அசோகமித்திரன்

‘இந்தியா 1948’ – நான்கு பெண்கள்

அஜய் ஆர்

ami

அசோகமித்திரனின் ‘இந்தியா 1948‘ (குறு)நாவலில், அமெரிக்காவிற்கு அலுவல் சம்பந்தமாகச் செல்லும், திருமணமான கதைசொல்லி, அங்கு படிக்க வந்திருக்கும் விதவை இந்திய பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான். இந்தியாவிற்கு திரும்பும் அவன், இரண்டாம் திருமணம் குறித்து தன் குடும்பத்திற்கு தெரிந்து விடுமோ என்ற பயத்துடனும், தன் செயல் குறித்த குற்ற உணர்வுடனும் இருப்பது என நகரும் கதை, சுதந்திரத்திற்கு முன் அமெரிக்காவிற்குச் சென்று, சுதந்திரம் அடைந்தபின் திரும்பும் கதைசொல்லி காணும் சமூக/ அரசியலின் நுட்பமான மாற்றங்களை பதிவு செய்கிறது. கதைசொல்லியின் கோணத்திலேயே நகரும் கதையில், அவன் வாழ்வில் உள்ள பெண்களின் ஆளுமை (சிறிதளவே விவரிக்கப்பட்டாலும்) கதைசொல்லியை விட அதிகமாக வாசகனை ஈர்க்கிறது. குறிப்பாக, கதைசொல்லியின் தாயார், அவன் முதல் மனைவி பார்வதி, இரண்டாவதாக திருமணம் செய்யும் லட்சுமி மற்றும் அவளின் தாய்.

இளம் வயதில் கணவனை இழந்து, சகோதர்களுடன் வசித்து குழந்தைகளை வளர்த்தவர் கதைசொல்லியின் தாய். அவள் அண்ணன், சந்நியாசம் பெற முடிவு செய்து அதற்கு முன் தன் மகள் பார்வதியை கதைசொல்லிக்கு மணம் செய்ய முடிவு செய்யும்போதும் அவருக்கு அது குறித்துச் சொல்ல ஒன்றுமில்லை. மகன் வேலைக்குச் சென்று நல்ல நிலைமைக்கு வந்தவுடன், அவரது தாயின் ஆளுமை உருப்பெறுகிறது- அல்லது, அதுவரை அடக்கி/ மறைத்து வைக்கப்பட்டிருந்தது வெளிவருகிறது. இது அவர் ஏதோ, மருமகளை கொடுமை செய்கிறார் அல்லது பகட்டாக வாழ ஆரம்பிக்கிறார் என்ற பொருளில் சொல்லப்படுவதில்லை. மருகளை அவர் நன்றாகவே நடத்துகிறார், ஆனால் தன மருமகளுக்கு அவள் எப்போதும் உறவு பேண விரும்பாத மாமியார் தான், தோழி அல்ல, என்பது நுட்பமாக உணர்த்தப்படுகிறது. தன் இரண்டாவது மகனுக்கு பெண் தேடும்போது, அவர் கொள்ளும் உற்சாகம், மணம் பேசப்படும் பெண்கள் குறித்த சந்தேகங்களை அவ்வப்போது கேட்டுத் தீர்த்துக் கொள்வது என அவர் நடந்து கொள்வது ஏதோ படாடோபத்தின் வெளிப்பாடாக இல்லாமல் முதல் மகனின் திருமணத்தில் எந்த வார்த்தையும்/ கருத்தும் பேச முடியாததை ஈடு செய்யும் ஒன்றாகவே பார்க்கலாம். குடும்பத்தில் இறுதி முடிவு எடுப்பவர் என்ற அளவில், அனைத்தும் இயல்பாகவே அவர் கட்டுப்பாட்டில் வந்துவிடுகிறது

