விமரிசனம்

அகம் கொள்ளும் பாவனைகள் – நித்ய சைதன்யா சிறுகதை குறித்து

பீட்டர் பொங்கல்

சென்ற வாரம் பதிப்பிக்கப்பட்ட நித்ய சைதன்யாவின் ‘அகம்‘ என்ற சிறுகதை ஆசீர்வதிக்கப்பட்டது- பதாகையின் இருநூறாவது கதை அது. பதிப்பிக்கப்பட்டு ஒரு வாரம் ஆனபின், எந்த ஆரவாரமும் இல்லாமல் அந்த மைல்கல் கடக்கப்பட்டிருப்பது இன்றுதான் தெரிந்தது. பதாகையில் வந்த மற்ற பல கதைகளைப் போலவே எந்த விமரிசனமும் எதிர்வினையும் இல்லாமல் இந்தக் கதையும் வாசிக்கப்பட்டிருக்கிறது என்றாலும் இது ஒரு முக்கியமான இடம் கடக்கப்பட்டிருப்பதன் தடமாகிறது. இது போல் இங்கு பதிப்பிக்கப்பட்டுள்ள வேறு பல கதைகளும் அவ்வவற்றின் அளவில் ஏதோ ஒரு தடமாக பின்னொரு காலம் அங்கீகரிக்கப்படலாம். இந்த எதிர்பார்ப்புதான் பதாகை தொடர்ந்து இயங்க காரணமாகிறது.

ஒரு படைப்புக்கு கிடைக்கக்கூடிய எதிர்வினை என்பது எப்போதும் நம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாக, நாம் நினைத்தபடி அமைவதில்லை. “‘அகம்‘ சிறுகதை படித்தீர்களா, என்ன நினைக்கிறீர்கள்?” என்று ஒரு நண்பருக்கு அஞ்சல் செய்து கேட்டபோது, அவர் அளித்த பதில் அவ்வளவு மகிழ்ச்சியளிப்பதாய் இல்லை:

“சென்ற வாரம் படிக்க முடியவில்லை. இப்போதுதான் உங்கள் அஞ்சலுக்குப்பின் படித்தேன். அவ்வளவாக சுரத்தில்லாது, அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக எழுதப்பட்டது போல் இருக்கிறது. தொடக்கத்தில் கிழம், கிழவன் எனத் திட்டுகிறார். அப்புறம் ஏனோ தாத்தா என பாசத்துடன் விளிக்கிறார். முடிவில் பிரம்மஸ்ரீ என மரியாதையுடன் போகிறது. தலைப்புக்கேற்ற அகத்தேடலாகவும் இல்லை. சைவ சித்தாந்த விளக்கங்களும் இயல்பாக பொருந்தாமல் தேய்வழக்காகத் துருத்திக்கொண்டு இருக்கிறது.”

நித்ய சைதன்யாவின் இரண்டாம் கதை இது- இதற்கு முன் மலைகள் தளத்தில் ஒரு கதை வெளிவந்திருக்கிறது (‘நிழலேந்திய மரம்‘ ). கவிதைகளில் காண முடியாத களத்தை நித்ய சைதன்யா தன் கதைகளுக்கு என்று எடுத்து வைத்திருக்கிறார்- அதிர்ச்சி என்பது அதன் ஒரு இயல்பு என்று நினைக்கிறேன்.

வெகுச் சில கதைகளே எழுதியவர்களின் எழுத்தை எவ்வாறு அணுகுவது? நண்பர் அளித்த கருத்து, எந்தச் சலுகையும் இல்லாத கறாரான பார்வை கொண்டது. அதனால் அது மதிப்புமிக்கது. ஆனால், பதிப்பிக்கத் தகுந்த கதைகளைத் தேர்ந்தெடுப்பது என்று வரும்போது இந்த எழுத்தாளர்களின் சாத்தியத்தைதான் பார்க்கிறோம். வேறு வகையில் சொல்வதானால், பதாகையில் வெளிவரும் இந்தக் கதைகள் சிறந்த கதைகள் என்று முன்வைக்கப்படுவதில்லை- விமரிசிக்கத்தக்க கதைகள் என்ற நம்பிக்கையில்தான் இவை தேர்வு செய்யப்படுகின்றன. விமரிசனங்கள் எதிர்மறையாய் இருந்தபோதிலும் அவற்றுக்கான பதிலைத் தம்மகத்தே கொண்ட கதைகளாய் விளங்கும் உயிர்ப்பு இவற்றுக்கு உண்டு என்பதுதான் எதிர்பார்ப்பு.

“”கிழட்டுத் தாயோளி உயிர வாங்குதானே” என்று வாய்க்குள் முனங்கிக்கொண்டே பன்னீர் பாட்டில்கள் அடங்கிய சாக்குப்பையை தோளில் துாக்கிவைத்தேன். உருவத்திற்குப் பொருந்தாமல் பஞ்சைப்போலிருந்தது.

”பேபி ஸ்டோர்ல குடுத்துட்டு. உங்கக்காவுக்கு ரெண்டு தேங்கா வாங்கிக்கோடா மாப்ள” என்றது கிழம். கோமணம் மீறி விதைப்பை ஒன்று வெளித்தெரிந்தது. எண்ணெய்க் குவளையால் பன்னீரை மொண்டு வெள்ளைப்பிளாஸ்டிக் பன்னீர் பாட்டிலில் புனல்கொண்டு ஊற்றினார். எனக்கு எப்போதும் அவர்மீது ஒருவித ஏளனம் கலந்த எரிச்சல்தான். குடும்பத்தின் சவால்களுக்குப் பயந்த பெருங்கோழை.”

என்று துவங்குகிறது கதை. இதையடுத்த பத்திகள், தாத்தாவின் பழக்க வழக்கங்களை விவரிக்கும்போதே அம்மாவுக்கு தாத்தாவிடம் உள்ள முரண் உணர்வு நிலை சொல்லப்படுகிறது – வீட்டுக்கு வராத தாத்தா, வழியில் ஏதாவது சாப்பிடத் தந்ததை அம்மாவிடம் சொல்லும்போது, “சட்டென்று அவள் முகத்தில் ஒரு குழைவு தோன்றும். முந்தானையால் கண்களை ஒற்றிக் கொள்வாள்“. ஆனால் அடுத்த வாக்கியத்திலேயே, “அம்மா பிறந்த வீட்டிற்குச் செல்லும்போதெல்லாம் சண்டை நாறும். அம்மாவின் வாயில் இருந்து தெறித்து விழும் வார்த்தைகளால் தாத்தா நடுங்கிப்போவார். ”நீச முடிவான் பாழுங்கிணத்துல என்னெக்கொண்டு தள்ளிப்போட்டானே. இந்தப்பிஞ்சுக்காக நான் இன்னும் உயிரோட இருக்கேன்”, என்று செல்கிறது கதை.

பத்துத்தறிகள் போட்டு இரண்டு ஜவுளிக்கடைகளை நடத்திவந்த‘ தாத்தா திடீரென்று சாமியார் ஆகிறார், அவர் இருக்குமிடம் தெரிந்ததும் மூன்று பெண் குழந்தைகளுடன் போய் அவரை வீட்டுக்கு அழைத்து வருகிறார் பாட்டி. தாத்தா சாமியார் போல் இருந்து கொண்டு ஊதுபத்தி செய்து விற்றுக் கொண்டிருக்கிறார். பேரன் ஒரு காதல் தோல்விக்குப்பின் பாட்டி வீட்டுக்குச் சென்று, தாத்தாவுக்கு அணுக்கமானவனாக- ஊதுபத்தி செய்ய உதவி, அவரது சைவ சித்தாந்த தத்துவங்களை ஆர்வமில்லாமல் கேட்டு- வளர்கிறான்.

