பாப்பா சொல்லுச்சு

தி வேல்முருகன்

காலையிலேயே சின்னவன் ஆரம்பிச்சுட்டான். “பீஸ் கட்டாதவங்களை எல்லாம் மிஸ் எழுந்து நிக்கச் சொல்லிட்டாங்க. நான் போ மாட்டேன் இன்னைக்கு”

ஒரு மாசம் முடிஞ்சு தேதி 13 ஆயிடுச்சு, இந்த கஷ்டமெல்லாம் யாருக்கு தெரியப் போவுது. சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்கணுமில்ல, எந்த பூசாரி டேபிளில் கிடக்கோ? மகராசன் மனசு வச்சா இன்னைக்கி கிடைக்கும்.

“ஸ்கூலுக்கு போ நான் மதியம் வந்து கட்டிடறன். தங்கமில்ல, போப்பா”

“கண்டிப்பா மதியம் வரணும்”

“கண்டிப்பா வந்திடறேன்”

யாருகிட்டயும் கேட்டு வாங்கி கட்டலாம்னா ஒரு நிலை இல்லை எப்ப கிடைக்கும்னு. கேக்காமலே உதவிய நண்பருக்கு வேற அவர் கேட்டப்போ தர முடியலை. அவர் என்னை எதுவும் பேசவே விடலை, “கதைலாம் சொல்லாத காசு உடனே வேணும்,” என்றதும் ரொம்ப சங்கடமா போயிடுச்சு. சரி, அவரையும் இப்ப கேக்க முடியாது, சம்பளம் போடலன்னா மதியம் ஸ்கூல் போயி சொல்லிட்டு வந்துடணும்னு நினைச்சுக்கிட்டு வேலைக்கு கிளம்பினேன்.

சம்பளம் வாங்கினா மட்டும் என்ன காற்றுல பறக்கற உமி கதைதான், வாங்கறதும் தெரியாது பறக்கறதும் தெரியாது. முதல்ல 1ந்தேதி சம்பளம் போடற கம்பேனியா பார்த்து வேலை தேடனும். சம்பளம் போடல வேலை பார்க்க முடியாதுனு சொல்ல முடியாது இல்லையா. இரண்டு மாடு கட்டற இடத்துல ஒரே மாட்ட கட்டி இழுக்கறானுவ. இத உட்டாலும் வழியில்ல, பார்ப்போம் ஏதாவது வழி பிறக்கும்.

மணி 11 ஆச்சு, சரி டீ குடிக்கலாம்னு வெளியே போனா, நண்பர் வேகமாக என்னைப் பாத்து வந்தார். எங்க காசு கேப்பாரோன்னு பயந்து பம்மினேன்.

“சார், சம்பளம் போட்டுட்டானுவ சார்”

காசும் கேக்கலை, பார்ட்டியும் கேக்கல. கதை இதோடு முடிஞ்சிருந்தா நல்லாதான் இருக்கும்.

1 மணி நேரம் பர்மிசனுக்கு மேனேஜரிடம் சொல்லிட்டு பேங்க் போய் பணம் எடுத்து வரும்போதுதான் விதி சிரித்தது.

நான் பணத்தை வேகமாக பையில் வைக்கிறேன், “மாப்பிள்ளை,”ன்னு வேகமாக வந்தார் மாமா. வண்டியைத் தள்ளும்போது, “நானும் வரேன்”.

“பசங்களுக்கு பீஸ் கட்டணும் முட்லூர் போறேன்”

“இல்ல மாப்பிள்ளை தீத்தாம்பாளையம் போயி ஒருத்தர பார்க்கனும். நீங்க எடுங்க வண்டிய, அப்படியே இறங்கி அவரைப் பாத்திடறேன்”

பணம் கேட்கவில்லை.

“ஏம்மாப்பிள்ளை, சின்னவன் என்ன படிக்கறான்?”

