சிறுகதை

2024

எஸ். சுரேஷ்

“ஃபோன் அடிக்கறது கேக்கல? ஃபோன எடு” அம்மாவின் குரல் என்னை அதட்டியது. அம்மா பக்கத்து அறையிலிருந்து பேசவில்லை. ஃபோன்னிலிருந்து பேசினாள்.

நீங்கள் இன்னும் 2016இல் இருப்பதால் உங்களுக்கு நான் இதை விளக்க வேண்டும். நீங்க ஏதோ நான் அம்மாவின் குரலை ரிங்டோன்னாக வைத்துக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கக்கூடும். அதெல்லாம் உங்கள் காலம். இப்பொழுது காலம் மாறிவிட்டது.

‘Machine Learning’ என்று சொல்வதை வைத்து கூகிள் போன்றவர்கள் முதலில் உங்கள் மெயில் படிக்க ஆரம்பித்தார்கள். நீங்கள் ‘Please find attached’ என்று எழுதி attachment இல்லையென்றால், அட்டாச்மென்ட் எங்கே என்று ஜீமெயில் கேட்க ஆரம்பித்தது. அதே போல் விளம்பரத்துக்காக பலர் அனுப்பும் மெயில்களை தானாகவே ஸ்பாம் என்று குறிப்பிட்டு தள்ளி வைத்தது. இப்பொழுது அடுத்த கட்டத்திற்கு வந்திருக்கிறது.

மெயிலை படிப்பதுடன் நிற்காமல் இப்பொழுது வந்துள்ள ஒரு ஆப் நாம் ஃபோனில் பிறருடன் பேசுவதை ஒட்டு கேட்கிறது. நம்முடன் பேசுபவர்களின் குரலை அது ஞாபகம் வைத்துக்கொள்கிறது. அவர்களின் குரலை அது reproduce செய்கிறது. அவர்கள் அடிக்கடி பேசும் வார்த்தைகளையும், அவர்கள் உபயோகிக்கும் சொலவடைகளையும் வைத்து அவர்களைப் போலவே அது பேசுகிறது. அம்மாவின் ஃபோன் வந்தால் அம்மாவின் குரலில், அவள் பேசுவது போலவே என்னை அழைக்கிறது. இதை ‘Synthesis of Sound with Machine Learning’ என்கிறார்கள்.

என்னுடன் பணிபுரியும் முருகேசன் எனக்கு இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்து தந்தான். அவன் இந்த ஆப்பை அடிக்கடி உபயோகப்படுத்துவான். புதிதாக கல்யாணம் ஆனவன். அவனுக்கு ஃபோன் வந்தால், “டார்லிங். ப்ரீயா இருக்கீங்களா? என்னோட பேச முடியுமா?” என்று அவன் புதுப் பெண்டாட்டி பேசுவாள். அவன் எல்லோரையும் பார்த்து பெருமிதமாகச் சிரிப்பான். அவன் பெண்டாட்டி போல் ஆப்பும் புதியது. இன்னும் பீடா டெஸ்டிங் நிலைமையில் உள்ளது பக்ஸ் இருக்கலாம் ஆனால் பலர் இதை யூஸ் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

நான் ஒரு நாள் அவன் பெண்டாட்டி குரலை என் மொபைலில் ரெகார்ட் செய்து ஆபிசில் அதை ஒலிக்க விட்டேன். முருகேசன் அவசரமாக மொபைலை எடுத்து விழித்தான். ஆபிசில் எல்லோரும் சிரித்தார்கள்.

 

அம்மா என்னை மதுமிதாவுடன் வெள்ளிக்கிழமை முருகன் கோவிலுக்கு வரச்சொன்னாள். நல்ல நாளாம். ஏதோ ஸ்பெஷல் பூஜை செய்கிறார்களாம். நான் சரி என்று சொன்னேன்.

“டேய். வெள்ளிக்கிழமை ஆறு மணிய உன் காலெண்டர்ல குறிச்சி வச்சுக்கோ. என் காலண்டர் ரிக்வெஸ்ட் ஆக்செப்ட் பண்ணு” என்று ஃபோன் அம்மா குரலில் பேசியது. நான் ஒரு நிமிடத்திற்கு எதுவும் செய்யவில்லை என்றால் அதுவே ரிக்வெஸ்ட் அக்செப்ட் செய்துவிடும். நான் ஒன்றும் செய்யவில்லை.

“எப்படி நீங்க வேற ஒருத்தருக்கு வெள்ளிக்கிழமை ஆறு மணிக்கு appointment கொடுக்கலாம். என்னைப் படத்துக்கு அழைத்து போறேன்னு சொல்லியிருக்கீங்க” என்று என் மனைவி மதுமிதாவின் குரலில் ஃபோன் பேசியது.

நான் இதை முழுவதாக மறந்துவிட்டிருந்தேன். அவளுக்கு புதிதாய் வரப்போகும் கமல் படத்தை முதல் நாள் பார்க்கவேண்டும். அவள் என் காலண்டரில் appointment schedule செய்திருந்தாள்.

“என்ன. ஒண்ணுமே பேச்சில்ல? அம்மாவுக்கு என்ன சொல்ல போறீங்க?” மறுபடியும் மதுமிதாவின் குரல்.

அம்மாவுக்கு காலேண்டர் ரிக்வெஸ்ட் ரிஜெக்ட் ஆகிவிடும். அவள் மறுபடியும் கூப்பிடுவாள். கோவிலை விட சினிமா முக்கியமா என்ற கேள்வி வரும். இப்பொழுது என்ன செய்வது என்று நான் தலையை சொறிந்து கொண்டிருக்கும்போது மதுமிதா உள்ளே வந்தாள்.

“படம் செம கலக்கலாம். துபாய்ல என் friend பார்த்துட்டு சொன்னான். I am waiting, I am waiting, I am waiting” என்று துள்ளினாள்.

“டேய். ஏன் என் ரிக்வஸ்ட் ரிஜெக்ட் பண்ண? உன்னோட பேசணும் ஃபோன எடு”. கொய்யால. இந்த machine learning ஆளுங்க ஒரு லெவலுக்கு மேலயே போயிட்டாங்க. அம்மா எதுக்கு ஃபோன் பண்றான்னு இவனுக்கு எப்படி தெரியும்? Machine learning தலையில் கல்லப் போட.

“என்ன ரிக்வெஸ்ட்?” என்றாள் மதுமிதா

“சொல்றேன். சொல்றேன். ஒரு சின்ன confusion”

“என்ன confusion?”

“ஏன்டா ஃபோன் எடுக்க மாட்டேங்கற. நீ இல்லேன்னா உன் பொண்டாட்டி இருப்பாளே? அவளுக்கு என்ன அப்படி உயிர் போற வேல. ஃபோன் எடுக்க முடியாதா அவளால?”

மதுமிதாவுக்கு முகம் சிவந்துவிட்டது. “என்ன? உங்க அம்மா எனக்கு வேலையில்லன்னு நினைக்கறாங்கள? அவங்களுக்கு வேணா நீங்க இன்னும் கைக்குழந்தையா இருக்கலாம். அதுக்காக நானும் உங்கள கைக்குழந்தையா நடத்தணுமா. கழுத போல் வளர்ந்துட்டீங்க. உங்களுக்கு ஃபோன் எடுக்க வராதா?”

“அது அம்மா இல்ல மது. ஃபோன் தானே சொல்லுது. எல்லாம் machine learning”

“அது எப்படி learn பண்ணும். உங்க அம்மா இது போல் அடிக்கடி பேசறாங்க. அது வச்சி ஃபோன் learn பண்ணுது.”

“அப்படி இல்லமா. அந்த ஆப் இப்படி பேசக்கூடும்னு ஒரு மாதிரி ப்ரெடிக்ட் பண்ணுது”

“கரெட்டா தான் பண்ணுது. உங்க அம்மா இப்படி தான் பேசுவாங்க”

நான் பதில் சொல்வதற்குள் ஃபோன் மதுமிதா குரலில் பேசியது, “உங்க அம்மா மறுபடியும் ரிக்வெஸ்ட் அனுப்பியிருக்காங்க. நாம சினிமா போறோம்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும். அத தடுக்கறதுக்கு இப்படி எதாவது டிராமா பண்ணுவாங்க”

மதுமிதா என்னை முறைத்தாள். “நான் இப்படி தான் பேசுவேனா? நீங்க தான் ஃபோனுக்கு சொல்லிக் கொடுத்தீங்களா?”

“இல்லமாஆஆ. இது machine..”

“machineஆ மண்ணாங்கட்டியா. சும்மா பொய் சொல்லாதீங்க. நீங்க என்ன ஒரு ராக்ஷஷி மாதிரி பார்கிறீங்க நல்லா தெரியுது”

“அந்த கிழவி ரிக்வெஸ்ட்ட மறுபடியும் ரிஜெக்ட் பண்ணிடறேன்.”, என்றது ஃபோன் மதுமிதா குரலில.

மதுமிதாவிற்கு அப்பொழுதுதான் ஞானோதயம் வந்தது. “என்ன. நீங்க வெள்ளிகிழமை அம்மா கிட்ட வரேன்னு எதாவது சொன்னிங்களா? நீங்க போறதுன்னா போங்க. நான் தனியா சினிமா போறேன். உங்கள நம்பினா ஒரு பிரயோஜனமும் இல்ல”

“அம்மாவிடமிருந்து ஒரு வாய்ஸ் மெசேஜ்” என்றது ஃபோன் ஏதோ ஒரு அமெரிக்க குரலில். “மெசேஜ் படிக்கட்டுமா?”

“வேண்டாம்” என்று சொல்ல வாயெடுக்கும்முன் மதுமிதா “படி” என்றாள். எங்கள் இருவர் குரலாணைக்கும் தலை வணங்குவார். ஃபோனாண்டவர்.

“வெள்ளிக்கிழமை கோவிலுக்கு வரத மறக்காத. உன் பெண்டாட்டி எதாவது படத்துக்கு போகணும்னு அடம் பிடிப்பா. ஒரு நாள் கோவிலுக்கு வந்தா அவ ஒண்ணும் குறைஞ்சு போக மாட்டா. ஏதோ சொத்த சினிமாவுக்கு போகிறத விட கோவிலுக்கு வந்தா புண்ணியம் வரும்” அம்மாவின் குரல் துல்லியமாக கேட்டது.

மதுமிதாவின் பார்வை எப்படி இருந்திருக்கும் என்று நான் உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா? அவள் ஏதோ கோவமாக சொல்ல ஆரம்பித்தபோது அவள் மொபைலில் என் குரல் கேட்டது. “மது உங்க அம்மா ஃபோன்”

அவளுக்கு மொபைலை எடுப்பதை விட என்னை திட்ட வேண்டும் என்ற ஆசை தான் அதிகம் இருந்தது. “நான் என்னிக்கோ ஒரு நாள் சினிமா போகலாம் …” கோவம் அவள் தொண்டையை அடைத்தது. அவள் அழுதுவிடுவாள் போல் இருந்தது. கோவமும் அழுகையும் சேர்ந்தால் எனக்கு சங்கு தான்.

அப்பொழுது அவள் மொபைல் மறுபடியும் என் குரலில் பேசியது. “ஃபோன் எடு மது. இல்லைனா உங்க அம்மா எனக்கு ஃபோன் பண்ணிவிடுவா. சீக்கிரம் எடு” என்றேன்.

நான் மதுமிதாவுடன் இது போல் பேசியிருக்க மாட்டேன் என்று உங்களுக்கு தெரியும். பிறகு ஏன் மொபைல் அப்படி பேசுகிறது?. நான் யாருடன் எல்லாம் பேசுகிறேனோ அதை எல்லாம் analyze செய்து வரும் resultஐ cloud எனப்படும் ஒரு பொது இடத்தில் இந்த ஆப் வைத்துவிடும். யாரெல்லாம் என் பெயரை அவர்கள் மொபைலில் வைக்கிறார்களோ அவர்கள் எல்லோருக்கும் இந்த cloud செனட்டரிலிருந்து தான் என் குரலும் நான் பேசும் விதமும் செல்லும்.

“ஓஹோ. ஏன், எங்கம்மா உங்கள கூப்பிட கூடாதா?”

“அப்படி இல்ல மது. நான் என்ன சொல்ல வரேன்னா இது machine..”

“Machine learning. Machine Learning. Machine Learning. இதையே சொல்லிண்டிருங்க.”

“நாம சினிமா போறோம்னு தெரிஞ்சா உங்கம்மாவும் கூட வரேன்னு கழுத்தறுப்பாங்க. சீக்கிரம் ஃபோன் எடு” என் குரலில் ஃபோன் மதுமிதாவிடம் கூறியது

இப்பொழுது அவள் கண்களில் நீர் தேங்க ஆரம்பித்தது. அவள் கோபமாக மொபைல் பட்டனை அழுத்தி “ஹலோ” என்று கூறிக்கொண்டே பெட்ரூம் பக்கம் சென்று கொண்டிருந்தவள் என்ன தோன்றியதோ, “நான் உன்னோட அப்புறம் பேசறேன்” என்று மொபைலை கட் செய்துவிட்டு என்னிடம் வந்தாள். “உங்க சாயம் நல்லா வெளுத்து போச்சு. நீங்க உங்க அம்மாகூட கோவிலுக்கு போங்க. நான் எங்க அம்மாவோட சினிமாவுக்கு போறேன். இப்போ சந்தோஷமா. சந்தோஷமா?” என்று கேட்டுவிட்டு என் பதிலுக்கு காத்திராமல் சமையலறைய நோக்கி நடந்தாள்.

அப்பொழுது பளிச் என்று என் மொபைல் ஒளிர்ந்தது. முருகேசன் அழைக்கிறான். “டார்லிங். பிஸியா? என்னோட ரெண்டு நிமிஷம் பேசமுடியுமா?” என்று முருகேசன் பெண்டாட்டி குரலில் ஃபோன் என்னை கேட்டது. சாப்ட்வேர் பக். முருகேசன் குரலுக்கு பதில் அவன் மனைவியின் குரலில் பேசுகிறது மொபைல்! இந்த பக் எவனால் வந்ததோ அவனைக் கண்டுபிடிக்க வேண்டும். பொழச்சி இருந்தா. செத்தடா மவனே நீ.

வேகமாக சமையலறைக்கு சென்றுக்கொண்டிருந்த மதுமிதா சட்டென்று நின்று, நிதானமாக திரும்பி என்னை நோக்கி மெதுவாக நடந்து வந்து கொண்டிருக்கிறாள்..

ஒற்றைச் சிலம்பு

தருணாதித்தன் – 

உமாவுக்கு உருளி என்று ஒரு பாத்திரம் உண்டே அந்த உருளியை வாங்க வேண்டும் என்று வெகு நாட்களாக தீராத ஆசை. உருளி பழைய கால மீனாட்சியம்மாள் சமையல் குறிப்புகளில் திரட்டுப்பால் செய்ய “வாயகன்ற உருளியில் எட்டு ஆழாக்கு பாலை ஊற்றி, சுண்டக் காய்ச்சி, துருப்பிடிக்காத தோசைத்திருப்பி அல்லது தேய்ந்த சாதக் கரண்டியால் விடாமல் கிளறி ” என்று வரும். தற்காலத்தில் உருளியில் தண்ணீர் ஊற்றி வண்ணப்பூக்களை அதில் மிதக்க விட்டு அலங்காரமாக வைப்பது வழக்கமாகி இருக்கிறது. உமா அதற்கு பார்வையாக ஒரு நல்ல உருளி வேண்டும் என்று வெகு நாட்களாகத் தேடிக் கொண்டிருந்தாள்.

