மொழியாக்கம்

விஸ்லாவா சிம்போர்ஸ்காவின் கவிதைத் தொகுப்பு – ரிச்சர்ட் லூரி

(ந்யூ யார்க் டைம்ஸ் தளத்தில் ரிச்சர்ட் லூரி (Richard Lourie) எழுதியுள்ள மதிப்பீட்டின் தமிழாக்கம்)

தோரோ சொல்வதுபோல் பெருந்திறள் மக்கள் “நம்பிக்கையற்ற மௌன வாழ்வு வாழ்கின்றனர்” என்பது உண்மையாய் இருக்கலாம், ஆனால் 1923 முதல் 2012 வரை வாழ்ந்த போலிஷ் கவிஞர் விஸ்லாவா சிம்போர்ஸ்கா அதற்கு முற்றிலும் எதிரிடையாக நடந்து கொண்டார். மௌன வியப்பு நிறைந்த வாழ்வு அவருக்குரியது, அதன் வெளிச்சம் அலங்காரமற்ற, ஆனால், சுடராய் ஒளிரும் அவரது கவிதைகளில் பிரதிபலிக்கிறது. அவற்றில் பலவும் தற்போது, “Map: Collected and Last Poems” என்ற நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

கிராமப்புறத்தில் பிறந்த சிம்போர்ஸ்கா 1931ஆம் ஆண்டு அரசர்களுக்கும் உயர்பண்பாட்டுக்கும் உரிய கிராகோவ் நகரில் குடி புகுந்தார், தன் மரணம் வரை அங்கு வாழ்ந்தார். மாபெரும் நிகழ்வுகள் மிகுந்த வாழ்வு அவரது அகத்துக்கே உரியது எனினும் வரலாற்றை விட்டுத் தப்புவது என்பது போலந்தில் சாத்தியமல்ல. இன்னும் சொல்லப்போனால், சிம்போர்ஸ்கா நான்கு வெவ்வேறு போலந்துகளில் வாழ்ந்தார்: ஐரோப்பிய வரைபடங்களிலிருந்து ஒரு நூற்றாண்டுக்கு மேல் தொலைந்திருந்து பின் 1918ல் சுதந்திரம் பெற்று இரு உலக யுத்தங்களுக்கு இடைப்பட்ட காலத்தின் கவலை நிறைந்த போலந்து; அவருக்கு பதினாறு வயது நிரம்பிய போது, நாஜி ஆக்கிரமிப்பு, மரண முகாம்கள், கிளர்ச்சிகள் நிறைந்த போலாந்து; பின்னர் போருக்குப் பிந்தைய ரஷ்ய அதிகாரம் நிறைய போலாந்து. அச்சமயத்தில், 1966ல் கட்சியிலிருந்து வெளியேறும் வரை அவர் கம்யூனிஸ்டாக இருந்தார். அதே சமயத்தில் தான் ஒரு கவிஞராக தனக்கான குரலை அடையாளம் கண்டார்; இறுதியில், சோவியத்-கடந்த போலந்து, சுதந்திரமானது, வெற்றிகரமானது, சாதாரணத்தன்மை அருளப்பட்டது.

சிம்போர்ஸ்கா தன் தேசத்தின் துயர்களைத் தப்பிப்பதுமில்லை, ஒரு நோயமைக் கூறெனக் கொண்டாடுவதுமில்லை. “ஜாஸ்லோ அருகே ஒரு பட்டினி முகாம்” என்ற கவிதையில் உள்ளது போல் அவர் தன் தேசத்தை நோக்கி இரக்கமற்ற கறார்க்குரலில் பேசக்கூடியவரகவும் இருந்தார்- அந்த முகாமின், “புல்வெளி மௌனம் காக்கிறது, விலைபோன சாட்சியைப் போல்” என்று எழுதினார் அவர். ஆனால் சிம்போர்ஸ்கா எப்போதும் தனிமனிதனின் மீது ஆர்வம் கொண்டவராகவே இருக்கிறார். “எலும்புக்கூடுகளைச் சூனியத்துக்குச் சுழிக்கிறது சரித்திரம்/ ஆயிரத்தொன்று என்றாலும் ஆயிரம்தான்” என்று கூறியபின், கவிதை, எண்ணிக்கையில் விட்டுப்போனவனைப் பற்றிய வியப்பை வெளிப்படுத்துகிறது. “கள்ளமின்மை” என்ற கவிதையில், “மனித மயிராலான மெத்தையில் சூல் கொண்டதை” அறியாத இளம் ஜெர்மானிய பெண்களின் ஆனந்த அறியாமையை எண்ணிப் பார்க்கிறார். “ஹிட்லரின் முதல் புகைப்படம்” என்ற கவிதையில் ஹிட்லருக்கு எதிராய் கொஞ்சம் பைசாச விளையாட்டு விளையாடிப் பார்க்கிறார்- “இத்துனூண்டு துண்டு அணிந்த இந்தக் குட்டிப் பையன் யார்?/அதுதான் குட்டிப் பாப்பா அடால்ப், ஹிட்லர்களின் குட்டிப் பையன்!”. ஆம், எந்தக் குழந்தையைப் போலவும், இவனது எதிர்காலமும் எப்படி இருக்குமோ என்று நினைத்துப் பார்ப்பதை நம்மால் தவிர்க்க முடிவதில்லை. “யாருடைய வயிறு நிறைய பால் இருக்கிறது, என்பது நமக்குத் தெரியாது/ அச்சகம் வைத்திருப்பவன் வயிறா, மருத்துவன் வயிறா, வணிகன் அல்லது, மதகுருவின் வயிறா?”

