மொழியாக்கம்

மொழிகளை மாற்றிக் கொள்ளுதல் – ஐடன் டாய்ல்

 – ஐடன்  டாய்ல் (Aidan Doyle) – 

ஐடன் டாயல் blog.oup.com என்ற தளத்தில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்

மொழிமரணத்தைப் பற்றியும் மொழியின் புனரமைப்பைப் பற்றியும் பேசும்போது மீண்டும் மீண்டும் இரு மொழிகள் குறிப்பிடப்படுகின்றன- ஐரிஷ் மற்றும் ஹீப்ரூ மொழிகள். ஐரிஷ் மொழி பற்றிய விமரிசனங்களில் கண்டனத்தின் மெல்லிய காட்டம் சேர்ந்து கொள்கிறது. ஆங்கிலத்துக்கு ஆதரவாக அண்மையில்தான் அது ஐரிஷ் மக்களில் பெரும்பாலானோரால் கைவிடப்பட்டது- எனவே தங்கள் பாரம்பரியத்தை நிராகரித்த மக்களுக்கு உதாரணமாக ஐரிஷ் மொழி சுட்டப்படுகிறது. மாறாய், மொழியுணர்வின் நன்னடத்தைக்கு முன்னுதாரணமாய் ஹீப்ரூ மொழி சுட்டப்படுகிறது. அதன் மக்கள் அதை நிராகரிக்கவில்லை என்பது மட்டுமல்ல, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இறந்து கிடந்த மொழி புத்துயிர்ப்பு பெற்று இன்று செழித்துக் கொண்டிருக்கிறது.

இஸ்ரேல் முன்னுதாரணம் காட்டப்படும்போது ஐரிஷ் மக்கள் தங்களைச் சற்றே கையாலாகாதவர்கள் போல் உணர்கின்றனர். “நீங்கள் ஏன் இஸ்ரேலியர்கள் போலிருக்கக் கூடாது?” என்று எங்களை மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள், பிடிவாதக்கார குழந்தையைப் பார்த்து வெறுத்துப்போன பெற்றோர் கேட்பதுபோல். 800 ஆண்டுகால காலனியாதிக்கம் என்று எதையோ முனகியபடி தலையைத் தொங்கப் போட்டுக் கொள்வதுதான் பொதுவாக எங்கள் வழக்கம், அல்லது ஜேம்ஸ் ஜாய்சம் யூடூவும் பாதி ஐரிஷ்காரர்கள் என்று நினைவுபடுத்துகிறோம். இப்போது நான் வேறொரு பதில் அளிக்க முயற்சி செய்யப் போகிறேன்.

வாழ்க்கையைப் போல் மொழியிலும் குறிப்பிட்ட ஒரு நெறி காலாவதியாக நேர்கிறது. இப்படிச் சொல்லும்போது மொழிக்கு நடைமுறைப் பயன்பாடு இல்லை என்று சொல்லவில்லை. முழுமையாய் மொழி சார்ந்து பார்த்தால் எந்த மொழியும் வேறொன்றைவிட கூடுதலாகவோ குறைவாகவோ பயன்பாடு கொண்டதல்ல. லத்தின் மொழி எண்களை எழுதுவது நமக்குச் சிக்கலாக இருப்பது போல் தெரிகிறது, ஆனால் ஐரோப்பாவின் பாதியை வென்ற ஆண்களுக்கும் பெண்களுக்கும் அது போதுமானதாக இருந்தது.

ஐரிஷ் மொழி கற்பிப்பவன், ஐரிஷ் மொழியில் ஆய்வு செய்பவன் என்ற வகையில், ஆங்கிலம் தர்க்கப்பூர்வமான மொழி என்றும் ஐரிஷ் மொழிக்கு பெண்மைத்தன்மை இருக்கிறது என்றும் ஐரிஷ் மொழி ஆங்கிலத்தைவிட ஆன்மீக மொழி என்றும் சந்தேகத்துக்கே இடமில்லை என்பது போன்ற ஒரு அதிகாரபூர்வ தொனியில் சொல்பவர்களிடம் பேசி களைத்து விட்டேன். நாம் வாழும் உலகில் ஆங்கிலம் கணிப்பொறி நிரலிகளின் மொழியாக இருக்கிறது, நம்மில் பலரும் ஐரிஷ் மொழியை நாட்டுப்புறத் திருவிழாக்களில் மட்டும்தான் காணகிறோம், அல்லது அட்லாண்டிக் கடற்கரையின் அழகிய சூழலில் அதை அறிகிறோம் என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் இது வரலாற்றின் விபத்து, மொழிகளுக்கு உள்ளார்ந்த ஒழுங்கு என்று எதுவும் இல்லை, மொழிகள் தன்னிச்சையாய்த் தோன்றும் ஒலிகளின் வரிசைகள்தான்.

அப்படியானால் காலாவதியான நெறி என்று நான் எதைச் சொல்கிறேன்? ஒரு சமூகத்துக்கும் கலாசாரத்துக்கும் தொடர்பின்றி எந்த மொழியும் சுதந்திரமாய் வாழ்வதில்லை. வேறொரு சமூகத்தின் தீவிர அழுத்தத்தை எதிர்கொள்ளும்போது எந்த ஒரு சமூகமும் தன்னை மாற்றிக்கொண்டுதான் தொடர முடியும். இது தொழில்நுட்பத்தை மாற்றிக் கொள்வதாய் இருக்கலாம், அல்லது மதமாற்றத்தை ஏற்றுக் கொள்வதாய் இருக்கலாம், அல்லது தன் மொழியை மாற்றிக் கொள்வதாய் இருக்கலாம்.

அயர்லாந்து விஷயத்தில் பதினெட்டாம் நூற்றாண்டிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் கெயிலிக் மக்கள் அத்தகைய அழுத்தத்தை எதிர்கொண்டனர். ஐரிஷ் மொழி தன்னைப் பேசுபவர்களை மோசம் செய்யவில்லை. ஆனால் ஐரிஷ் மொழிக்குச் சாத்தியப்படாத வாய்ப்புகளை ஆங்கில மொழி அளித்தது, அதனோடு இது போட்டி போட முடியவில்லை. நான் வேலைவாய்ப்பு, சமூக அந்தஸ்து போன்ற லௌகீக நன்மைகளை மட்டும் சொல்லவில்லை. அச்சில் இருக்கும் உலகுக்கு ஒரு வாசலை ஆங்கிலம் திறந்து கொடுத்தது, அதனால் வரும் அத்தனை வாய்ப்புகளுக்கும் வாசல் திறந்தது- கலாசார, அரசியல், இலக்கிய வெளிப்பாடுகளின் புதிய வடிவங்களை ஆங்கிலம் வழி அடைய முடிந்தது. அந்நாளைய ஐரிஷ் மொழியில் இத்தகைய வெளிப்பாட்டு சாத்தியம் இருக்கவில்லை. பெரும் பஞ்சத்துக்குப்பின் புலம் பெயர்ந்த ஐரிஷ் மக்களுக்கு ஆங்கலம் தப்பிச் செல்லும் வழியாகவும் இருந்திருக்கலாம். சிலசமயம், சரித்திரத்தைப் போலவே, மொழியும் ஒரு சுமையாகிறது.

“அது சரி,” என்று நீங்கள் சொல்லலாம், “ஹீப்ரூ மொழியை உயிர்ப்பித்த யூதர்கள் பற்றி என்ன சொல்லப் போகிறாய்? அவர்கள் புதுவகை வெளிப்பாடுகளைத் தேடிப் போகவில்லை. அவர்கள் கடந்த காலத்தின் சங்கிலிகளைக் உடைத்தெறியவில்லை”. உண்மையில், அவர்கள் அதைச் செய்தார்கள். இஸ்ரேலுக்குக் குடிபெயர்ந்தவர்களில் பலரும் யிட்டிஷ் மொழியைத் தாய்மொழியாய் கொண்டவர்கள். அவர்கள் தங்கள் தாய்மொழியை ஹீப்ரூ மொழிக்காக மாற்றிக் கொண்டார்கள். புதிதாய் வந்தவர்களின் அசௌகரியத்தைத் தவிர, இதில் மிகப்பெரிய கலாசார இழப்பும் உணர்வுபூர்வ இழப்பும் இருந்தது.

ஐரோப்பாவில் உள்ள யூதச் சமூகங்கள் பல நூற்றாண்டுகளாய் யிட்டிஷ் மொழி பேசிக் கொண்டிருந்தன. அதற்கென்று செழிப்பான இலக்கியமும் நாட்டார் வழக்கும் உண்டு. அது அத்தனையும் நவீன இஸ்ரேலின் ஹீப்ரூ பேசும் புதிய சமூகத்தில் இழக்கப்பட்டுவிட்டது. ஒரு மொழியைக் கைவிட்டு இன்னொன்றை ஏற்றுக்கொள்ளப் பொருத்தமான காரணங்கள் இருந்தன, அதை நான் கேள்வி கேட்கவில்லை. யிட்டிஷ் மொழியில் இல்லாத புதிய வெளிப்பாடுகள் ஹீப்ரூ மொழியில் உண்டு. கிழக்கு ஐரோப்பாவில் ஒடுக்கப்பட்டு வாழ்ந்த சரித்திரத்தின் எதிர்மறை தொடர்புகள் யிட்டிஷ் மொழிக்கு உண்டு, ஹீப்ரூவுக்கு அது போன்ற வரலாறு கிடையாது. ஆனால் இதில் மிகக்பெரிய இழப்பும் இருந்தது. நோபல் பரிசு பெற்ற ஐசாக் பசெவிஷ் சிங்கரின் எழுத்தை மொழிபெயர்ப்பில்தான் பெரும்பாலான இளம் இஸ்ரேலியர்கள் வாசிக்க முடியும் என்று நினைக்கிறேன். ஐரிஷ் மக்களுக்காவது டபிள்யூ பி யேட்ஸும் ஷாமுஸ் ஹீனியும் மூல மொழியில் வாசிக்கக் கிடைக்கிறார்கள்.