அவள் சினேகிதி லீலா அந்த மாதிரி வேலைப்பாடுள்ள நேர்த்தியான உருளி வேண்டுமானால் கேரளத்தில்தான் கிடைக்கும் என்றும், உள்ளூர்க் கடைகளில் கிடைப்பது எல்லாம் சரியான அமைப்பு இல்லை, அப்படி சமச்சீராக இல்லாமல் வார்த்த பாத்திரத்தில் நீர் ஊற்றி வைத்தால் சீன வாஸ்து சாஸ்திரப்படி சொத்து நஷ்டமாகும் என்று கேட்காமலேயே ஆலோசனை கொடுத்தாள். டிஸம்பர் கடைசியில்தான் எல்லோருக்கும் லீவு அமைந்து கொச்சினுக்கு போக முடிந்தது.

ஃபெர்ரியில் ஏறி மட்டாஞ்சேரியில் இறங்கிய உடனேயே நிறைய கடைகள் ,ஆனால் ஏனோ ஒரு கடை ஈர்த்தது. வாசலில் நின்று வரவேற்றுக் கொண்டிருந்த கடை ஆளும் காரணமாக இருக்க வேண்டும். அப்போதுதான் குளித்து விட்டு வந்தது போல ஒளி முகம், அதில் நிறைந்த புன்னகை, படிந்து வாரிய ஈரத்தலை, நெற்றியில் விபூதி, கை மடித்து விட்ட வெள்ளைச் சட்டை, அகலக் கரையுடன் வெள்ளை வேட்டி, எழுந்து வந்து வழியை மறித்து அவன் கடையைத் தாண்டிப் போக விடவில்லை.

ஒரு பாரம்பரியமான வீட்டையே கடையாக்கி இருந்தார்கள். வாசலில் திண்ணையிலிருந்து, உள்ளே ரயில் பெட்டிகள் மாதிரி நீளமாக இருந்த பல அறைகள் முழுவதும் பழங்காலப் பொருட்கள்தான். வண்ணக் கண்ணாடி தொங்கும் விளக்குகள், நிலைக் கதவு, பணப் பெட்டி, சிற்பத் தூண்கள், ஊஞ்சல் பலகை, அப்பக் காரை, பித்தளை வெற்றிலைப் பெட்டி, அளக்கும் படி, கிளிக்கூண்டு, நிற்கும் ஆளுயர கடியாரம், மரச் சிற்பங்கள், பெரிய மண் ஜாடிகள், சட்டம் போட்ட கட்டில், பித்தளை டெலிஸ்கோப் என்று ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமில்லாத பொருட்கள் இறைந்து கிடந்தன.

சில பொருட்களுக்கு விலை ஒட்டி இருந்தது. உமாவுக்கு உருளிகளின் விலை அத்துப்படி ஆகி இருந்தததால், முதலில் அவற்றை ஒப்பிட்டுப் பார்த்தாள். திருப்திகரமாக இருந்தது. மிக அதிகம் இல்லை. அவற்றில் ஒன்றை எடுத்து நல்ல வெளிச்சத்தில் முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்தாள். லட்சணமாக இருந்தது. ஓரங்கள் எல்லாம் சுத்தமாக இருந்தது. கைப்பிடிகளில் சித்திர வேலைப்பாடு அழகாக இருந்தது. பல நாட்களாக தேடிக்கொண்டிருந்தது இவ்வளவு சீக்கிரம், திருப்தியாக, அதுவும் நல்ல விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. மகிழ்ச்சியினால் கண்கள் விரிந்து, குரல் சற்று மிகுந்தது, உடலில் ஒரு விசை ஏறியது. கடை ஆள், நுட்பமாக அதை கவனித்திருக்க வேண்டும். வேறு சில பொருட்களைக் காட்ட ஆரம்பித்தான். “இதோ பாருங்கள், உருளி வைக்கும் இடத்துக்கு மேலே தொங்க விட சர விளக்கு”. உமாவுக்கு அதில் அவ்வளவு இஷ்டமில்லை. அவள் பார்வை சுற்றிலும் அலைந்தபோது ஒரு கணம் அந்த பெரிய பெட்டியின் மேல் நிலைத்தது.

பித்தளைப் பூண் போட்டு, கரும் பழுப்பு நிறத்தில் எண்ணெய் தேய்த்தது மாதிரி மினுக்கியது. உடனே அவன் ஆரம்பித்து விட்டான். இப்போதெல்லாம் இந்த மாதிரி பெட்டி மிகவும் போகிறதாம். வீட்டில் ஹாலில் வைத்து அதன் மேல் சின்ன பித்தளைப் பொருட்களை வைக்கிறார்களாம். உடனேயே சில பொருட்களை வைத்து அலங்காரம் செய்து காட்டினான். ஒரு கஜ லக்ஷ்மி விளக்கு, தூபக்கால், ஒரு பாக்கு வெட்டி, ஒரு பித்தளைக் கரண்டி நடுவில் ஒரு இடம் காலியாக இருந்தது. அவன் சுற்றிலும் தேடி ஒரு வட்டமான பெரிய வளை போல ஒன்றை கொண்டு வைத்தான். வரி வரியாக மணிகளுடன் வேலைப்பாடுடன் அதுவும் நடுவில் பொருத்தமாக இருந்தது. இப்படியாக அந்த பெட்டி மிக அழகாக அமைந்தது. உமாவுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அதிகம் பேரம் இல்லாமல் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு விட்டாள்.

உமா வீட்டுக்கு வந்தவுடன் முதல் வேலை உருளிக்கு நல்ல இடம் பார்த்து வைத்தாள். உள்ளே நுழைந்தவுடன் பார்வையான இடம். அதில் மலர்கள், நடுவில் வெள்ளி தீபம் மிதக்க, வீடே மங்களமாக இருந்தது. பெட்டிக்குத்தான் சரியான இடம் கிடக்கவில்லை. டெலிவிஷன், கண்ணாடி ஷோ கேஸ், டெலிபோன், பத்திரிகை வைக்கும் ஸ்டாண்டு என்று ஏற்கெனவே ஹால் அடைசலாக இருந்தது. ஒரு வேளை பெட்டியை அவசரப்பட்டு வாங்கி விட்டோமோ என்று தோன்றியது. கடைசியாக புத்தக அலமாரியை வேறு அறைக்கு மாற்றி, ஹாலிலேயே இடம் அமைந்தது. எல்லாம் சேர்ந்து வீடு பொலிவாக இருப்பதாக உமாவுக்குத் தோன்றியது. தானே வேறு வேறு கோணங்களில் நின்று, அமர்ந்து பார்த்து மகிழ்ந்து போனாள். அடுத்தது யாரிடமாவது காட்டாவிட்டால் மகிழ்ச்சி பூர்த்தி ஆகாது என்று தோன்றியது.

முதலில் பக்கத்து வீட்டு லக்ஷ்மி வந்திருந்தாள், முகத்தில் பவுடர் வியர்க்க, எங்கோ போகும் அவசரத்தில். சாவியைக் கொடுத்து விட்டு உள்ளே வராமலேயே போய் விடுவாளோ என்று உமாவுக்கு ஒரு சிறு கலக்கம். வந்தவள் வாசலிலேயே உருளியையும் பெட்டியையும் பார்த்து ஒரு கணம் நின்று விட்டாள். ” அட, எப்ப வாங்கின இதெல்லாம்? ” என்று கேட்ட உடனேயே, உமாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனாலும் போகிற போக்கில் லக்ஷ்மி “இங்க இருக்கற நிலமைல உருளிய தேய்க்கறத்துக்கு முடியுமா, வேலைக்கு ஆளே சரியாக இல்லை, நம்மால முடியாதுப்பா” என்றாள்.

முதலில் அவள் பொறாமையால் சொல்கிறாள் என்று தொன்றினாலும் சரிதான் என்று தோன்றியது. செல்வி தினமும் வருவதே லேட், அவள் கணவன் வேலுச்சாமி வேலை எதுவும் இல்லாமல் தினமும் குடித்து விட்டு அவர்கள் இருந்த பேட்டையில் ரௌடியாகத் திரிந்து கொண்டு இருந்தான். ஏதாவது காரணம் சொல்லி பாதி நாள் வரமாட்டாள். உமாவுக்கு அவளுடன் அதிக நாட்கள் சமாளிக்க முடியும் என்று தோன்றவில்லை. ஆனாலும் பல வருடங்களாக பழகினவள், வேலை சுத்தம் என்று வேறு ஆள் பார்க்க இஷ்டம் இல்லை.

புதிய பொருட்களை மற்ற எல்லோருக்கும் காண்பிக்கலாம் என்று யோசித்து, வெள்ளிக்கிழமை அன்று நிறைய பேரை ஏதோ பூஜை என்று அழைத்தாள். லீலா உருளியைப் பார்த்து அதுவும் கேரளத்தில் வாங்கியதை உறுதி செய்து கொண்டு, நல்ல லட்சணமாக இருப்பதாக சொன்னாள். அடுத்தது பெட்டியின் மேல் இருந்த பொருட்களை பார்த்துக் கொண்டு வந்தவள், அந்த வளையைப் பார்த்ததும் ஒரு மாதிரி நெற்றியைச் சுருக்கினாள்.

” இது என்ன தெரியுமா? ” என்றாள்.

“ஏன், இது ஏதோ வளை போல வேலைப்பாடாக இருக்குன்னு வாங்கி வந்தேன்”

“இதெல்லாம் வீட்டில் வைக்க மாட்டார்கள். இது ‘செலம்பு’ன்னு சொல்லுவோம், வெளிச்சப்பாடு கையில வெச்சுட்டு ஆடறது” என்றாள். ‘செலம்பு’ என்றபோது ச்செலம்பு என்று அழுத்தியபடி. உமா சரி இது தமிழில் சிலம்புன்னு சொல்வோமே அந்த மாதிரி என்று புரிந்து கொணடாள். ஆனால் ஏன் சிலம்பை வீட்டில் வைத்துக் கொள்ளக்கூடாது என்று கேட்டாள். ஒரு வேளை ஒற்றைச் சிலம்பினால் கண்ணகி கதை மாதிரி ஏதாவது இருக்குமோ என்று நினைத்தாள். லீலா விவரமாக ஆரம்பித்தாள். வெளிச்சப்பாடு என்பவன் பகவதி கோவில்களில் சாமியாடி மாதிரியாம். சிவப்பு ஆடை அணிந்து ஒரு கையில் மணி கட்டிய வாளும் இன்னொரு கையில் சிலம்பும் ஏந்தி விரிந்த கூந்தலுடனுடன் தாளத்துக்கு இசைந்து ஆடுவானாம். ஆட்டம் அதிகமாகி வெறி கொண்டு, வாளால் அவன் தன் தலையிலேயே ரத்தம் வரும்படி காயப்படுத்திக்கொண்டு ஆடுவானாம். ஆடும்போது அவன் பேசுவது பகவதி வாக்காம். இந்தக் காலத்திலெல்லாம் பகவதி கோவில்களில் திருவிழா முன் போல நடப்பதில்லையாம், பல வெளிச்சப்பாடு ஆட்கள் அதிக வருமானமில்லாமல் அந்தத் தொழிலையே விட்டு விட்டார்களாம். அவள் கடைசியாக அருகில் போய் தொடாமல் உற்றுப் பார்த்து, “இதோ பார் இதெல்லாம் ரத்தக் கறை, எந்த வெளிச்சப்பாடு சோற்றுக்கு வழி இல்லாமல் இதை விற்றானோ, இதெல்லாம் வீட்டில் வேண்டாம்” என்று அடித்துச் சொல்லி விட்டாள். உமாவுக்கு லீலா வழக்கம் போல ஏதோ கதை விடுகிறாள் என்றுதான் நினக்கத் தோன்றியது. அவள் அடிக்கடி யக்ஷிகள், மோகினி, குட்டிச் சாத்தன் என்று நேரில் பார்த்துப் பழகின மாதிரி பேசுவாள்.

உமா அன்று மாலையே ரமேஷிடம் அவன் அலுவலகத்திருந்து வந்தவுடன் சொன்னாள், அவன் மொபைலில் ஏதோ பார்த்துக் கொண்டே அரை குறையாகக் கேட்டு, இதெல்லாம் என்ன பழங்காலம் மாதிரி கதை என்றான். உமாவும் அதிகம் கவலைப் படவில்லை.

முதல் சம்பவம் அடுத்த வெள்ளிக்கிழமை காலை நடந்தது. படுக்கையிலிருந்து எழுந்ததிலிருந்தே சின்னப் பெண் சண்டி. வென்னீர் சூடு பற்றவில்லை என்று அழுகைக் குளியலுக்குப் பிறகு, ஸ்கூல் சீருடைக்குள் திணித்து, தலையை வாரி, பொட்டு வைத்து அவளைத் தூக்கி பெரிய கண்ணாடியில் காண்பித்து,

” அழாத கண்ணு, இதோ பார் , சின்னு எவ்வளவு அழகு தெரியுமா ?”
சொல்லி முடிப்பதற்குள், பார்த்துக் கொண்டிருக்கும்போதே கண்ணாடி திடீரென்று ஒரு ஓரத்திலிருந்து ஆரம்பித்து பெரிய விரிசல் விட்டு உடைந்து போனது. பயந்து போய் சின்னுவை இறக்கி விட்டு சுற்று முற்றும் பார்த்தாள், ஜன்னலுக்கு வெளியே பார்த்தாள், கல் எதுவும் விழவில்லை. ரமேஷ் குளித்துக் கொண்டிருந்தான். உமாவுக்கு அதிர்ச்சியில் வியர்த்து விட்டது. அவசரமாக சின்னுவை கொண்டு போய் ஸ்கூல் பஸ் ஸ்டாப்பில் விட்டு விட்டு, வீட்டுக்கு வந்து அவளுடைய அம்மாவுக்கு ஃபோன் செய்தாள். அம்மா சந்தேகமில்லாமல் சொல்லி விட்டாள் – கண்ணாடி ஒரு மங்கலப் பொருள், வெள்ளிக்கிழமை அதுவும் தை வெள்ளிக்கிழமையில் உடைவது நல்லது இல்லை. ரமேஷ் குளித்து வந்தவுடன், அவனைத் தலை துடைக்கக்கூட விடவில்லை.

“ரமேஷ், இந்தக் கண்ணாடியப் பாருங்க, இப்ப நான் சின்னுவ ட்ரெஸ் பண்ணிட்டு அவளுக்கு காமிச்சிட்டிருந்தேனா, பார்க்கும்போதே விரிசல் விட்டு உடைஞ்சிடுச்சு ”

அவன் கண்ணாடி அருகே போய் ஆராய்ந்தான். விரிசல் ஆரம்பித்த்த இடம் கண்ணாடியை பொருத்தி இருந்த ஒரு ஸ்க்ரூவில்.

“இதோ பார் இந்த ஸ்க்ரூவை அதிகமாக அழுத்தி இருக்கிறது. இப்படித்தான் சமமா அழுத்தம் இல்லா விட்டால் ஒரு பக்கம் உடையும் ”

” இது நம்ம வீட்டில மூணு வருஷமா இருக்கு, எப்பவோ ஆகி இருக்கணுமே”

உமாவுக்கு ஒரு வேளை அந்தச் சிலம்பால் இருக்குமோ என்ற சந்தேகம் வந்து விட்டது.

