சிறுகதை

நினைவைப் புதைத்தல்- ராகேஷ் கன்னியாகுமரி சிறுகதை

ராகேஷ் கன்னியாகுமரி

நேற்றுவரை தன்னுடன் விளையாடி மகிழ்ந்த தாத்தாவுடன்தான் இருந்தான் சுடலை. ஆனால் இப்போது அவர் குளிர்ந்து விறைத்த தேகமாக. மிகவும் நீண்ட உருவம். எப்படியும் எண்பது வயது தாண்டியிருக்கும். அம்பாசிடர் காரின் பின்புறம், மடியில் அவரது கால்கள். காலில் இருந்த அழுக்கு அப்படியே தான் இருக்கிறது. நகம் நீளமாக என்பதை விட அளவோ அழகோ இல்லாத ஒரு அழகில் அவர் கால்களில்.

சுடலை பள்ளிக்கூடம் போய்விட்டு பக்கத்தில் இருக்கும் தன் வீட்டுக்கு நேராகச் சென்றதே குறைவு. சாயங்காலம் வாசலில் அவன் தென்பட்டவுடன் ‘ஓடிவாடியே’ என்று மனைவியை அழைப்பதுதான் தாத்தாவின் தினவழக்கம். அவரது கத்தி அழைக்கும் குரல் மற்றும் புளங்காகிதமே பக்கத்து வீட்டில் இருக்கும் அம்மாவுக்கு அவன் வருகையை உணர்த்திவிடும். பாட்டி நடந்து வரும்போதே சாப்பிடுவதற்கு அவனுடைய வாயும் வயிறும் தயாராகிவிடும்.

ஒருமுறை பாட்டியை எட்டி உதைத்ததை பார்த்தவுடனே அவனை அறியாமல் அழுதுவிட்டான். பாட்டியும் உதையை வாங்கிக்கொண்டு முனகிக்கொண்டே ஒரு மூலையில் போய் அமர்ந்து ‘இந்த சவத்து கிழவனுக்க காலு வெளங்காத போவ. காலனுக்க விளி இதுக்கு வரல்லியே,’ என்றவாறே சுடலையை அழைத்து அணைத்துக்கொண்டாள் . கண்ணீர் நிற்காமல் வடிந்துக்கொண்டே இருந்தது. அவளும் துடைத்துக்கொண்டே இருந்தாள். அது நடந்து ஏழெட்டு வருடங்கள் இருக்கலாம்.

சுடலை அவன் தாத்தா நகம் வெட்டுவதற்கென இருக்கும் நகவெட்டியை உபயோகித்து பார்த்ததேயில்லை. எப்போதும் கையில் கொண்டு நடக்கும் சிறு வெட்டுக்கத்தியால்தான் லாகவமாக வெட்டுவார் . ஆனால் ஒரு நாள் கூட வெட்டிய நகங்களை வயலில் வீசவே மாட்டார். அவன் சொல்லியும் பார்த்தான், “பக்கத்தில் ஓடும் சிறு ஓடையில் வீசுங்க”, என. அவர் அதற்காக திட்டியதுடன் தண்ணீரில் எக்காரணத்தைக் கொண்டும் எச்சில் துப்பவோ, குப்பைகளை வீசவோ கூடாது என்றும், நகம் மூதேவியின் அம்சம் என்பதால் அதை யாருடைய காலடியும் பதியாத இடத்தில்தான் களைய வேண்டும் என்றதும் அவனுக்கு நினைவுள்ளது .

இதையேதான் பாட்டியும் சொன்னாள், நகங்கள் காளானாய் உருமாறும் என. அதை வயலில் போட்டால் சாமிகள் கோபமாவார்கள் என்றும், நீரில் போட்டால் தண்ணீர் கிடைக்காமல் கடைசி காலத்தில் இறக்க நேரும் எனவும்.

தாத்தா நகங்களை சிறு காய்ந்த இலையில் சேகரித்து எடுத்து வந்து தார்ச்சாலையின் ஓரத்தில் போடுவார், அல்லது இவனிடம் போடச்சொல்வார். இவன் பயத்தால் ஒரு நகத்தைக்கூட சிந்தாமல் அவ்வளவு தூரம் நடந்து வந்து போட்டுச் செல்வான். அவரும் அதை தொலைவில் இருந்து கவனிப்பார். பாட்டி சொல்வாள், நகக்கண்ணில் தோன்றும் வெள்ளைப்புள்ளிகள் அதிர்ஷ்டத்தின் வருகை என. ஒவ்வொரு புள்ளிக்கும் புதுத் துணி கிடைக்கும் எனவும், கிடைத்தவுடன் புள்ளிகள் மறைந்துவிடும் என்றும். நகம் அவனுக்கு வேகமாக வளரும். ஆனால் தங்கைக்கு அப்படி அல்ல. பள்ளி விடுமுறைக் காலங்களில் அதில் அவ்வளவு அழுக்கு படியும். அதே கைகளுடன் சாப்பிடவே பாட்டி விடமாட்டாள். ஆனால் அப்போதெல்லாம் தாத்தா தான் அவனுக்காக பேசுபவர்.
நேற்று இரவிலும் இவன் வெற்றிலை பாக்கை கல்லில் வைத்து இடித்துக் கொடுத்தான். இரவு பதினொரு மணிவாக்கில்தான் கண் திறக்க முடியவில்லை என பாட்டியை கூப்பிட்டார். பாட்டி ஓடிச்சென்று அவரை எழுப்பப் பார்க்கும்போதே நிலைகுத்திய பார்வை. பாட்டியின் அரட்டல் கேட்டுத்தான் சுடலை எழுந்தான். பக்கத்து வீட்டில் இருக்கும் அப்பாவை அழைக்க ஓடினான். அவர் அதற்கு பக்கத்து வீட்டில் இருக்கும் டிரைவர் அண்ணாச்சியை கூப்பிட ஓடினார். அவரது கருப்பு அம்பாசிடர் காரில்தான் தூக்கிச் சென்றனர். ஆஸ்பத்திரியில் சேர்க்கும்போதே தாத்தா செத்துப்போவார் என சுடலைக்கு தோன்றியது. அதுதான் நடந்ததும். ஒரு மணி அளவில் உடம்பை எடுத்துப் போகச் சொல்லிவிட்டனர்.

இப்போது அவனது அப்பாவும், பாட்டியும் இவனுடன் அழுது கொண்டே வந்தனர். வாகனம் வந்து நின்றதும் சுடலையின் அம்மாவின் அழுகையும், அந்த இரவில் எதிரொலிக்கத் தொடங்கியது. மரங்களில் இருந்த காகங்கள் கத்திக்கொண்டே பறந்தது. தாத்தாவின் காலை இவன் பிடித்துக் கொண்டான். பிணத்தை அப்புறப்படுத்தி அதை வீட்டு வெளி வராந்தாவில் வைத்தனர். வெற்றிலைக் கறைகூட அவர் உதட்டில் இருந்தது.

பக்கத்து வீடுகளில் இருந்து ஒவ்வொரு ஆளாக வரத்தொடங்கினர். சுடலையின் அப்பாவிடம் பேசிவிட்டு ஒவ்வொரு ஆட்களையும், சுடலையை ஒத்த பதின்வயதுடைய பசங்களையும் ஒரு பெரியவர் ஒவ்வொரு ஊருக்கும் சென்று தகவல் தெரிவிக்க பிரித்து வழி சொல்லி, பெயர் சொல்லி, அடக்கம் செய்யப்போகும் நேரத்தைச் சொல்லி அனுப்பிக்கொண்டிருந்தார்.

சுடலை மட்டுமே இப்போது அவ்விடத்தில் இளவயதில் இருப்பவன். அவனது அப்பா வேகமாக வந்து தாத்தாவின் நண்பரிடம், புகைப்படத்தையும் இறப்புச் செய்தியையும் பத்திரிக்கைகளில் போடவேண்டும், என்றார். அதற்கு, தம்பி கொஞ்சம் பணம் ஆகுமே என்றவரிடம், எவ்வளவு செலவானாலும் அது மட்டும் செய்யாமல் இருக்கவே முடியாது, என்று கொஞ்சம் ஆவேசமாக சொன்னார் அப்பா.

ஏதாவது பழைய புகைப்படம் ஒன்றை தேடி எடுத்துவரச் சொன்னார் சுடலையிடம். தாத்தாவின் பாதி உடைந்த அலமாரியில் எதுவும் இல்லை. வீட்டில் பெரிது பெரிதாக காந்தி, நேரு, இந்திரா, ஏன் லால் பகதூர் சாஸ்திரியின் புகைப்படம்கூட இருந்தது. ஆனால் அவரின் ஒரு புகைப்படமும் சிக்கவில்லை. நினைவில் வந்தவனாய், அப்பாவின் கல்யாண படத்தில் அவர் பாட்டியுடன் உட்கார்ந்துகொண்டு இருப்பதைப் போன்ற படத்தை எடுக்க வீட்டுக்குச் சென்று கொஞ்சம் மங்கிய அந்த கருப்புவெள்ளை படத்தை எடுத்துக்கொண்டு பெரியவரிடம் காட்டினான். அவர் கையில் இருந்த நீண்ட டார்ச் லைட்டை அதன்மேல் அடித்துப்பார்த்தார். இது அவ்வளவு தெளிவில்லையே தம்பி, வேற இருக்குதாணு பாருப்பா, என்றார். அப்பா அதை பார்த்துக்கொண்டே வேகமாக அருகில் வந்து, இந்த ஒண்ணுதான் கொஞ்சம் தெளிவா இருக்கு, என்றார்.

சரி… என்றவர், இப்போ பத்திரிக்கை ஆபீஸ் அனுப்ப வேற ஆள் இல்லை, தம்பியை போகச் சொல்லலாமா, என்றவாறே அப்பாவைப் பார்த்தார். சரி, என்றவர் கையில் கொஞ்சம் காசை திணித்துவிட்டு நடந்தார். சுடலை புகைப்படத்துடன் பல பத்திரிக்கை அலுவலகங்கள் இருந்த நாகர்கோவிலின் முக்கிய சாலையை அடைந்தான்.

முதலில் இருந்த ஆங்கில பத்திரிக்கை அலுவலகத்தின் வாசலிலேயே இறப்புச் செய்திகளுக்கு இப்போது ஐந்து சதவிகித தள்ளுபடி விலையில் பதிப்பித்து தருவதாக எழுதப்பட்டிருந்தது. இறப்புச் செய்தி அவ்வளவு சந்தோசமான செய்தி என எப்படி இந்த மடையர்கள் யோசித்தார்கள்? ஒரு வேளை செத்தவர்கள் செத்த பின்னும் பிள்ளைகளுக்கு சேமித்துக்கொடுக்கிறார்கள் என்ற நினைப்பில் எழுதி வைத்திருக்கலாம். அந்தச் செய்தியே அவனுக்கு கோபத்தையும், கசப்பையும் அந்த பத்திரிக்கை மேல் தோன்றச் செய்தது. தாத்தா எக்காரணத்தைக் கொண்டும் அந்த பத்திரிக்கையில் மட்டும் வரவே கூடாது என்று முடிவெடுத்தவனாய் பக்கத்து அலுவலகத்துக்குச் சென்றான்.

அங்கு இப்போது இது சேவை என்பதால் சரியான காசுக்கு பதிலாக இருபத்தைந்து சதவிகிதம் விலை குறைத்துள்ளதாக பறைசாற்றி எழுதி வைத்திருந்தது. மனிதாபிமான செயல் தான் என்பதால் உள்ளே சென்றான். அங்கிருந்தவரிடம் விவரத்தை சொன்னபின் அவர் சொன்ன விளம்பர விலை இவன் கையில் வைத்திருந்ததைவிட இருபத்தைந்து சதவிகிதம் அதிகமாகதான் இருந்தது.

அப்பா ஏன் பத்திரிக்கையில் போட பிரியப்படுகிறார், சுடலைக்குத் தெரிந்து அந்த ஊரில் அப்படி யாருமே போடுவது வழக்கமில்லை. ஒருமுறை சுடலை வீட்டு வராண்டாவில் விளையாடிக்கொண்டிருந்த நேரம் வெற்றிலைக்கான புகையிலை வாங்கி வந்த பொட்டலத்தில் இருந்த பழைய செய்தித்தாளை பார்த்துக்கொண்டே தென்னைக்கு உரமேற்ற குழி தோண்டிக்கொண்டிருந்த அப்பாவிடம், இதற்கெல்லாம் ரொம்ப காசு கேப்பானுகளோ?, என்று செய்தித்தாளில் இருந்த யாரோ ஒருவரின் மரண அறிவிப்பை பார்த்துக்கொண்டே கேட்டார். அப்பாவும் பெரிய சிரத்தையில்லாமல், ஆமா… கொஞ்சம் கேப்பானுவ, என்றார். போட்டு எதுக்கு? யாருக்காக?, என அப்பா முணுமுணுத்ததும் நினைவுக்கு வந்தது. ஒருவேளை தாத்தாவின் ஆகப்பெரிய கடைசி கனவாக தன் புகைப்படமும் பெயரும் மரணத்துக்குப் பின் செய்தித்தாளில் வரவேண்டும் என்பதாகவே இருந்திருக்கலாம். இல்லாவிட்டால் ஏன் அந்த செய்தித்தாளின் கிழிந்த துண்டை கூரையின் இடையில் திருகி வைத்துக்கொண்டார்.