இதெல்லாம் பேசப் பெரிய விஷயங்களாக இருந்ததாம், சிம்போர்ஸ்காவுக்கு இவை போதாது- பூமியிலுள்ள எல்லாமே அவருக்கு வசீகரமாக இருக்கின்றன. “வட்டார நட்சத்திரங்களின் ஒன்றின் கீழ்”- நடந்தது மட்டுமல்ல, நடந்திருக்கக் கூடியது மட்டுமல்ல, கிட்டத்தட்ட நடக்கத் தவறியது மட்டுமல்ல, எல்லாமே இவரை ஈர்க்கின்றன. “வியப்பில்லாமல் நான் நானாய் இருந்திருக்க முடியும்/ அதாவது முற்றிலும் மாறுபட்ட வேறு யாரோவாக”. இந்த வியப்பே அவரை நாலா திசைகளிலும் விரைந்தோட வைக்கிறது, “மதிப்புக்குரிய பை எண்”ணில் திளைக்கவும், மனித கலாசார வடிவங்களில் ஏஞ்சல்களுக்கு உவப்பானது எதுவாக இருக்கும் என்று நினைக்கவும் (விடை: ஸ்லாப்ஸ்டிக்), “ஏகோபித்த பரமநிர்வாணம்” கொண்ட வெங்காயத்தின் “தூய வெங்காயத்துவத்தில்” ஆழவும் செய்கிறது. சமகால கொண்டாட்ட மனநிலையை அவர் நிராகரிக்கிறார். “உன்னைப் பற்றி மோசமாக நினைத்துக் கொள்ளுதல்” என்ற கவிதை இப்படி துவங்குகிறது: “வல்லூறுகள் என்றும் தாம் குற்றம் புரிந்ததை ஏற்பதில்லை/ சிறுத்தைகளுக்கு நியாய அநியாயம் தெரிவதற்கில்லை/ தாக்கும்போது பிரான்ஹாக்கள் வெட்கப்படுவதில்லை./ பாம்புகளுக்குக் கையிருந்தால், கறைபடாத கரங்களைக் காட்டும்.” கவிதை இப்படி முடிகிறது- “சூரியனின் இந்த மூன்றாம் கோளில்/ மிருகத்தனத்தின் அடையாளங்களில்/ சுத்தமான மனசாட்சிக்கே முதலிடம்.”

எதையும் முழுதாய் நம்ப மறுக்கும் சிம்போர்ஸ்காவின் ஐயப்பாடு, அவரது சந்தோஷமான, குறும்பு நிறைந்த விளையாட்டுத்தனம், புதிய புரிதலின் வியப்புக்கான தாகம்- இவை அவரை எதேச்சாதிகார உறுதிப்பாடுகளுக்கு எதிரியாக்குகின்றன. மேற்கத்திய மனதின் சிறந்த வெளிப்பாடு இவருக்குரியது- கட்டற்றது, நிலைகொள்ளாதது, கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பது. நம் காலத்தின் நாகரிக வாழ்வுக்கு ஒரு வைசூரயாய் வந்திருக்கும் பயங்கரவாதிக்கு எல்லா வகையிலும் எதிரான மனப்போக்கு இது. ஆனாலும் அவர் பயங்கரவாதியின் மனநிலையை அறிந்து கொள்ள முற்படுகிறார், அவனது உளவமைப்பை அறிய முடியாத போதும் அவனது புரிதல்களுள் புக நினைக்கிறார். தான் வைத்த குண்டு வெடிப்பதற்கு முற்பட்ட நிமிடங்களில் அவன் அந்த கபேவுக்கு வந்து செல்பவர்களை கவனித்துக் கொண்டிருக்கிறான், அதில் தலையிலுள்ள முடி கொட்டிப் போன ஒருவன், “தன் அழுக்குக் கையுறைகளுக்காக திரும்பிச் செல்கிறான்” (சிம்போர்ஸ்காவின் குறைபட்ட பகுதிக்கு இந்தக் கவிதை ஓர் எடுத்துக்காட்டு. அவருக்கு, அப்போதைய தலைப்புச் செய்திகளைப் பற்றி வெட்டிப் பேச்சு பேசிக் கொண்டிருப்பது போன்ற தொனியில் எழுதும் பழக்கமிருக்கிறது. இப்படிப்பட்ட கவிதைகளை ஒரு முறை வாசிக்க முடிகிறது, ஆனால் இரண்டாம் வாசிப்புக்கு எதையும் விட்டு வைக்காத மேம்போக்குத்தன்மை கொண்ட கவிதைகள் இவை).

உயிரோட்டமுள்ள இருப்பும் அதன் தற்காலிகத்தன்மையுமே சிம்போர்ஸ்காவுக்கு முக்கியமான பேசுபொருளாய் இருக்கின்றன. “கடந்து செல்லும் இக்கணமே போயாகி விட்டது”. காகிதத்தில்கூட இதை அவர் நிகழ்த்திக் காட்டுகிறார்: “எதிர்காலம் என்ற சொல்லை நான் உச்சரிக்கும்போதே/ அதன் முதல் அசை கடந்த காலத்துக்கு உரியதாகி விடுகிறது”. அசைகளுக்கு நேர்வதுதான் அவற்றைப் பேசுபவர்களுக்கும் நேர்கிறது. “நாமற்ற மறுநாள்” என்ற கவிதையில் அவர் எழுதுகிறார், “மறுநாள்/ பிரகாசமாய் இருக்கும்போல் தெரிகிறது/ என்றாலும் இன்னும் உயிரோடிருப்பவர்கள்/ குடைகள் கொண்டு வர வேண்டும்”

