மொழியாக்கம்

காதலுக்குப் பின் காதல் – டெரக் வால்காட் கவிதை தமிழாக்கம்

செந்தில் நாதன்

அந்த நாளும் வரும்
அன்று, மிக்க மகிழ்ச்சியுடன்
உன் வீட்டுக்கு வரும் உன்னை
நீயே வரவேற்பாய், உன் நிலைக் கண்ணாடியில்
ஒருவருக்கொருவர் வணக்கம் சொல்லிச் சிரித்தபடி

வா, வந்து உட்கார், சாப்பிடு என்பாய்.
அந்த அன்னியனை, உன் சுயமாய் இருந்தவனை, மீண்டும் நேசிப்பாய்.
மது ஊற்றிக் கொடு. ரொட்டி வைத்துக் கொடு. உன் இதயத்தை
அதனிடமே திருப்பிக் கொடு, உன்னை வாழ்நாள் முழுக்க

நேசித்த அந்த அன்னியனிடம், எவனை மற்றவர்களுக்காகப்
புறந்தள்ளினாயோ, உன்னை உள்ளும் புறமும் அறிந்த அவனிடம்.
புத்தக அலமாரியிலிருந்து காதல் கடிதங்களை,

புகைப்படங்களை, தாளாமல் எழுதிய குறிப்புகளை, ஒழித்துவிடு.
உன் பிம்பத்தை நிலைக்கண்ணாடியில் இருந்து உரித்தெடு.
உட்கார். உன் வாழ்க்கையை ருசித்துத் திளைத்திடு.

oOo

(Derek Walcott எழுதிய Love After Love என்ற ஆங்கில மொழி கவிதையின் தமிழாக்கம். மேற்கிந்தியத் தீவுகளில் ஒன்றான செயிண்ட் லூசியா தீவைச் சேர்ந்த டெரக் வால்காட், 1992 ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர். இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான ஆங்கிலக் கவிஞர்களில் ஒருவரான வால்காட் கடந்த 17/03/2017 அன்று காலமானார்.

இந்தக் கவிதை 1976 ஆம் ஆண்டு வெளிவந்த அவரது Sea Grapes கவிதைத் தொகுப்பில் உள்ளது. ”மற்றவர்களுக்காக வாழ்ந்தது போதும்,உன்னை நீ ஏற்றுக்கொள். உன் வாழ்க்கையை அதன் அனைத்துச் சுவைகளுடன் நீயே ருசி” என்பது இந்தக் கவிதையின் அடிநாதம்)

கங்கையின் பாடல்

ரா கிரிதரன்

(This is an unauthorised translation of the poem, ‘Songs of the Ganga,’ originally written in English by Arvind Krishna Mehrotra. The Tamil translation is intended for educational, non-commercial reproduction at this particular website only)

நான் கங்கை
மலைப்பனி
நீர்த்தேவதை

நான் சமவெளி
நான் மலையடி
என் ஓடைகளின் ஆசைகளை
கடலுக்கு கொண்டு செல்லும்
தூதுவன்

ஆணும் நான் பெண்ணும் நான்

குழந்தைகளுக்கு நான் காகிதக்கப்பல்
கடலாடிக்கு நான் ஒரு பழக்கம்
மழித்த முனிக்கு நான் ஒரு மேகம்
அசைவுகள் அனைத்தும் என் பிம்பம்

நான் ஒரு பாலம்
கோட்டையும் நான்
குறிபார்க்கும் வில்லாளியும்
மனிதனைக் கரைப்பதில் மகத்தானவள் நான்

உயிரை ஆக்குபவனும் நான்
எடுப்பவனும் நான்

**

நான் வெளியுலகுக்குள் செல்கிறேன்
நான் உலகம்
நான் தேசங்கள், நகரங்கள், மக்கள்
கோர்க்காத புத்தகத்தின் பக்கங்கள் நான்

சுற்றியிருக்கும் காற்று என் அறை
நான் நீரை உடுத்தியிருக்கிறேன்
நான் நீரைப் போல் நிர்வாணமானவள்
தெளிவு நான்

அரசு வீழ்ந்ததென
ஒரு கொடி கொடுத்தான்
நண்பனொருவன்

மழை பிடிக்கப் போவதாகச் சொல்லி
வலை விரிக்கிறேன்

நான் விஷம்

**
மலையிலிருந்து
வரையாடுகள்
இறங்குகின்றன
தனிமை கிடைக்காமல்
பாலையிலிருந்து
ஒட்டகங்கள் திரும்புகின்றன

மணலில் இருகோடுகள் வரைந்து
அவை உடைக்க முடியாத சுவர்கள் என்கிறேன்

நான்கு திசைகளை ஒன்றாக்கினேன்
நடையின் ரகசியம் அறிந்தவள் நான்

நெருப்பின் இறப்பு நான்.