இப்படிச் செய்வதால் சுற்றியிருக்கும் பத்தோ பதினைந்தோ கிராமங்களைத் தாண்டி எங்குமே செல்லாத, யாரையுமே தெரியாத, எந்த சொந்த பந்தமும் இல்லாத, தாத்தாவை யார் அடையாளம் காண்பார்கள். அப்படி பார்த்து ஒருவர்கூட வருவார் என நம்பிக்கை சுடலைக்கு ஒரு துளி கூட கிடையாது. இதைவிட பெரிய விஷயம் இவர்கள் வீட்டில்கூட செய்தித்தாள் வரவழைப்பதும் இல்லை. ஏன் பக்கத்து வீடுகளிலும் இதே தான் நிலை.

அப்பாவுக்கு ஆங்கிலமும் தெரியாது. தமிழும் தட்டுத் தடுமாறிதான் வாசிப்பார். தாத்தாவுக்கு ஒரு எழுத்தாவது தெரியுமா என்பது சந்தேகம். அப்படியிருந்தும் ஏன் இதற்கு விருப்பப்படுகின்றனர். சந்தேகத்துடனே இவன் அடுத்திருந்த பத்திரிக்கை அலுவலகத்தில் நுழைந்துவிட்டான்.

அங்கிருந்தவர் என்ன என்பது போல் தலையை மட்டுமே ஆட்டிக் கேட்டார். இவன், செத்த செய்தி போடணும், என்றான். அவர் மெதுவாக எழுந்து வெளியே சென்று வாயில் இருந்த வெற்றிலையை துப்பினார். நெருங்கி அருகில் வந்து தோளில் கைவைத்து உட்காரச் சொன்னார்.

பெயர், விலாசம், வயது போன்ற தகவல்களை கேட்கத்தொடங்கினார். சுடலைக்கு பயம் வந்துவிட்டது. வெருக்கென எழுந்தவன், எவ்வளவு ஆகும், எனக் கேட்டான். அவர் பதிலே சொல்லாமல் அமரச் சொன்னார், சைகையில். தயக்கத்துடனே இரும்பு நாற்காலியில் மீண்டும் அமர்ந்தான். அவர் கையை நீட்டி வாயைக் குவித்து தலையை கொஞ்சம் மேலாக தூக்கிக்கொண்டு, போட்டோ இருக்கா?, என்றார்.

இவன் கையில் இருந்த போட்டோவை நீட்டினான். அவர் அந்த போட்டோவை பார்த்துவிட்டு, தாத்தா உன்னை போலதான், என்றார். பின் மெதுவாக உள்ளறைக்கு எழுந்து நடந்தார். சுடலை அறையின் சுற்றும் முற்றும் தெளிவாக பார்த்தான். அங்கு கிடந்த பத்திரிக்கைகள், படங்கள் எதிலும் தமிழ் எழுத்தே இல்லை. அவனுக்கு அப்போதுதான் உறைக்கத்தொடங்கியது அது மலையாள பத்திரிக்கை விளம்பர அலுவலகம் என்று. என்ன செய்வது என்று நினைக்கும்போதே அவர் வந்து போட்டோவைத் திருப்பி கையில் கொடுத்துவிட்டு கிளம்பச் சொன்னார். நாளைய பத்திரிக்கையில் செய்தி வரும் என்றவர் மீண்டும் வெற்றிலை துப்ப வெளியே சென்றார். அவர் உள்ளே வரும்வரை காத்திருந்துவிட்டு, காசு எவ்வளவு, எனக் கேட்டான். இதற்கு இலவசம் தானே, அவர் சாவதானமாகச் சொல்லிவிட்டு மீண்டும் உள்ளறைக்கு திரும்பினார்.

சுடலைக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. நாளைக்கு மலையாள பத்திரிக்கைகள் உலகம் முழுவதும் சென்று தாத்தாவின் இறந்த செய்தியை அறிவிக்கும். மரண செய்தி கேட்டு பல பேர் நிச்சயம் வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் ரோட்டை கடந்து நடக்கத்தொடங்கினான்.

நிழல் தேடும் பறவைகள் – அரிசங்கர் சிறுகதை

அரிசங்கர்

“டேய்… எங்கடா போற…”

பாலுவின் பாட்டி கேட்டுக் கொண்டிருக்கும்போதே அவன் வேகமாக இறங்கி மெயின் ரோட்டை நோக்கி போய்க்கொண்டிருந்தான். கிழவி கத்திக்கொண்டேயிருந்தாள். “அய்யோ… நானே இந்தப் புள்ளய சீரழிச்சிட்டனே, இந்தப் புள்ளய வெச்சிக்கிட்டு நான் என்ன பண்ணுவேன்” என்று தொடர்ந்து இதையே வேவ்வேறு மாதிரி புலம்பிக் கொண்டிருந்தாள். வீட்டில் இருந்தவர்கள் இதைப் பொருட்படுத்தாமல் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தனர். பாலுவின் அம்மா இறந்து பதினாறாம் நாள் காரியத்துக்கான வேலை நடந்து கொண்டிருந்தது. மறுபடியும் பாலு தெரிகிறானா என்று கிழவி எட்டிப்பார்த்தாள், தெருவில் யாருமே தட்டுப்படவில்லை.

 

பாலு, அவன் அம்மா வயித்துல இருக்கும்போதே அவன் அப்பா விபத்தில் செத்துட்டார். பாலு பொறக்கற வரைக்கும் கிழவிதான் எல்லாம் பாத்துகிட்டது. கிழவி பெயர் கண்ணம்மா. பாலுவின் அப்பாவை பெத்தவள். பாலுவிற்கு அம்மா வகையில சொந்தம்னு பெருசா ஒண்ணும் இல்ல. கிழவிக்கு ரெண்டு பசங்க, பெரியவன் பேரு குமார், சின்னவன் பேரு சேகர். குமார்தான் பாலுவோட அப்பா. ஏ.எப்.டி மில்லுல வேலை செஞ்சிட்டிருந்தாரு. வேலை முடிஞ்சி சைக்கிள்ள வரும்போது சேலியமேடுகிட்ட லாரி அடிச்சிட்டு அங்கயே உயிர் போய்டுச்சி. ராத்திரில நடந்ததுனால அடிச்சது யாருனு தெரியல. பாலு அப்பா சாகும்போது அவங்க அம்மா நாலு மாசம். எல்லாம் கலச்சிடலாம்னு சொன்னாங்க. கிழவி விடவேயில்ல. “சின்ன பொண்ணு, புள்ள பெத்துட்டு தனியா இன்னா பண்ணும்,” எல்லாரும் கேக்கும்போது “எல்லாம் எனக்கு தெரியும், போய் வேலைய பாருங்க, என்னமோ இவனுங்க வந்துதான் கஞ்சி ஊத்தர மாதிரி நிக்கறானுங்க” னு மூஞ்சில அடிச்சாப்புல கேட்டதால, அதுக்கப்பறம் யாரும் கிழவிகிட்ட எதுவும் கேக்கல.

குழந்த பொறந்தவுடனே கிழவி, பாலுவோட அம்மாகிட்ட ஜாடயா கேக்க ஆரம்பிச்சது, “ஏ வள்ளி, எவ்வளோ நாளுக்கு இப்படி இருக்கலாம்னு இருக்க. எல்லாரும் என்னல ஏசராங்க. நானும் உன்ன இன்னும் எத்தினி நாலுக்கு காவக்காக்கறது.”

வள்ளி எதுவும் பேசல. அவள் அடுப்புல இருந்த சட்டிய இறக்கி கீழ வெச்சிட்டு எழுந்து தோட்டத்து பக்கம் போகும்போது கிழவி மறுபடியும் ஆரம்பித்தது.

“நான் கேக்குறேன் என்ன பதிலே சொல்லாம போறவ, நில்லுடி” என்றாள்.

நின்று திரும்பி “என்ன” என்பது போல் பார்த்தாள் வள்ளி.

“சேகர கட்டிக்கறியா என்ன?. உன்ன வெளியலாம் கட்டிக் குடுக்க எனக்கு யோசன இல்ல. ஏன் வாரிசு என் வீட்டுலதான் வளரனும். ஒழுங்கா சொல்லறத செய்” என்றாள்.

செஞ்சிதான் ஆகனும். இல்ல வெற வழி. கைபுள்ள எடுத்துனு எங்க போறது.

பெருசா யாரயும் கூப்புடுல. அக்கம் பக்கம் நாலு பேரு, ஊர் பெருசு ரெண்டு பேரு, சொந்தம் கொஞ்சம். மொத்தமாவே ஒரு நாப்பது பேருகூட இல்ல. செலவும் பெருசா செய்யல. கல்யாணத்த முடிச்ச சந்தோசம் கிழவிக்கு. கிழவி வள்ளிய பள்ளத்துல இருந்து தூக்கறன்னு இழுத்து பாதாளத்துல எறக்கிடுச்சி.

 

பாலு ஏரிக்கரை பக்கமா சுத்திக்கிட்டிருந்தான். ஊர்ல எங்கல்லாம் ஒதுக்குப்புறமான எடம் இருந்துச்சோ அங்கெல்லாம் போய் தேடிக்கிட்டிருந்தான். எங்க தேடியும் சேகர காணல. எல்லாம் எடத்துலயும் சுத்திட்டு வீட்டுக்கு போலாம்னு வரப்புல வரும்போது பம்பு செட்டுல சரக்கு அடிச்சிட்டு இருந்த ரெண்டு பேரு இவன அடையாளம் கண்டு, “டேய், யாரு சேகரயா தேடர” என்றான் ஒருத்தன்.

பதிலுக்கு பாலு “ஆமா எங்க இருக்கு” என்றான்.

“பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல பாத்தேன்டா” என்று சொல்லிட்டு அவர்களுக்குள் ஏதோ பேசிகிட்டானுங்க அப்பறம் சிரிச்சிக்கிட்டாங்க.

பாலு வேகமா பஸ் ஸ்டாண்ட் பக்கம் ஓடினான்.

 

ல்யாணம் ஆகியும் கொஞ்ச நாளுக்கு சேகர் வள்ளிய அண்ணினே கூப்பிட்டான். அதுக்கு ஒரு நாள் கிழவி கூப்பாடு போட்டதும்தான் பேரு சொல்லி கூப்பிட்டான். சேகர் சின்ன வயசுலருந்தே கிழவிகூடவே தான் திரிவான். அவங்க அண்ணன்கூடலாம் விளையாட போகமாட்டான். கிழவிக்கு பாதிவேலைய அவன்தான் செய்வான். கிழவிகூட ஆரம்பத்துல ஏதோ நம்ம மேல இருக்கற பாசத்துலதான் செய்யறானு நினைச்சிக்கிச்சி. ஆனா சேகருக்கு ஆம்பள பசங்ககூட போய் விளையாடறத விட வீட்டு வேல செய்றதுதான் புடிச்சிருந்தது.

நிரந்தரமா எந்த வேலயும் இல்ல. எங்க போனாலும் நிலையில்ல. கிழவிக்கு ஒண்ணும் புரியல. இருக்குற கொஞ்ச நிலத்த பாத்துக்கனு சொல்லிடுச்சி. சரி அவனுக்கு ஒரு கல்யாணத்த பண்ணிடலாம்னு குமாருகிட்ட கேட்டப்ப, “இவனுக்கு எவன் பொண்ணு குடுப்பான்”னு கேட்டுட்டு போனான். ஏன்னு கிழவி எதிர்க் கேள்வி கேட்டப்ப பதில் இல்ல. குமார் போன கொஞ்ச நாள்லயே கிழவிக்கு இப்படி ஒரு யோசன வந்துடுச்சி. ஆனா புள்ள பொறக்கட்டும்னு காத்திருந்துச்சி.

சேகர், பாலு மேல உசுரயே வச்சிருந்தான். குழந்த தல நிக்கறவரைக்கும் அவன் கொஞ்சம் எட்டிதான் இருந்தான். ஆனா அதுக்கப்பறம் பாலுக்கு எல்லாமே அவன்தான். கால்ல போட்டு குளிப்பாட்டறதுல இருந்து, பவுடர் போட்டு மை வைக்கிறவரைக்கும் அவன்தான் செஞ்சான். பாலுவும் எப்பவும் சேகரே கதினு வளர்ந்தான். சேகர் அவன் அப்பன் இல்லனு பாலு வளர தெரிஞ்சிக்கிட்டான். ஆனா அது அவனுக்கு எதுவும் உறுத்தல. வள்ளிய விட சேகர்தான் அவன நல்லா பாத்துக்கற மாதிரி அவனுக்கு தோனுச்சி.