இறுதியில் இதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு மொழியியலாளராக இருந்தாலும்கூட, வாழ்வில் மொழிக்கு அப்பால் ஏராளம் உண்டு என்பதையும் ஒரு மொழியிலிருந்து இன்னொன்றுக்கு நிறைய கொண்டு செல்ல முடியும் எனபதையும் மறக்கக்கூடாது. கடந்த காலத்தின் கேலிக் பாடல்கள் இன்று மகரோனிக் வடிவில் இருக்கின்றன, அல்லது ஆங்கில மொழிபெயர்ப்பில் இருக்கின்றன. மொழிக்கலப்பில் உருவான ஹைபர்னோ இங்கிலீஷ், அதன் உச்சத்தில் அற்புதமான இலக்கியம் படைத்தது. இப்போது அதுவும் அழிவின் விளிம்பில் இருக்கிறது, அதன் இடத்தை புதிய, அமெரிக்கப்படுத்தப்பட்ட க்ளோபல் பேச்சுவழக்கொன்று பிடித்துக் கொள்ளத் துவங்கியிருக்கிறது. மாற்றம் மொழியின் அங்கம்- நீங்கள் அதைத் தழுவலாம், அல்லது எதிர்க்கலாம், ஆனால் தப்பிக்க முடியாது.

நன்றி – blog.oup.com

ஒளிப்பட உதவி – விக்கிப்பீடியா

மினெ மிஜுமூரா – ஆங்கிலத்தின் எழுச்சியும் பிற மொழிகளின் வீழ்ச்சியும் – ஷோ ஸ்பேத் மதிப்பீடு

 – ஷோ ஸ்பேத் மதிப்பீடு (Sho Spaeth) – 

(ஆங்கிலத்தின் காலத்தில் மொழியின் வீழ்ச்சி என்ற மினெ மிஜூமூரா நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பவர்கள் மரி யோஷிஹரா மற்றும் ஜூலியட் வின்டர்ஸ் கார்பெண்டர் (Mari Yoshihara and Juliet Winters Carpenter). இந்த நூல் குறித்து ஃபுல் ஸ்டாப் என்ற தளத்தில் வெளியிடப்பட்ட மதிப்பீட்டின் தமிழாக்கம் இது.)

பெருவாரி வாசகர்களின் இலக்கிய ரசனை குறித்து வீசப்படும் குற்றச்சாட்டுகள் போல் வெகுச் சிலவே என்றும் புதிதாய் இருக்கின்றன. குழந்தைக்கல்வி பிரச்சினை என்று பெரும்பாலும் அடையாளம் காணப்படுகிறது. இன்று புத்தகங்கள் அவற்றைவிட பிரகாசமான வண்ணங்கள் கொண்ட பொழுதுபோக்கு வடிவங்களோடு போட்டி போடும் காலத்தில் இருவகை குறைகள் சொல்லப்படுகின்றன- குழந்தைகள் அதிகம் வாசிப்பதில்லை, அப்படியே அவர்கள் வாசித்தாலும், அவர்கள் நல்ல விஷயங்களைப் படிப்பதில்லை.

இதைக் கேட்கவே அலுப்பாக இருக்கிறது. அ\தைவிட அலுப்பான விஷயம் இது திரும்பத் திரும்ப சொல்லப்படுவதுதான். எனவே சமீபகாலமாக சர்வதேச அளவில் ஆகிருதி கூடிவரும் ஜப்பானிய நாவலாசிரியர் மினெ மிஜூமூரா, இந்தக் குறையை ஆங்கிலத்தின் காலத்தில் மொழியின் வீழ்ச்சி என்ற புத்தகத்தில் மிகப் பிரமாதமான வகையில் சுவாரசியமாக்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கட்டுரை, நினைவுக் குறிப்புகள், புலம்பல் என்று பலவற்றின் கலவையாக இருக்கும் இந்த நூல், இணைய யுகத்தில் ஆங்கில மொழியின் மிகப்பெரும் தாக்கம் குறித்து கவலைப்படுகிறது- இந்தப் போக்கு ஜப்பானுக்கு ஒரு மிகப்பெரிய தேசிய அச்சுறுத்தலாக இருக்கிறது என்று அவர் நம்பக்கூடிய வகையில் எழுதுகிறார். ஜப்பானிய மொழியின் அதிசயிக்கத்தக்க வளர்ச்சியை விவரித்து, அதைப் பாதுகாப்பதன் தேவையை வலியுறுத்தும்போதே அவர் ஜப்பானின் குறுகிய கரைகளைக் கடந்து, நாம் நம் செவ்வியல் படைப்புகளை மறக்கும்போது என்ன நடக்கிறது என்ற உலகளாவிய கவலையை எதிர்கொள்கிறார். .

மொழியின் வீழ்ச்சி, ஜப்பானில் எதிர்பாராத வெற்றி பெற்றது. இது அபுனைவுகளுக்கான பட்டியலில் முதலிடம் பிடிக்க ஒரு பெரிய காரணம் இருக்கிறது- ஜப்பானிய கல்வி அமைப்பைச் சீர்திருத்துவதற்கான மிஜூமூராவின் சில பரிந்துரைகள் ஆவேசமான விவாதங்களுக்கு வித்திட்டன. மிஜூமூராவின் பரிந்துரைகள் குறித்து நிகழ்த்தப்பட்ட எதிர்வினைகளில் சிலவற்றை மொழிபெயர்பபாளர்கள் மரி யோஷிஹரா மற்றும் ஜூலியட் வின்டர்ஸ் கார்பெண்டர் ஆகிய இருவரும் தங்கள் முன்னுரையில் பதிவு செய்திருக்கின்றனர்- அவர் வலதுசாரி சிந்தனையாளர், அரசகுல ஆதரவாளர், அவரது பரிந்துரைகள் பொருத்தமற்றவை, குறிப்பாக அவர் ஒரு பெண்ணாக இருக்கையில் ஜப்பானிய கலாசாரம் குறித்த ஆண்மையப் பார்வையைப் பிரதிபலித்திருக்க வேண்டாம்; அவர் நிச்சயம் ஒரு எலீட்டிஸ்ட்தான். அதிலும் குறிப்பாக புலம் பெயர்ந்து வாழும் எலீட்டிஸ்ட்- தன் இளமைப்பருவத்தின் பல ஆண்டுகள் அமெரிக்காவில் இருந்தவர். மிகக் குறைந்த எண்ணிக்கையிலான எழுத்தாளர்களுக்கே, அதிலும் குறிப்பாக மிகக் குறைந்த அளவு பெண்களுக்கே, சாத்தியப்படக்கூடிய வெற்றிக்குக் காரணமான கல்வி அமைப்பை அவர் குற்றம் கூறுகிறார் என்று குறைப்பட்டுக் கொள்கின்றனர்.

வேறு சிலர் அவரது ரசனையில் குற்றம் காண்கின்றனர்- எந்த அமெரிக்கர்களிடையே வளர்ந்தாரோ, அந்த அமெரிக்கர்களே அவர் மிகக் கேவலமாகக் கருதும் சமகால ஜப்பானிய எழுத்தாளர்களை நேசிக்கின்றனர் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றனர். இந்த புத்தகத்தின் ஒரு நல்ல விஷயம், மிஜூமூரா தன் தரப்பை முன்வைக்கும்போதே இந்த ஒவ்வொரு எதிர்வினையையும் முன்கூட்டியே அவதானித்து அதற்கு பதிலும் அளிக்கிறார். ஆனால் நம் காலத்தில் மேலோங்கியிருக்கும் பார்வையால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயத்தை அவர் தன் கருத்தில் கொள்வதில்லை என்பது நம்மை யோசிக்க வைக்கிறது- நாவல்கள், அவற்றின் நாவலாசிரியர்கள், நம் கேளிக்கைக்காகவே இருக்கின்றனர் என்ற கருத்தை நிராகரிக்கும் அவரது வெகுளித்தன்மை.
புத்தகத்தின் துவக்க பகுதிகில் அவர் விரிவான வாசிப்புள்ள ஒரு ஜப்பானிய நண்பருடன நிகழ்த்திய உரையாடலை விவரிக்கிறார்- சமகால ஜப்பானிய இலக்கியச் சூழல், “குப்பையாய் எழுதும் மூளையில்லாத எழுத்தாளர்களால்” நிறைந்திருக்கிறது என்று தன் நண்பர் சொல்வதை சிரித்துக்கொண்டே வேடிக்கையாய் ஒப்புக் கொள்கிறார்.