**

அறிந்தேன் புகையிலிருந்து மறைதலை
கடலிலிருந்து பாரபட்சமற்ற தன்மையை

அறிந்தேன் பறவைகளிடமிருந்து
சூறாவெளியில் வீடொதுங்கும் வழியை

அறிந்தேன் சிறுத்தையிலிருந்து
புள்ளிகளால் சூரியனை மறைக்க

கோடையில் நான் செழு தர்பூசணி வளர்க்கிறேன்
வெள்ளத்தின் போது தங்குவேன்
தபால்காரனின் வீட்டருகே

நான் ஏதிலி
நான் ஒரு கோமாளி
நிழலற்றவளும் நான்.

oOo

(1970களின் நவீன ஆங்கில இந்திய கவிதை உலகத்தில் மிகப் பிரபலமானப் பெயர் அரவிந்த் கிருஷ்ண மெஹ்ரோத்ரா. அருண் கொலாட்கர், ஏ.கே.ராமானுஜம், போன்றவர்களுடன் அரவிந்த் கிருஷ்ண மெஹ்ரோத்ரா ஒரு கவிதை இயக்கமாகச் செயல்பட்டார். அவரது ஆங்கில கவிதைகளும், பிராகிரத மொழியாக்கங்களும், கபீரின் கவிதை ஆக்கங்களும் உலகளாவிய கவனத்தைப் பெற்றுத்தந்தது. பம்பாயின் நவீன சிறு பத்திரிக்கை உலகின் அடையாளமாகக் காணப்பட்டவர் அரவிந்த் கிருஷ்ண மெஹ்ரோத்ரா. damn you எனும் சிறு பத்திரிகையைத் தொடங்கி பல இளம் கவிஞர்களை ஆங்கில கவிதைக்கு ஆற்றுப்படுத்தியிருக்கிறார். Middle Earth, Nine Enclosures போன்ற தொகுப்புகளும் History of Indian Literature, The Oxford India anthology of twelve modern Indian Poets போன்ற விமர்சக நூல்களும் எழுதியவர்.

அவரது கவிதைகளின் மொழியாக்கங்களை இத்தொடரில் பார்க்கலாம்.)

ஒளிப்பட உதவி – விக்கிப்பீடியா

இறந்தவர்களுக்கான புதிய பெயர்கள்

Matthew Jakubowski

(This story is translated with the kind permission of Matthew Jakubowski for non-commercial publication specifically at Padhakai.com. No other use may be made of this material without prior permission of the author.)

 

matt-j

ஜெப் காலமாகிய பின் இந்த ஏழு ஆண்டுகளாக சில மாதங்களுக்கு ஒரு முறை வீட்டுக்குப் பெயர் சூட்டுவதும் பின் அதை மாற்றி வேறு பெயர் சூட்டுவதுமாய் இருக்கிறாள் கரேன். அமைதியான இடம், காலி கலவி மாளிகை, பதுக்கல்காரனின் களிப்பு, குப்பை ஆட்டுக் கொட்டடி, ஆனந்த நிலவறை. இருபத்து- மூன்று ஆண்டுகள் இருவரும் ஒன்றாய் இருந்தது குறித்த அவளது நினைவுகளின் இறுகும் ஆடியில் தன்னை கவனித்துக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வில் அவனைத் திருப்தி செய்வதற்கான விளையாட்டாய் துவங்கியது.

காலையில் தனியாய் முட்டை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதும், இரவில் தாமதமாய் கதவைத் திறந்து உள்ளே வரும்போதும், அவளது நினைவுகளின் இல்லத்துக்குரிய ஒரு புதுப்பெயர் தோன்றும். அந்தப் புதுப்பெயரை அவள் மீண்டும் மீண்டும் மெல்லத் தனக்குள் சொல்லிக் கொள்ளும்போது, கண்கள் விரிந்து அவளது முகத் தோற்றம் ஒரு நீர்வீழ்ச்சியைக் கடந்து வந்தது போல் உயிர்த்தெழும்.