கொஞ்ச நாள் போனதுக்கு அப்பறம்தான் சேகரோட குணம் வள்ளிக்கு தெரிய ஆரம்பிச்சது. சேகருக்கு சேகரா இருக்கப் பிடிக்கல. ஆனா அத அவன் யாருகிட்டயும் இவ்வளவு நாளா காட்டிக்கல. கிழவி மேல இருந்த பயம்தான் அதுக்கு முக்கியமான காரணம். இதெல்லாம் கிழவிக்கு தெரிஞ்சா அவளோதான். கிழவியே சோத்துல விஷத்த வெச்சிடும். வீட்டுல யாரும் இல்லாதப்ப புடவை கட்டிப் பார்ப்பான். எப்பவுமே நெத்தில குங்குமம்  இருக்கும். கேட்டா அம்மன் கோவிலுக்கு போனேன்னு சொல்லுவான். யாரும் அத பெருசா கண்டுக்கல. லேசா சாயல் தெரிஞ்சாலும் அவன் யாருகூடவும் பழகாததுனால யாருக்கும் எதும் தெரில. கல்யாணத்துக்கு முன்னாடி தனியா இருந்ததுனால சேகரால ஊரயும் வீட்டயும் ஏமாத்த முடிஞ்சது. ஆனா கல்யாணத்துக்கு அப்பறம் எங்க சுத்தனாலும்  ராத்திரி வீட்டுக்குதான வரனும். தனியா போய் படுத்தா கிழவி சும்மா வுடுமா. சேகர் வள்ளிகிட்ட பெருசா எதுவும் பேசமாட்டான். வள்ளியும், ஏதோ நம்பல மாதிரி கிழவி சொன்னதுக்காதான் கட்டிக்கிட்டான் போலன்னு விட்டுட்டா. வள்ளிக்கு புள்ள ஒழுங்கா வளத்தா போதும்னு தான் இருந்துச்சி. சேகர் வெறும் ஆம்பள துணைக்குதான். அதான் வேற எவனும் இன்னும் வள்ளிய அண்டாம இருக்கான். வள்ளிக்கு இதுவே போதும்னு தான் இருந்துச்சி.

ஊர் திருவிழாவுல சேகர பாத்ததுமே அவங்களுக்கு தெரிஞ்சிடுச்சி. இவனும் நம்ம ஆளுதானு. அவன் கண்ணுல அவ்வளவு ஏக்கம். அவங்களோட புடவ, மேக்கப் எல்லாம் பாத்து அவனுக்கு அவங்க கூடவே போய்டனும் தோனிச்சி. கிழவி பின்னாடியே வந்து, “இங்க என்னடா பண்ற…” என்றாள். முதல் முறையாக சேகர் கிழவியிடம் எரிந்து விழுந்தான் “நீ போ… நான் வரேன்..”

கிழவிக்கு ஆத்திரம் வந்தாலும், மனசுக்குள்ள “வீட்டுக்கு வா” னு நினச்சப்படியே நடந்தது. வள்ளிகூட கல்யாணம் ஆகி எட்டு வருசமாகிடுச்சி. அவளுக்கு தெரியாம இவ்வளோ நாளு இருந்ததே அதிகம். அதுவும் ஒரே அறையில, எங்க பாத்தாலும் வள்ளியோட துணிங்கதான் இருக்கும். அவ புடவ, ரவிக்க, அத பாக்கும் போதுலாம் ஆத்திரமா வரும். அந்த ஆத்திரம் பல நேரம் பாலு பக்கமாதான் திரும்பும். இவன் பொறந்ததுனால தான நமக்கு இந்த கல்யாணல் ஆச்சினு. ஆனா அவனால கிழவிய மீறி ஒண்ணும் பண்ண முடில.

சேகர பாத்து ஒன்னு சிரிச்சிது. சேகர் மறைவா போய் பேச்சி குடுத்தான். மெல்ல எல்லாத்தையும் சொல்லி அழ ஆரம்பித்தான். அவங்க எல்லாரும் சேந்து அவன தேத்தி, அவன் எப்ப வேணா வரலாம்னு சொல்லி விலாசம் தந்தாங்க. அவன் வாங்கி பத்திரமா வெச்சிக்கிட்டான்.

திருவிழா முடிஞ்ச கொஞ்ச நாள்ல சேகருக்கு கொஞ்சம் தைரியம் வந்தது. வீட்டுல புடவ கட்ட ஆரம்பிச்சான். வள்ளி வருவானு தெரிஞ்சும் அவன் நிறுத்தல. முழுசா கட்டி அலமாரில இருந்த கண்ணாடில பாத்துக்கிட்டி இருந்தான். இத எல்லாத்தயும் வள்ளி பாத்துக்கிட்டு தான் இருந்தாள். அவன்கிட்ட எதுவும் கேக்கல. கிழவி வந்ததும் கிழவியிடம் அழுது எல்லாத்தையும் சொன்னாள். கிழவி முதலில் இதை நம்பல. ஆனா வள்ளி அழறத பாத்து சேகர் கிட்ட கேட்டா, அவன் எதுவும் சொல்லல. கிழவி வெளக்கமாற எடுத்து சேகர வெளுத்துட்டா. அவனுக்கு இராத்திரி முழுக்க தூக்கம் வரல. கிழவி அடிச்சத அவனால தாங்க முடியல. கிழவிய பழிவாங்கியே ஆகனும்னு முடிவுகட்டி கண்ண மூடினான்.

காலையில வள்ளியோட கல்யாணப் புடவைய எடுத்து கட்டிகிட்டு கல்யாண பொண்ணு மாதிரி சிங்காரிச்சிகிட்டு ஊரயே ஒருவாட்டி சுத்தி வந்தான். அவ்வளவுதான் அன்னிக்கு பாதி பேரு வேலை வெட்டிக்கு போகல. கிழவி வாசல்ல ஒப்பாரிய ஆரமிச்சுது. பொம்பளைங்க அவங்க வேலைய ஆரம்பிச்சாங்க. வள்ளியால இந்த பேச்ச எதயும் கேக்க முடில. ராத்திரி வரைக்கும் கத பேசன ஜனங்க தூக்கம் வந்ததும் போய்டுச்சிங்க. ஆனா எல்லாம் முடிஞ்சிதா என்ன. மறுபடியும் காலைல விடியாமயா போய்டும். விடிஞ்சிது. ஆனா அவங்களுக்கு பேச வேற கதைய விட்டுட்டு வள்ளி தொங்கினு இருந்தா.

 

பாலு பஸ் ஸ்டாண்ட்க்கு வந்தப்ப சேகர் ஒரு கல்லு மேல ஒக்காந்துனு இருந்தான். கைலி தான் கட்டினு இருந்தான். கைல ஒரு பை, அதுல கொஞ்சம் துணிங்க. பாலு நேரா சேகர்கிட்ட போய் நின்னான். அவன பாத்ததும் சேகர் விரட்டனான். ஆனா பாலு போகாம அவன் கைய புடிச்சி “வாப்பா” னு இழுத்தான்.

“நான் உன் அப்பன் இல்ல. வீட்டுக்கு போடா” னு விரட்டனான், ஆனா அவன் கண்னு கலங்க ஆரம்பிச்சிடுச்சி.

“அப்பா என்னயும் இட்டுகினு போப்பா”

“நான் திரும்பி வரமாட்டன். இங்க கிழவி கூடவே இரு போ”

“அப்பா வேணாம்பா”

“என்னய அப்பானு கூப்பிடாத” என்று ஆத்திரப்பட்டான். “உனக்கு தெரியுமில்ல. என்னால உனக்கு அப்பனாலாம் இருக்க முடியாது”

தூரத்தில் பேருந்து வருவதை கண்டு எழுந்தான்.

அவன் கையை பிடித்த பாலு, “உன்னால அப்பாவாதான இருக்க முடியாது. அம்மாவா இருக்கலாம் இல்ல, எனக்கு அம்மாவா இரு,” என்றான்.

சேகர், பாலுவை அணைத்தபடி கதறி அழ ஆரம்பித்தான். பேருந்து அவர்களை நெருங்கிக் கொண்டிருந்தது.

அதிநாயகனின் குதிகால் – காலத்துகள் சிறுகதை

காலத்துகள்

மேகபுரி சாகசம் 

‘ஹி வாஸ் டிராப்புடு பிகாஸ் ஆப் ஹிஸ் பார்ம். பார்ம், தட் மீன்ஸ் அவன் ஒடம்பு ஷேப்ல ஏதோ பிராப்ளம், சரியில்ல. அதனால அவன டீம்லேந்து எடுத்துட்டாங்க.’ உடலை இடுப்பருகில் வளைத்து மேற்பகுதியை குறுக்கி, ‘பார்மில்’ ஏற்படக்கூடிய பிரச்னையை செவென்-எப் வகுப்பறையில் மைக்கேல் சார் விளக்கிக் கொண்டிருந்தார்.

தலையை குனிந்தபடி சந்துரு பக்கம் திரும்பி, ‘என்னடா பார்ம்க்கு இப்படி ..’ என்று சொல்ல ஆரம்பித்து, ஜன்னலுக்கு வெளியே வானில் மூக்குரசிக் கொண்டிருந்த பழுப்பு நிற ஆமையையும் பன்றிக் குட்டியையும் பார்த்து முகத்தை திருப்பிக் கொண்டவன், ‘என்னடா’ என்று கேட்ட சந்துருவுக்கு பதில் சொல்லாமல் தலையசைத்தான். சில மாதங்களாக,எதைப் பற்றிய பேச்சு எழுந்தாலும் இடைச்செறுகலாக ஸார் சொல்லும், ‘ஒங்கள விட மூணு நாலு வயசு தான் பெரியவன் சச்சின் பாத்துக்குங்க’விற்குச் சென்று விட்டார்.

நோட்டில் எழுதுவது போல் குனிந்து மீண்டும் வெளியே பார்த்தபோது, வாலும், பின்னங்கால்களும் மறைந்துவிட்ட பன்றிக்குட்டி, முதலையாக மாறிவிட்ட ஆமையுடன் முகமுரசிக் கொண்டிருந்தது. இரண்டைச் சுற்றியும் சுற்றி புதிதாக இன்னும் சில மேகங்கள் வெவ்வேறு உருவங்களில். ‘நீங்களும் சச்சின் மாதிரி யுங் ஏஜ்லையே அச்சீவ் பண்ணனும்’. சிறிது நேரம் முன்பு வரை உணராத குளிர் வகுப்பறையில். க்ளாஸ் நோட்டில் எழுதிக் கொண்டிருக்கும் பக்கத்தின் வலதோர நுனியைப் பிய்த்து வாயில் போட்டு மென்றவன், பின் இடது உள்ளங்கையால் வாயை மூடிக் கொண்டு இரண்டு மூன்று முறை மூச்சை உள்ளிழுத்து வெளியே விட்டு, ஜன்னலுக்கு வெளியே பார்க்க வேண்டுமென்ற உந்துதலைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஸார் பின்னாலிருக்கும் கரும்பலகையின் மீது முழு கவனத்தை செலுத்தினான்.

பலகையில் இன்று பூத்திருந்த ஐம்பத்தி எட்டு ‘பட்ஸும்’ மறைந்து மைதானத்தில் பேட் செய்து கொண்டிருக்கிறான். வகார் யூனிஸின் பந்து முகத்தில் மோதி விழுபவனின் அருகே பதறி வருகிறார் சச்சின். சமாளித்து எழுந்து தொடர்ந்து ஆடுவதாகச் சொல்பவன் அடுத்த பந்திலேயே பவுண்டரி அடிக்க, சச்சின் உற்சாகமாக அவன் தோளில் குத்துகிறார். டெஸ்ட் டிராவில் முடிந்ததில் இவனுடைய பங்கை அனைவரும் பாராட்டுகிறார்கள். அடுத்து மழையால் பாதிக்கப்பட்ட ஒருநாள் போட்டியில் அப்துல் காதிரின் பந்து வீச்சை துவம்சம் செய்கிறான். ஒரே ஓவரில் மூன்று நான்கு சிக்ஸர். அடுத்த பந்திற்காக காத்துக் கொண்டிருந்தவனின் எதிரே, காதிருக்கு பதிலாக ரிக்க்ஷா தாத்தா சாக்கை தலையில் போர்த்திக் கொண்டு மெல்ல நடந்து வர, பேட்டை கீழே போட்டு விட்டு மைதானத்திலிருந்து ஓடி, மாம்பலம் கிரி ஸ்ட்ரீட்டிற்குச் சென்று, கார்கால நாளொன்றின் மாலை நேர மழைக்குள் நுழைபவனுக்கு இப்போது ஆறு வயது.

அம்மா வேலை முடித்து வர வீட்டில் தனியாகக் காத்துக் கொண்டிருக்கிறான். இவனைப் பள்ளிக்கு ரிக்க்ஷாவில் அழைத்துச் செல்லும் தாத்தா, சற்றே கூன் போட்ட, உயரமான உடலின் மேற்பகுதியை மட்டும் போர்த்தியிருக்கும் சாக்குடன் மழையினூடே தள்ளாடியபடி நடந்து வந்து இவன் போர்ஷன் முன் நிற்கிறார். ஏதோ சொல்ல ஆரம்பிப்பவரின் குரல் உயர, அடுத்த போர்ஷனில் குடியிருக்கும் மாமியின் தலையீட்டுக்குப் பின் திரும்பிச் செல்கிறார். பின் அம்மாவும் அடுத்த போர்ஷன் மாமியும் பேசிக் கொண்டதை கேட்டதில் ரிக்க்ஷா வாடகை, குடி போன்ற வார்த்தைகள் காதில் விழுகின்றன. மழை தொடர்ந்த அடுத்த இரு நாட்களும் வீட்டை விட்டு வெளியே வரமாட்டேன் என்று அடம் பிடித்து பின் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தவன் அந்த பள்ளியாண்டில் மீதி இருந்த மூன்று மாதங்களும் தாத்தாவின் முகம் பார்க்கவே -அவர் பலமுறை தானாகவே பேச்சு கொடுக்க முயன்றபோதும் – பயந்தான். அந்த ஏப்ரல் மாதம்தான் செங்கல்பட்டிற்கு குடி பெயர்ந்தார்கள்.