“ஒருவேளை நானும் என் நண்பரும் ஜப்பானிய இலக்கியத்தின் நவீன செவ்வியல் ஆக்கங்களைத் தோய்ந்து வாசித்திருந்த ஒரு தலைமுறையைச் சேர்ந்தவர்களாய் இருப்பதால் எங்களுக்கு புதிய எழுத்தை ரசிக்கத் தெரியவில்லை என்பது உண்மையாக இருக்கலாம். அல்லது, புதிய எழுத்தில் பெரும்பாலானவை குறைந்த மதிப்பு கொண்டவை என்பதும் உண்மையாக இருக்கலாம்.

“வெகு காலம் முன்னர், நான் அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்தபோது, ஜப்பானுக்குத் திரும்பி அங்கு ஜப்பானிய மொழியில் நாவல்கள் எழுதத் துவங்கினால் எப்படியிருக்கும் என்று நினைத்த போதெல்லாம் அடர்ந்த ஒரு காடும் அதில் மகோன்னதமாய் உயர்ந்து நிற்கும் மரங்களுமே என் கண் முன் தோன்றின..நான் அவற்றின் நிழலில் அமைதியாகவும் தன்னடக்கத்துடனும் எழுதிக் கொண்டிருப்பேன், ஒரு பெண் எழுதத்தக்க சாதாரண விஷயங்களை, அங்கொன்றும் இங்கொன்றுமாக. ஆண் பெண் சமத்துவம் நேரடி அனுபவமாய் அறிமுகப்பட்ட ஒருவருக்கு இது சோகமான சித்திரம்தான் என்றாலூம் புகுஜாவா யூகிச்சி, ஃபுதபடாய் ஷிமை, நத்சுமே சோசெகி, ,மோரி ஒகாய், கோடா ரோகன், தனிஜாகி ஜூனிசிரோ போன்ற பேராளுமைகளால் என் தேசம் இன்றும் நிறைந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்- அவர்களது அறிவு, போதம், புத்திசாலித்தனம் நம்மை அச்சுறுத்தும் தன்மை கொண்டது.

“மகோன்னதமாய் உயர்ந்த மரங்கள் கொண்ட எந்த அடர்கானகமும் நான் நாடு திரும்பியதும் கண்டடைய முடியாமல் போகலாம் என்ற எண்ணம் ஒரு போதும் எனக்கு எழவேயில்லை. ஆனால் அப்படிதான் நடந்தது. இங்கொரு மரம் அங்கொரு மரம் என்று பார்க்க முடிந்ததே தவிர நான் கண்ட காட்சி தட்டையாகத்தான் இருந்தது. “பெருஞ்சோகப் பாழ்நிலம்” என்பது போன்ற கவித்துவ வர்ணனைகளுக்கும்கூட தகுதியற்ற அந்த வெளி, சிறியதாகவும் ஆரவாரமானதாகவும் இருந்த அனைத்துக்குமான விளையாட்டு மைதானம் போலிருந்தது- வெறும் முதிரா இளமையின் வெளிப்பாடு. நான் யாரை மிகப் பெரிதாய் மதித்தேனோ, அவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதைக்கூட என் சமகாலத்தவர்கள் மறந்து விட்டார்களா என்ற சந்தேகமே எஞ்சி நின்றது.

மிஜூமூராவின் நடை குறித்த அறிமுகமில்லாத வாசகர்களுக்கு இந்த எதிர்மறை மதிப்பீடு அவரது அனிச்சை அவதானிப்புகள், பழக்கங்கள், கருப்பொருட்கள் ஆகியவற்றில் சிலவற்றைச் சற்றே வெளிச்ச்சமிட்டுக் காட்டுகிறது- புறப்பார்வைக்கு தியானம் போன்ற எழுத்து, ஆனால் அதனூடே புத்திசாலித்தனமாய்த் தனது தன்னடக்கம் குறித்து உணர்த்திக் கொள்வது, ஒற்றைப்படையாய் முன்வைக்கப்படும் கறாரான தீர்ப்பு, பட்டாலான கையுறை போன்ற அவரது உரைநடையுள் பொதிந்திருக்கும் இரும்புக்கை குத்து; எல்லாவற்றுக்கும் மேல், நவீன ஜப்பானிய இலக்கியத்தின் தலைசிறந்தவற்றைக் குறிக்கும் பட்டியலிலுள்ள எழுத்தாளர்கள் மீதான கட்டற்ற பெருமதிப்பு.

1868ல், மெய்ஜி சகாப்தம் துவங்கியபோது அதுவரை வெளியுலகிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டிருந்த ஜப்பான் தன் வாசல்களைத் திறந்து கொண்டதும் அதன் எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும், மிஜுமூரா, “மேற்கின் அதிர்ச்சி” என்றழைக்கும் அனுபவத்தை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. அதற்கடுத்த நூறாண்டுகளில் படைக்கப்பட்ட ஆக்கங்களே நவீன ஜப்பானிய இலக்கியத்தின் செவ்வியல் ஆக்கங்களாய் கருதப்படுகின்றன. பலவகைகளில் அந்தக் கானனுக்கும் அதன் கிளாசிக்குகளுக்கும் எழுதப்பட்ட காதல் கடிதமே இந்தப் புத்தகம். மொழிகளின் வளர்ச்சியும் தேசிய இலக்கியங்கள் பற்றியும் எய்யப்படும் அறிமுகம், நவீன ஜப்பானிய கானனின் அருமையையும், அதன் உருவாக்கத்துக்குக் காரணமான அதிர்ஷ்டவச சூழ்நிலையையும் உணர்ந்து கொள்வதற்கான பின்புலமாய் மட்டுமே அளிக்கப்படுகிறது. ஜப்பானிய இலக்கியம் குறித்து அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்பும் வாசகர்களுக்கு இது ஒன்றேகூட விலைமதிப்பற்ற சேவையாக இருக்கிறது.

இந்தக் கானன் மிஜூமூராவுக்கு எதை உணர்த்துகிறது? ஜப்பானிய மக்களுக்கு அடிப்படை முக்கியத்துவம் கொண்டதாய் இருக்கிறது அது ஏன் இருக்கிறது என்று அவர் வாதிடுகிறார்? முராசாகி ஷிகுபுவின் கெஞ்சி கதை துவங்கி பதினொன்றாம் நூற்றாண்டு இலக்கியம் வரை நீண்டு செல்லும் இடையறாத மரபுத் தொடர்ச்சியுடன் இன்றைய ஜப்பானிய இலக்கியத்தை இணைக்கும் [பாலமாய் அது இருக்கிறது. இது குறித்து மிஜூமூரா இவ்வளவு ஆத்திரப்பட வேண்டிய தேவை என்ன? இளம் ஜப்பானிய வாசகர்கள் இந்தச் செவ்வியல் ஆக்கங்களைப் புறக்கணிக்கக் காரணம், அவர்களால் அந்தப் பாலத்தைக் கடக்கவே முடியாது என்பதுதான்- 1946ஆம் ஆண்டின் அரசு ஆணைகள் ஜப்பானிய மொழியின் ஒலிப்பமைப்பை மாற்றிவிட்டன. மேற்கத்திய அனுபவத்துக்கு ஜப்பானிய மொழியனுபவம் எந்த அளவுக்கு மாறுபட்டது என்பதை உணர இதை நினைத்துப் பார்க்கலாம்- வால்டன், அல்லது மொபி-டிக், அவ்வளவு ஏன் 1984 நாவல்கூட, இடைக்கால ஆங்கிலத்தில் எழுதப்பட்டது போலிருந்தால் எப்படி இருக்கும்? எங்கும் ஆங்கிலம் விரவியுள்ள இந்தக் காலத்தில் இந்த அடிப்படை இடர்தான் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்கிறார் மிஜுமூரா, “தன்னைக் காத்துக்கொள்ளாத மொழி அழிந்து போகும். அதன் சொற்கள் புத்தகங்களில் எழுதப்பட்டிருந்தாலும், அந்தப் புத்தகங்கள் வாசிக்கப்படாமல் அழியும்”.

ஒரு நாவலாசிரியராக மிஜூமூராவின் வாழ்க்கை லட்சியமும், அதனுடன் எழுத்து குறித்த அவரது நேசமும் ஆங்கில மொழியின் மேலாதிக்கம் குறித்து ஜப்பானுக்கு வெளியில் உள்ள பரந்த உலகுக்கு அவர் அளிக்கும் எச்சரிக்கைக்கு முக்கியமாக இருக்கின்றன. இந்த எச்சரிக்கை எந்த வடிவில் எழுப்பப்படுகிறது என்பதற்கும் இது முக்கியமாய் இருக்கறது- மிஜுமூராவின் திகைக்க வைக்கும் வாசிப்பும் விரிவான ஆர்வமும் வெளிப்பட்டாலும் மொழியின் வீழ்ச்சி ஆய்வு நூலல்ல, அதை ஒரு நாவலாசிரியரே எழுதியிருக்க முடியும் என்பது வெளிப்படை. அவரது வாதங்கள் நேர்க்கோட்டில் செல்வதில்லை, வட்டமிட்டு முன்னேறுகின்றன. வரலாற்று அல்லது மொழியியல் ஆய்வு என்று நினைக்க முடியாத வகையில் இதில் ஒரு அந்தரங்கத் தன்மை கொண்ட வெளிப்பாட்டை நாம் காண முடிகிறது. மிக கவனமாக இந்தப் புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார் மிஜுமூரா- கறாரான சரித்திர அடிப்படையிலோ மொழியியல் அடிப்படையிலோ முன்வைக்கக்கூடிய விமரிசனங்களைக் கூர் மழுங்கச் செய்யும் தன்மை கொண்ட வகையில் அவர் தன் வாதங்களைக் கதைசொல்லலோடும் வாழ்வனுபவங்களோடும் பிணைத்திருக்கிறார்.

