மொழியாக்கம்

சில்கோவ்ஸ்கியின் தேற்றம் : கார்ல் இயாக்னெம்மா

தமிழில்: சரவணன் அபி

அத்தியாயம்2

அன்று  மாலை, தேவைக்கும் அதிகமாகவே குளிரூட்டப்பட்ட அந்த மேரியட் ஹோட்டலின் அறையில், அன்றைய முன்பகலின் கொடிய ஆனால் இனிய  வெற்றியின் பரிசாக ஷாம்பெயினை அருந்திக் கொண்டே தன் பயணப்பையை ஹெண்டர்சன் அடுக்கிக் கொண்டிருந்த போது தொலைபேசி ஒலித்தது.

“ஹலோ ஜான், சிரமப்படுத்தி விடவில்லை என்று நினைக்கிறேன், நீ மகிழ்ச்சியாக இருப்பது தெரிகிறது!”, சோக்லோஸின் குரலில் ஓர் உற்சாக துள்ளல்.

ஷாம்பெயினின் நுரை புரைக்கேற, ஹெண்டர்சன் கமறலில் இருமினார். “இதோ பார் மிக்லோஸ், நீ ஆத்திரப்படுவதற்கு இதில் ஒன்றுமில்லை” என்றபடி பிளாஸ்டிக் கோப்பையை கீழே வைத்துக்கொண்டே திடீரென்று வேர்த்துவிட்ட உள்ளங்கையால் வாயை துடைத்துக் கொண்டார்.

“சேச்சே, அதெல்லாம் ஒன்றுமில்லை, சொல்லப் போனால், நான் நன்றிதான் சொல்ல வேண்டும் – அந்த குறையை நீ சுட்டிக் காட்டியதற்கு,”  சோக்லோஸ் தொடர்ந்தார். “டாக்ஸியில் விடுதிக்கு திரும்பிப் போகும் போது நீ சுட்டிக்காட்டிய குறையை களைவதற்கு ஒரு வழி தோன்றியது. ஓர் அசாதாரணமான ஆனால் எளிய தீர்வு. ஒரு புதிய ஆராய்ச்சியின் பாதையையே திறந்து விடலாம் என நினைக்கிறேன்”.

“நல்லது, மிக்க மகிழ்ச்சி”, ஹெண்டர்சன் தொலைபேசி வயரை இழுத்தவாறே குளியலறைக்குள் நுழைந்து ஷேவிங் பிளேடுகள், டூத் ப்ரஷ் போன்றவற்றை எடுத்து பயணப்பைக்குள் திணித்தார். “மன்னித்துக் கொள் சோக்லோஸ், இப்போது பேச எனக்கு நேரமில்லை. நான் விமான நிலையம் கிளம்பிக் கொண்டிருக்கிறேன்”.

“என்ன, நீ இன்னும் கொஞ்சம்…நாசுக்காக சொல்லியிருந்திருக்கலாம். பரவாயில்லை”.

சோக்லோஸின் குரலில் மதுவின் குழறல் இருந்ததாகப் பட்டது. அந்த எண்ணமே ஹெண்டர்சனுக்கு கலக்கத்தைக் கொடுத்தது. பையை மூடிவிட்டு அறையை நோட்டம் விட்டபடி, “சரி, நான் கிளம்புகிறேன் சோக்லோஸ். அடுத்த கருத்தரங்கில் பார்ப்போம். அல்லது, பாஸ்டனில்,” என்றார் சொக்லோஸ்,

ஹெண்டர்சன், இருவருக்கும் பாஸ்டனில்தான் வேலை, சோக்லோஸ் நகரின் பல்கலைக்கழகமொன்றிலும் ஹெண்டர்சன் புறநகரில் தொழில் நுட்பக் கல்லூரியிலும் பணிபுரிந்தார்கள் என்றாலும், ஹெண்டர்சன் கடந்த நான்கு வருடங்களாக சோக்லோஸை  சந்திப்பதை வெற்றிகரமாக தவிர்த்திருந்தார்.

“நாம் சந்திக்கலாம் என்று நினைத்தேன். ஒரு அரை மணி நேரம்? ஹோட்டல் பாரில்?”

“இந்த ஹோட்டலிலா இருக்கிறாய்?” ஹெண்டர்சன் தாளிட்ட தன் அறைக்கதவை பதற்றமாகப் பார்த்துக்கொண்டார் . “நான் இங்கு தங்கியிருப்பது உனக்கு எப்படித் தெரியும்?”

“கடவுளே, ஏன் இப்படி பேய்ப்படங்களில் வருபவனைப் போல் பயந்து நடுங்குகிறாய் ஜான்? வீதியின் முனையில் கம்போர்ட் விடுதியில் நான் தங்கி இருக்கிறேன்.  என் நினைவு சரியென்றால், உனக்கு பிடித்த மது ‘வைல்ட் டர்கி பர்போன்’ தானே, அதை நான் வாங்குகிறேன், அங்கு வா சந்திப்போம்”.

“முடியுமென்று தோன்றவில்லை, சோக்லோஸ். பழைய கதைகளை பேச எனக்கும் ஆசைதான், ஆனால் எட்டு முப்பது விமானத்தில் நான் கிளம்பியாக வேண்டும்”.

“ஒரு விஷயம் உன்னுடன் பேச வேண்டுமே”, சோக்லோசின் குரல் தளர்ச்சியும் சோகமுமாய் தொனித்தது. தவிர்க்க முடியாத ஆனால் ஒரு துரதிர்ஷ்டவசமான செய்தியை அறிவிப்பவனின் குரல் அது. “உண்மையில், மரியாவைப் பற்றி”.

மரியாவின் பெயரைக் கேட்டதும் ஹெண்டர்சனின் நெஞ்சில் தோன்றிய நடுக்கம் உடலெங்கும் பரவியது. எரியும் தணலில் வாட்டி சட்டென்று கடலளவு குளிர்நீரில் அமிழ்த்தியது போல் உணர்ந்தார். “அவளைப் பற்றி என்ன?”

சோக்லோஸ் ஆழமான, துயரம் பொதிந்த ஒரு பெருமூச்செறிந்தார். “நிறைய இருக்கிறது, போனில் வேண்டாமே”.

ஏக்கமும், அவநம்பிக்கையும் ஒருசேரக் கலந்த, அவருக்கு ஏற்கனவே பழகிய ஒரு வலி தாக்க ஹெண்டர்சன் படுக்கையில் சரிந்தார். கண்ணாடியில் தெரிந்த தனது உருவத்தை சுவாரசியமின்றி பார்த்துக் கொண்டார் – உடைந்த, வரண்ட தலைமயிர், தொங்கும் தாடைச்சதைகள், இறுக்கிப்பிடிக்கும் மேற்சட்டை, அவருக்கேகூட அருவருப்பூட்டும், அவ்வப்போது பதற்றத்துடன் வெளித்துருத்தும்  அவரது நாக்கு; பார்வையை மெல்ல திருப்பி கொண்டு சொன்னார், “சரி, முப்பது நிமிடங்கள் பொறு, என் விமான நேரத்தை மாற்றி விட்டு வருகிறேன்”.

“பிரமாதம், அதைச் செய் ஜான்.”

——-

மேரியட் ஹோட்டலின் வண்ணங்களை இழந்து கொண்டிருக்கும் முகப்பைக் கடந்து  செஸ் ஜியோர்ஜிஸ் ரெஸ்டாரன்டை நெருங்கிய ஹெண்டர்சன்  வாயிலில் சிறிது தயங்கினார். உணவு விடுதியின் புகை படிந்த கண்ணாடிக்கதவுகளூடாக உள்ளே வரிசையாக ஆட்கள் பாரில் அமர்ந்திருப்பதும், தொலைவில் சோக்லோஸை போன்றொரு உருவம், கீழுதட்டு தாடியுடனும், பளபளக்கும் டையுடனும் அமர்ந்திருப்பதும் தெரிந்தது. கதவின் பிடியில் கைவைத்த ஹெண்டர்சன் சட்டென்று விலகி கழிப்பறைக்கு விரைந்தார். பத்திருபது மாடிப்படிகள் ஏறிவந்ததைப் போல படபடக்கும் நெஞ்சுடன் கழிவறைக்குள் நின்று கண்ணை மூடிக்கொண்டார்.  நீண்ட பெருமூச்செறிந்தபடி நின்றிருந்தவரை பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஆள் கேள்விக்குறியுடன் பார்க்கத்துவங்க, பொத்தானை அழுத்தி நீரிறைத்துவிட்டு, வாஷ்பேஸினில் முகத்தில் அறைந்து கழுவிக் கொண்டு, செஸ் ஜியோர்ஜிஸை நோக்கி, சோக்லோஸை நோக்கி லாபியைக் கடந்து நடந்தார்.

லூயிஸ்வில் வழியாக புடாபெஸ்ட்டிலிருந்து வந்தவர் மிக்லோஸ் ஸோல்டன் சோக்லோஸ். முதலாமாண்டு பட்டப்படிப்பு மாணவர்களாக அவர்கள் மிச்சிகன் பொறியியல் கல்லூரியில் சந்தித்துக் கொண்ட போது, இருவரும் துடிப்பான, இளம் கணித ஆராய்ச்சியாளர்கள்; கார்ல் மார்க்ஸையும் ஐரிஷ் பியரையும் ஏற்காமல் புறந்தள்ளி விட்டு, கணிதம் கடவுளின் புதிர் விளையாட்டு – மிக விரிவான, மிக அழகான ஓர் விளையாட்டு, விடுகதைகள் போல் – என்பதை விரும்பி ஏற்றவர்கள். முதல் அரையாண்டில் ஏழடி ஆழ பனிப்பொழிவு   கல்லூரியை மூடிய போது, பாக்மன் நூலகத்தில் ஓக் மர மேசையின் எதிரும் புதிருமாக அமர்ந்தவாறு   சோக்லோசும் ஹெண்டர்சனும் மென்மேலும் கடினமான கணிதச் சமன்பாடுகளை, தேர்ந்த பியானிஸ்ட்கள் தங்கள் விரல்களுக்கான பயிற்சிப் பாடல்களை இசைப்பது போன்றலாகவத்துடன் விடுவித்துக் கொண்டிருந்தனர்.

அந்த அரையாண்டு முடிந்த போது இருவரும் கணிதப்பிரிவுக்கு நான்கு கல் தொலைவில், சோபை இழந்து கொண்டிருந்த ஒரு டச் கலோனியல் வீட்டின் மேற்பாதிக்கு குடிபுகுந்தனர். சோக்லோஸ் தனது விருப்பத்துக்குரிய கணித வல்லுநர் நினைவாக வீட்டிற்கு போயின்கெர் மேனோர் எனப் பெயரிட்டதும், ஆறு வெள்ளிக்கு வாங்கிய அஸ்தி ஸ்புமாண்டே மதுவை ஜன்னலின் நிலையில் ஓங்கி அறைந்து  உடைத்தவாறே உறைந்த டிசம்பர் குளிருக்குள் ஊளையிட்டு சிரித்ததும் அன்றைய நிகழ்வுகள்.

பின்னர் தான் ஹெண்டர்சன் மரியாவைச் சந்தித்தார். வடகிழக்கு போலந்தின் பியலிஸ்டாக் நகரைச் சார்ந்த மரியா சில்கோவ்ஸ்கி. அவளுக்கு கணிதம் பிடிக்கும்; ஆனால் குளியற்தொட்டியில் படுத்துக்கொண்டு அவள் தயாரிக்கும் கியால்பஸாவில் இஞ்சி கூடிவிட்டதா அல்லது கருமிளகு அதிகமா  என்று கவலைப்பட முடியுமேயன்றி கணிதத்தின் மேல் பெரிதான காதலொன்றும் கிடையாது. பின் ஏன் அவள் கணித பட்டப்படிப்பில் சேர்ந்தாள் என்று ஹெண்டர்சனுக்கு புரிந்ததில்லை, அதைப் பற்றி அவர் கவலைப்பட்டதும் கிடையாது. எதற்காக வந்திருந்தாலும் அவள் அங்கு தொடர்ந்து இருப்பதை அவர் விரும்பினார். ஹெண்டர்சன் நூலகத்திற்கு செல்வது குறைய தொடங்கியது. பதிலாக அவரது கட்டிலில் அவளுடன் பின்னிக் கிடப்பதிலும், சார்ல்ஸ் மின்கஸின் இசைக்கோப்புகளை கேட்பதிலும், அவளுடன் ஆவேசமான உறவில் திளைப்பதிலும், தன் பாட்டியிடம் கற்று அவள் சமைக்கும் போலிஷ் உணவுகளை ருசிபார்ப்பதிலும் நாட்கள் சென்றன. கலிஃபோர்னியா மாகாணத்தின் வடிவில் அவள் உடலில் ஒரு மச்சம் இருப்பதைக் கண்டுபிடிப்பதில் தொடங்கி, சமயத்தில் அடக்கமுடியாமல் அவள் சிரிப்பதை, அவளது நாகரிகமற்ற போலிஷ் உச்சரிப்பு அவளை முரட்டுத்தனமாகவும், அறிவிலியாகவும் காட்டிவிடுமோ என்ற அவளின் விதவிதமான  கவலைகள்  வரை அவர் மரியாவை அணுஅணுவாக அறிந்து கொள்ள ஆரம்பித்தார்.