அடுத்த சம்பவம் ரமேஷின் பிறந்த நாள் அன்று நடந்தது. அவனுடைய அம்மாவும் அப்பாவும் முதல் நாளே வந்து விட்டார்கள், ரமேஷின் அண்ணா வீட்டிலிருந்து. காலையிலேயே எல்லோரும் குளித்து கோவிலுக்குப் போக வேண்டும் என்பதால் சீக்கிரமே எழுப்பி வரிசையாக குளிக்க அனுப்பி, கடைசியாக மாமியாரை அனுப்பினாள். அரை மணிக்கும் மேல் ஆயிற்றே என்று பாத்ரூம் கதவைத் தட்டினால் பதிலே இல்லை. கூர்ந்து கேட்டால் முனகும் சத்தம் கேட்டது. கதவை பலமாக தள்ளி, தாழ்ப்பாள் உடைந்து திறந்தால், ரமேஷின் அம்மா அலங்கோலமாக தரையில். கை கொடுத்தால் கூட எழுந்திருக்க முடியவில்லை. இரண்டு பேராக சேர்ந்து தூக்கி வந்து படுக்க வைத்து, டாக்டரை வரவழத்து, அவர் ஃப்ராக்சர் இருக்குமா என்று பார்க்க எக்ஸ் ரே எடுக்க ஆம்புலன்ஸ் வரவழைத்து, மாடிப் படிகளில் ஸ்ட்ரெச்சரைத் தூக்கி, கடைசியில் நல்ல வேளையாக மிக லேசான விரிசல்தான் எலும்பு உடையவில்லை, இரண்டு மாதம் ஓய்வில் இருந்தால் சரியாகி விடும் என்ற முடிந்த போதுதான் நிம்மதி ஆனது. ஆனாலும் ஒரு வாரத்துக்குள்ளேயே எல்லோரும் படாத பாடு பட்டார்கள்.

செல்வி வழக்கம் போல பாதி நாட்கள் வரவில்லை. வேலுச்சாமி கார்ப்பரேஷன் தேர்தலுக்கு நிற்கப் போகிறானாம். அவளுடைய வீட்டிலேயே நிறைய வேலையாம். வேலைக்காரி சௌகரியம் இல்லாததால், உமா கஷ்டப்படுவதைப் பார்த்து, அவர்கள் ஒரு ஆம்புலன்ஸ் வைத்துக் கொண்டு ரமேஷின் அண்ணா வீட்டுக்குத் திரும்பப் போய் விட்டார்கள். பேச்சு வாக்கில் லீலாவிடம் இதெல்லாம் விவரித்த போது அவள் சொன்னாள் “நான் சொல்றேன்னு தப்பா நினச்சுக்காத, எனக்கெனமோ எல்லாமெ அந்தச் செலம்பாலதான்னு தோணுது, வீட்டில வயசானவங்கள ரெண்டு நாள் கூட தங்க விடல பாரு, இங்க அய்யப்பன் கோவில்ல தந்த்ரி இருக்கார், அவர் சோழி உருட்டிப் பார்த்து சொல்லிடுவார், இப்படியே விட்டா உங்க வீடு மட்டும் இல்ல நம்ம அபார்ட்மென்ட்டுக்கே ஏதாவது வரும்’ என்றாள். உமாவுக்கு பயமாக இருந்தது. ரமேஷிடம் சொன்னபோது அவன் சோழி விவகாரத்துக்கு ஒத்துக் கொள்ளவில்லை.

மூன்றாவது சம்பவம் விரைவில் வந்தது. அதுவும் லீலா சொன்னபடியே. ஒரு நாள் பைப்பில் தண்ணீரில் ஏதோ கெட்ட வாடை லேசாக ஆரம்பித்தது. முதலில் வழக்கம் போல ஒரு நாள் தண்ணீர் வராமல் இருந்து, பைப் எல்லாம் காலி ஆகி மறு நாள் வரும்போது, அழுக்கு, இரும்புத்துரு எல்லாம் சேர்ந்து வாடை வருவதுண்டு. அந்த மாதிரிதான் ஏதோ என்று நினைத்தாள். மறு நாள் அதிகமாகப் போகவே, உமா மேலே மொட்டை மாடிக்குப் போய் ஒவர் ஹெட் டாங்கைப் பார்க்கப் போனாள். டாங்கின் மூடி வைக்கும் ஸ்லாப் திறந்து கிடந்தது. உள்ளே எட்டிப் பார்த்தால் ஏதோ கருப்பாக மிதந்து கொண்டிருந்தது, கீழே போய் டார்ச் கொண்டு வந்து வெளிச்சம் போட்டுப் பார்த்தால் ஒரு காக்கை. லீலா பார்த்த உடனேயே சொன்னாள் ” அதுவும் பார் அண்டங்காக்கா, கழுத்து முழுக்க கருப்பா இருக்கு, நான் முதல்லயே சொன்னேனில்ல, இதுக்கு எங்க ஊரில என்ன சொல்வோம் தெரியுமா “, அதற்கு மேல் கேட்கவில்லை உமாவுக்கு கிலியாகி விட்டது.

வீட்டுக்கு வந்ததும் உமாவுக்கு அந்தச் சிலம்பைத் தொலைத்து விட வேண்டும் என்று தோன்றியது. தொடாமல், ஒரு குச்சியால் அதை எடுத்து ஒரு ப்ளாஸ்டிக் கவரில் போட்டாள். அப்படியே பால்கனியிலிருந்து தூக்கி எறியலாமா என்று தோன்றியது. அது திரும்ப காம்பவுண்டுக்குள்தான் விழும். கீழே கையில் எடுத்துச் செல்ல பயமாக இருந்தது. குளியல் அறை பக்கத்தில் தூக்கி எறிய வைத்திருந்த பிற சாமான்களுடன் வைத்து விட்டு நன்றாக சோப்புப்போட்டு கை கழுவினாள். இத்தனை நாள் வீட்டில் இருந்தது, இன்னும் ஒரு இரவில் ஒன்றும் ஆகக்கூடாது என்று நினைத்தாள். காலையில் செல்வி எடுத்து கீழே மற்ற குப்பைகளுடன் போட்டு விடுவாள், வாரத்துக்கு ஒரு தடவை வரும் கார்ப்பரேஷன் லாரியில் எங்காவது போய்த் தொலைந்து விடும்.

அடுத்த நாள் செல்வி நேரத்துக்கு வந்து விட்டாள். வேலுச்சாமி இப்போது கார்ப்பரேஷன் தேர்தலில் மூழ்கி இருப்பதால் குடி எல்லாம் குறைந்திருக்கிறதாம். அவளிடம் மறக்காமல் அந்தக் ப்ளாஸ்டிக் கவரை குப்பையில் போடச் சொன்னாள். அதற்கு அடுத்த நாள் செல்வி வரவில்லை. நாலு தடவை ஃபோன் செய்த பிறகு எடுத்தாள். அவள் வேலுச்சாமி தேர்தலுக்கு நிறைய உதவி செய்கிறாளாம். அடுத்த வாரம் வருவதாக சொன்னாள்.

நடுவில் சின்னு ஸ்கூலில் ஆன்யுவல் டே போட்டிகள் என்று பிஸியாகி விட்டாள். சின்னுவுக்கு பாட்டுப் போட்டி, க்விஸ் இரண்டுக்கும் தயார் செய்வதற்கே நேரம் சரியாக இருந்தது. என்னதான் வீட்டில் பாடினாலும், கேள்விக்கு பதில் சொன்னாலும், சின்னு ஸ்கூலில் சொதப்பி விடுவாள். சாயங்காலம் அவளை தினமும் உட்கார்ந்து பாட வைத்து, வாங்கி வந்திருந்த புத்தகத்திலிருந்து கேள்வி கேட்டு – நடுவில் சிலம்பு விவகாரம் நினைவில் இல்லை. இந்த தடவை சின்னுவுக்கு இரண்டு போட்டிகளிலும் பரிசு.

ஞாயிற்றுக் கிழமை நிதானமாக எல்லோரும் அமர்ந்திருந்தபோது ரமேஷிடம் விவரமாகச் சொன்னாள்- குப்பையில் எறிய வைத்தது வரை. “ஒரு வழியா அந்தச் சிலம்பு தொலஞ்சுது, இனிமேலாவது வீட்டில கெட்டது எதுவும் நடக்காது, லீலா சொன்னபடி முதல்லயே தூக்கி எறிஞ்சிருக்கலாம், இப்ப பாருங்க நம்ம சின்னு பரிசு வாங்கி இருக்கா, இனிமே எல்லாம் நல்லதுதான் நடக்கும் ”

“அதெல்லாம் மடத்தனம், ஏதோ ஒரு பழைய மெட்டல் துண்டுக்கும், வெயில்ல கண்ணாடி உடையறது, ஈரத்தரையில அம்மா வழுக்கி விழுந்தது, திறந்து வெச்ச தொட்டித் தண்ணீரில காக்கா செத்ததுன்னு என்ன தொடர்பு? இப்ப பரிசு வாங்கினா அதுவும் அந்தச் சிலம்பு போனதுனாலயா? ஆஃபீஸில ரீஜனல் மேனேஜர் பொஸிஷனுக்கு என்னத்தான் ரெகமண்ட் பண்ணி இருக்கேன்னு எம் டி நேத்து சொன்னாரு, அதுவும் சிலம்பு போனதாலயா?” என்றான். “ஆமாம்“ என்றாள் உமா திடமாக, ஒரு வாரமாக அவளுக்கு முதுகு வலி கூட காணாமல் போயிருந்து.

ரமேஷ் அப்போதுதான் நினைவுக்கு வந்தவானாக, “அன்னிக்கு நீ கிளம்பிப் போன பிறகு செல்வி எதையோ காட்டி அம்மா தூக்கி எறிய வெச்சுருக்காங்க போல, நான் எடுத்துக்கறேன்” அப்படின்னு சொன்னா, அவசரத்துல நான் என்னன்னு கூட பார்க்கல. இப்ப நீ சொல்லறத கேட்டா அந்தச் சிலம்புதான்னு தோணுது” என்றான். செல்வி அப்படித்தான். கெட்டுப்போன ட்யூப் லைட், கார் பேட்டரி என்று தூக்கி எறிய வைத்திருக்கும் பொருட்களை எடுத்துக் கொள்வாள். உமாவுக்கு பயம் படர்ந்தது, பாவம் செல்வி அவளுக்கு ஏதாவது ஆகாமல் இருக்க வேண்டுமே என்று பிள்ளையாருக்கு தேங்காய் உடைப்பதாக வேண்டிக் கொண்டாள்.

உடனே செல்விக்கு ஃபோன் செய்தாள். வழக்கம் போல அவள் எடுக்கவில்லை. விவரம் எதுவும் சொல்லி அனுப்பாமல் ஃபோனையும் எடுக்காமல் இந்த மாதிரி ஒரு வாரம் வராமல் இருந்ததில்லையே என்று கவலை அதிகமானது. ஒரு ஆட்டோ பிடித்துக் கொண்டு நேராக அவள் இருக்கும் தெருவுக்குப் போனாள். பஸ் ஸ்டாண்டுக்கு பின் புறம் ஒரு சந்து. பெட்டிக் கடையில் விசாரித்து வீட்டைக் கண்டு பிடித்துப் போனால், வீடு பூட்டி இருந்தது. பக்கத்து வீட்டில் இருந்து ஒரு சின்னப் பெண் ஒழுகும் மூக்குடன், வாயில் விரலுடன் எட்டிப் பார்த்து அம்மாவை அழைத்தது.

“என்னம்மா நீங்க என்ன தின மலரா, முந்தா நாள்தான் தந்திலேர்ந்து வந்தாங்க ” என்றாள். உமாவுக்கு எதுவும் புரியவில்லை, கலக்கம் அதிகரித்தது, தினப் பத்திரிகைகளில் வரும் அளவுக்கு ஏதாவது விபரீதமாக ஆகி விட்டதா, ” இல்ல, செல்வி எங்க வீட்டில வேல செஞ்சுட்டிருந்தா, ஒரு வாரமா வரலயேன்னு பார்க்க வந்தேன், என்ன ஆச்சு அவளுக்கு?”

” சொல்லல போல, அவ இனிமே வேலைக்கு வர மாட்டாளுங்க, “, உமா கர்சிப்பை எடுத்து வாயில் வைத்துக் கொண்டாள்.

“ஏன் என்ன ஆச்சு ?”

“ஒரே அதிர்ஷ்டம்தான் அவங்களுக்கு, வேலுச்சாமி கார்ப்பரேஷன் எலக்ஷனுல செயிச்சு நம்ம வார்டு கார்ப்பரேடர் ஆயிட்டாருங்க ” என்றாள்.

உமாவுக்குப் பெரிய நிம்மதியாக இருந்தது, அவளுக்கு எதுவும் ஆகவில்லை என்பது ஆசுவாசமாக இருந்தது, செல்வி சிலம்பைத் தூக்கி எறிந்திருக்க வேண்டும்,

“செல்வி வந்தா உமான்னு தேடிட்டு வந்தாங்கன்னு சொல்லு”, குற்ற உணர்ச்சி கணத்தில் நீங்கியது. திரும்பப் போகும்போதே பஸ் ஸ்டாண்ட் பிள்ளையாருக்குத் தேங்காய் வாங்கி உடைத்தாள்.

ஒரு வாரம் கழித்து செல்வி வந்தாள், முகம் வாடி சோர்ந்து இருந்தாள். வேலுச்சாமி எலக்ஷனை எதிர்த்து கோர்ட்டில் கேஸ் போட்டிருக்கிறார்களாம். கள்ள ஓட்டு மற்றும் வன்முறையால்தான் அவன் வெற்றி பெற்றதாக எதிர்க்கட்சி வாதமாம்.

உமாவுக்கு வயிற்றில் கலக்கம், “அந்த சிலம்பை நீ ஏன் தூக்கி எறியல? உங்க வீட்டுக்கு எதுக்கு எடுத்துட்டுட்டுப் போன?“ குரல் குளறியது.

செல்விக்கு அவளது கலக்கம் புரியவில்லை, “எதும்மா, அன்னிக்கு நீங்க, அந்த பொட்டி மேல இருந்த சலங்கைய ஒரு கவருல போட்டு வெக்கிருந்தீங்களே, அதுவா ?“

“ஆமாம், அதேதான், தூக்கி எறியச் சொன்னா, ஏன் எறியல?” குரல் உயர்ந்தது.

“இல்லம்மா, நான் அத ஊட்டுக்கு கொண்டு போய், புளி போட்டு தேச்சனா, பளபளன்னு ஆயிடுச்சு. எங்க ஊட்டுக்காரரு, அம்மா ஏதோ தெரியாம தூக்கிப் போட்டிருப்பாங்க, மரியாதயா அவங்க ஊட்டுலயே கொண்டு போய் கொடுத்திடுன்னு திட்டினாரு”

“அன்னக்கே திரும்ப வந்து வெச்சுட்டேனுங்க,” உமா திடுக்கிட்டு கருப்புப் பெட்டியைப் பார்த்தாள், இடம் காலியாகத்தான் இருந்து.

“கீழ பொட்டி மேல இருந்தா தூசு படிஞ்சு துடைக்க கஸ்டமா இருக்குதுன்னு, கண்ணாடி அலமாரில வெச்சுட்டேனுங்க “

உமா திரும்பினாள், அங்கே கண்ணாடி ஷோ கேஸில் நடு நாயகமாக மற்ற அலங்காரப் பொருட்களுடன் அந்த ஒற்றைச் சிலம்பு வீற்றிருந்தது.