தோற்றுப் போனவராக, வேடதாரியாக-, இரக்கத்துக்கு உரியவராக அல்ல, வெறுப்புக்கும் ஏளனத்துக்கும் உரியவராக வெவ்வேறு இடங்களில் விவரிக்கப்படும் தாத்தா, பேரனின் பார்வையில்தான் நமக்குக் கிடைக்கிறார்- அவரை வசவு பாடும் அம்மாவின் பார்வையில் கிழவனாக, பாட்டியின் அணுக்கத்தில் தாத்தாவாக, இறுதியில் சக காவி வேட்டிக்காரரின் வணக்கத்துக்குரிய பிரம்மஸ்ரீ மாணிக்கம் சுவாமியாக. அம்மா திட்டும்போது இந்தத் தாத்தா நடுங்கிப் போகிறார், இருபது ஆண்டுகளாகப் பேசிக் கொள்ளாமல், ஆனால் தாத்தாவிடம் மாறாப்பிரியம் கொண்ட, எப்போதும் தரையை வெறித்துக் கொண்டிருக்கும் பாட்டியுடன் தனக்கென்று ஒரு உலகில் ஆணவ மலம் பற்றியும் பட்டினத்தார் பாடல்கள் பற்றியும் பேசும், துறவு பூண்ட சித்தாந்தியாக இருக்கிறார்- தன்னிடம் வினயமாக நடந்து கொள்ளும் சாதகன் வரும்போதுதான் அவரது அகம் மலர்கிறது-

“வந்தவர் நாற்காலியில் அமராமல் தாத்தாவின் காலருகே பயபக்தியோடு தரையில் அமர்ந்தார். நான் தாத்தாவின் முகத்தைப்பார்த்தேன். அதுவரை நானறியாத புதுபாவனை அவர் மீது வந்து இறங்கியிருந்தது.”

இங்கு மலர்வது தாத்தாவின் அகம் மட்டுமல்ல, கிழட்டுத் தாயோளி என்று திட்டிய, தற்கொலை செய்து கொண்ட தந்தையை இழந்த, காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்ற பேரனின் அகமும்தான்- இப்போது அவனும் தாத்தாவை புது பாவனையுடன் பார்க்கிறான், இல்லையா? தாத்தாவைப் போலவே தனது இழப்புகளையும் சரிக்கட்டும் ஒரு இடத்தை அவனும் அடையலாம், அவனே அவமானமானது, ஏளனத்துக்குரியது, மதிப்பற்றது என்று அதை நினைத்தாலும்.

அகம் சிறுகதை

ஸ்டீபன் கிங்கின் ‘ஜாய்லேண்ட்’

ஆர். அஜய்

joyland
1973ஆம் வருடம் ‘ஜாய்லேண்ட்’ நாவலின் கதைசொல்லி டெவினுடனான உறவை முறித்துக் கொள்கிறாள் அவர் காதலி. இருபத்தியோராவது வயதில் ஏற்பட்ட அந்த முதற்காதலின் முறிவின் காயம் வடுவாகி அவ்வப்போது அது தரும் வலியால், 2012 ஆண்டும் -அம்முதற் காதலுக்கு பின்னான பல உறவுகளுக்குப் பின் – தன்னுடைய அறுபத்தியோராம் வயதிலும் டெவின் துன்புறுகிறார். அவள் ஏன் தன்னைப் பிரிந்து சென்றாள் என்ற கேள்விக்கான விடையை இந்த வயதிலும் தேடிக்கொண்டிருக்கிறார். தழுவுதல், முத்தமிடுதல் இவற்றுக்கு அடுத்த கட்டமான ‘அதற்கு’ (‘It‘ என்று தான் டெவின் அதை குறிப்பிடுகிறார்) செல்ல காதலி வெண்டி வெட்கி தயங்க, கனவான்போல் தான் அவளை வற்புறுத்தாததுகூட காரணமாக இருக்குமோ என்று சந்தேகப்படுகிறார்.

வாழ்வில் இன்பங்களை மட்டுமே அடைவது அனைவரின் ஆசையாக இருந்தாலும், துன்பங்களை அவரவர் அதிர்ஷ்டம் அல்லது ஆற்றல் சார்ந்து அடைவது தவிர்க்க இயலாததாக உள்ளது. கற்றுக்கொள்வதும், கல்லாமல் இருப்பதும் அவரவர் கைமணல் எனினும், காலப்போக்கில் அவற்றை அசை போடும் மனநிலைக்கு வந்து விடுகிறோம். அந்த அனுபவங்கள் மீதான நம்முடைய மீள் விசாரணை நம் வாழ்வை தொகுத்துக் கொள்ள உதவுகின்றன. டெவின் அப்படி அசை போடுபவர்களின் பிரதிநிதி என்றால், அதற்கான வாய்ப்பே கிடைக்காமல் வாழ்வு முடிந்து போகிறவர்களும் – இருபதுகளின் ஆரம்பித்தில் இருக்கும் நான்கைந்து பெண்கள் அனுபவங்களின் சேகரிப்பு நிகழ அவகாசம் இல்லாமல், நாவலின் எதிர்மறை பாத்திரத்தால் கொல்லப்படுகிறார்கள் – ‘ஜாய்லேண்ட்’ நாவலில் உண்டு.

டெவினையும் கொல்லப்பட்ட பெண்களையும் கொலையாளியையும் இணைக்கும் புள்ளி, அதனூடே இணைந்து வரும் அமானுஷ்யம் இந்நாவலை குற்றப்புனைவு/ வழக்கமான ஸ்டீபன் கிங்கின் திகில் புனைவு என்று வரையறை செய்ய உதவினாலும், வாழ்வின் மீது இன்னும் கால் பதிக்காத இளைஞனின் மனம் முதன் முதலாக தரை தட்டுவதைப் பற்றியும், அதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் பற்றியுமான நாவலாகவே உண்மையில் இதைப் பார்க்க முடிகிறது. அதுவே நாவலுக்கு நியாயம் செய்வதாகவும் இருக்கும்.

கோடை விடுமுறைக்கால பணியாக, ‘ஜாய்லேண்ட்’ எனும் கேளிக்கை வளாகத்தில் (theme park) வேலைக்கு சேர்வதில் இருந்து நாவலை ஆரம்பித்து அங்கு நடந்த ஒரு கொலை, கொல்லப்பட்டப் பெண் ஆவியாக அலைவதாகச் சொல்லப்படுவது போன்றவற்றை டெவின்/ கிங் தொட்டுச் சென்றாலும் அவற்றில் அதிக நேரம் செலவிடுவதில்லை. நாவலின் பெரும்பகுதி டெவினின் உணர்வுநிலை ஊசலாட்டங்களையும் அவன் அங்கு ஏற்படுத்திக்கொள்ளும் புதிய உறவுகளையும், அப்பாத்திரங்கள் பற்றிய சித்திரத்தையும் உருவாக்குவதில் கவனம் செலுத்தும் கிங் அதில் பெருமளவு வெற்றி பெறுகிறார்.