இன்னொரு பக்கம், இதை வாசிப்பதே ஒரு சுகமான அனுபவமாக இருக்கிறது, வரண்ட, இறுதியில் துவளச்செய்யும் கதையாடலாய் அமைந்திருக்க வேண்டிய புத்தகத்தில் அவரது அறிவும் ஆளுமையும் பிரகாசிக்கின்றன. தன் தாய் மொழி எவ்வாறு உருவானது என்ற பின்புலம் குறித்த தன் அறியாமையை மெல்ல மெல்ல விளங்கிக் கொள்வது என்ற சட்டகத்தில் அவர் தன் வாதத்தை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் செல்கிறார்- அவரது வாசகர்கள் தங்கள் குறைகளை ஏற்றுக் கொள்ளவும், தமக்குச் சமபந்தமில்லாமல் தோற்றுவிக்கப்பட்ட மொழியின் நிலை குறித்து தம்மிடம் உள்ள கவனமற்ற பெருமிதத்தையும் பெருமையையும் துவக்கத்தில் மிஜுமூராவிடம் காணப்படும் கவனமற்ற மொழிவெறியில் காணவும், எத்தனை மொழிகளில் எவ்வளவு எழுதப்பட்டிருக்கின்றன, இதில் பெரும்பாலானவை அழிந்தே போகும் பயங்கரத்தின் சாத்தியம் ஏறத்தாழ உறுதியானது என்றும் இது அத்தனை குறித்த வியப்புணர்வுக்குத் தம்மைத் திறந்து வைத்துக் கொள்ளவும் இவரது பார்வை ஒரு மாற்று முகத்தை அளிக்கிறது.

மிஜூமூராவின் எழுத்தில் தொடர்ந்து காணப்படும், ‘விதி வலியது’ என்ற உணர்வை இந்த உறுதிப்பாடு சுட்டுகிறது. எழுதப்படும் ஒவ்வொரு மொழிமீதும் ஆங்கிலம் ஏற்படுத்தும் தொடர்ந்த தாக்குதலை எதிர்கொள்ள எந்த பரிந்துரையும் அவர் செய்வதில்லை, யார் என்ன செய்தாலும், எந்த தேசம் என்ன செய்தாலும் இதன் வேகம் குறையப் போவதில்லை என்கிறார் இவர். ஆனால் இதை மாற்ற முடியாது என்பதற்காக எதுவும் செய்யாமல் இருப்பதற்குச் சமாதானம் சொல்வதில் மிஜுமூரா. மாறாய், தம்மைப் போன்ற நாவலாசிரியர்கள், தம் மொழியில் முட்டாள்தனமாய் இன்னும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர்கள், அறிந்தும் அறியாமலும் மொழிபெயர்ப்பை எதிர்த்துப் போராட வழிகள் காண வேண்டும் என்கிறார் அவர்- தங்கள் கானன்களைப் பாதுகாக்க வேண்டும், தனித்தன்மை கொண்ட தங்கள் தேசிய நூலகங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இந்த நாவலாசிரியர்கள் குறித்து, “எப்போதும் மொழி குறித்துச் சிந்திக்கச் சபிக்கப்பட்டவர்கள்” என்று எழுதுகிறார். இவர்களே, “ஆங்கில மொழியைக் கொண்டு அறியப்படாத பிற ‘உண்மைகளும்’ இந்த உலகில் உண்டு” என்பதைச் சிந்தித்தாக வேண்டும்.

அடிப்படையில் இது மரபார்ந்த ஒரு நிலைப்பாடு. ஆனால் இன்றைய காலம் முன்னோக்கிப் பார்க்கிறது என்பதைத்தான், ஜப்பானிலும் அதற்கு வெளியிலும், அவருக்கு பிற்போக்குவாதி என்ற முத்திரை குத்தப்பட்டிருப்பது காட்டுகிறது. இவர் எழுதுவதில் பெரிதுபடுத்தவும் ஒன்றுமில்லை; உலகெங்கிலும் குழந்தைகள் செவ்வியல் நூல்கள் வாசிப்பதில்லை என்ற அங்கலாய்ப்பு எப்போதும் இருந்தே வந்திருக்கிறது; கடந்த காலத்தை மதிக்காமல் முன்னேற்றம் கிடையாது என்பதும் அதே அளவுக்கு அடிக்கடிச் சொல்லப்பட்டே வந்திருக்கிறது. ஜப்பான் பற்றி மிஜூமூரா முன்வைக்கும் குற்றச்சாட்டு அது ஆங்கில யுகத்தை ஏற்றுக்கொள்வதில் காட்டும் உற்சாகம் குறித்துதான்- நீண்ட வரலாறு கொண்ட ஓர் இலக்கியத்தைச் சிதைத்து அழிக்க விரைகிறது என்பது மட்டுமல்ல, அதன் சாம்பல்களில் அது எழுப்பும் இலக்கியம், அவரது சொற்களில் சொல்வதானால் சாணி.

முடிவாய்ச் சொன்னால், மிஜுமூரா உலகெங்கும் உள்ள எழுத்தாளர்களுக்கு மாற்று வழி ஒன்றை முன்வைக்கிறார்- உலகளாவிய மக்கள் பரப்பை நோக்கிப் பேசுவதல்ல, உன்னதமே மாபெரும் இலக்கியத்தின் நோக்கம் என்று கண்டிக்கிறார். ஷேக்ஸ்பியர் இன்று உலகெங்கும் இன்னும் பரவலாய் அறியப்பட்டிருப்பதால் ரசின் எழுதியதன் சிறப்பு குன்றிவிடவில்லை என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். மேலும் இது பற்றியெல்லாம் பிரெஞ்சு மக்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை என்கிறார், ரசின் மற்றும் அவரது எழுத்தை மறக்காதிருந்தால் போதும். “கலை ஜனநாயகத்தன்மை கொண்டதல்ல, அது உன்னதமானது” என்று மிஜுமூரா அலங்காரங்கள் இல்லாமல் சொல்கிறார், அவர் சொல்வதும் உண்மைதான். தம் மொழியில் எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் எதிர்கொள்ள வேண்டிய ஆபத்து இதுதான்- ஹாரி பாட்டர் நாவல்கள் போன்ற ஒரு உலகளாவிய வாசகப்பரப்பை அவர்கள் அடைய வேண்டுமென்றால் தம் எழுத்தில் உள்ள தனித்தன்மையில் பெரும்பாலானவற்றை அவர்கள் களைந்தே நியூ யார்க்கிலும் லண்டனிலும் உள்ள பதிப்பாளர்களை வசீகரிக்க முடியும். ஒரு தேசத்தின் ஆன்மாவைச் சிறு சிறு துண்டங்களாக வெட்டிச் சிதைத்தே பெரும் செல்வமும் புகழும் பெற முடியும் என்ற ஃபாஸ்டிய பேரம் இது.

இந்த நிலைப்பாடு மிஜுமூராவுக்கு எளிது- அவர் அசாதாரண திறமை கொண்ட எழுத்தாளர், வெற்றி பெற்ற எழுத்தாளர். ஆங்கிலத்தில் எளிதாய் மொழிபெயர்க்கப்படக்கூடிய வகையில் புத்தகம் எழுதுவதில்லை என்ற சமரசமற்ற முடிவை அவர் மேற்கொண்டிருந்தாலும் அவரது நாவல்களில் முதல் நாவல், எ ட்ரூ நாவல், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது- தன்னைவிட மேலானவர்கள் நிழலில் தன்னடக்கத்துடன் உழைத்துக் கொண்டிருக்கும் எளிய ஜப்பானிய பெண்ணல்ல அவர் என்பதையே இது உணர்த்துகிறது. உண்மையில், ஜப்பானில் மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள எழுத்தாளர்கள், தம் முன்னோடியாய் அண்ணாந்து நோக்கக்கூடிய மகோன்னத மரங்களில் ஒருவர் இவர். இந்தப் புத்தகத்தை வாசிப்பதற்கான மிகச் சிறந்த காரணம், இந்த, அல்லது, எந்தத் தலைமுறை எழுத்தாளர்களிலும் சிறந்த ஒருவரின் எழுத்து குறித்த தரிசனத்தை அது அளிக்கிறது என்பதுதன.

ஆங்கிலத்தை தாய்மொழியாய் கொண்டவர்களுக்கு அவர் மிகச் சில பரிந்துரைகளே வைத்திருக்கிறார்- அந்நிய மொழி ஒன்றைக் கற்பது நல்லது என்றும் இன்றும் நாளையும் ஆங்கிலம் மேலாதிக்கம் செலுத்தப்போவது குறித்து தன்னடக்கத்தை வெளிப்படுத்திக் கொள்வது நல்லது என்றும் இறுதியில் மூக்குச் சிந்துவதை வேண்டுமானால் சொல்லலாம்.

