நாஞ்சிலில் இருந்து வந்த ஒரு நாடன்

அம்பை


ambai_nanjil_spl_issue

என் சமகால எழுத்தாளர்களில் திருநெல்வேலி மற்றும் கன்யாகுமரி மாவட்டங்களிலிருந்து வரும் எழுத்தாளர்கள் என்றால் எனக்குத் தனிப்பற்று உண்டு. என் அம்மா கோவில்பட்டியில் வளர்ந்தவள். அவளுக்குக் கரிசலிலிருந்து கன்யாகுமரி வரை உள்ள மக்களும் மொழியும் மிகவும் மனத்துக்கு உகந்தவர்கள். அவள் மூலம் எனக்கு இந்த விருப்பம் வந்திருக்கலாம். நாஞ்சில்நாடன் மும்பாய்க்கு 1972இல் வந்தார். நான் 1978இல்தான் வந்தேன். ஆனால் அதற்கு முன்பே அவரைப் படித்திருந்தேன். மும்பாய் வந்ததும் அவருடன் நல்ல நட்பு ஏற்பட்டது. ஊருக்குப்போய் வரும்போது தேங்காய்களும் கருப்பட்டியும் சகோதரிக்குச் சீர் கொண்டு வருவதுபோல் கொண்டுவருவார். தன் மகளுக்குத் திருமணம் நிச்சயமானபோது என்னைத் தொலைபேசியில் கூப்பிட்டு, “அத்தை சீர் செய்ய வந்துவிடுங்கள்” என்று உரிமையுடன் உத்தரவிடும் வகையில் உள்ள நட்பு அது. இலக்கிய உலகில் எனக்கு உள்ள எல்லா நட்புகளும் போல இதுவும் இலக்கியமும், வாசிப்பும், விவாதங்ளும் விமர்சனமும் கூடிய நட்புதான். நான் வேற்று மாநிலத்தில் வளர்ந்து அங்கு தமிழ் கற்றவள். அதனால் நாஞ்சில்நாடனிடம் மொழி குறித்தும், தற்கால இலக்கியம் குறித்தும் நிறையப் பேசியிருக்கிறேன். மிதவையிலிருந்து எட்டுத் திக்கும் மதயானை வரை அவர் கையெழுத்திட்டு, கைப்பட எனக்குத் தந்தவைதாம். இப்போது அவரது எழுத்துகள் குறித்து எழுத அமரும்போது அந்த மும்பாய் நாட்களையும் பிறகு கோவை வந்தபோது சில சமயம் சந்தித்துப் பேசியதையும் நினைத்துக்கொள்கிறேன். இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் எழுத்து பற்றி நான் எழுதவேண்டிய சரியான காலகட்டம் இதுதான் என்று தோன்றுகிறது. அவர் கடந்து வந்த வாழ்க்கை மற்றும் எழுத்துப் பாதையும் அவர் தற்சமயம் நிற்கும் மைல்கல்லும் எனக்கு மிகத் தெளிவாகப் புலப்படும் கட்டம் இது.

 

nanjil_nadan_spl_issueஹிந்தியில் “மீட்டீ சூரி” (இனிப்பான கத்தி!) என்று சொல்வதுபோல் அவர் எழுத்தில் என்னைத் தொடர்ந்து ஈர்ப்பவை குறித்து ஆரம்பித்து, பிறகு மற்ற விஷயங்களுக்குப் போக விரும்புகிறேன். நாஞ்சில் நாட்டு மனிதர்களை அவரைப்போல வேறு யாரும் வெளியே கொண்டுவரவில்லை என்று ஒரு புத்தகத்தின் பின் அட்டையில் வண்ணதாசன் கூறியிருப்பார். வண்ணதாசன் இதுவரை யாரைக் குறித்தும் ஒரு கடுஞ்சொல் கூறாதவர், எல்லோரையும் ஆகாயத்தில் தூக்கி வைப்பவர் என்றாலும் நாஞ்சில்நாடனைப் பொறுத்தவரை அவர் கூறியிருப்பது உண்மைதான். 1975இல் எழுதிய ”விரதம்” கதையில் வரும் சின்னத்தம்பியா பிள்ளையிலிருந்து 2003இல் எழுதிய “வனம்” கதையில் வரும் ஓட்டுனர் வரை அவர் நம் முன் வைக்கும் பலதரப்பட்ட நாஞ்சில்நாட்டு மக்கள் ஒரு பிரதேசத்தின் வட்டத்தினுள் இருந்தாலும் அந்த வட்டத்திலிருந்து எழும்பி மனித வாழ்க்கையையும் அதில் இருந்த, இருக்கும் அழகுகளையும் அவலங்களையும் குறிக்கும் குறியீட்டுப் பிரதிநிதிகளாகிவிடுகிறார்கள். அவர்கள் அப்படி ஆவதற்குக் காரணம் அவர்கள் கதைகளின் பாத்திரங்களாவதனால் மட்டுமல்ல. அவர்களைத் தன் மொழியால் நாஞ்சில்நாடன் வரையும் விதத்தால்தான்.

விரதம்” கதையில் சின்னத்தம்பியா பிள்ளை குளித்துக்கொண்டிருக்கிறார். அதை இப்படிச் சொல்கிறார்:

“துவைத்துப் பிழியப்பட்டிருந்த பள்ளியாடி புளியிலைக் கரை வேட்டி, கல் மீது பாம்புப் புணைபோலப் படுத்துக் கிடந்தது. மாடு குளிப்பாட்டும் பையன்கள் தேய்த்துத் தேய்த்துப் பசுமையாகிவிட்டிருந்த வைக்கோல் கத்தையால் கை, கால், உடம்பு எங்கும் நன்றாகத் தேய்த்தார். ஐம்பது ஆண்டுகளாக இதே பழக்கம். பங்குனி, சித்திரை வெயிலிலும் ஆனி, ஆடிச்சாரலிலும் அடிபட்டு, உரம் பெற்று, காய்ந்து சுருக்கம் விழுந்துவிட்ட உடம்புக்கு, வைக்கோல் கத்தையானால் என்ன? தேங்காய்ச் சவுரியானால்தான் என்ன?