மரியாவின் அவசர குணம் – அணிவதற்கு காலுறைகளை தேர்ந்தெடுப்பது போல் எவ்வித யோசனையுமின்றி சட்டென்று முக்கிய முடிவுகளை எடுத்து விடும் குணம் – ஹெண்டர்சனை எரிச்சலடையச் செய்தாலும்,  அவள் தன் மனதை மாற்றிக்கொள்ளும் வேகமும், மனமுவந்து தவறை ஒப்புக் கொள்ளும் தன்மையும் அவரை பொறாமை கொள்ளவும் செய்தது.  மாலைப்பொழுதுகளில் கபுஸ்டா, பிகோஸ், பியரோகி என்று தட்டுகள் நிறைய பெரும் அளவுகளில் மரியா சமைத்தாள். அப்போது, கணிதவியல் கட்டிடத்திலிருந்து நள்ளிரவுக்கு மேல் திரும்பும் சோக்லோஸ் அவளது போலிஷ் தயாரிப்புகளை ஒரு தட்டில் நிரப்பிக்கொண்டு, சால்வேஷன் ஆர்மியில் வாங்கிய பழைய சோஃபாவில் அமர்ந்துகொண்டு ஹோகன்’ஸ் ஹீரோஸ் தொடர்களின் மறு ஒளிபரப்புகளை பார்த்தபடி அவர்களுடன் இரவுகளை கழித்ததுண்டு. ஹெண்டர்சனும் சோக்லோஸும் கண்ட்ரோல் தியரியின் விடைகாணப்படாத பிரச்சனைகளுக்கு எப்படி தீர்வு காண்பது என்று தங்குதடையற்ற உரத்த உற்சாகத்தோடு பேசிக்கொண்டிருக்கையில், மரியா அவள் துவங்கப்போகும் ‘மாலா வார்ஸாவா: லிட்டில் வார்சா – போலிஷ் வீட்டுச் சாப்பாடு’ என்ற ரெஸ்டாரெண்ட் பற்றி  விளையாட்டாய்ப் பேசிக் கொண்டிருப்பாள்.

போயின்கெர் மேனோரில் அவர்கள் வசித்த இரண்டாவது வருடம் முடிந்து மூன்றாம் வருடத்திய கோடை துவங்கிய போது ஹெண்டர்சன் ஒரு அடாப்டிவ்- கண்ட்ரோல் கருத்தரங்குக்காக நெவார்க் போக நேர்ந்தது. மரியா இல்லாத நான்கு நாட்கள். மிதமிஞ்சி குளுமைப்படுத்தப்பட்டிருந்த, கருத்தரங்கு அறையின் பின்பகுதியில் தனது வெற்று குறிப்பேட்டில் அவளது அக்கறையற்ற, நெளிகோடுகள் நிறைந்த கையொப்பத்தை வரைந்து வரைந்து பார்த்துக் கொண்டிருந்த ஹெண்டர்சன், ‘மரியா ஹெண்டர்சன்’ என்று எழுதிப் பார்த்தார். ஒரு விளக்க முடியாத கிளர்ச்சி. அடுத்த நாள், வெள்ளிக்கிழமை, கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஊர் திரும்ப பரபரப்புடன் முடிவெடுத்தார். அவர் இயல்புக்கு மாறான, உணர்ச்சிவசப்பட்ட ஒரு திடீர் முடிவு.

அந்த வியாழக்கிழமை மாலை விமான நிலையத்தில் ஹெண்டர்சன் விரைந்தபோது ஆய்லர் தனது கணித ஆராய்ச்சியொன்றில்  முடிவிலியின் மதிப்பு கிட்டத்தட்ட பூஜ்யம் என்று நிரூபித்த தருணம் போன்ற ஓர் அளவிட முடியாத உயரிய நன்றிப்பெருக்கும், பரவசமும் அவர் மனமெங்கும் நிறைந்திருந்தது.  அவரது காலணிகள் நிலையத்தின் டைல்ஸ் பாதிக்கப்பட்ட தரையில் எழுப்பிய சத்தம் கூட அவர் கண்களில் காரணமின்றி நீரை வரவழைத்தது.  வீட்டுக்குள் நுழைந்து சாவியை கதவில் பொருத்தித் திருகும்போது, ஏதோ வழக்கமில்லாத சப்தம் கேட்டது போலிருந்தது. தெரிந்த குரல் ஆனால் கேட்டிராத மாறுபாடு. மனதிலிருந்து அதை விலக்கிவிட்டு, நடுங்கும் கைகளுடன் பூட்டைத் திறந்தார்.

ஹெண்டர்சனின் பை கீழும் விழுந்ததும் மரியா சமையலறை மேடையை விட்டுத் திரும்பிப் பார்த்ததும்  ஓரே  கொடுங்கணம். அவள் சமையலுக்கு அணியும் மேலங்கியைத் தவிர உள்ளே ஒன்றும் அணிந்திருக்கவில்லை. சோக்லோஸ் ஹாலின் தரையில், அருகே ஒரு தட்டில் கொலாப்கியும், நெஞ்சின் மீது அமெரிக்கன் மாத்தமாடிக்ஸ் சஞ்சிகையுமாக, கால்களில் செந்நிற உறைகளைத் தவிர வேறொன்றும் இல்லாத நிலையில் நிர்வாணமாக படுத்துக் கிடந்தார்.  ஹெண்டர்சன் அப்பிடியே பின்வாங்கி, கதவை இறுக சாத்திவிட்டு, செய்வதறியாமல் அங்கேயே ஒரு கணம் நின்றார். உள்ளே சோக்லோஸின் தட்டு பைன் மரத்தரையில் விழுந்து சிதறும் சத்தமும், ‘நில்லுங்கள்!’ என்னும் மரியாவின் இறைஞ்சலான, விகாரமான கதறலும் கேட்டது.  படிகளில் தடுமாறி  இறங்கிய ஹெண்டர்சன், இருண்ட முற்றத்தைக் கடந்து தனது அலுவலக அறையின் பாதுகாப்பை தேடி விரைந்து மறைந்தார்.

பின்னர் வந்த தொலைபேசி அழைப்பில் விக்கலும் அழுகையும் தோய்ந்த  போலிஷ் வார்தைகளூடாக மரியா திரும்பத் திரும்ப, ‘செல்லம், நான் ஒரு முட்டாள், என்னை மன்னித்து விடு’ என்று அரற்றிக் கொண்டேயிருந்தாள். ஆனால் அவரை திரும்ப வரச் சொல்லவேயில்லை. அன்று சகிக்க முடியாத ஒரு விஷயம் தெளிவாகி  விட்டது: அவள் அவரை நேசித்தாள் ஆனால் அவரை விட சோக்லோஸை அதிகம் நேசித்தாள். மரியாவின் அவசர குணம் அவளைத்  தன் தேர்வை மாற்றிக் கொள்ளச் செய்து விட்டது. ஏனென்று ஹெண்டர்சனுக்கு விளங்கவில்லை; எப்போதுமே பெண்களும் காதலும் சம்பந்தப்பட்ட  விஷயங்கள் அவருக்கு பிடிபட்டதில்லை.

மரியாவின் ப்ரா சோக்லோஸின் அறைக்குள் தரையில் சுருண்டு கிடப்பதைப் பார்க்கப் பிடிக்காமலும், அவள் உபயோகிக்கும் சானல் 5 சென்ட்டின் நறுமணம் – கிளாசிக் மணம், ஆனால் சோகம் கமழ்வது- குளியலறைக்குள் சோக்லோஸின் துண்டில் வீசுவதை பொறுத்துக் கொள்ள முடியாமலும் ஹெண்டர்சன் தனது அலுவலகத்திலேயே இரவுகளை கழித்தார்.  வீட்டின் குத்தகை டிசம்பர் மாதம் முடிந்த அன்று,  நள்ளிரவில் துணிகளையும், புத்தகங்களையும், குறிப்பேடுகளையும் எட்டு அட்டைப்பெட்டிகளில் அடைத்துக் கொண்டு வீட்டைக் காலி செய்து, ஒரு டாக்சி பிடித்து, கல்லூரிக்கு அருகே நதியைத் தாண்டி ஒரு ஸ்டூடியோ வீட்டுக்கு குடிபெயர்ந்து விட்டார். அடுத்த பதினெட்டு மாதங்களில் சோக்லோஸை கருத்தரங்குகளிலோ, ஆய்வறிக்கை விவாதக் கூட்டங்களிலோ சந்திக்க நேர்ந்தால் ஐஸ் ஹாக்கி பற்றியோ அல்லது கண்ட்ரோல் தியரியை பற்றியோ பேசிக்கொள்வார்களே அன்றி மரியாவின் பெயரைக்கூட இருவரும் உச்சரித்துக் கொண்டதில்லை.

ஆனால் இப்போதும் ஹெண்டர்சன் அவருக்கும் அவளுக்குமான உறவின் நினைவுச்சின்னமாக ஒரு பொருளை வைத்திருக்கிறார் – அலமாரியின் கீழ் ட்ராவில் உள்ளே பொதிந்து கிடைக்கும் அவளுடைய இரு இளஞ்சிவப்பு நிற காட்டன் உள்ளாடைகள். சில வெள்ளிக்கிழமை மதியங்களில், அலுவலகம் காலியாகிவிட்டதும், அலுவல் நேரம் முடிந்ததை அறிவிக்கும் மணிக்கூண்டு தனது மென்சோக இசையை வாசித்து முடித்ததும், தனது அறையின் கதவை அடைத்துக் கொண்டு அறைக்குள் நுழையும் சூரிய ஒளிக்கீற்றில் தனது சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி அவளது உள்ளாடைகளை ஹெண்டர்சன் தனது மோவாய்க்குக் கீழ் சுருட்டிவைத்துக் கொண்டு இருந்ததுமுண்டு.  சில வருடங்களுக்கு முன்னர்  யதேச்சையாக அவை துவைக்கப்பட்டு விட்டிருந்தாலும், இன்னமும் காய்ந்த இலைகளும் இஞ்சியும் கலந்த மரியாவின் அந்த கிழக்கு ஐரோப்பிய வாடையை அவற்றில் முகர முடிவதான ஓரு பிரமை. பார்க்கும் போதெல்லாம் அவர் மனதை பிழியும் மற்றொரு அடையாளமும் அந்த ஆடைகளில் இருந்தது. அவற்றின் பின்பக்க பட்டியில் நீல நிற மார்க்கர் பேனாவினால் அவள் பொறித்திருந்த பெயர் – ‘மரியா’. அதைப் பார்க்கும்போதெல்லாம் அவர் இதயத்தை யாரோ கசக்கிப் பிழிவது போலிருக்கும். அவ்வளவு அழகானதும் அவ்வளவு சோகமானதுமான ஒரு பெயரை பார்த்ததே இல்லை என்று நினைத்துக் கொள்வார்.

(தொடரும்)

அத்தியாயம் 1

oOo

19 அக்டோபர் 1972-ல் பிறந்த கார்ல் இயாக்னெம்மா அமெரிக்க விஞ்ஞானி, எழுத்தாளர். புகழ் பெற்ற MIT-ல் இயந்திர பொறியியல் துறையில் Ph. D பட்டம் பெற்ற கார்ல், இயந்திரவியல், ரோபாடிக்ஸ் துறைகளில் பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருக்கிறார்.

