பேட்டி

ஏழ்மை அனைத்தையும் மின்னச் செய்கிறது – பிராங்க் மக்கோர்ட் நேர்முகம்.

“ஒரு சாதாரண வாழ்கையை வாழ்ந்த சாதாரணர் இவர் என்று தோன்றுகிறது இல்லையா?” என்று பிராங்க் மக்கோர்ட் பற்றி கேட்கிறார் அஜய், “60 வயது வரை சாதாரண வாழ்க்கை வாழ்ந்த மக்கோர்ட் தன் நூல்களின் வெற்றியால் பிரபலமாகிவிட்டார். வாழ்க்கை அனுபவங்களா, அவற்றைச் சொல்லும் முறையா அல்லது அவற்றை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும் விதமா, எது ஒருவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது அல்லது அவர்களுடன் ஒன்ற வைக்கிறது?” .  அவரது கட்டுரையைப் படிக்கும்போது மக்கோர்ட்டின் பால்யகால ஏழ்மையும் அவரது தாயின் போராட்டங்களும்தான் முக்கியமாகத் தெரிகின்றன. சமூக, பொருளாதார சீர்கேடுகளால் பாதிக்கப்படும் அம்மாக்களும் பிள்ளைகளும் உலகெங்கும் ஒன்று போலவே இருக்கின்றனர்.

பிராங்க் மக்கோர்ட் Academy of Achievement என்ற தளத்தில் அளித்த நேர்முகத்தில் அவர் தன் இளம் பருவ நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட பகுதிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழாக்கம் இது:

உங்கள் குழந்தைப்பருவம் எப்படிப்பட்டதாக இருந்தது?

ஒரு வகையில் செறிவானதாக இருந்தது. நாங்கள் மிகக் கடுமையான ஏழ்மை நிலையில் இருந்தோம். பொருளாதார தளத்தில் மிகத் தாழ்ந்த நிலைக்கும் கீழிருந்தாலும், நாங்கள் எப்போதும் உற்சாகமான மனநிலையில் இருந்தோம். எதிர்பார்ப்பதற்கு நிறைய இருந்தது, நம்பிக்கை வைப்பதற்கு நிறைய இருந்தது, அடைவதற்கு நிறைய இருந்தது, கனவுகாண நிறைய இருந்தது என்ற பொருளில் எங்கள் குழந்தைப்பருவம் மிகச் செறிவாக இருந்தது, ஆனால் பொருளாதாரச் சூழல் மிக மோசமாக இருந்தது. மழைக்கால கல்கத்தா என்று சொல்லலாம். கல்கத்தாவிலாவது வெம்மை இருக்கிறது. (more…)

“நான் எழுத்தைக் கொண்டு யோசிக்கிறேன்”- ரிச்சர்ட் ரூஸோ – சில நேர்முகங்கள்

பீட்டர் பொங்கல்

ரிச்சர்ட் ரூஸோவின் அண்மைய நூல், “Elsewhere” என்ற தன்வரலாற்று படைப்பு. இது குறித்து, “கடந்த பல ஆண்டுகளில் மிகவும் நேர்மையான, நெகிழ்ச்சியான அமெரிக்க நினைவு நூல்களில் இது ஒன்று”, என்று குறிப்பிடுகிறார் மிகேல் ஷ்வாப் http://www.npr.org/2012/11/16/163952390/elsewhere-has-beauty-but-no-happy-ending.

டெய்லி பீஸ்ட் தளத்தில் ஜேன் சியாபட்டாரியுடனான நேர்காணலின்  இந்த நூலில் வரும் விஷயங்களைப் பேசுகிறார் ரிச்சர்ட் ரூஸோ. அவற்றின் சில பகுதிகள் இங்கு:

நீங்கள் எல்ஸ்வேர் எழுதக் காரணமாக இருந்தது எது?

கிராண்டாவில் பதிப்பாசிரியராக இருக்கும் ஜான் ஃப்ரீமன் மிக முக்கியமான ஒரு காரணமாக இருந்திருக்கிறார். வீடு திரும்புதல் பற்றிய ஒரு இதழ் தொகுக்கும் திட்டத்திலிருந்தார் அவர். நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருக்கும்போது, அவர் க்ளோவர்ஸ்வில் செல்லும் வழிகாட்டிக் குறியைப் பார்த்திருக்கிறார். மெய்யுலகில் உள்ள அந்த இடத்தைப் பற்றி நான் எழுதினாலும் எழுதக்கூடும் என்ற எண்ணத்தில் அவர் என்னைத் தொடர்பு கொண்டார். இதுவரை பல்லாண்டுகளாக நான் அதன் புனைவு அவதாரங்களைதான் பயான்படுத்திக் கொண்டிருந்திருக்கிறேன்.