புதுப்பெயர் சிறிது காலம் அவளைக் காக்கும். முன்னளவு கண்ணீர் இல்லை, ஈரமற்ற தேம்பல். ஆதன் ஆற்றல் குறைவதன் துவக்கத்தை அவள் பெரும்பாலும் இரவில்தான் உணர்வாள், வெளியே பலமான காற்றோ குளிரோ இல்லாதபோதும் தரையும் சுவர்களும் அசையத் துவங்கும்; அவனை அவள் மறக்கவில்லை என்பதை அவன் அறிந்தாக வேண்டும் என்று பாவனை செய்து கொள்வதற்கேனும் ஒரு புதுப்பெயர் தேவைப்படுகிறது என்பதை அவள் அறிந்து கொள்வாள்.

அவள் அவனை அவ்வளவு நேசித்தாளா? காதல் நிகழ்காலத்தில் உள்ளதல்ல. அது கடந்த காலமும் எதிர் காலமும் உயிர்நாட்டதைப் பற்றுதலின் இறுக்கம், உன்னில் ஒரு பகுதியை வேறொருவருக்கு விட்டுக் கொடுப்பது, நீ மங்கி மறைவதைக் கண்டதும் உன்னை உயிர்ப்பிக்க அவர்களைப் பாடச் செய்வது. உண்மையைச் சொல்வதானால், அவனது இல்லாமையை நேசிப்பது இதமாக இருந்ததால் அவள் பாடிக் கொண்டேயிருந்தாள். அவ்வளவு நேசித்தாளா என்ற கேள்விக்கு, இருக்கலாம் என்றுதான் சொல்ல முடியும் என்று அவள் தீர்மானித்துக் கொண்டாள். இப்போதும் அவன் அறியப்பட்டவன்தான், ஆறுதலளிக்கும் இல்லாமையின் இருப்பு.

வெறுமை தன் வடிவம் இழந்தபோது, மேலும் மேலும் அவனைப் போல் இல்லாது போனபோது, தனது நினைவுகளையும் சந்தேகங்களையும் எந்த நிலைக்குக் கொண்டு சென்றாலும் சரி என்று ஏற்றுக்கொண்டு தன் துயரம் அதைச் சரி செய்யவும், அதன் மீது மோதிக் கொள்ளவும் இடம் கொடுத்தாள்.

அவன் துன்பப்படுகிறானா? இப்போது அவன் போய் விட்ட நிலையில் அவளது துயரம் குறித்து அவனுக்கு அக்கறை இருக்குமா?

“நீ தேறி வருவதை நீயே கெடுத்துக் கொள்கிறாய், அது உனக்கும் தெரியும்,” என்று அவளது நெருங்கிய தோழி லியாண்ட்ரா அழுதுவிடுவது போல் கூறினாள், கரேன் வீட்டுக்கு எவ்வளவு முறை புதுப்பெயர் தந்திருப்பாளோ அவ்வளவு முறை விசுவாசமாய் அவள் மீண்டும் மீண்டும் பாடும் பல்லவி. “நீ உன்னை எவ்வளவு கஷ்டப்படுத்திக் கொள்கிறாய் என்பது அபத்தமாக இருக்கிறது. உனக்கு பணமும் நேரமும் இருக்கிறது என்பதால் மட்டும் நீ அவனுக்கு கடமைப்பட்டிருக்கிறாய் என்று அர்த்தமில்லை. அப்புறம், எதுவும் சொல்லாதே…”

“… ஹனி, நான் உன் மீதும் அன்பு வைத்திருக்கிறேன் என்பது உனக்கே தெரியும்.” வழக்கமாய் வரும் பதில்தான், அதில் அன்பைவிட குரூரம்தான் இருந்தது, பிறரைப் போலவே லியாண்ட்ராவும் தனது கலையை மதிக்க மாட்டாள் என்ற அச்சத்தால் நம்பிக்கையின்மை வெளிப்படையாகவே தெரிந்தது.

அவளது நண்பர்களும் பலரை இழந்திருக்கிறார்கள். புற்றுநோயைவிட கொடூரமான விஷயங்களுக்காக. அவளுக்குத் தெரியும்.

அவர்கள் அறிய மாட்டார்கள். ஏனென்றால், அந்த வீட்டைப் பற்றி என்ன ஏது எப்படி என்று எதுவும் அவள் சொன்னதில்லை, அதன் சுவர்களுக்குள் துக்கத்தை ஒரு நிகழ்த்துகலையாகவும் போர்க்கலையாகவும் பயிலும் அவளது வழக்கங்கள் பற்றியும் அவள் சொன்னதில்லை.

