பிற

திறந்த புத்தகம்

the open book

 

ஒளிப்படம் – விக்டர் லிங்கன்

மோசமான ரசனையின் பிறப்பு – பாரி ஷ்வாப்ஸ்கி

The Nation என்ற தளத்தில் பதிப்பிக்கப்பட்ட கட்டுரையின் சற்றே தளர்ந்த தமிழாக்க வடிவம் 

Henri Matisse குறித்து ஒரு சம்பவம் சொல்லப்படுவதுண்டு. மாட்டிஸ் வரைந்த உருச்சித்திரங்கள் (portraits) ஒன்றில் உள்ள ஒரு பெண்ணின் கை மிக நீளமாக இருக்கிறது என்று அவரைச் சந்தித்தவர் ஒருவர் குறை கூறினாராம். “மேடம், நீங்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்,” என்று பதில் சொல்லியிருக்கிறார் மாட்டிஸ். “இது பெண்ணல்ல, ஓவியம்”. மாட்டிஸ் இப்படிச் சொன்னதற்கு அவள் இது போன்ற ஒரு பதில் சொல்லியிருக்கலாம், “இது வாதமல்ல, பிடிவாதம்”. ஓவியரின் இந்தக் கேலிப் பேச்சைக் குறித்து ஈ.ஹெச். கோம்ப்ரிச் (E.H. Gombrich) இவ்வாறு எழுதுகிறார்: “நெடுங்காலமாக இவர்களைச் சகித்துக் கொண்டிருக்கும் பொதுமக்களோடு நவீன ஓவியர்களும் விமரிசகர்களும் விளையாடிப் பார்க்கும் முரணுரைகளில் (paradox) இதுவும் ஒன்று” (கோம்ப்ரிச்சின் மிகச் சிறந்த ஆய்வு நூலான ஆர்ட் அண்ட் இல்யூஷனில்தான் மேற்கண்ட சம்பவம் பற்றிய குறிப்பு இருக்கிறது).

இது போன்ற முரணுரைகளைத் தவிர்ப்பது மிகக் கடினம். ஓவியங்களைக் கொண்டு உருச்சமைத்தல் (pictorial illusionism), அதாவது, “நம்பும்படி காட்சியளிக்கத் தவறிய பிம்பங்கள் குறித்து மேற்கத்திய நாகரிகம் குறிப்பிட்ட சில காலகட்டங்களில் அடைந்த அதிருப்தியின் தூண்டுதலால்” உண்மை போல் தோற்றமளிக்கும் ஓவியங்களின் ஐரோப்பிய ஆதர்ச தொகுப்பு ஒன்று (European canon of realistic representation) உருவானது என்று கோம்ப்ரிச் கருதினார். அவரது கூற்றே முரணுரைத்தன்மை கொண்டதாக இருக்கிறது. காரணம், ஒரு பிம்பத்தை நம்ப விழைந்தவர்கள் எவர் என்ற கேள்வியை இது தவிர்க்கிறது. மாட்டிஸ் வருவதற்கு வெகு காலம் முன்னரே, மானரிஸ்ட்டுகள் (Mannerists) என்று அறியப்பட்ட பதினாறாம் நூற்றாண்டு இத்தாலிய ஓவியர்கள் தங்கள் ஓவியங்களிலுள்ள உருவங்களைப் பிறழச் செய்து பிழை பரிமாணங்களில் வரையத் தயாராய் இருந்தனர். அவர்கள் இப்படிச் செய்தது, நம்பத்தகுந்த பிம்பங்களைத் தோற்றுவிப்பதற்கல்ல, மாறாய், நம்பத்தகுந்த ஓவியங்களைப் படைக்கும் நோக்கத்தில் இதைச் செய்தனர். (more…)

முகத்தின் மறுபக்கம்

wagstrom-thomas
Karl Ove Knausgaard எழுதிய முகத்தின் மறுபக்கம் என்ற நீண்ட கட்டுரையின் தமிழாக்கப்பட்ட சிறு பகுதி: முழு கட்டுரையையும் இங்கே வாசிக்கலாம்