அந்த சமயத்தில் நான் அதை ஒப்புக்கொள்ளக்கூடிய மனநிலையில் இருந்தேன். என் அம்மா அப்போதுதான் இறந்திருந்தார். அம்மாவின் வாழ்வும் சாவும், க்ளோவர்ஸ்விலுடன் எங்களுக்கு இருந்த ஆழ்ந்த உறவு, எனக்கும் என் அம்மாவுக்கும் பொதுவானவையாக எவ்வளவு விஷயங்கள் இருந்தன என்றெல்லாம் நான் யோசித்துக் கொண்டிருந்த வேளையில் ஜான் என்னை அழைத்தார். எங்கள் பிறப்பு (நாங்கள் இருவருமே அப்சஸிவ்வான ஆட்கள், என் அம்மா அளவுக்கு நானுமே மனசில் ஒன்று தோன்றிவிட்டால் அதிலிருந்து விடுபட முடியாமல் தவிப்பவனாக இருக்கிறேன்), எங்கள் வளர்ப்பு (நாங்கள் இருவருமே காலம் தொடாத சிற்றூர் ஒன்றில் வளர்ந்தவர்கள்). அந்த சமயம் பார்த்து ஜான் என்னை அழைத்திருக்காவிட்டால், நான் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்க மாட்டேன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்ற உந்துதல் எனக்கு அவ்வளவு அதிகம் ஏற்பட்டதில்லை. இந்தப் புத்தகம் இப்படிப்பட்ட உணர்வுகள் அத்தனையையும் தணித்திருக்க வேண்டும். (more…)

“இதை ஒரு-பொய்யும்-சொல்லாதிருத்தல் பாணி எழுத்து என்று அழைக்கலாம்” – டகேஷி ஹிராய்டா

வில் ஹேவார்ட்டின் இந்த பேட்டியின் முழு வடிவை பாம்ப் தளத்தில் வாசிக்கலாம்

வில் ஹேவார்ட்: ஆங்கில மொழிபெயர்ப்பில் அண்மையில் பதிப்பிக்கப்பட்டுள்ள The Guest Catஐ என்னவென்று விவரிப்பீர்கள்? ஓரே சமயத்தில் அது டயரிக் குறிப்புகள் பலவும், கட்டுரை போலவும், ஏன் ஒரு கடிதம் போலவுமே இருக்கிறது.

டகேஷி ஹிராய்டா: அடிப்படையில் நான் ஒரு கவிஞன். கவிதை எழுதுபவன். ஆனால் விமரிசனங்களும் கட்டுரைகளும்கூட எழுதியிருக்கிறேன். நான் கவிதையில் சோதனை முயற்சிகள் மேற்கொள்கிறேன், அதன் பல்வேறு வடிவம் சார்ந்த சோதனை முயற்சிகளில் ஈடுபடுகிறேன். For the Fighting Spirit of the Walnut என்ற என் இரண்டாம் கவிதைத் தொகுப்புதான் ஆங்கில மொழிபெயர்ப்பில் முதலில் வெளிவந்திருக்கிறது. அது துண்டிக்கப்பட்ட வடிவில் எழுதப்பட்டது. ஆனால் The Guest Catல் அந்தப் பாணியை மாற்றிக் கொண்டேன். அதைவிட சரளமான உரைநடை பாணியில் எழுதினேன், இதுவும் முழுமையடையாத துண்டங்களாகதான் இருக்கிறது. சமகால இலக்கிய வடிவங்கள் குறித்து விமரிசனங்கள் எழுதிய காரணத்தால் நான் மேற்கொண்ட மாற்றங்கள் இவை. கவிதை அதன் வடிவம் குறித்த விமரிசனத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும், உரைநடையையும் பயன்படுத்திக்கொள்ள முடியும். (more…)

ஜேன் ஸ்மைலி நேர்முகம்

எந்த ஒரு எழுத்தாளரின் நாவல்களையும் தொகுத்து நோக்கும்போது அவருக்கென்று உள்ள தனித்தன்மை வெளிப்படும் என்பதுதான் நாவல் வடிவத்தின் சிறப்பு என்று சொல்கிறார் புலிட்சர் பரிசு பெற்ற எழுத்தாளர் ஜேன் ஸ்மைலி. அவருக்கு இது நிச்சயம் பொருந்தும்: ஷேக்ஸ்பியர் கதையோன்றின் நவீன மீளுருவாக்கம், ஹோமிசைட்: லைப் ஆன் த ஸ்ட்ரீட் என்ற தொலைக்காட்சித் தொடரின் ஒரு எபிசோட் வரை பல்வகைப்பட்ட ஆக்கங்களைத் தந்திருக்கிறார் அவர். பிரைவேட் லைப் என்ற தன் சமீபத்திய நாவலில், மார்கரெட் மேஃபீல்டு என்ற பாத்திரத்தின் அகவாழ்வை விவரிக்க ஹென்றி ஜேம்ஸ் பாணி கதைசொல்லலை நிகழ்த்தியிருக்கிறார் இவர். சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் பித்துக்குளித்தனமான விஞ்ஞானி ஒருவரை திருமணம் செய்து கொண்டு அவதிப்பட்ட ஒரு தூரத்து உறவினர்தான் மேஃபீல்டு பாத்திரத்தின் ஆதாரம்.