அது இப்போதும் எவ்வாறு திரள்கிறது, அந்த உணர்வுதான், அவனது இல்லாமையை இவ்வுலகினுள் அது சுவாசிக்கும்போதே அவளும் அவனது உயிரை அதனுள் சுவாசிக்கிறாள், இவ்வாறு பிணைந்திருத்தலில் தன் வாழ்வுக்கு ஒரு பொருள் இருப்பதாய் கற்பனை செய்து கொள்வதன் அமானுட சஞ்சாரமும் சஞ்சரித்தலும். சாதாரணமாய் வாழ்தலைத் தனக்குரியதாய் ஆக்கிக்கொள்ள அவளால் இயலும், அது சோபையிழக்கும் என்றாலும்; அதன் பின் ஒரு நாள் அவள் பிணையற்ற பறவையாவாள். இந்தச் சிலேடை அவளை எப்போதும் சிரிக்க வைத்ததில்லை.

வெறுமைக்கும் நினைவுக்கும் இடைப்பட்ட உலகுகளுக்கு இடையில் வீடு பெருமூச்செறிவதைக் கேட்டபடி படுக்கையின் தனிமையில் அவளது உடல் போர்வைகளுக்கு இடையில் மண்ணின் கீழ் ஆழத்தில் கிடப்பது போல் இருந்தாள், அதன் உயிருள்ள சருமம் எங்கும் இறந்தவர்களைச் செவித்தபடி. தொல்காலத்தில் இருந்தவர்கள் சொன்னது போல், புதிய உடலொன்று தரிக்கக்கூடிய உடலின் உறக்கத்தில்.

அவன் போய்ச் சேர வேண்டும் என்று சில சமயம் நீ எவ்வளவு விரும்பினாய் என்பதை அவர்கள் நினைத்துப் பார்க்கிறார்களோ இல்லையோ, நீ பைத்தியமாய் பாசம் வைத்திருக்கிறாய் என்று சொல்கிறார்கள். அவள் அறிவதற்கு வெகு காலம் முன்னரே இழப்பின் முழு உருவத்தையும் அறிந்து விட்ட அவர்கள்- உண்மையில் நோய்மையே தீது, என்று அறிந்திருந்திருந்தார்கள். துன்பப்படுதலே உண்மையில் அஞ்சுதற்குரிய முடிவின்மை. முகமற்ற வலி குரூர, குறுகிய வாழ்வில் நித்தியங்களை வளர்த்தெடுக்கிறது.

தம்பதியர் “பாசத்துடன்” “போராடும்” இரட்டைப் போராளிகள் ஆகின்றனர். என்ன ஒரு கதை! ஆனால் இது ஒரு நாயகக் கதையா இல்லை பேய்க் கதையா? சுண்டிவிடப்பட்ட நாணயத்தின் இரு முகங்கள் என்பதை கரேன் அறிந்திருந்தாள். அது எங்காவது விழுந்தாக வேண்டும். விளைவுகளை கண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டிருக்க முடியாது. அவள் அதைச் செய்யவில்லை. அதன் ஒவ்வொரு சுழற்சியையும் அவள் கவனித்திருந்தாள், நாணயம் நிலைக்கு வந்ததும், மரணத்தின் முகத்தை உற்று நோக்கினாள்.

அவள் பிரச்சினை என்ன என்பதைப் பிறரிடம் சொல்ல முயற்சி செய்வது வெளிப்படையாய் பேசுவது என்று சொல்கிறார்களே, அதற்கும், சாதாரண விஷயத்துக்கான புகழ்ச்சிக்கும்தான் கொண்டு செல்லும். முட்டாள்தனமான வாக்குவாதத்தில் வெற்றி பெறவோ, மீட்கப்பட வேண்டுமென்றோ அவள் விரும்பவில்லை. இன்னும் விரிவான, நிரந்தர அந்தரங்க வட்டத்தைப் பிறர் மதித்தால் போதும், என்று வேண்டுமானால் சொல்லலாம்.

