகளிலிருந்தும் எழுந்த கூச்சலினூடே வெளியே வந்தோம். கடைசி பரீட்சை முடிந்தபின் நடக்கும் சட்டையின்மீது இங்க் அடிக்கும் சடங்கில் என் நண்பர்கள் அடைந்துள்ள நிபுணத்துவம் என்னிடம் இல்லாததால், ‘டேய் டேய் போதும்டா’ என்று எப்போதும் போல் கூச்சலிட்டேன். வழக்கம் போல் என் வான் நீல பள்ளிச் சீருடை சட்டையின் மீது பல்வேறு வடிவங்களிலும், அளவுகளிலும் இங்க் துளிகள் பதிந்தன. இந்த விளையாட்டையும் அதனூடே நாங்கள் எழுப்பிக் கொண்டிருந்த ஊளைச் சத்தத்தையும் கண்டு கொள்ளாமல் விடைத்தாள் கட்டை ஆபிஸ் ரூமில் சேர்ப்பித்து கிளம்பும் அவசரத்தில் ஆசிரியர்கள் எங்களைக் கடந்து சென்றார்கள். ஆரம்ப அதீத உற்சாகம் சற்று அடங்கிய பின் ‘பாக்கலாம்டா’, ‘ஹாப்பி ஹாலிடேஸ்டா’களை பகிர்ந்து கொண்டவர்களில் விடுமுறைக்கு வேறு ஊருக்குப் போகாத நானும் சந்துருவைப் போன்றவர்களும் இருந்தோம்.
சைக்கிள் எடுப்பதற்காக சென்றிருந்த சந்துருவிற்காக காத்துக் கொண்டிருந்தபோது பெண்கள் ஸ்டேண்டினில் இருந்து வெளியே வந்த உமா சைக்கிள் மீதேற, ஒரு கணம் மேலெழும்பி அடங்கிய ஸ்கர்டினுள் அவள் முழங்கால் தெரிந்தது. இன்னும் இரு மாதத்திற்கு அவளை எங்கேனும் தெருவில் செல்லும்போது பார்த்தால்தான் உண்டு. என்னைத் கடந்து செல்பவளின், சாக்ஸினால் பாதி வரை மூடப்பட்ட ஆடுசதையின் திரட்சியில், மென் மயிர்கள் துல்லியமாக தெரிகின்றன. ஆறாவதில் இருந்து சைக்கிளில்தான் வருகிறாள், வீட்டில் கார்கூட உள்ளது. பார்வையை அவளிடமிருந்து விலக்கிக் கொண்டேன். சந்துரு வீட்டில் தண்ணீர் குடித்துவிட்டு செட்டித் தெருவை தாண்டியவுடன் ஓட ஆரம்பித்து மிச்சமிருந்த ஐந்து நிமிட நடையை ஒரு நிமிடத்திற்குள் கடந்து வீடு வந்தேன். உள்ளறையில் தூங்கிக் கொண்டிருந்த அப்பாவை எழுப்பாமல் உடை மாற்றிக் கொண்டு சாப்பிட்டவுடன், என்னுடைய மூன்று நூலக அட்டைகளை எடுத்து பார்த்தேன். மார்ச் மாதம் முழுதும் லைப்பரரிக்குச் செல்லவில்லை. நாளையிலிருந்து மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்.
ஹிந்துவில் நான் மிகவும் விரும்பும் விளையாட்டுப் பக்கத்தை சில நிமிடங்களுக்கு மேல் படிக்க இயலவில்லை. அடுத்து விளையாட்டு செய்திகளைத் தவிர, நான் தினமும் படிக்கும் ஒரே பகுதியான ‘திஸ் டே தட் இயரில்’ ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இதே தேதியில் ஹிட்லரின் வெற்றிகள் தொடர்ந்து கொண்டிருந்தன என்று தெரிந்து கொண்டேன். மீண்டும் முதலிலிருந்து இறுதி பக்கம் வரை புரட்டியவன் தினசரியை மடித்து வைத்தபின் வானொலியை இயக்கி ‘ஆப் கி பார்ச்மயிஷ்ஷில்’ இரண்டு பாடல்கள் கேட்டு முடிப்பதற்குள் அணைத்தேன். ஐந்து வயது வரை மெட்ராஸில் குடியிருந்தபோது அருகிலிருந்த தனியார் நூலகத்திலிருந்து எடுத்து வந்து திருப்பிக் கொடுக்காத மூன்று ஆஸ்ட்ரிக்ஸ் காமிக்ஸ்களின் பக்கங்களைப் புரட்டியபின், மீண்டும் வானொலியை இயக்கி அணைக்கும்போது மணி இரண்டாகி விட்டிருந்தது. என்ன பாடல்கள் ஒளிபரப்பப்பட்டன என்பதை நினைவுகூர முயன்று அது முடியாமல், வெளியே கிளம்பி தரையில் கிடந்த கல்லை மரடோனாவைப் போல் எட்டி உதைத்து நடக்க ஆரம்பித்தேன்.
ஐந்தாறு பேர் கொண்ட குழுவாக என்னைச் சூழ ஆரம்பித்த இங்கிலாந்து கால்பந்தாட்ட வீரர்களை, அவர்களின் கணுக்கால் சுளுக்கும்படி இடமும் வலமும் சுழன்று தாண்டிச் சென்று எண்ணற்ற கோல்களை அடித்து உலக கோப்பையை வென்றபின், மைக் டைசனாக உருவெடுத்து முதல் சுற்றில் முப்பது நொடிகளுக்குள்ளேயே எதிராளியை நாக்கவுட் செய்து முடிக்கும்போது நாடார் கடையருகே வந்திருந்தேன். ‘என்ன மேன் எக்ஸாம் முடிஞ்சாச்சா’ என்று நாடார் வரவேற்றார். ‘எல்லாம் ஓவர் நாடார், சோடா குடுங்க, பன்னீர்’ என்று ஐம்பது பைசாவை அவரிடம் தந்து, அவரிடமிருந்து சோடா பாட்டிலை வாங்கியவன் அதை உலகப் கோப்பை போல முகத்தின் நேரே தூக்கி பார்த்து குடிக்க ஆரம்பித்தேன். ‘என்னடா இன்னிக்கே வெளில சுத்திட்டு வரியா, வேர்த்து ஊத்துது பாரு’ என்று கேட்ட அடுத்த போர்ஷன் சுந்தரி அக்காவிடம் ‘சும்மாதான்கா’ என்று சொல்லிக் கொண்டே என் போர்ஷனுள் நுழைந்தேன். ஒரு மணி நேரத்திற்கு மேல் செங்கல்பட்டு வீதிகளில் கால்பந்தாட்ட சாகசத்தை நிகழ்த்தியிருக்கிறேன்.