இடுப்பளவு ஆழத்தில் நின்று அரையில் கட்டியிருந்த ஈரிழைத் துவர்த்தை முறுக்கிப் பிழிந்து, முதுகின் பின் பக்கம் வடம் போலப் பிடித்துக்கொண்டு, அழுத்தமாக முதுகைத் தேய்த்தார். அதையே மீண்டும் அரையில் கட்டிக்கொண்டு ஆனந்தமாக நீராடலானார்.”

சின்னத்தம்பியாபிள்ளையின் மொத்த உருவமும் கண்முன் வருவது மட்டுமல்ல, அந்தக் காட்சியும் கண்முன் விரிகிறது. புளியிலைக் கரை வேட்டி, துவைத்துப் பிழியப்பட்டு பாம்புப் புணைபோல அது கிடக்கும் விதம், அவர் முதுகு தேய்த்துக்கொள்வது, அந்தக் குளியலின் ஆனந்தம் எல்லாவற்றையுமே நம்மால் கற்பனை செய்ய முடிகிறது. இதற்குப்பின் அந்த ஆற்றை விவரிப்பார். அது அகண்ட காவிரி இல்லை. ஆனால் அதற்கென்று சில குணங்கள் உண்டு. இவற்றையெல்லாம் கூறும்போது அந்தக் கிராமமும், அதன் வாழ்க்கை முறையும் நமக்குத் தெரிந்துவிடுகிறது. பிறகு கதையின் போக்கில் நாமும் ஆற்றின்போக்கில் போவதுபோல் இழுபட்டபடி போகிறோம். “சூடேறிவிடாத சலசலக்கும் தண்ணீரின் இதம்” கொண்ட அந்த ஆற்றைப்போலவே கதையும் நம்மைத் தொடுகிறது.

மென்மையும் எள்ளலும் எகத்தாளமும் நகைச்சுவையும் கூடிய மொழி நாஞ்சில்நாடனுடையது. மனித இயல்புகளைச் சற்றே எட்டி நின்று பார்த்து வியந்து சிரிக்கும், மனம் நெகிழ்ந்தும் உடைந்தும் நம்பிக்கை கொள்ளும், நம்பிக்கை இழக்கும் பார்வை. அதற்கேற்ற மொழி. “சில வைராக்கியங்கள்” கதையில் வரும் “ஊருஞ் சதமல்ல உற்றார் சதமல்ல” என்று பட்டினத்தடிகளைப் பாடிவிட்டு சூட்டோடு பரமசிவம் பிள்ளை இட்லி சாப்பிடுவதை அவருக்கே உரிய எள்ளல் தொனியில் நாஞ்சில்நாடன் விவரிக்கிறார்:

“நுனி வாழை இலையில், ஆவி பறக்க ஐந்தாறு இட்லிகளையாவது வைத்து ஓரத்தில் இரண்டு மூன்று கரண்டி மிளகாய்ப் பொடியை வைத்து அவர் அதை விரலால் குழிக்க, நல்லெண்ணெயை அதன் மீது சரித்தாள் மனைவி.

பரமசிவம் பிள்ளை சாப்பிட ஆரம்பித்தார். உள்ளே போய்க்கொண்டிருந்த இட்லிகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால், “ஊரும் சதமல்ல உற்றார் சதமல்ல” என்று சற்று முன் பாடியவர், இது ஒன்றைத்தான் சதம் என்று எண்ணுகிறாரோ என்று தோன்றும்.”

கதை பரமசிவம் பிள்ளை சாதியை விடாமல் பற்றியிருப்பது பற்றிய கதை. ஆனால் கதைக்கான பின்னணியை அமைத்தடி போகிறார் நாஞ்சில்நாடன். பொதுவெளியில் ஒரு நோக்கையும் தன் வாழ்க்கையில் ஒரு நோக்கையும் வைத்திருக்கும் நபர் அவர். பட்டினத்தடிகளின் பாடலுக்கும் அவர் சுவைத்துச் சாப்பிடும் விதத்துக்கும் சம்பந்தமில்லாதது போலவே அவர் அரசியலுக்கும் அவர் வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லை.

பல மாதங்களாக எண்ணெய் காணாத முடியும் உடம்பும் உள்ள ஒருவர் செய்யும் எண்ணெய்க்குளியலும் உண்டு “விலக்கும் விதியும்” கதையில்:

“மரத்து நிழலில் சுகமாக அமர்ந்த பரமக்கண்ணு எண்ணெய் தேய்க்க ஆரம்பித்தான். கால்கள், கைகள், தொடை, முதுகு என்று தப்பளம் தட்டினான். காது, மூக்கு, நகங்கள், தொப்புள் எல்லாம் தொட்டுத் தொட்டு வைத்தான். உடலெல்லாம் நசநசவென்று பிசுக்கு. தலையில் இருந்து நெற்றிக்கு வடிந்து புருவப்பந்தியைத் தாண்டி கன்களில் கசிந்தது. வயிற்றில் கோடு போட்டால் வரிவரியாய்த் தடம் விழுந்தது. அழுக்கு கரைந்து மேலெல்லாம் ஒரு மொலுமொலுப்பு. யாரோ தொட்டுக் கூச்சங் காட்டுவதுபோல். அரைமணி நேரம் ஆயிற்று. இவ்வளவு ஊறியது போதும். அவன் இறங்கிக் குளிக்க ஆரம்பித்தான்.”

பிறகு எண்ணெய்க்குளியலை அவர் அனுபவிப்பதைக் கூறுகிறார் அவருக்கே உரிய மொழியில்:

”கண்ணிலே ஆவி பறக்கு…கொதிக்க சோத்திலே இருந்து பறக்க மாரி குபுகுபுண்ணு… சவம் எத்தனை மாசச் சூடு? சீக்காப் பொடியைப் போட்டு அரங்கத் தேச்சாலும் பிசுக்கு போல்லே… மேலெல்லாம் பாம்புச் சட்டை போல உரிஞ்சு கெடந்தது இப்பம் பளபளண்ணுல்லா வெட்டுகு? ஈணப்போற எருமை மாரி ஒரு மினுக்கம். சும்மையா பாண்டிக்காரம்லாம் சனி தறுனாலும் எண்ணக்குளி தவறாம இருக்கான்…என்ன சொகமாக இருக்குங்கேன்? பரமசிவன் குளித்துக் கரையேறினான்.”