ஆனால் மரணத்தைச் சில சமயம் மன்னிக்க முடியாது என்பதைத்தான் அவள் லியாண்ட்ராவிடமும் பிறரிடமும் சொல்ல அஞ்சியிருக்கலாம். நிச்சயம் இது போல் நடந்து விடுகின்றது. ஆனால் அவற்றை நாம் எப்போதும் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. எண்ணற்ற புதுப்பெயர்களே நமக்குப் போதுமானவையாய் இருக்கலாம், மரணத்துக்கு அப்பாற்பட்ட சக்திகளின்மீது உணர்ச்சிகளற்ற ஒரு புரிதலை அவை நிலைநாட்டக்கூடும். போதாமை மிகுந்த ஜீவன்களில் நாம் தொடர்ந்து பெயர் சூட்டி உயிர் நிறைக்கும்போது இந்தச் சக்திகள் எதிர்வினையாற்றாமல் போகலாம், இவ்வுலகுக்குப் பொருந்தாத தம் இருப்பு விரிசலடைவதை அவையும் உணரத் துவங்கலாம். திறந்த, துடிக்கும் இதயத்தைப் பொசுக்கும் வெண்-சூட்டுத் தீக்கோல் போன்ற காதலால் நாம் நம்முடன் இறுக்கி அணைத்துக் கொண்டவர்களைப் போல் தாமும் மரணிக்கக்கூடியவைதான் என்பதை அவை கணப்போது உணரலாம். அப்படியும் இருக்கலாம். உயிர்க் குருதிக்குள் துளைக்கும் உலோகத்தின் வெப்பம், புதிய பெயர்களை அழைக்கும் ஓலம். அப்படியும் இருக்கலாம், ஒவ்வொரு நாளும் ஒரு சில நிமிடங்கள் மட்டும்தான் என்றாலும், அவளது உயிரும் பிரியும் வரை.

 

நன்றி : (b)OINK

oOo

About the author: 

Matthew Jakubowski is an American fiction writer and literary critic. A former editor for the translation journal Asymptote, his writing appears regularly in publications worldwide, such as The Paris Review Daily, The National, 3:AM Magazine, The Brooklyn Rail and Kirkus Reviews. He lives in Philadelphia, Pennsylvania, and maintains a litblog called truce. (Blog URL: http://mattjakubowski.com )

அமைதி

ஆங்கிலம்: லாங்கஸ்டன் ஹ்யூஸ்
தமிழில் : தி. இரா. மீனா

அவர்கள் கல்லறைகளைக் கடந்தோம்;
இறந்து கிடந்த மனிதர்கள்,
வெற்றியாளர்களோ தோல்வியாளர்களோ,
கவலைப்படவில்லை.
இருளில்,
வென்றவர்கள் யாரென்று
பார்க்க இயலாதவர்கள் அவர்கள்.

(சுதந்திர மொழிபெயர்ப்பு)

வண்ணக்கழுத்து 17உ: லாமாவின் மெய்யறிவு

மாயக்கூத்தன்

gay_neck_the_story_of_a_pigeon

இங்கு கோண்ட் வேறொரு தந்திரம் செய்தார். எதிர்த்திசையில், வெவ்வேறு மரங்களுக்கு இடையே வளைந்து நெளிந்து ஓடினார். காற்றினால் கொண்டு சேர்க்கப்படும் தன்னுடைய வாடை, அந்த எருதை அடையாமல் இருக்கவே அவர் அப்படிச் செய்தார். குழப்பமடைந்த போதும் அந்த எருது திரும்பி கோண்டைத் தொடர்ந்தது. மீண்டும் எங்கள் மரத்திற்கு கீழே கிடந்த கோண்டின் துணி மூட்டையைக் கண்டது. எருதை அது இன்னும் வெறியடையச் செய்தது. முகர்ந்து பார்த்துவிட்டு, தன் கொம்புகளால் அவற்றைக் கலைத்தது.

இப்போது கோண்ட் காற்றின் கீழ்த்திசையில் இருந்தார். என் பார்வைக்கு அவர் தெரியாத போதும், மரங்கள் ஒருவேளை அந்த எருதினை அவர் பார்வையிலிருந்து மறைத்திருந்தாலும் கூட அதன் வாடையைக் கொண்டே அவர் எருதின் இடத்தைச் சொல்லிவிடுவார் என்று நான் ஊகித்தேன். கோண்டின் துணிகளுக்கு ஊடே தன் கொம்புகளைச் செலுத்திக் கொண்டே அந்த எருது மீண்டும் முக்காரம் போட்டது. அது சுற்றியிருந்த மரங்களில் பயங்கரமாக அமளி துமளிப்பட்டது. எங்கிருந்தோ குரங்குக் கூட்டங்கள் கிளைவிட்டுக் கிளை தாவி ஓடி வந்தன. அணில்கள் சுண்டெலிகளைப்போலே ஓடி மரத்திலிருந்து காட்டின் தரையில் இறங்கி, பின் மீண்டும் மரத்திற்கே சென்றன. மேலே பறந்து கொண்டிருந்த ஜேக்கள், நாரைகள், கிளிகள் போன்ற பறவைக்கூட்டங்கள், காக்கைகள், ஆந்தைகள் மற்றும் பருந்துகளோடு க்றீச்சிட்டன.