ஐந்து வயதில் திருமணமாகி பத்து வயதில் விதவையான லட்சுமி, சமூகவியல் துறையில்டாக்டரேட் செய்ய அமெரிக்கா சென்று படிக்குமளவிற்கு திடசித்தம் கொண்டவள், பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவள். லட்சுமியை ஒரு ஆபத்திலிருந்து கதைசொல்லி காப்பாற்றி , இக்கட்டான சூழலில் அவளை மணம் முடிக்க வேண்டியுள்ளது போன்றெல்லாம் நாடகீயமாக எதுவும் நடப்பதில்லை. ‘லட்சுமி’ என்பவர் உரையாற்றப் போவதாக உள்ளூர் ஆங்கில பத்திரிகையில் படித்து, அவர் தமிழர் என்று எண்ணி கதைசொல்லி செல்கிறார். அங்கு அவர் ‘லட்சுமி’ அல்ல ‘லக்ஷ்மி’ என்ற குஜராத்திப் பெண் என்று தெரிகிறது (Lakshmi என்றே ஆங்கிலத்தில் எழுதப்படுவதால் புரிதலில் நிகழும் குழப்பத்தை அ.மி நுட்பமாகச் சுட்டுகிறார்). அவர்களின் அறிமுகம் இவ்வாறு நிகழ்கிறது.

லட்சுமி அமேரிக்கா வந்த இரு மாதங்களிலேயே எந்தெந்த ஊர்களில் எங்கு சைவ உணவு கிடைக்கும் என்ற பட்டியலைத் தயாரிக்கும் ஒழுங்கு உள்ளவள், படிப்பு முடிந்து இந்தியா வந்தவுடன் இயல்பாக இருக்க முடியாத குழந்தைகளுக்கு சிறப்புப் பள்ளி தொடங்க திட்டம் வைத்திருக்கிறாள். சிறுவயதிலேயே பல அனுபவங்களைப் பெற்று மன முதிர்ச்சி அடைந்த லட்சுமி ஓர் ஆணுடனான நான்காவது சந்திப்பிலேயே, என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா என்று ஏன் கேட்க வேண்டும், அவன் திருமணமானவன் என்று தெரிய வந்த பிறகும் தன் முடிவில் ஏன் உறுதியாக இருக்க வேண்டும்? கதைசொல்லியிடம் அவள் எதிர்பார்ப்பது என்ன? காமமா, பாதுகாப்பா இல்லை பரிவா?

“நீங்கள் ஒருமுறைகூட என்னை உங்கள் அறைக்குக் கூப்பிடவில்லை. அதுவே எனக்கு உங்கள் மீது நம்பிக்கை தந்தது.” என்று சொல்லும் போது அவள் எதிர்பார்ப்பது சமமான நிலையில் இருக்கும் தோழமையை, அதனால் உருவாகும் அன்பை என்று புரிந்து கொள்ளலாம். லட்சுமியின் முடிவு கதைசொல்லியின் குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்கும் என்பது உண்மைதான் என்றாலும் அவளை மணமானவனை மயக்கும் குடிகெடுப்பவள் (home-breaker) என்று சொல்ல முடியுமா என்ன?

லட்சுமியின் தாயாரும் இரண்டாவது மனைவியாக வாழ்க்கைப்பட்டு விதவையானவர். விதவையான மகளின் எண்ணங்களுக்கு பக்கபலமாக இருக்கிறார். உனக்கு அவன் மீது நம்பிக்கை இருந்தால் திருமணம் செய்து கொள் என்று சொல்லுமளவிற்கு மகள் மீது அவருக்கும், அனைத்தையும் தாயிடம் பகிர்ந்து கொள்ளுமளவிற்கு லட்சுமிக்கு அவரிடமும் பரஸ்பரம் புரிதல் உள்ளது. தன் மகள் வாழ வேண்டும் என்ற பரிதவிப்பு இருந்தாலும், திருமணம் செய்து கொண்டவனின் குடும்பத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறார். அதனால்தான் கதைசொல்லி இந்த விஷயத்தை தன் குடும்பத்தினரிடம் சொல்லி விட்டானா என்று கேட்டாலும், அது குறித்து அவர் வற்புறுத்துவதில்லை. அனைவரும் ஒன்றாக இருக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருக்கிறார்.