பல பரிசுகள் பெற்ற நாவல்கள், சிறுகதைகள் எழுதிய இவரது பெரும்பாலான கதைகளின் கருப்பொருள் அறிவியல், கணிதம், மனித-இயந்திர உறவுகள் மற்றும் இத்துறை சார்ந்த உளச்சிக்கல்கள்.

பிரபலமான Zoetrope சிறுகதை பத்திரிகையில் வெளிவந்து பலரது கவனத்தை ஈர்த்த‘Zilkowksky’s Theorem’ என்ற சிறுகதையின்  முறையாக முன்னனுமதி  பெற்று செய்யப்பட்ட மொழியாக்கம் இது.

ஒளிப்பட உதவி – Robotic Mobility Group, MIT

சில்கோவ்ஸ்கியின் தேற்றம் : கார்ல் இயாக்னெம்மா

தமிழில்: சரவணன் அபி

Karl Iagnemma

அத்தியாயம் 1

முழுதும் நிறையாத அந்த கருத்தரங்கு அறையின் பின்னாலிருந்த காலி நாற்காலியொன்றில் ஹெண்டெர்சன் மஞ்சள் நிற குறிப்பேட்டைக் கொண்டு முகத்தை மறைத்தவாறே சரிந்து அமர்ந்து கொண்டார். அவரைச் சுற்றிலும் கணித வல்லுனர்கள் மூன்று நான்கு பேராய் நின்றபடி ஸ்டைரோபோம் கப்களிலிருந்து காபியை பருகிக்கொண்டு ‘வேரியேஷனல் கால்குலஸ் – செர்மெலோ பிரான்கல் தேற்றம்’ பற்றி கிண்டல் செய்து சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதைக் காண முடிந்தது. அவர்களின் ரசமில்லாத நகைச்சுவை, மட்கிய ஆரஞ்சு நிற தரைவிரிப்பும், வசதியற்ற நாற்காலிகளும், சீராக எரியாத மின்விளக்குகளும் கொண்ட அந்த கருத்தரங்கு அறைக்கு பொருத்தமாகவே பட்டது. சரி, இது தான் அக்ரோன் நகரமா என்று எண்ணிக் கொண்டார் ஹெண்டெர்சன். அவர் எண்ணியதை விட மோசமாகவோ நன்றாகவோ அது இருந்து விடவில்லை.

ஒவ்வொரு வருடமும் அதே கருத்தரங்கு; அதே முந்நூறு பேர்; உற்சாகமற்ற நகரங்கள். டான்ஸ்க் ஒரு வருடம்; பெல்பாஸ்ட் அடுத்த வருடம்; இதோ இப்போது அக்ரோன். அடுத்தது எங்கே – மோகதிஷு போல. அல்லது டெஹரான்? ஹெண்டெர்சனுக்கு அரங்கிலிருந்த தெரிந்த முகங்களில் பல பிடிக்காதவை. நேரில், ஈரமான கைகுலுக்கல்களும், நாற்றமடித்த சுவாசங்களும் கரகரத்த குரல்களும் கொண்ட இந்த மனிதர்கள், அவரவர் ஆராய்ச்சி புத்தகங்களின் தடித்த அட்டைகளுக்கிடையே கணிதம் சமன்படுத்திய கோர்வையான குரல்களில் மிக ஏற்புடையவர்களாக தெரிபவர்கள். ஹெண்டெர்சன் தலையை குறிப்பேட்டினுள் புதைத்துக் கொண்டு, சுற்றி நின்றவர்கள் யாரும் பார்த்து விடாதவாறு, முக்கியமாக, பேச்சாளர் சோக்லோஸ் கண்ணில் படாதவாறு ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தார்.

மணி இரண்டானதும் ‘வலுவிழந்த நான்-லீனியர் தொகுப்புகளின் மாறுபாடுகள்: ஒரு பகுப்பாய்வு’ என்ற ஆய்வுக் கட்டுரையை அன்று சமர்ப்பிக்கவிருந்த சோக்லோஸ் மேடை மேலேறி ப்ரொஜெக்டரை உயிர்ப்பித்தார். ஹெண்டெர்சன் எதிர்பார்த்ததை விடவும் இன்னும் இளமையாகத் தெரிந்தார் சோக்லோஸ். முன்தலை இன்னும் வழுக்கை விழுந்து விடவில்லை; பெரும்பாலான கணித வல்லுனர்களுக்கே உரிய நெற்றிச் சுருக்கங்கள் இல்லை; நான்கு வருட துணைப் பேராசிரியர் பொறுப்பு சோக்லோஸை அவ்வளவாக பாதிக்காதது அநியாயமாகப் பட்டது.

சோக்லோஸ் குறுந்தாடி வைத்திருந்தார். அவர் அணிந்திருந்த, பளபளக்கும் ஊதா நிற டை வலுவிழந்த நான்-லீனியர் தொகுப்புகளைப் பற்றிய கட்டுரை வாசிப்புக்கு முற்றிலும் பொருத்தமில்லாதது என்று நினைத்தார் ஹெண்டர்சன். குறுந்தாடி, சோக்லோஸுக்கு ஒரு பைசாச பாவம் அளிப்பதாக நினைத்துக் கொண்டார்.

“வணக்கம், இங்கு நன்கு தெரிந்த பலர் கூடியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது”, சோக்லோஸ் தனது செழுமையான ஹங்கரியன் உச்சரிப்பில் துவங்கினார். ஹெண்டெர்சன் தன்னிச்சையாக நாற்காலிக்குள் இன்னும் புதைந்து கொண்டார். ஆனால் சோக்லோஸ் குறிப்புகளிலிருந்து தன் கண்களை எடுக்காமல் ஆராய்ச்சிக் கட்டுரைக்குள் பிரவேசித்து கொண்டிருந்தார் – வலுவிழந்த நான்-லீனியர் தொகுப்புகளின் இப்போதுள்ள தீர்க்க முடியாத பிரச்சனைகள், அவை குறித்த முந்தைய ஆய்வுகள், அவற்றின் முடிவுகள், டோபுஞ்ஸ்கியின் 1964-இல் வெளிவந்த பிரபலமான தேற்றம்; கிரேக்க கணித வல்லுநர் காலியார்டோஸ் முன்வைத்த, அதிகம் அறியப்படாத தொடர் முடிவுகள் – என ஒரு துல்லியமான, தேர்ந்த, ஒன்றன் பின் ஒன்றான நகர்வு.

கட்டுரையின் இந்தக் கட்டம் கடந்ததும் சோக்லோஸ் குரலைச் செருமிக் கொண்டார். ஓர் அரை சுரம் குரலில் கூட்டிக் கொண்டு தன் சொந்த ஆராய்ச்சியை இப்போது அவர் விவரிக்க ஆரம்பித்தார். அரையிருளில் ஆழ்ந்திருந்த அரங்கை பார்வையால் அளந்த ஹெண்டெர்சனுக்கு இது போன்ற ஆய்வரங்குகளில் நிலவும் சந்தேகம் கலந்த விரோத மனப்போக்கு இல்லாமல் பொருமலுடன் கூடிய ஒரு மரியாதை நிறைந்திருப்பதாகப் பட்டது. தனது குறிப்பேட்டுக்கு பார்வையை திருப்பி கொண்டு, திரையில் தெரியும் சமன்பாடுகளில் எங்கே குறை தெரிகிறது, எந்த மென்மையான பாகம் தெரியும், எங்கே அந்த கூர் ஈட்டியைச் செருகலாம் என நுண்ணிய மன அவதானிப்புடன் காத்திருந்தார்.

‘இறுதி வரைவு மற்றும் முடிவுகள்’ என்ற படியை ப்ரொஜக்டரில் சோக்லொஸ் வைத்ததும், உறக்கத்திலிருந்து விழித்த பாவனையுடன் இருந்த அரங்கைப் பார்த்து “இதனால் தீர்மானிக்க முடிவது என்னவென்றால் வலுவிழந்த நான்-லீனியர் சமன்பாடுகளின் நிலைத்தன்மையை மரபார்ந்த மாறுபாட்டு ஆய்வின் மூலம் தீர்க்கலாம் என்பதே” என்றார். உணர்வுகளை வெளிக்காட்டாமல் ஆனால் வசீகரமான ஒரு புன்னகையுடன் தன் குறிப்புகளிலிருந்து நிமிர்ந்து நோக்கி, “இப்போது யாருக்காவது ஏதேனும் – ”

“ஒரு கேள்வி”, என்றார் ஹெண்டெர்சன் உரத்த குரலில். அவர் குரலில் பதட்டமும் ஆக்ரோஷமும் இருந்ததை மறைத்துக் கொள்ள முயலவில்லை. இந்த ஒரு கணத்திற்காகத்தான் அவர் பல காலமாக காத்துக் கொண்டிருக்கிறார். “அணி H-ன் நேர்மாற்றும் தன்மை குறித்து என்ன கூறுகிறீர்கள்? H ஒருமையாக இருந்தால் என்னவாகும் என நீங்கள் ஆராயவில்லை.”

சோக்லோஸ் குரல் வந்த அரங்கின் இருண்ட ஆழங்களைப் பார்வையால் துழாவினார். “இன்னும் குறிப்பாக கூற முடியுமா?”

“நிச்சயமாக”. அரங்கில் சில தலைகள் திரும்பி ஹெண்டெர்சனை பார்த்தன. “படி 11-ல் நீங்கள் அணி B ஒரு நேர் அணியாயின் அணி H பன்மைத் தன்மையுடையது என்று வாதிடுகிறீர்கள். ஆனால் B உறுதி செய்ய முடியாத நேர் அணியாக இருந்தால் என்னவாகும் என நீங்கள் ஆராயவில்லை. இது போன்ற பரவலான அணி மாற்றங்களில், B உறுதி செய்ய இயலாத நேர் அணியாக இருக்கும் வாய்ப்பிருக்கிறது; அதனால் H ஒற்றை அணியாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது; எனவே, நீங்கள் நிறுவும் இந்த முடிவு நேர் மாற்றத்தக்கதல்ல.”

சோக்லோஸ் நிதானித்தார். கட்டுரையின் படிகளை மெதுவாக புரட்டி பக்கம் 11க்கு வந்தார். அந்த படியை ப்ரொஜக்டரில் வைத்துவிட்டு, அரங்கிற்கு முதுகை காட்டியவாறு திரும்பி தலையைத் உயர்த்தி திரையை பார்த்தார். அரங்கில் இப்போது பரவிய இறுக்கமான முணுமுணுப்புகள் ஹெண்டெர்சனுக்கு திரைப்படங்களில் காட்டப்படும் பொது மரண தண்டனை நிறைவேற்றத்தின் நாடகமாக்கலை நினைவுபடுத்தியது. தன்னிச்சையாக தாடியை வருடிக்கொண்டே சோக்லோஸ் தன்முன் நேர்த்தியாக கட்டவிழ்கிற கணிதச் சிக்கலை, தான் சரியென்று கருதிப் பொருத்திய நேர்மாற்ற முறையை, தான் பார்க்கத் தவறிய, ஹெண்டெர்சன் தாக்கிய மிக நுண்ணிய ஆனால் மிக அத்தியாவசியமான அனுமானத்தை கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தார்.

“ஆம், சரிதான்.” சோக்லோஸ் குரலை செருமிக் கொண்டார். கடற்கரை வெயிலில் காய்ந்தவை போல் அவர் காதுகள் தகித்தன. “நீங்கள் சுட்டிக் காட்டும் நேர் மாற்ற அணியின் இந்தக் கட்டுப்பாடு… ஒரு வரையறையே.”

“வரையறையா? அந்தத் தவறான அனுமானத்திற்கு பின் நீங்கள் நிரூபிக்கும் அத்தனை முடிவுகளும் தவறல்லவா?”

அரங்கத்தில் ப்ரஜக்டரின் மெல்லிய உறுமல் தவிர முழு நிசப்தம்.

சிறிது நேர அவகாசத்திற்கு பிறகு சோக்லோஸின் தலை விறைப்பாக அசைந்தது. “நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். அந்த அனுமானத்திற்கு பின்னான விளைவுகளை நான் இன்னும் தெளிவாக ஆராய வேண்டும் என நினைக்கிறேன்.”