திடீரென்று அந்த எருது மீண்டும் தாக்க விரைந்தது. கோண்ட் அமைதியாக அதன் முன்னால் நின்று கொண்டிருப்பதைக் கண்டேன். அமைதியைப் போலே அமைதியாக இருக்கும் ஒரு மனிதனை நான் பார்த்தேன் என்றால் அது கோண்ட் தான். அந்த எருதின் பின்னங்கால்கள் துடித்து வாட்களைப் போலே பறந்தன. பிறகு என்னவோ நடந்தது. அது பின்னங்கால்களை ஊன்றி காற்றில் மேலே எழுந்தது. அதன் கொம்பில் இறுக்கப்பட்டு எங்கள் மரத்தில் கட்டப்பட்டிருந்த சுருக்குக் கயிற்றால் தான் அது மேலெழுந்தது என்பதில் சந்தேகமே இல்லை. தரையிலிருந்து பல அடி உயரம் எழுந்து, பின் விழுந்தது. அந்த நொடியில், ஒரு சிறுபிள்ளையால் உடைக்கப்பட்ட மரக்குச்சி போலே, அதன் கொம்பு முறிந்து காற்றில் பறந்தது. அந்த முறிவு கட்டுப்படுத்த முடியாத வேகத்தை உண்டு பண்ணி, எருமையை ஒரு பக்கமாக தரையில் எறிந்தது. படபடவென்று கால்கள் காற்றை மிதிக்க, அது கிட்டத்தட்ட உருண்டது. அந்த நொடியில், சிக்கிமுக்கிக் கல்லிலிருந்து வரும் தீப்பொறியைப் போலே கோண்ட் முன்னால் குதித்தார். அவரைப் பார்த்தவுடன், அந்த எருமை தன்னை சமநிலைப்படுத்திக் கொண்டு, தன் பிட்டத்தில் உட்கார்ந்து, பெருமூச்செறிந்தது.

எழுந்து நிற்பதில் கிட்டத்தட்ட வெற்றியடைந்துவிட்டது. ஆனால், தன்னுடைய பட்டக்கத்தியால் கோண்ட் அதன் தோளுக்குப் பக்கத்தில் தாக்கினார். அதன் கூர்மையான முனை ஆழமாக வெட்டியது. தன்னுடைய மொத்த எடையையும் கொண்டு அதை அழுத்தினார் கோண்ட். எரிமலை வெடிப்பதைப் போலே ஒரு முக்காரம் காட்டை உலுக்கியதோடு, திரவ மாணிக்க ஊற்று பீச்சியடித்தது. அதற்கு மேலும் காணச் சகியாது நான் என் கண்களை மூடிக் கொண்டேன்.

சில நிமிடங்களில் என் இடத்திலிருந்து நான் கீழிறங்கி வர, அந்த எருமை ரத்தப்போக்கால் செத்துப்போய் விட்டதைக் கண்டேன். ஆழமான ரத்தக் குளத்தில் அது கிடந்தது. அதற்குப் பக்கத்தில் தரையில் உட்கார்ந்து கோண்ட், தன் செயலால் தன் மேல் படிந்திருந்த கறையை துடைத்துக் கொண்டிருந்தார். அவர் தனித்து இருப்பதையே இப்போது விரும்புவார் என்பதை நான் அறிவேன். ஆக, நான் முன்பிருந்த மரத்திற்குச் சென்று வண்ணக்கழுத்தை அழைத்தேன். ஆனால், அவனிடமிருந்து பதிலேதும் இல்லை. அந்த மரத்தில் உச்சிக் கிளை வரைக்கும் ஏறிப் பார்த்துவிட்டேன். ஆனால் அவன் அங்கு இல்லை.

நான் கீழே இறங்கி வந்தபோது, கோண்ட் தன்னை சுத்தம் செய்து முடித்திருந்தார். அவர் வானத்தை நோக்கி கை காட்டினார். இயற்கையின் தோட்டிகளை நாங்கள் கண்டோம். பருந்துகள் கீழேயும் அவற்றுக்கு வெகு மேலே பிணந்தின்னிக் கழுகுகளும் பறந்தன. யாரோ இறந்துவிட்டார்கள் என்றும் தாங்கள் காட்டைச் சுத்தம் செய்ய வேண்டும் என்று அவை அதற்குள் தெரிந்து கொண்டிருந்தன.