இறுதி பெல் அடித்தது. சந்துரு பேசியபடி வர, வானை பார்த்தபடியே முதல் தள வராண்டாவில் நடந்தான். இந்த ஆறு வருடங்களில் தாத்தாவின் முகத்தை மறந்து விட்டாலும், மழை மேகங்களினுள் சாக்கைப் போர்த்திக் கொண்டு தள்ளாடியபடி நடந்து வரும் அவருடைய நெடிய உருவத்தை இன்றும் அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது.

‘எங்க போற, இரு’, என்று சந்துரு சொல்ல நின்றான். சைக்கிள் நிறுத்துமிடத்திற்கு வந்திருந்தார்கள். ‘நான் போயிட்டிருக்கேண்டா, நீ வண்டிய எடுத்துட்டு வா’, என்றிவன் சொல்ல, ‘என்ன அவசரம், வெயிட் பண்ணு’, என்று ஸ்டேண்ட்டினுள் நுழைந்து கொண்டிருந்த கூட்டத்துடன் சந்துருவும் சேர்ந்தான். வெளியேறிக் கொண்டிருந்தவர்களை கவனித்துக் கொண்டிருந்தவன், பெண்கள் பக்கத்திலிருந்து உமா சைக்கிளில் வர வேறு பக்கம் பார்வையை திருப்பி, அவள் தன்னை கடந்து செல்ல தேவைப்படக்கூடிய கணங்கள் கழித்து, திரும்பி அவள் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஆறாவதில் இருந்தே பள்ளிக்கு சைக்கிளில்தான் வருகிறாள், பி.எஸ்.ஏ. எஸ்.எல்.ஆர். அவள் வீட்டில் கார்கூட இருப்பதாகச் சொல்கிறார்கள். வானில் மேகமொன்றிலிருந்து துதிக்கை நீட்டிக் கொண்டிருந்தது. ‘வாடா,’ என்று சந்துரு சைக்கிளை தள்ளிக் கொண்டு செல்ல ஆரம்பித்தான். காலையில் பள்ளிக்கு வரும்போது மட்டும்தான் அவன் சைக்கிளை ஓட்டிக் கொண்டு வருவான், மாலையில் அதை தள்ளிக் கொண்டே இவனுடன் நடைதான்.

‘டபுள்ஸ் போலாமாடா, மழ வர மாதிரி இருக்கு, சீக்கிரம் போயிடலாம்’.

‘சரி வா’, என்று சந்துரு சொல்ல, பின்னால் அமர்ந்து கொண்டான். செட்டித் தெருவில் சந்துரு வீடு வந்தவுடன் ‘வரேண்டா நாளைக்கு பாக்கலாம்’ என்று கிளம்பியவனிடம், ‘தண்ணி குடிச்சுட்டு போடா’, என்று சந்துரு கேட்க, ‘இல்ல மழ ஆரம்பிக்கறதுக்கு முன்ன போய்டறேன்’, என்று சொல்லிவிட்டு இப்போது எந்த உருவமும் தென்படாத, முழுதும் ஒற்றை அடர் பழுப்பு நிறமாகிவிட்ட வானை அவ்வப்போது பார்த்தபடியே விரைந்தவன், செட்டித் தெரு முனையை அடைந்து பெரிய மணியக்காரத் தெருவிற்குள் நுழைய சாலையை கடக்கும்போது இடி சப்தம் கேட்டு பாய் கடையருகே ஒதுங்கி வானத்தைப் பார்த்தான்.

வெண்ணிறமும் சிகப்பும் கலந்த சற்றே கிறுக்கலாக எழுதப்பட்ட ‘Y’ போலிருந்த மின்னல், மறையும் முன் வானின் சிறு பகுதியை விண்டு விட்டுச் செல்ல, பிரிந்த அந்தப் பகுதி தன் பழுப்பு நிறத்தை இழந்து வெள்ளை நிற யானையாக மாறி, மெல்ல மிதந்தபடியே அதன் துதிக்கையை அங்கிருந்து இவனை நோக்கி நீட்ட, அதைப் பற்றிக் கொண்டவனை உயர்த்தி தன் மேல் அமர்த்திக் கொண்டு மீண்டும் வானுடன் இணைந்து உள் நுழைந்தது.

‘இன்னும் ரெண்டு மூணு மணி நேரத்துல ட்யூட்டி ஆரம்பிக்கணும், என்னமா குளுருது’ என்று தன் வட்ட உடலைச் சிலுப்பியபடி சொல்லிக் கொண்டிருந்த நிலவிலிருந்து சில நீர்த்துளிகள் இவன் மீது பட்டன. முதலில் நிலவிடம் இவனை அறிமுகம் செய்து வைத்த யானை, ‘அங்க யார் வரா பாரு’, என்று சுட்டிய திசையில் நோக்கினான். நட்சத்திரக் கூட்டமொன்று இணைந்து கரடியாக மாறி இவனை நோக்கி வந்தது. ‘ஏன் பயப்படற, ஷேக் ஹாண்ட் பண்ணு’ என்று யானை சொன்னதைப் போல் செய்தான். ‘வா என் மேல ஏறிக்கோ’ என்று கரடி அழைக்க, தயங்கியவனை யானை சிறு குன்று போலிருந்த மேகத்தின் மீது அமர வைத்தது. ‘யாரு புதுசா இருக்கு’ என்றபடி வந்த ஆமையொன்று ‘இவங்க ரெண்டு பேரையும் விட நான் ஸ்பீடா போவேன், என் மேல ஏறிக்கோ’ என்று கூறியதற்கு பதில் எதுவும் சொல்லாமல் இருந்தவனிடம் ‘யோசிக்காத, நான் மலையையே முதுகுல சுமந்த பரம்பரைல வந்தவன் தைரியமா வா’ என்று மேலும் கூறியது. ‘உக்கும் இதையே எத்தனை யுகத்துக்கு இதே புராணத்த சொல்லப் போறானோ’. யானையின் குரல். ‘சும்மா பேசக் கூடாது ரேஸ் போலாமா’ என்று ஆமை அறைகூவல் விடுக்க ஓட்டப்பந்தயம் ஆரம்பித்தது.

போட்டோ பினிஷ். ‘நான்தான பர்ஸ்ட்’ என்று மூச்சிரைத்துக் கொண்டே யானை இவனிடம் கேட்க, ‘ஒடம்ப குறை மொதல்ல, நீ லாஸ்ட்’ என்றது ஆமை. ‘இவன் சின்னப் பையன், இரு நான் அவர கேக்கறேன்’ என்று அங்கே தோன்றியிருந்த விண்மீன் கூட்டத்தைச் சுட்டி யானை அழைத்ததும், அவை வில்லேந்திய ஆணாக உருப்பெற, அவர் அவர்களை நோக்கி நடந்து வந்தார். ‘இவர் பெரிய ஹன்டர், பேரு ஒரயன்’ என்று இவனிடம் நிலவு கூறியதும், ‘நம்மூர்ல கூப்பிடற பேர சொல்லு, இவர் பேரு ம்ரிகா’ என்று ஆமை இடைமறித்தது. ‘நீ இந்த இடத்த விட்டு நகர மாட்ட, நான் எல்லா எடத்துக்கும் போகணும். ஒவ்வொரு எடத்துல ஒரு பேரு இவருக்கு, எனக்கே எங்க எந்த பேர்ல இவர கூப்பிடனும்னு குழப்பம் உண்டு’, என்று நிலவு சொன்னது. ‘ஏதோ ஒரு பேரு விடு, யாரு ஜெயிச்சாங்க அத சொல்லுங்க,’ என்று யானை அவரிடம் கேட்டுக் கொண்டிருக்கும்போது மீண்டும் தூறல்கள் ஊடுருவ நிலவு சிலிர்த்தது. மேகக் குன்றிலிருந்து அவசரமாக இறங்கி தடுமாறியபடி ஓட ஆரம்பித்தவனைத் தடுத்த வேட்டைக்காரர், ‘இரு பயப்படாதே’ என்று கூறிவிட்டு வளைந்த நீண்ட வாளை இவனிடம் தந்து, ‘விக்கிரமாதித்யன் உபயோகித்த, தேவியின் அருள் பெற்ற, வாள் இது’ என்று சொல்ல, கையில் அதை ஏந்திக் கொண்டான். ‘எலுமிச்சைப் பழம் என்னாச்சு அழுகிடுச்சா’ என்று கரடி கேட்டதற்கு யானை பிளிறிச் சிரிக்க, ‘சும்மாருங்க ரெண்டு பேரும்’ என்றது நிலவு. இவனை நோக்கி வந்த மழைக் கணைகளை வாளால் இன்னும் சின்னஞ் சிறிய சிதறல்களாக துண்டாக்க ஆரம்பித்தான்.

‘போதும், முடிந்து விட்டது அங்கே பார்,’ என்று இவன் தோளைத் தொட்டு நிறுத்தி வேட்டைக்காரர் சுட்டிய திசையில் மேகங்களினுள் ஊடுருவிக் கொண்டிருந்த நிறச்சேர்க்கையைப் பார்த்து, ‘ரெயின்போதான அது’, என்று கேட்டான்.’ஆமாம், போய் அதை எடுத்துட்டு வா, பயப்படாத’ என்றவர் சொல்ல, கரடியின் மீதேறி அமர்ந்தவன், வானவில்லின் அருகில் சென்று வளைந்த அதன் நடுப்பகுதியில் கை வைத்து அரைவட்டமாக பிடித்து எடுத்தான். அப்போது தோன்றிய மின்னலிழையொன்றை தும்பிக்கையால் பிடித்திழுத்து இவனிடம் நீட்டி, ‘இந்தா இதை அம்புக் கயிறா கட்டிக்கோ’ என்றது யானை. வேட்டைக்காரர் உதவியுடன் நாண் பூட்டியபின் ‘அம்பு’ என்று கேட்டவனிடம், ‘தோ’, என்று நீண்ட இடித்துண்டொன்றை அவர் நீட்ட, அதை வானவில்லில்
பொருத்தினான். ‘நல்லா காது வரைக்கும் இழு அறுந்துடாது’, என்று வேட்டைக்காரர் சொல்ல, பின்கழுத்து வரை இழுத்து வேட்டைக்காரரை பார்த்தவனிடம், ‘அங்க விடு’, என்று எதிரே இருந்த மேகத்திரையைச் சுட்டினார். மூச்சை உள்ளிழுத்து, மின்னலம்பைத் தொடுத்தான். பள்ளி மேடையில் நாடகம் தொடங்கும்போது திரைச்சீலை இரண்டாக பிரிவது போல் மேகம் பிளவுபட, கண்கூசச் செய்யும் அடர்மஞ்சள் ஒளிக்கற்றைகள் உள்நுழைந்து அவ்விடத்தை நிறைத்தன. யானையின் பிளிறல் ஓசையுடன், நிலவின் மென்மையான கூக்குரல் இணைந்தது.

‘என்னடா அப்படியே நனஞ்சுட்டே வந்திருக்க, கொஞ்சம் வெயிட் பண்ணி வரக்கூடாதா. மழை நின்னுடுச்சு பாரு, இப்ப திருப்பி வெயிலடிக்குது. சரி போய் ட்ரெஸ் சேஞ் பண்ணு போ’, அம்மாவின் குரல் கேட்ட போது தன் வீட்டு போர்ஷனின் முன் நின்றிருந்தான்.

முகமற்றவர்களின் மர்மம்

‘ரூம்ல நானும், எங்கம்மாவும்தான் இருக்கோம். இவன் தொட்டில்ல. எல்லாருக்கும் தகவல் சொல்ல எங்கப்பா போய்ட்டா. இவன பாக்கவே மாட்டேன்னுட்டு மூஞ்சிய சுவத்து பக்கம் திருப்பிட்டிருந்தா. ம்மா பாரும்மான்னு கூப்படறேன், மாட்டேங்கறா. கொழந்த பொறந்தத நர்ஸ் சொன்னத, பொண் கொழந்த பொறந்ததா புரிஞ்சிண்டு ஒரே வருத்தம். கண்ண தொடச்சுக்கிட்டே ஒக்காந்திருக்கா. எங்கக்காக்கும் பொண் கொழந்ததான். என்னமா பேரன பொறந்துருக்கான், பாக்க மாட்டேங்கறன்னு சொன்னவுடன அப்படியே பாஞ்சு வந்து இவன் மேலே
போட்டிருந்த துணிய தூக்கி பாத்தா பாரு, ஆம்ப்ள கொழந்தடி, ஆம்ப்ள கொழந்தன்னு அப்டியொரு சந்தோஷம்’. சுந்தரி அக்காவிடம் அம்மா சொல்லிக் கொண்டிருக்க, படித்துக் கொண்டிருந்த ‘டின்டின்’ சித்திரக் கதையை மூடி வைத்துவிட்டு போர்ஷனை விட்டு வெளியே வந்தவனுக்குப் பின்னால் உரத்த சிரிப்புடன் சுந்தரி அக்காவின், ‘எல்லாடத்தலையும் இப்படித்தான்’. அம்மா அவ்வப்போது விவரிக்கும் நிகழ்வுதான், ஒவ்வொரு முறையும் கேட்பவர்களுக்கு உண்டாகும் குதூகலமும் பரிச்சயமானதுதான்.