ஆனால் செவ்வியல் படைப்புகளை அவர் புகழும்போது ஒரு எச்சரிக்கையும் நினைவூட்டலும் செய்கிறார்– சுயம்பிரகாசம் கொண்ட உள்ளங்களின் வெளிப்பாடுகள் மட்டுமல்ல ஒரு மொழியின் மேன்மை, தன்னுள்ளிருக்கும் திறமைசாலிகள் செயல்படுவதற்கான களனில் ஆயத்தப் பணிகள் செய்து கொடுக்கும் கலாசாரமே ஒரு மொழிக்கு மேன்மையளிக்கிறது, தனக்கு முன் இருந்த மிகச்சிறந்த எழுத்தின் மதிப்பை உணர்ந்து அதை உண்மையாகவே பெறுமதியாய்க் கொண்டாடும் கலாசாரமே மொழியின் மேன்மைக்கு வித்திடுகிறது.

ஆங்கில மொழி இலக்கிய கலாசாரம் பிற மொழியின் தாக்குதலுக்கு ஆளாகவில்லை எனினும், ஒரு பக்கம் அது தம்முள் பொருதிக் கொள்ளும் பிற பொழுதுபோக்கு ஊடக வடிவங்களாலும் மறு பக்கம் இணையம் அனைவருக்குமான சமத்துவ வெளி அளித்திருக்கிறது என்ற பான்கிலாசியப் பார்வையாலும் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. இணையத்தில் வாயிற்காவலர்களுக்கு வேலையில்லை என்று அடிக்கடி சொல்லப்படுகிறது, பொதுஜன ரசனை இனி மேலோங்கி நிற்கும் என்கின்றனர்- தெய்வழக்காகிப் போன வெண்ணை திரளும் படிமமாய் சிறந்தது எழுவது இனியும் உள்ளார்ந்த தனித்தன்மையால் அல்ல, மின்னூல் விற்பனையாலும் வணிக வாய்ப்புகளாலும் என்று சொல்கின்றனர்.

மக்கள் செவ்வியல் படைப்புகளை ரசிப்பதில்லை என்ற குறை நியாயமானதுதான், ஆனால் அவர்கள் வாசிக்காத காரணத்தால் எதுவும் மோசம் போய்விடாது- ஏனெனில், கலையில் வெகுஜனப் பார்வை சில பத்தாண்டுகளைத் தாண்டி நீடிக்கும் ஆற்றல் கொண்டதல்ல; எது முக்கியம் என்றால் ஒரு சிறுபான்மையினர்- தம்மைத் தாமே தேர்ந்தெடுத்துக் கொண்ட சிலர், கலை என்பது உன்னதத்தன்மை கொண்டது என்ற கருத்துக்கு உருவம் அளிப்பதே இலக்கியத் தரம் என்ற அக்கறை தமக்கு இருப்பதாய்ச் சொல்லிக் கொள்பவர்கள்- உண்மையாகவே செவ்வியல் படைப்புகளை அறிந்திருந்து அவற்றை உற்சாகமாய்க் கொண்டாட வேண்டும். இதுதான் முக்கியம்.

எந்த ஒரு தலைமுறையிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரே அதற்கான திறமை கொண்டவர்களாகவும், படைக்கப்பட்ட அனைத்தைக் காட்டிலும் உயர்ந்து எழுந்து நிற்கக்கூடிய மகோன்னதமான மரங்களாய் இருக்கும் விருப்பம் உள்ளவர்களாவுகம் இருக்க முடியும் என்றாலும், ஏராளமான இடம் மண்ணில் இருக்கிறது. எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கவும் திருத்திக் கொண்டிருக்கவும் வேலை இருந்து கொண்டே இருக்கிறது.

நன்றி – Full Stop

ஒளிப்பட உதவி – Monkfish Jowls

சீனாவும் உலகும் – அசாதாரண தனித்துவத்துக்கு அப்பால் – கெர்ரி ப்ரௌன்

– கெர்ரி ப்ரௌன் (Kerry Brown) – 

ஓப்பன் டெமாக்ரசி என்ற தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்

சீன அரசியல்வாதிகள் சீனாவின் மரபார்ந்த கலாசார மகத்துவத்தைச் சுட்டிக்காட்டி உரையாற்றுவதைச் சமீப காலமாக அடிக்கடி பார்க்க முடிகிறது. நவீன சீனாவின் விளம்பரமாகவும் அதற்கு உலகளாவிய சக்தியாக விளங்கும் தகுதி இருக்கிறது என்று நிறுவவும் அதன் கலாசாரத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் இவர்கள்.

அதிலும் குறிப்பாக, இன்aறைய தலைமுறையைச் சேர்ந்த இரு தலைமை கோட்பாட்டியலாளர்கள்- சீன பிரதமர் சி ஜின்பிங்கும் சீன அரசின் பிரச்சார தலைவர் லியு யுன்ஷானும் பண்டைக்கால கவிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் பற்றிய குறிப்புகளை மிக அதிக அளவில் கையாண்டு உரையாற்றுகின்றனர். ஏதோ ஒரு வகையில் தாமும் இந்த “மாபெரும் மரபின்” சந்ததியினர் என்று தம்மை முன்னிறுத்திக் கொள்ளத் தயங்குவதில்லை. வெளியுலகம் தம் மரபை இன்னும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றனர்- கன்பூஷியஸ் இன்ஸ்டிட்யூட் போன்ற நிறுவனங்களைக் கொண்டு இந்த மரபை உலகெங்கும் எடுத்துச் செல்லவும் தம் ஆற்றல்களைச் சீன அரசியல்வாதிகள் செலவிடுகின்றனர்.

தன்னைப் புரட்சிகரமானதாகக் காட்டிக்கொள்ளும் கட்சியொன்று சீன கலாசாரத்தின் சாரம் என்று ஓரளவு மரபார்ந்ததாய் உள்ள பார்வையை விளம்பரப்படுத்திக் கொள்வது நவீன சீனாவின் பெரும் முரண்களில் ஒன்றாக இருக்கலாம். ஆனால் சீனாவின் பெருந்தலைவர்கள் சீன கலாசாரம், அதன் முக்கியத்துவம், பொருள் என்று அத்தனை வலியுறுத்திய பின்னும் ஒரு கேள்வி நம்முன் நிற்கிறது- அவர்கள் எதைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்? வழக்கப்படியான கன்பூசியஸ் சிலைகள், அவர் பற்றிய உரைகள் போன்றவற்றில் ஓரளவுதான் அர்த்தம் இருக்கிறது. உண்மையில், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை கொண்ட அதன் எழுத்துப்பிரதிகளின் பெருந்தொகையே சீன இலக்கியத்தின் தனித்துவ இயல்பை உணர்த்துவதாய் இருக்கிறது. இன்றும் சீனாவின் சிந்தனையை நெறிப்படுத்தும் கூட்டு வரலாற்று நினைவை விரிவான அளவில் புரிந்து கொள்ளும் வாய்ப்பை அதன் தொல் இலக்கிய மரபே நமக்கு அளிக்கிறது.

சீனா தன் “சிறப்பு” என்று சொல்லிக் கொள்ளும்போது, அதன் கலாசார மரபுக்கு வெளியே இருப்பவர்கள் அத்தகைய பெருமிதங்களை எவ்வாறு அணுக வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. நம் கலாசாரத்துக்கு என்று சில மதிப்பீடுகளும் விமரிசன அளவைகளும் வைத்துக்கொண்டு, சீனாவை அணுகும்போது அவற்றையே வேறு விதமாகக் கையாள்வதுமான இரட்டைப் பார்வை கொள்ளக்கூடிய அபாயம்கூட இருக்கிறது.

ஆனால் இதுபோன்ற ஒரு முரண்பாடு சீனாவின் உள்ளும் வெளியேயும் பலரிடம் காணப்படுகிறது- சீனா மெய்யாலுமே “மாறுபட்டதுதான்” என்று சொல்வதில் அவர்களுக்கு அலுப்பதேயில்லை. எனவே அதைப் புரிந்து கொள்ள முழுக்க முழுக்க வேறு தனி கருவிகள் வேண்டும் என்று சொல்கிறார்கள். இப்போது சீனாவின் மரபார்ந்த கலாசாரத்தின் புகழ் பாடும் பீஜிங் அரசியல்வாதிகளுக்கு இது போன்ற அணுகுமுறை மிகவும் உசிதமாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். சீனா “மற்றவர்கள் போலில்லை” என்று அவர்கள் இப்போது அதிக அளவில் சொல்லிக் கொள்கிறார்கள், சீனாவின் சட்ட அமைப்பு, விழுமியங்கள் குறித்து விமரிசனம் செய்யும்போதும், அதன் நிர்வாக அமைப்பு நிலைக்கக்கூடிய சாத்தியம் பற்றியும் கேள்வி எழுப்பும் அந்நியர்களைப் புறம்தள்ளவும், சீனாவின் “அசாதாரண தனித்துவம்” என்ற வாதம் உதவுகிறது. “எங்களை எங்கள் மதிப்பீடுகளின்படி புரிந்து கொள்ளுங்கள், உங்கள் மதிப்பீடுகளை எங்கள் மேல் திணிக்க வேண்டாம்” என்பது அவர்களது பதிலாய் இருக்கிறது.