ஈணப் போகும் எருமைக்கு மினுமினுப்பு இருக்கும் என்பது ஒரு தகவல்தான். ஆனால் அது பரமசிவன் போன்ற விவசாய உழைப்பாளியின் எண்ண ஓட்டங்களிலிருந்து வருவதுதான் கதையில் அது சரியாகப் பொருத்தப்படும் இடம்.

பரமசிவனுக்கும் சுவை கூடிய உணவைப் பற்றிய எண்ணங்கள் உண்டு. அவை கடையில் கிடைப்பது அல்ல. ஒரு பெண்ணின் கையால் செய்யப்படும் உணவு:

“…மூதி கொளம்பு வச்சுண்ணா என்னா மணக்கும்! சாணிகெணக்க சளசளன்னு கையெல்லாம் அப்பும், அந்த மாரி வருமாங்கும்? பேசுகேரே நீரும்! உமிக்காந்தல்லே வெறும் அயிலைக் கருவாட்டைச் சுட்டு வச்சாப் போருமே… மணம் பிய்க்காது?…ஒரு கும்பா கஞ்சியை உப்புப் போடாம குடிக்கலாம்… மரச்சீனிக் கெளங்குக்கறி வச்சாண்ணா அது ஒரு மணம்… நெய்யும் தயிரும் அதுக்கு வால்லே கெட்டி அடிக்கணும்…”

சாணி மாதிரி சளசளவென்று கையை அப்பும் என்ற உவமையைக் குழம்புக்காக வேறு யாரால் சொல்ல முடியும் மாட்டுடனும் சாணியுடனும் நிதம் வாழ்க்கை நடத்துபவனைத் தவிர?

நல்ல வசதியாக இருப்பவர்கள் (அவர்கள் வசதியானவர்கள் என்பதைக் குறிக்க அவர்கள் வயல் குறித்த விவரங்களை அல்லது அகன்ற, பெரிய வீடுகளை, சாப்பிடும் சாப்பாட்டை விவரமாகக் கூறுவார் நாஞ்சில்நாடன்) செய்யும் ஏய்ப்புகளை, அதிகாரங்களை, கபடங்களை, அதற்குப் பணிந்துபோகும் கிராமத்தினரின் வாழ்க்கையை, அவர்கள் எதிர்ப்புகளை, மீறல்களை அதனால் விளையும் சங்கடங்களை, மன முறிவுகளை, சோகங்களைப் பல கதைகளில் கூறுகிறார் நாஞ்சில்நாடன். எல்லோருமே மண்ணில் உறுதியாகப் பாதங்களைப் பதித்தவர்கள். அதன் மொழியை உறுதியாகப் பற்றியிருப்பவர்கள். சிலர் பெருவயிற்றுக்காரர்கள்; சிலர் பசித்தவர்கள். சிலர் உழைப்பவர்கள்; சிலர் உழைப்பை அனுபவிப்பவர்கள். சவம், மூதி தாயோளி என்றுதான் கொஞ்சலும் வசவும். எண்ணையை அரக்கித் தலையில் தேய்த்து, ஆற்றங்கரையில் குளிப்பதுதான் இந்த வாழ்க்கையில் உள்ள டாம்பீகம். கிராமத்தில் திருமணம் நடந்தால் நல்ல சாப்பாடு சாப்பிட ஏங்கும் மக்கள். அதிலும் சுயமரியாதையை விட்டுவிட முடியாத நபர்கள் சிலர் பட்டினியாகவே விலகிவிடும் நிலைமை. மனவளர்ச்சியற்றவர்களையும், தாயற்ற பிள்ளைகளையும் அரவணைத்துப் போகும் உலகம். அதே சமயம் சாதியும் அதை ஒட்டிய திமிரும் மடமையும் வன்முறையும் உள்ள உலகம். சாதிக்கேற்ப வாகனத்தில் வரும் கடவுள்களும் குழந்தைகள் விளையாட்டில் வெறும் தாச்சியாக இருந்துவிடும் கடவுள்களும் உள்ள உலகம்.

இந்த உலகத்து விவரங்களை பட்டியலாக்கியபடி கதைகளை எழுதிவிடலாம்தான். அது மிகவும் எளிதானது. ஆனால் நாஞ்சில்நாடன் அதைச் செய்வதில்லை. இடையிடையே சில வரிகள் விழுந்து கதைக்குச் சுருதி கூட்டுகின்றன சில சமயம்; கோடை காலத்து மழைத் துளிகள்போல் தண்மையைப் பரப்புகின்றன சில சமயம். உதாரணங்களாகச் சில வரிகளைக் கூறலாம்:

“…ஆட்கள் நடந்து நடந்து வரப்பின் மத்தியில் பாம்பு அடித்துப் போட்டது போன்று நேரான வழித்தடம் உண்டாகி இருந்தது” (”உபாதை”)
“நொந்த வாழைப்பழமாய் மண் பிதுங்கியது…” (”உடைப்பு”)
“பூச்சி விழுந்த எருமைக் கன்றுக்குட்டியின் வயிறுபோல் இலுப்பை மரக்கரை இளைத்திருந்தது.” (”உடைப்பு”)
”(எருமையின்) நான்கு காம்புகளும் பலாப்பிஞ்சுகள் போல் தெறித்திருந்தன.” (”சுரப்பு”)

நகர்ப்புறத்துக் கதைகள், குறிப்பிட்டுச் சொன்னால் மும்பாய் வாழ்க்கை பற்றிய கதைகளையும் எழுதியிருக்கிறார் நாஞ்சில்நாடன். மும்பாய் நகரத்தில் உறவுகள் அமையும் விதம் குறித்து, மும்பாய் நகரத்தின் போக்கு குறித்து எனப் பலக் கதைகள். கீழே மண்ணில் கொட்டும் பாலைக் கையில் அள்ளி நடைபாதையில் வாழும் குழந்தைக்கு ஊட்டும் மும்பாய் நகரம். இங்கும் குடிசைகள் உண்டு. ஆனால் அவை எப்படிப்பட்ட குடிசைகள் என்று நாஞ்சில்நாடன் விவரிக்கிறார்:

…”குடிசைகள் என்றால் கிராமத்துக் குடிசைகள்போல், சுற்றி மண்சுவரும் ஒரு கதவு நிலையும் இரண்டு சன்னல்களும் மேலே தென்னையோலை, பனையோலை அல்லது புற்கட்டுக்களால் கூரை, சாணமிட்டு மெழுகிய பசுந்தரை, முன்னால் முற்றம், ஒரு வாழைக் குப்பம், இரண்டு கத்தரி, வெண்டை, ஒரு புடலை, ஒரு பாகல் அல்லது அவரைப் பந்தல், ஒரு ஆடு, பசு மாடு, கலப்பை, நுகம், உழவுமாடுகள், நெல்குத்தும் கல் உரல், தோசைக்கும் மாட்டுக்கு பருத்திக் கொட்டையும் அரைக்கும் ஆட்டுரல், அது பதிந்த திண்ணை, மாட்டுக்குத் தண்ணீர் காட்ட கல்தொட்டி, உரக்குண்டு, சுவர் மூலையில் கூரையில் இருந்து தொங்கும் துடைக்கயிற்றுச் சுருள், உமிக்கரிப் பட்டை, கோழிக்கூடு… இந்தக் குடிசைகள் அந்த வகைத்தன அல்ல.” (”ஒரு காலைக் காட்சி”)

மற்ற நகரங்களைப் பற்றிய கதைகளும் உண்டு. அவை உருவாக்கும் கூச்சல்கள், குமுறல்கள், அவைகளில் அமையும் பயணங்கள் பற்றிய கதைகள். பாதைகளைப் பிணைக்க முயன்று மனங்களைப் பிரித்துவிடும் பயணங்களை உருவாக்கும் நகரங்கள். செயற்கை முறையில் பசுவைக் கருத்தரிக்க வைக்கும் பசு வதை செய்யும் நகரங்கள். இவற்றில் “வனம்” என் மனத்துக்கு மிக நெருங்கிய ஒன்று. தரமற்ற சொற்களால் எல்லோரையும் கடிந்துகொண்டு வண்டியை ஓட்டும் ஓட்டுனர் ஒருவர் வேகமாக ஓட்டும் பேருந்தின் பாதையின் குறுக்கே “சுசீந்திரம் தாணுமாலையன் தேர் வடம் போல்” ஒரு பாம்பு. மிக மெதுவாக, பரபரப்பின்றிப் பாதையைக் கடக்கும் பாம்பை—அது கர்ப்பிணிப் பாம்பாக இருக்கலாம்; இரையெடுத்த நிறைவயிற்றுப் பாம்பாகவும் இருக்கலாம்—கடுப்பு மிகுந்த ஓட்டுனர் ஏற்றிக் கொன்றுவிடுவார் என்று மனம் பதைக்கும்போது, “போ மோளே பெட்டெந்து” என்கிறார் ஓட்டுனர் கியரில் கை வைத்தபடியே. குரலில் கனிவு கசிகிறது. மனிதர்களும் மிருகங்களும் சந்திக்கும் இடம் வனம். அங்கு அவைகளுக்குத்தான் முதல் மரியாதை.

தாயை அறியா தந்தை அற்ற, ஆச்சியும் பாட்டாவும் வளர்க்கும் கல்வி கற்ற இளைஞன் ஒருவன் எதிர்கொள்ளும் வறுமை, கல்வி கற்ற பின்பும் வேலைக்காக அலையும் படலத்தைக் கூறுவது என்பிலதனை வெயில் காயும். கிராம வாழ்க்கையிலும் தன் ஆச்சி பாட்டாவின் அன்பிலும் அரவணைப்பிலும் வளரும் ஒரு பையன் படிப்பில் வல்லவனாக இருந்தாலும் வறுமையால் ஆளுமையற்றவனாக உணர்வது, தன்னை நினைத்துக் கழிவிரக்கம் கொள்வது இவற்றைக் கூறுவது. இதில் நாஞ்சில்நாடனின் வழக்கமான தெள்ளிய நடையும் துல்லியமான பார்வையும் இருப்பது பல இடங்களில் தெரிகிறது. குறிப்பிட்டுச் சொன்னால் அதில் வரும் அனுபவங்களும் அவற்றைக் கூறும் மொழியும்:

“குளம் நீலமாகப் பூத்திருந்தது. கண்கண்ணான நீலம். எண்ணெய் தடவிய பச்சை இலைகள் போக்கு வெயிலில் பளபளத்தன. ஊடே ஊடே ஆம்பல் கொடிகள். ஆம்பலின் வட்டமான இலைகள். ஓரங்கள் பல்பல்லாக, மரமறுக்கும் வாள்போல, கூட்டம் கூட்டமாய் நுள்ளிக்காய் கொடிகள், நிமிர்ந்திருந்த இலைகளில் பச்சை. காற்றில் புரண்டிருந்த இலைகளில் தவிடு. குளத்தின் ஓரத்திலோங்கி உயர்ந்திருந்த கொங்காணிக் கோரைப்புற்கள். ஊடே உகளும் கெண்டைகள்….” (பக்கம்.36)

”…வேப்பமர நிழலில் கொஞ்ச நேரம் இளைப்பாறுகையில், மனம் காற்றில் அலையும். காய்ந்த சருகு போல ஏறும். இரங்கும். ஒல்கும். ஒசியும். அசையும். மிதக்கும்.” (பக்கம் 59)

உகளும், ஒல்கும், ஒசியும் இவை மிகவும் அபூர்வமாக உபயோகத்தில் வரும் வினைச்சொற்கள். அவற்றை மிகவும் சரியாகப் பயன்படுத்தும்போது மனத்தில் ஒருவித உவகை மூள்கிறது. படித்தபின் மிகுந்த நிறைவைத் தரும் நாவல்களில் ஒன்று என்பிலதனை வெயில் காயும். படைப்பாளி மும்பாய் வந்து ஏழாண்டுகள் ஆன பின்னும் கிராமத்து இளைஞன் ஒருவனின் நிலையை, அவன் உணர்வுகளுடன் ஒன்றிக் கூறும் நாவல்.