அரங்கிலிருந்து வாழ்த்தொலி எழுந்தது. கருத்தரங்குகளில் இது போன்ற நிகழ்வுகள் அபூர்வம். இந்த நாளின் நாடகீயம் அடுத்த கருத்தரங்கிலும், அதற்கடுத்ததிலும் மெல்லிய கிசுகிசுத்த குரல்களில் விவாதிக்கப் பெறும். இனி பயம் கலந்த மரியாதையுடன் ஹெண்டெர்சன் பார்க்கப் பெறுவார். கூட்டங்களில் அவரது கணித கட்டுரைகளும் இனி தாக்குதல்களின் இலக்காகலாம். இதெல்லாம் ஹெண்டெர்சன் அறிவார். இந்தக் கூட்டம் முடிந்ததும் அவரிடம் பேசவும் சிலர் காத்திருப்பார்கள் என்பதால், சோக்லோஸ் மீண்டும் வலுவாய்ச் செருமி பார்வையாளர்களின் கவனத்தை மீண்டும் தன்பால் திருப்பிக் கொள்ளுமுன் ஹெண்டெர்சன் சத்தமின்றி அரங்கின் பின் கதவு வழியே வெளியேறினார்.

(தொடரும்)

oOo

19 அக்டோபர் 1972-ல் பிறந்த கார்ல் இயாக்னெம்மா அமெரிக்க விஞ்ஞானி, எழுத்தாளர். புகழ் பெற்ற MIT-ல் இயந்திர பொறியியல் துறையில் Ph. D பட்டம் பெற்ற கார்ல், இயந்திரவியல், ரோபாடிக்ஸ் துறைகளில் பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருக்கிறார்.

பல பரிசுகள் பெற்ற நாவல்கள், சிறுகதைகள் எழுதிய இவரது பெரும்பாலான கதைகளின் கருப்பொருள் அறிவியல், கணிதம், மனித-இயந்திர உறவுகள் மற்றும் இத்துறை சார்ந்த உளச்சிக்கல்கள்.

பிரபலமான Zoetrope சிறுகதை பத்திரிகையில் வெளிவந்து பலரது கவனத்தை ஈர்த்த ‘Zilkowksky’s Theorem’ என்ற சிறுகதையின்  முறையாக முன்னனுமதி  பெற்று செய்யப்பட்ட மொழியாக்கம் இது.

ஒளிப்பட உதவி – Robotic Mobility Group, MIT

விட்டத்தைத் தொடுதல் – இலக்கிய மிகையுணர்ச்சி குறித்து: NICK RIPATRAZONE

மொழியாக்கம்: பீட்டர் பொங்கல்

nick_photo

http://nickripatrazone.com

மே 8, 2007 அன்று ஒரு கட்டுரை என்னை அழ வைத்தது. நியூ ஜெர்சியில் பெட்மின்ஸ்டரில் ஒரு பொது நூலகத்தில், என் மனைவி வேலையிலிருந்து திரும்பக் காத்திருந்தேன். அதற்கு முந்தைய ஒரு மணி நேரம் நான் சில கல்லூரி மாணவர்களுடன் கூடைப்பந்து மைதானமெங்கும் ஓடிக் களைத்திருந்தேன் (‘running full-court press’). இப்போது கூடைப்பந்துக்கு பதில் நூலகத்தின் நீண்ட மேஜைக்கும் புஷ்கார்ட் பரிசு 2006ஆம் ஆண்டு பதிப்பின் திறந்திருந்த அறுபத்து ஏழாம் பக்கத்துக்கும் வந்திருந்தேன். பிரையன் டாயில் எழுதிய “யோயாஸ் வோலாடோராஸ்”  . கட்டுரையின் இறுதிப் பகுதியைப் படிக்கும்போதுதான் நான் அழுதேன். அந்தக் கண்ணீர் முழுமையாகவே எதிர்பாராதது. என் வலப்புறம் மடிக்கணினியில் வேலை செய்து கொண்டிருந்தவனிடமிருந்தும் என் இடப்புறம் இருந்த சிறுவனுக்கு பாடமெடுத்துக் கொண்டிருந்த பெண்ணிடமிருந்தும் நான் அழுகையை மறைத்துக் கொண்டேன், லேஸ் அவிழ்க்கப்பட்ட, கணுக்காலைத் தாண்டி உயர்ந்திருந்த என் ஹைடாப்களை நகர்த்திக் கொண்டேன், முட்டிக்குக் கீழ் நீண்ட ஜிம் ஷார்ட்ஸ்களை இழுத்து விட்டுக் கொண்டேன். நான் இருபத்து ஆறு வயது ஆண், என்னை அழ வைப்பதற்கல்ல இலக்கியம்.

நான் எழுதும் அறையின் வாசல் கதவின்மேல் உயரத்தில் என் தாத்தாவின் சிலுவை தொங்கிக் கொண்டிருக்கிறது. பெல்ட் ஒன்றால் செலுத்தப்பட்ட மோட்டாரின் ஆற்றலைப் பயன்படுத்தி என் பெற்றோருக்கு அவர் ட்ரை சிங்க்  செய்து கொடுத்தார். திடுக்கிட்ட இதயம் போல் அந்த மோட்டார் அடிக்கடி துள்ளும். இப்போது அந்த ட்ரை சிங்க் எங்கள் வீட்டு வாசல் அறையில் இருக்கிறது. நான் பதினெட்டு மாத குழந்தையாக இருந்தபோது தாத்தா இறந்தார். ஆனால் நான் இன்னும் அவரைச் சுமந்து கொண்டிருக்கிறேன். நான் அவரது தோல், அவரது ரத்தம், அவர் மகனின் மகன். நாங்கள் இருவரும் வாழ்வைப் பகிர்ந்து கொண்ட குறுகிய காலத்தில், அவர் என் பெற்றோர் வசித்துக் கொண்டிருந்த வீட்டுக்கு ஒரு அறை செய்து தந்தார். ட்ரைவ்வேயில் இருக்கும் உடைந்த மரத்துண்டங்களுடனும் மரத்தூள்களுடனும் நான் நின்று, அவர் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டிருப்பேன். எப்போதும் அவருடன்தான் இருப்பேன் என்பதால் அம்மா வந்து என்னை வீட்டுக்குள் தூக்கிப் போவாள். “அவன் பெரிய பையன் ஆயிட்டான்,” என்று அவர் என்னைப் பற்றிச் சொல்வார், இப்போது அந்தச் சொற்களில் என் அப்பாவின் குரலின் ஏற்ற இறக்கங்களைக் கேட்க முடிகிறது.

நியூ ஜெர்சியில் உள்ள லேக் மோஹாக்கில் என் தாத்தா வீடு கட்டும் தொழில் செய்தார். அவர் ஊர் திரும்பியதும் தனக்கென்று ஒரு வீடு கட்டிக் கொண்டார். அது கட்டி முடிக்கப்படும்வரை அதுவரை செய்து முடித்திருந்த அறைகளில் அவரது குடும்பத்தினர் தங்கியிருந்தனர். அவர் எப்போதும் இரவில்தான், ரெஸ்டாரண்டுகள் மூடப்பட்டபின், கடைகள் கதவடைக்கப்பட்டபின் வேலை செய்வார். அவரது கெட்டித்து போன கைகள் வெளிச்சத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்காக அரை இருளில் ஓர் உலகம் படைத்துக் கொண்டிருக்கும். இப்போதும் என் அப்பா தாத்தாவின் கருவிகளைப் பயன்படுத்துகிறார்: க்ராஸ்-கட் ஸா, ரிப் ஸா, உளி, குத்தூசி. அவற்றின் உலோகம் இன்றளவும் கூர்மையாய் இருக்கிறது.

நான் ஒருமுறைதான் என் அப்பா அழுது பார்த்திருக்கிறேன். அவரது உள்ளங்கைகள் டைனிங் ரூம் டேபிளில் அழுந்தியிருந்தன, என் தாத்தாவின் மறைவுக்குப்பின் அவரது அபார்ட்மெண்ட்டை ஒழிப்பது குறித்து அப்பா பேசிக் கொண்டிருந்தார். நான் அறிந்த அனைவரையும் விட அதிக உடல் பலம் கொண்டவர் அவர், தன் கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொள்கிறார். அப்பா தன் குழந்தைகளில் எவரையும் அழ வைத்ததில்லை.

ஆண்கள் ஏன் அழுகையை அடக்கிக் கொள்கிறார்கள்? எழுத்தாளர்கள் ஏன் தங்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்வதில்லை?

நான் எப்போதும் உணர்ச்சியற்றவனாக இருந்ததில்லை. ஆனால் ஒரு எழுத்தாளனாகவும் வாசகனாகவும் இருந்ததில் பெரும்பாலும் எழுத்தில் உணர்ச்சியைத் தவிர்த்திருக்கிறேன். இதற்கு ஒரு காரணம், ஜான் கார்ட்னரின் “எழுத்துக் கலை”யாக இருக்கலாம் . “பொதுப் பிழைகள்” என்ற அத்தியாயத்தில் அவர், புனைவில் மிகையுணர்ச்சி வெளிப்படுவதை “உத்திப்” பிழை என்று குறிப்பிடுவதில்லை. அவர் அதை “ஆன்ம” குற்றம் என்றே அழைக்கிறார். புனைவுகளில் மெய்யுணர்ச்சியும் மிகையுணர்ச்சியும் வேறு என்று பிரித்துப் பார்க்கிறார் அவர். தக்க அளவில் வெளிப்படும் உணர்ச்சிகளும் உணர்வுகளும் மெய்யானவை. எழுத்தாளன் “பொதுவாக ஏதோ ஒரு வகையில் ஏமாற்றுவதால் அல்லது மிகைப்படுத்துவதால் அடையப்பட்டு, போலித்தனமாய் ஒலிக்கும்” உணர்ச்சி அல்லது உணர்வு மிகையுணர்ச்சி என்கிறார் அவர். நான் கார்ட்னரை சிறிது பிழைவாசிப்பு செய்திருக்கிறேன் என்பது இப்போது தெரிகிறது. “உணர்ச்சி இல்லாத புனைவு எதற்கும் உதவாதது”, என்பதில் அவர் தெளிவாக இருப்பதை நான் உணர்ந்திருக்க வேண்டும். ஆனால் அவர் மிகையுணர்ச்சியை விமரிசித்ததைதான் நான் பெரிதுபடுத்திக் கொண்டிருக்கிறேன், அதை ஒரு மன்னிக்கப்படக்கூடிய குற்றமாய் கருதாமல் பெரும்பாபம் என்று புரிந்து கொண்டிருக்கிறேன்.

கார்ட்னர் ஒரு விமரிசகராக அல்ல, உத்தியைக் கற்றுத் தருபவராக நமக்கு பயன்படுகிறார். ஆனால் இந்த விவாதம் நிகழ்ந்த சூழ்நிலை என்ன என்பதைப் புரிந்து கொள்வது நமக்கு உதவியாக இருக்கும். 1970களின் பிற்பகுதியில் அவர் எழுத்தாளரும் தத்துவவியலாளருமான வில்லியம் ஹெச். காஸ்உடன் தொடர்ந்து சில விவாதங்களை பொது மேடைகளில் நிகழ்த்தினார். இவற்றில் மிகவும் முழுமையான விவாதம், சின்சினாட்டி பல்கலை புனைவுத் திருவிழாவில் அக்டோபர் 24, 1978 அன்று நிகழ்ந்தது. அன்றைய நிகழ்ச்சியில் “பொறி பறக்க வேண்டும்” என்று நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்கள் விரும்பினார்கள் என்கிறார் தாமஸ் லெக்ளேயர். அதைச் செய்யக்கூடியவர்களாக இருந்த ஜான் பார்த்தும் ஜான் ஹாக்ஸ்சும் “பரஸ்பரம் பாராட்டிக் கொண்டார்கள்”. அன்று நிகழ்ந்த விவாதம் போன்ற பல நீண்ட, பசையுள்ள விவாதங்களை கார்ட்னருடன் அவரது கார்பன்டேல் இல்லினாயிஸ் பண்ணை சமையற்கூடத்திலும் வேறு இடங்களிலும் செய்திருப்பதாக காஸ் 2003ஆம் ஆண்டு ஒரு மின்னஞ்சலில் விளக்கம் அளித்தார். இருவரும் தம் “வேறுபாடுகளை” விவாதிக்க விரும்பினார்கள், அது குறித்து “அச்சமோ அச்சுறுத்தலோ” இருக்கவில்லை. கார்ட்னர் :”அற விழுமியங்கள் குறித்து நம்பிக்கை கொண்டவராக” இருந்தார். காஸ், “என் அழகியல் விழுமியங்களில் உறுதியாக இருந்தேன். அவர் மானுடத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் எழுதுவதாகச் சொல்லிக் கொண்டார். எனக்கு அதன் புட்டத்தில் உதைப்பதுதான் திருப்தியாக இருக்கிறது”.

