அந்த நாளும் வரும்
அன்று, மிக்க மகிழ்ச்சியுடன்
உன் வீட்டுக்கு வரும் உன்னை
நீயே வரவேற்பாய், உன் நிலைக் கண்ணாடியில்
ஒருவருக்கொருவர் வணக்கம் சொல்லிச் சிரித்தபடி
வா, வந்து உட்கார், சாப்பிடு என்பாய்.
அந்த அன்னியனை, உன் சுயமாய் இருந்தவனை, மீண்டும் நேசிப்பாய்.
மது ஊற்றிக் கொடு. ரொட்டி வைத்துக் கொடு. உன் இதயத்தை
அதனிடமே திருப்பிக் கொடு, உன்னை வாழ்நாள் முழுக்க
நேசித்த அந்த அன்னியனிடம், எவனை மற்றவர்களுக்காகப்
புறந்தள்ளினாயோ, உன்னை உள்ளும் புறமும் அறிந்த அவனிடம்.
புத்தக அலமாரியிலிருந்து காதல் கடிதங்களை,
புகைப்படங்களை, தாளாமல் எழுதிய குறிப்புகளை, ஒழித்துவிடு.
உன் பிம்பத்தை நிலைக்கண்ணாடியில் இருந்து உரித்தெடு.
உட்கார். உன் வாழ்க்கையை ருசித்துத் திளைத்திடு.
oOo
(Derek Walcott எழுதிய Love After Love என்ற ஆங்கில மொழி கவிதையின் தமிழாக்கம். மேற்கிந்தியத் தீவுகளில் ஒன்றான செயிண்ட் லூசியா தீவைச் சேர்ந்த டெரக் வால்காட், 1992 ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர். இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான ஆங்கிலக் கவிஞர்களில் ஒருவரான வால்காட் கடந்த 17/03/2017 அன்று காலமானார்.
இந்தக் கவிதை 1976 ஆம் ஆண்டு வெளிவந்த அவரது Sea Grapes கவிதைத் தொகுப்பில் உள்ளது. ”மற்றவர்களுக்காக வாழ்ந்தது போதும்,உன்னை நீ ஏற்றுக்கொள். உன் வாழ்க்கையை அதன் அனைத்துச் சுவைகளுடன் நீயே ருசி” என்பது இந்தக் கவிதையின் அடிநாதம்)