பின்னங்கழுத்தை நினைத்துப் பார்க்கும்போது முதலில் மனதில் தோன்றுபவை கில்லட்டின்கள், சிரச்சேதங்கள், மரணதண்டனைகள். இது சிறிது வினோதமாகவே இருக்கிறது – ஏனெனில் நாம் வாழும் தேசத்தில் மரண தண்டனைகள் விதிக்கப்படுவதில்லை – இங்கு கில்லட்டின்கள் இல்லை, எனவே நம் பண்பாட்டில் சிரச்சேதம் முழுமையாகவே ஒரு விளிம்புநிலை நிகழ்வாக இருக்கிறது. என்றாலும்கூட, பின்னங்கழுத்து என் நினைவுக்கு வரும்போது, வெட்டி வீசு என்று நினைத்துக் கொள்கிறேன். (more…)

இருளைப் பார்த்தல் – கோயாவின் ஓவியங்கள்

உடல்நலம் குன்றியபின், மனநிலை பாதிக்கப்படும்வரை கோயா பேனிஷ் அரசவையில் ஒரு சாதாரண ஓவியராகதான் இருந்தார். ஆனால், அவரது அல்டாமிரா குடும்ப உருச்சித்திரங்களில் கோயாவை பின்னர் சூழ்ந்த இருளின் நிழல்கள் சாயத் துவங்கிவிட்டனவா என்ற கேள்வியை எழுப்புகிறார் மார்கன் மீஸ், ஸ்மார்ட் செட் என்ற பத்திரிக்கையில்.

அக்கட்டுரையின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளின் தமிழாக்கம்:

1780களிலேயே தான் பின்னர் அளிக்கப்போகும் படைப்புகளைப் பற்றி கோயா கனவு காணத் துவங்கிவிட்டாரா? மிகவும் வழக்கமான முறையில் வரையப்பட்டிருக்கும் இந்த உருச்சித்திரங்களில் பிற்காலத்திய கோயாவின் சாயல்கள் உள்ளனவா? 18ஆம் நூற்றாண்டின் பிற்காலத்துக்குரிய ஸ்பெயினின் அரசவைச் சூழலில் வலம் வந்த இளம் கோயா, முன்னேறத் துடிக்கும் இந்த ஓவியர், அப்போதே வினோத காட்சிகளைக் காணத் துவங்கிவிட்டாரா? (more…)

ஒரு சினிமா மாஸ்டர்பீஸ் – ‘ஐடா’

டேவிட் டென்பி எழுதிய திரை விமரிசனத்தின் முழு வடிவை இங்கு வாசிக்கலாம் – நியூ யார்க்கர்.

அமெரிக்க திரைப்படங்களின் தொடர்ந்த அசைவுகளுக்கும் கட்டாயமான கட்ஷாட்களுக்கும் நாம் மிகவும் பழகிப் போயிருக்கும் காரணத்தால் ஐடா என்ற இந்த அருமையான, புதிய போலிஷ் மொழி திரைப்படத்தின் நிச்சலனம் ஒரு அதிர்ச்சியாய் வருகிறது. மௌனத்தையும் உருச்சித்திரத்தையும் (portraiture) இத்தனை வெளிப்பாட்டுத்தன்மையுடன் பயன்படுத்திக் கொள்ளும் வேறெந்த திரைப்படமும் என் நினைவுக்கு வருவதாயில்லை; இந்தப் படத்தின் பரவசமான கறார்த்தன்மை என்னை ஒரு திகைப்பு நிலைக்குக் கொண்டு சென்றது. நண்பர்களும் தங்கள் அனுபவமும் இது போன்றே இருப்பதாகச் சொல்கின்றனர்: திகைப்பில்லை எனில், கூர்மையான கவனக்குவிப்பும் மிகுந்த மனநிறைவும் நேர்ந்ததாகச் சொல்கின்றனர். கச்சிதமான இந்த மாஸ்டர்பீஸ் நறுக்கான வரையறையோடும் கணக்கு தீர்த்துக் கொள்ளுதலின் தீர்மானத்தோடும் இருக்கிறது- கோபமும் துக்கமும் ஒன்றாய் கலத்தலில் உள்ள கணக்கு தீர்த்தல். (more…)