ஸ்ரீதர் நாராயணன்

அப்பாவிற்கான கனவுகள்

– ஸ்ரீதர் நாராயணன் –

little_girl_sleeping

அவள் எப்போதும் உறங்கியதேயில்லை.
அப்பாவிற்கான கனவுகளைத்தான்
உருவாக்கிக் கொண்டிருக்கிறாள்.
எப்போதும்.

பெரிய இறக்கைகளோடு
பறக்கும் வீடு ஒன்று
அப்பாவின் முதுகு போல்
அவளை சுமந்து செல்கிறது எங்கும்

அவள் கனவில் வரும்
புத்தகங்கள் எல்லாம்
அப்பாவின் குரலில் கதைசொல்கின்றன.

குதித்தோடும் தோட்டத்து முயல்கள்
அப்பாவின் பற்களைக் காட்டி
சிரித்து செல்கின்றன.

அப்பாவின் விழிபுலத்தை நிறைத்தபடி
அலங்கார மேஜையின் கண்ணாடி
அவளைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறது

அம்மா கூட
அப்பாவின் கரங்களோடுதான்
உணவு ஊட்டிவிடுகிறாள்.

கிளைகள்தோறும்
ஊஞ்சல்களை வீசி ஆடியபடி
கூடவே நடந்து வரும்
மரங்களின் காற்று
அப்பாவின் மூச்சு போல
அவளை ஆசுவாசமடைய வைக்கிறது.

அவள் கனவுகள் எதுவும்
கலைந்து போகாமலிருக்கும்
ஒரு கனவை
அவனும் எழுதி வைக்கிறான்.

கல் விழுங்கிய நாரை

ஸ்ரீதர் நாராயணன்
cranes

“காதலில் இருந்த இரண்டு நாரைகளில் ஒன்றை மட்டும் கொன்றுபோட்ட வேடனே! நீ நாசமாகப் போக”

கோபத்துடன் சீறியது நான்தானா என்று ஆச்சரியமாக இருந்தது. இது என் குரல்தானா? என்னாலே நம்பமுடியவில்லை. மனம் உருவாக்கும் சொற்களெல்லாம் உருக்கொண்டு வெளிவராமல் கரைந்து காணாமல் போய்க் வெகுகாலம் ஆகியிருந்தது. கடைசியாக எப்போது பேசுவதற்கு முயன்றேன் என்றே நினைவில்லை. இன்பத்தில் முயங்கிக் கொண்டிருந்த நாரை ஜோடியை மதிமயங்கி எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தேனோ, அந்த அம்பு பறந்து வந்து தாக்கியதை முதலில் கவனிக்கவில்லை.

மரக்கிளையில் ஒரு நொடி தடுமாறிய நாரை சுற்றி சுழன்று கீழே ‘தட்’ என பாறைக்கு அப்பால் போய் விழுந்ததும், அற்புதமான கனவு கலைந்து போன அதிர்ச்சியில் விதிர்விதித்துப் போனேன். உடனே பாய்ந்துபோய் பாறைக்கு பின்னால் விழுந்த பறவையை இருகைகளாலும் பற்றி தூக்கிக் கொண்டு திரும்பிப்பார்த்தால். அங்கே அவன் நின்றுகொண்டிருந்தான். அவன் நிறத்தையும், ஆளையும் பார்த்தாலே தெரிகிறது வேடன் என்று. போதாக்குறைக்கு கையில் ஆளுயரத்துக்கு வில் வேறு.

நாரை அடிபட்டதைவிட அதன் மோனநிலை கலைந்துவிட்டதுதான் மிக துயரமாக இருந்தது. துயரெல்லாம் சினமாக அவன் மேல் குவிய கடுஞ்சொற்கள் உருவெடுத்து வெளிக்கொட்டிவிட்டது. (more…)

பாரின் ரிட்டர்ன் – ராண்டோ

(பிரபல மொழிபெயர்ப்பாளர் திரு கல்யாணராமன் அவர்களின் அவதானிப்பைத் தொடர்ந்து 26.11.2014 அன்று, சங்கப் பாடல் மற்றும் ஏ கே ராமானுஜன் மொழிபெயர்ப்பு ஆகியவற்றை இணைத்து இப்பதிவு திருத்தப்பட்டது)