போர்ஷனின் பின்புறத்தில் உள்ள காலி மனையை ஒட்டி வந்தமர்ந்தான். அம்மா அந்தச் சம்பவம் குறித்து பேசும்போதெல்லாம் இவனுள் உருவாகும், யாரிடமும் பகிர்ந்திராத, இப்போது தன்னுள் கவிய ஆரம்பிக்கக் போவதை சில கணங்களுக்கு முன்பே உணர்த்தும், நன்றறிந்த சங்கடம்.

அம்மாவின் அம்மா தவறாக காதில் வணங்கிக் கொண்டாள் என்பதை எப்படி உறுதியாக சொல்ல முடியும்? பிறந்த குழந்தைகள் சின்ன கவனமின்மையால் எளிதாக மாறி விடுவது பல திரைப்படங்களில் வருகிறது. ரெண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு வரைகூட இந்த பேச்செழும் போதெல்லாம் அன்றிரவு உடல் முழுதும் போர்த்திக் கொண்டு மூச்சுக் காற்றின் ஓசையை கேட்டபடி நெடுநேரம் விழித்திருப்பான். தனக்கும் அம்மா, அப்பாவிற்கும் உள்ள உருவ ஒற்றுமைகளை தேடிப் பட்டியலிட்ட நாட்களும் உண்டு. மூவரின் மாநிறத்தில் எந்த வேறுபாடும் இல்லை. ஆனால் தாத்தியும் சரி, அம்மாவின் அம்மாவும் சரி, நல்ல சிவப்பு என்பதில் வேறொரு குழப்பம். (‘எங்கம்மா மஞ்சள் வெள்ளை, அதான் அழகு வெள்ளை,’ என்கிறாள் அம்மா). ஒருபோதும் உறுதியான முடிவுக்கு வர முடியாத ஒப்பீடு, இப்போது போல்.

‘நல்லா பாத்தேன், இவன போட்டிருந்த தொட்டில் பக்கத்துல சாய் பாபா நின்னிட்டிருக்கார். தல நிறைய முடி, ரெட் ட்ரெஸ். இவனையே பாத்திட்டிருக்கார்’. அம்மா இதையும் இந்த நிகழ்வின் பின்னொட்டாகச் சொல்வதுண்டு. சாய்பாபா வந்து பார்த்திருந்தால் குழந்தை மாற வாய்ப்பே இல்லை, அவர் அப்படியெல்லாம் நடக்க விடமாட்டார், என்றுதான் அவரைப் பற்றி பத்திரிக்கைகளில் படித்துள்ளதை வைத்து நம்ப வேண்டியுள்ளது. ஆனால் ‘அதெல்லாம் பிரமை, நீயே அர மயக்கத்துல இருந்திருப்ப. அவருக்காக விரதம்லாம் இருந்தேல்ல, அதான் ஒனக்கு அப்படி தோணி இருக்கு’ என்கிறார் அப்பா.

‘நர்சிங் ஹோம்ல கொழந்த மாறிடுச்சு, இவன் எங்க பையன்’. போர்ஷனுக்கு வெளியே சத்தம் கேட்டு, அம்மாவும் அப்பாவும் வாசலுக்குச் செல்கிறார்கள். இவன் முன்னறையில் இருந்து பார்க்கிறான். கிணற்றடியில் இருவர் நிற்கிறார்கள். ஒருவர் சட்டை, பேண்ட் அணிந்திருக்க மற்றவர் சேலை. இருவருக்கும் முகத்தில் மட்டும் எந்த பாகமும் இல்லை, வெண்தோல் மட்டும் மேலே பூசப்பட்டிருப்பதைப் போல. அவர்களின் கைகளின் அசைவிற்கேற்ப குரலின் ஒலி வலுப்பெற அம்மா அழுகிறாள். கால்சட்டை இவனை நோக்கி வர, அவரைத்’ தள்ளி விட்டு வீட்டிலிருந்து ஓடி பெருமாள் கோவில் குளத்தினருகே செல்பவன், அங்கிருக்கும் ஆலமரத்தின் கீழ் இவனுக்கு பரிச்சயமான, சிறுவனா இளைஞனா என்று சொல்லமுடியாத, முன்மண்டையில் குடுமியை செங்குத்தாக நட்டு வைத்திருப்பதைப் போன்ற சிகையமைப்பு உடைய, உலகெங்கும் அலைந்து திரிந்து தீயவர்களை வீழ்த்தும் சாகசக்கார நிருபர், மேலுடம்பில் எதுவும் அணியாத, கொழுத்த தொந்தியுடைய கத்திரிக்காயுடன் பேசிக் கொண்டிருந்ததை கண்டு அங்கிருக்கும் மாவு மில்லின் திண்ணையில் நின்று கொண்டு அவர்களை கவனித்தபடி இருந்தவனைப் பார்த்த டின்டின், அருகில் அழைத்தான்.

தன் பிரச்னையை விவரித்தவனிடம், ‘தண்டரிங் தய்பூன்ஸ், ஐ வில் ஹெல்ப் யூ’ என்று டின்டின் சொல்ல, கத்திரிக்காய் இவன் தோளில் தட்டி ‘கவலைப்படாதே, எங்கள் ஆசிரியர் சங்கர்லால் இருந்திருந்தால் மிகச் சுலபமாக இதை தீர்த்து வைப்பார். இப்போது அவர் மணிமொழியின் பிரச்னையை முடித்து வைக்கச் சென்றிருக்கிறார். ஆனால் இவரும் சாதாரணமானவர் அல்ல’, என்று தைரியமளித்தான். ‘ஸ்நோவி வரலையா’ என்று டின்டினிடம் இவன் கேட்க, ‘ஹி மஸ்ட் ஹவ் கம் அக்ராஸ் அ போன்’ என்று சலித்தபடி பதிலளித்து பின்னால் திரும்பி டின்டின் அழைத்தவுடன், டீக்கடையிலிருந்து வெளியே வந்த வெண்ணிற நாய் இவர்களுடன் சேர்ந்து கொண்டது.

‘வீ ஹாவ் டு கோ டு த நர்சிங் ஹோம் பர்ஸ்ட்’, என்று டின்டின் சொன்னதற்கு ‘வண்டி இல்லையே’, என்றிவன் பதிலளித்தான். ‘அதெல்லாம் கிடைக்கும் அங்கே பார்’, என்று கத்திரிக்காய் சுட்ட, ஆலரமரத்தின் அருகே இரு மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு, மரத்தின் பின்னால் இருவர் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தார்கள். ‘லெட்ஸ் டேக் தெம்’, என்று சொல்லிவிட்டு டின்டின், அவற்றில் ஒன்றில் ஸ்நோவியுடன் ஏறிக்கொள்கிறான். கத்திரிக்காயை இவன் ‘டபுள்ஸ்’ அடிக்க, சிறுநீர் கழிப்பதை பாதியில் நிறுத்தி விட்டு வண்டியின் உரிமையாளர்கள் கத்திக் கொண்டே பின்னால் ஓடி வந்து, பின் களைத்து நின்றுவிடுகிறார்கள். மருத்துவமனையில் நர்ஸிடம் ஏதோ கேட்டுத் தெரிந்து கொள்ளும் டின்டின், முழுதும் ஆவணங்களால் நிரப்பப்பட்டிருக்கும் பெரிய அறைக்குள் கத்திரிக்காயுடன் சென்று தேடுகிறான். கையில் கோப்புடன் ‘கிடைத்து விட்டது ஐயா’, என்று உரக்க சத்தமிடும் கத்திரிக்காயை அணைத்து தட்டிக் கொடுத்து ‘லெட்ஸ் கோ’ என்கிறான் டின்டின். கிளம்பி வீடு வருகிறார்கள்.

பின்புறச் சுவற்றின் ஓரத்தில் உள்ள எலுமிச்சை மரத்தினடியில் டின்டின் புடவை, பேண்ட் சட்டை ஆட்களிடம், கோப்பு காட்டி ஏதோ கேட்டுக் கொண்டிருக்க, அவனை ஊக்குவித்தபடி கத்திரிக்காய். ஸ்நோவியின் சிறிய உறுமல்கள். பயங்கொண்ட வெண்தோல் போர்த்திய முகங்கள் சைகை செய்ய, புதிதாக மூன்று பேர் சேர்ந்து கொள்கிறார்கள். டின்டினின் முஷ்டி அவர்களின் தாடையை பதம் பார்த்ததும், அவர்கள் மேலெழும்பி தரையில் விழ, அப்போது காற்றில் வரையப்படும், ‘கோன் ஐஸ்’ போன்று தலை கீழாக திருப்பிப் போடப்பட்ட முக்கோணமும், மேல் பகுதியில் காளானின் வடிவமும் கொண்ட, சித்திரக் கதைகளில் வருவது போன்ற வெண்ணிற பலகைகளில்

BOOM!
THUMP!
WHAM!
CRASH!

கீழே விழுந்து கிடப்பவர்களின் தலையச் சுற்றி வட்டமிடும் சிகப்பு, பச்சை நிற நட்சத்திரங்கள், அவர்களின் இடுங்கிய கண்களின் கீழ் கருவளையங்கள். சுதாரித்து, சுவற்றை அடுத்திருக்கும் காலி மனையில் குதித்து அனைவரும் ஓட, குரைத்தபடி எதிராளிகளைத் துரத்தும் ஸ்நோவி, அவர்களில் ஒருவனின் பின்புறத்தை கடிக்க

OVV!

என்று புட்டத்தை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு மேலும் கீழும் குதிக்கிறான். ‘எல்லாம் நல்லபடியாக முடிந்தது நண்பா’ என்று இவன் தோளைத் தட்டி விட்டு கத்திரிக்காய் செல்கிறான். ‘ஐ வில் அல்வேஸ் பி தேர் டு ஹெல்ப் யூ’ என்கிறான் டின்டின்.

‘நர்சிங் ஹோம்ல கொழந்த மாறிடுச்சு, இவன் எங்க பையன்’ போர்ஷனுக்கு வெளியே சத்தம் கேட்டு, அம்மாவும் அப்பாவும் வாசலுக்குச் செல்கிறார்கள். இவன் முன்னறையில் இருந்து பார்க்கிறான். கிணற்றடியில் இருவர் நிற்கிறார்கள், ஒருவர் சட்டை, பேண்ட் அணிந்திருக்க மற்றொருவர் சேலை. இருவருக்கும் முகத்தில் மட்டும் எந்த பாகமும் இல்லை, வெண்தோல் மட்டும் மேலே பூசப்பட்டிருப்பதைப் போல. இவன் குளக்கரைக்கு ஓட, அங்கே மீண்டும் டின்டின், கத்திரிக்காய், ஸ்நோவி. மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் பயணம்.

BOOM!
THUMP!
WHAM!
CRASH!

தலையைச் சுற்றி வட்டமிடும் சிகப்பு, பச்சை வண்ண நட்சத்திரங்கள். முகமில்லாதவர்களின் ஓட்டம். பிருஷ்டத்தைக் கடிக்கும் ஸ்நோவி.

‘நர்சிங் ஹோம்ல கொழந்த மாறிடுச்சு, இவன்..’

‘என்னடா அங்க தனியா பாக்ஸிங் பண்ணிட்டிருக்க, பெரிய டைசன்தான். அம்மா கூப்டுட்டே இருக்காங்க என்னன்னு போய் கேளு’, சுந்தரி அக்காவின் குரல் கேட்டு, முகத்தினருகே இருந்த முஷ்டிகளை இறக்கியவன், சற்று குனிந்திருந்த உடலை நிமிர்த்திக் கொண்டு போர்ஷனை நோக்கிச் சென்றான். யாருமில்லாத கிணற்றடியைக் கடக்கும்போது திரும்பிப் பார்க்க பின்புற மனை எப்போதும் போல் காலியாக இருந்தது.