ஒரே கேள்வி

எஸ். சுரேஷ்

கே: நாம் ஏன் உயிர் வாழ வேண்டும்?

பதில்: ஹ ஹ ஹ ஹ ஹ. காலேஜ் முடிச்சிட்டு உத்தியோகம் கிடைச்சிருக்கற ஸ்டுடென்ட் கிட்ட இந்த மாதிரி கேள்வியா? ஹ ஹ ஹ. இப்போ தான் சார் இந்திய கம்ப்யூட்டர் இண்டஸ்ட்ரி வேகமாக வளரும் போல் இருக்கு. நாங்க வேற டாப் கிளாஸ் காலேஜ்லிருந்து பாஸ் ஆகியிருக்கோம். முன்னாடி நிறைய வாழ்கை இருக்கு சார். இப்போ போயி எதுக்கும் வாழணும்ன்னு கேட்டுண்டு.

ஆனா நீங்க கேக்கறது எனக்கு புரியறது. நான் நிறைய நாவல் படிப்பேன். இந்த விஷயத்தை பத்தி பல ஐரோப்பிய நாவலாசிரியர்கள் பேசியிருக்காங்க. காமு, சார்த்தர், தாஸ்தாவெஸ்கி இப்படின்னு பல பேரு. அங்க நிஹிலிசம்ன்னு ஒரு தத்துவம் இருக்கு தெரியுமா? அந்த தத்துவத்தின்படி நமக்கு இந்த உலகத்துல ஒண்ணும் புரியாது. ஒரு மாதிரி சூன்யம் இந்த உலகம்ன்னு அந்த தத்துவம் சொல்லுதாம். புத்தரும் இதே தத்துவத்த சொன்னாரா அப்படின்னு ஒரு கேள்வி இருக்கு. ஆனா புத்தர் சொன்னது வேற நிஹிலிசம் வேறன்னு சொல்றாங்க. தத்துவம் படிச்சா மண்ட குழம்பிடும். நான் ரிலேடிவிட்டி தியரி படிச்சவன். இந்த தத்துவம்லாம் படிச்சா அதுவே சுலபமா இருக்கும் போல் இருக்கு.

ஆனா ஐரோப்பால நிஹிலிசம் பெரிய பாதிப்பு ஏற்படுத்தினதா சொல்றாங்க. பல எழுத்தாளர்களும் கவிஞர்களும் தற்கொல செஞ்சிண்டாங்களாம். இதுக்கு எதிரா காமு ஒரு பெரிய கட்டுரை எழுதினதா என் நண்பன் அசோக் சொல்றான். அவனும் நானும் ஒரே கம்பனில சேரப் போறோம்.

வாழ்க்கைல எவ்வளவோ செய்யணும் ஆனா ஒரு அம்பது வயசுல டக்க்னு போயிடணும். எங்க கொள்ளு தாத்தா பாவம். படுத்த படுக்கையா இருந்து, அவரும் கஷ்டப்பட்டு எல்லோரையும் துன்புறுத்தி போனாரு. அது மாதிரி இல்லாம ஒரு ஹார்ட் அட்டாக்ல போயிடணும். அது ஒண்ணுதான் ஏன் அசை,

கே: நாம் ஏன் உயிர் வாழ வேண்டும்?

பதில்: வாங்க சார் வாங்க. போன முறை நீங்க ஏதோ தமாஷுக்கு சொல்றீங்கன்னு நினைச்சேன். நிஜமாவே வந்துட்டீங்க. உங்க திட்டம் நல்லா இருக்கு. பத்து வருஷத்துக்கு ஒரு முறை இந்த கேள்விய கேக்கறது. என்ன மாற்றம் நிகழ்ந்திருக்குன்னு பார்க்கறது.

நான் காலேஜ் விட்டு வெளீல வந்தவுடனே இப்ப தான் வாழ்க்கையே ஆரம்பிக்குதுன்னு நினைச்சேன். ஆனா பத்து வருஷம் கழிச்சி இப்போதான் வாழ்க்கையே ஆரம்பிக்கப் போவுதுன்னு ஒரு உணர்வு இருக்கு. ஏன்னா நான் காதலிக்கும் பெண்ணை அடுத்த மாசம் கல்யாணம் செஞ்சிக்க போறேன்.

நான் வேலைல சேர்ந்த பிறகு ஆபிஸ ஒரு கலக்கு கலக்கிட்டேன். நான் முதல் முறையா கோட் பண்ணத கிளையேன்ட் ரொம்ப பாராட்டினான். வேலைக்கு சேர்ந்த ஆறு மாசத்துல என்னை அமெரிக்காவுக்கு அனுப்பினாங்க. அந்த ப்ராஜெக்ட் சரியா முடிச்சேன். அந்தக் காலம் இப்போ போல் இல்ல. அப்போ எல்லாம் அமெரிக்கா போற கனவே காண முடியாது. நான் போனது பல பேருக்கு அசிடிடி கொடுத்தது. என் நண்பன் அசோக்கும் வயிறு எறிஞ்சான். ரெண்டு வருஷம் அங்க இருந்துவிட்டு திரும்பி வந்தேன்.

என் கதைய விடுங்க. நீங்க கேட்ட கேள்விக்கு என்ன பதில்? இப்போ இது போன்ற கேள்வியெல்லாம் யாரும் கேக்கிறதில்ல. மாணவனா இருந்தபோது நாங்க எல்லோரும் புத்தகம் படிப்போம், விவாதிப்போம். இப்போ புத்தகம் படிக்கிற டைம் இல்ல. படிச்சாலும் விவாதிக்க ஆள் இல்ல. வேலை, வேலை, வேலை. நாமும் முன்னேறுகிறோம். கம்பனியும் முன்னேறுகிறது. காற்றுள்ள போது தூற்றிக்கொள்ள வேண்டும் சார். நின்று நிதானமா யோசிக்கற அளவுக்கு டைம் இல்ல சார். இருக்கவும் கூடாது. அப்ப தான் முன்னேற முடியும்.

எதுக்காக வாழணும்? எதிர்காலத்துக்காகதான். எதிர்காலம் நல்லா இருக்குன்னா வாழ வேண்டியதுதான். நான் ப்ராஜெக்ட் லீட் ஆன பிறகு அவ என் டீம்ல சேர்ந்தா. அன்றைக்கே காதல்வயப்பட்டுட்டேன். அழகியா இல்லையான்னா எனக்கு பதில் சொல்ல தெரியாது. ஆனா எனக்கு அவ தான் பொருத்தமான பெண். இவ கூட வாழ போகிறோம் என்று நினைக்கிற பொழுதே எவ்வளவு வருடங்கள் வேணுமானாலும் இந்த உலகத்துல வாழலாம்ன்னு தோணுது சார். இப்ப இந்த கேள்விக்கு அவசியமே இல்ல.

கே: நாம் ஏன் உயிர் வாழ வேண்டும்?

பதில்: கரெக்டா வந்துடிறீங்க சார். பத்து வருஷம் ஆனாலும் எப்படியோ என்ன தேடி கண்டுபிடிச்சிடறீங்க.

இந்த முறை உங்களுக்கு ஸ்ட்ராங்கா பதில் சொல்லலாம். நாம நம்ம குழந்தைகளுக்காக வாழணும். எனக்கு இப்போ ரெண்டு குழந்தைங்க. ஒவ்வொரு நாளும் ஆபிஸ்ல இந்த பாலிடிக்ஸ் எல்லாம் டீல் பண்ணிட்டு வீட்டுக்கு சோர்வா வரும்போது அந்த குழந்தைங்க சிரிப்ப பார்த்தா வரும் ஆனந்தம் வார்த்தைல சொல்ல முடியாது சார். க்ளுகோஸ் குடிச்ச மாதிரி இருக்கும்.

குழந்தைங்க இல்லேன்னா வாழ்க்கை ரொம்ப கஷ்டமா இருந்திருக்கும். முன்ன மாதிரி இல்ல சார் இப்போ. ஆபிஸ் பூரா பாலிடிக்ஸ். நான் எல்லா வேலையும் பண்ணி கஸ்டமர குஷிப்படுத்தி பிஸ்னெஸ் டெவெலப் பண்ணேன். ஆனா என்ன லாபம்? எனக்கு ப்ரமோஷன் குடுத்தாங்க சரிதான். நானும் அப்போ ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஆனா அடுத்த நாளே அசோக்குக்கும் ப்ரமோஷன் குடுத்தாங்க. அவன அமெரிக்கா அனுப்பினாங்க. என்ன கேட்டாங்க ஆனா மனைவி கர்ப்பமா இருந்தா. என்னால போக முடியல. அவன் என் அளவுக்கு என்ன வேல பண்ணான்? ஏதோ பாஸ் கூட சிரிச்சி சிரிச்சி பேசுவான். எப்படியோ ப்ரமோஷன் வாங்கிட்டான். எல்லோருக்கும் ப்ரோமோஷன் குடுத்தா வேலை செய்யறவனுக்கு என்ன சார் மதிப்பு? சரி விடுங்க. கார்ப்ரட்ல இதெல்லாம் சகஜம்.

இப்போ உங்க கேள்விக்கு வருவோம். நாம நமக்காக வாழணுமா இல்ல நம்ப சார்ந்து இருக்கிறவங்களுக்காக வாழணுமா? என்ன பொருத்த வரையில இது தான் கேள்வியா இருக்க முடியும். இதுக்கு பதில் சொன்னா உங்க கேள்விக்கு பதில் சொன்ன மாதிரி. நான் பைரப்பா எழுதின ‘வம்ச வ்ரிக்ஷா’ படிச்சேன். அதுல ஒரு குழந்தை தாய் தந்தைக்கு மட்டும் சொந்தம் இல்ல. அவங்க வம்சத்துக்கே சொந்தம்னு அதுல வரும் முக்கியமான கதாபாத்திரம் வாதாடுறாரு. என்னால அத ஏற்க முடியல. குழந்தை அதைப் பெற்றவர்களுக்கு தானே சொந்தம்? ஆனா அந்த ஒரு பாய்ண்ட் ஆப் வியூ தப்புன்னு சொல்ல முடியல. இந்த காலத்துக்கு அதெல்லாம் சரி வராது. என் அப்பா அம்மா என் கூட தான் இருக்காங்க. அவங்களுக்கு பேரன் பேத்தி மேல அலாதி ப்ரியம் ஆனா அதுக்குன்னு அவங்களால நம்ம குழந்தைங்க எதிர்காலத்த டிசைட் பண்ண முடியாது இல்லையா?
ஹ ஹ ஹ. ரொம்ப பேசிட்டேன்னு நினைக்கிறேன்.

கே: நாம் ஏன் உயிர் வாழ வேண்டும்?

பதில்: முதல் முறையா நானே என்னை இந்த கேள்வி கேட்டுக்கொண்டேன். உலகம் ரொம்ப மாறிவிட்டது சார். எதுக்குமே மதிப்பில்லாம போயிடிச்சி. பணம் தான் முக்கியம்னு ஆயிடிச்சி. நான் எவ்வளவு வருஷமா இந்த கம்பெனிக்காக பாடு பட்டிருப்பேன். எவ்வளவு உழைச்சேன். என் உழைப்புனால எவ்வளவு புது கஸ்டமர் கிடைச்சாங்க. ஒரு டவுன்ட்டர்ன் வந்தவுடனே யார தூக்கலாம்னு பாக்கறாங்க. லாயல்டி, உழைப்பு எதுக்குமே மரியாத இல்ல. காக்கா பிடிக்கறவங்க தான் வாழறாங்க. என்ன நேரா கூப்பிட்டு “போடா வெளியிலே”ன்னு சொல்லிருந்தா அது மரியாதையா இருந்திருக்கும். ஆனா இவங்க அப்படி செய்யல. என்னை ஒரு பவர் இல்லாத ரோலுக்கு மாத்தினாங்க. ஏழு வருடமா ப்ரமோஷன் இல்ல. ரெண்டு வருஷம் இன்க்ரிமென்ட் இல்ல. இன்க்ரிமென்ட் குடுத்தாலும் ஏதோ ரெண்டு பர்சென்ட் மூணு பர்சென்ட்ன்னு குடுக்கறாங்க. அதே அசோக்க பாருங்க. நல்லா அமெரிக்கால செட்டில் ஆயிட்டான். கம்பனி அவனுக்கு கிரீன் கார்ட் ஸ்பான்சர் செஞ்சது. அவனுக்கு இந்த அஞ்சு வருஷத்துல ரெண்டு ப்ரமோஷன். என்னால உயிர் வாழ்ந்தவன், காக்கா பிடிக்கிறதா தவிர ஒரு டாலேன்ட் இல்லாதவன். அவனுக்கு எப்படி ஒரு வாழ்வு பாருங்க.

போடா கொய்யான்னு ராஜினாமாவ வீசி எறிஞ்சிட்டு வந்துடலாம். ஆனா நம்ப குடும்பத்துக்காக அத செய்யாம இருக்கேன். இப்போ என் கூட வேல செஞ்ச பிஸ்வாஸ்ஸ எடுத்துக்கோங்க. அவனுக்கு ஒரே குழந்தை. அவன் பெண்டாட்டி நல்ல வேலைல இருக்கா. நல்ல சம்பாத்தியம். அவன வேற ரோல் எடுக்க சொன்னாங்க. அவன் உடனே ராஜினாமா செஞ்சிட்டு பெண்டாட்டி பணத்துல சாப்பிட்டுக்கொண்டு ஜாலியா இருக்கான். நமக்கு அப்படி முடியலை. அதுனால பல்ல கடிச்சிண்டு ஓட்டிக்கொண்டிருக்கிறேன். வெளியில வேற என் வயசு ஆளுங்களுக்கு வேலை கிடைப்பதில்லை.

இப்போ என்னோட குறிக்கோள் ஒன்றே ஒன்று தான். என் பிள்ளைகள நல்லா படிக்க வச்சு நல்ல future அமைச்சு கொடுக்கணும். அது தான் வாழ்க்கைல முக்கியம். நம்ப வாழ்க்கையே நம்ப குடும்பத்துக்கு தான்.

கே: நாம் ஏன் உயிர் வாழ வேண்டும்?

பதில்- மனசு நெறஞ்சிருக்கு சார். போன வருஷம் என்னுடைய அறுபதாம் பிறந்த நாள ரொம்ப கிராண்டா என் பிள்ளைகள் கொண்டாடினார்கள். எல்லாரும் வந்து பார்டிசிபேட் பண்ணங்க. இவ்வளவு பேர் நம்ம கூட இருக்காங்கன்னு நினைக்கும் பொழுது மகிழ்ச்சியா இருக்கு.

அதே போல் இவ்வளவு வருஷம் நாம உயிர் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்பதே இந்த காலத்துல ஒரு சாதனையா இருக்கு. பாவம் அசோக். நல்லா ப்ரோமோஷன் வந்துது. ஆனா என்ன லாபம். ஒரே ப்ரெஷர். சட்டென்று ஒரு நாள் மாரடைப்புல போயிட்டான். எல்லோருக்கும் ஒரே ஷாக். “நல்ல வேள உங்களுக்கு ப்ரோஷன் வரல. அந்த ப்ரெஷர் உங்களுக்கு இல்ல. ஆள் இல்லாம பணத்த வச்சிண்டு என்ன பண்றது?” என்று என் மனைவி கேட்டாள். அதுவும் உண்மைதான்.