வேலை முடித்து வரும்போது, மூன்று மற்றும் இரு பாகங்கள் கொண்ட இரண்டு சரித்திர நாவல்களை தன் பள்ளி நூலகத்திலிருந்து எடுத்து வந்தார் அம்மா. அவற்றை புரட்டிக் கொண்டிருந்தபோது வீட்டிற்கு வந்த சந்துருவுடன் வெளியே சென்று எந்த தெருக்களில் என்ன பேசிக்கொண்டே நடந்தோம் என்ற பிரக்ஞையில்லாமல் வீடு திரும்பியவன் அன்றிரவு மிகக் குறைவாகவே உண்டபின், மீண்டும் அன்றையை தினசரியை படிக்க முயன்று தோற்று, அம்மா எடுத்து வந்திருந்த புத்தகங்களை புரட்டி மூடினேன்.
oOo
அடுத்த நாள் காலையில் எட்டேகாலுக்கு நூலகத்தினுள் நுழைந்தேன். எட்டு மணிக்கு திறக்கும் செங்கல்பட்டு அரசு நூலகத்திற்கு தினமும் இதே நேரத்திற்கு வந்துவிடுவேன். பெரும்பாலான நாட்களைப் போல அன்றும் நூலக வருகைப் பதிவில் கையெழுத்திட்ட முதல் ஆள் நான் என்பது பெருமிதமாக இருந்தது. நேற்று எடுத்துச் சென்றிருந்த மூன்று புத்தகங்களை தந்துவிட்டு, அன்றைய புத்தகங்களை தேர்வு செய்தவன், அடுத்த நாள் எடுத்துச் செல்ல முடிவு செய்த ஒரு நூலை அறையில் இறுதியில் இருந்த அடுக்கில் வைத்தபின் புத்தக வரிசைகளை இன்னும் சில முறை சுற்றிப் பார்த்துவிட்டு கிளம்பும் போது மணி பத்துக்கு மேல் ஆகிவிட்டிருக்கும் என்பதை, நூலக விடுமுறை நாளான வெள்ளிக்கிழமைகளையும் இரண்டாம் சனிக்கிழமையையும் தவிர தினசரி காலை யாத்திரையாக அங்கு சென்று வந்து கொண்டிருந்ததால், நூலகத்தில் உள்ள கடிகாரத்தை பார்க்காமலேயே நான் அறிவேன்.
என் அப்பன் வேலைக்குச் செல்வதை நிறுத்தி இரண்டு மூன்று வருடங்கள் ஆகிவிட்டதால் அவனும் வீட்டில்தான் இருந்தான். உள்ளறையில் அவன் அன்றைய தினசரியை படித்துக் கொண்டிருக்க நான் ஹாலில் அமர்ந்து எடுத்து வந்திருந்த நூல்களை படிக்க ஆரம்பித்தேன். மாலைக்குள் இரண்டு புத்தகங்களையாவது படித்து முடித்தால்தான் மறுநாள் காலை வழக்கம் போல் நூலகத்திற்கு செல்ல ஏதுவாக இருக்கும். பன்னிரண்டு மணியளவில் வரி விடாமல் பேப்பரை படித்து முடித்த அப்பா ஹாலில் அமர்ந்து சாப்பிட ஆரம்பிக்க நான் உள்ளறைக்குச் சென்றேன். உண்டு முடித்தவன் ‘சாப்டுடா’ என்றபடி அறைக்குள் வர நான் வெளியேறினேன். அடுத்து ‘டீ போட்டு வெச்சிருக்கேன்’ என்று நான்கு மணி வாக்கில் அவன் என்னிடம் சொல்வதுடன் எங்களுக்கிடையே அன்றைய நாளுக்கான உரையாடல் முடிவடையும், அவன் தரப்பில் அந்த நான்கு வார்த்தைகளும் என் தரப்பில் தலையாட்டுதலும்.
மதியம் அவன் உள்ளறையில் தூங்கிக் கொண்டிருக்க, எங்கள் போர்ஷனின் பின்புறம் இருந்த எலுமிச்சை மரத்தடியில் அமர்ந்து வானொலியில் பாடல்கள் கேட்டுக் கொண்டிருந்தேன். மூன்று மணிக்கு ஒலிபரப்பு நிறைவடைய மரத்தையொட்டி இருந்த சுவற்றில் அமர்ந்து மறுபுறம் இருக்கும் காலி மனையை பார்த்தபடி, அந்த வெற்றிடத்தில் போர்க்களங்களை, மர்ம குகைகளை, நாசகாரர்களின் ரகசிய இடத்தைக் கட்டெழுப்பி, பல சாகசங்களை என் மனதினுள் நிகழ்த்த ஆரம்பித்தேன். உமாவையும், மீராவையும் ஏன் உலகையேகூட இத்தனையாவது தடவை என்று சொல்ல முடியாதபடி, மீண்டுமொருமுறை கொடியவர்களிடமிருந்து காப்பாற்றி முடிக்கும்போது வெய்யில் என்னுள் முழுமையாக இறங்கி வியர்வை கண்களில் வழிந்து எரிச்சலுறச் செய்ய ஆரம்பித்திருந்தது. உதடுகளில் சிந்தியிருக்கும் உப்புப் கரிப்பை நாவால் வருடியபடியே விழிகளை கசக்கிக் கொண்டு எழுந்து உள்ளே சென்றேன்.
நாலரை மணி வாக்கில் வீட்டிற்கு வந்த சந்துருவுடன் கிளம்பினேன். டப்பா ஸ்கூலின் அருகே சரவணன், பிரபு, ஜர்தா பீடா போட்டுக் கொண்டிருந்தபோது தகப்பனிடம் மாட்டி அடிவாங்கிய நாள் முதல் கஞ்சாவென்று அழைக்கப்படும் ரகுராமன், காத்துக்கொண்டிருந்தார்கள்.
‘முரளி வியாழக்கிழமை பெட்ரோல் பங்க் அனுமார் கோவிலுக்கு போறான்டா’ என்ற பரபரப்புச் செய்தியை சரவணன் தெரிவிக்க, அனுமார் கோவிலுக்கு ஏன் பெண்கள் வருகிறார்கள், அதுவும் குறிப்பாக வியாழனன்று, என்பது போன்ற விசாரங்களுளோடு நீண்ட உரையாடலை, ‘போதும்டா டேய்’ என்று முடிவுக்கு கொண்டு வந்த கஞ்சா, ‘ஒத்தா கபில்லாம் ரிடயர் ஆகணும்டா, ஸ்ரீநாத் நல்லா போடறான்’ என்று அடுத்ததையும் ஆரம்பித்து வைத்தான்.