காதலைப் போல் தோன்றி மறைவது எதவுமில்லை என்பதால் அது சிம்போர்ஸ்கா பேசுவதற்கான இயல்பான விஷயமாகிறது. ஆடன் போன்ற கவித்துவத்துடன் அவரால் எழுத முடியும்: “ஆக, இதோ இங்கே இருக்கிறோம், நிர்வாண காதலர்கள்,/ அழகாய் இருக்கிறோம் என்று இருவரும் ஒப்புக் கொள்கிறோம்/ கண்ணிமைகள் மட்டுமே நம்மைப் போர்த்திருக்க./ இருளில் படுத்திருக்கிறோம், கண்ணுக்குத் தெரியாமல்”. ஆனால் ஆடன் போல் இவரும் நம்பிக்கை வறட்சியை நகைச்சுவையுடன் வெளிப்படுத்தக்கூடியவர், “உண்மைக் காதல்” என்ற கவிதையில் இப்படி எழுதுகிறார்- “குறையற்ற நல்ல குழந்தைகள் அதன் துணையின்றி பிறக்கின்றன/ கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆனாலும் இக்கோளை அதனால் ஜனத்திரளால் நிறைக்க முடியாது/ அது அத்தனை அபூர்வமாய் வருகிறது/ உண்மைக் காதலை என்றும் அறியாதவர்கள்/ அப்படி ஒன்று இல்லவேயில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கட்டும்/ அந்த நம்பிக்கை அவர்கள் சாகும்வரை வாழ்வை எளிதாக்கிக் கொண்டிருக்கும்”.

இறுதியாகச் சொன்னால் சிம்போர்ஸ்காவின் பார்வையில், திகைப்பு என்பது அபூர்வமான கவித்துவ நிலைப்பாடல்ல- எப்போதும் புத்துயிர்ப்பு கொண்டதாய் பற்பல வகைகளாய் விரைந்தோடும் உயிர்ப்புக்குத் தக்க ஒரே சுவாதீனமான, சுபாவமான எதிர்வினை திகைத்து நிற்றலாகவே இருக்க முடியும். அது ஒத்திகைக்கான அவகாசம் தருவதில்லை, ஒவ்வொரு இரவும் முதற்காட்சியாய் இருக்கிறது. “வாழும் சலுகைக்கு தயாராய் இல்லாதவள்/ காட்சிகளின் வேகத்துக்கு என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை/… , மேடை அணி அலங்காரங்கள் ஆச்சரியப்படத்தக்க துல்லியம் கொண்டிருக்கின்றன…./ நான் என்ன செய்தாலும்/ எது எப்போதும் நான் செய்தவையாகவே இருக்கும்”.

நோபல் பரிசு போன்ற ஒன்று மொழிபெயர்ப்பாளர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் – அவர்களின் பங்களிப்பு இல்லாமல் நமக்கு எப்படி தால்ஸ்தாய், காப்கா, கார்சியா மார்க்கேஸ், விவிலியம் முதலானவை அறியக் கிடைக்கும்? அப்படியொரு பரிசு இருக்குமென்றால் சிம்போர்ஸ்காவின் மொழிபெயர்ப்பாளர்கள், ஸ்டானிஸ்லாவ் பரான்க்ஸக்கும் கிளேர் கவனாக்கும் உடனே பெற்றிருப்பார்கள். இங்கு மேற்கோள் காட்டப்பட்டுள்ள எந்த வரியையும் படித்துப் பாருங்கள் – ஒவ்வொன்றும் ஆங்கிலத்தில் பிறந்தது போலிருக்கின்றன.

அவரது ஆங்கில மொழிபெயர்ப்பாளர்களும் ஸ்வீடிஷ் மொழிபெயர்ப்பாளர்களும் மிகப் பிரமாதமான மொழிபெயர்ப்புகளைச் செய்தது தான் 1996ஆம் ஆண்டு சிம்போர்ஸ்கா நோபல் விருது பெற உதவி செய்தது என்று சொல்லப்படுகிறது. அவர் புகழின் ஆர்ப்பரிப்பை வெறுத்தார். முக்கியமான நிகழ்வுகளைத் தவிர்த்தார், நோபல் ஏற்புரைகளில் மிகக்குறுகிய உரைகளில் ஒன்றை அவரே அளித்தார் – ஆனால் அதிலும்கூட சூரியனுக்குக் கீழுள்ள இந்த உலகில் புதிதாய் எதுவுமில்லை என்று சொன்ன பிரசங்கிகளைக் கண்டித்தார். உலக கவிதையின் கிரேட்டா கார்போ என்று பத்திரிகைகள்  அவரை அழைக்கத் துவங்கின, ஆனால் சிம்போர்ஸ்கா ஒதுங்கியிருப்பதற்கான காரணம் அவரது பெரியமனித தோரணையல்ல. மாறாய், அவருக்குத் தன் வியப்புணர்வைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய தேவை இருந்தது- பத்திரிக்கையார்கள், ரசிகர்கள், புகழ்வெளிச்சப் பண்பாட்டின் ஒட்டுண்ணிகள் போக  உரத்து ஒலிக்கும் பிற விரக்தி வாழ்வாளர்கள் அனைவரும் என்று  ஒரு பெருங்கூட்டத்திடமிருந்து அவர் அதைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது.

MAP

Collected and Last Poems

By Wislawa Szymborska

Translated by Clare Cavanagh and Stanislaw Baranczak

447 pp. Houghton Mifflin Harcourt. $32.

நன்றி – நியூ யார்க் டைம்ஸ்

வெங்காயமே! வாழ்க நீ எம்மான்! – பாப்லோ நெருடா

வெ நடராஜன்

வெங்காயமே
ஒளிரும் குடுவையே,
உன் அழகு
ஒவ்வொரு இதழாக உருவானது,
பளிங்குச் செதில்கள் உன்னை விரித்தன
இருண்ட பூமியின் பாதுகாப்பில்
பனியைக் கொண்டு வளர்ந்தது உன் தொப்பை.
பூமிக்கு அடியில்
அந்த அதிசயம்
நிகழ்ந்தது
உன்னுடைய விகாரமான
பச்சைத் தண்டு வெளித்தெரிந்த போதும்,
உன்னுடைய இலைகள் வாள்போலப்
தோட்டத்தில்
பிறந்த போதும்,
பூமி அவளுடைய சக்தியைக் குவித்து
ஒளி ஊடுருவும் உன் நிர்வாணத்தை வெளிக்காட்டினாள்
மேலும், அந்தத்தொலைதூரக் கடல்
அஃபோர்டைட்டின் முலைகளை உயர்த்தி
மக்நோலியாவுக்கு ஈடு செய்தது போல,
வெங்காயமே
இந்த பூமியும்
உன்னை வளர்த்தது,
ஒரு கோள் போன்று தெளிவாகவும்
நட்சத்திரக் கூட்டம் போல்
ஒளிர்வதற்கு
விதிக்கப்பட்டவனாகவும்,
தண்ணீரின் ரோஜாவாகவும்
ஏழைகளின்
மேஜைக்கு
மேலிருக்கவும்.