படுகளம்

சிறுவனொருவன் செய்யும் சாகசக் கதையொன்றை படித்துக் கொண்டிருந்தான். இதெல்லாம் பெரிய விஷயமில்லை, அந்தப் பயலைவிட எளிதாக, விரைவாக, இவன் செய்து முடித்து விடுவான். ‘மலைக்குகை மர்மத்தை’ கண்டுபிடிப்பவன், வியப்பு நிறைந்திருக்கும் கண்களால் இவனைப் பார்த்தபடியே இருக்கும், இவனுடன் படிக்கும், உமா மற்றும் மீராவின் பக்கம் திரும்பாமல், காரியத்தை முடித்த நிறைவுடன் அவர்களை கடந்து செல்கிறான். ‘இன்னிக்கு கண்டிப்பா போயிட்டு வந்துடு, டிலே பண்ணாத’, அப்பா சொன்னதற்கு பதிலேதும் சொல்லாமல் எழுந்து அரிந்து முடித்த கீரையுடன் சமையலறைக்குள் அம்மா நுழைய ‘என்ன முணுமுணுக்கற, எதுவாருந்தாலும் நேர சொல்லு, பின்னாடி பேசாத, எனக்கு எதுவும் நேரா சொல்லித்தான் பழக்கம்’. பின்னால் சென்றபடி அப்பா, அம்மா எதுவும் கூறியது  போல் தெரியவில்லை. இதுவரை அவள் அப்பாவின் முகத்தின் எதிரே சொல்லிப் பார்த்ததும் இல்லை.

போர்ஷனின் பின்புறத்தில் உள்ள காலி மனையை ஒட்டியுள்ள சுவற்றில் அமர்ந்தான். இன்னும் இரண்டு வாரங்களில் கோடை விடுமுறை முடிந்து விடுவதற்குள் கண்டுபிடிக்க வேண்டிய மர்மங்கள், புதையல்கள் பல உள்ளன. இந்த வருடம் எட்டாவது. இனி பள்ளிக்கு பேண்ட் அணித்து செல்லலாம், இன்னும் பெரிய சாகசங்களை நிகழ்த்தலாம்.

இவனை அம்மா அழைக்கும் குரல் கேட்டு உள்ளே செல்லும்போது மணி பதினொன்றே முக்கால். ‘வா எல்.எல் வீட்டுக்கு போயிட்டு வரலாம்’ என்றாள்.

‘என்னமா’

‘வேல இருக்கு, அருணாவும் ஒன்ன பாக்கணும்னு சொல்லிட்டிருக்கான்னு எல்.எல் சொன்னாங்க, நீயும் வா’

கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பியவளுடன் போர்ஷன் வாசலுக்கு வந்தபோது, முன்னறையில் இருந்த அப்பா ‘கெளம்பிட்டியா, சும்மா வந்துடாத’ என்று சொல்ல, வெறுமனே தலையாட்டினாள். கோம்ஸ் மிஸ் போர்ஷனை தாண்டும்போது ‘எதுக்கு போறோம்மா’ என்று மீண்டும் கேட்டான்.

‘அதான் சொன்னேனே வேல இருக்கு’

‘நா வரணுமாமா’

‘…’

‘அப்பறம் போய் அருணாக்காவ பாத்துக்கறேன்’

‘அதெல்லாம் வேணாம் வா’

பெரியமணிக்காரத் தெருவிலிருந்து, மேட்டுத்தெருவை தாண்டி பதினைந்து நிமிட நடை தூரத்தில் அம்மாவுடன் வேலை செய்யும் எல்.எல். டீச்சரின் வீடு. அம்மாவைவிட பத்து பதினைந்து வயது அதிகமிருக்கக் கூடியவருக்கு, சுருட்டை முடியில் பரவ ஆரம்பித்திருக்கும் நரையும், மூக்குத்தியும் கம்பீரம் கூட்டுகின்றன. அவரும் மஞ்சள் வெள்ளை என்கிறாள் அம்மா. வீட்டினுள் நுழைந்தபோது நோட்டில் எழுதிக் கொண்டிருந்தவர், ‘வா வா’, என்று அதை மூடிக் கொண்டே சொல்கிறார். ‘என்ன டீச்சர் நோட்ஸ் ஆப் லெஸ்ஸன் எழுதறீங்களா’, என்றபடி அம்மா அமர, சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்த அருணாக்கா, ‘என்னடா எப்படி இருக்க, தோ வரேன்’, கேட்டு விட்டு மீண்டும் உள்ளே செல்கிறார் .’ஒக்கார்டா’ என்றிவன் கையை பிடித்து தன்னருகே அமர வைத்துக் கொல்கிறார் எல்.எல்.

‘டிஸ்டர்ப் பண்ணிட்டோமா டீச்சர்’, என்று அம்மா கேட்க ‘அதெல்லாம் இல்ல, அருணாதான் இன்னிக்கு சமையல். எங்களலாம் பாக்க வரமாட்டியா’, என்று இவனிடம் கேட்டவர், ‘வருவேன், மாட்டேன் எதுன்னு புரியாத மாதிரியே தலையாட்டறான் பாரு’, என்று சொல்ல. அம்மாவும், மீண்டும் ஹாலுக்கு வந்திருந்த அருணா அக்காவும் சிரித்தார்கள். ‘இந்த வருஷம் ரிசல்ட் வரது கஷ்டம் போலருக்கு டீச்சர், இந்த செட்ட நெனச்சா நம்பிக்கையே வர மாட்டேங்குது, ரொம்ப மோசமா இருக்காங்க’, எல்.எல்லிடம் பேசிக் கொண்டிருக்கும போதே, அருணாவின் பக்கம் அவ்வப்போது பார்த்தபடி இருந்தாள் அம்மா.

குக்கர் விசில் சத்தம் கேட்டு ‘தோ வரேன்’, என்று அக்கா உள்ளே செல்ல ‘டீச்சர் ஒரு ஹெல்ப்’, என்று ஆரம்பித்து நிறுத்திய அம்மா, ஓரிரு நொடிகளுக்குப்பின், ‘இன்னிக்கு காத்தால தாம்பரம் போயிருந்தோம், என் அத்தைய பாக்க. திரும்பி வரும்போது டி-சிக்ஸ்டில செம ரஷ், என் பர்ஸ்ஸ இவன்கிட்ட குடுத்திருந்தேன், அத தொலைச்சிட்டான்’, என்று தொடர்ந்தாள்.

‘ஐயோ சின்னப் பையன்கிட்ட போய் ஏன் குடுத்த, ஏண்டா கொஞ்சம் கேர்புல்லா இருக்கப்படாதா’, என்று இவனிடம் எல்.எல். கேட்டுக் கொண்டிருக்கும்போது அருணாக்கா மீண்டும் ஹாலுக்கு வந்தார். இவன் எதுவும் பேசாமலிருந்தான்.

‘டிக்கெட் வாங்க காச எடுத்துட்டு, இத கொஞ்ச நேரம் வெச்சுக்கடான்னு குடுத்தேன், திரும்பி வாங்க மறந்துட்டேன். இவனும் தரலை, கீழ போட்டுட்டானோ இல்ல, யாராவது திருடிட்டாங்களான்னு தெரியல’ என்று அம்மா சொல்ல, தலையை குனிந்து கொண்டான்.

‘பஸ்ல இந்த மாதிரி நெறைய நடக்குது ஆண்ட்டி, இனி கேர்புல்லா இருப்பான் திட்டாதீங்க’

‘அதெல்லாம் திட்டல அருணா’

‘எவ்ளோ பணம் இருந்துச்சு’, என்று எல்.எல் கேட்டதற்கு, ‘அதான் இப்ப பெரிய பிரச்சனை’ என்று அம்மா சொல்ல எல்.எல் எதுவும் பேசவில்லை.

‘பர்ஸ்ல தான் வீட்ல இருந்த மொத்த காசு, எறநூத்தம்பது ரூபா இருந்தது, இன்னும் ஒரு வாரம் ஓட்டனும்’

‘ஏண்டி எல்லா பணத்தையும் ஒரே எடத்துல வெச்சிருந்தியா’

மீண்டும் சூழ்ந்த மௌனத்தை தலை நிமிர்ந்து நோக்கினான். அருணாவின் மீது பார்வையை செலுத்திய அம்மா சொல்ல ஆரம்பித்ததை நிறுத்தி சில கணங்களுக்கு பின் ‘அதான் டீச்சர் தப்பு பண்ணிட்டேன்…. ஒரு அம்பது ரூபா கெடச்சா, இந்த ப்ரைடே சாலரி வந்தவுடனே தந்துடுவேன்.. தப்பா எடுத்துக்காதீங்க’ என்று சொல்ல ‘உள்ள பர்ஸ் எடுத்துட்டு வா அருணா’ என்றார் எல்.எல்.

அம்மாவின் பர்ஸை கண்டுபிடிக்க டின்டினிடம் இவன் உதவி கோர, ‘ஸாரி, ஐ கான்ட் ஹெல்ப் யூ’, என்று சர்வதேச சதிகார கும்பலை பிடிக்கும் முயற்சியை ஸ்நோவியுடன் தொடர ஆரம்பித்தான். ‘மணிக்கொடியின் பிரச்சனையை இப்போதுதான் தீர்த்து விட்டு வந்தார் சங்கர்லால். ஆனால் அவரால்கூட இதை கண்டுபிடிக்க முடியாது, மன்னித்து விடு’, என்று தொந்தி மீது கையை மடக்கி வைத்துக் கொண்டு சொல்லி விட்டு கத்திரிக்காயும் தலை குனிந்து செல்கிறான். வேறொரு வானின் இரவில் டைட் ட்யுடி பார்த்துக் கொண்டிருந்த வேட்டைக்காரர், வெளிச்சத்தில் தன்னால் உதவ முடியாது என்றார். இவர் கண்டிப்பாக பர்ஸை கண்டுபிடிப்பார் என்று இறுதி நம்பிக்கையாக உதவி கேட்ட, நீள் அங்கி, தொப்பி அணிந்த, பைப் பிடித்துக் கொண்டிருந்தவரும் ‘ஸாரி, திஸ் இஸ் நாட் எலிமெண்டரி மை டியர் பாய்’ என்று கூறிவிட்டு, கேஸ் விளக்கின் வெளிச்சத்தில் மிதந்து கொண்டிருந்த மூடுபனி படர்ந்த தெருவினுள் இருக்கும் தன் மாடி போர்ஷனுக்குள் நுழைந்து, லண்டன் நகர குற்றவாளிகளில் முதன்மையானவரும், தன் பரம வைரியுமான பேராசிரியரை கைது செய்ய என்ன வியுகம் வகுப்பது என்பது குறித்து சிந்திக்க ஆரம்பித்தார்.

உமையாள்- ந. பானுமதி சிறுகதை

பானுமதி. ந

தரையைத் தொட்டுச் செல்லும் ஓசைகளுடன் விமானங்கள் தாழப் பறந்து செல்வதை இங்கே வரும்போதே கண்டாள் உமையாள். மனிதர்கள், அவர்களது அவசரங்கள், அவஸ்தைகள், ஏமாற்றங்கள். தான் மிகவும் பின்தங்கிவிட்டதாக நினைத்தாள். இல்லை இந்த வெற்று வேகங்களுக்கான அவசியங்கள் அவள் வாழ்வில் ஏற்படவேயில்லையே. பின் அவள் எப்படி தோற்றவளாவாள்? தோற்றவளில்லை, ஆனால் பறிகொடுத்தவளோ? அதில் அவளது பிழைதான் என்ன?

பதினேழு வயதில் அவள் பி.ஏ முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கையில் படிப்பை நிறுத்தி அவளுக்குத் திருமணம். இளமையை உணரும் பொழுதுகளுக்கு முன்னாலே கர்ப்பம். முத்துமீனாள் பிறந்த இரு வருடங்களுக்குள்ளாகவே அவள் மங்கலப் பெண்ணிலிருந்து விதவை எனப்பட்டாள். கனன்று கொண்டிருந்த தீ மேலே சாம்பல் பூத்தது. ”உனக்கென்று ஏதும் ஆசைகள் இருக்கிறதா, மேலே படிக்கிறாயா, கைத் தொழில் ஏதாவது கற்றுக் கொள்கிறாயா?” எனக் கேட்டவர் இல்லை. மாமியாரும் இல்லாத பெரிய குடும்பத்தின் மூத்த மருமகளாக, இப்பொழுது கணவனையும் இழந்தவளாக அவள் நிலை புகுந்த வீட்டாருக்கு வசதியாகத்தான் போனது. ஆனால், ஒன்று சொல்ல வேண்டும், அவள் உழைத்தாலும் எல்லோரும் அவளை நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள். முத்துமீனாளைப் படிக்க வைத்தார்கள். அவளுக்குக் கல்யாணம் செய்து வைத்தே ஆறு வருடங்களாகிவிட்டன. அவளின் நாத்தியின் மகன்தான் மருமகன்.

உமையாள் இன்று ஏன் இங்கே வந்திருக்கிறோம் என்று புரியாமல் யோசித்தாள். இந்த இடத்தை ஒரு மருத்துவமனை என்று சொல்ல முடியுமா? முத்துமீனாளும்,குமரப்பனும் நான்கு வருடங்களாகவே சிங்கப்பூரில் வேலை பார்க்கிறார்கள். தன்னை இங்கே அழைத்து வந்திருப்பது அவளுக்குக் குடும்ப வேலைகளிலிருந்து சற்று ஓய்வு எனக்கூடச் சொல்லலாம்.

எத்தனை அழகான இடங்கள், வகைவகையான மனிதர்கள், அவர்களின் விரைவோட்டங்கள், எறும்புச்சாரியென வரிசையில் கார்கள், அமைதி ததும்பும் ஆலயங்கள், சிரித்துக் களியாடும் பூங்காக்கள், உலகின் அத்தனை விதமான உணவுகளும் கிடைக்கும் விடுதிகள், உழைப்பிற்கும், நேரத்திற்கும், சுத்தத்திற்கும், பணத்திற்கும் முதன்மை கொண்டாடும் மக்கள். இது வேறு ஒரு உலகம்.