எழுத்தில் ஆர்வமுள்ள டெவின் சற்று மென்மையானவர், கனவுகள் நிறைந்தவர் என புரிந்து கொள்கிறோம். அதே நேரம் இளமை தரும் அதீத நம்பிக்கையில், தன் கண் முன்னே ஏற்பட்டுக் கொண்டிருக்கும் எதிர்மறை மாற்றங்களை கவனித்தும் அவ்வாறு நடக்காது என தன்னை தானே ஏமாற்றிக் கொள்ளும் சிறுவனாகவும் இருக்கிறார். காதலி வெண்டி சில காலமாக முன்பிருந்த அளவிற்கு நெருக்கமாக இல்லை என்பதை உணர்ந்தே இருந்தாலும் அந்த உண்மையை எதிர்கொள்ள மறுத்து, சிறிது சஞ்சலத்துடன்தான் வேலைக்குச் சேர்கிறார். தான் பக்கம் பக்கமாக எழுதி அனுப்பும் கடிதங்களுக்கு வெண்டி ஓரிரு வரிகளில் பதில் அளிப்பதும் அவரை நம்பிக்கை இழக்கச் செய்வதில்லை. டாம்(Tom) மற்றும் எரினுடன் (Erin) அவருக்கு நெருங்கிய நட்பேற்படுகிறது.

டெவினுக்கு அந்தக் கோடை ஒரு விதத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது என்றால், தங்கள் இணையை ஒருவரில் மற்றொருவர் கண்டு கொள்ளும் டாமுக்கும் எரினுக்கும் இது மிக முக்கியத்துவம் வாய்ந்த வருடமே. தன் காதல் கொஞ்சம் கொஞ்சமாக அணைந்து ஒரு கட்டத்தில் வெண்டி வெளிப்படையாக உறவை முறித்தவுடன் முற்றிலும் இருள் சூழ்ந்து விட, அதே நேரம் டாமும் எரினும் தங்கள் உறவில் ஒளியேற்றிக் கொள்வதைக் கண்டு ஒரு சிறு துளி பொறாமை கொண்டதையும் டெவின் நேர்மையாக பதிவு செய்கிறார். இவர்களுடனான நட்புடன், குழந்தைகளை மகிழ்விக்க ஜாய்லேண்ட்டின் அடையாளச் சின்னமான (mascot) நாய் வேடமணிந்து குழந்தைகளை மகிழ்விக்கும் பணியிலும் இயல்பாக பொருத்திக் கொள்கிறார் டெவின்.

‘ஜாய்லேண்ட்’ திறந்திருக்கும் கோடை காலத்தில் மட்டும் ‘ஜிப்சியாக’ வேடமிட்டு, ஆருடம் சொல்லும் ஃபார்டுனா (Fortuna), டெவின் இருவரைச் சந்திக்கப்போவதாகவும் அதில் ஒருவர் அவன் வாழ்வில் முக்கியத்துவம் கொண்டவராக இருப்பார் என்று சொல்வதும், டாம் கொல்லப்பட்ட லிண்டாவை (Linda) பார்த்ததாக டாம் சொல்வதும் இது மர்ம/திகில் நாவல்தான் என்று அவ்வப்போது நினைவூட்டினாலும், டெவினின் உளக் காய்ச்சலைத்தான் சுற்றி வருகிறது. காதல் முறிவில் அவர் மருகுகிறார் என்று கிட்டத்தட்ட அனைவருக்குமே தெரிந்து விடுகிறது, அவரிடம் அது குறித்து பரிவாகவே நடந்து கொள்கிறார்கள். அவரின் பணி நேர்த்தி (அதுமட்டுமல்ல குழந்தை ஒன்றை அவர் காப்பாற்றுகிறார்), மற்றும் இயல்பான இனிய சுபாவமும் காரணமாக இருக்கலாம்.

கோடை முடிந்தவுடன், கல்லூரிக்கு திரும்பும் முன் எரின் டெவினை முத்தமிட்டு ‘ஏன் டாம் இங்கு இருந்தான்’ என்று கேட்பதின் பொருள் தெரிந்தாலும், என்ன நிகழ்ந்திருக்கக் கூடும் என்பது குறித்த சாத்தியங்களை வாசகன் யோசிக்கலாம். டெவின் மட்டும் கல்லூரிக்குத் திரும்பாமல் தொடர்ந்து ஜாய்லேண்ட்டில் வேலை செய்ய முடிவு செய்வது, அந்த இடம் அவருக்கு பிடித்துப்போனதால் மட்டும்தானா அல்லது திரும்பிச் சென்று -மற்றொருவனுடன் உறவில் இருக்கும் – வெண்டியை எதிர்கொள்ள வேண்டியதை தவிர்க்க எண்ணியதாலா என்பது குறித்தும்யோசிக்க இடமிருக்கிறது.

உயிர்கொல்லி நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவன் மைக், அவன் தாய் ஆன்னியையும் சந்தித்து அவர்களுடனும் -சின்ன தடங்கல்களுக்குப் பின் – நட்பு ஏற்படுகிறது. ஆன்னியின்பால் ஈர்ப்பட்டு (அவரும் டெவினின்பால்), இருவரும் உடல் உறவும் கொள்கிறார்கள். புது உறவின் திளைப்பிலும் கூட டெவினுக்கு இதற்கும், வெண்டியுடனான உறவுக்குமுள்ள வித்தியாசமும் அதை எப்போதும் ஈடு செய்ய முடியாது என்று புரிந்து கொள்வதும் வாசகனுக்கு சிலவற்றை உணர்த்துகின்றன.

முதற் காதலின் தோல்வி, அதை கடந்து செல்லும் முயற்சிகள் என ஒற்றை விஷயத்தின் நினைவோடை குறிப்புக்கள் (nostalgia) மட்டுமே அல்ல இந்த நாவல். ஆம், இதில் கடந்த காலம் பற்றிய ஏக்கம் உண்டு, ஆனால் அது அக்காலத்தில் நாம் கண்ட -காதலும் அடங்கிய – கனவுகள் பற்றிய ஏக்கம். அந்தக் கோடையைப் பற்றி விவரிக்கும்போதே டெவின்/ கிங் அதற்குப் பின் என்ன நடந்தது என காலத்தில் முன் பின் சென்று சின்ன செய்திகளை சொல்லும் உத்தி இளமைக் கனவுகளின் இலட்சியங்களின் நிச்சயமற்ற தன்மையை உணர்த்துகின்றன.

டெவின் தான் எண்ணி இருந்தது போல பெரிய எழுத்தாளராகவில்லை, பத்திரிக்கைகளில் வேலை செய்கிறார். மணம் முடிக்கும் டாம்/எரினின் மண வாழ்கை இருபது வருடமே – டாம் மறையும் வரை – நீடிக்கிறது. இந்தச் செய்திகள் வாசகனுக்குத் தெரிவதால், 1973ல் கனவுகளை எழுப்பிக் கொண்டிருக்கும் இந்த இளைஞர்களை காணும்போது அவனுக்கு அவற்றின் வியர்த்தம் குறித்த துயரமே ஏற்படுகிறது, அத்துடன்தான் கண்டிருக்கக் கூடிய கனவுகள் என்னவாகின என்றும் சுயபரிசோதனை செய்யத் தூண்டுகிறது. லிண்டாவை காணும் டாம் அதை குறித்து பேச மறுக்கிறான், அதை தன் மனதிலிருந்தே அகற்ற எண்ணுகிறான். இன்று, இந்தக் கணத்தில், யதார்த்தத்தில் வாழும் விழைவும் வாழ்வின் மீது நேசமும் அதைப் பெரும் புன்சிரிப்புடன் எதிர்கொள்ளும் இளைஞன் ஒருவன் தன்னுடைய நாற்பதுகளில் இறந்து விடுவான் என்பது எவ்வளவு பெரிய சோகம்.