தனி உலகம்

இப்படி தனி மகத்துவம் கொண்டாடுவது அதற்கேயுரிய ஆபத்துகள் கொண்டிருப்பது தெளிவு. இதற்கேற்றச் சிறந்த முறிமருந்து ஓர் ஆளுமையிடம் உண்டு- இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள் அனைவரையும்விட இவர் “மரபார்ந்த ஐரோப்பிய” மற்றும் “மரபார்ந்த சீன” கலாசாரங்களில் ஆழ்ந்த புலமை கொண்டிருந்தார்- சியான் ஜோங்ஷு (Qian Zhongshu).

1998ல், தன் 88ஆம் வயதில் மறைந்த சியான் ஜோங்ஷு (1949க்கு சற்று முன்னர்), நவீன சீன இலக்கியத்தின் மிக முக்கியமான நாவலை எழுதினார்- Cities Besieged. ஆனால் அவர் எழுதியதில் மிக ஆழமான படைப்பு அவரது சிறு கட்டுரைகள் கொண்ட பெருந்தொகுப்பு: அதை அவரால் 1979ல் கலாசார புரட்சி முடிவுக்கு வந்தபின்தான் பதிப்பிக்க முடிந்தது. 1990களின் பிற்பகுதியில் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு, Limited Views: Essays on Ideas and Letters என்ற தலைப்பில் பதிப்பிக்கப்பட்டது.

சியான் பல மொழிகளைத் தேர்ந்தவர் என்று சாதாரணமாகச் சொல்லிவிட முடியாது. அவர் தன் தாய் மொழி சீனத்துக்கு அப்பால் – ஆங்கிலம், ஸ்பானிஷ், லத்தீன், ஜெர்மன், பிரெஞ்சு மொழிகளை – விரிவாகவும் ஆழமாகவும் வாசித்திருந்தவர். அவரது கட்டுரைகள் இதற்குச் சான்றாக இருக்கின்றன- ஹென்றி பீல்டிங் முதல் கிறிஸ்தோபர் மார்லோ, கத்தே, ஜூசெப்பெ உங்கரெட்டி என்று பலரையும் ஏராளமாக மேற்கோள் காட்டுகிறார். அதே சமயம் சீன எழுத்தாளர்களையும் அவர்களது காலகட்டம் கடந்து தொடுகிறார்- ஆவணப்படுத்தப்பட்ட கவிஞர்களில் முதலான்வரான சி யான் முதல் அமானுடத்தைக் கவிதையில் எழுதிய ஹான் வம்ச கவிஞர் ருவான் ஜி, தன் தலைமுறையைச் சேர்ந்த லின் யுசேங் என்று அனைவரையும் மேற்கோள் காட்டுகிறார். எனினும் இவர் தன் மேதைமையை வெளிப்படுத்திக் கொள்வதில் அலங்காரமோ ஆடம்பரமோ சிறிதும் இல்லை. இவரது கட்டுரைகளில் நம் கருத்தைக் கவரும் விஷயம் இதுதான்- தனித்துவமிக்க கலாசார மரபுகள் தம் வேறுபாடுகளை இழக்காதபோதும் ஆழமான ஒற்றுமை கொண்டிருத்தலுக்கான இணைபுள்ளிகளை சியான் அடுத்தடுத்த கட்டுரைகளில் தொடர்ந்து சொல்லிச் செல்கிறார்.

இதற்கு ஒரு சிறந்த உதாரணம், “உயரத்தின் துயரம்” என்ற கட்டுரையில் காண முடிகிறது. இதில் சியான் டாங் மற்றும் சாங் வம்ச அரசர்களின் காலத்தில் வாழ்ந்த கவிஞர்கள் மலைச்சிகரம் ஒன்றை அடையும்போது உணர்ந்து வெளிப்படுத்தும் சோக உணர்வை எழுதுகிறார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம், அவர் இதே உணர்வை பீல்டிங்கின் பதினெட்டாம் நூற்றாண்டு நாவலான டாம் ஜோன்ஸிலும் காண்கிறார். சீன செவ்வியல் நூல்களுக்கும் மேற்கத்திய செவ்வியல் நூல்களுக்கும் பொதுவான உணர்வுகளின் இலக்கணத்தை அவரால் அடையாளம் கண்டு வடிவமைக்க முடிகிறது. இவ்வாறு சோகம், ஆனந்தம், உணர்வுச் சிதைவு முதலான சிக்கலான பல உணர்வு நிலைகளை அடுத்தடுத்த கட்டுரைகளில் எழுதி இதைச் செய்கிறார். இதன் ஒட்டுமொத்த விளைவு நம் மீது மிகுந்த தாக்கம் ஏற்படுத்துவதாக இருக்கிறது.

கலாசார புரட்சி நிகழ்ந்த காலகட்டத்தில் சியான் இந்தக் கட்டுரைகளில் பெரும்பாலானவற்றை எழுதினார். தாம் இருவரும் சிந்தனையாளர்களைச் சீர்த்திருத்தும் நோக்கத்தில் அப்போது அமைக்கப்பட்டிருந்த உழைப்பு முகாம்கள் ஒன்றின் காண்டீனில் பரிமாறுபவர்களாகப் பணியாற்றும் நிலைக்குத் தள்ளி அவமானப்பட்ட காலத்தில் இந்தக் கட்டுரைகளை அவர் எழுதினார் என்ற சாட்சியம் அவரது மனைவி யாங் ஜியாங்கால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அந்த நாட்களில் அவர்களது மருமகன் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஆனால் இந்தக் கட்டுரைத் தொகுப்பில் எங்கும் இந்த நிகழ்வுகள் குறித்து தனிப்பட்ட வகையில் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. மிகத் தேர்ந்த வாசிப்பு உள்ளவரும் பல்வேறு சிந்தனை மரபுகளில் அறிமுகம் உள்ளவருமாகிய ஒருவரின் சாட்சியமாகவே அனைத்தும் எழுதப்பட்டிருக்கின்றன. இதில் ஒரு அதிசயம், இந்தக் கட்டுரைகளில் எந்த அரசியலும் இல்லை, அவர் யாரையும் கண்டிப்பதில்லை, யாரையும் குற்றம் சாட்டுவதில்லை. இந்த ஒரு காரணத்துக்காகவே, காலத்தையும் எல்லைகளையும் கடந்த மானுடத்தன்மைக்கு இது ஒரு மகோன்னதமான நினைவுச் சின்னம் என்று சொல்லலாம், எந்த ஒரு தேசமும் பிறரைக் காட்டிலும் தன்னை ஏதோ ஒரு வகையில் தனியாகப் பிரித்துக் காட்டிக் கொள்வதை இந்நூல் முழுமையாய் நிராகரிக்கிறது.

சியானின் இந்த மிகச்சிறந்த நூலை வாசிப்பதால் ஆர்வமுள்ள வாசகர்கள் ஒவ்வொருவரும் பயனடைவார்கள். கூடுதலாக, சீன பண்பாட்டு மரபின் விரிவான கானனை நாம் எவ்வாறு அணுக வேண்டும் என்ற கேள்விக்கும் இங்கு இடமிருக்கிறது. இந்த மரபைத் தங்கள் நோக்கங்களுக்காக மிகுந்த ஆற்றலுடனும் சாமர்த்தியமாகவும் பீஜிங்கின் அரசியல் தலைவர்களும் அவர்களது இரவலர்களும் பயன்படுத்திக் கொள்ளும் காலத்தில் இதன் அவசியம் இன்னும் முக்கியமாய் இருக்கிறது.

சியான் ஜோங்ஷூவின் எழுத்துகள் இறுதியில் நம் அனைவருக்கும் பொதுவான மானுட விழுமியங்களுக்கு அத்தாட்சியாகவே இருக்கின்றன. சீனத்துக்கு அல்லது ஆசியாவுக்கு அல்லது ஐரோப்பாவுக்கு உரியது என்ற விவரித்து இதைக் குறுக்க முடியாது. அவ்வளவு குரூரமான சூழலில் இந்தப் படைப்பு உருவம் பெற்றது என்பது திகைக்க வைக்கும் விஷயம். பாண்டித்தியத்துக்கும் மானுடம் மீதான நம்பிக்கைக்கும் சாட்சியம் சொல்லும் நாயகத்தன்மை கொண்ட எழுத்து இது. எந்த ஒரு கலாசாரமும் இதைக் கொண்டாடுவதில் பெருமை கொள்ள முடியும். இருபதாம் நூற்றாண்டு சீனா இவ்வளவு அற்புதமான குரலைப் படைத்திருக்கிறது என்பதில் நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டும்- சியானின் அசாதார்ண படைப்பை நம்மாலும் படிக்க முடிகிறது, அதில் திளைக்க முடிகிறது, கற்றுக்கொள்ள முடிகிறது என்பது நம் அனைவருக்கும் பெருமையே. இதைச் செய்யும்போது நாம் சீனாவை மட்டும் புரிந்து கொள்வதில்லை, நம்மையும் அறிந்து கொள்கிறோம், நம் கலாசாரத்தையும் புரிந்து கொள்கிறோம், நம் அனைவருக்கும் பொதுவான உலகையும் அறிந்து கொள்கிறோம்.