இந்த நான்கு பெண்களில், கதைசொல்லியின் செயலால் மிகவும் பாதிக்கப்படப்போகும் முதல் மனைவியான பார்வதி பற்றி வாசகனுக்கு தெரியவருவது குறைவு தான் என்பது முதல் பார்வையில் ஆச்சரியமாகத் தோன்றலாம். ஆனால் குற்ற உணர்வால், மனைவியை எதிர்கொள்ளும் துணிவு இல்லாத கதைசொல்லி அவளைக் குறித்து/ அவர்களிடையே உள்ள உறவு குறித்து வாசகனிடம் அதிகம் பகிர்ந்து கொள்வதில்லை என்பது எதிர்பார்க்கக்கூடிய ஒன்று தான். தந்தை தனக்கு தன்னிச்சையாக முடிவு செய்த திருமணத்தைக் குறித்தும், கணவன் குறித்தும் அவள் என்ன நினைக்கிறாள். அவளைக் குறித்தும்/ அவர்களுக்கிடையே பெரிய உரையாடல் என்று ஒன்றும் நடப்பது போலவும் கதைசொல்லி எதுவும் சொல்வதில்லை என்றாலும், அவள், இரண்டாம் திருமணம் செய்தது குறித்து தனக்குள்ளே நடந்து கொண்டிருக்கும் மனப்போரட்டம் குறித்து சந்தேகம் கொண்டிருப்பாள் என்றே எண்ணுகிறான். வாயில்லாப் பூச்சி என்று அவளை எண்ண முடியாது, தங்களுக்குத் தெரிந்தவர்கள் வீட்டுப் பெண்ணை (வேறு மொழி/ ஜாதியாக இருந்தாலும்), கணவனின் தம்பி மணிக்கு மணம் முடிக்கும் ஆசை பார்வதிக்கு உள்ளது, அது சில காரணங்களால் நிறைவேறாமல் போனாலும், மணியின் மனைவியுடன் சுமுகமாகவே இருக்கிறாள். தெரிந்தவர் என்று கூறி லட்சுமியின் தாயார் வீட்டிற்கு அவர்களை கதைசொல்லி அழைத்துச் செல்வதும், அவர் இவர்கள் வீட்டிற்கு வருவதும், ஏதோ பிரச்சனை உள்ளது என்று பார்வதியின் உள்ளுணர்வில் கண்டிப்பாக தோன்றி இருக்கும். ஆனாலும் அதைப் பற்றி தானாக எதுவும் விசாரிக்காமல் இருக்கிறாள். உண்மை வெளிவந்தவுடன் அவள் முதலில் வருந்தினாலும், தந்தை சொல்வதைக் கேட்டு சற்றே தெளிவடைகிறாள் (அதே நேரம் கதைசொல்லியின் தாயால் அவன் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை).

அடுத்து என்ன செய்வதென்று யாரும் முடிவெடுக்க முடியாமல் உள்ள நிலையில் ஒரு துயரச் சம்பவம் நிகழ்கிறது. கதைசொல்லியின் குடும்பத்தினர், லட்சுமியையும் அவள் தாயரையும் சந்திக்கின்றனர். கதை இங்கு முடிய அடுத்து என்ன நிகழும்?

நாவலில் ஒரு சம்பவம். கதைசொல்லிக்கு அலுவலகத்திலிருந்து கார் அளிக்கப்படுகிறது. ஆனால் கதைசொல்லி காரில் செல்லாமல், ரயிலில் தான் அலுவலகம் செல்கிறார். ஒரு நாள் அலுவல் முடிந்து வீட்டிற்கு வர, வீடு பூட்டி இருப்பதோடு காரும் இல்லை. பிறகு மணியின் மனைவி ஜானகி கார் ஓட்டிவர, பார்வதியும்/ கதைசொல்லியின் தாயாரும் கடைக்குச் சென்று திரும்பி வருகிறார்கள். உனக்கு கார் ஓட்டத் தெரியுமா, ஓட்டும் ஒரிமம் உள்ளதா என்று சற்றே ஆச்சரியத்தோடு கதைசொல்லி கேட்க, 18 வயதிலேயே கற்றுக்கொண்டதாக சாதாரணமாகச் சொல்லிச் செல்கிறாள் ஜானகி.