மர்மங்கள் அவிழ்க்கப்படும் நாவலின் இறுதிப் பகுதி அதன் பலவீனமான அம்சமாக உள்ளது. ஜாய்லேண்ட்டில் டெவின் தன்னை பொருத்திக் கொள்வது இயல்பாக இருந்தாலும், லிண்டாவின் ஆவியைப் பார்க்க அவன் கொள்ளும் மிதமிஞ்சிய (டாம் கண்ணிற்கு மட்டும் அவள் தென்படுவது அவனுக்கு கொஞ்சம் பொறாமையூட்டுகிறது) ஆவலுக்கான தர்க்கம் நாவலில் வெளிப்படையாக மட்டுமல்ல குறிப்பாகவும் எங்கும் சுட்டப்படவில்லை.டெவின் பரபரப்பை விரும்பும் ஆசாமியும் அல்ல எனும் பட்சத்தில் அவன் ஏன் லிண்டாவை பார்க்கக் விழைய வேண்டும், ஏன் அந்தக் கொலை பற்றி ஆராய வேண்டும் என்ற கேள்விகளுக்கு விடையை வாசகன் அவனுக்கேற்றார் போல் வலிந்து யூகிக்க வேண்டியுள்ளது. அதே போல் டெவினுக்கு உதவ எரின் பழைய செய்தித்தாள்களை சேகரிப்பதும், -நாவலின் ஆரம்பத்தில் டெவின் தங்கும் வீட்டின் உரிமையாளர் லிண்டாவைத் தவிர இன்னும் சில பெண்கள் கொல்லப்பட்டுள்ளதாக யூகிக்கப்படுவதாக கூறுவதும், தன் ஆராய்ச்சிக்குப் பின் அதே முடிவுக்கு வரும் எரின் இதை காவல்துறை கண்டு கொள்ள தவற விட்டுவிட்டது என்று சொல்வதும் முரணாக உள்ளது -அவற்றிலிருந்து சட்டென குற்றவாளியை அவன் அடையாளம் கண்டு கொள்வதும் நாவல் முடிவிற்கு வந்துவிட அவசரப்படுவதை தான் காட்டுகிறது, பாத்திரங்களின் மனநிலை, கேளிக்கை விடுதியின் சூழல் இவற்றை விவரிப்பதில் உள்ள நேர்த்தியும், ஆழமும் இறுதிப் பகுதியில் காணப்படவில்லை. மைக்கிற்கு இருக்கும் அமானுஷ்ய ஆற்றல் இந்த ழனார் எழுத்துக்களின் அத்தியாவசிய ஒன்று என்ற அளவில் பொருத்தமான ஒன்றே, அது எப்படி உபயோகப்படுத்தப்படுகிறது என்பதும் அதற்கான நியாயமும் நாவலில் உள்ளது, இருப்பினும் குற்றவாளியுடனான இறுதிச் சந்திப்பு சடுதியில் ஆரம்பித்து முடிவதாக இருப்பதை தவிர்க்கவில்லை.

மர்ம /திகில் புனைவென்பதைவிட கனவுகள் கலைவதால் அலைக்கழிக்கப்படும் மனிதர்கள் பற்றிய புனைவாக ஜாய்லேண்ட் வெற்றி பெறுகிறது. லிண்டாவின் ஆவி பழிவாங்கத் துடிக்கவோ அதற்காக யாரையும் துணைக்கு அழைக்கவோ இல்லை. தான் கொலை செய்யப்பட்டபின் – ஜாய்லேண்ட்டின் ஒரு முக்கிய கேளிக்கை அம்சமான – திகில் அறையில் (horror house) இருந்து எப்படி வெளியேறுவது என்று அவளுக்கு தெரியவில்லை. லிண்டாவின் ஆன்மா வழக்கான பழிவாங்கும் பாவையாக இல்லாமல், திக்குத் தெரியாமல் திணறுவதில் எல்லையற்று விரிந்திருப்பதாக கற்பனை செய்திருந்த வாழ்வு திடீரென்று முடிவு பெற்றதை எதிர்கொள்ள முடியாத அதிர்ச்சியும், அதில் இருந்து மீள முடியாத இயலாமையின் சோகமும் தான் உள்ளது.

ரிச்சர்ட் போர்டின் (Richard Ford) ‘பஸ்கம்ப் ட்ரிலஜி’ (Bascombe Trilogy) (நான்காவதாக சமீபத்தில் ஒரு நாவல் வெளிவந்த பின்னும்) என்றழைக்கப்படும் நாவல்களின் முக்கியப் பாத்திரமான பஸ்கம்பின் மகன், சிறுவனாக இருக்கும் போதே காலமாகிறான். அவன் குறித்த நினைவுகளில் மூழ்கும் பஸ்கம்ப் அவனுக்கு வயது ஏறப்போவதில்லை என்பதாக எண்ணிக்கொள்கிறார், அவர் மனதில் அவன் குழந்தைமையை இழக்காத பாலகனாகவே இருப்பான். பஸ்கம்பின் மனவோட்டத்தினூடாகவே பயணம் செய்யும் நாவல்களின், ஒருவர் ஆறவே ஆறப்போகாத இயலாத துயரை எப்படி எதிர்கொள்கிறார், அதில் எப்படி துளியேனும் ஆசுவாசத்தை கண்டடைய முயல்கிறார் என்பதை விவரிக்கும் நெகிழ்வான தருணம் இது. பஸ்கம்ப் தன் அமைதிக்காக உருவாக்கிக்கொள்ளும் கற்பிதத்தை (ஒரு விதத்தில் அது உண்மையும்கூட என்று வாதிடலாம்) இந்நாவலிற்கும் பொருத்திப் பார்க்கலாம். லிண்டாவும் இனி எப்போதும் இருபதுகளில் இருக்கும் யுவதிதான், மூப்பென்பதே அவளுக்கு இல்லை. அந்த விதத்தில் அவள் நித்தியத்துவம் பெற்றுவிட்டாள். ஆனால் இப்படிப்பட்ட நித்தியமான இளமையை யார் விரும்புவார்?

இறப்பிற்கு பின்னான விஷயங்களை அவரவர் நம்பிக்கைக்கேற்ப யூகிக்கத் தான் முடியும் என்றாலும், நாவலின் உலகினுள் ஆன்மா, அமானுஷ்யம் உணமையனவையாக உள்ளன என்பதால் லிண்டா செல்லுமிடத்தில் அவள் தன் வாழ்கையை திரும்பிப் பார்ப்பாளா, கடந்த கால (அங்கு காலமென்ற ஒன்று இருந்தால்) அனுபவங்களை அசை போடுவாளா என்ற கேள்வி எழாமல் இல்லை. இன்னொரு புறம் மூப்படையும் டெவின் போன்றவர்கள் பல கசப்புக்களையும், இனியவைகளையும் அனுபவித்திருந்தாலும், கடந்து வந்த பாதையில் திரும்பிப் பார்க்க அவர்களுக்கு நிறைய உள்ளது என்பது -இறப்பதைவிட – நேர்மறையான அம்சம் என்று கொள்ளலாம். ஆனால் அவர்களும் ஒரு விதத்தில் லிண்டாவைப் போல் வாழ்வெனும் கேளிக்கை விடுதியில் அவரவருக்கான பிரத்யேக திகில் அறையில் சிக்கிக் கொண்டு திக்குத் தெரியாமல் அலைந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