உச்சத்தில் திளைக்கும்
இலுப்புச் சட்டியில்
பெருந்தன்மையுடன்
உன் புத்துணர்ச்சியை
விடுவிக்கிறாய்
வெட்டிப் போட்ட படிகம்
எண்ணெயின் தகிக்கும் சூட்டில்
சுருள் பொன் இறகு போல உருமாறுகிறது

 

மேலும், சாலட் விரும்பப்படுவதற்கு
உன்னுடைய செல்வாக்கு எத்தனை
வளமாக இருந்தது என்பதைச் சொல்வேன்,
ஒரு தக்காளியின் அரைக்கோளத்தில்
வெட்டிய ஒளியை நாங்கள் கொண்டாட
ஆலங்கட்டியைப் போன்ற வடிவத்தைத் தந்து
வானமும் உனக்கு சகாயம் செய்வதாகத் தெரிகிறது.
அதுவும் சாதாரணர்களின்
கைகள் எட்டும் தூரத்தில்
எண்ணெய் தெளிக்கப்பட்டு,
உப்பு
கொஞ்சமாக தூவப்பட்டு,
கடினமான உழைப்போடு வரும் உழைப்பாளியின் அந்நாளைய
பசியைக் கொல்கிறாய்.

ஏழையின் நாயகனே,
மென்மையான காகிதத்தில்
சுற்றப்பட்டு வந்த
ஞானமாதாவே, நீ பூமியிலிருந்து எழுகிறாய்
முடிவில்லாமல், பூரணமாய், தூய்மையாய்
ஒரு நட்சத்திர விதையைப் போலே.
அடுக்குளைக் கத்தி
உனை வெட்டும் போது, பொங்குகிறது
சோகமேயில்லாத
ஒரே கண்ணீர்.

எங்களைப் புண்படுத்தாமல் அழவைக்கிறாய் நீ.
இருக்கும் எல்லாவற்றையும் நான் போற்றியிருக்கிறேன்
ஆனால் என்னைப்பொறுத்தவரை, வெங்காயமே நீ
பளபளக்கும் இறகுகளைக் கொண்ட
ஒரு பறவையைக் காட்டிலும் அழகு,
மேலுலக உருண்டையே, பிளாட்டினக்  குடுவையே
அசையாமல் ஆடும்
வெண் அனிமொனே

இந்த பூமியின் மணமே உந்தன்
படிக நேர்த்தியில் தான் இருக்கிறது.

எப்போதும் – பாப்லோ நெருடா

எனக்கு முன் நடந்தவற்றைப் பற்றி
எனக்குக் கவலையில்லை

உன் தோள்களில்
ஒருவனைத் தூக்கி வா,
உன் தலைமுடியில் நூறு பேரைக் கொண்டு வா,
உன் முலைகளுக்கும் பாதங்களுக்கும் இடையே ஆயிரம் ஆண்களைக் கொண்டு வா
மூழ்கியவர்களைக் கொண்டு சென்று
கொந்தளிக்கும் கடலில் சேரக் கலக்கும்
நதியைப் போல வா,
காலமெல்லாம் நுரைத்திருக்க, காலத்தோடிருக்க!.

அத்தனை பேரையும் கொண்டு வா
நான் உனக்காக காத்துக் கொண்டிருக்கும் இடத்துக்கு;
நாம் எப்போதும் தனியாக இருப்போம்,
நாம் எப்போதும் நானும் நீயுமாக இருப்போம்
புவியில் தனியாய்
நம் வாழ்வைத் துவக்கலாம் வா!

(பாப்லோ நெருடாவின் Always என்ற கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு இது.)

வண்ணக்கழுத்து பகுதி 9: போர்ப் பயிற்சி

நாங்கள் ஊர் திரும்பிய பிறகு, ஐரோப்பாவில் எங்கோ வரப்போகும் யுத்தத்தைப் பற்றிய வதந்தி காற்றெங்கும் நிரம்பியிருந்தது. இப்போது குளிர்காலம் வந்துவிட்டதால், வண்ணக்கழுத்துக்கு போர்ப் பயிற்சி கொடுக்க முடிவு செய்தேன். ஒருவேளை பிரிட்டிஷ் போர்த் துறை சார்பில் தூது செல்ல அவன் அழைக்கப்பட்டால் இப்பயிற்சி அவசியமானதாக இருக்கும். வடகிழக்கு இமாலயத்தின் தட்பவெட்பநிலைக்கு அவன் பழக்கப்பட்டுவிட்டதால், எந்தவொரு ஐரோப்பிய நாட்டிலும் அவன் ராணுவத்தின் இன்றியமையாத தூதுவனாக இருக்கமுடியும். இன்றும் கூட, கம்பியில்லாத் தந்தி, வானொலி போன்றவை இருந்தாலும் கூட எந்தவொரு படைக்கும் தூதுப் புறாக்கள் இல்லாமல் முடியாது. இந்தக் கதை தானாக விரியும் போது இந்த விஷயங்களெல்லாம் உங்களுக்குப் புரியவரும்.