“ரெண்டாவது படிக்கறான்”

“புது பணக்காரனுவ எல்லாம் பெரிய ஸ்கூலா பார்த்து படிக்க வைக்கறானுவ. நீதான் என்ன பண்ணுவ பாவம், வெளிநாடுலாம் போன. கடைசியா பவர் பிளாண்ட்ல வந்து கஷ்டப்படணும்னு இருக்கு உன் விதி”

“அப்படில்லாம் இல்லை மாமா நல்லாதான் போவுது.”

“நீ ஒன்னு மாப்பிள்ளை காலைலேருந்துபச்சை தண்ணி பள்ளுல படாம வண்டி மாடுவ பட்டினி கிடக்குதுவன்னு பணத்துக்கு வந்து நிக்கறன், அந்த தீத்தாம்பாளையத்து வக்காலஓழி என்ன ஏமாத்திப்புட்டான் நீ வண்டிய விடு நான் அவன பாத்துக்கறேன்”

நான் எதுவும் பேசலை.

|மாடுவல பார்தா பாவமா இருக்கு. போரோட தின்ன மாட்டுக்கு புடிங்கிப்போட்டா கட்டுபடியாவுமா, வாணான்டி வானான்டின்னு சொன்னா கேக்கறாளா தேவடியாச் செருக்கீ, இப்ப நான்தான் கஷ்டப்படறன். மாடுவலுக்கு பில்லுவ போட்டா காபந்து பண்ண முடியும், போக்கத்த செருக்கீ”

நான் எதுவும் பேசலை.

“பையன் ரெண்டு நாள்ல சிங்கப்பூர் போறான், சின்னவன் அங்கதான இருக்கான், ஆனா நம்ம யோக்கிதை அப்படி- எவனும் ஊம்புனாக்கூட காசு தர மாட்டான்”

நான் இந்த இடத்தில் பலார மாவு போல் பாகாய் உருகி கேட்டால் கொடுக்கும் மனநிலைக்கு வந்து விட்டேன்.

“ஸ்கூல் வந்துட்டது மாமா, இருங்க பணம் கட்டிட்டு வந்துடறன்”.

வெளியே வந்ததும், “மாப்பிள்ளை, கைல எவ்வளவு இருக்கும்?”

“மாமா, இத வச்சுதான் இந்த மாசம் ஓட்டனும்”

“அதிகமில்லை மாப்பிள்ளை ஐய்யாயிரம்தான், பெரியவன் போன உடனே அனுப்பிடுவான். நான் புதன்கிழமை தரன், நீ குடு. அட குடு மாப்பிள்ளை, நான் தரன் நீ கேட்கவே வாண்டாம்”

“இல்லை மாமா நீ தீத்தாம்பாளையம் போறேன்னு சொன்ன?”

“அவன் திருட்டுப்பய மாப்பிள்ளை, அவன் கிடைக்க மாட்டான் நீ குடு”

“இல்லை மாமா, வீட்ல பிரச்சினையாயிடும்”

“யாரு பாப்பாவா? தங்கமான புள்ளப்பா அது. ஒரு வம்புதும்புக்கும் போவாது அது வேல உண்டு வித்து உண்டுன்னு இருக்கும். உன் சித்தப்பா வாங்கிச்சுன்னு சொல்லு, ஒன்னும் சொல்லாது”

வந்து சொன்னன் பாப்பாகிட்ட.

பாப்பா சொல்லுச்சு, “அதான் குடுத்துட்டல, ஏன் எழவு விழுந்த மாதிரி மூஞ்ச வச்சிகிட்டு உக்காந்து இருக்க, உன்ன எனக்கு தெரியாது? பசப்புனான்னு குடுத்துட்டு இருக்கியே, அவன்கிட்ட வாங்க முடியுமா? கட்டைல போறவன் குடுக்கும்போது குடுக்கட்டும், வா வந்து ஒரு வாய் சாப்பிடு”

எனக்குன்னு ஏன்தான் இப்படி வந்து வாச்சுதோ.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.