oOo

ஒளிப்பட உதவி – விக்கிபீடியா

ஆதவன் எழுதிய ‘புதுமைப்பித்தனின் துரோகம்’ – வெ. சுரேஷ்

வெ. சுரேஷ்– 

தீவிர இலக்கியத்தில் ஆர்வம் கொள்வது என்பது பல சமயங்களில் புற உலக வசீகரங்களிலிருந்தும் உறவுகள் மற்றும் பொருளாதாரத்தை அடிப்படையாய்க் கொண்ட வாழ்க்கை விசைகளிலிருந்தும் நம்மை விலக்கிக் கொள்வதாகவே உள்ளது. இது படைப்பாளிக்கு மட்டுமல்ல, வாசகனுக்கும் கூடத்தான் பொருந்துகிறது. இலக்கிய ருசி கண்டபின் பிற விஷயங்கள் முக்கியத்துவம் இழந்து விடுகின்றன. உதாரணமாக, பழைய பள்ளி நண்பர்கள் சேர்ந்து உருவாக்கும் வாட்ஸப் குழுக்கள் எல்லாமேகூட பொருளிழந்து விடுகின்றன- அவற்றில் இலக்கிய விவாதங்கள் இடம் பெறாவிடில். அவர்கள் எல்லாரும் ஓரிடத்தில் நின்றிருக்க நாம் எங்கோ நகர்ந்தாற்போல், அல்லது அவர்கள் வேறு திசையில் சென்றுவிட, நாம் தனித்து நிற்பது போன்ற ஒரு இடைவெளியை உணர முடிகிறது.

வாசகன் நிலையே இப்படி என்றால், லௌகீக வாழ்விலும் பெரும் வெற்றி பெறாத, வணிக இலக்கியத்தில் கிடைக்கும் பெரும்புகழும் அடைய முடியாத ஒரு படைப்பாளிக்கு மிஞ்சுவதுதான் என்ன? தான் தனித்துவமானவன் என்ற ஒரு ஆத்ம திருப்தியா? அல்லது, அந்த அகங்காரத்தின் நிறைவா? அந்த சுய அடையாளமும் சில சமயங்களில் அசைக்கப்படும்போது என்ன மிஞ்சுகிறது?

ஆதவன் எழுதிய சிறுகதை, ‘புதுமைப்பித்தனின் துரோகம்‘ விவாதிப்பது இதைத்தான். வேணு ஒரு தீவிர இலக்கிய எழுத்தாளன். ராம் அவனது பழைய நண்பன், இப்போது வெற்றிகரமான வணிகன். நீண்ட இடைவெளிக்குப் பின் சந்திக்கும் இருவரும் ராம் தங்கியிருக்கும் ஐந்து நட்சத்திர ஓட்டலில் பேசிக்கொண்டே சாப்பிடுகிறார்கள். வேணுவுக்கு இப்போது ஐந்து நட்சத்திர ஓட்டல் உணவின் ருசியே பிரதானமாக இருக்கிறது. அந்த உணவின் ருசிக்கு கூடுதல் சுவை சேர்க்க, தற்போதைய புரவலராக தன் முன் அமர்ந்திருக்கும் ராமுக்கும் தன் இலக்கியவாதி பாவனையின் பிரசன்னத்தை உருவாக்க முயல்கிறான் வேணு. அதற்கு ஏற்றாற்போல், தான் புழங்கும் வட்டங்களில் வேணுவின் எழுத்துக்கு உள்ள வரவேற்பை, குறிப்பாக பெண்களிடத்தில் அவன் எழுத்து வாசிக்கப்படுவதைச் சொல்லி வேணுவை மகிழ்விக்கிறான் ராம்.

பேச்சு வளர வளர, தான் புதிதாக அடைந்திருக்கும் இலக்கிய ரசனையை வேணுவின் இலக்கிய ஹோதாவின் மீது தீட்டிப் பார்க்கும் ஆர்வம் ராமுக்கு வருகிறது. புதுமைப்பித்தனைப் பற்றி போகிறது பேச்சு. புதுமைப்பித்தனின் சில கதைகளை இருவரும் விவாதிக்கிறார்கள். வேணுவுக்கு இப்போது ராமின் நோக்கத்தின் மீது சந்தேகம் வந்துவிடுகிறது. ராம் புதிதாக அணிந்திருக்கும் இலக்கிய ஆர்வலன் வேஷம் தன் ஒரே ஒரு தனித்துவத்தையும் கழற்றி அம்மணமாக்கும் செயல் என்று எண்ணத் தொடங்குகிறான் வேணு. அதனால், புதுமைப்பித்தன் கதைகள் மீதான ராமின் வாசிப்பினை கடுமையாக நிராகரிக்கத் தொடங்குகிறான் அவன்.

புதுமைப்பித்தன் கதைகளில் மனைவி பாத்திரங்கள் முக்கியத்துவம் பெறாமையில் அவரது தோல்வியடைந்த மண வாழ்க்கை வெளிப்படுகிறது என்ற ஒரு கோணத்தை ராம் சொல்ல, அப்படியெல்லாம் எளிமைப்படுத்த முடியாது என்று மறுக்கும் வேணு, ‘செல்லம்மாள்’, ‘காஞ்சனை’ கதைகளைக் குறிப்பிடுகிறான். ஆனால் ராம், அந்த இரு கதைகளிலுமே மனைவி பாத்திரங்கள், ஒன்று இறந்து போகின்றன அல்லது கொல்லப்பட இருக்கின்றன என்கிறான். இதை far-fetched என்று நிராகரிக்கிறான், வேணு. அதற்கு பதிலாக ராம், அப்படியும் இருக்கலாம், ஆனால் இந்தக் கோணத்தை க.நா.சு.கூட ஒப்புக்கொள்கிறாரே என்றதும் வேணுவின் வாய் அடைத்துப் போகிறது. க.நா.சுவின் இலக்கிய ஹோதா தன்னை ஏற்குமா என்று ஏங்கும் ஒரு இளம் எழுத்தாளன் அவன். தன் நண்பன் க.நா.சுவுடன் சகஜமாக இலக்கியம் பேசக்கூடியவன் என்று அறிந்தவுடன், அந்த இனிய மாலைப் பொழுதின் ஒளி அவிந்து விடுகிறது. பிறகு கடனே என்று பேசிக்கொண்டிருந்துவிட்டு ராமின் காரிலேயே தான் இருக்கும் குறுகலான, திருவல்லிக்கேணி சந்திற்கு வெளியிலேயே இறங்கி கொண்டு சோர்வாக வீடு திரும்புகிறான்.

அங்கு தன் ஆற்றாமையை, தான் பட்ட அவமானத்தை, மனைவியிடம் எரிந்து விழுந்து தணித்துக் கொள்கிறான். அதன் பின், கை கால் முகம் கழுவி உள்ளே நுழைகையில், தான் ஒரு சராசரி நடுத்தர வர்க்க கணவனாகவே நடந்து கொண்டிருப்பதை நினைத்துக் கொள்ளும்போது புதுமைப்பித்தனின் இன்னொரு கதை, ஆபிசில் சாதாரண குமாஸ்தாவாகவும் வீட்டில் சர்வாதிகாரியாகவும் விளங்கும் ஒரு நடுத்தர வர்க்க கணவன் பற்றிய கதை, நினைவுக்கு வருகிறது. ,உடனே அவனுக்கு புதுமைப்பித்தன் மீது வெடித்துக் கிளம்புகிறது கோபம்- உனக்கென்ன வேண்டியிருந்தது, இந்த நடுத்தர வர்க்கம் மீதான satire, ராம் போன்ற சோஃபிஸ்டிகேடட் வாசகர்களின் அங்கீகாரத்துக்காக உன் வர்க்கத்தைக் காட்டிக் கொடுத்த துரோகி, என்று மனதார புதுமைப்பித்தனைத் திட்டித் தீர்த்தவுடன் அவன் மனதில் ஒரு சாந்தம் தோன்றுகிறது, அன்பான குரலில் மனைவியிடம் காபி கொண்டு வரச் சொல்கிறான். இப்படி முடிகிறது கதை.