இந்தக் கதையின் பெண்கள் அனைவரும் இதைப் போலவே, கதைசொல்லியும்/ வாசகனும் அறிந்திராத, சரியான நேரத்தில் வெளிப்படும் ஆளுமைத்திறனும் நெஞ்சுறுதியும் கொண்டவர்கள். எனவே கதை தீர்வு சொல்லாமல் முடியும் இடத்திலிருந்து அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய தோதான முடிவை அவர்கள் எடுத்திருப்பார்கள் என்று நம்பலாம். திடசித்தம் படைத்த, கதைசொல்லியின் மேல் அன்பும் கரிசனமும் கொண்ட இத்தனை பெண்கள் அவன் வாழ்வில் இருப்பது அவனுடைய அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.

பி.கு

அ.மியின் ‘பம்பாய் 1944‘ குறுநாவலின் தொடர்ச்சியாக, இன்னொரு பாத்திரத்தின் பார்வையில் விரியும் நாவலாக ‘இந்தியா 1948‘ஐ பார்க்கலாம். இரண்டையும் தனி நாவல்களாகவும் படிக்கலாம் என்றாலும், ஒன்றன் பின் ஒன்றாகப் படிப்பதும் ஒன்றை ஒன்று நிரப்ப உதவும்.

அசோகமித்திரனின் “இரண்டு விரல் தட்டச்சு”

அஜய் ஆர்

photo

துர்ச்சகுனங்கள் என்று சரளா நம்பும் சில சம்பவங்கள் காலையில் அவள் வீட்டில் நடக்கின்றன. தன் கணவனுடன் வண்டியில் அலுவலகம் செல்லும்போது அவள் அலைபேசியில் பேசவேண்டிய சூழலில், கணவன் வண்டி கட்டுப்பாட்டை இழந்து ஒரு கோர விபத்து நிகழ்கிறது. வண்டி ஓட்டும்போது அலைபேசியில் பேசக்கூடாது என்ற செய்தியை எடுத்துக் கொள்ளவேண்டிய கதை மட்டுமா இது? நேரடியான/ விரிவான விவரிப்புக்கள் இல்லாமல், சரளாவின் கணவன் பெயர் ‘ஜான்ஸன்’, தம்பதியர் தனியே வசிக்கிறார்கள், அலுவலகத்திற்கு அவர்கள் தயாராவது என்று நமக்கு அவர்கள் குறித்து அசோகமித்திரன் சொல்லிச் செல்வது, அவர்கள் காதல் திருமணம் புரிந்தவர்களா, இரு தரப்பு பெற்றோர்களும் அதை ஏற்றுக்கொண்டார்களா, தம்பதியரின் கனவுகள் என்னவாக இருந்திருக்கும் போன்ற கேள்விகளை எழுப்புவதால், சற்று தொலைவில் நடக்கும் விபத்தைப் பார்த்து ஒரு கணம் வருந்தி விட்டு விலகிச் செல்வதைப் போல் இல்லாமல், வாசகனை விபத்திற்கு மிக அருகில் நிறுத்தி சஞ்சலமடையச் செய்கிறது.

இப்படி, ஒன்றைத் தொட்டு ஆரம்பித்து, வேறு பல விஷயங்களைத் தொட்டுச் சென்று ஒரு சரடாக இணைப்பது அமி.யின் புனைவுலகில் புதிதில்லை. 1998ல் வெளிவந்த அ.மியின் ‘புதிய பயிற்சி’ கதையில் கணினி பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளராக இருக்கும் மகள் அலுவலகத்திலிருந்து திரும்புவதை எதிர்பார்த்து அவர் தந்தை பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருக்கிறார். மகளின் வரவுக்காக காத்திருக்கும் அந்தப் புள்ளியில் ஆரம்பித்து, சாலைகளின் மோசமான நிலைமை, மகளின் வேலைப்பளு, கணினி யுகம் மலர்வதைப் பற்றிய புரிந்தும்-புரியாததுமாகிய அவருடைய சிந்தனைகள் என்று கதை விரிகிறது. மாணவர்கள் தாங்கள் பயிற்சி பெற்ற நிலையத்திலேயே பயிற்சியாளராக வேலைக்குச் சேர்வதால்- அவர் மகளே அப்படித்தான் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்- பயிற்சியின் தரம் எப்படி இருக்கும் என்பது போன்ற கூர்மையான அவதானிப்பும் உள்ளது. தன் மகளே தனக்கு போட்டியாளர்களை உற்பத்தி செய்கிறாளே என்ற அவரின் சிந்தனையுடன் கதை முடியும்போது (இத்தனை ஆண்டுகளில் தோன்றிய கணினி நிறுவனங்கள், அங்கு பயிற்சி பெறுபவர்கள்/ பெற்றவர்கள் எண்ணிக்கையும், அவர்களுக்கு இன்று காத்திருக்கும் வேலைவாய்ப்புகளையும் இங்கு ஒப்பிட்டுக் கொள்ளலாம்) மீண்டும் தந்தையாகி விடுகிறார். இந்தக் கதையை இங்கு குறிப்பிடுவது இதுவும் ‘சகுனம்’ கதை போல் சமகாலத்தில் சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை முன்வைத்து ஆரம்பித்து, அதை விரித்துச் செல்கிறது என்பதால். அ.மி எப்போதும் சமூக மாற்றங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார், அது குறித்த நுட்பமான அவதானிப்புக்கள் அவரிடம் உள்ளன என்பதும் தெரிகிறது.