போருக்கான தூதுப் புறாக்களைப் பயிற்றுவிக்க நானாகவே வகுத்துக்கொண்ட ஒரு திட்டத்தைப் பின்பற்றினேன். அதற்கு கோண்டின் ஒப்புதலும் இருந்தது. சொல்ல மறந்துவிட்டேன், அந்த வயசாளியும் எங்களுடனேயே நகரத்திற்கு வந்தார். இரண்டு மூன்று நாட்கள் எங்கள் வீட்டில் தங்கினார். பிறகு, கிளம்ப முடிவு செய்தார். “இந்த நகரைப் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. எந்த நகரத்தையும் நான் விரும்பியதில்லை என்றாலும் இந்த நகரம், ட்ராம் வண்டிகளாலும் மோட்டார் வண்டிகளாலும் என்னை பயமுறுத்துகிறது. சீக்கிரமே இந்த நகரின் தெருப்புழுதியை என் காலிலிருந்து உதறித் தள்ளாவிட்டால், நான் கோழையாகிப் போய் விடுவேன்.. காட்டுப் புலியும் என்னை பயமுறுத்தியதில்லை, ஆனால் ஒருமோட்டார் வண்டி பற்றி அப்படிச் சொல்ல முடியாது. நவீன நகரங்களில் சாலையைக் கடப்பதில் ஒரு நிமிடம் பணயம் வைக்கப்படும் உயிர்களின் எண்ணிக்கை, மிகப்பயங்கரமான காடுகளில் ஒரு நாள் முழுக்க இருக்கும் ஆபத்தில் இருக்கும் உயிர்களைக் காட்டிலும் அதிகம். போய் வருகிறேன். எங்கே மரங்கள் அமைதியை ஆடையாய் உடுத்தியிருக்கின்றவனோ, எங்கே காற்று மாசும் வாடைகளும் அற்று இருக்கிறதோ, வெட்டி எடுக்கப்பட்ட ரத்தினம் போன்ற வானம் எங்கு  கம்பங்களாலும் தந்திக் கம்பிகளாலும் குறுக்கும் நெடுக்கும் வெட்டப்படாமல் முழுமையாக இருக்கிறதோ, அங்கே போகிறேன். தொழிற்சாலையின் சங்குகளுக்கு பதில் பறவைகளின் சத்தங்களைக் கேட்கலாம், திருடர்களுக்கும் கொலைகாரர்களுக்கும் பதிலாக அப்பாவி புலிகளையும் கருஞ்சிறுத்தைகளையும் நேருக்கு நேர் பார்க்கலாம். போய் வருகிறேன்!” என்று கிளம்புவதற்கு முன் சொன்னார். (more…)

வண்ணக்கழுத்து 8 ஆ: பயணம் தொடர்கிறது…

வண்ணக்கழுத்து பகுதி 8ஆ: பயணம் தொடர்கிறது

“விரைவிலேயே என் கண்கள் செயலற்றுப் போயின. ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்ட கருப்புத் துணிகள் போல இருளின் மேல் இருள், கண்களில் கவிந்தது. என் இனத்தின் கடவுளர்களிடம் பிரார்த்தித்துவிட்டு தூங்க முயன்றேன். ஆனால் இந்த ஆந்தைகளின் அலறலில் யார் தான் தூங்க முடியும்? அந்த இரவெல்லாம் திகில் என்னைப் பற்றிக் கொண்டது. ஏதாவது ஒரு பறவை வலியில் கதறும் சத்தமில்லாமல் ஒரு மணி நேரம் கூடக் கழியவில்லை. வெற்றிக் களிப்பில் ஆந்தைகளும் அலறின. அவ்வப்போது ஒரு ஸ்டார்லிங்கோ புல்புல்லோ மரண ஓலமிட்டபடி ஆந்தையின் கோரப் பிடியில் சாகும். என் கண்கள் மூடியிருந்தாலும், நடந்து கொண்டிருந்த படுகொலைகளை என் காது அறிந்திருந்தது..

ஒரு காகம் கிறீச்சிட்டது. பிறகு மற்றொன்று, பிறகு இன்னொன்று. ஏறக்குறைய ஒரு கூட்டமே பீதியில் மேலே பறந்து மரங்களில் மோதிக் கொண்டன. ஆந்தைகளின் கூர்மையான கொடூரமான அலகுகளாலும் நகங்களாலும் கிழிக்கப்பட்டு கொல்லப்படுவதை விட இப்படிச் சாவது மேல். இந்தக் குழப்பங்களுக்கு இடையே, காற்றில் வீசல்களின் வாசனையை நுகர்ந்தேன். மரணம் கைக்கெட்டும் தூரத்தில் வந்துவிட்டதை அறிந்தேன். அது என்னை பதற்றம் கொள்ள வைத்தது.

என் கண்களைத் திறந்து பார்த்தேன். ஒரு பழுப்பு வெள்ளை ஒளி எல்லாவற்றின் மீதும் ஒளிர்ந்து கொண்டிருந்தது. என்முன், ஆறடி தொலைவில் ஒரு வீசல் நின்று கொண்டிருந்தது. அப்படிச் செய்வதில் ஆந்தைகள் என்னைக் கொல்லும் வாய்ப்பு அதிகம் என்றாலும் நான் மேலே பறந்தேன். நினைத்தது போலவே, ஒரு ஆந்தை அலறிக் கொண்டும் கிறீச்சிட்டுக் கொண்டும் வந்தது. மேலும் இரண்டு ஆந்தைகள் தொடர்ந்தன. அவற்றின் சிறகடிக்கும் சத்தத்தைக் கேட்டேன். சத்தத்தை வைத்தே நாங்கள் தண்ணீருக்கு மேலே பறக்கிறோம் என்பதை அறிந்தேன். எங்கள் இறக்கைகளின் சிறிய உதறல் கூட எதிரொலித்தது. எந்த ஒரு நேரத்திலும் ஆறடி தூரத்திறகு மேல் எனக்கு எதுவுமே தெரியவில்லை என்பதால் என்னால் எந்தத் திசையிலும் அதிக தூரம் பறக்க முடியவில்லை. அதனால், ஆற்றின் காற்றை உறிந்து ஆற்றுக்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கும் கிளைகளுக்கு அப்பால் கொண்டு செல்லும் ஒரு காற்றுச் சுழலுக்காக நான் மெல்லச் சிறக்கடித்துக் காத்திருந்தேன். ஐயோ அந்த ஆந்தைகள் நெருங்கிவிட்டன. ஆனால் நான் குட்டிக்கரணம் போட்டு வளைவாகப் பறந்தேன். ஆந்தைகளும் என்னைத் துரத்துவதை விடவில்லை. நான் இன்னும் மேலே ஏறினேன்.