பெயில்பெட்டர் டாட் காம் தளத்தில் கான்ட்ரிப்யூட்டிங் எடிட்டராக உள்ள ஜூலி நியூபெர்கர் இவரைப் பேட்டி கண்டார்.
நீங்கள் ப்ரைவேட் லைப் நாவலில் மார்க்கரெட்டின் அகவுணர்வுகளைச் சித்தரிக்க வேண்டும் என்று முடிவு செய்தது ஏன்? அவரைவிட வலிமையான ஒரு பாத்திரத்தைக் கொண்டு எழுதியிருக்கலாமல்லவா? தான் எதுவும் செய்யத் திராணியற்று இருக்கும் பாத்திரத்தை முக்கியமாகக் கொண்ட நாவலில் வாசகரின் ஆர்வத்தை எப்படி தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று நினைக்கிறீர்கள்?

அவள் சுயமாய் எதுவும் செய்ய திராணியற்றவள் என்று நான் நினைக்கவில்லை. அவள் நல்லவள். அப்போதும் இப்போதும் உள்ள பல பெண்களைப் போலவே, இன்ன மாதிரிதான் நடந்து கொள்ள வேண்டும் என்று அவளுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. தன் சூழ்நிலையை ஏற்றுக்கொண்டு அதை மேன்மைப்படுத்துவதுதான் அவளுக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்ட பாடம். அவளுக்குப் பெரிய கேள்விகள் எதுவும் கேட்கத் தெரியாது. நான் ஏன் முதலாளியாக இல்லை என்றெல்லாம் அவள் கேட்க மாட்டாள். உடனே என்ன செய்ய முடியுமோ அதில்தான் அவளது கவனம் இருக்கிறது… வாழ்க்கையில் நம் மன அமைப்பு, அதிர்ஷ்டம் இரண்டுக்கும் இடம் இருக்கிறது. நான் அதை விவரிக்க விரும்பினேன். அவளுக்கு முக்கியமாக இருந்த அந்தரங்க விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாசக கவனத்தை தக்க வைத்துக் கொள்ள முயற்சித்தேன் – இது ஒரு வகை ஹென்றி ஜேம்ஸ் பாணி. நம் எல்லாருக்கும் அது உண்டு. சில சமயம் பெரிய நிகழ்வுகளில் அவை தொலைந்து போய்விடும், ஆனால் அவை நம்மோடிருக்கும். (more…)

இமைகள் தூரிகை – டானா டார்ட் நேர்முகம்

வாக்கியமொன்றுக்கு வடிவம் கொடுப்பதுதான் இவருக்கு ஆழ்ந்த நிறைவளிப்பதாக இருக்கிறது – சரியான சொல், அழகிய உவமை. “மணிக்கணக்காக” காற்புள்ளியை சந்தோஷமாக இடம் மாற்றிக் கொண்டிருப்பார்.

இவரது புத்தகங்கள் பெரிதாக இருக்கலாம், ஆனால் இவர் தன்னை இவ்வாறு விவரித்துக் கொள்கிறார்: “ஒரு மினியேச்சரிஸ்ட் – சுவற்றளவு பெரிய ம்யூரலை இமையளவு தூரிகையால் வரைபவள்; மிகச் சிறிய, நுண்மைகள் மிகுந்த வேலையைச் செய்பவள், ஆனால் மிகப்பெரும் வெளியில், நீண்ட காலமாக. அதனால்தான் இத்தனை நேரமாகிறது”.

இவரது எழுத்து முறை சிக்கலானது. முதலில் பெரிய அளவிலான, ஸ்பைரல் பைண்டிங் செய்யப்பட்ட நோட்டுப் புத்தகங்களில் கையெழுத்துப் பிரதியாக எழுதுகிறார். தன் எண்ணங்களையும் திருத்தங்களையும் சிவப்பு, நீலம் பின்னர் பச்சை பென்சிலில் குறித்து வைத்துக் கொள்கிறார். கதையோட்டத்தையும் பாத்திரங்களையும் நினைவில் வைத்துக் கொள்ள, அவற்றில் இன்டெக்ஸ் கார்டுகளை ஸ்டேப்பிள் செய்கிறார். இதெல்லாம் ‘மிகவும் குழப்பமாக’ ஆகும்போது, தன் எழுத்துப்பிரதியை கணினியில் தட்டச்சு செய்கிறார். இந்த வரைவு வடிவங்களை வெவ்வேறு வண்ணத் தாள்களில் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்கிறார். “பிங்க் கலர் டிராப்ட்டை எடுத்ததும் அது முதலில் எழுதிய வரைவு வடிவம் என்று எனக்குத் தெரிந்துவிடும்; அல்லது பழுப்பு வண்ணம் இரண்டாவது, கடைசியாய் எழுதியது நீல வண்ண காகிதத்தில் இருக்கும். முதலில் எழுதப்பட்ட வரைவு வடிவம் தேவையென்றால் அது எங்கிருக்கிறது என்பதை என்னால் சுலபமாக தேடியெடுக்க முடியும். பல ஆண்டுகளுக்கு முன்னர் என் பிரெஞ்சு ஆசிரியர் இதைச் சொல்லிக் கொடுத்தார், நிஜமாகவே இப்படிச் செய்வது உபயோகமாக இருக்கிறது”. (more…)