ஆனால் நம் கேள்விகள் தொடங்குகின்றன. வேணு விரும்புவது எதை? பொருளியல் பிரச்னைகளில் சிக்குண்டு, அதிருப்திமிக்க, ஆனால் இலக்கியவாதி எனும் ஒரு அடையாளத்தோடு வாழும் இந்த வாழ்வா, அல்லது செல்வந்தனான, இலக்கியமும் ரசிக்கக்கூடிய ராமின் வாழ்வா? புதுமைப்பித்தனை வேணு நிஜமாகவே திட்டுகிறானா? (அது அவர் மீதான செல்லச் சிணுங்கல் அல்லவா?) ஒரு கோணத்தில் ‘புதுமைப்பித்தனின் துரோகம்,’ எழுப்பும் கேள்வி, எப்படிப்பட்ட வாழ்வு உயர்ந்தது- அர்ப்பணிக்கப்பட்ட, அதனால், கோபதாபங்கள் மற்றும் பொருளியல் பற்றாக்குறைகள் மிகுந்த வாழ்வா, அல்லது லௌகீக வாழ்க்கையில் வெற்றி பெற்றது போதாதென்று கலைஞனின் ரசனையிலும் கை வைக்கும் dilettante என்று சொல்லப்படக்கூடிய பணக்கார வாழ்வா?

ஒரு எழுத்தாளன் யாருக்காக எழுதுகிறான் என்ற கேள்வியும் இங்கு எழுகிறது. ஒரு உண்மையான, நேர்மையான கலைஞன் தனக்கும் தன் வர்க்கத்துக்கும் விசுவாசமாக இல்லாமல் உரித்துப் போடும் போலித்தனங்கள் பிழைக்கத்தெரிந்த ரசிகர்களால் சுவீகரித்துக் கொள்ளப்படும்போது அவனே நகைப்புக்கிடமாகிறான் என்றாலும், அவனது முதல் தேர்வும் லட்சியமும் வாழ்க்கை குறித்த, உண்மை குறித்த ஒரு நேர்மையான விசாரணைதானே? இதில் தன் வர்க்கம், பிறர் வர்க்கம் என்று பார்ப்பதற்கு இடமுண்டா என்ன?

ஏதுமற்று – சில குறிப்புகள்

ஏதுமற்று- சரவணன் அபி

‘மத்திய ஜாவாவின்’ என்று துவங்கும்போதே கவிதையில் ஒரு புதிய குரல் வந்து விடுகிறது. அங்கு சிறிது இடைவெளி கொடுத்து, ‘யோக்யகர்த்தா நகரில்’ என்று அடுத்த வரியைப் படிக்கும்போது, முந்தைய வரிக்கு இணையானதாகவே இதையும் படிக்கிறோம். ஆனால் அடுத்த வரியும், ‘விரைந்து சாயும்’ என்று இரு சொற்கள் மட்டும் கொண்டிருந்தாலும், அதற்கும் ‘முன்மாலைப் பொழுது’ என்ற வரிக்கும் இடையே ‘மழை அந்திகளின்’ என்று வரும்போது நம் வாசிப்பில் ஒரு தடை ஏற்படுகிறது. ‘விரைந்து சாயும் முன்மாலைப் பொழுது’ என்ற இயல்பான சொற்களுக்கு நடுவில் ‘மழை அந்திகளின்’ என்று வரும்போது அது தனித்து நிற்கிறது. நம் மனம் மழை பெய்யும் அந்திப் பொழுதுகளை நினைத்துப் பார்க்க கட்டாயப்படுத்தப்படுகிறது.

அடுத்து, ‘தொலைவில் எரிந்தடங்கும் ஒளியின் முன்’ என்பது இயல்பாக உள்ள வாக்கிய அமைப்பு. ஆனால் ‘தொலைவில் எரிந்தடங்கும்/ ஒளியின் முன்’ என்ற என்ஜாம்ப்மெண்ட், தொலைவில் எரிந்தடங்கும்’ என்ற இடத்தில் நாம் தயங்கி அடுத்த வரிக்கு விரைந்து ‘ஒளியின் முன்’ என்று பொருள் சேர்த்து நிறைவு செய்து கொள்ளச் செய்கிறது. நான்கு சொற்களும் தொடர்ந்து வந்திருந்தால், ஒளியின் மீது அழுத்தம் விழுந்திருக்கும். ஆனால் இரண்டாய் பிரியும்போது ‘எரிந்தடங்கும்’ என்ற சொல் அழுத்தம் பெற்று ஒளியால் துலக்கம் பெருகிறது.

இப்படி ‘எரிந்தடங்கும்’ என்ற சொல் அழுத்தம் பெருவதால்தான், ‘விண்ணைத் தீண்டக் கிளம்பும்/ மூன்று எரிகலன்கள்போல் நிற்கும்’ என்பதில் ‘எரிகலன்களில்’ நம் கவனம் செல்கிறது. பிரம்பனான் கோவிற் சிகரங்கள் நிலையானவை, அதன் கோபுரங்கள் வானுயர்ந்து நிற்பவை என்ற எண்ணத்துக்கு மாறாய், அவை எரிகலன்கள் போல் உயர்ந்து வீழக்கூடியவை என்ற தோற்றம் காண்கிறோம்.

‘விண்ணைத் தீண்டக் கிளம்பும்’ என்பதில் ‘கிளம்பும்’ என்ற இடத்தின் அழுத்தம், ‘ஒளியின் முன்’ என்று தாமதித்துத் தொடர்ந்து, ‘மூன்று எரிகலன்கள்போல் நிற்கும்’ என்பதில் ‘நிற்கும்’ என்ற இடத்தில் அழுத்தம் பெற்று, ‘பிரம்பனான் கோவிற் சிகரங்களை’ என்று தீர்மானமில்லாமல் நின்று, ‘நோக்கி’ என்ற ஒற்றைச் சொல்லில் உடைந்து, ‘மது அருந்திக் கொண்டிருக்கிறேன்’ என்று முடியும்போது, கவிதை பெரும்பாலும் அர்த்தமில்லாமல் உடைக்கப்பட்ட கவிதை வரிகளாய் ஆகிறது. ‘நோக்கி’ என்ற ஒற்றைச் சொல்லால் ஆன வரிக்கு கவிதையில் அதற்குத் தேவையில்லாத அழுத்தம் கிடைக்கிறது.