இப்போது நிலவொளி, தண்ணீரைப் போல என் இறக்கைகளிலிருந்து சொட்டியது. என்னால் இன்னும் கொஞ்சம் தெளிவாகப் பார்க்க முடிந்தது. அது என்னுடைய தைரியத்தையும் மீட்டுக் கொடுத்தது. ஆனால் என் எதிரிகள் விட்டபாடில்லை. அவர்களும் மேலே வந்தார்கள். இன்னும் கொஞ்சம் வெளிச்சம் அவர்களின் கண்களின் விழுந்து, அவற்றைக் குருடாக்கின. ஆனால், பார்வையை முழுதாகப் பறிக்கவில்லை..

திடீரென்று அவற்றில் இரண்டு ஆந்தைகள் என் மீது பாய்ந்தன. நான் மேலே பறந்தேன். ஆகா!! ஆந்தைகள் என்னைத் தவறவிட்டு, ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. அவற்றின் நகங்கள் ஒன்றோடு ஒன்று சிக்கிக் கொண்டன. காற்றில் இறக்கைகளை அடித்துக் கொண்டும், பேய்களைப் போல அலறிக் கொண்டு, நதிக்கரையிலிருந்த புற்களின் மேல் விழுந்தன.

“இப்போது நான் கவனமாகப் பார்த்தேன். நான் நிலவை நோக்கிப் பறந்து வரவில்லை, விடியலை நோக்கி வந்திருக்கிறேன் என்பது ஆச்சரியமாக இருந்தது. உண்மையிலேயே, பீதி நிறைந்த என் கண்கள் இதைக் கண்டிருக்கவில்லை. இப்போது இங்கு ங ஆந்தைகள் இல்லை. வளரும் சூரிய ஒளியிலிருந்து தப்பிக்க அவை மறைவிடங்களைத் தேடத் துவங்கியிருந்தன. நான் பாதுகாப்பாக உணர்ந்த போதிலும், மிகப் பெரிய மரங்களின் நிழல்களிலிருந்து விலகியே இருந்தேன். இப்போதும் அங்கு ஒரு ஆந்தை மறைந்திருக்கக் கூடும். நான் மரத்தில் மேலிருக்கும் ஒல்லியான கிளையில் அமர்ந்தேன். அது சூரியனின் முதற்கிரணங்கள் பட்டு ஆடும் தங்கக் குடை போல உருமாறியிருந்தது. மெதுவாக அந்த ஒளி இன்னும் கீழே படர்ந்து, கீழிருந்த வெள்ளை ஓடை வீசலின் கண்களைப் போல் பல வண்ணங்களில் மின்னியது.

“அப்போது நதிக்கரையில் பயங்கரமான ஒரு காட்சியைக் கண்டேன். நிலக்கரியை விட கருமையான இரண்டு காகங்கள், நாணல்களில் சிக்கிக் கொண்டு முழித்துக் கொண்டிருக்கும் ஆந்தையை தங்கள் அலகுகளால் குத்திக் கிழித்துக் கொண்டிருந்தன. சூரிய ஒளியில், ஆந்தையால் தன் கண்களைத் திறக்க முடியவில்லை. அந்த இரவுப் படுகொலையில் காக்காய்களுக்கு பாதிப்பு அதிகம் தான். இப்போது ஆந்தைகளை அவற்றின் தவறுகளுக்கு பழிவாங்குவது காக்காய்களின் முறை. ஆனால், சிக்கிக் கொண்ட ஆந்தையை இரண்டும் கொல்வதை காணச் சகிக்கவில்லை. அதனால், அந்தக் கொலைகாரர்களிடமிருந்து விலகி, என் உழவாரக் குருவி நண்பர்களைத் தேடிப் பறந்தேன். என்னுடைய சில அனுபவங்களை அவர்களிடம் சொன்னேன். அந்தப் பெற்றோர், வேதனையில் எழும்பிய பயங்கர ஓலங்களை தாங்களும் கேட்டதாகச் சொன்னார்கள். அந்தச் சத்தம் அவர்களை தூங்கவிடவில்லை. ஆண் உழவாரக் குருவி வெளியில் எல்லா ஆபத்தும் நீங்கி விட்டதா என்று கேட்டார். பத்திரமாக இருப்பதாகவே நினைத்தேன். நாங்கள் வெளியில் வந்த போது, அந்த பாவப்பட்ட ஆந்தை புற்களிடையே இறந்து கிடந்தது.

“அன்று காலை நாங்கள் ஓடையில் வாத்துகளைப் பார்க்கவில்லை என்பது விசித்திரம் தான். அவை அதிகாலையிலேயே தெற்கு நோக்கிப் பறந்திருக்கலாம். நாங்களும் அவ்வாறே செய்ய முடிவெடுத்தோம். எங்கள் வழியோடு போகும் மற்ற பறவைகளோடு சகவாசம் வேண்டாம் நாங்கள் முடிவு செய்தோம். இடம் பெயரும் காலத்தில், எங்கெங்கெல்லாம் புறாக்கள், க்ரொஸ், மற்ற பறவைகள் போகின்றனவோ அவற்றின் எதிரிகளான ஆந்தைகள், பருந்துகள் மற்றும் கழுகுகளும் அவற்றின் பின்னால் போகும். ஆபத்தைத் தவிர்க்கவும், நாங்கள் முன்பு பார்த்த அதிர்ச்சி தரும் காட்சிகளைத் தவிர்க்கவும் நாங்கள் கிழக்கு நோக்கிப் பறந்தோம். ஒரு நாள் முழுக்க கிழக்கு நோக்கிப் பறந்த பிறகு, சிக்கிமில் ஒரு கிராமத்தில் ஓய்வெடுத்தோம். அடுத்த நாள், பகற்பொழுது பாதி காலம் தெற்கு நோக்கிப் பறந்துவிட்டு பிறகு கிழக்கு நோக்கிப் பறந்தோம். இது மாதிரி சுற்றிப் சுற்றிப் போக அதிக நேரம் எடுத்தது. ஆனால் அது எங்களை ஆபத்திலிருந்து காப்பாற்றியது.