‘என்னத்த போடறான்’
‘ஒத்தா நீ மூடு, கபில் என்னத்த போட்டான் லாஸ்ட் ரெண்டு வருஷமா’
‘ஸ்ரீநாத் போடறத நீ வெளக்கு புடிச்சு பாத்தியா’
‘அப்ப கபில் போடும் போது நீ வெளக்கு புடிச்சியா’
‘ஸ்ரீநாத்துக்கு கல்யாணம் ஆகலைல’
‘ஒத்தா கல்யாணத்துக்கும், போடறதுக்கும் என்னடா சம்பந்தம்’
இந்திய கிரிக்கெட் அணியையும், கலவி விதிமுறைகளையும் சீரமைத்து முடிக்கும்போது ‘மெட்ராஸ் டு பாண்டிச்சேரி’ படத்தில் ஒரு காட்சியில் சில நொடிகள் தலைகாட்டிய கலெக்டர் ஆபிஸ் பிள்ளையார் கோவிலை அடைந்திருந்தவர்கள், அதன் மறுபுறம் இருந்த சாலை வழியாக, தீயணைப்பு படை குவார்டர்ஸ், அரசுப் பள்ளி எல்லாம் கடந்து, செங்கல்பட்டில் புதுப் படங்கள் உடனே வெளியாகாமல் இரண்டு மூன்று மாதங்கள் கழித்தே வருவது குறித்து அங்கலாய்த்த படி ராமர் கோவிலை நெருங்கும்போது ‘இப்படி போய்டலாம்டா’ என்று ராமகிருஷ்ணா ஸ்கூல் மேட்டில் இறங்கினேன். அங்கு திரும்பாமல் நேரே கொஞ்ச தூரம் சென்றால் கோவில் குளத்தினருகே உமாவின் வீடு. அவள் மீது எனக்குள்ள ஈர்ப்பு இந்தப் பயல்களுக்கு தெரிந்து விடக் கூடாது.
oOo
என் வீட்டின் ஹாலில் அமர்ந்திருந்தவன், தான் ரமேஷ் என்றும், செங்கல்பட்டு அரசு கலைக் கல்லூரியில் படிப்பதாகவும் கூறியதற்கு நான் பதிலேதும் சொல்லவில்லை. சமையலறையில் இருந்து காபி எடுத்துக் கொண்டு வந்து அவனிடம் தந்துவிட்டு என்னிடம் மீண்டும் அதே அறிமுகத்தை என் அப்பன் கூறியதற்கும் நான் மௌனமாகவே இருந்தேன். அம்மாவிடம் சொல்லிக் கொண்டபின் கிளம்பிய ரமேஷுடன் என் அப்பனும் சென்றான். ‘இவன் எங்கேந்து புதுசா வந்திருக்கான்’ என்று நான் கேட்டதற்கு ‘நாலஞ்சு வருஷத்துக்கு ஒரு தரம் கிறுக்கு பிடிக்கும் போலிருக்கு. எங்கேந்து தான் ஆப்படறாங்களோ’ என்று தனக்குள் பேசிக் கொண்டிருந்த அம்மா என் அப்பன் திரும்பி வந்தவுடன் எதுவும் சொல்லவில்லை.
ஒரு வாரமாக ரமேஷ் வீட்டில்தான் காலைப் பொழுதைக் கழிக்கிறான். வழக்கமான அசௌகர்ய மௌனத்தினூடே அவர்களிருவரும் மெல்லிய குரலில் பேசிக் கொள்கிறார்கள். கிளம்புவதாகச் சொல்பவனிடம் ‘சாப்டுட்டு போ’ என்கிறான் என் அப்பன். தட்டுக்கள், பாத்திரங்கள் தரையில் வைக்கப்படும் ஒலி. பெரும்பாலும் நான் நூலகம் சென்றிருக்கும்போது தான் வீட்டிற்கு வருபவன், நான் திரும்பிய பத்து பதினைந்து நிமிடங்களில் சென்று விடுவான். தண்ணீர் குடிக்க நான் ஹாலுக்கு வந்த போது ரமேஷ் கிளம்பி க்கொண்டிருந்தான். ஒன்றிரண்டு முறை என்னிடம் பேச முயன்று அதன் பின் நிறுத்தியிருந்தான் ரமேஷ்.
‘சொல்லிட்டே இருக்கேன் பதில் பேசாம இருக்க, ஒனக்கு எதுலையும் இன்ட்ரஸ்ட் இல்ல’, ‘மூஞ்சியக் காட்டாத, பேசறது புடிக்கலைனா நேரடியா சொல்லு’, ‘என்ன பெரிய மயிறு சமையல்’. சமைத்துக் கொண்டிருக்கும் அம்மாவிடம் ஒருவர் மட்டுமே நிற்கக் கூடிய சமையலறையின் வாசலில் நின்று கொண்டு என் அப்பன் மாலை நேரத்தில் பேசிக் கொண்டிருந்தான். எப்போதும் போல் சந்துருவுடன் வெளியே சென்று விட்டு திரும்பியிருந்தேன்.அன்று காலை ரமேஷ் வீட்டிற்கு வந்திருக்கவில்லை. மதியம் இரண்டு மணி அளவில் வெளியே சென்ற என் அப்பன் எப்போது திரும்பினானோ. சமைத்து முடித்தபின் சாப்பிடுமாறு அவனிடம் கெஞ்ச ஆரம்பித்த அம்மாவிடம், ‘எனக்கு எந்த மயிறு சாப்பாடும் வேண்டாம், நீயே தின்னு’ என்று அவன் கத்திக் கொண்டிருக்க, ரமேஷ் வந்தான். ‘எங்கடா போயிருந்த, அவ்ளோ திமிர் புடிச்சிடுச்சா, ராஸ்கல்’ என்று அவனிடம் அவனை நோக்கி கத்த ஆரம்பித்தான். ‘வெளில கேக்கப் போகுது’ என்று அவனிடமும் ‘உள்ள வாப்பா’ என்று போர்ஷன் வாசலில் தயங்கியபடி நின்றுகொண்டிருந்த ரமேஷிடமும் அம்மா சொன்னாள். உள்ளே வந்தவன் யாரையும் பார்க்காமல் தரையையும், கூரையையும் பார்த்தபடி இருக்க, நானும் அம்மாவும் உள்ளறைக்குச் சென்றோம். சில நிமிடங்களில் சத்தம் அடங்கி மென் குரலில் பேச்சுக்கள். ‘ரமேஷுக்கு சாப்பாடு இங்கதான்’ என்று என் அப்பன் வந்து சொல்ல, அம்மா சமையலறைக்குச் சென்றாள். உள்ளறையிலிருந்து நான் பார்த்தபோது என் அப்பன் தொடர்ந்து பேசியபடியே இருக்க, தலை நிமிராமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் ரமேஷ், அருகே அம்மா நின்றுக்கொண்டிருந்தாள்.
அன்றிரவு சாப்பிடாமல் பேப்பர் திருத்திக் கொண்டிருந்த அம்மாவுடன் ‘இவனுக்கு என்ன பிரண்ட்ஷிப் இந்த பொறுக்கி ரமேஷோட’ என்று கேட்டேன்.