“உயிர்ப்பு” கொண்ட, “அறுபடலற்ற” புனைவெனும் கனவு, என்ற கார்ட்னரின் ஆதர்ச நம்பிக்கையை காஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. அது கல்விப்புலத்தைவிட, உத்தி குறித்த புத்தகத்துக்கு மட்டுமே ஏற்ற சிந்தனை. இதனால்தான் காஸ், அத்தனை நீண்ட, பசையுள்ள விவாதங்களில் ஈடுபட்டார் என்று நினைக்கிறேன்; கார்ட்னருக்கு புனைவில் உள்ள பெருவிருப்பம் தெளிவாகப் புலப்படுவது. அது பிறருக்கும் தொற்றிக் கொள்வது. ஆனால், கலைக்கென்று ஒரு காலம் இருப்பது போலவே கோட்பாட்டுக்கும் ஒரு காலம் உண்டு என்பதை காஸ் உணர்ந்திருந்தார்.

மிகையுணர்ச்சி குறித்து கார்ட்னர் சில முக்கியமான விஷயங்களைச் சொல்லவும் செய்தார். “நிகழ்வுகளே மாபெரும் புனைவுகளில் நம்மை நெகிழச் செய்கின்றன, நிகழ்வுகளைச் சித்தரிக்கும் எழுத்தாளரின் கேவல்களும் ஓலங்களும் அல்ல” என்று பிரகடனம் செய்கிறார். ஆனால் எப்போதும் போலவே இப்போதும் அவர் நிதானப்படுத்திக் கொள்கிறார்: “கதைக்கு முடிவு காணும் இறுதிப் பகுதிகளை மிகவும் வலுவாக அமைத்துவிடக்கூடாது. கதையை அர்த்தமுள்ளதாகச் செய்ய தீவிரமாக முயற்சி செய்வதில், மிகுந்த கவனத்துடன், செயற்கையாக, “பயிலரங்கில் எழுதப்பட்டது போன்ற” உணர்வு ஏற்பட்டு, வாசகர் கவனம் புனைவெனும் கனவிலிருந்து தடுமாறக்கூடும். அதே சமயம், மிகையுணர்ச்சி வந்துவிடக் கூடாது என்றோ எளிய விஷயத்தைச் சொல்வதாக இருக்கக் கூடாது என்றோ மிக நுட்பமாகவும், துணிவில்லாமலும் எழுதிவிடவும் கூடாது- அப்படிச் செய்தால், யாருக்கும், ஆம், விட்டத்தில் சிறகடித்துக் கொண்டிருக்கும் தேவதைகளுக்கும் உன் கதை எதிரொலிக்காது”

கார்ட்னரின் முன்னுதாரணத்தையொட்டி, பிற எவற்றையும் விட, கலவியின் இலக்கிய விவரிப்புகள் உட்பட எல்லாவற்றையும் விட, மிகையுணர்ச்சியை, உயர்வுநவிற்சியுடன்  விவரிக்கப்படும் விசாரத்துடன்/சோகத்துடன்  தொடர்புபடுத்திக் கொண்டிருக்கிறேன். இங்கே தி மில்லியன்ஸில் “A Sentimental Education: Sex and the Literary Writer ” என்ற கட்டுரையை ஜூலியா ஃபியரோ எழுதியிருந்தார். “உணர்ச்சிகள் உட்பட எல்லாவற்றையும்விட நுண்மையே உயர்ந்தது” என்ற நம்பிக்கை “படைப்பிலக்கிய பயிலரங்குகளில்” போதிக்கப்பட்டதை அவர் இங்கு பதிவு செய்கிறார். மிகையுணர்ச்சி குறித்த விமரிசனங்கள், வெளிப்படையாகவும் உட்கிடையாகவும், அவர் ஒரு பெண்ணாய் எழுதுவதன் மீதான விமரிசனங்களாக உள்ளது என்று தொடர்புபடுத்திக் கொள்கிறார்.

Sarah Vap என்ற கவிஞர், மிக அருமையான ஒரு கட்டுரையில் மிகையுணர்ச்சி குறித்த குற்றச்சாட்டுகளும் பெண்களின் எழுத்து குறித்த குற்றச்சாட்டுகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டிருப்பதை விவாதிக்கிறார். Pleiades இதழின் ஒரு பதிப்பில் நிகழ்ந்த கலந்துரையாடலில், “Poetry, Belligerence, and Shame (PDF)” என்ற கட்டுரை வெளியாகியுள்ளது. அந்தப் பதிப்பில் உள்ள கட்டுரைகள் ஜே கட்ஸ்சால் தேர்ந்தெடுக்கப்பட்டவை. கட்ஸ், 2010 ஆண்டு நிகழ்ந்த AWP கான்பரன்சில் மிகையுணர்ச்சி குறித்த ஒரு கலந்துரையாடலில் தலைமை தாங்கியவர்களில் ஒருவர். நவீனத்துவம், “கவிதையின் இதயத்தைக் குளிர்வித்தது;  வாக்குமூலம் அதை உயிர்ப்பித்தது; பின்-அமைப்பியல் அதன் மீது ஒரு பக்கெட் குளிர்நீர் ஊற்றியது” என்று முன்னுரையில் எழுதுகிறார் கட்ஸ்.

குறிப்பிட்ட ஒன்றை மட்டும் வாசகன் உணரும்படி,  அவனை  “செலுத்த” முற்படும் படைப்பு  என்று அவர் மிகையுணர்ச்சி கவிதையை வரையறை செய்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன். மிகையுணர்ச்சி மட்டும் கொண்ட படைப்புகளை அவர் விரும்புவதில்லை என்றாலும், இதயத்தைப் பற்றியிழுக்க முயற்சி செய்யும் கவிதைகளை வெறுக்கும் சிலர் போல் மிகையுணர்ச்சி கொண்ட கவிதைகள் “ஆபத்தானவை” என்று அவர் நினைப்பதில்லை. உணர்ச்சிகளைத் தொட்டெழுப்பும் முயற்சிகளே சிறந்த கவிதைகள் உருவாகக் காரணமாகின்றன என்று அவர் கருதுகிறார். இப்படி ஒரு ரிஸ்க் எடுப்பதற்கு பரிசளிக்க வேண்டுமே தவிர மௌனத்தை நோக்கி மழுங்கடிக்கக் கூடாது என்கிறார் அவர். மிகையுணர்ச்சி குறித்த கவனத்துடன் கவிதை வாசித்து, அத்தகைய தருணங்களைச் சுட்டிக் காட்டுவதை அவர் வெறுக்கிறார்- “ஒரு சில வாழ்வனுபவங்களும் படிப்பினைகளும் சிறுமைப்படுத்தப்படுவதற்கும், சில கலாசாரங்களும் அவை உலகை உணரும் வகைப்பாடுகளும் முக்கியத்துவம் இழப்பதற்கும், ஒரு சில பேசுபொருட்களும் குரல்களும் கவிதை வகைமைகளும் “மிகையுணர்ச்சி” என்ற பதத்துடன் தொடர்புபடுத்தப்பட்டு மலினப்படுத்தப்படுவதற்கும், ஊமையாக்கப்படுவதற்கும், அமைதிப்படுத்தப்படுவதற்கும், மதிப்பிழப்பதற்கும் இப்படிப்பட்ட தணிக்கைக்கும் உள்ள தொடர்பை” அவர் வெறுக்கிறார்.

வாப் சொல்வது உண்மைதான். மிகையுணர்ச்சியின் மிகப்பெரும் குற்றம், “அத்தனையையும் மழுங்கடிக்கச் செய்தல், அத்தனையையும் ஒரு மையத்தை நோக்கி இழுத்துச் செல்லுதல்”- இந்த மையம் இதயத்தை விட்டு வெகு தொலையில் உள்ள இடமாக இருக்கலாம். தன் இலக்கிய நுண்ணுணர்வுகளை கத்தோலிக்க சமயம் கட்டமைத்ததை அவர் உதாரணம் சொல்கிறார்: “என் அத்தனை வழிபாட்டு உணர்வுகளும், ஆனந்தங்களும், தொடர்புறுதல்களும் மிக அதிக சடங்குகள் கொண்ட கத்தோலிக்கம் வாயிலாய் வெளிப்பாடு கண்டன”. ஆனால், அதன் மொழியை அவர் கவிதையில் பயன்படுத்தினால், மிகையுணர்ச்சியுடன் எழுதுகிறார் என்று அடையாளப்படுத்தப்படும் சாத்தியம் இருக்கிறது. மேலும், ஒரு பெண்ணாய், அவர் பேறுகாலம் குறித்தோ தன் குழந்தைகள் குறித்தோ எழுதினாலும், இத்தகைய விமரிசனத்துக்கு ஆளாகலாம். மிகையுணர்ச்சி இலக்கியத்தில் ஒரு குற்றமாக இருக்கலாம், ஆனால் அது பெயர் சுட்டவும் பாலறுக்கவும் உதவும் வழியுமாகிறது.

மேலும் வாசிக்க – http://www.themillions.com/2014/05/reach-the-rafters-on-literary-sentiment.html

ஸ்திதி/ State of Affairs : ந. ஜயபாஸ்கரன் கவிதை சிவசக்தி சரவணன் மொழியாக்கம்

A Translation by Sivasakthi Saravanan

ஸ்திதி
— ந.ஜயபாஸ்கரன்

ஆவணி மூலத்து இரவில்
மணல்பாயும் வையைக் கரையில்
பரியாக வேண்டி வளர்ந்து வரும
கோயில் 
நரி
கம்பி வேலி தப்பி
சோர்ந்து நிற்கும்
காந்திசிலை தாண்டிக் 
கடைமுன் வைத்த
பிளாஸ்ட்டிக் வாளி
அழுக்கு நீரைச்
சீப்பிக் 
குடிக்கும்

பயந்து


******************

State of Affairs
— N.Jayabaskaran

On the night of Avani Moolam
By the banks of Vaigai
with its flowing sands
the temple fox
reared to turn horse
breaks out of the iron fence
and running past
a tired-looking Gandhi statue
slurps dirty water
from the plastic bucket
kept in front of a shop

frightened

******************************

ஆங்கில மொழியாக்கம் – சிவசக்தி சரவணன்

விமரிசனம் என்றால் என்ன? – தன்னையே கேட்டுக் கொள்கிறார் ஏ.ஓ. ஸ்காட்

nonfiction_a-o-_scott_cover_2

கே – விமரிசனத்தின் நோக்கம் என்ன? விமரிசகர்களால் என்ன பிரயோசனம் இருக்கிறது?

ப – இவை பெரிய கேள்விகள்! இருந்தாலும், யாரும் கேட்கக்கூடிய கேள்விகள்தான். ஆனால் இரண்டும் ஒரே கேள்வியல்ல.

கே: ஆனால் விமரிசகர்கள் செய்வதெல்லாம் விமரிசனம்தானே?

ப: நிச்சயமாக, விமரிசகர்கள் செய்வது விமரிசனம்தான். அதே போல், விமரிசனம் செய்பவர்கள் எல்லாரும் விமரிசகர்கள்தான். இப்படிச் சொல்வதில் உள்ள பிரச்சினை இப்போது உங்களுக்குப் புரிகிறது என்று நினைக்கிறேன்.

நாம் இப்போதுதான் பேச ஆரம்பித்திருக்கிறோம், ஆனால் அதற்குள் சொன்னதையே சொல்லத் தொடங்கிவிட்டோம். விமரிசனம் செய்வதைப் பற்றி பேசும்போது, நாம் ஒரு வேலையைப் பேசுகிறோமா?- எழுத்து வகையொன்று, பாண்டித்தியம் அல்லது பத்திரிக்கைத் துறையின் வகையினம், ஏதோ ஒரு அறிவுத்துறை- இதில் வேலை செய்து பிழைப்பவர்கள் விமரிசகர்கள் என்று சொல்லலாமா? அல்லது, விமரிசனத்தைப் பேசும்போது நாம், அந்த அளவுக்கு அதிக நிபுணத்துவம் அல்லாத ஒரு செயல்பாட்டைப் பேசுகிறோமா? விமரிசனம் செய்வது என்பது சீட்டு விளையாடுவது, சமையல் செய்வது அல்லது சைக்கிள் ஓட்டுவது மாதிரி யார் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளக்கூடிய விஷயமா? அல்லது விமரிசிப்பது என்பது அதைவிட அடிப்படையான, அதைவிட தன்னிச்சையான செயலாக இருக்குமா, கனவு காண்பது அல்லது மூச்சு விடுவது அல்லது அழுவது போன்ற விஷயமா?