இப்படி விரிந்து செல்லும் தன்மையை ‘இரண்டு விரல் தட்டச்சு’ தொகுப்பின் பல கதைகளில் காண்கிறோம். ‘உறுப்பு அறுவடை’, கதைசொல்லியின் பேத்தியை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வேன் உரிமையாளனுடன் கதைசொல்லியின் உரையாடலாக ஆரம்பிக்கும் கதை, வெகு தொலைவில் உள்ள பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்ப்பது, சாலைகளின் மோசமான நிலை, வண்டிகளுக்கு ஏற்படும் விபத்து என்று விரியும்போது இதுவும் இன்றைய சூழல் பற்றிய விமர்சனமா என்று தோன்றலாம். ஆனால் அ.மியின் புனைவுலகு அப்படி ஒரு நேர்க்கோட்டுத் தன்மையைக் கொண்டிருப்பதில்லை. வேன் உரிமையாளர் சரவணனின் மனைவியை கதைசொல்லியும் நாமும் சந்திக்கிறோம். குடித்து கல்லீரல் கெட்டுக் கிடக்கும் சரவணன் பற்றி தெரிய வர, அவளுக்கு கதைசொல்லி உதவுகிறார். அந்தப் பெண்மணி கணவனுக்காக படும் இன்னல்களைப் பார்த்து “நான் நினைத்துப் பார்த்தேன். இந்த வியாதி சரவணன் மனைவிக்கு ஏற்பட்டிருந்தால் சரவணன் யாரையாவது உதவிக்குத் தேடித் போவானா” என்று கதைசொல்லி நினைப்பது. அ.மியின் புனைவுலகில் எங்கும் தென்படும் பெண்களின் துயரின் மீதுள்ள கரிசனத்திற்கு ஒரு சான்று.

சிறு பிள்ளைகளைப் பறி கொடுப்பவர்கள், இரண்டாவது மனைவியாக வாழ்க்கைப்பட்டவருக்கு மகள்களாகப் பிறந்து, வெண்குஷ்டத்தால் பாதிக்கப்பட்டு, படிப்பை நிறுத்தி பின் தந்தையின் உறவினர்களால் வீட்டை விட்டு துரத்தப்படும் போது விபரீத முடிவெடுப்பவர்கள் (ஒரு நண்பனைத் தேடி), என்று பல கதைகளின் பாத்திரங்கள் துயரின் நிழலில் தான் உள்ளார்கள். அதே நேரம் இவர்கள் எல்லோரும் விதியே என்று உட்கார்ந்து விடுபவர்களும் அல்ல. கணவனால் கைவிடப்பட்ட பெண் நடத்தும் தட்டச்சு நிறுவனம், அதில் படிக்க வரும் – குடிகார தந்தையினால் பாதிக்கப்பட்ட – இளம் பெண்கள், தங்கள் சூழலைத் தாண்டிச் செல்லும் உந்துதல் உள்ளவர்கள்.