ஏ கே ராமானுஜம் செய்துள்ள ஆங்கில மொழிபெயர்ப்புகள், இடைவெளிகளுக்கு முக்கியத்துவம் தருபவை, அவற்றின் உணர்வுச் செறிவில் மௌனத்துக்கு முக்கிய இடம் உண்டு. ஆனால், மூல மொழியில் உள்ளதையும் மொழிபெயர்ப்பில் உள்ளதையும் ஒப்பிட்டு நோக்கும்போது, சில விடுபடல்கள் கேள்விக்குறியனவாகத் தெரிகின்றன, தமிழறியாத ஒருவர் ஆங்கிலச் சொற்களை மட்டுமே கொண்டு அடையக்கூடிய பொருள், தமிழில் உள்ளதற்கு இணையாக இருக்குமா என்ற சந்தேகம் எழுகிறது.

ஒரு சோதனை முயற்சியாக, ஏ கே ராமானுஜனின் ஆங்கிலக் கவிதைகளை நெருக்கமாக ஒட்டி, அவர் மொழிபெயர்த்த சில சங்கப் பாடல்களின் தமிழாக்கம் இங்கு அளிக்கப்படுகிறது. சரி தவறுகளுக்கு அப்பால், ஏ கே ராமானுஜனின் மொழிபெயர்ப்பை மீண்டும் வாசிக்கச் செய்ததெனில், இந்தச் சோதனை முயற்சி வெற்றி பெற்றதாக எடுத்துக் கொள்ளலாம்.

கௌவை யஞ்சிற் காம மெய்க்கும்
எள்ளற விடினே யுள்ளது நாணே
பெருங்களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ
நாருடை யொசிய லற்றே
கண்டிசிற் றோழியவ ருண்டவென் னலனே.

Look, friend,
fear of scandal will, only thin out passion.
And if I should just give up my love
to end this dirty talk,
I will be left only with my shame.

My virgin self of which he partook
is now like a branch half broken
by an elephant,
bent, not yet fallen to the ground,
still attached to the mother tree 
by the fiber of its bark.

கேள், தோழி,
பழிச்சொல் பயம், காமத்தை குறைக்கத்தான் செய்கிறது.
என் காதலை விட்டுக் கொடுத்தாலாவது
இந்த இழிபேச்சை நிறுத்தலாம் என்றால்,
எனக்கு அவமானம் மட்டுமே மிஞ்சும்.

அவன் கொண்ட என் பெண்மை
பெரும் களிற்றால்,
பாதி முறிந்த கிளைபோல
வளைந்து, ஆனால் மண்ணில் விழாது,
அதன் பட்டையின் நாரால்
இன்னமும் தாய்மரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறது.

ஸ்ரீதர் நாராயணன் (“Fear of Scandal” ) (more…)

கை நழுவிய இராணி

கதை: ஸ்ரீதர் நாராயணன்; ஓவியம்: யாத்ரீகன்

queen-missed

உண்மையில் இந்த கதையை நான் எழுதவில்லை. செந்தூரன்தான் எழுதினார். இரண்டாயிரத்து ஒன்பதில் இந்தக் கதையைப் பற்றி முதன்முதலாக நாங்கள் இருவரும் பேசினோம். அப்போது அவர் பத்திரிகையெல்லாம் நடத்திக் கொண்டு தீவிரமான செயல்பாட்டில் இருந்தார். இவர் அமெரிக்காவில் இருந்தபடி எடிட்டிங் பார்த்துக் கொள்ள, சென்னையில் பத்திரிகை பணிகள் நடந்து கொண்டிருந்தன. அச்சு உலகில் ஓரளவுக்கு கவனத்தை பெற்ற மாதாந்திரி பத்திரிகை அது..