‘மொதல்ல மோரே இருந்தான், அப்பறம் வசந்தி, ராணி, இப்ப ரமேஷ், ஒங்கப்பன் பொறுக்கிதான் எல்லாத்துக்கும் காரணம்’ என்று அம்மா சொன்னதை அப்போதே புரிந்து கொண்டேன் என்பதை நான் என்னிடம் ஒப்புக்கொள்ள இன்னும் இரண்டு மூன்று வாரங்கள் தேவைப்பட்டது.
oOo
அன்றைக்கு வீட்டிற்கு வந்தவனிடம் “ஆபரேஷன் பண்ணனும் சொல்லிட்டாரு” என்றாள் அம்மா. மார்ச் மாதத்திலிருந்தே அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லாமல் ‘கைனக்’ ராஜராஜனிடம் சென்று கொண்டிருந்தாள். அது குறித்து நான் மேலே கேட்பதற்குள், “திமிரு புடிச்சவன்” என்றபடி ஹாலிலிருந்து உள்ளறைக்குச் சென்றான் என் அப்பன். “என்னாச்சு?” என்று அம்மாவிடம் கேட்டேன்.
“ப்ரைவேட் க்ளினிக்ல வெச்சுக்கலாம்னு சொன்னா, டாக்டர் மாட்டேனுட்டார், கவர்ன்மென்ட் ஹாஸ்பிடல் நல்லாத்தான் இருக்குன்னு அவர் சொல்லிட்டார். திருப்பித் திருப்பி ப்ரைவேட்ல வெச்சுக்கலாம்னு அப்பா சொல்லவும் அவருக்கு கோவம் வந்துடுச்சு, அப்ப நீங்க வேற டாக்டர பாத்துக்குங்கனுட்டார், அதான்’ என்று அம்மா சொல்லும்போது அவள் சிரிப்பை அடக்கி கொள்வது தெரிந்தது. “டாக்டர் ஒத்துண்டா மட்டும் நம்மால ப்ரைவேட்ல முடியுமான்ன.”
“டேஞ்சரஸ்ஸாமா ஆப்பரேஷன்?”
“அதெல்லாம் இல்ல, நாலஞ்சு மணி நேரம் ஆகலாம், வலிக்கும். ஸ்டிச்சஸ் போடுவாங்க. ரெண்டு வாரமாவது ஆஸ்பிடல்லயே இருக்கணும்’ என்றாள்.
“என்னிக்கு ஆப்பரேஷன்?”.
“ஏப்ரல் எண்ட்லன்னு சொன்னார்”
“உங்க வீட்லேந்தோ என் வீட்லேந்தோ யாரும் வர வேண்டாம், ஒத்தனோட ஹெல்ப்புமில்லாம நாமளே பாத்துக்கலாம்” என்று சொல்லிய என் அப்பன், தேவைப்படும்போது அம்மாவை மெட்ராஸில் வசிக்கும் அவள் அத்தை வீட்டிற்கு அனுப்பத் தவறியதில்லை. மிலிட்டரி ரேஷனில் சில மளிகைப் பொருட்கள் மலிவாக கிடைக்கும் என்பதால் அவனே சில மாதங்களுக்கு ஒரு முறை திருவண்ணாமலைக்குச் சென்று தன் அம்மாவிடம் பேசி பொருட்கள் வாங்கிக் கொண்டும் வருவான். ஒன்றரை வருடங்களுக்கு முன் நடந்த சண்டையொன்றில் அவன் தள்ளி விட்டதில் தாத்தியின் கை உடைய, என் வீட்டிற்கு வரும் ஒரே உறவினரான அவளும் வருவதை நிறுத்தியிருந்தாள். ‘வேணாம் சுந்தரி, பெரிய ஆப்பரேஷன் இல்ல, அவர் இருக்காரு, இவனும் இருக்கான் போதும்’ என்று சுந்தரி அக்கா ஆஸ்பத்திரியில் ஒன்றிரண்டு நாள் இருப்பதாக கூறியதையும் தடுத்து விட்டாள்.
ஆபரேஷன் நடந்த காலையன்று நாங்களிருவர் மட்டும் அறுவை சிகிச்சை அறைக்கு வெளியே காத்துக் கொண்டிருந்தோம். ஏழெட்டு மணி நேரத்திற்குப் பிறகு விசாலமான பொது வார்டில் அனுமதிக்கப்பட்ட அம்மாவிற்கு முழுதாக நினைவு திரும்ப மாலையாகி விட்டது. பக்கத்து போர்ஷன் சுந்தரி அக்கா அன்றே அம்மாவைப் பார்த்துச் சென்றார். “நீ நைட் இங்கயே இருந்து அம்மாவ பாத்துக்கோ, காத்தால வீட்டுக்கு வந்து குளிச்சிட்டு திரும்ப ஹாஸ்பிடல் வந்துடு” என்று என்னிடம் சொல்லிவிட்டுச் என் அப்பனும் வீட்டிற்கு கிளம்பினான்.
செங்கல்பட்டின் ஒரு முனையில் இருந்த மருத்துவனையிலிருந்து காலை ஏழு மணிக்கு கிளம்பி இருபது நிமிடத்திற்கு மேலாகும் நடைக்குப்பின் வீட்டிற்கு வந்து சேருவேன். குளித்தபின், ஊரின் மறு முனையில் இருக்கும், அதே இருபது நிமிடத்திற்கு மேலாகும் நடை தூரத்தில் உள்ள, நூலகத்திற்குச் சென்று திரும்பி தண்ணீர் குடித்த பின் அம்மாவிற்கான மாற்று துணிகளுடன் உடனேயே மருத்துவமனைக்கு கிளம்புவேன். தனியாக வீட்டில் என் அப்பன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதைவிட மருத்துவமனையில் இருப்பதையே நானும் விரும்பினேன். அன்றைய தினம் எடுத்து வந்திருந்த நூல்களை படித்து முடிந்த பின் வெவ்வேறு வார்டுகள், புற நோயாளிகள் வருமிடம் என மாலை நேரத்தில் அலைந்து கொண்டிருப்பேன். அத்தகைய ஒரு இரவில் தான், அம்மா அனுமதிக்கப்பட்டிருந்த வார்டில் நைட் ஷிப்டில் இருந்த சுருட்டை முடியுடன், கண்ணாடி அணிந்த இளம் பெண் மருத்துவர் என்னுடன் பேச்சுக் கொடுத்தார். ‘ஒனக்கு எதுல இன்டிரெஸ்ட்?’ என்ற என்ற வழக்கமான கேள்வி எழ, ‘போயம்ஸ் படிக்கணும், எழுதணும்’ என்று நான் சொன்னதும் ‘இன்ட்ரஸ்ட்டிங், வித்தியாசமா இருக்கு’ என்று கூறியவர் முகத்திலிருந்த வியப்பை – கவிதைகளை விட புனைவையே நான் அதிகம் விரும்பினாலும் கவிதை தான் இந்த கேள்வியை கேட்பவர்களில் பெரும்பாலோனரை கூடுதலாக ஆச்சரியமடைய செய்யும் என்பதை கவனித்திருந்தேன் – பார்க்கும் போதுதான் அவர் அணிந்திருந்த மெல்லிய மூக்குத்தி முதல் முறையாக கண்ணில் பட அன்றிரவு வெகு நேரம் அந்த உரையாடலை என்னுள் நிகழ்த்தி, மீண்டும் மீண்டும் மூக்குத்தி ஒளிரும் அந்த வியப்பை உருவாக்கிக் கொண்டிருந்தேன். அன்றை இரவுப் பேச்சில் ‘கவிதை’ -நல்ல வேளையாக- ஆரம்பப் புள்ளியாக முடிந்து விட அதன் பின் அவருடன் பொதுவாக பேசிக் கொண்டிருப்பது தினசரி பழக்கமாகிப் போனது. உரையாடல் நடந்து கொண்டிருக்க நான் சில வருடங்கள் முன் சென்று அதே வார்டில் மூக்குத்தியுடன் வேலை பார்த்துக் கொண்டிருப்பேன். நான் மருத்துவம் படிப்பேன் என்பதில் எனக்கு அப்போது எந்த சந்தேகமும் இருக்கவில்லை.