ஏதோ பூஜை என்று கிளம்பிச் சென்ற கணவன் திரும்பி வராமல் போக, ஒரே ஒரு முறை தன் கணவனுடன் பார்த்த கதைசொல்லியிடம் அவனைத் தேடும்படி உதவி கேட்குமளவிற்கு -இந்தப் பெண்மணிக்கும், ‘உறுப்பு அறுவடை’ கதையின் ‘சரவணன்’ மனைவிக்கும் அதிக வித்தியாசம் இல்லை- அவர்களிடம் செயலூக்கம் உண்டு(அகோரத் தபசி).

துயர் நிறைந்த வாழ்வெனும்போது, ஜோசியம்/ ஜோசியர்கள் அவ்வப்போது தலைகாட்டுவது ஒன்றும் ஆச்சர்யமில்லை. கண்டம் கதையில் ஜோசியம் தெரிந்த (ஆனால் ஜோசியர் அல்ல) ஒருவர் வலிய வந்து தனக்குத் தெரிந்தவர் குழந்தைகளுக்கு ஜோசியம் பார்க்கிறார். “எந்தக் குழந்தைக்கும் கண்டம் இல்லாமல் பார்த்துக்கொள்” என்ற வேண்டுதலுடன் கதை முடியும்போது, அது ஜோசியம்/ அதன் பாதிப்பு இவற்றைப் பற்றிய கதையாக இல்லாமல், மானுட நேசத்தைப் பற்றிய அ.மியின் இன்னொரு கதையாக மாறுகிறது. ‘ஜோதிடம் பற்றி ‘இன்னொரு கர்ணப் பரம்பரைக் கதை’ கதையிலும் ஜோசியம் வருகிறது, கண்டம் உள்ள கணவனை மலைப்பாம்பிடமிருந்து மனைவி காப்பாற்றுகிறார். விதியை மதியால் வெல்லும் இன்னொரு கதை என்று நினைப்பதற்குள், “ஜோதிடர்கள் கிரகங்களையும் ராசிகளையும் ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். எங்கோ தூரத்தில் ஒரு மலைப்பாம்பு இரையைத் தேடித் போய்க் கொண்டிருக்கிறது” என்று கதை முடிவது புன்சிரிப்பை வரவழைப்பதோடு, மலைப்பாம்பு இரையைத் தேடி (தொலைத்து) அலைவது, என்னதான் ஜோசியம்/ பிரார்த்தனை என்றிருந்தாலும், மனிதர்களும் அவரவர் இரையைத் தேடி அலைந்து அதில் வெற்றி/ தோல்வி பெறுவதை நினைவூட்டுகிறது. பள்ளி ஆண்டு விழாவில், பல இரைச்சலுக்கு இடையில் தன் அக்கா பாடியதைப் பற்றி “எங்கள்வரை அது மிகவும் நன்றாக இருந்தது. ஆனால் யாரும் கேட்க முடியாதபடி ஒரே கூச்சல் குழப்பம்” என்று சொல்வது அ.மியின் தாழ்குரல் நகைச்சுவையுணர்விற்கு இன்னொரு சான்று.

அ.மியின் கதைத் தொகுப்பில் ‘லான்ஸர் பாரக்ஸ்’ இல்லாமலும், அதில் ‘மாடுகள்’ உலா வராமலும் இருந்தால் நிறைவின்மை இருக்குமல்லவா? இதில் இரண்டு கதைகளில் மாடு வருகிறது. மாடு வளர்ப்பு, அது ஓடிப்போவது என ஆரம்பித்து, பாழடைந்த கோட்டையில், அதன் வரலாறு குறித்த கதைசொல்லியின் கற்பனைகளோடு இணையும் ‘கோட்டை’ சிறுகதை, கோட்டையை மீண்டும் ஒரு முறை நன்றாக சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற தன் ஆசை நிறைவேறாமல் “இனிமேல் முடியவே முடியாது என்றிருந்த நீண்ட பட்டியலில் அந்தக் கோட்டையும் சேர்ந்து கொண்டது” என்று கதைசொல்லி சொல்லும் இடத்தில்,ஆயாசமோ, வருத்தமோ இல்லாமல், எதையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட மனப்பக்குவமே தெரிவதோடு, சிறு வயது நினைவுகள் என்ற இடத்திலிருந்து தாவி, கதைசொல்லியின் நிராசைகளின் புகலிடமான, அந்தரங்கமான இன்னொரு இடத்திற்குச் செல்கிறது. ‘தோல் பை’ கதையிலும் மாடு/ மாடு வளர்ப்புப் புராணம், ‘சுந்தர்'(!!) என்ற மாடு வருகிறது. மாடுகளின் இறப்பு மனிதர்களின் இறப்பைப் போல் துயரத்தைத் தருவதைப் பார்க்கிறோம். (தோல் பையைப் பார்த்து “எவ்வளவு செல்லமாக வளர்த்தாலும் மாடுகள் இப்படித்தான் முடிய வேண்டியிருக்கிறது”, என்று கதைசொல்லி நினைத்துக் கொள்கிறார்)