‘கதையெல்லாம் நூறு பேரு எழுதறான்…. நீ வேற ஏதாச்சும் கட்டுரை எழுதேன். இங்க நடந்திட்டிருக்கிற செஸ் டோர்னமெண்ட் பத்தி ஒரு ஃபீச்சர் பண்றோம். நீயும் செஸ் பத்தி எழுதேன்’ என்றார். சொன்னது போல ஃபிலடெல்ஃபியாவில் நடந்த CCA டோர்னமெண்ட்டை முன் வைத்து பிரமாதமான கட்டுரைகள் எல்லாம் வந்திருந்தன. கேடா காம்ஸ்கியோட ஒரு நேர்முகம், தமிழகத்தின் லேட்டஸ்ட் கிராண்ட் மாஸ்டர் டி. சந்தோஷ் பற்றி அவருடைய அப்பா எழுதின கட்டுரை, வீடில்லாமல் ஃபிலடெல்ஃபியா ரூஸ்வெல்ட் பார்க்கில் வாழ்க்கை நடத்தும் செஸ் மாஸ்டர் டாம் மர்ஃபி பற்றி ஒரு கட்டுரை என்று பலதும் வந்திருந்தன. (more…)

சிண்ட்ரெல்லா கொலைவழக்கு

– கதை: ஸ்ரீதர் நாராயணன்; ஓவியம்: யாத்ரீகன்

Cinderella

இன்னும் பத்து நிமிஷத்தில் சில்க்போர்டு பாலம் வந்துவிடும். இந்த நடுஜாமத்தில் மடிவாலா பக்கம் ஏதாவது டீக்கடை திறந்திருக்கலாம் என்று நீங்கள் நினைக்கும் போது வண்டியோட்டிக் கொண்டிருந்த கம்பார் மைக்கை திருப்புகிறார். சற்று கரகர பின்னணியில் ஒரு குரல் ‘கமின்…. கமின்… கண்ட்ரோல் ரூம் கமின்…. ஹொய்சளா பேட்ரோல் செவண்டீன் ரிப்போர்ட்டிங்… இல்லி கொலை ஆரிட்டிட்டு. காரு உளகே ஒந்து லேடி டெத்…’ என்று செய்தி சொல்கிறது. ஏதோ சாலைவிபத்து பற்றி தகவல் என்று நினைத்தால் கொலை என்ற வார்த்தை, காரில் உள்ள எல்லோரையும் நிமிர்ந்து உட்காரவைக்கிறது. உங்களுடைய அடுத்த ஒரு மணி நேர அனுபவங்களும், இன்னும் மூன்று மாதத்திற்காகவது ‘சிண்ட்ரெல்லா கொலைக்கேஸ்’ என்று மீடியாக்களில் அதகளபடப்போகிறது பாருங்கள்.

பின் சீட்டில் அரைத்தூக்கத்தில் உட்கார்ந்திருக்கும் ஏடிஜிபி ராகவேந்திரா முல்குந்த் இன்னும் நான்கு வருடங்களில் சிட்டி கமிஷனராக ஆகிவிடுவார். அவருக்கு தொந்தரவு வேண்டாமே என்று கம்பார் அவசரமாக மைக்கை அணைக்க போக, முழுவதுமாக விழித்துக்கொண்ட ஏடிஜிபி அவர் தோளைத் தொட்டு, அணைக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு மைக்கில் வந்த செய்தியை உன்னிப்பாக கேட்கிறார்.

பன்னர்கட்டா ரோடில், மீனாட்சி கோவில் பக்கம் அநாமத்தாக சாலையோரத்தில் கார் ஒன்று நிற்கிறதாம். காரை ஓட்டி வந்த பெண், டிரைவர் சீட்டில் இறந்து கிடக்கிறாராம். வழிப்பறிக் கொள்ளையோடு கொலையாக இருக்கலாம் என்கிறார். மைக்கில் பேசுபவரின் மொழி ஹூப்ளி வட்டாரவழக்கு போல் உங்களுக்கு தெரிகிறது. போலிஸ் வேலை என்று வந்துவிட்டால் எவ்வளவு நுட்பமாக எல்லாவற்றையும் கவனிக்க வேண்டியிருக்கிறது பாருங்கள். ஆனால் ரொம்பவும் மெனக்கெடாதீர்கள். இந்தக்கதையின் முக்கியமான துப்பு துலக்கப் போகும் பாத்திரம் என்றாலும், நீங்கள் யூனிஃபார்ம் போலிஸ் இல்லை. ஏடிஜிபி ஆபிஸ் கிளார்க்தான். ஏடிஜிபியோடு கேம்ப் போய்விட்டு பெங்களூரு திரும்பிக் கொண்டிருக்கிறீர்கள். (more…)