இரண்டு நாட்கள் கழித்து காலை வழக்கத்தைவிட முன்பாக வீட்டிற்குச் சென்றேன். மடித்து வைக்கப்படாமல் இருந்த படுக்கைக்கு அருகே சில விஸ்கி பாட்டில்கள். விசிஆர் டெக் இருந்தது, வாடகைக்கு எடுத்திருப்பான். மேலுடம்பில் எதுவுமில்லாமல் பெர்முடா மட்டும் அணிந்திருந்த ரமேஷ் இரண்டு வீடியோ கேசட்களை ஷெல்பில் வைத்துக் கொண்டிருந்தான். தரையில் இருந்த புத்தகத்தை எடுத்துப் புரட்டி, ‘இரண்டு முயல் குட்டிகள் திமிறின’, ‘அவளைப் போட்டேன்’ போன்ற வார்த்தைகள் இருந்த பத்திகளைப் படித்துக் கொண்டிருக்கும்போது ‘என்னடா சீக்கிரம் வந்துட்ட’ என்று என் அப்பனின் குரல் கேட்டது. ‘என்ன படிக்கற, அது சும்மா’ என்று என் கையிலிருந்து என் அப்பன் பிடுங்கிய புத்தகத்தின் அட்டையில் ‘லைப் ஜுஸ்’ என்று எழுதப்பட்டிருந்தது. கிளம்பும் போது அம்மா பற்றி விசாரித்த சுந்தரி அக்கா “அந்த பையன் இப்பலாம் இங்கதான் படுத்துக்கறான்” என்றார்.
“வீட்டுலயே தூங்கறான் போலிருக்குமா அந்த ரமேஷு” என்று நான் சொன்னதற்கு ‘எப்படியோ ஒழிஞ்சு போட்டும் போ’ என்றாள் அம்மா. ‘மோரே’, ‘வசந்தி’ அனைவர் பற்றியும் அன்றிரவு அசைப்போட்டுக் கொண்டிருந்தேன். யாரையும் நான் பார்த்ததில்லை என்றாலும் வசந்தி குறித்து மட்டும் ஒரு முடிவுக்கு வந்திருந்தேன். பாலியல் ஈர்ப்புகள் குறித்து படித்து தெரிந்து கொண்டிருந்ததை வைத்து, மோரே குறித்தும் நான் சந்தேகித்திருந்தாலும், அன்றிரவு ‘மோரே பின்னாடியே சுத்தினான் ஒன் அப்பன்’ என்று அம்மா அவ்வப்போது புலம்புவதும், என் அப்பனுக்கு ரமேஷுடன் என்ன உறவு இருக்க முடியும் என்பதும் எனக்கு முன்பே புரிந்து விட்டன என்பதை ஒப்புக் கொண்டேன். என் அப்பன் ஏன் திருமணம் செய்து கொண்டான் என்பது குறித்து மட்டும் எனக்கு அப்போது பிடிபடவில்லை.
மே இரண்டாம் வாரம் அம்மா டிஸ்சார்ஜ் ஆனாள். எங்களுக்கு முன் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் அனைவரும், வார்டில் அதிகாரபூர்வமற்ற வழக்கமாக, அவர்கள் கிளம்பும் அன்று நர்ஸ்களுக்கு கூல் ட்ரிங்க் வாங்கித் வந்திருந்தார்கள். “ப்ளீஸ்மா, ரொம்ப கேவலமா நெனப்பாங்கமா” என்று அம்மா வார்டிலேயே கெஞ்சியதற்கு, “அதெல்லாம் காசு இல்ல, அவங்க ட்யூட்டிய செய்யறதுக்கு நாம எதுக்கு எக்ஸ்ட்ரா தரணும், டீன் கிட்ட கம்ப்ளைன் பண்ணுவேன்” என்று என் அப்பன் கத்தியதை வார்டிலுள்ளவர்கள் கவனித்தார்கள். கூட வந்திருந்த ரமேஷ் ஏதோ சொல்ல முயன்றதற்கு அவனுக்கும் வசவு விழுந்தது, விலகி நின்றவன் வேறு பக்கம் பார்க்க ஆரம்பித்தான். ‘ லூசுக் கூ’ என்று முணுமுணுத்துக் கொண்டேன். நான் என் பெற்றோருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல் போல் இருக்க முயன்று கொண்டிருந்தேன். அன்று ட்யூட்டியில் இருந்த மூக்குத்தி டாக்டர் என்னையே கவனிக்கிறார் என்று தோன்றிக் கொண்டே இருந்தது. அதன் பின் கிளம்பும் வரை எந்த நர்ஸும் எங்களிடம் எப்போதும் போல் சகஜமாகப் பேசவில்லை. மூக்குத்தி டாக்டரை தவிர்க்க எண்ணி, அவர் ஏதோ எழுதிக் கொண்டிருக்கும் போது விரைவாக கடக்க முயல, நிமிர்ந்தவர் “கிளம்பியாச்சா. குட் லக் ந்யூராலஜிஸ்ட்” என்று சிரித்தபடி சொன்னார். “தேங்கஸ் டாக்டர்” என்று மட்டும் சொல்லிவிட்டு தலையை குனிந்தபடி நகர்ந்தேன்.