கே- இங்கு கேள்விகளை நான் கேட்க வேண்டும் என்பதுதான் ஏற்பாடு என்று நினைக்கிறேன்

ப- மன்னித்துக் கொள்.

கே- சரி, மறுபடியும் முதலிலிருந்து துவங்குவோம். உன்னிடமிருந்தே துவங்குவோம். உன் தொழில் விமரிசனம், அது தவிர நீ, விமரிசனம் என்றால் என்ன என்றும், அதன் நோக்கம் என்ன என்றும் அதிகம் சிந்திக்கிறாய்.

ப- நான் செய்வதை இந்த வரிசையில்தான் பேச வேண்டும் என்றில்லை. தவிரவும் இதை மட்டும்தான் செய்கிறேன் என்றும் சொல்ல முடியாது.

கே- சரி. ஆனால் நான் கேட்க வந்தது…

ப- என்னால் என்ன பிரயோசனம்? நான் செய்வதன் நோக்கம் என்ன?

கே- சரி, உன் விருப்பப்படி அப்படியும் கேட்கலாம். ஆனால் நான் இந்த அளவு விரோத பாவனையில் கேட்க மாட்டேன்.

ப- அதெல்லாம் ஒன்றுமில்லை. வில்லியம் பிளேக் சொன்னது போல், எதிர்ப்பே உண்மையான நட்பு. ஒவ்வொரு விமரிசகனும் அவநம்பிக்கை, சந்தேகம், சில சமயம் முழுமையான காழ்ப்பு என்று அத்தனையையும் எதிர்கொள்ளப் பழகிக் கொள்கிறான். உனக்கு என்ன ஒரு துணிச்சல்! யார் உனக்கு இந்த உரிமை கொடுத்தது? நீ சொல்வதை ஏன் நான் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்? இந்தக் கேள்விகள் எல்லாம் எங்களுக்கு வாடிக்கையான விஷயங்கள். எங்கள் தகுதி குறித்து, எங்கள் அறிவு குறித்து, எங்கள் இருப்புக்கான உரிமை குறித்தே கேள்வி எழுப்பத் தூண்டுவது- விமரிசகனாக இருப்பதில் மிகப் பெரிய வேலை இது என்று தோன்றுகிறது.

கேள்வி- சரி, நீ இப்போது அதற்கெல்லாம் பதிலடி கொடுப்பது என்று முடிவு செய்திருக்கிறாய். உன் கருத்துகளின் நியாயத்தைச் சொல்ல விரும்புகிறாய். சாமுவேல் எல் ஜாக்சனுக்கு பதிலடி கொடுப்பதற்காகத்தான் இந்தப் புத்தகத்தில் உள்ளவற்றை எல்லாம்  நீ எழுதினாய் என்று சொல்வது சரியாக இருக்குமா?

பதில்- முழுக்க அப்படி இருக்கும் என்று ஒப்புக் கொள்ள முடியாது. ஆனால் நீ இந்தப் பேச்சை எடுத்தது குறித்து சந்தோஷப்படுகிறேன். இதன் பின்னணி பற்றி கொஞ்சம்: மே 2012ல், அன்றைக்கு The Avengers- நீ அந்தப் படம் பார்த்தாய்தானே? எல்லாரும் பார்த்தார்கள்- அந்தப் படம் வட அமெரிக்கா எங்கும் 3500 இடங்களில் திரையிடப்பட்டது. நான் அந்தப் படத்தில் உள்ள சில விஷயங்களைப் பாராட்டி ஒரு விமரிசனம் எழுதினேன்- புத்திசாலித்தனமான வசனங்கள், கூர்மையான நடிப்பு-, வேறு சில விஷயங்கள் பற்றி குறை சொன்னேன், அதிலும் குறிப்பாக மகத்தான வெற்றி பார்முலா எனும் பீடத்தில் ஒரிஜினாலிட்டியை பலி கொடுத்ததைக் குற்றம் சொன்னேன். நானே என்னை மேற்கோள் காட்டலாம் என்றால்: “தி அவஞ்சர்ஸ்”சின் வெற்றி ரகசியம் இதுதான்- இது விறுவிறுப்பாய் நகரும் ஒரு சிறிய டயலாக் காமெடி. ஆனால் இந்த திரைக்கதை வேறொன்றாக, மார்வலுக்கும் அதன் புதிய ஸ்டூடியோ முதலாளிகள் மற்றும் வால்ட் டிஸ்னி கம்பெனிக்கும் ஒரு மாபெரும் ஏடிஎம் மெஷினாக, மாறுவேஷம் போட்டுக் கொண்டு வந்திருக்கிறது”. இப்போது பார்க்கும்போது இந்த மதிப்பீடு நியாயமாகத்தான் தெரிகிறது, நானே அப்படிச் சொல்லிக் கொள்ளலாம், இல்லையா? அதன்பின் சில ஆண்டுகள் கழித்து “அவஞ்சர்ஸ்- ஏஜ் ஆஃப் அல்ட்ரான் வந்தபோது ஏறத்தாழ எல்லாருமே இதே மாதிரிதான் சொன்னார்கள்- அதன் வசீகரங்களும் திரில்களும் உயிரற்ற கார்ப்பரேட் ஸ்பெக்டகில் ஆனதில் ஒன்றுமில்லாமல் போய் விடுகிறது என்றார்கள். மிகச் சாதாரணமான ஒரு விஷயத்தைச் சுட்டிக் காட்டுபவர்களின் முன்வரிசையில் நானும் ஒருவனாய் இருந்தேன் என்று சொல்லிக் கொள்வதிலும் ஒரு திருப்தி இருக்கத்தான் செய்கிறது.

இருந்தாலும் அந்த சமயத்தில், நான் சொன்னதற்கு அவசரப்பட்டு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் என்னை பாதித்தார்கள். நியூ யார்க் டைம்ஸ் தளத்தில் என் விமரிசனம் பதிப்பிக்கப்பட்டவுடன், அவஞ்சர்ஸ் படத்திலும் மார்வல் யூனிவர்ஸ் பிரான்சைஸ் வெளியீடுகளிலும் நிக் ஃபியூரியாக நடிக்கும் ஜாக்சன், டிவிட்டரில் ஒரு நிலைத்தகவல் பகிர்ந்து கொண்டார்- “ஏ.ஓ. ஸ்காட்டுக்கு வேறொரு புதிய வேலை தேவைப்படுகிறது! அவருக்கு வேலை கிடைக்க உதவுவோம்! அவரால் செய்யக்கூடிய வேலை கிடைக்கட்டும்!” என்று தன்னைத் தொடர்பவர்களைத் தூண்டும் விதமாக எழுதினார். அவரைத் தொடர்பவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் அவரது அழைப்பை ஏற்றனர்- என் எடிட்டர்கள் என்னை வேலையை விட்டு நீக்க வேண்டும் என்று அவர்கள் சொல்லவில்லை. மாறாய், டிவிட்டரின் சிறந்த மரபுகளுக்கு ஏற்ப, நான் என்னைக் கொண்டு என்னவெல்லாம் செய்ய முடியும் என்ற அவர்களது கற்பனையை விரிவாகச் சித்தரித்து  ஜாக்சன் கோபத்தில் சொன்னதை ரீட்வீட் செய்து பரிந்துரைத்தனர். இவற்றில் அர்த்தமுள்ள டிவீட்டுகள் பழகிப்போன, ஏன், கானனிக்கல் என்றும்கூட சொல்லக்கூடிய எதிர்-விமரிசன உணர்வுகளை வெளிப்படுத்தின: எனக்கு சந்தோஷப்படத் தெரியாது; நான் எல்லாருடைய மகிழ்ச்சியையும் கெடுக்கப் பார்க்கிறேன்; நான் வெறுப்பவன், மரபானவன், மேல்தட்டுப் பார்வை கொண்டவன். இதில் எனக்கு மிகப் புதிதாய் இருந்தது- காமிக் புக்ஸ் படிக்கப் பிடிக்காதவனாக இருந்ததால் உயர்நிலைப் பள்ளியில் படித்த காலத்தில் எல்லாரிடமும் உதை வாங்கிய நெர்ட்டாக இருந்த நான் இப்படிப்பட்ட ஒரு ஆளாக இப்போது வளர்ந்திருக்கிறேன் என்பதுதான் (என் காலத்தில் எல்லாரிடமும் அடி வாங்கிய நெர்டுகளில் சிலர் காமிக் புக்ஸ் வாசிப்பவர்களாக இருந்தார்கள். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது என்று நினைக்கிறேன், எல்லாவற்றிலும் சூப்பர் ஹீரோக்களும் ஃபேன்பாய்களும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். நான் அடி வாங்கிய எதற்கும் காமிக் புக்ஸ்கள் காரணமாக இருந்திருக்கவில்லை).

இன்றைக்கு நம் கலாசார வாழ்வின் மாற்ற முடியாத அங்கமாக இருக்கும் அபத்தமான, ஹைப்பர்ஆக்டிவ் இன்டர்நெட் சச்சரவுகளில் ஒன்றாய் அவஞ்சர்ஸ் சம்பவமும் வளர்ந்து வெடித்தது. மேஸ் விண்டு என் வேடத்தைக் கலைத்து விட்டார்! ஜூல்ஸ் வின்ஃபீல்டின் அறச்சீற்றத்துக்கு நான் காரணமாகி விட்டேன்! பொழுதுபோக்கு விஷயங்களை விவாதிக்கும் தளங்களில் ஜாக்சனும் நானும் போட்டோஷாப் செய்யப்பட்ட ஆக்சன் மூவி சண்டைப் போஸ்களில் நின்றோம். மழைக்குப்பின் முளைக்கும் காளான்கள் போல் மினியேச்சர் கருத்துக் கட்டுரைகள் முளைத்தன. நாங்கள் டிவிட்டரில் சண்டை போட்டது பிரேசில், ஜப்பான், ஜெர்மனியில் செய்தியானது. பலமான தாக்குதலுக்கு உள்ளான எனக்கு ஆதரவாகப் பேச  என் சகாக்களில் சிலர் முன்வந்தார்கள்- எந்த வேலையைச் செய்யும் தகுதி எனக்குக் கிடையாது என்று ஜாக்சன் நினைத்தாரோ அந்தப் பொறுப்பின் நேர்மையையும் முக்கியத்துவத்தையும் பாதுகாப்பது தங்கள் கடமை என்று அவர்கள் நினைத்தார்கள்.

 கேள்வி- நீ பயப்படவில்லையா?

பதில் – அதற்கு மாறாய், எனக்கு  நன்றி சொல்ல வேண்டும் போலிருந்தது. என் உயிருக்கோ பிழைப்புக்கோ எந்த ஒரு ஆபத்தும் இருக்கவில்லை. உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனையின் ஒரு பில்லியன் டாலர்கள் என்ற இலக்கை விரைவில் தொட்ட படங்களில் இன்றும் இரண்டாவது இடத்தில் உள்ள படம் தி அவஞ்சர்ஸ். டிவிட்டரில் எனக்கு சில நூறு ஃபாலோயர்கள் கிடைத்தார்கள். குறுகிய ஒரு சில நிமிடங்கள் நான் காரித் துப்பப்பட வேண்டிய வில்லனாகவும் மேன்மையான, மிகவும் வசை பாடப்பட்ட லட்சியத்தின் தியாக பிம்பமாகவும் ஒரே சமயத்தில் இருக்க முடிந்தது. அனைவருக்கும் இது வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு அளித்தது, அதன்பின் எல்லாரும் அடுத்த வேலை பார்க்கப் போய் விட்டார்கள்.