ஒருமுறை ஒரு புயற்காற்று எங்களைத் தடுமாறச் செய்து ஏரிக்கரையில் தள்ளியது. அங்கு நான் ஒரு அற்புதமான காட்சியைக் கண்டேன். நான் மரத்தின் உச்சியில் இருந்தேன். கீழே வளர்க்கப்பட்ட வாத்துகள் நிறைய நீரில் மிதந்து கொண்டிருந்தன. ஒவ்வொன்றும் வாயில் ஒரு மீனை வைத்திருந்தது. ஆனால், எதுவும் தன் இரையை விழுங்கவில்லை. வாத்துகள் மீன்களை உண்ணாமல் தங்களை இப்படிக் கட்டுப்படுத்திக் கொண்டு ஒரு போதும் நான் பார்த்ததில்லை. எனவே உழவாரக் குருவிகளையும் இதைக் காண அழைத்தேன். அவை மரங்களின் கிளைகளில் ஒட்டிக் கொண்டு வாத்துகளைப் பார்த்தன. அவைகளால், தங்கள் கண்களை நம்ப முடியவில்லை. இந்த வாத்துகளுக்கு என்ன ஆயிற்று? சீக்கிரமே ஒரு படகு கண்ணில் தட்டுப்பட்டது. இரண்டு மனிதர்கள் அதைச் செலுத்திக் கொண்டு வந்தார்கள். தட்டையான மூஞ்சியோடு மஞ்சள் நிற சருமத்துடன் இருந்த. அவர்களைக் கண்டவுடன், வாத்துகள் தங்களால் முடிந்த வரை வேக வேகமாக படகு நோக்கி விரைந்தன. படகை அடைந்தவுடன், அதன் மீது ஏறி தாங்கள் பிடித்த மீன்களை அதிலிருந்த பெரிய மீன் கூடையில் போட்டன. பிறகு ஏறியில் குதித்து இன்னும் சில மீன்களைப் பிடிக்கப் போயின.

உங்களால் நம்ப முடிகிறதா? இது ஒரு இரண்டு மணிநேரங்கள் தொடர்ந்தது. அந்த திபெத்திய பர்மிய மீனவர்கள் வலையே வீசவில்லை. அவர்கள் ஒரு நூலை கிட்டத்தட்ட மென்னியை அடைக்கும் அளவிற்கு, வாத்துகளின் கழுத்தைச் சுற்றிக் கட்டி, மீன்பிடிக்க ஏரிக்கு அழைத்து வந்திருந்தார்கள். வாத்துகள் எதைப் பிடித்தாலும் அதைத் தன் எஜமானர்களிடம் கொண்டு வந்து கொடுத்தன. அவர்களின் மீன் கூடை நிரம்பியதும்தான் வாத்துகளின் கழுத்தில் சுற்றியிருந்த கயிற்றை அழித்து விட்டார்கள். வாத்துகள் மீண்டும் ஏரியில் பாய்ந்து, வயிறு முட்ட மீன்களைச் சாப்பிட்டன..

“இப்போது சிறிது நேரம் ஏரிகளை விட்டு வெகு தூரம் விலகி, விளைநிலங்களைத் தேடிப் பறந்தோம். அங்கு, புதிதாக அறுவடை செய்யப்பட்ட தானியங்களுக்கு மேலே பறந்த பூச்சிகளை உழவாரக் குருவிகள் தின்றன. நானும் மித மிஞ்சிய அளவுக்கு தானியங்களைத் தின்றேன். தானியங்களை மட்டும் தான் பூச்சிகளை அல்ல. ஒரு நெல் வயலின் வேலியில் உட்கார்ந்து கொண்டிருந்த போது, யாரோ எதையோ அடிப்பதைக் கேட்டேன். ஒரு செர்ரி கொட்டையின் உள்ளே இருக்கும் பருப்பை எடுக்க, ஒரு சாஃபின்ச் தன் அலகால் உடைக்கும் சத்தம் போலிருந்தது அத்தனை சக்தி. ஒரு பாக்குவெட்டியைப் போன்ற பலம் அந்தச் சின்னப் பறவையின் அலகுக்கு இருப்பது ஆச்சரியமில்லையா? ஆனால், நான் சத்தம் வரும் இடத்தை நெருங்கி கீழே பார்க்கையில், அங்கே வேறொரு பறவையைப் பார்த்தேன். அது ஒரு ஹிமாலய த்ரஷ். அது செர்ரி கொட்டையை உடைத்துக் கொண்டிருக்கவில்லை. மெதுவாக நகரும் ஒரு நத்தையைத் அலகால் குத்திக் கொண்டிருந்த்து. டிக், டாக், டிக், டாக்…. டாக்! அந்த நத்தை அசையாமல் நிற்கும் வரை கொத்திக் கொண்டேயிருந்தது. அந்த த்ரஷ் தலையை உயர்த்தி சுற்றிலும் நோட்டமிட்டுவிட்டு, தத்தித் தத்தி நடந்து, நுனிகால்களில் நின்று, சிறகுகளை விரித்து, விரைவாக குறிபார்த்துவிட்டு டாக் டாக் டாக் என்று மேலும் மூன்று தடவை குத்தியது. ஓடு பிளந்து ருசியான நத்தை வெளிப்பட்டது. தன் அலகால் அதை தூக்கியது. அலகில் கொஞ்சம் ரத்தம் கசிந்தது. அது தன் வாயை கொஞ்சம் அகலமாகத் திறந்து, அதன் ஓரங்களில் புண்படுத்திக் கொண்டுவிட்டது. நத்தையை சரியாக பிடியில் இருத்திக் கொண்டு, இரவு உணவுக்காக தன் துணை காத்துக் கொண்டிருக்கும் மரத்திற்குள் பறந்து மறைந்தது.