oOo
“டெக் போட்டு பாத்திருக்கீங்க, கூல் ட்ரிங்க் வாங்கித் தர காசு இல்ல”
வீட்டிற்கு வந்தவுடன் சண்டை ஆரம்பித்தது. ‘மோரே, வசந்தி’, ‘ஒங்களுக்கு கொஞ்சம் கூட இரக்கமில்லையா’, ‘இவ்ளோ வருஷம் ஒங்களுக்காக ஒழச்சு கொட்டிருக்கேனே’ என்று அம்மாவிடமிருந்தும் ‘நான் அப்படித்தான்’, ‘எனக்கு யாரும் தேவையில்ல’, ‘எவங்கூட வேணா போவேன், என்னிஷ்டம்’ என்று என் அப்பன் தரப்பிலிருந்தும் நான் முன்பே பலமுறை கேள்விப்பட்டிருந்த வார்த்தைகள் வந்து கொண்டிருக்க, நான் என் அப்பனை கவனித்தபடியே இருந்தேன். சண்டையின்போது, அவன் அம்மாவை அடிப்பது சில வருடங்களுக்கு முன்பு வரைகூட சாதாரணமான நிகழ்வுதான், இந்த முறை கொஞ்சம் எல்லை மீறிப் போய் விட்டது. நான் வளர்ந்து விட்டதும் அதற்கு காரணமாக இருக்கலாம். “வேலைக்குப் போறதுனாலதான பேசற” என்றபடி அம்மாவின் பி.எட் சான்றிதழை கிழிக்க முயன்றது அவன் தப்பு. அவனிடமிருந்து அதை பிடுங்கும் போது அவன் தோளை நான் உந்தினேன். “என்னடா சப்போர்ட்டா, நீ என்னத்த படிச்சு புடுங்கறன்னு பாக்கறேன்”, என்று என அப்பன் சொல்ல, “என்னத்த வேணா பண்ணு, ” என்றேன். “நீ வெளில போடா”, என்று என்னை பிரித்துத் தள்ளிய அம்மா, ‘நீங்க செர்டிபிகேட் கிழிப்பேன்னு சொன்னதுனாலதான் அவன் அப்படி செஞ்சான். ஒண்ணும் பண்ணிடாதீங்க, ஒங்க மேலையும் அவனுக்கு அப்பெக்க்ஷன் இல்லையான்ன’ என்று அவனிடம் கெஞ்ச ஆரம்பித்தாள். “எப்படியோ ஒழி” என்றபடி சான்றிதழை அவள் மீது நான் வீச “நீ எதுக்குடா வீட்லயே இருக்கணும், ப்ரண்ட்ஸோட பேசிட்டு வா போ ” என்றாள். போர்ஷனின் வாசலில் நின்றிருந்த ரமேஷைப் பார்த்து ‘ஒத்தா லவடாக் கூ, ஒன்னால தாண்டா இவ்ளோ பிரச்சனை’ என்று கூறிவிட்டு சென்றேன். சந்துரு ஆறு மணிக்கு வருவதாக சொல்லியிருந்தான், யாரையும் பார்க்கபிடிக்காமல், எந்த இலக்குமின்றி செங்கல்பட்டின்வீதிகளில் அலைந்து கொண்டிருந்தேன். ரமேஷை அறைந்திருக்க வேண்டும், இவ்வளவு கடுமையாக பேசியிருக்க வேண்டாம், அப்பனிடம் சொல்லக்கூடும், சொன்னாலும் ஒன்றுமில்லை அந்தப் பொறுக்கி ஏதாவது கேட்டால் மண்டையைப் பிளந்து விடலாம், அம்மா தடுத்திரா விட்டால் இன்றே அதை செய்திருப்பேன். சண்டைகளின் போது அவள் தான் என்னை தடுத்து விடுகிறாள் என்பதில் உள்ள இயலாமையையும், கோழைத்தனத்தையும் நான் உணர்ந்தாலும் அந்தச் சமாதானம் எனக்குத் தேவைப்பட்டது. வீடு திரும்பியபோது என் அப்பன் படுத்துக் கொண்டிருந்தான். சாப்பிடும் போது ‘என்னாச்சு’ என்று அம்மாவிடம் கேட்டேன். தலையசைத்தாள். ‘ரமேஷ் போயிட்டானா’
‘அவன் நீ வெளில கெளம்பினவுடனே போயிட்டான்’
‘இவன்ட்ட ஏதாவது சொன்னானா’
‘இல்லையே’
அடுத்த நாள் என் அப்பன் என்ன செய்யப் போகிறான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். என்னிடம் அவன் எதையும் கேட்காதது ஏமாற்றமாகவும் அதே நேரம் நிம்மதியளிப்பதாகவும் இருந்தது.
ரமேஷ் வராமல் ஒன்றிரண்டு நாட்கள் கழிந்த பின் காலையில் வீட்டை விட்டுச் சென்ற என் அப்பன் மாலையில் வந்த அன்று எதுவும் பேசாமல் சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றான். ரமேஷைத் தேடி அவன் வீட்டிற்கு சென்று வந்திருக்கிறான், அவன் வர முடியாதென்று கூறியிருப்பான் என்று நான் யூகித்தது அதன் பின்பும் ரமேஷ் வீட்டிற்கு வராததால் உறுதியானது. என் அப்பன் அடுத்துச் உருவாக்கக்கூடிய பிரச்சனைகளை எதிர்பார்க்க ஆரம்பித்தேன். நான் நினைத்ததைப் போலவே, நேரடியாகச் சண்டையிடுவது, அடிப்பதை தவிர என் அப்பனிடமிருந்த மற்றுமொரு யுத்தியையும் இப்போதும் செயல்படுத்தினான். காலையில் பதினொன்று மணிக்கு மேல் எழுந்திருப்பவன், பல் தேய்க்காமல், குளிக்காமல் சாப்பிட்டு விட்டு மீண்டும் படுத்து, மூன்று நான்கு மணிக்கு எழுந்து காப்பி குடித்து விட்டு தூங்குவான். ஏழு மணிக்கு மீண்டும் துயில் நீக்கம், இரவுணவு, தூக்கம். உண்மையில் அவன் தூங்குகிறானா அல்லது வெறுமனே படுத்துக் கொண்டிருக்கிறானா என்று எனக்கு சந்தேகம் உண்டு. ‘அவன் என்ன வேணா பண்ணுவான், மெடிசன் படிப்ப ஒரு வருஷத்துல விட்டவன்தான, ஸ்கூல் படிக்கும்போதே லீவ் போட்டுட்டு ரெயில்வே ஸ்டேஷன்ல படுத்து தூங்க வேண்டியது, அங்கேயே அக்கவுண்ட்ல சாப்பிட்டு, மேகசின் வாங்க வேண்டியது,’ என்று முன்பொரு சண்டையின்போது இதே போல் நடந்து கொண்டது குறித்து நான் கேட்டதற்கு அம்மா சொன்னாள். உள்ளறையில்தான் அவன் படுத்துக் கொண்டிருப்பான் என்பதால் மற்றவர்கள் அவனை பார்க்க இயலாது என்பதில் எனக்கு நிம்மதி. ‘ஒங்கப்பனுக்கு ரமேஷ பாக்கணும், அப்பறம் எல்லாம் சரியாயிடுவான்,’ என்று அம்மா சொன்னாள். ‘அவன் வீடு எங்க இருக்குனே தெரியல’ என்றவனிடம், ‘பயர் சர்விஸ்மென் குவார்டர்ஸ்ல, அவங்கப்பாக்கு அங்கதான் வேலை,’ என்றாள். தூங்கிக்கொண்டிருந்த அப்பனைச் சுட்டி ‘அவன்கிட்ட கேட்டியா’ என்று கேட்டதற்கு பதில் எதுவும் வரவில்லை. ‘பின்ன எப்படி அவன் வீடு உனக்குத் தெரியும்’
‘…’
‘அவன போய் கூட்டிட்டு வான்னு ஒன்கிட்ட சொல்றானா’ என்று நான் கேட்டதற்கு ‘ரமேஷுக்கே இங்க வரதுக்கு இஷ்டம் இல்ல. இவன் தான் போய் அலையறான்’ என்றாள்
‘அதெப்படி சொல்ற’
‘இந்த ரமேஷ் ஒங்கப்பன் ஏதோ நல்லா பேசறான்னு அவங்ககூட இருந்திருப்பான், அவன பத்தி தெரிஞ்சவுடன கட் பண்ணிட்டான்..’