ஆனால் தேநீர்க்கோப்பையில் வீசும் புயலும் வானிலையை பாதிப்பதாக இருக்கக்கூடும். ஜாக்சன் ஒரு முக்கியமான, நியாயமான கேள்வி எழுப்பியிருக்கிறார் என்று நினைக்கிறேன். தி அவஞ்சர்ஸ் பற்றியோ வேறெந்த படத்தைப் பற்றியோ நான் எழுதியதில் உள்ள நியாய அநியாயங்களை ஒருபுறம் விலக்கி வைப்போம்- விமரிசகனின் வேலை என்ன என்றும் அதை ஆக்சுவலாகவே எப்படி செய்ய முடியும் என்றும் கேட்பதில் எப்போதும் ஒரு அர்த்தம் இருக்கிறது.

கேள்வி- ஆக, உன் தொழிலை உணர்ச்சிவசப்படும் திரை நட்சத்திரங்களையும் அவர்களது ரசிகர்களையும் தாக்குதல்களிலிருந்து- விமரிசனத்திலிருந்து- பாதுகாத்துக் கொள்வதற்கான காரணங்களை இதில் நீ எழுதியிருக்கிறாய். இது கொஞ்சம் இரட்டை வேடம் போடுவது போலில்லையா? நீ என்ன வேண்டுமானாலும் சொல்வாய், ஆனால் உன்னைப் பற்றி மற்றவர்கள் சொல்வதை உன்னால் ஏற்றுக் கொள்ள முடியாதா?

பதில் – உண்மையில் அப்படியில்லை. அதாவது, ஆமாம் நாம் யாருடைய படைப்புகளைப் பற்றி எழுதுகிறோமோ அவர்கள், ஏன், நம் வாசகர்கள், நாம் செய்வதில் சிறிது குறை சொல்லும்போது நாம் எல்லாரும் கொஞ்சம் உணர்ச்சிவசப்படத்தான் செய்கிறோம். அது மனித சுபாவம்தான். ஆனால் எனக்கு அதைவிட இதுதான் முக்கியமாக இருக்கிறது- நாம் ஒருவரையொருவர் விமரிசித்துக் கொள்கிறோம் என்பதில் ஒரு பொதுப்பண்பை என்னால் பார்க்க முடிகிறது- மனித இனத்துக்கே பொதுவான சுபாவம் இது என்றுகூட சொல்லுவேன்- நாம் எல்லாரும் குறை கண்டுபிடிக்கிறோம். நாம் போற்றவும் செய்கிறோம். தீர்ப்பும் சொல்கிறோம். இதுதான் விமரிசனத்தின் அடித்தளம். நல்லது கெட்டது, எதைக் கண்டனம் செய்ய வேண்டும், எதை ஊக்குவிக்க வேண்டும், எதைப் பற்றி நம் நண்பர்களிடம் சொல்ல வேண்டும் என்பதை நாம் எப்படி அறிகிறோம், அல்லது இது நமக்குத் தெரியும் என்று நாம் எப்படி நினைத்துக் கொள்கிறோம்? தி அவஞ்சர்ஸ் அல்லது எதுவாகவும் இருக்கட்டும், அதன் வெற்றி தோல்வியை நாம் எப்படி மதிப்பிடுகிறோம்? உண்மையைச் சொன்னால், அது நம் வேலையோ இல்லையோ, நாம் ஒரு முடிவுக்கு வரத்தான் செய்கிறோம். நம்மால் இதைச் செய்யாமல் இருக்க முடியாது.

கேள்வி : சரி, நாம் எப்படி தீர்மானம் செய்கிறோம்? அல்லது, கேள்வி இப்படி இருக்க வேண்டுமோ, “நாம் ஏன் ஒரு தீர்மானத்துக்கு வருகிறோம்?”

பதில் – நிஜமாகவே சொல்கிறேன், நான் இந்தப் புத்தகத்தை எழுத ஆர்மபித்தபோது என் கேள்விகளுக்கான பதில்கள் சுலபமாகக் கிடைக்கும் என்று நினைத்தேன், ஆனால் அப்படியெல்லாம் இல்லை. தெளிவாகவும் ஆணித்தரமாகவும் நான் சொல்லக்கூடிய பதில்கள் இருக்கும் என்று நினைத்தேன். எது அழகாக இருக்கிறது, எது பொருள் பொதிந்ததாக இருக்கிறது, எது சந்தோஷப்படுத்துகிறது என்பதை நான் இதை எழுதும்போது கண்டுகொள்வேன் என்று நினைத்தேன்- ஒரு வேளை மானுட இனத்தின் துவக்கக் காலத்தில் நாம் நம்மை வேட்டையாடும் மிருகங்களைத் தவிர்க்கவும் நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ளவும் நியூரல் சுவிட்சுகள் அல்லது ஹார்மோனல் எதிர்வினைகளை பரிணாம வளர்ச்சியின் போக்கில் வளர்த்துக் கொண்டோம் என்ற முடிவுக்கு வரலாம். அல்லது இதன் மதிப்பு இவ்வளவு என்று பகுத்து உணரவும் தீர்மானங்களுக்கு வரவும் தேவையான உள்ளார்ந்த, காலத்துக்கப்பாற்பட்ட  தர அளவைகள் நமக்குள் இருக்கும்; அவை நூற்றாண்டு கால மாற்றங்களில் உருவம் மாறி இடத்துக்கு இடம் வெவ்வேறு வகைகளில் வெளிப்பட்டாலும், அவை நம்மை உண்மையும் அழகும் நிறைந்த பாதையில் எப்போதும் கொண்டு செல்லும் என்ற முடிவுக்கு வரலாம் என்று நினைத்தேன்.

மனித படைப்பூக்கத்தின் வரலாற்றைப பார்க்கும்போது உன்னால் பாட்டர்ன்களைப் பார்க்க முடிகிறது- வடிவங்கள், ஒலிகள், கதைகள்- அவை மிக ஆழ்ந்த ஒரு தளத்தில் பரம்பரை பரம்பரையாக ஒரு தொடர்ச்சி கொண்டதாய் இருந்து வந்திருப்பதை உணர்த்துகின்றன. மனிதனின் படைப்புகள் எண்ணிறந்த அளவில் பரந்துபட்டிருப்பதை நீ பார்க்க முடியும். அது அத்தனையையும் ஒரு பகுப்பில் அல்லது குறிப்பிட்ட சில அளவைகளுள் தொகுத்துக் கொள்ள முடியாது என்ற முடிவுக்கும் நீ வரலாம். ஒவ்வொரு கலாசாரமும், ஒவ்வொரு வர்க்கமும், ஒவ்வொரு இனக்குழுவும் ஒவ்வொரு நட்புக்குழுவும் வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டமும் தனக்கான கலைகள் மற்றும் புத்தாக்கங்களுக்குப் பொருந்தும் வகையில் தனக்கேயுரிய கானன்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அவர்கள் விட்டுச் சென்ற பொருட்களை நம் நவீன, காஸ்மோபாலிட்டன் கூருணர்வுகள் முகர்ந்து பார்க்கின்றன, வகைமாதிரிகளைத் தேர்ந்தெடுத்து ஒன்றுடன் ஒன்றை ஒப்பிட்டு பகுத்துப் பிரித்து நாம் கண்டறிந்ததை ஏற்றுக் கொள்ளும் இனிய செயலைச் செய்கின்றன. இவற்றுக்கிடையே, புதிய புதிய விஷயங்கள் தோன்றி நம்மைத் தமக்குள் மூழ்கடிக்கின்றன – இந்த வெள்ளம் நம்மை அசைய விடாமல் ஆட்கொண்டு நம்மில் வெறுமை நிறைத்தாலும் இதுவும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. எத்தனை எத்தனை என்று வியக்கிறோம், அல்லது இவ்வளவு இருக்கிறதே என்று கவலைப்படுகிறோம். நம் கவனத்தை அத்தனை அத்தனை விஷயங்களும் கோருகின்றன, நம்மை வசீகரிக்கத்தான் எத்தனை எத்தனை கவனக்குலைவுகள், நம் மேஜை மீதுதான் எத்தனை எத்தனை தரிசனங்கள்- இவற்றிலிருந்து ஏதோ ஒன்றைத் தேர்ந்தெடுப்பதே ஒரு பெரும்பாடு போலிருக்கிறது.

கேள்வி- அந்த வேலை- தேர்ந்தெடுப்பது, வேறுபடுத்திப் பார்ப்பது, மதிப்பிடுவது, புதிய விளக்கம் அளிப்பது- இதைத்தான் நீ விமரிசனம் என்று சொல்கிறாய்.

பதில் – ஆமாம். ஆனால் இது அதைவிட அடிப்படையான, அவசரமான விஷயமும்கூட. இது சிக்கலான விஷயம். சாமுவேல் எல். ஜாக்சன் விஷயத்துக்குப் போகலாம். அவஞ்சர்ஸ் நிகழ்வு முடிந்து ஆறு மாதங்களுக்குப்பின் அவர் ஹப்பிங்டன் போஸ்ட் நேர்முகம் ஒன்றில் எங்கள் டிவிட்டர் சண்டையைப் பேசினார். அதில் விமரிசனம் பற்றி, அதிலும் குறிப்பாக பாபுலர் கலாசாரத்தை விமரிசனம் செய்வது பற்றி, பொதுவாகவே பரவலாகப் பேசப்படும் ஒரு குற்றச்சாட்டை அவரும் சொன்னார். “உலகத்தில் தொண்ணூற்று ஒன்பது சதவிகித மக்கள் சினிமாவை சினிமாவாகதான் பார்க்கிறார்கள்,” என்று சொன்னார் அவர். “அறிவுத்தளத்துக்கு கொண்டு போகக்கூடிய அறிவார்ந்த விவாதத்துக்கு உரியது அல்ல பாபுலர் சினிமா”.  இது வெகு காலமாகச் சொல்லப்படுவது, இது விமரிசனத்துக்கு எதிரான சக்திவாய்ந்த வாதம்- ஒரு சில வகைகளில் பார்த்தால் இதற்கு பதிலே கிடையாது. ஒரு படைப்பை அதன் அளவைகளைக் கொண்டே அணுக வேண்டும், அனுபவிக்க வேண்டுமே தவிர ஆராயக் கூடாது என்பன போன்ற கருத்துகளில் வேரூன்றிய பார்வை இது. ஆனால் இதை ஏற்றுக்கொள்ள மறுப்பதுதான் விமரிசகனின் வேலை. எது ஒன்றையும் அது எப்படி இருக்கிறதோ அப்படி மட்டும்தான் பார்க்க வேண்டும் என்பதை அவன் ஏற்றுக்கொள்ளக் கூடாது, அதை அறிவார்ந்த வகையில் கூர்நோக்க வேண்டும் என்று அவன் வலியுறுத்தியாக வேண்டும்.

 “அறிவுஜீவித்தனம்” என்பது வேண்டுமென்றே அழகற்ற பொருளில் பயன்படுத்தப்படும் சொல், ஒருவரை நோக்கி அச்சொல்லைப் பயன்படுத்துவதே குற்றம் சாட்டும் செயல். ஆனால் உண்மையில் அறிவுஜீவித்தனம் என்பது, “யோசித்துப் பார்” என்பதற்கு இணையான சொல்தான். யோசித்துப் பார்த்து எடுக்கப்பட்ட படம், யோசித்துப் பார்க்கும் சாத்தியங்கள் கொண்டது என்ற இரண்டும் தி அவஞ்சர்ஸ் படத்துக்கு பொருந்தக்கூடும் என்பதை ஏன் இத்தனை தீவிரமாக மறுக்க வேண்டும்? இந்தக் கேள்வியைக் கேட்பதில் அர்த்தம் இருக்கிறது என்று நினைக்கிறேன். ஜாக்சன் உட்பட, அதன் படைப்பாளிகள் தங்கள் அறிவைப் பயன்படுத்தி, அவர்கள் அறிந்தே மேற்கொண்ட சில நோக்கங்களின் காரணமாக உருவான படம் என்ற பொதுப் பார்வையில் தி அவஞ்சர்ஸ் நிச்சயம் ஒரு “அறிவார்ந்த விவரணை”தான். மேலும், அது பிற கேளிக்கை காமிக் புத்தகங்கள் பலவற்றைப் போல், பெரும்பொருட்களைப் பேசுகிறது- கௌரவம், நட்பு, பழிவாங்குதல், சட்டத்துக்கு உட்பட்ட உலகில் தீமை இருப்பதன் சிக்கல், இப்படி பல சொல்லலாம். இந்த வகைமையின் ரசிகர்களும் உயர்நிலைப்பள்ளியில் ஆங்கிலம் பயின்றவர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயம்தான் இது. இறுதியாக, இருபத்து ஒன்றாம் நூற்றாண்டு ஹாலிவுட் தயாரிப்புகளைச் செலுத்தும் உலகளாவிய வணிகத்தின் கட்டளைகளுக்கு எதிராய் விளையாட்டாய் கதைசொல்லும் உந்துதல் முட்டிக்கொள்ளும்போது என்ன நடக்கிறது என்பதை தி அவஞ்சர்ஸ் காட்டுகிறது (என் கோணத்தில் இதுதான் என்னை ஆத்திரப்படுத்துகிறது).