சம்பவம் 1

தனக்கு கடன் கொடுக்கும் சரவணனுடன் கதைசொல்லிக்கு சற்றே கடுமையான உரையாடல் நடக்கிறது (வாடிக்கை). அடுத்த மாதம் சரவணனைப் பார்க்கும் கதைசொல்லி, அவன் மனைவி அவனுடன் சண்டையிட்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளதை அறிந்து, ஒரு நாள் விடுமுறை எடுத்து, தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு வேலூர் சென்று சமாதானம் செய்கிறார்.

சம்பவம் 2

‘இரு நண்பர்கள்’ கதையில், வேலை தேடும் இருவரில் ஒருவர் தான் விண்ணப்பித்துள்ள வேலைக்கு, அது குறித்த நம்பிக்கை இல்லாத தன் நண்பனையும் விண்ணப்பிக்க வலியுறுத்துகிறான். வலியுறுத்துபவனுக்கு வேலை கிடைக்கவில்லை. வெகு நாட்கள் கழித்து, தன் நண்பனுக்கு அந்த வேலை கிடைத்தது என்று அறியும் போது அவனுக்கு எவ்வளவு மகிழ்சிகரமான விஷயம். ஆனால், அவனிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். சொல்லவில்லை. கூச்சமாக இருந்திருக்குமோ? “அந்த நேரத்தில் இப்படித் தன்னிடம் கூட அந்த நண்பன் கூச்சப்பட்டிருக்கிறானே என்ற எண்ணந்தான் வருத்தமளித்தது”

சம்பவம் 3

தாய் இறந்த செய்தியைத் தெரிவிக்க, நள்ளிரவு தாண்டி தந்தி அலுவலகம் செல்லும் சங்கரன் (தந்தி), அலுவலர்கள் தூக்க கலக்கத்திலும் தனக்கு சில சிறு உதவிகள் செய்வதைப் பார்த்து “நள்ளிரவு தாண்டி இரண்டு மணி நேரம் கழித்தும் ஒரு தந்திக்காரருக்கு இவ்வளவு அனுதாபம் கொள்ளத் தோன்றுகிறது” என்று நினைக்கிறான்.

முதல் சம்பவத்தில் பண நெருக்கடியில் இருக்கும் கதைசொல்லி, தொழில் முறையில் மட்டுமே தெரிந்தவனுக்காக வலியச் சென்று உதவுகிறார். வெறும் பண பரிவர்த்தனைதான் என்று பார்க்காமல் “அவன் எனக்கு எவ்வளவோ உதவி பண்ணியிருக்கான். அதெல்லாம் எதுக்கு. அந்தக் குழந்தைங்க படிப்பு கெடக்கூடாது” என்கிறார். இரண்டாவது சம்பவத்தில் முதல் நண்பன், வேலை கிடைத்த விஷயம் தனக்கு சொல்லப்படாதது குறித்து துணுக்குற்றாலும், அது குறித்து மொத்தத்தில் மகிழ்ச்சியாகவே இருக்கிறான். மூன்றாவது சம்பவத்தில் தாயை இழந்த பெரிய துக்கத்திலும், தன் வேலையின் எல்லைகளைத் சற்றேத் தாண்டி உதவி செய்யும் நபரை சங்கரனால் கவனிக்க முடிகிறது.