கிராமத்து ஆண் ஒருவன் வயிற்றுப் பிழைப்புக்காக நகரம் ஒன்றுக்குப் போகும்போது அவன் அடையும் உளைச்சல், பொருந்த முடியாமல் அவன் அந்நியப்பட்டு நிற்கும் நிலை, கிராமம் குறித்த அவன் ஏக்கங்கள் இவற்றை 135 பக்கங்களில் கூறும் நாவல் மிதவை. இதில் நாஞ்சில்நாடனின் நோக்கும் கதையை நிகழ்த்தும் விதமும் சற்றே வேறுவகையாக மாறிப்போகிறது. “பெருவயிற்றைப் பிள்ளை என்று எண்ணியதுபோல” பெரியப்பாவை நம்புகிறான் சண்முகம், என்ற நாஞ்சில்நாடன் பாணி உவமைகளுடன் ஆரம்பிக்கும் நாவல் பிறகு வேறு திசையில் போகிறது. வாசகசாலையில் பல பத்திரிகைகள். அன்றைக்கான பேப்பர் பனிரெண்டரை மனிக்குத்தான் வரும். பதினோரு மணியளவில் போனால் அதிகம் ஆட்கள் இருக்க மாட்டார்கள். தினத்தந்தி ரொம்பக் கசங்கி கூழாக இருக்கும். ஒரு மாதிரி கசங்கலோடு தினமலர். தினமணி மாத்திரம் “புதுக்கருக்கு அழியாத பெண்போல.” படித்துக்கொண்டே போகும்போது கண்களை முட்டுகிறது உவமை. ”தினத்தந்தியை எடுத்து முன்னால் விரித்து வைத்துக்கொண்டு அதில் வெளியாகி இருக்கும் சினிமா நடிகையின் முலை தடவி கிளர்ச்சியுறலாம்.” என்று போகிறது இன்னொரு வரி. (பக்கம் 7) என்பிலதனை வெயில் காயும் நாவலில் தனக்குப் பாலுணர்வு ஏற்பட்ட விதத்தை அதை ஒட்டிய நிகழ்வுகளை நினைத்துப் பார்க்கிறான் சுடலையாண்டி. அது அந்த வயதுக்குரிய குறுகுறுப்புடன், வியப்பு உணர்வுடன் ஆனால் எந்த வகையிலும் நம்மை உறுத்தாத வகையில் சொல்லப்படுகிறது. ஓர் இளைஞன் படத்திலுள்ள சினிமா நடிகையின் மார்பைத் தொட்டுக் கிளர்ச்சியுறுவது ஒன்றும் நடக்காத விஷயமில்லை. அது ஆபாசமுமில்லை. அது யதார்த்தம்தான். முலை என்ற சொல்லும் தவறானது அல்ல. பெண் உடலின் ஒரு பாகத்தைக் குறிப்பதுதான். ஆனால் இங்கு அது வலிந்து புகுத்தப்படுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. முன்பொரு கதையில் பெண்ணின் மார்பை பால்மடு என்று கூறுவார். சினிமா நடிகைகளுக்கு இருப்பது பால்மடு இல்லை போலும்!

கிராமத்திலும் காமத்தைக் கிளறும், உடல் உறவைத் தரும், யாசிக்கும் பெண்கள் உண்டு. அவர்களின் கட்டான உடலைப் பற்றியும் இளம்பெண்கள் வயதுக்கு வரும்போது ஒளிரும் உடலைப் பற்றியும் கூட குறிப்புகள் உண்டு கதைகளில். ஆனால் கிராமத்தை விட்டு வெளியே வரும், பயணம் செய்யும் அல்லது படித்த நகர்ப்புறப் பெண்களை நாஞ்சில்நாடனுக்குப் பிடிப்பதில்லை ஏனோ. மேலும் நகரத்துக்குப் போக முடிவு எடுத்த உடனேயே அந்தப் படித்த இளைஞனின் மொழி மாறிவிடுகிறது. ரயிலில் செல்லும்போது கீழே பார்க்கும் வறண்ட வைகை அவனுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. சாதாரண அதிர்ச்சி இல்லை:

”பெரிய அதிர்ச்சியாக இருந்தது வைகையைப் பார்க்க. கிழட்டுத் தேவிடியாளைப் பார்ப்பதுபோல். கால்களில் நீர், வெடிப்பு, முகத்தில் வீக்கம், காய்ந்து அடர்ந்த உதடுகள், பூழை திரண்ட கண்கள், சரும ரோகம், தோல் பாய்ந்த முலைகள், ஒருவித வீச்சமுடன் இருக்கும் இருக்கும் கிழட்டுத் தேவிடியாளைப் பார்ப்பது போல் பெரிய அதிர்ச்சியாய் இருந்தது வைகையைப் பார்க்க….” (பக்கம் 20)

அவன் மனத்தில் இருந்ததெல்லாம் சிலப்பதிகார வைகையும் சில வரலாற்று நாவல்களில் வரும் வைகையாக இருந்தாலும் சிதைந்தும் வரண்டும் போன ஆறு ஒன்று குலைக்கப்பட்ட பெண்ணின் உடலாய்த் தெரிவதில் உள்ள வன்முறை என்னையும் அதிர்ச்சியடைய வைத்தது. அது ஒரு வயதான, அழகை எல்லாம் இழந்த, சுருக்கங்கள் உள்ள, கவனிக்கப்படாத முதிய பெண்ணுடலாக இருந்திருக்கலாம். அதில் அந்தப் பெண் உடலுக்குத் தரும் மரியாதை இருக்கிறது. ஆனால் தேவிடியாள் என்று கூறும் உவமையில் ஒரு சரித்திர இகழ்ச்சியும் மானபங்கமும் இருக்கிறது.