”நமது புறாவை மடாலயத்தில் தேடுவோம். சந்தேகமே இல்லை, அவன் மற்ற பறவைகளோடு பறந்து போய்விட்டான்” என்றார் கோண்ட். ஆனால் வீடு நோக்கி கிளம்புவதற்கு முன், இறந்த எருமையை அளக்கச் சென்றேன். அதை நோக்கி ஒவ்வொரு திசையிலிருந்தும் ஈக்கள் படையெடுத்துக் கொண்டிருந்தன. அந்த எருமை பத்தரை அடி நீளம் இருந்தது. அதன் முன்னங்கால்கள் மூன்று அடிக்கும் மேலே இருந்தன.

மடாலயத்திற்கு திரும்பிச் செல்லும் எங்கள் பயணம் மெளனமாகவே இருந்தது. பாதிக்கப்பட்ட அந்த கிராமத்திற்குச் சென்று, அதன் தலைவரிடம் அவர்களின் எதிரி இறந்துவிட்டது என்பதை நண்பகல் பொழுதில் சொன்ன போது மட்டுமே மெளனம் கலைந்தது. முன்தின மாலையில், சூரிய அஸ்தனமனத்திற்கு முன் பிரார்த்தனைக்காக கோவிலுக்குச் சென்ற அவரது வயதான தாயாரை அந்த எருமை கொன்றிருந்ததால் அவர் துக்கத்தில் இருந்த போதும், இதைக் கேட்ட போது அவர் நிம்மதியடைந்தார்.

நாங்கள் மிகவும் பசியில் இருந்தோம், வேகமாக நடந்தோம். சீக்கிரமே மடாலயத்தை அடைந்துவிட்டோம். உடனே எனது புறாவைப் பற்றி விசாரித்தேன். வண்ணக்கழுத்து அங்கு இல்லை. மிகவும் துக்கமாக இருந்தது. அவருடைய அறையில் பேசிக் கொண்டிருந்த போது அந்த வயதான துறவி “கோண்ட், உங்களைப் போலவே அவனும் பத்திரமாக இருக்கிறான்” என்றார். பல நிமிட மெளனத்திற்குப் பிறகு, “எது உனது மன நிம்மதியைக் குலைக்கிறது?” என்று கேட்டார்.

அந்த வயதான வேடுவர் தான் சொல்லப்போவதை அமைதியாக யோசித்தார். “ஒன்றுமில்லை குருவே. எதைக் கொல்வதையும் நான் வெறுக்கிறேன். நான் அந்த எருதை உயிருடன் பிடிக்கவே விரும்பினேன். ஆனால் ஐயோ! நான் அதை அழிக்க வேண்டி வந்துவிட்டது. அதன் கொம்பு உடைந்த போது, எனக்கும் அதற்கும் இடையில் எதுவுமே இல்லை. ஒரு முக்கிய நரம்பில் எனது கத்தியைச் செருக வேண்டியதாகிவிட்டது. அவனை உயிருடன் பிடித்திருந்தால் ஒரு மிருகக்காட்சி சாலைக்காவது விற்றிருக்கலாமே என்று நான் வருந்துகிறேன்.”

”ஓ! வணிகவியலின் ஆன்மாவே!” என்று நான் கூவினேன். “அந்த எருது இறந்தது பற்றி நான் வருந்தவில்லை. மிச்ச வாழ்க்கை முழுவதும் மிருக்க்காட்சி சாலையில் ஒரு கூண்டில் இருப்பதைவிட செத்துப்போவதே நல்லது. சவ வாழ்க்கை வாழ்வதற்கு சாவே மேல்.”

“நீ மட்டும் சுருக்குக் கயிற்றை இரண்டு கொம்புகளிலும் போட்டிருந்தாயானால்” என்று கோண்ட் ஆரம்பித்தார்.

“நீங்கள் இரண்டு பேரும் வண்ணக்கழுத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். செத்துப் போன ஒன்றைப் பற்றியல்ல” என்று அந்த லாமா சத்தம் போட்டார்.

”உண்மை தான். நாளை அவனைத் தேடுவோம்” என்றார் கோண்ட்.