ஒரு விதத்துல வேலைய விட்டதும் நல்லது தான். நல்ல டைமிங்க்ள விட்டேன். பையன் ஒரு மாதிரி அமெரிக்கால வேலைல சேர்ந்த பிறகு நான் இங்க வேலைய விட்டேன். பிறகு ஸ்டார்ட் அப்ல கொஞ்ச நாளு, ஒரு காலேஜ்ல லேக்சுரர்ரா கொஞ்சம் நாளுன்னு வண்டி ஓடிச்சி. அப்புறம் டாட்டர்-இன்-லா பிரேக்னேன்ட் ஆனா. பெண்ணு கல்யாணமாகி ஜெர்மனி போயிட்டா. அதுக்கு பிறகு கொஞ்ச நாள் அமெரிக்கா, கொஞ்ச நாள் ஜெர்மனின்னு வண்டி ஓடுது.

எப்பவுமே நான் உங்க கேள்விக்கு டைரெக்ட்டா பதில் சொல்றதில்ல. ஹ ஹ ஹ. இப்போ நான் வாழறது என் பேர பிள்ளைகளுக்காக தான். இப்போ எங்க உலகமே அவங்கதான்.

கே: நாம் ஏன் உயிர் வாழ வேண்டும்?

பதில்: நீங்க புதுசா தம்பி. அவர் வரலையா? ஒ. என் மனைவியும் கான்சர்ல தான் இறந்தா. லங்க் கான்செர். அவ போன பிறகு எதுக்கு வாழணும் தான் இருக்கு. ஏன் வாழணும்னு கேள்வி எழுந்துக்கொண்டே இருக்கு. பதில் தான் தெரியல. பசங்க ரெண்டு பேரும் வேற வேற எடத்துல இருக்காங்க. எனக்கோ அங்க இருக்க பிடிக்கல. இங்க ஒரே தனிமை. என் மனைவி என்ன பாடு பட்டா. உதவிக்கு யாரும் இல்ல. இந்த நகரத்துல எனக்கு பல சொந்தக்காரர்கள். ஆனா எல்லோரும் அவங்க அவங்க வேலைல இருக்காங்க. நம்ம ஒத்தாசைக்கு வேலைக்கார்கள் தான். அவங்கள் நம்பி தான் பல பேர் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கு தம்பி. நம்ப பிள்ளைகள விட வீட்டுக்கு வர நர்சுக்கு தான் நம்மள பத்தி நல்லா தெரிஞ்சிருக்கு.

நம்ம பிள்ளைக இங்க இருந்தா நமக்கு ஒரு சந்தோஷம். இப்போ எல்லாம் பேர பிள்ளைகள கம்ப்யூட்டர் ஸ்க்ரீன்ல தான் பாக்க முடியறது. எங்க சம்பந்தி கதியும் இதேதான். என் பையனோட மாமியார் தனியா இருக்கா பாவம். மாமனாருக்கு சுகர். கிட்னி கோளறு. ரொம்ப துன்பப்பட்டு இறந்தாரு பாவம். அவர் போனது எல்லோருக்கும் ஒரு ரிலீப்.

இந்த தனிமைல வாழ்க்கையோட அர்த்தம் என்னனு தேடிக்கொண்டிருக்கிறேன். பல புக்ஸ் படிக்கிறேன். ஆனா ஏனோ மனம் அதுல லயிக்க மறுக்கிறது. என் மனைவியோட நினைவு இன்னும் என்னைவிட்டு நீங்கலைன்னு நினைக்கிறேன். எப்போவும் அவ தான் ஞாபகம் வருகிறாள். ஹ்ம்ம். ஏதோ நம்மள யம தர்மன் அழைக்கும் வரை வாழ்ந்துக்கொண்டிருக்க வேண்டும். அது தான் விதி.

கே: நாம் ஏன் உயிர் வாழ வேண்டும்?

பதில்: நீங்க வேற ஆளா? அவர் ரிசைன் பண்ணிட்டாரா? இந்த காலம் அப்படி. நாங்க எல்லாம் முப்பது ஆண்டுகள் ஒரே கம்பனில இருந்தவங்க. அந்த வால்யூ சிஸ்டம் இப்போ இல்லை. மாரல்ஸ் மாறி போச்சு. நீ கேட்ட இல்லையா ஒரு கேள்வி, “எதுக்கு உயிர் வாழணும்’ன்னு. இதுக்கு தான் உயிர் வாழணும். அதாவது என்ன போல் பெரியவங்க, இந்த தலைமுறைக்கு ந்யாயம்னா என்ன, தர்மம்ன்னா என்னான்னு எடுத்து சொல்லணும். அதுக்காக நாங்க வாழணும்.

நான் தினமும் கோவிலுக்கு போறேன். தினமும் அங்க அரை மணி லெக்சர் குடுக்கிறேன். பல ஆர்டிகல்ஸ் எழுதுகிறேன். உலகம் பூரா பல பேர் அத படிக்கறா. எனக்கு எவ்வளு மெசஜ், எவ்வளு மெயில் தெரியுமா. என் பொண்ணு இப்போ ஹாலந்த்ல இருக்கா. அவ ஒரு நாள் போன் பண்ணி, “அப்பா இங்க ஒருத்தர் உங்க ஆர்டிகல் படிச்சி ரொம்ப புகழ்ந்தார். ஐ யாம் ப்ரௌட் ஆப் யூ” சொன்னா. போன முறை பையன பாக்க அமெரிக்கா போன போது அவங்க கோவில்ல மூணு நான் அத்வைதம் பத்தி பேசினேன். என்ன ரெஸ்பான்ஸ் தெரியுமா. பேரன், பேத்திக்கெல்லாம் ஒரே ஆச்சரியம், “யூ ராக் தாத்தா”ன்னு சொன்னா என் பேத்தி. இப்போ கோவில்ல நடக்கற எல்லா விசேஷத்துக்கும் நான் இருந்தாகணும். பல ஏழை பசங்களுக்கு படிக்க உதவற டிரஸ்ட் வச்சிருக்கோம். நீங்க கூட எதாவது குடுக்கலாம். டாக்ஸ் exemption உண்டு. நேத்தி சுவாமிஜி வந்தார். என்னோட நிறைய நேரம் பேசிக்கொண்டிருந்தார். அவரும் நாங்க செய்கிறதெல்லாம் மெச்சினார். ஏதோ பகவான் புண்யத்துல நம்மளால முடிஞ்சத செய்யமுடியறது.

ஓம் சத்குருவாய நமஹா.

மாட்டுக்கார வேலன்

மு வெங்கடேஷ்

அதிகாலை ஐந்து மணி, விடிந்தும் விடியாமலும் இருந்தது. கோவில் மூலஸ்தானத்தில் இருக்கும் சாமியைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார் பண்டாரம். ராசம்மாள் கோவிலுக்குள் இருக்கும் குப்பைகளைத் தூத்துப் பெருக்கிக் கொண்டிருந்தாள். அவளுக்குத் துணையாக இருந்த மகள் சங்கரி, எதையோ கையில் எடுத்துக் காட்டி அது என்னவென்று கேட்டாள். “அது ஒன்னுமில்லம்மா, பாம்புச் சட்டதான். கழட்டிப் போட்டு போயிருக்கு, நீ அதத் தூக்கித் தூரப் போட்டுட்டு வேலயப் பாரு” என்றாள் ராசம்மாள்.

அனைத்து வேலைகளையும் முடித்த பின்னர் பண்டாரம் ராசம்மாளிடம்,“தங்கப் பாண்டி அண்ணாச்சி  தோட்டத்துல மோட்டார் ஓடுற சத்தம் கேக்கு, நீங்க ரெண்டு வேரும் போயி மொதல்ல குளிச்சிட்டு வந்துருங்க, நா செத்த நேரம் கழிச்சிப் போறேன்” என்றார். சரி, என்றவாறு ராசம்மாளும் சங்கரியும் சென்றனர்.

பண்டாரம் கோவில் திண்ணையில் தனியாக அமர்ந்திருந்தார்.

அப்போது ஏதோ சத்தம் கேட்கவே, “யார்ல அது? வேலனா? என்ன சத்தத்தையே காணும்? காது கேக்குதா இல்லையா? ஏல ஒன்னத்தான கேக்கேன்,” என்றார்.

பதில் ஏதும் சொல்லாமல் வந்த வேலன் சுதாரித்துக் கொண்டு, “அண்ணாச்சி நாந்தான் வேலன். ஏதோ சிந்தனைல இருந்துட்டேன். மன்னிச்சிக்கோங்க,” என்று சொல்லிக்கொண்டே கோவிலைப் பார்க்க நடந்து வந்தான். உடன் அவன் வளர்க்கும் மாடும்.

“சரியாப் போச்சுடே ஒன்னோட, கேட்டா ஒடனேப் பதில் ச்சொல்ல வேணாமா? அந்தானிக்கு வார?” என்று கேட்ட பண்டாரத்திடம், “அதான் ச்சொன்னம்லா அண்ணாச்சி” என்றான் வேலன்.

பண்டாரம் விடுவதாக இல்லை. “எப்பச் ச்சொன்னடே? கேட்ட ஒடனேச் சொல்ல வேணாமா? சரி, இன்னைக்கு என்ன இவ்ளோ வெள்ளன?”

“ஆமா அண்ணாச்சி, மாட்டக் கூட்டிட்டு இன்னைக்கு பக்கத்துக்கு ஊர் வரப் போ வேண்டி இருக்கு, அதான்”

“சரிடே. பாத்து பைய சூதானமாப் போயிட்டு வா,” என்று சொல்லிவிட்டு பண்டாரம் எழுந்து கோவிலுக்குள் சென்றார்.

மாட்டைக் கூட்டிக் கொண்டு சிறிது தூரம் சென்ற வேலன் ஏதோ ஞாபகம் வர மீண்டும் கோவிலைப் பார்க்க வந்தான். வந்தவன் பண்டாரத்தைப் பார்த்து, “இந்தாரும், வர்ற வழில பேச்சியம்மங் கோயில்ல கொட, பொங்கல் குடுத்தானுவோ, ஒங்க ஞாபகம் வந்துச்சு. அதான் வாங்கியாந்தேன். மைனிக்கும் புள்ளைக்கும் குடுங்க,” என்று ஒரு பொட்டலத்தை நீட்ட, அதை வாங்கிய பண்டாரமோ “ஒனக்குடே?” என்றார்.

“நாந்தான் கோயில் ச்சாப்பாடு ச்சாப்ட மாட்டம்லா, விட்டுப் பல வருசமாச்சு” என்று சொன்ன வேலனிடம், ”வெளங்காமப் போச்சு. எக்கேடும் கெட்டுப் போ” என்றார் பண்டாரம்.

எதையும் கண்டுகொள்ளாதவன், “சரி அண்ணாச்சி சாந்தரம் வாரேன்,” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

சற்று நேரத்தில் ராசம்மாளும் சங்கரியும் குளித்து விட்டு வர, பண்டாரமும் குளித்துவிட்டு வந்தார். சாமிக்குப் பூசை முடித்துவிட்டு, வேலன் கொடுத்த பொங்கலைச் சாப்பிட்ட மூவரும் கோவில் திண்ணையில் அமர்ந்திருந்தனர்.

உச்சி வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தாலும் காற்று சிலுசிலுவென வீசிக் கொண்டிருந்தது. நாலாபுறமும் மரங்களாலும் வயல்களாலும் சூழ்ந்து இருந்தது கோவில். ஆள் அரவமற்ற அந்த காட்டுக்குள் மொத்தத்தில் இருந்ததோ ஆறு வீடுகளும் ஒரு சின்ன பொட்டிக் கடையும்தான். கிழக்கு திசை நோக்கிச் செல்லும் ஒற்றையடிப் பாதையைப் பிடித்தால் ஐந்து மைல் தூரத்தில் ஊர் வந்து விடும்.

ராசம்மாளும் சங்கரியும் அடுப்பு எரிப்பதற்காகக் கோவிலைச் சுற்றி விழுந்து கிடக்கும் சுள்ளிகளைப் புறக்கிக் கொண்டிருந்தனர். பண்டாரமோ சில நாட்களுக்கு முன் கீழே விழுந்து உடைந்த மணியை சரி செய்து கொண்டிருந்தார்.

சிறிது நேரம் கழித்து, “மத்தியானத்துக்கு நேத்து வச்ச பழைய சோறு கெடக்கு தொட்டுக்குறதுக்கு ஊறுகா மட்டும் வாங்கியாரீங்களா,” என்று ராசம்மாள் கேட்க, சரி என்று சொன்ன பண்டாரம் எழுந்து கடைக்குச் சென்றார். மடியில் படுத்திருந்த சங்கரிக்கு தலைவாரிக் கொண்டிருந்தாள் ராசம்மாள்.

“எம்மா நா ஒன்னு கேக்கவா?”

”கேளும்மா” என்றாள் ராசம்மாள்.

“இல்ல நமக்கு சொந்த வீடு வாசலெல்லாம் இல்லையாம்மா?”

“இருந்துச்சும்மா. அதெல்லாம் ஒரு காலம். ஒங்க அப்பாவுக்கு என்னைக்குக் கண் பார்வ போச்சோ அன்னைக்கே நம்ம வாழ்க்கையும் இருண்டு போச்சு”.

ஒன்றும் புரியாத சங்கரி, “ஏம்மா என்னாச்சு?” என்று கேட்க, குடும்பத்தில் நடந்த சண்டை, அதில் தாங்கள் ஏமாற்றப்பட்ட கதை என எதையும் கூற விரும்பாத ராசம்மாள், ”அத விடும்மா, அதெல்லாம் நமக்கு இனிமே இல்ல, இனி இந்த கோயில்தான் நமக்கு வீடு, இந்த நத்தமுடையார்தான் நமக்கு எல்லாமே” என்று பேச்சை முடித்தாள்.

சங்கரி யோசித்துக் கொண்டே ராசம்மாளின் மடியில் படுத்திருந்தாள்.

மணி ஒன்றைத் தொட்டிருந்தது. கைக்குழந்தையுடன் வந்த ஒரு பெண் ராசம்மாளிடம் தான் கொண்டு வந்திருக்கும் வெங்காயத்தைக் கோவிலுக்குள் காய வைத்துக் கொள்ளலாமா என்று கேட்க, ராசம்மாள் சரி என்றாள். இடுப்பிலிருக்கும் குழந்தையை இறக்கி விட்டு, வெங்காயம் காய வைத்துக் கொண்டிருந்தாள். அந்தக் குழந்தையின் தலை சற்று விநோதமாக இருக்கவே சங்கரி வைத்த கண் மாறாமல் அதையே பார்த்துக் கொண்டிருந்தாள். வேலை முடிந்ததும் குழந்தையை மீண்டும் இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு ராசம்மாளிடம் சொல்லி விட்டு அப்பெண் கிளம்பிச் சென்றாள். சங்கரி அக்குழந்தையை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்க, இடுப்பிலிருக்கும் அக்குழந்தையும் சங்கரியைப் பார்த்து சிரித்தது.

“எம்மா நா ஒன்னு கேக்கவா?”

”கேளும்மா” என்றாள் ராசம்மாள்.

