ஜெஜூரிக்கும் ரயில் நிலையத்திற்கும் இடையே

 காஸ்மிக் தூசி

photo

சிறிய கோயில் நகரம்
அதன் மலை அடிவாரத்தில்
நெருக்கியடித்துக் கொண்டிருக்கும்
அறுபத்து மூன்று பூசாரிகள் உள்ள
அறுபத்து மூன்று வீடுகள்
அதன் முந்நூறு தூண்கள்
ஐந்நூறு படிகள் மற்றும்
பதினெட்டு வளைவுகள் விட்டு

பூசாரியின் மகன்
ஒருபோதும் சொல்லத்துணியாத
திறமையின் வழிபணம் சேர்த்த
ஒருபோதும் உள்ளே கால் வைக்க மாட்டேன்
என அவன் நம்பும்
கோயில் நாட்டியக்காரியின்
அறுபத்து நான்காவது வீட்டை கடந்து
இடிந்த கோயிலைத் தாண்டிச் சென்றாலும்

காணவில்லை கோயில்நாயை
கோரக்‌ஷநாத் முடிவெட்டும் சலூன்
மகாலஷ்கந்த கபே
மற்றும் மாவு மில் தாண்டிவிட்டால்
அவ்வளவு தான்.
முடிந்தது.

வந்தாயிற்று நகரம் விட்டு
கையில் ஒரு தேங்காயோடு.
பாக்கெட்டில் ஒரு பூசாரியின் முகவரி அட்டை
மற்றும் தலைக்குள் சில கேள்விகள்.
ஜெஜூரி ஒருபுறம்
ரயில் நிலையம் மறுபுறம்
வழியில் இரண்டுக்கும் நடுவே வந்தபின்
கனவில் இருப்பது போல.
செய்வதறியாது
நிற்க வேண்டியதுதான்.
இருபுறமும் தட்டுகள் சமநிலைப்பட்டபின்
ஏற்கவும் இழக்கவும் முடியாமல்
அசையாமல் நிற்கும் முள்ளாகி.

தடத்தில் செல்லாமல் திகைப்பூட்டி
நிறுத்தி வைக்கும் காட்சி
சோளக்கொல்லையில்
ஒரு டஜன் சேவல்களும் கோழிகளும் .
ஒரு வகை அறுவடை நடனம் போல.
இதுவரை பார்த்தவற்றிலேயே
விநோதமானது
ஏழு பறவைகள்
தன் நான்கு மடங்கு உயரத்திற்கு குதிக்க
குறுக்கே பாய்கின்றன
ஐந்து பறவைகள் தானியம் எடுத்த அலகுடன்

Untitled

என்னைப்பார்க்க எவ்வளவு அசட்டுத்தனமாக இருக்கும்
என்பதை மறந்துவிட்டு நிற்கிறேன்
உண்மையில் இருப்பதைப்போலவே
இடப்புறம் பூசாரி
வலப்புறமாக
ஒரு ஸ்டேஷன் மாஸ்டர்.
000

(அருண் கொலாட்கரின் Between Jejuri and The Railway Station என்ற கவிதையின் தமிழாக்கம்)

ஒளிப்பட உதவி- http://banmilleronbusiness.com/

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.