எதுவும் பேசாமல் இருந்தேன். அம்மாவே தொடர்ந்து ‘மோரே மட்டும் என்ன பிடிச்சா இருந்தான், நல்லா சுருட்டினான். நல்ல காலம் இவன் சீக்கிரத்திலேயே போயிட்டான். நீ வேணா பாரு, ஒங்கப்பன் என்னிக்காவது எவன் கிட்டயாவது அடி வாங்கி சாகப் போறான்’
‘சீக்கிரம் கழட்டிக்கிட்டா ரமேஷ் பொறுக்கி இல்லையான்ன’
‘இல்லடா’
‘ஒனக்கெப்படி தெரியும்’
‘எனக்கு தெரியும்டா ஒங்கப்பன’
எதுவும் சொல்லாமல் எழுந்து சென்றேன். அன்று ரமேஷிடம் நான் சொன்னதை அவன் என் அப்பனிடம் கூறியிருக்கலாம். அல்லது அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து வீட்டிற்கு வந்திருக்கலாம். நான் அவனை அடித்து விரட்டியிருக்க முடியாது. அவனிடம் பேச வேண்டும், ஏன் என் அப்பனிடம் நட்பு கொண்டான், அவன் வயதையொத்த நண்பர்கள் யாரும் அவனுக்கு இல்லையா, அவன் வீட்டில் யாரும் எதையும் கண்டு கொள்வதில்லையா?
oOo
அம்மா வீட்டிற்கு வந்து பத்து பதினைந்து நாட்கள் கழித்து காலை ஆறரை மணி வாக்கில் நாடார் கடைக்குச் சென்றபோது இன்னும் திறக்கப்படாத கடை முன் நாலைந்து பேர் நின்றிருந்தார்கள். ‘நாடாரு லேட்டா தெறக்க மாட்டாரே, நான் நேத்து சாங்காலம் பாத்தபோது கூட நல்லாத்தானே இருந்தாரு’ என்று ஒரு பெண் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அங்கு நின்று கொண்டிருந்த இன்னொரு பெண், பெரிய மணிக்காரத் தெருவைச் செட்டித் தெருவுடன் இணைக்கும் சாலையின் திசையில் கைகாட்டி கத்த, அந்தப் பக்கம் திரும்பினோம். சேஷன் திருமண மண்டபத்தின் வாயிலுக்கு முன் குழுமியிருந்த கும்பல் அதை உடைக்க ஆரம்பித்திருந்தது. நாடார் கடைக்கு அடுத்திருந்த வீட்டிலிருந்து வெளியே வந்தவர் ‘கட இன்னிக்கு தொறக்கறது கஷ்டம், ஸ்ரீபெரம்பத்தூர்ல பாம்ப் வெடிச்சு ராஜீவ் இறந்துட்டாரு,’ என்று சொன்னார். வீட்டிற்கு வந்தபோது, அம்மாவிற்கும் வானொலி வழியே செய்தி தெரிந்து, ‘இத பாருங்கமா, என்ன ஆயிருக்கு பாருங்க,’ என்று அப்பனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
எழுந்தபின் தலையிலடித்துக் கொண்டும், ‘ப்ளட், ப்ளட்’ என்று குழறிப் பேசிக் கொண்டும் என் அப்பன். வியப்பளிக்கும் வகையில் அம்மா ரமேஷ் வீட்டிற்கு செல்ல மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்ததால் மனப் பிழற்வு ஏற்பட்டவன் போல் சில நாட்களாக என் அப்பன் நடந்து கொள்ள ஆரம்பித்திருந்தான். அதைக் கண்டு ரமேஷை அழைத்து வர சென்று விடப் போகிறாள் என்று ‘சும்மா நடிக்கறான்மா’ என்று அம்மாவிடம் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தேன். உண்மையிலேயே அவனுக்கு மனச் சிதைவு ஏற்பட்டால் ஏதேனும் மருத்துவனையில் சேர்த்து தொலைத்துக் கட்டி விடலாம் என்று நான் ஆசைப்பட்டாலும் அது நடக்கக் கூடியது அல்ல என்பதை அறிந்திருந்தேன். ‘நம்ம எல்லாரையும் பைத்தியமாக்கிட்டு அவன் நல்லா இருப்பான்மா’. சிறிது நேரம் புலம்பியவன் ஏழெட்டு நாட்கள் கழித்து அன்று தான் குளித்தவன், வெளியே கிளம்ப ‘வெளில பிரச்சனையா இருக்கும்மா, அப்பறம் போங்க’ என்று அம்மா சொன்னதைக் கேட்காமல் போனான். ‘ரமேஷ் வீட்டுக்குத்தான போறான். ரோட்ல எந்த கும்பல் கிட்டயாவது நல்லா அடி வாங்கி சாகட்டும்’ என்று நான் சொன்னாலும் நிலைமை கட்டுக்குள் வந்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுந்தது.
சில நிமிடங்களுக்குப் பின் என்னுள் தோன்றிய எண்ணத்தைத் தொடர்ந்தபடி நானும் வீட்டை விட்டு வெளியேறினேன். பயர் சர்விஸ்மென் குவார்டர்ஸ் செல்லும் வழி எனக்குத் தெரிந்ததுதான். ராமகிருஷ்ணா ஸ்கூலையொட்டி உள்ள மேட்டின் மீது நடந்து சென்று கொண்டிருந்தான் அப்பன். நானும் மேடேறினேன். அரசு பள்ளியைத் தாண்டி சாலை இரண்டாகப் பிரியும் இடத்தில் வலது புறத்தில் சென்றுகொண்டிருந்தான். இந்த வழி சாதாரண நாட்களிலேயே ஆளரவமற்றதாக இருக்கும், இன்று கேட்கவே வேண்டாம். அந்த இடத்தில் அப்பனை அடித்துக் கொன்று விட்டால், கலவரத்தில் அடிபட்டு செத்தான் என்றுதான் தோன்றும் என்ற எண்ணத்தில்தான் அவன் பின்னால் வந்திருந்தேன். என் கையில் இரும்பு முட்கள் பதிக்கப்பட்டிருந்த நீண்ட கட்டை. அதைக் கொண்டு அவனை பின்னந்தலையில் அடித்து தரையில் சாய்த்து, சாலையில் உருண்டவனின் உடலெங்கும் கட்டையால் அடித்தேன். உயிருடன் விட்டு விடுமாறு என்னிடம் கெஞ்சுபவனின் முகத்தில் என் செருப்பை வைத்து தேய்த்து கூழாக்கி விட்டு நிமிரும் போது அவன் தொலைவில் சென்று கொண்டிருந்தான். இறுக மூடியிருந்த முஷ்டி எதையும் பிடித்துக் கொண்டிருக்கவில்லை. சுற்று முற்றும் பார்த்தேன், கத்தியோ, உருட்டுக் கட்டையோ எங்கு கிடைக்கும்? பெட்ரோல் இருந்தால் கொளுத்தி விடலாம். பாதையில் பெரிய கல்கூட எதுவும் இல்லை. நிற்க முடியவில்லை, சாலையில் குத்திட்டு அமர்ந்தேன்.