“இல்ல, அந்தப் பையனோட தல கொஞ்சம் ச்சாஞ்ச மாரி இருக்கே அதான் என்னனு” என்று கேட்டு முடிப்பதற்குள், “அதாம்மா,அது ஒரு பெரிய கத. இந்த பையன் வயித்துல இருக்கும்போது அவங்க அப்பேன் மூக்கன் இருக்காம்லா, ஒரு நா ச்சாராயத்தக் குடிச்சிட்டு இங்க வந்து தேங்காய ச்சாமி தலைல ஒடச்சிருக்கான். நாம வேற அந்த நேரத்துல இங்க இல்லையா, குடிச்சிட்டு வந்த மூதி தேங்காயப் போயி ச்சாமி தலைல ஓடச்சாம்லா, அதுல ச்சாமி தல லேசா ச்சாஞ்சிட்டு. பொறந்த கொழந்த தலையும் லேசா ச்சாஞ்சிட்டு. இந்த ச்சாமி அவ்ளோ சக்தி வாஞ்சதாக்கும். இந்தக் கோயில்ல இருந்து யாரும் ஒரு கல்லக்கூடத் திருட முடியாது” என்று பழைய கதையைச் சொல்லி முடித்தாள் அவள்.

சங்கரி ஓடிப் போய் பார்த்தாள், சாமி தலையும் லேசாக சாய்ந்திருந்தது.

கடைக்குச் சென்று திரும்பி வந்தார் பண்டாரம். வாங்கி வந்த ஊறுகாயை வைத்து மூன்று பேரும் சாப்பிட்ட பின்னர் சற்று நேரம் படுத்திருந்தனர். வெயில் இறங்கத் தொடங்கியது.

“அண்ணாச்சி இருக்கீகளா இல்லையா?” என்று கேட்டவாறே மாட்டுடன் வந்தான் வேலன்.

“இந்தக் கோயில விட்டுட்டு நா எங்கடே போ போறேன். இங்கனதான் இருக்கேன். ச்சரி அதவிடு. நீ போன காரியம்லாம் நல்லவடியா முடிஞ்சிச்சா?”

“முடிஞ்சிச்சு முடிஞ்சிச்சு. நீருதான் இந்தக் கோயிலே கதின்னு கெடக்கீரு. போய் ஊருக்குள்ள பாரும்யா மனுசங்கெல்லம் எப்படி இருக்காங்கன்னு, அதவிட்டுட்டு” என்று வேலன் சொல்லவும் பண்டாரத்துக்கு கோவம் பொத்துக் கொண்டு வந்தது. “போடே நீயும் ஓ ஊரும், நன்றி கெட்ட ஊரு, தீயதான் வைக்கணும். அதுக்கு இந்தக் காட்டு வாழ்க்கையே சொகமாத்தாம்டே இருக்கு” என்றார் கோபமாக.

“ச்சாமி ச்சாமின்னு இந்தக் கோயிலையே கெட்டி அழும், கடைசியில கோட்டிதான் புடிக்கப்போவுது ஒமக்கு. இந்தச் ச்சாமியாவே ஒமருக்கு சோறு போடப் போவுது? பாவம் மைனியும் புள்ளையுந்தான்” என்றான் வேலன்.

கண்கள் சிவக்க, கைகள் நடுங்க, பல்லைக் கடித்துக் கொண்டு பண்டாரம், “செத்த மூதி வாய மூடுல. எடுபட்ட பய. கூறு கெட்டத்தனமாப் பேசிக்கிட்டு. என்னல பேசுற? நீ ச்சொன்ன அதே ஊருக்குள்ள இருந்துட்டுத்தாம்ல இங்க வந்து கெடக்கேன். ஊராம்லா ஊரு? மனுசன மனுசனாவாடே மதிக்கிறானுவ? வண்டிக்காரப் பய ரோட்டுல அவங் குறுக்க வந்துட்டு என்ன குருட்டுப் பயலேங்குறான், கடைல கொள்ளையடிக்கிற மூதிட்ட என்னன்னு கேட்டா குருட்டுப் பயலுக்கு இவ்ளோ ஆகாதுங்குறான், ஒரு திருட்டுப் பய, அந்த நாய் என்ன குருடேன்னு சொல்லுது, குடிகாரப் பயலுவோ அங்கயும் இங்கயும் நின்னுட்டு குருட்டுப் பயலுக்குப் பொண்டாட்டி புள்ள எதுக்குங்குறான். கொஞ்சோம் ஏமாந்தா கட்டிருக்க கோவணத்தக்கூட அவுத்துட்டு விட்ருவானுவடே. அவ்ளோ கேவலமா இருக்கு ஒங்க ஊரு. ஒங்க ஊருக்கு இந்த காடே மேலு. நல்லாக் கேட்டுக்கோ எனக்குக் கண்ணுதாம்டே இல்ல மானம் மரியாதையெல்லாம் நெறையவே இருக்கு. ஏங்கெட்ட நேரம் இங்க வந்து கெடக்கேன். ஆனா கெட்டதுலயும் ஒரு நல்லது இருக்குடே இந்த நிம்மதியான வாழ்க்க, கடவுள் புண்ணியத்துல குடிக்கிறதுக்கு கூழோ கஞ்சியோ கெடக்கி. இதவிட வேறென்னடே வேணும்? கோடி ரூவா குடுத்தாலும் இந்த சுகங்கிடைக்குமாடே ஒங்க ஊருல?” என்று தன் கோவத்தைக் கொட்டித் தீர்த்தார்.

இதனைத்தையும் கேட்டு பதில் ஒன்றும் சொல்ல முடியாத வேலன், மாட்டை அருகிலிருக்கும் மரத்தில் கட்டி வைத்துவிட்டு தலை குனிந்தவாறே வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

“ஏல வேலா, என்ன அண்ணாச்சி மேலக் கோவமாடே? பேசாமப் போற?”

“ச்ச அதெல்லாம் ஒண்ணுமில்ல அண்ணாச்சி. நீங்க சொல்றதும் நியாயந்தான”

“சரிடே அண்ணாச்சி ஏதாது தப்பாப் பேசிருந்தம்னா மன்னிச்சிக்கோ”

“அட விடுங்க அண்ணாச்சி, வயசுக்கு மூத்தவரு நீங்க போய் என்ட மன்னிப்பு கேட்டுட்டு” என்று சொல்லிக் கொண்டே நடந்து சென்றான்.

“பாவங்க வேலன். அவனப் போயி இந்த ஏச்சு ஏசிட்டீங்களே” என்றாள் ராசம்மாள்.

”இல்லம்மா, என்னன்னேத் தெரியல, அந்தப் பய அப்படிச் சொன்னதும் கோவம் ச்சுள்ளுன்னு வந்துட்டு அதான் மனசுல உள்ளத அப்படியே கொட்டித் தீத்துட்டேன். இப்போ ஏன்டா அப்படிப் பேசுனோம்னு ச்சங்கடமா இருக்கு” என்றார் பண்டாரம்.

“சரி விடுங்க நாளைக்கு வருவாம்லா பேசித் தீத்துக்கலாம்” என்று ஆறுதல் கூறிவிட்டு சாப்பிடக் கூப்பிட்டாள்.

மீதமிருந்த சோறையும் பழத்தையும் சாப்பிட்டு விட்டு மூன்றுபேரும் கோவில் திண்ணையில் ஒரு பாயை விரித்துப் படுத்தனர். சிறிது நேரத்தில் பண்டாரம் குறட்டை விடத் தொடங்கினார். ராசம்மாளுக்கும் கண் அசந்தது.

“எம்மா நா ஒன்னு கேக்கவா?”

பதில் ஒன்றும் இல்லாததால் மீண்டும் “எம்மா… எம்மா…” என்றாள்.

தூக்கத்தில் இருந்து விழித்த ராசம்மாள், “என்னதும்மா கேளு” என்றாள்.

“இல்ல அங்க பாருங்களேன் வயக்காட்டுக்குள்ள ஏதோ கொள்ளிப் பிசாசு மாரித் தெரியுது”.

“அதெல்லாம் ஒன்னு இல்லம்மா. பேயும் கெடயாது பிசாசும் கெடயாது. பேசாம கண்ண மூடிட்டுப் படு தாயி” என்று அவள் பயத்தைப் போக்கச் சொன்னாள் ராசம்மாள்.

பயம் தெளியாத சங்கரியோ, “அப்போ அது என்னதும்மா?” என்றாள்.

“அதா…? அதா…? அது வயக்காட்டுக்குள்ள பன்னி வரக் கூடாதுன்னு இந்தப் பயலுவ தீப்பந்தத்த ஏந்திட்டுப் போறானுவ. பயப்படாம கண்ண மூடிட்டுத் தூங்கும்மா,” என்று சொல்லிவிட்டு அவளை அணைத்துப் படுத்தாள்.

என்னதான் சொன்னாலும் சங்கரிக்கோ பயம் போகவில்லை. “பயம்மா இருக்கும்மா,” என்று மறுபடியும் கூறிய சங்கரியிடம், ”கோயிலுக்குள்ள என்னம்மா பயம்? பேசாமப் படு” என்று சொல்லிவிட்டு ராசம்மாளும் படுத்தாள்.

சற்று நேரம் கழித்து, “எம்மா நா ஒன்னு கேக்கவா?” என்று மறுபடியும் ஆரம்பித்தாள் சங்கரி.

“நீ இன்னும் தூங்கலையா? என்னம்மா கேக்கப் போற? என்றாள் ராசம்மாள்.

“அங்க பாரும்மா ஏதோ அசையிற மாரித் தெரியுது. எனக்குப் பயம்மா இருக்கு”

“எங்கம்மா?”

“அப்பாவுக்கு அந்தப் பக்கம்”

“ஐயோ அது அப்பாவோட ச்சாரத்தத் தொவச்சிக் காயப் போட்ருக்கேன். அது காத்துல ஆடுது. அதுக்குப் போய் பயமா? இந்தா ச்சாமி தின்னாரப் பூசிக்கோ பயம் வராது” என்று தான் இடுப்பில் முடிந்து வைத்திருக்கும் சுருக்கப் பையில் இருந்த திருநீரை எடுத்து சங்கரியின் நெற்றியில் பூசினாள்.

மூன்றுபேரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.

திடீரென்று “ச்சில் ச்சில்” என்றொரு சத்தம். திடுக்கென்று விழித்த சங்கரி அசையாமல் படுத்திருந்தாள். மீண்டும் “ச்சில் ச்சில்” என்ற சத்தம். பயத்தில், அசையாமல் “எம்மா எம்மா” என்று ராசம்மாளைக் கூப்பிட்டாள்.

“என்னம்மா வேணும் ஒனக்கு?”

“ஏதோ “ச்சில் ச்சில்” னு சத்தம் கேக்குதும்மா. பயமா இருக்கும்மா,” என்று நடுங்கினாள் சங்கரி.

கண் விழித்த ராசம்மாளுக்கும் அதே “ச்சில் ச்சில்” சத்தம். சத்தம் நெருங்கிக் கொண்டே இருக்க, ராசம்மாளுக்கும் பயம் தொற்றிக்கொண்டது.

“என்னங்க என்னங்க,” பண்டாரத்தை எழுப்பினாள் அவள்.

பண்டாரம் என்னவென்று கேட்க, ஏதோ சத்தம் கேட்பதாகக் கூறினாள்.
“என்ன சத்தம்?” என்று தூக்கம் தெளியாத பண்டாரம் மீண்டும் கேட்க, ஏதோ “ச்சில் ச்சில்” னு சத்தம் என்றாள். பண்டாரம் விழித்துப் பார்த்தார். எல்லாம் இருட்டாக இருந்தது. “ச்சில் ச்சில்” சத்தம் அவருக்கும் கேட்டது.

திடீரென்று சங்கரி “எம்மா அங்க பாரேன், ஏதோ வெள்ளையா” என்றாள்.

“அடி ஆமாடி” என்ற ராசம்மாளிடம் “என்னதும்மா?” என்று கேட்டாள் சங்கரி.

அதைப் பார்த்த ராசம்மாளுக்கும் பயம் வரவே பண்டாரத்திடம் “என்னங்க அங்க ஏதோ வெள்ளையா” என்று சொல்லி முடிப்பதற்குள் “அடப் பேசாமப் படுங்க. வெள்ளையாது நொள்ளையாது. நா போய் என்னன்னு பாக்குறேன்” என்று கூறிவிட்டு அருகில் வைத்திருந்த கட்டையை எடுத்துக் கொண்டு சென்றார் பண்டாரம்.

“யார்ல அது? ஏ ஒன்னத்தான கேக்குறேன் யார்ல அது இந்த நேரத்துல?” என்று கேட்டுக்கொண்டே சென்றார்.

“எப்பாஅந்தப் பக்கம் இல்லப்பா இந்தப் பக்கம்” என்றாள் சங்கரி.

பண்டாரம் திசையை மாற்றினார்.

“ச்சில் ச்சில்” சத்தம் இன்னும் நெருங்கியது.

“எப்பா பக்கத்துல போவாத, மாடு கயிற அவுத்துட்டு வருது. அதான் இந்தச் சத்தம்” என்று கத்தினாள் சங்கரி.

மாடு இவர்களை நோக்கி “ச்சில் ச்சில்” என்று புதிதாக கழுத்தில் கட்டியிருக்கும் சலங்கையின் சத்தத்தோடு நெருங்கியது.

பண்டாரமோ “ச்சூ ச்சூ” என்றவாறு எங்கோ சென்று கொண்டிருந்தார். ராசம்மாளும் “ச்சூ ச்சூ” என்று கூறிக் கொண்டே சங்கரியை கட்டி அணைத்துக் கொண்டாள். சங்கரியும் பயத்தினால் ராசம்மாளை இறுக்கி அணைத்துக் கொண்டு ராசம்மாளின் முந்தானைச் சேலையை எடுத்து முகத்தை மூடிக்கொண்டாள். வெள்ளை மாடு இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. பக்கத்தில் நெருங்கியது. சங்கரி பயத்தில் எம்மா என்று அலறினாள்.

திடீரென்று ஓடி வந்த வேலன் மாட்டைப் பிடித்து இழுத்து மரத்தில் கட்டி வைத்தான். மாடு திமிறிக் கொண்டிருந்தது.

“எப்பா வேலண்ணே வந்துட்டாக” என்றாள் சங்கரி.

“என்னப்பா வேலா இப்படிப் பண்ணீட்ட? ஒழுங்கா கட்டீருக்க வேணாமா?” என்றாள் ராசம்மாள்.

“ஏ அண்ணாச்சி மேல இன்னுங் கோவந்தனியலயாடே ஒனக்கு?” என்றார் பண்டாரம்.

பதிலொன்றும் சொல்லாமல் சென்றான் வேலன்.

“இந்தப் பய எப்பவும் இப்படித்தான் கேட்ட கேள்விக்கு பதிலே ச்சொல்ல மாட்டான். சரி இனி பயப்படாமப் போய்ப் படுங்க. அதான் அந்தப் பய வந்துட்டாம்லா. காலேல பேசிக்கலாம் அவன்ட” என்று சொல்லிவிட்டு “ஏல வேலா இப்பயாது ஒழுங்கா கட்டிருக்கியாடே” என்றார் கத்தினார்.

பதில் இல்லை.

காலை ஐந்து மணி, வழக்கம்போல் கோவிலை சுத்தம் செய்யும் வேலையில் மும்முரமாக இருந்தனர் பண்டாரமும் ராசம்மாளும். சங்கரி மட்டும் இன்னும் பயத்திலிருந்து மீளாமல் இருந்தாள் .சற்று நேரத்தில் மாட்டின் சத்தம் கேட்கவே, மூவரும் வெளியே வந்தனர்.

