செந்தில் நாதன்

திற! – சதத் ஹசன் மண்ட்டோ சிறுகதை

செந்தில் நாதன்

Manto

அந்த சிறப்பு ரயில் மதியம் இரண்டு மணிக்கு அமிர்தசரஸில் இருந்து கிளம்பி எட்டு மணி நேரம் கழித்து முகல்புரா வந்து சேர்ந்தது. வழியில் பலர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர்; சிலர் தொலைந்து போயினர்.

காலை பத்து மணி. கிழட்டு சிராஜுதின் கண்ணைத் திறந்து முகாமின் சில்லிட்ட தரையைப் பார்த்தார்; அலை அலையாய்க் குவியும் ஆண்கள், பெண்கள், குழந்தைகளைப் பார்த்ததும் அவருக்குக் குழப்பம் அதிகரித்தது. இருண்ட வானத்தை வெறுமையுடன் பார்த்தார். அவரைச் சுற்றி ஒரே களேபரம், ஆனால் காதுகள் அடைத்திருந்தது போல் அவருக்கு ஒன்றும் கேட்கவில்லை. அவரை யாராவது பார்த்தால் கவலையில் ஆழ்ந்திருக்கிறார் என்று நினைத்திருப்பார்கள். ஆனால் உண்மை அதுவல்ல: அவர் நரம்புகள் தளர்ந்து போய் இருந்தன; அவர் எடையில்லாமல் ஏதோ ஒரு பாழ்வெளியில் மிதப்பது போல் உணர்ந்தார்.

சூரிய ஒளி சுளீரென கண்ணை உறுத்தியதும் அவர் திடுக்கிட்டு நிகழ்காலத்துக்கு வந்தார். அனைத்துப் பக்கங்களில் இருந்தும் நினைவுகள் அவரைத் தாக்கின. கொள்ளை. தீ. தள்ளுமுள்ளு. ரயில் நிலையம். தோட்டாக்கள். இரவு. அப்புறம் சகீனா. சிராஜுதின் உடனே எழுந்து பைத்தியக்காரர் போல சுற்றியிருந்த மக்கள் கூட்டத்தில் தேட ஆரம்பித்தார். (more…)

நிலவொளியில், தனியே மதுவருந்துகிறேன்

செந்தில் நாதன்

libai

 

மலர்களிடையே, ஒரு மதுக் குவளை.
தனியே மது அருந்துகிறேன், தோழர்கள் யாரும் இல்லை.
நிலவை அழைக்க கோப்பையை உயர்த்துகிறேன்.
நிலவும், நானும், என் நிழலும் சேர்ந்து மூவராகிறோம்.

நிலவுக்கு மது அருந்தத் தெரியாது;
நிழல் என் உடல் அசைவுகளை நகலெடுக்கிறது;
ஆனாலும் அவர்களுடன் கொண்டாடுகிறேன் –
விரைவில் வசந்தம் வந்துவிடும்.

நான் பாடுகிறேன் – நிலவு அசைந்தாடுகிறது.
நான் ஆடுகிறேன் – நிழல் அலைபாய்கிறது.
தெளிவாய் இருக்கையில், மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்கிறோம்.
கள்வெறி ஏறியபின், அவரவர் வழி செல்வோம்.

உறவுகளுக்கு அப்பால், நண்பர்களாயிருக்க உறுதி கொள்வோம்
விண்மீன் திரளின் முடிவில் மீண்டும் சந்திப்போம்.

(Drinking Alone, Li Bai)

படம் : http://en.people.cn

அடில் ஜுஸ்ஸாவாலாவின் “களிமண்”

செந்தில் நாதன்

கடவுளின் மாதிரி.
அவரது பன்முகங்கள்.
நீர்கொள்ள பாதுகாப்பான பாத்திரம்.
நெருப்பில்,
தன்னுள் அடைபட்டிருக்கும்
ஆன்மாக்களை வெளிப்படுத்தும்:
கிளி, வண்டு, நரி.

கைவிடப்பட்டால், வெற்றுப்பலகை
உயிரற்றிருந்தால், உறைவிடம்.
முழுமையானால், கலை.
மூளியானால், மனிதன்.

(Adil Jussawala, Clay)

ஒளிப்பட உதவி – விக்கிப்பீடியா

அருண் கொலாட்கரின் கீறல் கவிதை தமிழாக்கம்

கீறல்

செந்தில் நாதன்

கடவுள் எது
கல் எது
வித்தியாசம்
என்று ஒன்றிருந்தால்
அது நூலிழை அளவு தான்
ஜெஜூரியில்
இருக்கும் கற்களில் பாதி
கடவுள் அல்லது அவரது பங்காளி

எந்த விளைச்சலுமில்லை
கடவுளைத் தவிர
கடவுளே இங்கு விளைச்சலாகிறார்
வருடம் முழுவதும்
நாள் முழுவதும்
தரிசு நிலத்தில் இருந்தும்
பாறாங்கல்லில் இருந்தும்

ஒரு படுக்கை அறை அளவு பெரிய
அந்த ராட்சதப் பாறை
கல்லாய் மாறிய காண்டோபரின் மனைவி
அதில் நீள்வெட்டாய் உள்ள பிளவு
ஒருமுறை பெருங்கோபத்தில்
அவள் மீது அவர் வாள் வீசியபோது
ஏற்பட்ட தழும்பு

ஒரு கல்லைக் கீறிப்பார்
ஒரு பழங்கதை உயிர்த்தெழும்