அதன் பின் வரும், ‘கருமையும் அடர்த்தியும்/ கலந்து சாயும் மழைத்தீற்றலினூடே’ என்பதில் இரண்டு வரிகளுக்குமிடையில் எந்த இசைவும் இல்லை. ஆனால், இதில் கருமையும் அடர்த்தியும் என்ற சொற்கள் துல்லியமான வண்ணங்களை உணர்த்தி, சாயம் என்பதை எதிரொலிக்கும், ‘கலந்து சாயும் மழைத்தீற்றல்’ ஒரு ஓவியத்துக்குரிய நுட்பம் கொண்டிருக்கிறது. இங்கு ஓசையால் கவிதையாகாதபோதும் கற்பனையைக் கிளர்த்துவதால் கவித்துவம் கொள்கிறது. அடுத்து, ‘தெருவின் இரைச்சலைப் பின்விட்டு/ தனித்து அமர்ந்திருக்கும்/ என்னெதிரில் அமர்கிறாள் அவள்’ என்று இயல்பாக இருக்க வேண்டிய வரிகள், ‘மழைத்தீற்றலினூடே/ தெருவின் இரைச்சலைப் பின்விட்டு/ விடுதியின் சாளரத்தில்/ தனித்து அமர்ந்திருக்கும்/ என்னெதிரில் அமர்கிறாள் அவள்’ என்று இருப்பதில் ஒரு துல்லியம் இருக்கிறது. மழைத்தீற்றல், தெருவின் இரைச்சல் எல்லாம் விடுதியின் சாளரப் பின்னணியில் இருக்கின்றன, இந்தத் தனிமையில் துணையாய் அவள் வந்து அமர்கிறாள்.

அதைத் தொடர்ந்து, ‘சிறகை சிலிர்த்து நீர்த்துளிகள்’, ‘உதிர்க்கும் பறவைபோல்’, ‘நீவிக்கொள்கிறாள்’, என்ற மூன்று தனித்தனி வரிகள் ஒரு பெண்ணை நினைக்க வைப்பதில்லை, நம் முன் ஒரு பறவைதான் நிற்கிறது.

அதன் பின் வரும், ‘இந்தியனா என்கிறாள்/ எனக்குத் தெரியும்/ இதையும் இதற்கடுத்த/ எந்த இரு கேள்விகளையும்/ நான் எதிர்பார்க்கலாமென’ என்ற ஸ்டான்ஸாவோ, அதையடுத்து வரும், ‘ஆமோதிக்கும் புன்னகைக்குப் பிறகு/ பிரம்பனான் கோவில் வளாகம் பார்த்தேனா/ என்று வினவுகிறாள்/’ என்பதுவோ கவிதைக்குத் தேவையாகத் தெரியவில்லை.

இது எதுவும் இல்லாமல், ‘மழையின் ஓசை/ ஒரு சுதியேறி சீரான கதியில் பெய்கிறது’ என்று தொடர்ந்திருக்கலாம். இடையூடாய் வரும், ‘பதிலாக அவள் அருந்த/ என்ன வேண்டுமெனக் கேட்கிறேன்’ என்பதைத் தவிர்த்து மௌனத்தில் முடித்திருக்கலாம்:

இரு கோப்பைகள்
நிறைந்தும் குறைந்தும்
மழைச்சாரலில் நனைந்த
புன்னகைகள் கடந்தும்
இருவரும் தத்தம்
கோப்பைகளை ஏந்திக்கொண்டு
கவியும் இருளில்
கரைந்து கொண்டிருக்கிறோம்.

oOo

வாழ்க்கை என்று பார்த்தால் பெரும்பாலான பொழுது அர்த்தமில்லாமலும் முக்கியமில்லாமல் அலுப்பூட்டும் வேலைகளில் கழிந்து கொண்டிருக்கிறது, எதுவும் செய்யாமலும் ஏதோ ஒன்றைச் செய்து கொண்டும் சும்மா இருக்கும் பொழுதுகளைப் பற்றி கதை கவிதைகள் எழுத முடியாது. அசாதாரண கணங்கள், அசாதாரண மனிதர்கள், அசாதாரண காட்சிகள், அசாதாரணச் செயல்களை நம்மாலும் விவரிக்க முடிந்தால் நன்றாக இருக்கும். ஆனால் அவை மட்டும்தான் கவிதைத் தருணங்கள் என்ற நிலையைக் கடந்து வந்தாயிற்று. எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்று இருந்தாலும் அன்றாட வாழ்க்கையில் அர்த்தமுள்ளதை, முக்கியமானதை, அழகானதைத் தேர்ந்தெடுக்கும் செயலாக கவிதை ஆகிறது- உலகும் மனமும் உறைநிலையிலிருந்து அசையும் ஒரு ஆற்றுகைத் தருணம் என்று சொல்லலாம்.

இந்தக் கவிதையில் எதுவெல்லாம் தேவையில்லை, கவிதைக்கு உரியவையாக இல்லை என்று நினைக்கிறோமோ, அதுவெல்லாம் banal என்று சொல்லக்கூடிய விஷயங்கள் (‘so lacking in originality as to be obvious and boring‘). இங்கு எதுவெல்லாம் கவித்துவ மொழியில் வெளிப்படுகிறதோ, அதுவெல்லாம் sublime என்று சொல்லக்கூடியவை (‘elevated or lofty in thought, language, etc‘).

உயர்ந்த கவிதை, உயர்ந்த கதை, உயர்ந்த இலக்கியம் என்று நாம் சொல்வது இந்த ”elevated or lofty‘ என்ற அர்த்தத்தில்தான். சராசரியிலிருந்து அந்த அளவுக்காவது மேலெழும்பி நிற்பதால்தான், அதன் உயரத்துக்கு ஏற்ப, ‘excellence‘, ‘grand‘, ‘outstanding‘ முதலிய வியப்புணர்வுக்கு sublime என்ற சொல் இடம் கொடுக்கிறது. இந்த அர்த்தத்தில் எல்லா கவிதைகளும் சப்லைமாக இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், நம் அனுபவ வாழ்வில் எதுவொன்று மிகச் சாதாரணமாக, செய்வதையே திரும்பத் திரும்பச் செய்வதாக இருக்கிறதோ, அதிலிருந்து உயர்ந்த இலக்கியத்துக்கு உரிய விஷயங்களை கடைந்தெடுக்க வேண்டியதாக இருக்கிறது. அது சில சமயம் சாதாரண விஷயங்களை அசாதாரண வண்ணங்களில் காணச் செய்வதாக இருக்கிறது, சில சமயம் அசாதாரண கணங்கள் நம் சாதாரணத்துவத்தில் காணாமல் போகிய பின்னர் நினைவின் துணையோடு மீட்டெடுக்கப்படுவதாகவும் ஆகிறது.

தொடர்புடைய பதிவு-

ஆற்றுகை – சில குறிப்புகள்

ஆற்றுகை – சில குறிப்புகள்

பீட்டர் பொங்கல்

I

நாமெல்லாம் ஒரு காட்சி அல்லது ஒரு எண்ணம் அல்லது ஒரு உணர்வு என்று ஏதேனும் ஒன்று சிக்கினால் அதைக் கவிதையாக்கப் பார்ப்பவர்கள். கணங்களைப் பகிரும் யுகம் இது. சாமானியர்கள் மொபைலில் போட்டோ பிடித்து போட்டால், கவிஞர்கள் சொற்சிலம்பம் ஆடப் புறப்பட்டு விடுகிறார்கள். நன்றாக எழுதப்பட்டால் இந்த ஸ்நாப்ஷாட்டுகள் ரசிக்கும்படியாகவே உள்ளன.

போட்டோவுக்கும் ஓவியத்துக்கும் என்ன ஒரு வித்தியாசம் என்று யோசித்துப் பார்த்தால் நிகழ்கணத்தை உறையச் செய்வதுதான் புகைப்படத்தின் தனித்தன்மை என்று தோன்றுகிறது- இங்கிருக்கும் புகைப்படம் அதற்கு ஒரு உதாரணம் The Falling Man. இங்கு காலம் உறைந்திருக்கிறது, இல்லையா? இது எத்தனையோ உணர்வுகளையும் எண்ணங்களையும் தூண்டுகிறது.