“ஏல கூறுகெட்ட மூதி, ராத்திரி இப்படியாடே பண்ணுவ? மாட்ட ஒழுங்கா கட்டாம அது அவுத்துட்டு வந்து எங்க தூக்கத்தக் கெடுத்து, கடைசியில வந்து கட்டிட்டுப் போற? என்னனு கேட்டா பதிலே ச்சொல்லல. அண்ணாச்சி மேலக் கோவமாடே? அதான் நேத்தே மன்னிப்பு கேட்டம்லா. இன்னும் கோவந்தீரலயா ஒனக்கு? வாயத் தொறக்க மாட்டிக்கிற?” என்று வேலனைப் பார்த்துக் கேட்டார் பண்டாரம்.

“என்ன அண்ணாச்சி கனவு கினவு கண்டீகளா? நானாது ராத்திரி வர்றதாவது? நேத்து ராத்திரி வீட்டுக்குப் போய் கட்டய சாச்சவந்தான், இப்பத்தான் எந்திச்சு வாறேன். என்ன மைனி, அண்ணாச்சிக்கு மண்டைக்குச் சரி இல்லமாப் போயிருச்சா? அப்போ நா சொன்னது சரியாப் போச்சு போல” என்று கூறியவாறே கயிற்றை அவிழ்த்து மாட்டை இழுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

“வேலா வேலா” என்று பண்டாரமும் ராசம்மாளும் கூப்பிட, வழக்கம்போல் பதிலேதும் சொல்லாமல் போய்விட்டான் அவன்.

2016 – நரோபா

ஜார்ஜ் ஆர்வெல் எனும் பிரபல எழுத்தாளரின் 1984 நாவலின் பிரதான கதாபாத்திரம் வின்ஸ்டன் ஸ்மித்தை பதாகைக்காக நேர்காணல் செய்திருக்கிறார் நரோபா. ஆங்கிலத்தில் நிகழ்ந்த நேர்காணல் தமிழ் இலக்கிய சூழலுக்கு ஏற்ப கொஞ்சம் தகவமைக்கப்பட்டு மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.  

வின்ஸ்டன் ஸ்மித் ஒரு சிறிய அறிமுக குறிப்பு

ஸ்மித் ஓசியானியா ராஜ்ஜியத்தின் ஏர்ஸ்ட்ரிப் 1 (இன்று பரவலாக பிரித்தானிய ராஜ்ஜியத்தில் லண்டன் என அறியபடுகிறது) எனும் நகரில் வாழ்ந்தவர். இளமையிலேயே புரட்சியின் பொருட்டோ அல்லது எதிர்த்ததை பொருட்டோ அல்லது எதிர்க்க கூடிய சாத்தியமிருந்ததன் பொருட்டோ தந்தையையும், பின்னர் அசாதாரணமான சூழலில் தாயையும் தங்கையையும் இழந்தவர் (இழந்தவர் என்பதை கவனமாக வாசிக்க வேண்டும்.)

பின்னர் கட்சியில் சேர்ந்து ‘வாய்மைத்துறை அமைச்சகத்தில்’ வரலாற்றை திருத்தி எழுதும் கணக்கற்ற பணியாளர்களில் ஒருவராக திகழ்ந்தார். மிகுந்த நுண்ணறிவும் கவனமும் கோரும் சவாலான பணி அது. முதல் மனைவியுடனான திருமண உறவு தோல்வியுற்று அவர் பிரிந்து சென்று பதினோரு ஆண்டுகளுக்கு பின்னர் அமைச்சகத்தின் சக ஊழியரான ஜூலியாவும் அவரும் அரசாங்க விதிகளுக்கு முரணாக காதல் கொண்டனர். “சிந்தை குற்றத்திற்காக” பிடிபட்டு, அரசுக்கு எதிராக சதி செயல் உட்பட அனேக குற்றங்களை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தார். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டு ஒ பிரையன் தலைமையிலான குழு அவரது கோணல் மனோபாவங்களை நேராக்கி பரிவுடன் சீராக்கி விடுதலை செய்தது. ஓர் நன்னாளின் நற்தருணத்தில் ஓசியானியா ராஜ்ஜியத்தின் மரபிர்கிணங்க பின்னாலிருந்து மூளை சிதற சுடப்பட்டு உலகிலிருந்தும் வரலாற்றிலிருந்தும் மறைந்தார்.- ஆசிரியர் குழு

வின்ஸ்டன் ஸ்மித் மிக சுவாரசியமான ஆளுமை. அவருடைய அலுவலக சூழலில் நமக்கு அவர் அறிமுகபடுத்தப்படும் முதல் நொடியில் அதை உணர முடிந்தது. அத்தனை இரைச்சலுக்கு இடையிலும், தனக்குள் ஆழ்ந்து தனிமையில் இருந்தார். இறுதிவரை தெளிந்த போதத்துடன் இருக்க முயன்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நேர்காணலுக்காக அவரை துண்டு சீட்டு வழியாக தொடர்புகொண்டபோது (இனி இப்படி ரகசியம் காக்க வேண்டியதில்லை என்று பதில் எழுதி இருந்தார்) செஸ்ட்நட் மரத்தடி கஃபெயில் சாவகாசமாக சந்திப்பதாக முடிவு செய்துகொண்டோம். அவருக்கு ஒரு சின்ன குழப்பம் இருந்தது. “நீங்கள் எந்த காலகட்டத்து ஸ்மித்தை சந்திக்க விரும்புகிறீர்கள்?” என கேட்டு எழுதி இருந்தார். “சுடப்படுவதற்கு சற்று முந்தைய ஸ்மித்” என்பதே எனது பதில். ஆம் அவரையே நான் சந்திக்க விழைந்தேன்.

கோடை காலத்து அஸ்தமன சூரியன் இதமான வெம்மையுடன் தொலைதூரத்து மலை முகடுகளுக்கு கீழ் இறங்கி கொண்டிருந்தான். மேகங்கள் தங்களுக்குள் அனல் சுடரை பொத்தி வைத்திருந்தது போல் அதன் விளிம்புகளில் செம்மை படர்ந்திருந்தது. ‘தொலைதிரையில் நாடி நரம்புகளை முறுக்கேற்றும் தேசபக்தி பாடல் ஒன்று ஒலித்துகொண்டிருந்தது. பெரும்பாலான இருக்கைகள் காலியாகி கிடந்தன. மூலையில் இருந்த மேஜையில் மூவர் ஒருவரை ஒருவர் வெறித்தபடி அமர்ந்திருந்தனர். ஆரோன், ரூதர்ஃபோர்ட், ஜோன்சாக இருக்கக்கூடும். தனது கனத்த உடலை தூக்கியபடி தனக்குள் முனங்குவதாக எண்ணிக்கொண்டு சற்றே உரத்த குரலில் ‘இருக்காது..எதுவும் நடக்காது..அஞ்சவேண்டியதில்லை” என முனகியபடி நிலையிழந்து கஃபேக்கு வெளியே நடந்து கொண்டிருந்தவர் திருவாளர் பார்சனாக இருக்கவேண்டும்.

வெட்டவெளியை நோக்கி திறந்திருந்த சாளரத்துக்கு அருகிலிருந்த மேஜையில் முதுகை காட்டியபடி அமர்ந்திருந்தார் ஒருவர். அவர் தான் வின்ஸ்டன் ஸ்மித்தாக இருக்க வேண்டும் என தோன்றியது. அருகே சென்று நோக்குகையில் உறுதி செய்து கொண்டேன். அவரை நெருங்கிய போது அவருக்கு எதிருக்கையில் அமர்ந்திருந்த சிறிய மஞ்சள் முகமும், கோரை தலைமயிரும் உடையவன் எழுந்து  என்னை பார்த்து புன்னகைத்தபடி கடந்து சென்றான் அவருடைய மேஜையின் மேலிருந்த சதுரங்க பலகையில் வெள்ளையும் கருப்புமாக பாதி விளையாடிய நிலையில் காய்கள் பரவி கிடந்தன சற்று கிழடு தட்டி போயிருந்தார். காதுக்கும் தாடைக்கும் இடையிலான பகுதி தழும்பேறி கிடந்தது. சற்று கூர்ந்து கவனித்தால் உடலின் ஒவ்வொரு அங்கத்திலும் சென்றகாலத்து வடுக்களை கண்டுகொள்ள முடியும் என தோன்றியது. வடுக்களை துழாவிய என் கண்கள் அவர் பற்களில் வந்து ஒருநொடி திகைத்து நின்றன.

வி – புதிய செயற்கை பல் வரிசை பொருத்தபட்டிருக்கிறது..நினைவிருக்கும் என எண்ணுகிறேன்..

ந- ஆம், இப்போது நினைவுக்கு வருகிறது..

ஸ்மித் நாற்காலியில் அமரும்படி வலது கையால் சைகை காட்டினார். தலையில் அணிந்திருந்த எனது தொப்பியை மரியாதை நிமித்தம் மேஜையில் வைத்துவிட்டு நாற்காலியை இழுத்துபோட்டு அமர்ந்தேன்.

வி- முதலாளிகளின் தொப்பி..

என்றபடி மெல்ல எதையோ எண்ணி நகைத்தார் .

வி- இது உங்கள் ஊர் வழக்கமில்லையே ?

ந- இல்லை தான்..ஆனால் ஏனோ உங்களை சந்திக்க வரும்போது இதை அணிந்து கொண்டு வரவேண்டும் என தோன்றியது..

ஏனோ எனக்கு அந்த பதிலில் நிறைவில்லை.

இரு நொடி நீண்ட அசவுகரியமான மவுனத்திற்கு பிறகு

ந- சரியாக சொல்ல வேண்டும் என்றால் உங்களுக்காகவே கொண்டு வந்தேன்..உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என தோன்றியது..நீங்கள் சுடப்படும் போது இதை அணிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன்..

என்றேன் தயங்கியபடி

வி- நன்றி. ..மெல்லிய துணியால் ஆன தொப்பி..குண்டை எவ்வகையிலும் நிறுத்தாது..(சிறிய புன்னகை முகத்தில் விரிந்தது)..எனக்கு தொப்பியின் மீது யாதொரு நாட்டமும் இல்லை. ஆனால் வேண்டியவர்கள் அணிந்து கொண்டு போகும் போது பிடுங்கி வீசி எரியமாட்டேன்..அவ்வளவுதான்..

அலுமினிய லோட்டாவில் இருந்த திரவத்தை இரண்டு லோட்டாக்களில் ஊற்றிவிட்டு ஒன்றை என்னிடம் நீட்டினார்.

வி- விக்டரி ஜின்?

ந- நன்றி..வேண்டியதில்லை..

பரவாயில்லை என்ற மாதிரி தலையசைத்து மொத்தத்தையும் மளமளவென குடித்த பின் தலை கவிழ்த்து அமர்ந்திருந்தார்.

வி- நாம் இப்போது பேசலாம்..

எனது பார்வை எதிரே இருந்த தொலைதிரையின் மீது விழுந்தது. செவி கூர்ந்து விழி நோக்கி பெரியண்ணன் எங்களுக்காக எங்கோ அமர்ந்திருக்க கூடும்.

வி- அஞ்ச வேண்டியதில்லை..என்னிடம் அவர்கள் பெறுவதற்கு இனி எதுவும் இல்லை..அவர்கள் கனிவுடன் என்னை சகித்துகொள்வார்கள்..பேரன்பின் கணத்தில் பெரியண்ணன் மீது மூத்திரம் பெய்தால் கூட அவர்களுக்கு இப்போது நான் ஒரு பொருட்டல்ல..

நானும் புன்னகைத்தேன்.

ந- உண்மையிலேயே பெரியண்ணன் இருக்கிறாரா? நீங்கள் பார்த்ததுண்டா?

வி- நான் ஒ பிரையனை அறிவேன்..கோல்ட்பெர்க்கை திரையில் கண்டாலே கோபத்தில் பிதற்றும் கோரை கூந்தல் சக பெண் அலுவலகரை அறிவேன்…நான் பார்க்க வேண்டும் என்பதில்லை..அவர் இருக்கிறார்..எஞ்சியிருக்கும் எனது ஒவ்வொரு உயிரணுவும் அவரது இருப்பை உணர்கிறது..

ந- அப்படியானால் கோல்ட்பெர்க்?

வி- அவரும் தான் இருக்கிறார்..பெரியண்ணன் இருக்கும் வரை கோல்ட்பெர்க்கும் இருப்பார்..கோல்ட்பெர்க் இல்லாமல் பெரியண்ணன் எப்படி இருக்க முடியும்? வலுவான எதிரி வேண்டும் தோழரே, மக்கள் அஞ்சும் வலுவான எதிரி, அஞ்சி அடைக்கலம் கோரும் அளவுக்கு ஆற்றல் மிகுந்த எதிரி, துரோகிகளை இனம் காண ஒரு எதிரி, நாயகர்களை போல் எதிரிகளும் அமரர்களே..பெரியண்ணன் எத்தனைக்கு எத்தனை உண்மையோ அத்தனைக்கு அத்தனை கோல்ட்பெர்க்கும் உண்மை..

ந- அல்லது எத்தனைக்கு எத்தனை பொய்யோ அத்தனைக்கத்தனை பொய்..

வி- இன்னும் உங்கள் நாட்டில் புரட்சி வரவில்லை என எண்ணுகிறேன்..வந்திருந்தால் இந்நேரம் நாம் நிச்சயம் பேசிக்கொண்டிருந்திருக்க மாட்டோம் தோழரே..

ந- (நகைத்தேன்) நீங்கள் அதிகம் நகைக்கும் தருணங்கள் வாய்க்கவில்லை என்றாலும், உங்களுக்கு கூரிய நகைச்சுவை உணர்வு இருக்கும் என ஊகித்தேன்..கலகக்காரர்கள் அரசுக்கு எதிராக நகைப்பவர்களாகவே இருக்க முடியும்..

வி- நான் கலகக்காரன் இல்லை தோழரே..ஒருவேளை நானே அப்படி ஏதேனும் சொல்லியிருந்தாலும் கூட நம்ப வேண்டியதில்லை…நான் விரும்பிய வாழ்வை வாழ ஆசைப்பட்டேன்..அது நன்மையா தீமையா என்று கூட  பகுத்தறிய முடியாத மிக சாதாரண சுயநலமி நான்..

ந- இல்லை திரு.ஸ்மித், தொலைதூர நடைபயணம் கூட எங்கே தனிமையில் சிந்தனையை தூண்டிவிடுமோ என ஐயப்படும் தேசத்தில் வசிப்பவர் நீங்கள், கலவி கூட அமைப்பிற்கு எதிரான கலகமாகத்தான் இருக்க முடியும் எனும் சூழலில் வாழ்பவர் நீங்கள்…முழுக்க முழுக்க அபத்தமும் கயமையும் நிறைந்த ஒருலகில் ஒரு துளி என்றாலும் வாய்மையை சிந்தையில் சுமந்தாலும் கூட அவர்கள் கலககாரர்கள் தான்..

வி- சிந்தையில் வாய்மையை சுமப்பது- ஆஹ்..இதை அவர்களும் அறிந்திருக்கிறார்கள்..(லேசாக சிரிக்கிறார்) கண்டுகொண்டு களையெடுக்கவும் பயின்றிருக்கிறார்கள் சிந்தை காவலர்கள், பாவம் பார்சன்ஸ்..அவரை மீறி அவர் அகத்திற்குள் நுழைந்த ஒன்றுக்காக வருந்திகொண்டுள்ளார்.. ஒருவேளை கைதாவதற்கு முன்பான ஸ்மித்தை, குறைந்தது அறை எண் 101 க்கு செல்வதற்கு முன்பான ஸ்மித்தை நீங்கள் சந்தித்திருந்தால் ஆம் என மகிழ்வோடு ஒப்புக்கொண்டிருப்பேன்..