நன்றி – Open Democracy

ஒளிப்பட உதவி – விக்கிப்பீடியா

நான் நல்ல பெண்ணாக இருக்கவில்லை – கில்லியன் ப்ளின்

-கில்லியன் ப்ளின்  (Gillian Flynn)- 

நான் நல்ல பெண்ணாக இருக்கவில்லை. வெயில்காலத்தில் எனக்குப் பிடித்த பொழுதுபோக்கு, எறும்புகளைத் தாக்கி அவற்றைச் சிலந்திகளுக்குத் தின்னக் கொடுப்பதுதான். “கெட்ட அத்தை ரோஸி” என்ற விளையாட்டுதான் வீட்டில் பொழுதுபோக்க உதவியது- அதில் நான் என் கசின்களைப் பார்த்துக் கொள்பவள், ஆனால் சூனியக்காரி, அவர்கள் என்னிடமிருந்து தப்பியோட வேண்டும்.

எண்பதுகளில் சிறு பெண்கள் பலரும் பிளாஸ்டிக்கில் ஒரு பிங்க் கலர் பொம்மை போன் வைத்திருப்பார்கள் (அழகான பெண்களுக்கு போன் பேசுவது என்றால் ரொம்ப பிடிக்கும்), அது எங்களுக்கு மிகவும் அடிப்படையான விளையாட்டுப் பொருளாய் இருந்தது- அவர்கள் உதவிக்கு ஆள் அழைக்கும்போது எப்போதும் அவர்களிடமிருந்து அதைப் பிடுங்கி விடுவேன்.

எதுவும் செய்யாமல் சும்மா இருக்கும்போது பொதுவில் தெளிவாகத் தெரியாத கேபிள் சானல்களில் ஒலிபரப்பப்படும் சாப்ட் கோர் போர்ன்களைப் பார்த்துக் கொண்டிருப்பேன் (முலைகள், பிருஷ்ட பாகங்கள், ஸ்டாட்டிக், ஸ்டாட்டிக், முலைகள்!). என் பொம்மைகளில் எதுவாவது பிடிவாதம் பிடிக்க ஆரமபித்தால், அவளது முடியை வெட்டிவிடுவேன்.

இங்கு நான் சொல்ல வருவது இதுதான்- நான் ஒன்றும் வித்தியாசமாய் இருந்த குழந்தையல்ல (ஆனால் இதை எல்லாம் காகிதத்தில் படித்துப் பார்க்கும்போது கவலையாய்தான் இருக்கிறது). நான் கெட்ட பெண்ணும் அல்ல (இங்குதான் என் மீது மிகுந்த பாசம் வைத்துள்ள என் பெற்றோருக்காக இதைச் சொல்ல வேண்டும் – அந்த காலத்து கான்சாஸ் நகரில் நான் அதிசயமும் சந்தோஷமுமான ஆண்டுகள் பல வாழ்ந்திருக்கிறேன்). ஆனால் சிறுவயதினர் வளரும்போது சில சாகசங்கள் செய்ய வேண்டுமே- வசதியில்லாத இடத்தில் தங்கியிருப்பது, வயசுக்கு மீறிய பாலுணர்வு அனுபவங்கள், அதிகார விளையாட்டின் முதல் மலர்ச்சி, இதெல்லாம் பல பெண்களின் வாய்மொழிக் கதைகளிலும் இடம் பெறுவதில்லை.

குழந்தைமையின் ஆத்திரம், முதிரா வயதில் படுதோல்வியடையச் செய்த பால்விழைவு போன்றவற்றின் பீறிட்டுக் கிளம்பும் வினோத வெடிப்புகள் பற்றி ஆண்கள் ஆனந்தமாய் பேசுகிறார்கள். பாலுணர்வையும் வன்முறையையும் பேச அவர்களுக்கு சொற்கள் இருக்கின்றன, பெண்களுக்கு அப்படி எதுவும் இல்லை. வளர்ந்த பின்னும்கூட சுய இன்பம் பற்றியோ கலவியின் உச்சம் பற்றியோ எந்தப் பெண்ணும் நிஜமான சந்தோஷத்துடன் பேசியதாய் நினைவில்லை. செக்ஸ் அண்ட் தி சிட்டிதான் அதன் கொஞ்சலான புத்திசாலித்தன சொற்றொடர்களை முன்அனுமதி அளிக்கப்பட்ட வகையில் பொட்டலம் கட்டி அறிமுகப்படுத்தியது.

இப்போதும் நாம் நம் வன்முறையை விவாதிப்பதில்லை. தங்கள் குழந்தைகளைத் தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்ற சூசன் ஸ்மித் அல்லது ஆண்டிரியா யேட்ஸ் பற்றிய செய்திகளை ஆசை தீரத் தெரிந்து கொள்கிறோம், ஆனால் இந்தக் கதைகள் நயமாகச் சொல்லப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். பிரசவத்துக்குப் பின் ஏற்படும் மன அழுத்தம் பற்றி இறுக்கமான குரலில் தனியாய்ச் சொல்லப்பட வேண்டும் என்றும், அவளை அப்படிச் செய்ய வைத்தான் அவன் என்றும் கதை கேட்க விரும்புகிறோம்.

ஆனால் இதிலெல்லாம் அலட்சியப்படுத்தப்படும் ஒத்திசைவு ஒன்று உண்டு. கொலைகாரத் தாய்மார்களைப் பற்றியும் தொலைந்து போன சிறுமிகளைப் பற்றியும் பெண்கள் வாசிக்க விரும்புவதன் காரணம் பெண்ணின் வன்முறையை அந்தரங்க தளத்தில் பேசுவதற்கு மைய ஊடகத்தில் நமக்கிருக்கும் ஒரே வாய்ப்பு இவையாகவே இருக்கின்றன என்பதுதான் என்று நினைக்கிறேன்.

பெண்ணின் வன்முறை என்பது குறிப்பிட்ட தனித்தன்மை கொண்ட சீற்றம். அது எல்லைகளை மதிப்பதில்லை. பெண்களுக்குள் நடக்கும் சண்டை என்பது எல்லாம் பற்கள், தலைமுடி, எச்சில், நகங்கள் என்று நடக்கிறது- இரு ஆண்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொள்வதைவிட இரு பெண்கள் இப்படி சண்டை போட்டுக் கொள்வதைப் பார்க்க பயங்கரமாக இருக்கிறது. அதிலும் மனதளவில் நிகழ்த்தப்படும் வன்முறை மிகக் கொடூரமானது. பெண்கள் பின்னிப் பிணைகின்றனர்.

நான் பார்த்த உறவுகளில் மனதை மிகவும் துன்புறுத்துவதும், நோய்மை கொண்டதாகவும் இருந்த உறவுகள் நீண்டகால தோழியர் சிலரிடையே இருந்த உறவே- இன்னும் குறிப்பாக தாய்- மகள் உறவைச் சொல்லலாம். வம்புப் பேச்சு, திரித்தல், ஊக்குவிப்பது போல் நாடகமாடுதல், உறவை முறித்துக் கொண்டு தண்டித்தல், பாலுணர்வு காரணமான பொறமை- பெண்கள் சண்டை போட்டுக் கொள்வதைப் பார்ப்பது என்பது பல்லாண்டு காலம் நிகழும் படுபயங்கர ஊர்வலத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்றது.

வன்முறைச் சுழலில் சிக்கிக்கொண்ட இரக்கமற்ற ஆண்களை தலைமுறை தலைமுறையாய் பேசும் கதைகளால் நூலகங்கள் நிறைந்திருக்கின்றன. பெண்களின் வன்முறையை நான் எழுத விரும்பினேன்.

எனவே அப்படி எழுதவும் செய்தேன். இருண்மையான, மிக இருண்மையான ஒரு புத்தகம் எழுதினேன். அதன் நாயகி, கதைசொல்லி, அதிகம் குடிக்கிறாள், அதிகம் கலவியில் ஈடுபடுகிறாள், வெகு காலமாய் வார்த்தைகளைக் கத்தரித்துத் தன்னைக் குத்திக் கொள்கிறாள். விஷம் என்பதற்கு இலக்கணமாக இருக்கும் அம்மா, போதை மருந்துகள், பாலுறவு, அதிகாரம் முதலானவற்றின் பண்டமாற்று வர்த்தகத்தில் தேர்ந்த பயிற்சியுள்ள பதின்மூன்று வயதான ஒன்றுவிட்ட சகோதரி. அமைதியற்ற அந்தச் சிற்றூரில் இரு சிறுமிகள் கொலை செய்யப்படுகிறார்கள்.

அந்த நாவல் பெண்களை உயர்வாய்ச் சித்தரிக்கவில்லை, அதில் எனக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. பெண்களின் அழகற்ற முகத்தை ஏற்றுக் கொள்ளும் நேரம் எப்போதுதான் வரப்போகிறது? துணிச்சலான நாயகிகள், கற்பழிக்கப்பட்டபின் போராடும் வீராங்கனைகள், ஆன்ம சோதனை செய்து கொள்ளும் உயர்குடிப் பெண்கள் எத்தனை எத்தனை புத்தகங்களை நிறைத்துக் கொண்டிருக்கிறார்கள்- எனக்கு இதெல்லாம் மிகவும் அலுத்துப் போய்விட்டது.