இதனுடன் நிற்பதில்லை இந்த வேலையில்லா இளைஞன். ரயிலில் கீழே படுத்திருக்கும் ஏழு வயதுப் பெண்ணின் தாயாரை அவன் பார்க்கிறான். அவள் மார்ச்சேலை விலகியிருக்கிறது. ”அந்த அம்மாளின் முழங்காலை யதேச்சையாய் படுவதுபோல், பெருவிரலால்” தொடுகிறான். பிறகு “முழங்காலின் குதிரை முகத்தை மெதுவாகத் தடவத்” தொடங்குகிறான். கால் விரலிடுக்கில் புடவையைப் பற்றி இன்னும் கொஞ்சம் தூக்கலாமா என்று தோன்றுகிறது அவனுக்கு. பயமாக இருக்கிறது. ஆனாலும் சிறிது நேரம் தொடர்கிறான். அதன்பின் ”முலை முகடுகளை” வெறித்துப் பார்த்துவிட்டு கழிவறையை நோக்கிப் போகிறான். அவனுக்கு இன்னும் வேறு எதுவோ தேவையாக இருக்கிறது. (பக்கம் 21-22)

ரயில் பல இடங்களை கடக்கிறது. பலவித பெண்களும் ஆண்களும் கண்ணில் படுகிறார்கள். தார்பாய்ச்சி கட்டிய புடவை உடுத்திய பெண்கள் வந்ததும் அவன் மனத்தில் உதிக்கும் முதல் கேள்வி இவர்கள் ஒன்றுக்கு எப்படிப் போவார்கள் என்பதுதான். (பக்கம் 40)

மும்பாய் வாழ்க்கை எளிதாக இல்லை அவனுக்கு. எதிர்நீச்சல் போட்டு, வேலையொன்றை அடைந்து, மனம் தளர்ந்து சில சமயம் மனம் உடைந்து, உடல் வேட்கையைத் தீர்த்துக்கொண்டு, கடனை வாங்கி மீண்டும் ஊர் செல்லும்போது எல்லாவற்றையும் மீறி மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனென்றால் அவன் திரும்புவது அவன் வீட்டை நோக்கி, அவன் மண்ணை நோக்கி. இந்த மகிழ்ச்சியும் கவலையும் கலந்த தருணத்தை நோக்கி அவன் வரும்வரை உள்ள வாழ்க்கையின் சிக்கல்களை அலங்காரமில்லாத சொற்களில், மௌனங்களைப் பிணைத்துக் கூறுகிறார் நாஞ்சில்நாடன். இந்தப் பகுதியிலுள்ள லகானிட்ட மொழிதான் மிதவை நாவலின் வெற்றி.

நாஞ்சில்நாடனின் சதுரங்கக் குதிரை நாவல் அவரது நாவல் முயற்சிகளிலேயே மிகவும் கவனத்துடன் அமைக்கப்பட்ட, பிசிறுகள் இல்லாத ஒரு முயற்சி. சதுரங்கத்தில் குதிரைதான் மிகவும் வித்தியாசமாக நகர்த்தக்கூடிய காய். நகர்த்தப்படும்போது அது இரண்டு இடங்கள் கிடை நிலையிலும் ஓர் இடம் செங்குத்தாகவும் அல்லது இரு இடங்கள் செங்குத்தாகவும் ஓர் இடம் கிடை நிலையிலும் நகர்த்தப்படலாம். மற்ற காய்களைப்போல் அல்லாமல் குதிரை மற்ற காய்களைத் “தாண்டிக் குதித்து” தன் இலக்கை எட்ட முடியும். சதுரங்கப் பலகையின் நடுவில் இருந்தால்தான் குதிரை வெற்றிகரமாகச் செயல்படமுடியும். ஓரத்தில் இருந்தால் அதை வீழ்த்துவது எளிது. சதுரங்கக் குதிரை நாவலின் மையப் பாத்திரமும் சதுரங்கப் பலகையின் இயக்கம் அதிகம் உள்ள மையத்தில் வைக்கப்படாததால் விளிம்புகளில் நகர்ந்துகொண்டிருக்கும் ஒரு சதுரங்கக் காய்தான். பலவகைகளில் செயல்பட்டுக்கொண்டிருந்தாலும் எதுவுமே அதிகத் தாக்கத்தைத் தராத செயல்பாடுகள். மும்பாய் வந்து பல ஆண்டுகளாக இருந்து அங்கேயே நிலைத்துவிட்ட, கிராமத்தில் நெருங்கிய பாசமுள்ள உறவினர்கள் என்று கூறிக்கொள்ள ஒருவரும் இல்லாத, திருமணமாகாத, நாற்பத்தைந்து வயதான, எந்தக் குறிப்பிட்ட இலக்கும் இல்லாத, எதிலும் ஒட்டுதல் இல்லாத வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்துகொண்டிருக்கும், அங்கும் இல்லாமல் இங்கும் இல்லாமல் முற்றிலும் அந்நியப்பட்டுப்போன ஒரு நபரின் கதை.