அது தவிர அழகான புகைப்படங்களும் இருக்கின்றன. பில்டர் சேர்த்தும் சேர்க்காமலும் நாம் பகிரும் புகைப்படங்கள் இப்படிப்பட்டவை, நம் ரசனை குறித்த அறிவிப்புகள். நம்மைப் பொறுத்தவரை இவையும் காலம் உறைந்திருக்கும் கணங்கள். ஆனால் பிறருக்கு வெறும் போட்டோவாக இருக்கலாம் – எல்லாரும்தான் அழகான போட்டோ எடுக்கிறார்கள். ஏன், அதற்கப்புறம் நூறு போட்டோ எடுத்து பகிர்ந்தபின் இது நமக்கும் சாதாரணமாய்ப் போய் விடுகிறது.

முக்கியமான ஒரு காட்சி அல்லது ஒரு எண்ணம் அல்லது ஒரு உணர்வு என்று எதையாவது கவிதையாக எழுதும்போது அது ஒரு ஸ்னாப்ஷாட் என்ற அளவில் அப்போது நமக்கு முக்கியமாக இருக்கலாம். ஆனால் அது போன்ற எத்தனையோ நம்மிடமிருந்தும் பிறரிடமிருந்து எடுத்தடுத்து வரும்போது நமக்கே அதன் கூர்மை மழுங்கிப் போகிறது. அது, நான் அழகாய் இருக்கிறேன், என்று சொல்கிறது. அதற்கு மேல் எதுவும் பேசக்கூடியதாக இல்லை. காரணம், காலம் அதில் உறையவில்லை. புகைப்படம் போலவே இப்படிப்பட்ட கவிதைகளில் காலத்தைக் கைப்பற்றுவதில்தான் இருக்கிறது கலை.

ஸ்ரீதர் நாராயணன் அண்மையில் எழுதிய கவிதை, ஆற்றுகை.

துவக்கத்தில் வருவது ஒவ்வொன்றும் ஒரு கணத்தைக் கைப்பற்றுகிறது.

ஆனால் தொடர்ந்து வரும் வரிகள்தான் கவிதையின் இதயம்.

இனிமையாக ஆரம்பிக்கிறது
இக்கணத்தின் நிலையுறுதி.

எதிர்நோக்கும் தருணங்களின்
அநிச்சயத்தால் கிளர்ச்சியுற்று
ஆற்றுகையின் அடுத்த படியென
அலையும் கடல் நீர்ப்பரப்பின்மீது
கால் பதிக்கிறேன்.

இப்படிப்பட்ட கவிதை ஒவ்வொன்றும் இது போன்ற ஒரு ஆற்றுகையின் துவக்க கணத்தில்தான் நிற்கிறது. அந்தக் கணம் தவறினால் காலம் தப்பி விடுகிறது, பத்தோடு பதினொன்றாகிறது.

அழகல்ல இக்கவிதைகளின் நியாயம் – அநிச்சயத்தின் கிளர்ச்சி. எளிமையாக இருக்கிறதோ, சிக்கலாக இருக்கிறதோ எது எப்படி இருந்தாலும், இந்த ஸ்நாப்ஷாட் கவிதைகளில் உள்ள சொற்களும் படிமங்களும் அர்த்தங்களும் நம் உள்ளத்தில் புரள வேண்டும். அப்படிப்பட்ட ஒரு உயிர்ப்பு நிலையில் காலத்தை உறையச் செய்திருப்பதே இக்கவிதையின் வெற்றி.

II

முதல் நான்கு பத்திகள் காட்சி விவரிப்புகள். தராசு முள் சாய்வதற்கு முந்தைய கணத்தைப் போன்ற, ஆற்றலின் சாத்தியங்கள் அத்தனையும் கைகூடி நிற்கும் தருணம்- பல்லவி முடிந்து ஒலிக்கும் கார்வை அடுத்த இடத்துக்குப் போகப் போகிறது. ஜிம்னாஸ்டிக்ஸ் பெண், குறுகிய கட்டைகளில் கைவிரித்து நடக்கிறாள்- அதிலிருந்து தாவிக் குட்டிக்கரணம் அடித்துப் பாயப் போகிறாள். அவநம்பிக்கையுடன் பேசிக் கொண்டிருப்பவர் மனம் மாறும் தருணம். வாண வேடிக்கைகளின் முதல் தீப்பொறி என்று நினைக்கிறேன், இனி அதன் ஒளி வானில் ஒரு சித்திரம் வரையும்.

“கடற்கரை மணலை
குழைத்து எழுப்பும்
சிறு கோபுரம்.”

இதுவரை வந்தது எல்லாம் வெற்றியை நோக்கிய முயற்சிகள் என்றால், இங்கு மட்டும் தோல்வியின் சாயை. கடற்கரை மணலில் எழுப்பும் கோபுரத்தை கடல் நீர் கொள்ளாமல் போனாலும் நாம் கொண்டு போக முடியாது, இல்லையா? ஒரு வியர்த்தச் செயல், இருந்தாலும் இதிலும் ஒரு காரியத்தைச் செய்து முடித்த சந்தோஷம்.

இத்தனைக்கும் அப்புறம்தான்-

“இனிமையாக ஆரம்பிக்கிறது
இக்கணத்தின் நிலையுறுதி.”

நான் துவங்கும் முயற்சிக்கு இது ஒரு இனிமையான ஆரம்பம்தான், இக்கணம் என் மனம் உறுதியாக இருக்கிறது. ஆங்கிலத்தில் Poise என்று ஒரு சொல் உண்டு. ‘balance; equilibrium,‘ என்று ஒரு பொருள். தராசு முள் நிமிர்ந்து நிலையாய் நிற்கிறது. அதே சொல், ‘Poised for growth‘, ‘poised for success‘ என்று ஒரு வழக்காகவும் புழங்குகிறது- ‘ready for something; in the right position and waiting for something,’ என்ற அர்த்தத்தில்.

இனி வருகின்றன இந்த வரிகள்-

“எதிர்நோக்கும் தருணங்களின்
அநிச்சயத்தால் கிளர்ச்சியுற்று
ஆற்றுகையின் அடுத்த படியென
அலையும் கடல் நீர்ப்பரப்பின்மீது
கால் பதிக்கிறேன்.”

தமிழில் ஆற்றுகை என்றால் ஆங்கிலத்தில் performance- adventure sportsகளில் ஈடுபடுபவர்களின் த்ரில் என்ன? உயரத்தில் கட்டப்பட்ட கம்பி அறுபடலாம், நம் படகு காட்டாற்றில் கவிழலாம், கால் பிசகி நாம் கீழே விழலாம்- இந்த ஆபத்து ஒரு கிளர்ச்சியளிக்கிறது, இல்லையா? அந்தக் கிளர்ச்சியே என்னை ஆற்றுகையின் அடுத்த படிக்கும் கொண்டு செல்கிறது-

“அலையும் கடல் நீர்ப்பரப்பின்மீது
கால் பதிக்கிறேன்.”

புதிய ஊர், புதிய உறவு, புதிய வேலை- பழக்கமில்லாத எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்: நீர்ப்பரப்பின் அலைகளைத்தான் நான் அறிகிறேன், அதன் ஆழங்கள் எனக்குத் தெரியாது. ஆனாலும் என் முதல் அடியை இப்போது எடுத்து வைக்கிறேன்.

ஆற்றுகை.