ஆனால், எதற்காக மருத்துவமனை வந்திருக்கிறோம் என அவளுக்குப் புரியவில்லை. மீனாளும்,குமரனும் அவளை அங்கே அமர்த்திவிட்டு உள்ளே சென்றிருக்கிறார்கள். அவள் அமர்ந்திருந்த வரவேற்பறையில் இனிதான லாவண்டர் மணம் கமழ்ந்தது. உறுத்தாத இசை மெலிதாகக் கசிந்து கொண்டிருந்தது. ரிசப்ஷனிலிருந்த நான்கு யுவதிகளும் ஒரே அச்சில் வார்த்தது போல் இருந்தனர். மீனாள் போடுகிற லிப்கலர் நன்றாக இல்லையென்றும், முடிந்தால் இவர்களிடம்  அந்த வகையைக் கேட்க வேண்டும் என்றும் உமையாள் நினைத்துக் கொண்டாள்.

கூடை கவிழ்த்தது போல் முடியுடன் ஒரு சிறு பெண் குழந்தை அவளைக் கடந்து ஓடியது. கால்களில் கொலுசுடன், கைகளில் வளையல்களுடன் ஓடிய அக்குழந்தை நிச்சயமாக தென் இந்தியாவைச் சேர்ந்ததுதான். ஆனால் அதைத் தொடர்ந்து வந்த பெண் வேறு இனத்தவளாகத் தோன்றினாள். மீனாளுக்கும் காலாகாலத்தில் ஒரு குழந்தை பிறக்கவேண்டும். குணத்தில் அவளைக் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

உமையாள் சிரித்துக் கொண்டாள். பிறந்தபோது வந்த குணம் பொங்கலிட்டாலும் போகுமா? தேவகோட்டையிலிருந்து  இளம்பாளையம் செல்வதற்கு குடும்பத்துடன் அவர்கள் பேருந்து நிலையத்திற்கு வந்திருந்தார்கள். பேருந்தில் ஒரே ஒரு ஜன்னல் சீட்டுத்தான் காலியாக இருந்தது. குமரன் தாவி ஏறி அதில் அமர்ந்துவிட்டான். பின்னர் ஏறிய மீனாள் இறங்கிவிட்டாள். ”ஆச்சி,நாம வீட்டுக்குத் திரும்பலாம்.”

எத்தனை கேட்டும், அவள் காரணத்தைச் சொல்லவில்லை. உமையாள் வேறு வழி இல்லாமல் பயணத்தைத் தொடராது இவளுடன் வீடு திரும்பும்படி ஆகிவிட்டது

”எனக்கு ஜன்னல் ஓரந்தான் புடிக்கும்”  என்றாள் தானாகவே மீனாள்.

“ஏட்டி, அதுக்கா பயணத்தை நிறுத்திப் போட்டே. நம்ம குமருதானே, சொன்னா வுட்டுக் கொடுப்பான் இல்ல?”

“அது அவனுக்கே தெரியணுமில்ல. பின்னையும் நா ஏன் கேக்கணும்?”

“அப்படின்னா?”

“அப்படின்னா அப்படித்தான்”

“மொத்தத்தில் என்ன போகமாட்டாம செஞ்சுட்ட”என வாய் வரை வந்த வார்த்தைகளை உமையாள் முழுங்கினாள். அன்று இரவு இவளை நினைத்து கவலைப்பட்டாள்.

தன் சுகத்தை அவள் யாருக்காகவும் விட்டுக் கொடுத்ததில்லை. தாத்தா, சித்தப்பன்மார், அத்தை எல்லோரிடமும் சலுகை.

“அப்பன் முகம் அறியா புள்ளையை ஒன்னும் சலியாதே”என்று அவர்கள் மீனாளின் பக்கமே நின்றார்கள்.

கல்லூரியில் படிப்பு முடியும் வருடம்.“ஆச்சி, நான் குமரப்பனை கட்டிக்கிடலாமென நெனைக்கேன். நீ பேசுதியா, நாஞ் சொல்லட்டா?”

“என்னடி, நம்மை வைச்சு மானமா காப்பாத்தி இருக்காஹ. படிப்பு, பவிசு எல்லாமே அவங்களால. இன்னும் அரியணை கேக்குதா உனக்கு? நம்மால அவுகளுக்கு ஈடு நிக்க முடியுமா? நீ வேலைக்குப் போய் நம்ம கால்ல நிக்கலாம்னு நா கனா கண்டுட்டிருக்கேன்”

“எனக்கு வளப்பமா இருக்கணும். நீ இத்தனை காலம் உழச்சிருக்கல்ல, அதுக்கு கூலின்னு நெனைச்சுக்கோ”

தன்னை எந்த ஒரு சொந்தமும் இவ்வளவு அவமானப்படுத்தியதில்லை என அன்று முழுதும் பிறர் அறியாமல் உமையாள் அழுதாள். வென்றதென்னவோ முத்துமீனாள்தான். நாத்திக்கும் நல்ல மனம். பிள்ளையின் விருப்பத்திற்கு குறுக்கே நிற்கவில்லை.

சிந்தனைத் தொடர் அறுந்து நிகழ் உலகிற்கு வந்தாள் அவள். எங்கே போய்விட்டார்கள் இவர்கள்? எத்தனை நேரம்? சலித்து எழுந்து நடந்து வெளியேறும் மையப் பகுதியில் வந்து நின்றாள். அங்கிருந்த ஒரு அழகான சிற்பம் அவளைக் கவர்ந்தது. வழவழப்பான ஒற்றைக் கரும்பாறையில் ஒரு வட்ட முகம், அதன் கழுத்துப் பகுதியிலிருந்து கிளைத்த இரு உடல்கள், அந்த உடல்களின் மார்புப் பகுதியில் ஒரு சிறு குழந்தை. பார்க்கப் பார்க்கப் பரவசமானாள் அவள். ஒருகால் இந்த மருத்துவமனை மகப்பேற்றுக்கானதோ? அப்படியென்றால், மீனாள் அதற்காகத்தான் வந்திருக்கிறாளோ? என்னிடம் சொல்லக்கூடாதா?

“உன்னை எங்கெல்லாம் தேட்றது, ஒரு இடத்துல இருக்கமாட்டியளோ இங்கிலீஷும் தெரியாது, காணாமப் போனா எங்கிட்டுன்னு பாக்க. சரி, சரி டாக்டர் விளிக்கிறாங்க, வா “

மொழி புரியாவிட்டாலும், உணர்வுகள் வெளிப்படும் குரல் காட்டிக் கொடுத்துவிடாதா, என நினைத்துக் கொண்டு உமையாளும் உடன் சென்றாள்.

டாக்டர் இள வயதினளாக இருந்தாள். சிரித்துக் கொண்டே கைகுலுக்கி பரிசோதிக்கும் படுக்கையில் படுக்கச் சொன்னாள்.உமையாள் தயங்க, “சொன்னதைச் செய்”என்று பல்லைக் கடித்தாள் மகள். ”ஒண்ணுமில்ல, மதனி, ஒரு ஜெனரல் செக்கப், பயப்படாதீய” என்றான் குமரப்பன். என்னென்னவோ பரிசோதனைகள், உமையாளிற்கு ஒன்றும் விளங்கவில்லை. வீடு திரும்புகையில் அவர்கள்  ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. ”தம்பி, குமரு, என்னதுக்கப்பா இம்புட்டு செலவு செய்யறிஹ. நான் நல்லாத்தான இருக்கேன்,” என்றாள்.

“மதனி, மீனாளுக்கு யூட்ரஸ் பழுது. அவ கர்ப்பம் தரிக்க ஏலாதாம். அதான் உங்களுக்குப் பார்த்தம்”

“என்ன சொல்லுதீய?அவளுக்கு என்ன கொறை? ஏன் எங்கிட்ட முன்னமே சொல்லலை? நம்மூர் டாக்டரிட்ட போவோம். அதெல்லாம் சரி பண்ணிடுவாக நம்மூர்ல.”

“சிங்கப்பூர்ல்யே முடியாதுன்னுசொன்ன பொறவு நம்ம பட்டிக்காட்டுல என்ன செஞ்சுடுவாக? ஏதும் விவரமா பேசுதியா நீ?” என்றாள் மீனாள்.

“சரி, உன் கொறையை சரி செய்யமுடியாது. ஆனா, எனக்கு எதுக்கு டெஸ்ட் எல்லாம் செஞ்ச?”

“உனக்கு எல்லாம் நல்லா இருக்குதாம். நீ எங்களுக்கு மகவு சுமந்து தரணும்”

உமையாள் பேச்சிழந்தாள்.

“மதினி,பயப்படாதிக. ராணி போல பாத்துகிடுதோம்.”

“தம்பி,மெய்யாலுமே எனக்கு விளங்கல. என்னைய என்ன செய்யச் சொல்லுதீய?”

“நீ வாடகைத் தாயா இருக்கணும் எங்களுக்கு. எங்க மகவுதான் எங்களுக்கு வோணும்…”

“மேலே சொல்லாதே. நான் இதுக்கெல்லாம் ஒப்புவேன்னு எப்படி நெனைச்சீக”

“ஐய, எல்லாம் லேப்லதான் நடக்கும். உருவான கருதான் உன் கருப்பைக்கு வரும். என்ன சுமந்த மாரி நினைச்சுக்க. எனக்காக இதை செய்ய மாட்டியா என்ன?”

உமையாள் பேச்சற்று அமர்ந்தாள். ஊரிலே அவளுடைய கொழுந்தன் அவங்க வங்கியில ‘அவுட்சோர்ஸ்’ செய்யறதைப் பற்றி சொல்லி விளக்கியது இப்பொழுது நினைவிற்கு வந்தது. தந்திரமாக சிங்கப்பூர் அழைத்து வந்து, ஊரைச் சுற்றிக் காட்டி, விஷயமே சொல்லாமல் மருத்துவமனைக்கு  அழைத்துச் சென்று, தங்கள் செயல்பாடுகள் நியாயமென வாதாடும் இவர்கள் இத்தனை மட்டமானவர்களா?

“மதனி பயப்பட்டுச்சுன்னா வேணாம் மீனா. பின்னர் பாத்துக்கிடலாம்”அவன் சொல்வது கேட்டது.

“”அம்ம வளப்பமா இருக்கையில நடத்திப்புடணும். இந்த ஊர்ல யாரைத் தெரியும் அவுகளுக்கு. நாம சொல்றதைத்தான் கேக்கணும். என்னாலெல்லாம் மகவு சுமந்து சங்கடப்படமுடியாது. ஆண்டவன் சரியாய்த்தான் கொடுத்திருக்கான் எனக்கு.”

உமையாளுக்கு தான் இனி என்ன செய்ய வேண்டும் என்பது புரிந்தது.

பனி விழும் இரவு – மு. முத்துக்குமார் சிறுகதை

மு. முத்துக்குமார்

வானிலிருந்த மேகங்களை அத்தெரு முழுவதும் பரப்பிப் போட்டிருந்தது போலிருந்தது அந்த பனிப்பொழிவு. நீண்ட அகலமான தெரு. இருபக்கமும் பழங்காலத்து வீடுகள் மற்றும் சில உணவு விடுதிகள் அக்குளிரிலும் நடுங்காமல் கம்பீரமாக தன் கூரையின் உச்சியிலுள்ள புகைபோக்கி வழியாக சுவாசித்துக் கொண்டிருந்தன. அக்கூரைக்கடியில் இருந்தவர்கள் காய்ந்த மரக்கட்டைகளை அதற்கென உரிய அடுப்பில் எரித்து குளிர் காய்கிறார்கள் போலும்.

அங்குள்ள மிகப் பழக்கப்பட்ட உணவு விடுதியொன்றில் கிடைக்கும் சங்கு வடிவ பிரெட்டுக்காகவும், பாலில்லா தேநீருக்காகவும், மாலை நேரத்து தனிமையை விரட்டுவதற்காகவும் 2 கிமீ தள்ளியுள்ள என்னுடைய அறையிலிருந்து அடிக்கடி இத்தெருவிற்கு வருவதுண்டு.

மிகப் பழக்கப்பட்ட கட்டிடங்கள். தஸ்தவேய்ஸ்கியின் ‘வெண்ணிற இரவின்’ கதாநாயகன் போல் இக்கட்டிடங்கள் ஜன்னல் வழியே நம்மை உற்றுநோக்கி, மூடப்பட்டிருந்த கதவு வழியே நம்மிடம் ஏதாவது பேசுமா என்று நானும் உற்று நோக்கினேன். ம்ஹீம்… அப்படி எந்த விதமான பிரக்ஞையும் எனக்கில்லை. நான் இன்னும் அவ்வளவு தனியனாக ஆகவில்லை என்ற ஒரு திருப்தியோடு அவ்வுணவு விடுதியை நோக்கி விரைந்தேன், கைகள் விறைக்க. ஜெர்டாவின் கணவர் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்து அவளுக்கு ஒத்தாசையாக அங்கு இருக்கக் கூடும்.