”சிக்கிமின் விளைநிலங்களோடே தொடர்ந்த எங்கள் பயணத்தில் நிகழ்வுகள் ஒன்றும் இருக்கவில்லை. நினைவில் வைத்திருக்கும் அளவுக்கு மதிப்புள்ளதென்றால், அது காட்டில் மனிதர்கள் மயில்களைப் பிடித்தது தான். இந்தப் பறவைகள் உண்ணும் பாம்புகளும் மற்ற உயிரினங்களும் வடக்கே குளிர்கால உறைவிடங்களுக்குப் போய்விடுவதால், இவை உணவைத் தேடி வெப்பமான தெற்கு சதுப்பு நிலங்களுக்கு வருகின்றன.

“மயில்களும் புலிகளும் ஒன்றையொன்று ரசிப்பவை. மயில்களுக்கு புலிகளின் தோலைப் பார்க்கப் பிடிக்கும். புலிகளுக்கு மயில்களின் தோகையைப் பிடிக்கும். சில சமயம் குட்டையில், புலி ஒன்று கிளையில் மேலிருக்கும் மயிலின் தோகையை நின்று பார்த்துக் கொண்டிருக்கும். மயிலும் தன் கழுத்தை வளைத்து புலியின் வரிவரியான தோலின் அழகை ரசித்துக் கொண்டிருக்கும். இப்போது காலாகாலத்திற்கும் ஆக்கிரமிப்பாளனான மனிதன் காட்சிக்குள் வருகிறான்.

ஒரு நாள், மனிதன் ஒருவன் புலியின் தோல் மாதிரியே வரையப்பட்ட ஒரு துணியைக் கொண்டு வந்தான். எந்தப் பறவையும் அது நிஜமான புலியில்லை என்று பார்த்தமாத்திரத்தில் சொல்ல முடியாது. பிறகு, அருகிலிருந்த மரத்தின் கிளையில் ஒரு சுருக்கை தயார் செய்துவிட்டு அவன் மறைந்துவிட்டான். அந்த துணியின் வாசனையை வைத்தே அது புலி இல்லை என்று நான் சொல்லிவிடுவேன். ஆனால், மயில்களின் மோப்பம் பிடிக்கும் ஆற்றல் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. அவற்றின் கண்களே அவற்றை ஏமாற்றிவிட்டன. சில மணிநேரத்தில் ஒரு ஜோடி மயில்கள் அங்கு வந்து, மர உச்சியிலிருந்து புலி போலிருந்த துணியை பார்த்தன. இன்னும் கீழே கீழே இறங்கின. புலி தூங்குகிறது என்ற நம்பி ஏமாந்து போயின. அதே நினைப்பில் அவை அருகில் வந்து பொறியின் பக்கத்திலிருந்த ஒரு கிளையில் நின்றன. பொறியின் மீது அடி வைக்க அதிக நேரம் ஆகவில்லை. ஆனால், இரண்டுமே ஒரே பொறியில் எப்படிச் சிக்கிக் கொண்டன என்பது எனக்கு விளங்கவில்லை. பிடிபட்ட உடனேயே அவை சோகத்தில் கத்தின. பிறகு பொறி வைத்தவன் வந்து, இன்னொரு தந்திரம் செய்தான். இரண்டு பெரிய கருப்பு நிற கான்வாஸ் முகமூடிகளை அவற்றின் தலையில் போர்த்தி மயில்களின் கழுத்தில் முடிச்சு போட்டு, அந்தப் பாவப்பட்ட பறவைகளின் கண்களை மூடிவிட்டான். கண்கள் இருண்டவுடன் எந்தப் பறவையும் அதிக எதிர்ப்பு காண்பிப்பதில்லை. அவன் அவை நடக்க முடியாதபடிக்கு கால்களையும் கட்டிவிட்டான். பிறகு அவனுடைய மூங்கில் கம்பில், அவற்றை முனைக்கு ஒன்றாக கட்டினான். மெதுவாக அதன் நடுப்பகுதியில் பிடித்து தூக்கி தன் தோளில் போட்டுக் கொண்டு நடக்கத் துவங்கினான். வானவில்லினால் ஆன அருவி போல, மயில்களின் தோகைகள் அவனுக்கு முன்னாலும் பின்னாலும் தொங்கிக் கொண்டிருந்தன.

“என்னுடைய பயணம் இங்கே முடிகிறது. அடுத்த நாள் உழவாரக் குருவிகளிடமிருந்து விடை பெற்றுக் கொண்டேன். அவர்கள் தெற்கு நோக்கிப் போனார்கள். நான், புத்திசாலியான சோகமான பறவையாக வீடு திரும்பி மகிழ்ந்தேன். இப்போது ஒன்றைச் சொல். ஏன் பறவைகள் மற்றும் மிருகங்களுக்கு மத்தியில் இத்தனை கொலையும் துன்புறத்தலும் நடக்கின்றன? மனிதர்கள் நீங்கள் இப்படி ஒருவரை ஒருவர் காயப்படுத்திக் கொள்வதாகத் தெரியவில்லையே. அப்படித்தானே? ஆனால் பறவைகளும் மிருகங்களும் காயப்படுத்திக் கொள்கின்றனவே. இது எல்லாம் என்னை மிகவும் சோகத்தில் ஆழ்த்துகிறது” என்றது வண்ணக்கழுத்து.

(தொடரும்…)