சுற்றிலும் உள்ள பல ஆண்களை அவரவர் தறுவாயில் வைத்து அவர்கள் வாழ்க்கையையும் அவர்கள் எடுக்கும் முடிவுகளையும் புரிந்துகொள்ளும் இந்த மையப் பாத்திரத்துக்கு அடிமனத்தில் சில கசப்புகள் மட்டும் தீராமலே இருக்கின்றன. அதில் முக்கியமானது பெண்கள் குறித்த சில அபிப்பிராயங்களும் இன்னும் பொதுவான சில முற்சாய்வுகளும். ஒரு தெருவின் சதுக்கத்தில் இருபத்திரண்டு ஆண்டுகளாய் கையில் பூண்கட்டிய பிரம்பும் மடித்துக் கட்டிய வேட்டியுமாய், வயதாகிவிட்டதால் தற்போதுள்ள வழுக்கைத் தலையுடன், “ஓம் க்ரீம் ரீம்” என்று பிரார்த்தித்தபடி உலாத்திக்கொண்டு இருப்பவரை அடி வயிற்றுக்குக் கீழே குத்து விடத் தோன்றுகிறது நாராயணனுக்கு ஆரம்ப காலத்தில். மிடுக்குக் குலைந்து, குரல் க்ஷீணித்துவிட்ட அவரிடம் பிறகு அனுதாபம் பிறந்தாலும் மனத்தில் அவரைப் பற்றிய கேள்விகள்: அவர் யார், திருமணவானவரா தனியரா, மழை பொழிந்தால் எங்கு போய் இந்த ஓங்காரம் செய்வார் போன்ற சாதாரணக் கேள்விகள் மட்டுமல்ல; அவர் பூணூல் மாற்றிக்கொள்கிறாரா என்ற கேள்வியும் கூடத்தான். (பக்கம் 2) அந்த விவரம் நாராயணனுக்கு ஏன் அவசியமாகப் படுகிறது என்பதற்கு எந்த விளக்கமுமில்லை. அதேபோல் ஔரங்காபாதில் ஒரு மிகச் சாதாரண ஓட்டல் ஒன்றில் கழிப்பறைகளுக்கு அடுத்து இருந்த அறையில் இரவைக் கழிக்கும்போது, கழிப்பறையிலிருந்து நாற்றம் அறையை எட்டுகிறது. அதை “வீர மராத்தியரின் மூத்திர வாடை” (பக்கம் 178) என்று நாராயணன் நினைக்கிறான். வீரத் தமிழர்களின் மூத்திரத்தில் பன்னீர் மணமா வீசுகிறது? நாஞ்சில்நாடனின் வழக்கமான ரசிக்கக்கூடிய எள்ளல் தொனியை இங்கு ரசிக்கமுடியாமல் போய்விடுகிறது.

வேலை செய்யும், வேறு மாதிரி உடை உடுக்கும் பெண்களை நாஞ்சில்நாடனுக்குப் பிடிக்காது என்பது இந்த நாவலிலும் உறுதியாகிறது. நாராயணன் வேலை செய்யும் கம்பனியில் டெலிஃபோன் ஆபரேட்டராக இருப்பவள் ஜாய்ஸ். ஐம்பத்தேழு வயதுப் பெண்மணி. அலுவலகத்துகு வந்ததும் அவள் பாத்ரூம் நோக்கிப் போவாள். “ஒன்றுக்குப் போவாளாக இருக்கும்” என்று நினைப்பான் நாராயணன். (பக்கம் 7) ஒரு பெண் பாத்ரூமை நோக்கிப் போவது வேறு எதற்காக இருக்க முடியும்? மேலும் அது என்ன அப்படிப் பெரிய குற்றமா என்ன? அது எல்லாம் இல்லை. அவள் ஆங்கிலோ இந்தியப் பெண்மணி. ஐம்பத்தேழு வயதிலும் ஃபிராக் போடுபவள். அது மட்டுமல்ல. இன்னும் ஆறு மாதங்களில் ஓய்வு பெறப்போகும் பான்வாலாவுடன் உற்சாகமாகச் சினிமா பார்ப்பவள். நாராயணனால் எப்படி அவள் பாத்ரூம் நோக்கிப் போவதைக் குறித்துக் கீழ்த்தரமாக நினைக்காமல் இருக்க முடியும்? ஐம்பத்தேழு வயதுப் பெண்மணி எப்படி இருக்க வேண்டும் என்ற முன்தீர்மானங்கள் உள்ள நபராயிற்றே அவன்?

எட்டுத் திக்கும் மதயானை வெகுவாகப் பாராட்டப்பட்ட நாவல். ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு பல விருதுகளைப் பெற்ற நாவல். ஆனால் அது வியாபார சினிமாவின் சினிமாத்தனம் உள்ள ஒரு திரைக்கதையாகவே எனக்குப் பட்டது. மையப் பாத்திரமான பூலிங்கம் கல்லூரிப் படிப்பை முடிக்காத, எந்தவித அதிகச் சிறப்புகளும் இல்லாத ஓர் இளைஞன். எதிர்மறை கதாநாயகனாகக் கூடிய எல்லாத் தகுதிகளும் உள்ளவன். பலவித நாடகத்தன்மை வாய்ந்த திருப்பங்களுடன் அவன் வாழ்க்கை ஓடுகிறது. மும்பாயின் கடத்தல் கும்பலுடன் வாழ்க்கை நிலைக்கிறது. கிட்டத்தட்ட இன்னொரு நாயகன். பிறகு எந்தப் பெண்ணுக்காக அவன் காரணமின்றி அடிபட்டானோ அதே பெண் ஆண்மை இல்லாத கணவனுடன் அவனைச் சந்தித்துப் பின் அவன் அவளை மீட்டுத் தன்னுடன் வாழ அழைத்துப் போவதுடன் முடிகிறது. பூலிங்கம் ஓடும் எல்லா இடங்களிலும் அவனுக்குப் பெண் துணை கிடைக்கிறது. உணவிடுபவர்கள் கிடைக்கிறார்கள். ஒரு வயதான, தார்ப்பாய்ச்சி கட்டிய பெண்மணி அவனுக்கு உணவிடும்போது அவள் கிழட்டு எல்லம்மன் போலத் தெரிகிறாள். “உலகத்துக்கு அமுது படைத்துக் களைத்த கிராமத்துத் தேவதையின் மூப்புக் கனன்ற முகம்” அவளுக்கு. (பக்கம் 91) நல்ல வேளை அவள் ஃபிராக் போட்ட ஆங்கிலோ இந்தியப் பெண்மணி இல்லை.

பூலிங்கத்துக்கு இடையிடையே தமிழ் இலக்கிய மேற்கோள்கள் தோன்றியபடி இருக்கின்றன. அவனிடம் அன்பு காட்டும் கோமதி என்ற பெண் சாராயத்தை ஊற்றிக் கொடுக்கும்போது ”முந்தை இருந்து நட்டார் கொடுப்பின் நஞ்சும் உண்பார்” என்ற வரிகள் நினைவுக்கு வருகின்றன.(பக்கம் 116) பின்னொரு கட்டத்தில் அவள் கண்களில் நீர் மல்கும்போது, “புரந்தார் கண் நீர்மல்க” என்ற வரிகள் மனத்தில் வருகின்றன.(பக்கம் 122) இரண்டுமே நல்ல வரிகள்தாம். ஆனால் பூலிங்கத்துக்கு அத்தகைய வரிகள் நினைவுக்கு வருவதற்கான எந்தச் சாத்தியக்கூறும் கதையில் இல்லை.