தூரத்தில் மேலெழும்பிச் செல்லும் அப்புகையை நோக்கியவாறு பொழிந்திருந்த பனியில் கால்புதைய நடந்தது, அணிந்திருந்த மூன்றடுக்கு உடை தக்க வைத்திருந்த வெப்பம் போதவில்லை என உணர்த்தியது. கொஞ்சம் வெப்பம் வேண்டி ஊரிலிருந்து எடுத்து வைத்திருந்த தங்க வடிப்பான் ஒன்றை கட்டில் இருந்து உருவி பற்ற வைத்துக் கொண்டேன். அவர்கள் மரக் கட்டைகளை எரித்து கனன்று கொண்டிருந்தார்கள். நான் என்னை எரித்து…

இரண்டு வார விடுமுறைக்கு இந்தியா சென்று விட்டு அப்போதுதான் எனிங்கன் திரும்பி இருந்ததால், இன்னும் ஒரு வாரத்திற்கு வரும். அதற்கப்புறம் மார்ல்ப்ரோவுக்கோ அல்லது இசைக்குயிலுக்கோ மாற வேண்டும்.

மாலை 6 மணி என்றது தெருமுனையில் வானைத் தொட்டுக் கொண்டிருந்த கூம்பு வடிவ மணிக்கூண்டு. ஒருவேளை இக்கூம்பு தான் அம்மேகங்களைக் கிழித்து பனிபொழியச் செய்ததோ என கவிஞனை போல எண்ணிக்கொண்டே ஜெர்டாவின் உணவு விடுதிக்குள் நுழைந்தேன்.

திடீரென இருளுக்குள் நுழைந்ததை உணர்ந்து உணவு விடுதியின் ஜன்னல் கண்ணாடியினூடாக இரவு கவிழ ஆரம்பித்து விட்டதா என தெருவை நோக்கினேன். ஆம். இரவுதான். பனியால் கொஞ்சம் வெண்மையாயிருந்தது. வெண்ணிற இரவு.

எதிர்பார்த்தது போல் உல்ரிக்தான் விடுதியை கவனித்துக் கொண்டிருந்தார். ஜெர்டா மேல்தளத்திலுள்ள அவர்களின் வீட்டிற்கு சற்று ஓய்விற்காக சென்றிருக்கக்கூடும். மிகச் சிறிய விடுதிதான். மரத்தால் செய்யப்பட்ட அங்கிருந்த சிறிய மேசைகளும் சாய்வு நாற்காலிகளும், குறைவானதே நிறைவு, அழகு என உணர்த்தியது. வழக்கமாய் பார்க்கும் அதே மனிதர்கள்தான். 20 பேர் இருக்கலாம்.

அங்கிருந்த அனைவருமே ஒருவருக்கொருவர் பரிச்சயமானவர்கள்தான். இந்த இரண்டு வருடத்தில் நானும் அவர்களில் ஒருவனாகியிருந்தேன். அவரவர்களுக்குத் தேவையானதை அவர்களே எடுத்துண்ட பின்பு உல்ரிக் அல்லது ஜெர்டாவிடம் அதற்குரிய பணத்தை அவர்களே கணக்கிட்டு கொடுத்துச் செல்வார்கள். கிட்டத்தட்ட இவ்விடுதியொரு சமுதாய சமையலறைக் கூடம்தான்.

எனக்கான சங்கு வடிவ பிரெட்டையும் தேநீரையும் எடுத்துக் கொண்டு ஒலிவர் அங்கிருக்கிறாரா என்று தேடினேன். ஜெர்டாவின் முன்னாள் கணவர் ஒலிவர். கடும் உழைப்பாளி. பெரும் குடிகாரரும்கூட. இரயில் தடங்களைப் பராமரிக்கும் அரசுத்துறையில் கண்காணிப்பாளர் வேலை. உல்ரிக்கிடம் பேசிக்கொண்டிருந்தவரிடம் கையசைத்துவிட்டு ஜன்னலோரத்திலிருந்த மேசையில் அமர்ந்தேன்.

கொஞ்ச நேரத்தில் புன்னகைத்துக் கொண்டே ஒலிவர் எதிரில் வந்தமர்ந்தார். அவர் தட்டில் சூடான சாஸேஜுகளும் அதற்கு தேவையான வெண்ணெய் மட்டும் வேகவைக்கப்பட்டிருந்த ப்ரோக்கோலி வகையறா காய்கறிகளும் ஒரு குட்டி மலை முகடென குவித்து வைக்கப்பட்டிருந்தன. மெலிதான சங்கு வடிவ பிரெட் என் வாயில் கடிபட்ட அதிர்ச்சியில் தன்னுடைய மறுமுனையிலிருந்த மேற்புற அடுக்குகளை இழந்து என் மேல் சிந்தியிருந்தது.

“என்ன குலோ, க்ரோய்சண்ட்ச இன்னமும் எப்படி சிந்தாம சாப்பிடறதுன்னு தெரியலயா?” என புன்னகை மாறாமல் கேட்டார் ஒலிவர். பற்களிலிருந்த கறையும், விழிகளின் வெளியோரங்களிலிருந்து காது நோக்கி நீண்ட சுருக்கங்களும் அவர் ஐம்பதுகளின் மத்தியில் இருப்பதை உணர்த்தின.

பருகிய தேநீர், மென்று விழுங்கிக் கொண்டிருந்த க்ரோய்சண்ட்ஸை நனைத்து நாவையும் தொண்டையையும் இதப்படுத்தியது.

புன்னகைத்துக் கொண்டே “கடைசிவரை சிந்தாமல் சாப்பிட கத்துக்க மாட்டேன்னு நினைக்கிறேன் ஒலிவர்” என்றேன்.

“புது வேலை கிடைச்சுடுச்சா குலோ?”

“இல்ல ஒலிவர். பழைய கம்பெனியே ஒரு புது ஒப்பந்தம் போட்டுருக்காங்க. ஒரு வருஷத்துக்கு”

ஒலிவருக்கு நடந்ததுதான் என் அப்பாவுக்கும் நடந்தது. அம்மா எங்கள் இருவரையும் விட்டுவிட்டு தனது முன்னாள் காதலனுடன் போய் விட்டார். என்னை சட்டச்சிக்கல்களால்தான் அப்பாவிடம் விட்டுவிட்டுப் போனார். ஐந்து வயதிருக்கலாம் எனக்கு. இரண்டாவது அம்மா சொல்லித்தான் எனக்கிது தெரியும். வழக்கம் போல் சுற்றம் வலியுறுத்த அந்த அப்பாவியை அப்பாவிற்கு இரண்டாம் கல்யாணம் செய்து வைத்தார்கள்.

ஆனால் தன் முதல் மனைவி ஓடிப்போன ஆதங்கத்திலே வடிப்பான் இல்லாத கத்தரியையும், சார்மினாரையும் புகைத்துப் புகைத்து நுரையீரல் புற்றை வேண்டிப் பெற்றுக் கொண்டு, கிடைத்த இரண்டாவது அம்மாவையும் ஆஸ்துமா நோயாளியாக்கி மேலேயனுப்பினார் அப்பா. கொஞ்ச நாட்களிலேயே அவருமில்லை. பதினைந்து வயதிலிருந்து தனியனாய், செயின்ட் லூயிஸ் ஆதரவற்ற சிறுவர்களுக்கான உறைவிடப் பள்ளியால்தான் வளர்க்கப்பட்டேன்.

ஒலிவர் எப்பவுமே எனக்கொரு ஆச்சரியம்தான். அவர் ஜெர்டாவின் இழப்பையேற்று முன் நகர்ந்த அளவுக்கு அப்பாவினால் ஏன் நகரமுடியவில்லை என்பதற்கு வெறும் கலாசாரம் மட்டுமே காரணமாக இருக்க வாய்ப்பேயில்லை. அதையும் தாண்டிய ஏதோ ஒன்றுதான் அப்பா தன்னுள் சிதைந்து மடியவும், ஒலிவர் அச்சிதைவிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளவும் காரணமாயிருக்கக் கூடும்.

“என்ன புது வேலை எப்படி இருக்கும்கிற சிந்தனையா?” என்றென்னை கலைத்தார் ஒலிவர்.

“அதெல்லாம் ஒன்னுமில்லை ஒலிவர். வழக்கம் போல ஒரு ரோபாடிக் ஆட்டோமேஷன்தான். உல்ரிக் வேலை பார்க்கிற அலுவலகத்தில்தான் வேலை. கிட்டத்தட்ட திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான வேலைகளைச் செய்பவர்களுக்கு ஓய்வளிக்கப் போகும் ஒரு வேலை” என்றேன்.

“உல்ரிக் வேலை பார்க்குற நிறுவனத்துக்கு எப்பவுமே இதே வேலைதான். ம்ம்ம்…கார்ல் மார்க்ஸ் வேண்டியபடி தொழிலாளிகள் புத்திசாலியா மாறி முதலியத்த இல்லாம பண்ணிடுவாங்கங்றதெல்லாம் வறட்டு இலட்சியவாத கனவுதான். புத்திசாலியா மாறி முதலியத்தில் தங்களோட இருப்பைத்தான் உறுதி செஞ்சுக்குறாங்க.” என்றார்.

கொஞ்சம் புரிந்தும் புரியாத மாதிரி இருந்தது.

“என்ன மார்க்ஸியம் பேச ஆரம்பிச்சுட்டானா?” என்று உல்ரிக்கும் சேர்ந்து கொண்டார். அதற்குப்பின் அவர்கள் பேசியவை, அவை மார்க்ஸிய சித்தாந்தங்கள் என்பதைத் தாண்டி எனக்கொன்றும் புரியவில்லை.

அவர் அலுவலகத்திலேயே வேலை கிடைத்ததற்காக என்னை வாழ்த்தினார் உல்ரிக். அதுவரை சமையலறையிலிருந்த சாராவும் சேர்ந்து கொண்டாள். ஜெர்டாவின் மகள். பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு; செயற்கை நுண்ணறிவியல் பட்டப்படிப்பு படிக்கிறாள். அவளுடன் என் துறை சார்ந்து அடிக்கடி நிறைய பேசுவதுண்டு.

சாராவின் தீர்க்கமான கண்களும், மிஸ்டர் பீன் மூக்கும், தோளிலிருந்து மார்பு வரை புரளும் கேசமும், முகத்திற்கு கச்சிதமாக பொருந்தும் அந்த உடலமைப்பும் எப்போதும் மனதை குறுகுறுக்க வைப்பவை. நான் இங்கு அடிக்கடி வருவதற்கு இந்த குறுகுறுப்பும் ஒரு காரணம்.

ஜெர்டாவிடம் சொல்லிவிட்டு விடைபெறலாம் என மேல் தளத்திற்குச் செல்லும் சுழல்வடிவ மரப்படிக்கட்டுகளில் ஏறிச் சென்றேன். அணைத்து தோளில் தட்டி உல்ரிக் அலுவலகத்திலேயே வேலை கிடைத்ததற்குப் பாராட்டினார். எப்போதும் அந்த அணைப்பின் கதகதப்பு என் இரு அன்னையரையும் ஞாபகப்படுத்தும். நான் இங்கு அடிக்கடி வருவதற்கு இதுதான் முக்கிய காரணம். மற்றபடி இந்த சங்கு பிரெட், பாலில்லா தேநீர் எல்லாம் அடிக்கடி இங்கு வருவதனால் பழகியவை. இரண்டு மூன்று சந்திப்புகளிலேயே அவ்வணைப்பின் கதகதப்பில் நெகிழ்ந்து உருகி கண்ணீர் மல்க ஜெர்டாவிடம் என் அன்னையர் இருவரையும் பற்றி நினைவு கூர்ந்திருக்கிறேன். ஆனால் சமீபகாலமாக ஜெர்டாவின் இந்த கதகதப்பு சாராவின் அருகாமையை நினைவுறுத்தி மனதை மேலும் எளிதாக்குகிறது; சாரா தன்னுள் என்னை இழுத்துக் கொள்வதுபோலொரு பரவசம் தருகிறது.

கழற்றியிருந்த மூன்றாவதடுக்கு உடையை மேலிட்டுக் கொண்டு தெருவில் இறங்கியபோது அவ்விரவு மேலும் வெண்மையாக இருந்தது. ஓரிருவர் மட்டுமே சோம்பி நடந்து கொண்டிருந்தார்கள். வெப்பம் வேண்டி மீண்டுமொரு தங்க வடிப்பானை கட்டிலிருந்து உருவி பற்ற வைத்தேன்.

அறை நோக்கி மீண்டும் கைகள் விறைக்க நடந்தபோது, விடுமுறைக்கு இந்தியா செல்வதற்கு முன்பு சாராவை அவளுடைய ஆண் நண்பனுடன் மிக நெருக்கமாகப் பார்த்த காட்சி நிழலாடியது. ஒரே இழுப்பிலேயே கால்வாசி சிகரெட்டை சாம்பலாக்கிய நெருப்பு என்னை நோக்கி விரைந்தது. என்னுள்ளிருந்து வெளியேறிய புகையில் அப்பாவும் ஒலிவரும் கலந்தே இருந்தார்கள்.