அதற்கு லாமா பதில் சொன்னார் “இல்லை. டெண்டாமுக்குத் திரும்பு என் மகனே. உங்கள் குடும்பம் உங்களைப் பற்றிய கவலையில் இருக்கிறது. அவர்களுடைய எண்ணங்கள் எனக்குக் கேட்கின்றன.”

அடுத்த நாள் நாங்கள் ஒரு ஜோடி குதிரையில் டெண்டாமுக்குக் கிளம்பினோம். விரைவான பயணத்தாலும், வெவ்வேறு இடங்களில் ஒரு நாளைக்கு இரண்டு முறை குதிரைகளை மாற்றிக் கொண்டதாலும் மூன்றே நாட்களில் டெண்டாமை அடைந்துவிட்டோம். எங்கள் வீட்டை நோக்கி மேலே போகும் போது, மிகுந்த உற்சாகத்தில் இருந்த எங்கள் வீட்டு வேலைக்காரரை எதிர் கொண்டோம். மூன்று நாட்களுக்கு முன்னரே வண்ணக்கழுத்து வந்துவிட்டதாக அவர் சொன்னார். ஆனால் அவனுடன் நாங்கள் இருவரும் வரவில்லை என்பதால் என் பெற்றோர் கலவரப்படத் துவங்கி, எங்களை உயிருடனோ பிணமாகவோ தேடிக் கண்டெடுக்க குழுக்களை அனுப்பி வைத்திருந்தார்கள்.

கோண்டும் நானும் என் வீடு நோக்கி கிட்டத்தட்ட ஓடினோம். அடுத்த பத்து நிமிடத்தில் என் அம்மாவின் கைகள் என்னைச் சுற்றியிருந்தன. அவனுடைய கால்கள் என் தலையில் இருக்க, வண்ணக்கழுத்து தன்னை சமநிலையில் இருத்திக்கொள்ள தன் இறக்கைகளை அடித்துக் கொண்டிருந்தான்.

வண்ணக்கழுத்து ஒரு வழியாக பறக்கத் துவங்கிவிட்டான் என்பதைப் கேட்டபோது நான் அடைந்த உற்சாகத்தைச் சொல்லத் தொடங்கினால் நிறுத்த முடியாது. மடாலயத்திலிருந்து டெண்டாமில் எங்கள் வீடுவரைக்கும் அவன் பறந்து வந்திருக்கிறான். தடுமாறவில்லை,. தோற்றுப் போகவும் இல்லை. “ஓ! பறத்தலின் ஆன்மாவே, புறக்களுக்கு மத்தியில் ஒரு முத்தே” என்று நானும் கோண்டும் விரைந்து நடக்கும் போது வியந்து கொண்டேன்.

இப்படி முடிந்தது சிங்காலிலாவிற்கான எங்கள் யாத்திரை. வண்ணக்கழுத்தையும் கோண்டையும் போர்க்களத்தில் பீடித்திருந்த நோய்களான பயத்தையும் வெறுப்பையும் இந்த யாத்திரை குணப்படுத்திவிட்டது. வாழ்வின் மிகக் கொடிய இந்த நோய்மைகளிலிருந்து ஒரு ஆன்மாவையேனும் மீட்குமெனில் அதற்கான எந்தவொரு உழைப்பும் வீண் இல்லை.

இந்தக் கதையின் இறுதியில் ஒரு உபதேசத்தைச் சொல்வதற்கு பதிலாக நான் இதைச் சொல்கிறேன்,

“நாம் எதை யோசிக்கிறோமோ, எதை உணர்கிறோமோ அதன் சாயல் நமது வாக்கிலும் செயலிலும் படியும். பிரக்ஞையற்ற நிலையில் கூட ஒருவன் பயப்பட்டாலோ அல்லது அவனுடைய சிறிய கனவு கூட வெறுப்பில் தோய்ந்திருந்தாலோ, விரைவிலோ அல்லது பின்னரோ, அவனால் இந்த இரண்டு குணங்களையும் தன் செய்கையில் வெளிப்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்று. ஆக, என் சகோதரர்களே, துணிவோடு வாழுங்கள், துணிவைச் சுவாசியுங்கள், துணிவே அளியுங்கள். அன்பை தியானிப்பதன் மூலமும் அன்பை உணர்வதன் மூலமும், ஒரு மலர் வாசம் தருவதைப் போலே இயற்கையாகவே சமாதானமும் அமைதியும் உங்களிடமிருந்து பொழியும்.

“எல்லோருக்கும் அமைதி கிட்டட்டும்.”

(முற்றும்)