அதிலும் குறிப்பாக, வில்லிகள் இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது- நல்ல ஆற்றல் வாய்ந்த வில்லிகள். ஒழுக்கமான ஆண்களைக் கல்யாணம் செய்து கொண்டு வசதியாக வாழத் திட்டமிடும் கோபக்கார பெண்கள் அல்ல (போருக்குக் கிளம்ப இதைவிட சுவாரசியமான எதுவும் எங்களுக்கு இல்லை என்பது போலிருக்கிறது). உணர்வுகளை வெளியே காட்டிக் கொள்ளாத, ஆனால் அதற்காக கெட்டவர்கள் என்று சொல்ல முடியாத பெண்கள், அழுது புலம்பும் சதிகாரிகள் (வம்பு வளர்த்தால் மட்டும் போதாது போல்)- இப்படிப்பட்ட வில்லிகளைச் சொல்லவில்லை. வன்முறைக்கு அஞ்சாத, தீய மனம் கொண்ட பெண்களைப் பற்றி பேசுகிறேன். அச்சுறுத்தும் பெண்கள். உங்களுக்கு அப்படி யாரையும் தெரியாது என்று சொல்லாதீர்கள்.

இத்தனை நாட்களாக நாம் நமக்கு பெண்ணாற்றல் சேர்த்துக் கொண்டிருந்ததில் – பகடி என்று சொல்லக்கூடிய அளவுக்கு இந்த ஊக்குவிப்பு போய்விட்டது- நமக்கு நம் இருண்ட பகுதியை ஒப்புக்கொள்ள இடமே இல்லை. இருண்ட பகுதிகள் முக்கியமானவை. விஷப் பூச்செடிகள் போல் அவற்றை நாம் வளர்க்க வேண்டும். எனவேதான் ஷார்ப் அப்ஜெக்ட்ஸ் நான் செய்த விஷப் பூங்கொத்து.

ஷார்ப் அப்ஜெக்ட்ஸ் நாவலில் நல்ல பெண்கள் கிடையாது. நாவலின் கதைசொல்லி, நான் வெறித்தனமாய் நேசிக்கும் காமில்லா- புத்திசாலித்தனமாகப் பேசுபவள், தன்னை அறிந்திருப்பவள், உற்சாகமானவள்- அவள்தான் நல்ல பெண்ணுக்கு மிக அருகில் வருபவள். ஆனால் ஒவ்வொரு நாளையும் ஓட்ட சரக்கு, போதை வஸ்துக்கள், செக்ஸ், கத்தரிக்கோல்கள் பயன்படுத்துகிறாள்.

காமில்லா பற்றி எழுதிக் கொண்டிருக்கும்போது, திருப்திப்படுத்த முடியாத, நச்சுத்தன்மை கொண்ட வீட்டில் எல்லாரையும் திருப்திப்படுத்தச் சொல்லி வளர்க்கப்படும் பெண் எப்படி வளர்வாள் என்று நினைத்துப் பார்த்தேன். எப்போது பார்த்தாலும் குத்திக் குடைந்து கொண்டிருக்கும் ஒரு அம்மா, உடலளவிலும் இதைச் செய்கிறவள், கொஞ்சம்கூட தாய்மையுணர்வு இல்லாதவள், அவளால் வளர்க்கப்படும் பெண் தன் அம்மாவிடம் எப்படி நடந்து கொள்வாள்? அவள் தன் பெண்ணுக்கு எப்படிப்பட்ட வன்முறையைப் புகட்டுவாள்? அது ஒரு சுழல் மாதிரி இருக்கும் என்று உணர்ந்தேன்.

காமில்லா தன்னையே துண்டம் போட விரும்புகிறாள். வெட்டுபவளே பலி கொள்கிறாள், பலியாகிறாள்- மிரட்டுபவளும் மிரள்பவளும் அவளே. ஆனால் இதில் நோய் தீர்த்தலும் உண்டு- பின்னர் காயங்களைக் கழுவி மருந்திட்டு கட்டு போட வேண்டும். காயப்படுத்து, துயரம் கொள், குணப்படுத்து, காயப்படுத்து, துயரம் கொள், குணப்படுத்து. இது வன்முறையின் முப்புடி, ஒரே ஆளில் உருவம் பெறுகிறது. உலகின் மிகத் தனித்த செயல் இது. காமில்லா அடிப்படையில் தனித்து இருப்பவள்.

நான் சிறுமியாய் இருந்தபோது பிரதர்ஸ் கிரிம் கதைகள் படித்ததைக் கொண்டு காமில்லாவின் அம்மாவைப் படைத்தேன். சுருள் முடி கொண்ட மென்மையான நாயகிகள் நாசமாய்ப் போகட்டும். கெட்ட புத்தி படைத்த இந்த அரசிகளையும் தீய நெஞ்சம் கொண்ட மாற்றாந்தாய்களையும் நான் நேசித்தேன். எனவே காமில்லாவின் அம்மா அப்படி இருக்கிறாள்- அவள் அழகி, ராணி, ஊசிகள் நிறைந்தவள். அவள் பிறர் வலியைத் துய்ப்பவள். காமில்லாவின் வன்முறை தனக்குள் அடங்குவது என்றால், அவளது தாயின் வன்முறை தன்னை மையம் கொண்டது.

கொலை செய்யப்பட்ட சிறுமிகளை எடுத்துக் கொண்டால், இவர்கள் கன்னக்குழியும் ரிப்பன்களுமாய் இருப்பதை நான் விரும்பவில்லை. அது மிகச் சுலபமாய் இருந்திருக்கும் (“அழகிய பெண்ணின் மரணம் கவித்துவமானது,” என்றார் போ, அழகிய சிறுமியின் மரணம் இன்னும் அழகாக இருக்குமோ என்னவோ- தொலைந்து போன பெண்கள் குறித்து நம் ஊடகங்கள் பைத்தியம் பிடித்து அலைவதைப் பார்த்தால் அப்படிதான் இருக்கிறது). கொலையுண்ட பெண்கள் பொம்மை போன்ற பலிகள் அல்ல- அவர்களுக்குள்ளும் ஒரு கொடூரம் உண்டு, அவர்கள் போராளிகள். காமில்லாவின் ஒன்றுவிட்ட சகோதரி அமா, அவள் கோபக்காரி. ஆனால் காமில்லா போலல்லாமல், பேய் பிடித்த அவள் வீடு அவளது கோபத்தை மேல்நோக்கித் திருப்பவில்லை, மாறாய் கண்கவரும் திசையில் செலுத்துகிறது.

ஷார்ப் அப்ஜெக்ட்ஸில் வரும் பெண்களை நினைத்துப் பார்க்கும்போது 1948ஆம் ஆண்டு பிரடரிக் சம்மர் எடுத்த புகைப்படத்தை நினைத்துப் பார்க்கிறேன்- அதன் பெயர் லிவியா. லிவியா ரோமானிய கொலைகார பேரரசி. அது கருப்பு வெள்ளை புகைப்படம், அதில் இருப்பவள் ஓர் இளம் பெண், அப்பாவித்தனத்தின் அலங்காரங்கள் அனைத்தும் அவளிடம் இருக்கின்றன- பின்னி வாரப்பட்ட சுருள் கேசம், லேஸ் நுனியிட்ட ஆடைகள். ஆனால் அவள் கண்களின் புத்திசாலித்தனத்தைப் பார்த்தால் தூக்கிவாரிப் போடுகிறது, அவளது உதடுகள் பிடிவாதமாய் இறுகி இருக்கின்றன, அவள் முகம் முழுக்க குறும்பு- ஒருவேளை அவள் துட்டியாய் இருக்கலாம். உலகில் எனக்குப் பிடித்த புகைப்படங்களில் ஒன்று அது. சிறுமிகள்- பெண்களும்- கெட்டவர்களாக இருக்கக்கூடும் என்று அது நினைவூட்டுகிறது.

நன்றி – http://www.powells.com/essays/flynn.html

ஒளிப்பட உதவி – விக்கி ஆர்ட்

சுரண்டல்

காஸ்மிக் தூசி

கடவுள் எது
கல் எது
என்று பிரிக்கும் கோடு
ஒன்று இருக்கும் என்றால்
மிகவும் மெல்லியது
அது ஜெஜூரியில்

எல்லா கற்களுமே
கடவுள்கள்
அல்லது
கடவுளின் உறவினர்கள்

கடவுள் தவிர
வேறெதுவும்
பயிராவதும் இல்லை
இங்கு
இருபத்திநாலு மணி நேரமும்
வருஷம் முழுக்க
தரிசு நிலத்திலும்
இறுகிய பாறையிலும்
அறுவடையாவதெல்லாம்
கடவுள் மட்டுமே

ஒரு கல்லை எடுத்து
சுரண்டினாலுங்கூட
புதிதாய் ஒரு
புராணம் தோன்றும்

படுக்கையறை போன்ற
அந்தப்பெரிய பாறை –
அது கந்தோபரின் சாபத்தால்
கல்லாய் மாறிய அவரது மனைவி
பாறையின் குறுக்கே ஓடும்
அந்தப் பிளவு
கடுங்கோபத்தில்
தன் பெரியவாளால்
கந்தோபர் வெட்டியதன்
தழும்பு

00

ஒளிப்பட உதவி – alexmontjohn

அருண் கொலாட்கரின் Scratch  என்ற கவிதை தமிழாக்கம்