மூன்று சம்பவங்களிலும் உள்ள ஒற்றுமை சக மனிதரிடம் கரிசனம், மனித நேயம் வெளிப்படும் இடங்கள். இவை வாழ்வை முற்றிலும் வெளிச்சமாக்கும் ஒளி அல்ல, என்றேனும் வெளிச்சம் வரும் என்ற நம்பிக்கை தரும் கீற்றுக்கள் மட்டுமே. தந்தி அலுவலக ஊழியர், தாய் மரணம் இல்லாத இன்னொரு செய்திக்காக சங்கரன் சென்றிருந்தால், நள்ளிரவைத் தாண்டிய அந்த வேளையில் எப்படி நடந்து கொண்டிருப்பார்? ‘வாடிக்கை’ கதையில், மனைவியை சமாதானம் செய்ததற்காக நன்றி சொல்ல வரும் சரவணனிடம், கதைசொல்லி ஐநூறு ருபாய் கடன் கேட்கிறார். ஆம், அவர் அந்த ஐநூறு ரூபாய்க்காக வேலூர் செல்லவில்லைதான், அதற்கு கூலியாக அந்தப் பணத்தைக் கேட்கவும் இல்லைதான், ஆனால் பணமுடைதான் அவர் வாழ்வின் யதார்த்தம் என்பதால், அவர் அப்படிக் கேட்பது தவிர்க்க முடியாததாகிறது.

ஆகாயத் தாமரை நாவலின் நாயகன் ரகுநாதன் ஒரு இக்கட்டில் இருக்கும் போது அவன் சிறு வயது/ கல்லூரித் தோழி மாலதியைச் சில வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கிறான். அவர்களுக்கிடையே உள்ளது நட்பா அல்லது அதைத் தாண்டிய ஈர்ப்பா என்றெல்லாம் அ.மி சொல்வதில்லை. ஆனால் மாலதி ரகுநாதனுக்கு உதவ முயல்கிறாள், தனக்குத் தெரிந்த ஓர் இடத்திற்கு வேலைக்காக அழைத்துச் செல்கிறாள். அது பலனளிப்பதில்லை. நாவலில் ஒரு சில முறை மட்டுமே சந்திக்கும் அவர்கள், மீண்டும் தொடர்பற்று போகிறார்கள், மீண்டும் இரு ஆண்டுகளுக்குப் பிறகு எப்படியோ நிலைமை சீராகி ரகுநாதன் நல்ல நிலைக்கு வந்துவிட்ட நிலையில் ஒரு மிகச் சிறிய சந்திப்பு, அவ்வளவுதான். அவர்களுக்கிடையே இயல்பாக மீண்டும் ஏற்படும் தொடர்பும் அதே போல் இயல்பாகவே முறிகிறது. மாலதியால் உதவ முடியவில்லை. தொடர்பில் இருக்க முடியவில்லை தான், ஆனால் அவள் பொறுப்புள்ள வேலையில் இருக்கிறாள், அதை அப்படியே விட்டுவிட்டு எப்போதும் ரகுநாதனுக்காக அலையவேண்டும் என்று சொல்ல முடியாது, அப்படிச் செய்ய வேண்டிய தேவையும் இல்லை. மற்றவர்களுக்காக தன்னையே உருக்கிக் கொள்ளாமல், அதே நேரம் தன்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்ய முயலும் மாலதியை இந்தத் தொகுப்பில் உள்ள பாத்திரங்களோடு பொறுத்திப் பார்க்கலாம். யார் உதவ முன்வந்தாலும், இறுதியில் நமக்கு நாம்தான் உதவிக் கொண்டாக வேண்டும் என்ற புரிதலும் இதில் உள்ளது.

ஆனால், ஒரு போதும் நம்மை விட்டு நீங்காத துயரங்களை சுமந்தலையும் வாழ்வில், அடுத்த அடி எடுத்து வைத்து பயணத்தைத் தொடரும் ஊக்கத்தை இந்த நம்பிக்கை கீற்றுக்கள்தான் தருகின்றன. அவையே இந்தக் கதைகள் உள்ள ‘இரண்டு விரல் தட்டச்சு’ முழு தொகுப்பையுமே மானுட நேயத்தை எப்போதுமே வலியுறுத்தி வரும் அ.மியின் புனைவுலகின் மற்றுமொரு காத்திரமான பிரதிநிதியாகப் பார்க்கச் செய்கின்றன.

000

ஒளிப்பட உதவி – We Can Shopping