ந- ஒரு வேளை அடிப்படைவாதிகள் அரசாளும் காலம் வரலாம்..அன்று நான் என்னவாக இருப்பேன் என தெரியவில்லை..நீங்களாகதான் இருப்பேன் என நினைக்கிறேன் அரசு தனது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள கதைகளை தான் நம்பியிருக்கிறது, கதைகளை கதைகளால் தான் எதிர்கொள்ள முடியும் ஸ்மித். உங்கள் ஒப்புதல் எனக்கு முக்கியமில்லை. உங்கள் கரங்களை அகத்திற்குள் இறுக பற்றியபடி கடந்து செல்லவே முயல்வேன்.

ஸ்மித் பதிலேதும் கூறாமல் அமைதியாக அமர்ந்திருந்தார். கீழே குனிந்து அவரது கெண்டை கால்களை நோக்கி கொண்டிருந்தார்.

எனது கோட்டு பாக்கெட்டில் இருந்து தாளில் பொதிந்திருந்த சிறிய பொருளை எடுத்து மேஜை மீது பிரித்து அவரிடம் காட்டினேன். தந்தத்தால் செய்யப்பட்ட சிறிய கப்பல் ஒன்று கண்ணாடி உருளைக்குள் மிதந்து கொண்டிருந்தது. அதை கையில் எடுத்து உற்று பார்த்து கொண்டிருந்தார் ஸ்மித்.

வி- குறைந்தது நீங்கள் வேறு ஏதாவது ஒன்றை எடுத்து வந்திருக்கலாம்..என்னே ஒரு கற்பனை வறட்சி..

.ந- இல்லை..இதில் ஒரு வசீகரம் உண்டு..உங்களை அறிந்துகொள்வதற்கு முன்னரே இதை வைத்திருந்தேன் என பொய் கூற மாட்டேன்..தேடி சென்று வாங்கினேன்..எப்போதும் எனக்கு நான் வாழ நினைக்கும் வாழ்வை இது நினைவுறுத்தும்..நானும் கூட எண்ணுவதுண்டு..இதோ எனக்கே எனக்கான பிரபஞ்சம்..நான் தனித்திருக்க, தப்பித்துகொள்ள, மறைந்துகொள்ள, மகிழ்ந்திருக்க..

வி- (பாதியில் இடைமறித்து) அப்படி ஒன்றில்லை..அது வெறும் கற்பனை…கற்பனை மட்டுமே..

என்றபடி சட்டென அதை மேஜையின் மறு எல்லைக்கு உருட்டிவிட்டார். கண்ணாடி உருளைக்குள் கப்பல் தலைகீழாக தொங்கி கொண்டிருந்தது.

இல்லை அப்படியில்லை என மறுத்து வாதிட வேண்டும் என ஏதோ ஒன்று உந்தி தள்ளியது..

ந- இல்லை ஸ்மித்..நிச்சயம்

மீண்டும் வேகமாக இடைமறித்து பேச துவங்கினார்..

வி- இல்லை நண்பரே..நீங்கள் கண்காணிக்க படுகிறீர்கள், நீங்கள் எண்ணுவது போல் எங்கிருந்தும் மறைந்துகொள்ள முடியாது, ரகசியமும் அந்தரங்கமும் எவருக்கும் இங்கு இல்லை…உங்கள் ரகசியங்களை நானறிவேன்’ என எவரும் உங்களிடம் சொல்லாதவரை நீங்கள் நம்ப போவதில்லை..

என்னை நோக்காமல் எங்கோ அப்பால் நோக்கி பேசி கொண்டிருந்தார். சினம் தலைக்கேற உரத்த குரலில் பேச துவங்கினேன்..

ந- ஒருநிமிடம்..திருவாளர்.ஸ்மித்..ஆர்வெல் உங்களை படைத்த சூழலை பற்றி நீங்கள் அறிவீர்களா? அணுகுண்டு வெடித்து பலர் இறந்த இரண்டாம் உலகப்போர் முடிந்த பின், அச்சமும் அவநம்பிக்கையும் நிறைந்த பனிப்போர் காலகட்டமது..அவர் அஞ்சியது போல் உலகம் மூன்று துண்டங்களாக பிரிந்து போய்விடவில்லை..முன்பை விட போர்கள் வெகுவாக அருகிவிட்டது….பொருளாதாரமும் மனித வளமும் தான் இன்று ஆற்றலையும் அதிகாரத்தையும் நிர்ணயிக்கிறது….நீங்கள் காலாவதி ஆகிவிட்டீர்கள் ஸ்மித்..உங்கள் படைப்பிற்கு எந்த பொருளும் இல்லை..பிறரின் நம்பிக்கை கோட்டைகளை சரித்து அழிப்பதற்கு முன், வெறும் வீனச்சம் உருவாக்கிய வறட்டு பாத்திரம் நீங்கள் ஸ்மித்….உங்கள் எல்லையை நீங்கள் புரிந்துகொள்ளத்தான் வேண்டும்..

மூச்சு வாங்கியது.

மெதுவாக மற்றொரு லோட்டாவில் ஜின்னை நிரப்பிகொண்டிருந்தார்.

வி- இருக்கலாம், நீங்கள் கூறுவது உண்மையாகவும் இருக்கலாம், காலாவதியான என்னை நீங்கள் சந்திக்க இத்தனை முயற்சித்திருக்க வேண்டியதில்லை…எனது சிறுபகுதி உங்களுள் எப்படியோ புகுந்துகொண்டது தோழரே..நான் உங்களின் ஒரு பகுதியாக, உங்கள் மொழியை பேசிக்கொண்டிருக்கிறேன்..எனக்கு எவ்வித நோக்கங்களும் இல்லை..எனது உலகிற்கு அப்பால் சென்று ஆர்வெலின் நோக்கங்களை ஆராயும் ஆற்றல் எனக்கில்லை..ஆனால் ஒன்றுண்டு..போர்கள் அருகி இருக்கலாம், போரச்சம் இல்லாமல் ஆகிவிட்டதா என்ன?

என் கைகள் நடுங்கி கொண்டிருந்தன. பதிலேதும் கூறாமல் சிலைந்து அமர்ந்திருந்தேன்.

வி- நீங்கள் கண்காணிக்க படுகிறீர்கள் நண்பரே..எவரும் தப்ப முடியாது….நீங்கள் உண்ணும் உணவிலிருந்து, உடுத்தும் உள்ளாடையின் நிறம் வரை எல்லாமும் அவர்களுக்கு தெரியும்..அவ்வளவு ஏன்? உங்கள் பிறப்புறுப்பின் கரிய மச்சம் கூட அவர்கள் அறிந்து வைத்திருப்பார்கள்..ஒருவேளை உங்கள் வாழ்வில் எதுவும் நிகழாமல் போகலாம்..உங்களால் உங்கள் சிந்தனைகளால் ஆபத்தில்லை என்பது வரை நீங்கள் நிம்மதியாக வாழ்ந்து மறைய அனுமதிக்க படுவீர்கள், உங்கள் பிறழ்வுகளும் புரட்சிகளும் முன் தீர்மானிக்கப்பட்டவை தோழரே, பழகிய தடத்தில் அனுமதிக்கப்பட்ட எல்லைவரை சென்று வரலாம்..அதற்கப்பால் செல்ல முனைந்தால் சுவடின்றி அழிக்க படுவீர்கள்…

சன்னதம் போல் அவர் குரல் உயர்ந்து அடங்கி சட்டென மவுனத்திற்குள் புதைந்து கொண்டது..

என்னுடல் இன்னமும் நடுங்கிகொண்டிருந்தது. மூச்சை சீராக்க முயன்றேன்.

 வெளியே இருள் கவிய துவங்கியது. செந்நிற தீற்றல் தூரத்து நினைவாக எங்கோ ஒடுங்கி கொண்டிருந்தது.

ந- மன்னிக்க வேண்டும் ஸ்மித், நான் சற்று நிதானம் தவறிவிட்டேன்..

மாறா மெல்லிய புன்னகையுடன் மவுனமாக அமர்ந்திருந்தார்.

‘தொலைதிரையில்’ ‘வெற்றி’ ‘வெற்றி’ என ஒரு பெண் குரல் பிளிறியது. ஆங்காங்கு அமர்ந்திருந்த மக்கள் உற்சாகமாக குரல் எழுப்பினர்.

வி- இந்த அநாகரீக செயலுக்கு மன்னிக்கவும் …இந்த வெரிகோஸ் புண்..

என்றபடி குனிந்து கெண்டைக்கால் அருகே லேசாக சொறிந்து கொண்டார்.

ந- பரவாயில்லை..நீங்கள் நிலையழிந்து உள்ளீர்கள் என புரிந்து கொள்கிறேன்..அப்படி இருக்கும் ஒவ்வொருமுறையும் இந்த வெரிக்கோஸ் புண் அரிப்பு அதிகமாவதை கவனித்திருக்கிறேன்..

ஸ்மித் சாளரத்தின் வழியே எதையோ வெறித்து நோக்கினார். அவர் கண்களில் எவ்வித சலனமும் இல்லை. தொலைவில் யாரோ ஒரு பெண் குழந்தையை தூக்கியபடி பாடி கொண்டிருந்தாள். அந்த ஓசை மிக சன்னமாக கேட்டு கொண்டிருந்தது.

சட்டென திரும்பி நேராக என் கண்ணை நோக்கியபடி

வி – நீங்கள் ஜூலியாவை பற்றி என்ன எண்ணுகிறீர்கள்?

கணநேர யோசனைக்கு பின்னர்

ந- உங்கள் அளவுக்கு அவருக்கு அறசிக்கல் இருந்திருக்காது..நீங்கள் அவசியத்திற்கு மேல் அறிந்து கொண்டீர்கள்..அவரை பொறுத்தவரை விதி முறை என்றால் அதை மீற வேண்டும்..அதனால் ஏற்படும் கிளர்ச்சியை அனுபவிக்க வேண்டும் ..அவ்வளவு தான்..

வி- இல்லை..நீங்கள் எண்ணுவது போல் அத்தனை எளிதல்ல..நான் எனது உணர்வுகளுக்கு தேவையான ஆதாரங்களை நியாயங்களை தேடி அலைந்தேன்..அவளுக்கு அவையெல்லாம் தேவைப்படவில்லை..இயல்பிலேயே அறிந்திருந்தாள்..கச்சிதமாக தன்னை மறைத்து கொண்டாள், ஒருவகையில் எனது முட்டாள்தனத்தால் அவளும் சிக்கிகொண்டாள்..ஆனால் அவர் அதை எதிர்பார்த்திருப்பாள்..அதிலும் தனது மீறலை வெளிபடுத்த முயன்றிருப்பாள்..

வாயிலில் ஆராவாரம் குறைந்தது. தொலைதிரை சட்டென மவுனித்தது..

வி- உங்களுக்கு அதிக நேரமில்லை..அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்….இறுதியாக ஏதாவது கேட்க வேண்டுமானால் கேட்கலாம்

ந- ஏதேதோ கேட்க எண்ணியிருந்தேன்..உங்கள் அன்னையை பற்றி, தங்கையை பற்றி, முதல் மனைவியை பற்றி, பிறகு காதலை பற்றி, முழுமையடையாத அந்த பாடலை பற்றி….ஆனால் இப்போது முடியுமா என தெரியவில்லை..

வி- ஏன்?

ந- தெரியவில்லை..உங்களுக்கு ஒ பிரையன் மீதிருந்த விளக்கிக்கொள்ள முடியாத பிரேமையை போல் ஏதோ ஒன்று..உங்களிடம் என்னால் பேச முடியும் ..ஏதோ ஒருவகையில் எனக்கு அனுக்கமானவர் என தோன்றியது..நீங்கள் எனக்கு என்ன சொல்லவேண்டுமோ அதை ஏற்கனவே சொல்லிவிட்டதாக தோன்றுகிறது..

சீரான காலடியோசையை அருகிலென கேட்க முடிந்தது. இதற்காகவே காத்திருந்தது போல் எவ்வித மறுப்பும் இன்றி எழுந்தார். வாழ்வை உறிஞ்சி உயிர் மட்டும் எஞ்சியிருக்கும் வெட்டவெளி என அவர் உடல் இலகுவாக எழுந்தது.

வி- உங்களை சந்தித்தது மகிழ்ச்சி தோழரே, உங்கள் நாள் இனிதாகுக..

என போகிற போக்கில் மேஜையின் மூலையில் கிடந்த கண்ணாடி உருளையை என்னைநோக்கி தள்ளிவிட்டு சலனமின்றி வெளியேறினார்.

கருப்புடை அணிந்த காவலன் அவரை வாய்மை துறை அமைச்சகத்துக்கு அழைத்து செல்வான். அதன் தூய இருளற்ற வெண்பளிங்கு வளாகத்தில் அமைதியாக எவ்வித வன்மமும் இன்றி நடந்து கொண்டிருப்பார். இப்போது பின்னாலிருந்து தோட்டா தலையில் பாய்ந்திருக்கும். இரு துளி கண்ணீர்..வருத்தங்களும் குரோதங்களும் அற்ற தூய்மையான கண்ணீர் வடித்திருப்பார். முழுமனதோடு பெரியண்ணனை நேசித்தபடி மூளை சிதற மரித்திருப்பார்.

எங்கள் மேஜையை துடைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தான் ஒருவன். இரு லோட்டாக்களையும் கால்வாசி நிரம்பியிருந்த ஜின் புட்டியையும் எடுத்து சென்றான். இனி இங்கிருக்க வேண்டியதில்லை. காலடிகள் கணக்க மெல்ல நடந்தேன். திரும்பி நோக்கியபோது, மூலையில் சாளரத்துக்கருகே இருக்கும் மேஜையில் எவரோ ஒருவர் அமர்ந்திருந்தார். அருகே சிதறிய காய்கள் கொண்ட சதுரங்க பலகையும் பெரியண்ணனின் விசால முகம் நிறைந்த விக்டரி ஜின் புட்டியும் இரண்டு அலுமினிய லோட்டாக்களும் இருந்தன. எதிரே எவனோ ஒருவன் அமர்ந்திருந்தான். நல்ல உயரம். கறுப்பன். தலையில் கருப்பு துணியை வித்யாசமாக கட்டியிருந்தான். கழுத்தில் ஏகப்பட்ட சங்கிலிகள் தொங்கி கொண்டிருந்தன. கையில்லாத சட்டையிலிருந்து அவன் புஜங்கள் புடைத்து எழுந்தன. அலுமினிய லோட்டாவிலிருந்த ஜின்னை ஒரே மடக்கில் குடித்துவிட்டு கையை ஆட்டி ஆட்டி பேசிகொண்டிருந்தான். அங்கிருந்தபடியே என்னை நோக்கி அங்கிருந்து புன்னகைத்தான். நானும் புன்னகைத்தேன். கோட்டு பாக்கெட்டில் இருந்த கண்ணாடி உருளையை உருட்டியபடி கஃபெயை விட்டு வெளியேறினேன். காற்றில் ஈரம் கூடியிருந்தது. ஒருவேளை இன்று மழைவரகூடும்.