இத்தனையும் சொல்வதானால் தி அவஞ்சர்ஸ் மிகவும் சுவாரசியமான, சிக்கலான படைப்பு என்றும் அதன் வெற்றிகளும் குறைபாடுகளும் சிந்திக்கத்தக்கன என்றும் சொல்வதாகும். ஆனாலும்கூட நல்லது கெட்டது பிரித்துப் பார்த்து, இதற்குரிய பின்புலத்தைக் கண்டு இதன் இடத்தை நிறுவுவதைப் பற்றி யோசித்துப் பார்ப்பதேகூட நாம் முக்கியமான விஷயத்தைத் தவற விடுவதாக அமையலாம். அல்லது, ஜாக்சன் சொல்வது போல், “…if you say something that’s fucked-up about a piece of bullshit pop culture that really is good—‘The Avengers’ is a fucking great movie; Joss [Whedon] did an awesome job—if you don’t get it, then just say, ‘I don’t get it’”, என்று விட்டுவிடலாம்.

ஆனால், தி அவஞ்சர்ஸ் எப்படிப்பட்ட படம் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். குறிப்பாக, அவஞ்சர்ஸ் படத்துக்கு விமரிசிக்கப்படும் தகுதியில்லை (“a piece of bullshit pop culture”)  என்று சொல்லிக்கொண்டே அது விமரிசனத்துக்கு அப்பாற்பட்டது (“a fucking great movie”) என்றும் ஜாக்சன் இரட்டை அளவுகோல்களைப் பிரயோகிப்பதை என்னால் ரசிக்க முடிகிறது. முன்னொரு காலத்தில் திரைப்படங்கள், ரசமற்ற மற்றும் நடுவாந்தர பொழுதுபோக்குகள் குறித்து அறிவுஜீவிகள் மிகச் சுலபமாகக் கொண்டிருந்த யோசனையற்ற எள்ளலை அவர் எதிரொலிக்கிறார். அதே சமயம், மிகவும் புராதானமான, மிகுந்த உயர் விமரிசனப் பார்வையில், கலைப்படைப்பு என்பது களங்கப்படுத்தப்பட முடியாதது, அது தன்னளவிலேயே பூரணமானது என்ற கருத்தையும் அவர் இங்கு பயன்படுத்திக் கொள்கிறார். இப்படிப்பட்ட கருத்துச்சூழலில் ஒரு விமரிசகன், எந்த வகையிலும் அச்சுறுத்தாத, விளையாட்டாகச் செய்யப்பட்ட கேளிக்கையை தீவிரமாக எடுத்துக் கொள்ளும் குற்றம் செய்தவன் ஆகிறான். அல்லது, மிகவும் உன்னதமான ஒன்றை தன்னுடைய அபத்த மட்டத்துக்குக் கீழே தள்ளிய குற்றம் புரிந்தவன் ஆகிறான். எப்படிப் பார்த்தாலும் விமரிசகன் குற்றம் செய்தவன்தான்.

ஆனால் இங்கே இதுதான் முக்கியம்: இதைச் செய்யும் விமரிசகன், தான் அவஞ்சர்ஸ் பார்த்த அனுபவம் பற்றியோ (அல்லது ஒரு நாவல் வாசித்தது பற்றியோ ஓவியத்தை ரசித்தது பற்றியோ இசை கேட்டது பற்றியோ) பேசும்போது, நின்று நிதானித்து யோசிக்கும் யாரையும்விட வித்தியாசமாய் எதுவும் செய்வதில்லை. ஏனென்றால், சிந்திக்கும்போதுதான் விமரிசனம் துவங்குகிறது. நாம் அத்தனை பேரும் அந்தக் குற்றத்தைச் செய்தவர்கள் ஆகிறோம். இல்லையென்றால், ஒரு படைப்பை எதிர்கொள்கையில் நாம் இந்தக் குற்றத்தைச் செய்திருக்க வேண்டும்.

கேள்வி : ஆக, சிந்தனைக்கு ஆதரவாக இப்போது புத்தகம் எழுதியிருக்கிறாயா? உன் வாதம் என்ன? உண்மையில் யாரும் சிந்திக்கக்கூடாது என்று சொல்வதில்லை.

பதில் – சீரியசாகவா சொல்கிறாய்? சிந்தனாவாதத்தை எதிர்ப்பது ஏறத்தாழ நம் குடிமைச் சமயமாகவே ஆகிவிட்டது. “விமரிசனச் சிந்தனை (Critical thinking)” என்பது எங்கும் காணக்கிடைக்கும் கல்விக் கோஷமாக இருக்கலாம்- தெளிவாக வரையறை செய்யப்படாத இந்த ஆற்றலை வளர்பருவத்தில் நம் குழந்தைகள் போகிற போக்கில் எங்காவது கண்டெடுத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்- ஆனால் உலகில் நீ உன் அறிவைப் பயன்படுத்தாமல் இருப்பதற்கான பலன் அபரிதமான அளவில், கைமேல் கிடைக்கிறது.

கலாசார நுகர்வோர்கள் என்ற வகையில் நாம் எதுவும் செய்யாமலிருக்கும் வகையில் ஆற்றுப்படுத்தப்படுகிறோம். அல்லது, எல்லாம் நல்லபடியாக வேலை செய்யும்போது, ஒரு பொய்யான அரைகுறை விழிப்பு நிலை அடையும் வகையில் தூண்டப்பட்டு, ரசிகமனம் என்ற ஒரு தற்காப்புத்தன்மை கொண்ட குழு அடையாளத்தை நோக்கியோ, ஆழமற்ற, அரைகுறை நகைமுரண்தன்மை கொண்ட ‘எல்லாவற்றிலும் நல்லது உண்டு’ என்ற பாவனையை நோக்கியோ செல்ல  ஊக்குவிக்கப்படுகிறோம். இத்தனைக்கும் இடையில், அரசியல் பொதுச்சமூகத்தின் குடிகள் என்ற வகையில் நாமும், வாதத்தின் இடத்தை விதண்டாவாதம் கைப்பற்றிக் கொள்ளும் , கோட்பாடுப் பகைமைகள் நிறைந்த, அதிதீவிர விருப்பு – வெறுப்புச் சூழலில், போராளிகளாக அணிதிரள வேண்டியதாகிறது.

நம்மைத் தொடர்ந்து தாக்கிக் கொண்டே இருக்கும் உணர்வுகளால் தடுமாறுகிறோம், கருத்து வெள்ளத்தில் தத்தளிக்கிறோம் என்ற நிலையில் நமக்கு எதையும் சந்தேகிக்க இடமில்லை, எதையும் யோசிக்க அவகாசமில்லை. இதை விட்டு வெளியேறலாம் என்றெல்லாம் பகல்கனவு காண முடியுமே தவிர அதெல்லாம் நடக்காது. நாமிருக்கும் உலகில் உள்ளபடியே தெளிவாகக் கண்டறிந்து வாழக் கற்றுக் கொண்டாக வேண்டும், வேறு வழியில்லை. ஆனால், இது எளிய விஷயம் அல்ல. கூட்டமாய்ச் சிந்திப்பது, முன்னனுமானங்களில் சரண் புகுவது, அறியாமையில் ஆழ்ந்திருப்பது போன்ற சுகங்களைத் தேடிச் செல்வது இதைப் பார்க்கும்போது மிக எளிது. இந்த  வசீகரங்களை எதிர்த்து நிற்க நமக்கு விழிப்புணர்வும், சுய கட்டுப்பாடும், புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும்  தேவைப்படுகிறது.

கேள்வி- அப்படியானால் நீ எழுதியிருப்பது சோம்பலுக்கும் மடமைக்கும் எதிரான பிரகடனமா?

பதில் – அப்படியும் சொல்லலாம். ஆனால் அப்படி ஒரு எதிர்மறை பொருள் கொள்ள வேண்டிய அவசியமென்ன? இந்தப் புத்தகம் கலையையும் கற்பனையையும் கொண்டாடுகிறது என்றும் மகிழ்ச்சிக்கான நம் உள்ளார்ந்த தேடலை விசாரிக்கிறது என்றும் தேடலுக்கான உந்துசக்தியை நாம் பல்வேறு வகைகளில் நுண்மையாக்கிக் கொள்வதைப் பேசுகிறது என்றும் கொள்ளலாம்.

கேள்வி – இத்தனையும்தான் விமரிசகனின் வேலையா?

பதில் – ஒவ்வொருவரின் வேலையும் இதுதான், இந்த வேலையை நாம் அத்தனை பேரும் செய்ய முடியும் என்றும் நம்புகிறேன். அர்த்தம் காணவும் மகிழ்ச்சியடையவும் எல்லையில்லா தவிப்பு கொண்டவர்கள் நாம், அந்தத் தவிப்பை நிறைவு செய்யும் படைப்புகளை நாம் எப்படி அணுகுகிறோம் என்பதை யோசித்துப் பார்ப்பதில் இந்த முயற்சி துவங்கலாம் என்று சொல்லுவேன். அதே சமயம், இந்த அழகிய, புதிரான விஷயங்களை எதிர்கொள்ளும்போது நாம் அடையும் உணர்வுகளையும் புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லுவேன்.

நாம் கலையை ஒரு அலங்காரப் பொருளாகக் கருதுகிறோம். அது ஏற்கனவே நிறுவப்பட்ட ஒரு குறுகிய பாதை என்றும் அதில் நாம் ஒவ்வொருவரும், தனித்தனியாகவோ ஒத்த மனம் கொண்ட கூட்டத்தினருடனோ, பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்றும் நம்புகிறோம். அல்லது வாழ்க்கையில் நமக்கு மகிழ்ச்சியளிக்கும், படைப்பூக்கம் மிகுந்த கூறுகளை அதைவிட முக்கியமான விஷயங்கள் என்று நாம் நம்புவனவற்றுக்கு அடுத்த நிலையில் இறக்கி வைக்கிறோம். நம் இருப்பின் அழகியல் பரிமாணங்களை நம் மத நம்பிக்கைகள், அரசியல் கோட்பாடுகள், அறச் சார்புகள் போன்ற பெட்டிகளுக்குள் அடைத்து வைக்கிறோம். நாம் கலையை அற்பப்படுத்துகிறோம். அர்த்தமற்ற விஷயங்களை வழிபடுகிறோம். நம் உளறலுக்கு அப்பால் நம்மால் பார்க்க முடிவதில்லை.

எல்லாம் போதும்! நம் உள்ளங்களுக்கு விடுதலை அளிப்பதே கலையின் பணி; விமரிசகனின் கடமை, அந்தச் சுதந்திரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்பதைக் கண்டறிவது. எல்லாரும் விமரிசகர்கள்தான் என்று சொன்னால் நாம் ஒவ்வொருவரும் நம் மனச்சாய்வுகளைக் கடந்து சிந்திக்க முடியும், நம் சந்தேகத்தையும் திறந்த மனத்தையும் சமநிலையில் பேண முடியும், களித்துக் கொழுத்து மொண்ணையாகிப் போன நம் உணர்வுகளைக் கூர் தீட்ட முடியும், நம்மைச் சூழ்ந்திருக்கும் அறிவுத்தள மந்தநிலையை எதிர்த்துப் போராட முடியும்  என்று பொருள்படுகிறது. அல்லது அப்படி புரிந்து கொள்ள வேண்டும். ஆச்சரியமான நம் அறிவுக்கு நாம் வேலை தர வேண்டும். நம் அனுபவங்களுக்கு உரிய மரியாதை அளித்து அதை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

கேள்வி : மிகச் சரி. ஆனால் ஒரு விமரிசகன் இத்தனையும் செய்வது எப்படி?

பதில் – நல்ல கேள்வி!

நன்றி- A. O. SCOTT ASKS HIMSELF: WHAT IS CRITICISM?, A.O. SCOTT, LITHUB http://lithub.com/what-is-criticism/

image credit – https://www.kirkusreviews.com/features/o-scott/