பூலிங்கமே பட்டினியாக இருக்கும்போது பிச்சைக்காரன் ஒருவன் எதிரே வருவான். இப்போது எந்த இலக்கிய வரிகளும் பூலிங்கத்துக்கு நினைவுக்கு வராது. ஆனால் ஒரு கொச்சையான பழமொழி அடிநாக்கில் உறுத்தும். “பெருமாள் முஷ்டியில் முயக்கம் செய்தாராம். பூசாரி பெண்குறி வரம் கேட்டாராம்.” (பக்கம் 138) இரண்டு நாட்கள் பட்டினியாக இருக்கும்போது கூட இத்தகைய பழமொழிகள்தாம் நினைவுக்கு வரும் போலும். அலைக்கழிக்கப்படும், விரட்டப்படும் ஒருவனுக்கு யோக்கியமாக இருப்பது குறித்து சிந்தனை எழும். கூடவே தோன்றும் இன்னொரு பழமொழி: “பத்தினிப் பெண்குறி பிரதேசம் போயிற்றாம். ஐம்பத்தாறு தேசத்து ஆண் குறிகளும் எதிர் நின்று அழைத்தனவாம்.” (பக்கம் 158)

கும்பமுனிக் கதைகளையும் மேற்கூறிய சில நோக்குப் பிறழ்வுகளையும் நான் ஏற்காது போனாலும் நாஞ்சில்நாடனின் எழுத்தை நான் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறேன். அவர் கதை உலகம் பரந்த ஆணுலகம் ஒன்றை விரிப்பது. இதில் மனத்தைத் தொடும் பல பெண்களும் உண்டு. கிராமத்திலிருந்து நகரம் வரை இதில் வரும் பலதரப்பட்ட ஆண்கள் உருவச் சித்திரங்கள் போல் உருவாக்கப்படுகிறார்கள். தத்ரூபமான உருவச் சித்திரங்கள். கிராமத்துப் பெண்களின் உருவச் சித்திரங்களும் அவ்வாறே உள்ளன. ஆனால் நகர்ப்புறப் பெண்களை உருவாக்கும்போது இந்தச் சித்திரங்களின் கோடுகள் கோணலாகிவிடுகின்றன. நாஞ்சில்நாடனின் எழுத்து அற்புதமான கிராமம், அற்பமான நகரம் என்ற இருமைகளை உருவாக்காமல் இருப்பதுதான் இவர் எழுத்தின் ஈர்ப்பு. மிகவும் எளிமையாக்கப்பட்ட முறையில் வாழ்க்கையை எழுதாமல் சிக்கல்களாகவே முறுக்கப்பட்ட மனித வாழ்க்கையின் ஊடே புகுந்து அதில் உள்ள நயங்களையும் கொச்சைத்தன்மைகளையும் கூறக்கூடிய வெகு சில எழுத்தாளர்களில் ஒருவர் நாஞ்சில்நாடன்.

தன் எழுத்துக்கு சரியான அங்கீகாரம் கிட்டவில்லை என்ற குறை நாஞ்சில் நாடனுக்கு இருந்தது. பொதுச்சொத்து என்பதால் படைப்பு மரியாதை இழந்துபோகிறது என்கிறார் எட்டுத் திக்கும் மதயானையின் முன்னுரையில். ”அசலைத் தூக்கி அந்தரத்தில் வீசிவிட்டு நகலைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். பல்லக்கு, பவளமணிப் பூண்கள், பரிவட்டம்…” என்று கூறுகிறார். சில ஆண்டுகளுக்கு முன் டெல்லியில் ஒரு நிகழ்வுக்கு பல எழுத்தாளர்களுடன் நானும் போனபோது நாஞ்சில்நாடனும் வந்திருந்தார். அங்கு பேசியபோதும் தனக்கு சாகித்திய அகாடமி விருது தராதது குறித்து கோபமாகவும் எள்ளலாகவும் பேசினார். தற்சமயம் அவருக்கு அந்த விருதும் வந்துவிட்டது. வேறு பல அங்கீகாரங்களும் வந்துவிட்டன. தமிழ் சினிமா உலகில் அவர் எழுத்தும் உழைப்பும் இனி வெகுவாகப் பயன்படுத்தப்படும் என்று சொல்கிறார்கள். அது இன்னும் ஓர் உற்சாகமான கட்டமாக அமையலாம் அவரைப் பொறுத்தவரை.

நாஞ்சில்நாடன் மும்பாயில் இருந்தபோது என் வீட்டுக்கு ஒரு முறை வந்திருந்தார். சாப்பிட்டுவிட்டுப் போகும்படி கூறினேன். அன்றைக்கு பாலக்காட்டைச் சேர்ந்தவர்கள் மொளகூட்டல் என்று கூறும் கூட்டு மாத்திரம்தான் சமைத்திருந்தேன். தேங்காய் இல்லாததால் பொடி போட்டுச் செய்திருந்தேன். சாப்பிட்டு முடித்ததும் “நல்லா இருந்ததா?” என்று கேட்டேன். “இது என்ன சொன்னீங்க? கூட்டா? இது பிடிக்கலை” என்றார். “அப்புறம்?” என்றேன். கூட்டு மட்டும்தான் செய்திருந்ததால் என்ன சொல்வது என்று தெரியாமல், “தயிர் நல்லா இருந்தது” என்றார். மனத்தில் உள்ளதை அப்படியே சொல்லும் அந்த வெள்ளந்தியான நாஞ்சில்நாடனை, நான் வெகு பத்திரமாக என் எண்ணங்களில் வைத்திருக்கிறேன் அவர் எப்போதாவது தேடினால் திருப்பித் தர.

 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.