சிறிது நேரம் கழித்து எழுந்து வீட்டுக்கு திரும்பும்போது, கஞ்சாவைப் பார்க்கப் போனேன். ‘என்னடா திடீர்னு’ என்றவனிடம் ‘ந்யூஸ் பாத்தேல’ என்றேன். ‘யாருடா பண்ணிருப்பாங்க?’ கஞ்சா தனக்கு அடுத்த போர்ஷனில் இருப்பவர்கள் அடிதடியில் ஈடுபடுபவர்கள் என்று முன்பொருமுறை என்னிடம் சொல்லியிருந்தான். அவர்களிடம் உதவி கேட்கலாம் என்ற புது எண்ணம். என் அப்பனைப் பொறுத்தவரை கை, கால்களை உடைப்பதோடு அவர்கள் நிறுத்திக் கொள்ளத் தேவையில்லை, துண்டு துண்டாக வெட்டிப் போட்டாலும் எனக்கு அது உவப்பானதே. ஆனால் அது குறித்து கஞ்சாவிடம் எதுவும் சொல்லாமல் பொதுவாக பேசிக்கொண்டிருந்து விட்டு கிளம்பினேன். இன்னும் சில அடிகள் எடுத்து அடுத்த போர்ஷனுக்கு சென்றிருந்தால்கூட பெரிதாக எதுவும் நடந்திருக்கப் போவதில்லை. என்னை விட தைரியசாலிகள் என்றாலும், சிறுவனான நான் சொல்வதற்காக அவர்கள் அதை செய்திருக்கப் போவதில்லை, அப்படியே அவர்கள் தயாராக இருந்திருந்தாலும், அவர்களுக்குத் தர என என்னிடம் கூலியென்று எதுவும் அப்போது இல்லை.
என் அப்பன் திரும்பியபோது, வறுத்த கடலை பொட்டலம் விஸ்கி பாட்டிலுடன் வந்தான். அன்றிருந்த சூழ்நிலையில் எங்கிருந்து வாங்கினானோ. கடலையை தட்டில் பரப்பி குடிக்க ஆரம்பித்தான். யாரிடமும் எதுவும் பேசவில்லை. உள்ளறையில் அவன் குடிக்கும் வாசம் ஹாலுக்கும் வர நான் பின்புறச் சுவற்றில் சென்றமர்ந்தேன், காலி மனையில் அன்று எண்ணற்ற முறை கோரமாக, துடிதுடித்து இறந்தான் என் அப்பன். சிரிஞ்ச் இருந்தால், விஷத்தை அதில் ஏற்றி என் அப்பன் தூங்கும் போது ஊசிபோட்டு, பாம்பு கடித்து இறந்து விட்டான் என்று சொல்லிவிடலாம். சிரிஞ்ச் வீட்டில் இல்லாததோடு, ‘பாய்ஸன்’ என்று ஆங்கிலத்தில் எழுதி ஒட்டியிருக்கும் பாட்டிலோ, எலி மருந்தோகூட வீட்டில் இல்லை. பினாயில் நெடி காட்டிக் கொடுத்து விடும் என்பதால் அதை உபயோகிக்க முடியாது.
oOo
மே மாத இறுதி வந்திருந்தது. நூலகம் சென்று திரும்பியவனிடம் ‘ஒங்கம்மா பயந்து போய் பாத்ரூம்ல இருக்காங்க, யார் கூப்டாலும் வர மாட்டேங்கறாங்க,’ என்று சுந்தரி அக்கா சொன்னார். குளியறையின் சுவற்றில் சாய்ந்து, காலை நீட்டியபடி வெறித்த பார்வையுடன் அமர்ந்திருக்கும் அம்மாவின் நைட்டி காற்பகுதி சற்று மேலேறி இருக்க, பாதங்கள் வீங்கியிருந்தன, அழுத்தினால் சதையில் குழி உருவாகி மறையும். ‘உள்ள போ மாட்டேன், போ மாட்டேன்’ என்று அனத்திக் கொண்டிருந்த அம்மாவை எழுப்பி என் போர்ஷனின் வாசலருகே நடத்திக் கூட்டிக் கொண்டு வர, ‘இப்பத் தான் ஆப்பரேஷன் ஆகியிருக்கு, இப்படி ஓடலாமா, தையல் பிரிஞ்சிருமேக்கா’ என்றார் சுந்தரி அக்கா.
ஹாலில் என் அப்பன் நாற்காலியில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தான். அம்மாவின் முழங்கையை பிடித்து உள்ளே செல்ல முயன்றவனிடம், ‘என்ன கொன்னுடுவான், கொன்னுடுவான்’ என்று முனகினாள். பேப்பரை மடித்து வைத்து விட்டு கூரையைப் பார்த்தபடி நாற்காலியில் சாய்ந்த அப்பனின் மீது, என் செருப்பை எறிந்தேன். ‘ராஸ்கல்’ என்று கத்திக் கொண்டு அவன் வெளியே வர, கிணற்றடியில் இருந்த பிளாஸ்டிக் பக்கெட்டை அவன் மீது வீசி, ‘தேவிடியாப் பையா, பாஸ்டர்ட்’ என்று நானும் கத்தினேன். ‘இந்த அசிங்கம்லாம் வெளில தெரியக் கூடாதுன்னுதான இவ்ளோ நாள் கஷ்டப்பட்டேன். நியே இப்படி பண்ணறியேடா, எல்லாரும் பாக்கறாங்கடா’என்று கத்திக் கொண்டே பின்னாலிருந்து தடுத்த அம்மா, அப்பாவுக்கும் எனக்கும் இடையில் புகுந்து, ‘சின்னப் பையன் தெரியாம பண்ணிட்டான், எனக்காக விட்டுடுங்க, விட்டுடுங்க ப்ளீஸ்’ என்றபடி அப்பாவை உள்ளறைக்கு அழைத்துச் சென்றாள். ‘ஒத்தா, லவட புண்ட, மயிராண்டி, கூதி நாயே’ என்று கத்திக் கொண்டிருந்தவனின் கைகளைப் பற்றி மடக்கி ‘அழாதடா, அழாதடா’ என்றபடி சுந்தரி அக்கா, என்னை தன் போர்ஷனுக்கு அழைத்துச் சென்றாள்.
அந்த கோடையில் எந்த கொலையும் நடக்கவில்லை. ஆனால், ஏற்கனவே மிக மெல்லிதாக இருந்த, என் அப்பனுக்கும்எனக்குமான உறவு அன்று மரணித்தது.