பூனைக்குட்டி

 – வேணுகோபால் தயாநிதி –

எனக்கு
ஒரு பூனைக்குட்டியை தெரியும்.
பார்வைக்கு அழகியது
மிகவும்.
ஆனால்
பொதுவில்
சொல்லக்கூடாத குணம்.

இருந்தும்
ஒரு காலத்தில்
எனக்கு மிகவும்
பிரியமான பூனைக்குட்டி.

என்னை
எப்படியோ கண்டுபிடித்து
அதுவாகவே வந்தது,
பிரியமாகவும் இருந்தது.

ஆனால்
என்னைப் போலவே
பலருக்கும் பிரியமானது
என்றறிந்து
பிரிந்துவிட்டேன்
ஒருநாள்.

பூனையோ
என்னைப் பிரியவே இல்லை.
இருபது ஆண்டுகள் கழிந்தும்
எப்போதாவது
கனவினிலும் வரும்.

மூன்றுநாள் முன்பு
எதிர்பாராமல்
சாலையில் சந்தித்தபின்

நேற்று மாலை
மின்னஞ்சல் அனுப்பியது
இன்று காலை
கைபேசியில்
குறுஞ்செய்தி இட்டிருந்தது.

வெறும்
சாதாரண
ஒரு
பூனைக்குட்டி.

அது இல்லாமல்
வாழவே முடியாது
என்று நினைத்ததுதான்
எவ்வளவு பெரிய
முட்டாள்தனம்?

கவிஞர் குறிப்பு

ஒளிப்பட உதவி- dominic

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.